Sunday, August 15, 2010

கேரக்டர் - மணிக்கோனார்...

காமாச்சியப்பத்தி சொல்லிட்டு மணிக்கோனாரை சொல்லாம ரொம்பநாள் கடத்திட்டேன். மனுசன் சண்டியர். ஆளென்னமோ ஒல்லியாத்தான் இருப்பாரு. தொண்டை மட்டும் எட்டூருக்கு கேக்கும். அதுவும் எப்பொழுதாவது ஒரு சாவுக்குப் போய் சரக்கடித்து விட்டு,  அவிழும் லுங்கியை ஒரு கையில் சுருட்டி, அரை நிஜார் தெரிய, அங்கங்கே ப்ரேக் போட்டு, காசித்துண்டை மறுகையில் சுழட்டி ‘ஏய்! வர்சொல்லு அவன! தில்லிருந்தா இங்க, இதோ இங்க’ என்று உட்காரப்பார்த்து விழுந்தாலும் சமாளித்து தரையைத் தட்டி சவால் விடும்போது, எதிரில் வருபவர்கள் மிரள்வது சகஜம்தானே!

அத்தனை போதையிலும் அடையாளம் மட்டும் தெரியும். ‘நீ ஏன் அய்ரம்மா பயந்துகினு போற! அந்த பேமானிய திட்றேன். நீ போம்மா’ என்று கை காட்டுவார். தெருவோரம் பயந்து ஒண்டிக்கொண்டு போகின்றவரை, ‘அய்ய! மொய்லியாரம்மா என்னா சடாய்க்கும். பயந்துனு ஓடுது பார்! என்று சிரிப்பார். எல்லாம் காமாச்சி வரும்வரைதான்.

காமாச்சி வந்து, வெற்றிலை குதப்பிய எச்சிலை ‘த்தூ’ என்று கால்வாயில் உமிழ்ந்து, ‘இன்னான்றேன்’ என்று ஒரு வார்த்தைதான் சொல்லுவாள். ‘வந்துட்டியாம்மே! என்ன இன்னா கேட்டாந்தெரிமாமே அவன்’ என்று ஆரம்பிக்கும்போதே வேறு பேச்சின்றி வீட்டின் பக்கம் கைகாட்டுவாள். பெட்டிப்பாம்பாய் ஒரு சத்தமின்றி தள்ளாடியபடி போய், வீட்டுத் திண்ணையில் விழுவார்.

பால் கறக்க காலையில் வரும் அழகே அழகு. பசுவுக்கு பித்தளை அடுக்கு. எருமைக்கு அலுமினியம். அதிலும் எருமையின் அடுக்கை அதன் கொம்பிலேயே மாட்டி விடுவார். இரண்டு பசுக்களுக்கு நடுவே ஏதோ பேசிக்கொண்டு தயங்கி வரும் எருமைகளுக்கு மிரட்டல் விட்டுக் கொண்டு ஒரு வீடு தள்ளியிருக்கும் எங்கள் வீட்டு வாயில்தான் முதல் ஸ்டாப்.  ‘மா! பாலு’க்கு பாத்திரம் எடுத்துக் கொண்டு ஓடுவேன்.

பசுக்கள் இரண்டும் ஒரு மின்விளக்குக் கம்பத்தின் கீழ் தானே போய் நின்று கட்டிக் கொள் என்று சொல்லாமல் நிற்கும். எருமைகளை மட்டும் தட்டி குத்தி ஓரம் கட்டுவார். பித்தளை அடுக்கை கவிழ்த்து வேகமாய் சுற்றி ’பார்த்துக்கம்மா’ எனும் போதே, ’மணி! சுத்தாத என்பாள் அம்மா. அடுக்கில் தண்ணீர் இருந்தால், வேகமாக சுத்தி சிந்து முன்னரே டபக்கென நிமிர்த்தி தண்ணீர் இல்லை என ஏமாற்றும் டெக்னிக் புரிந்தது அப்போது.

குத்துக்கால் போட்டு உட்கார்ந்து, பசுவின் மடி அளைந்து, சுரப்பெடுக்கும் போதே ஏதோ ஒரு எம்.ஜி.ஆர் பாட்டு தவழும் உதட்டில். கால் இடுக்கில் அடுக்கை சரிவாக வைக்கும் போதே முதல் பீச்சு அடுக்கின் அடியில் விழவேண்டும் என்ற குவாலிட்டி கண்ட்ரோல் அமலாகும். அந்த சத்தத்திலேயே ‘மணி! பாத்திர ஓரம் கரக்காதே’ என்ற அடுத்த வார்னிங் வரும்.

படிக்காத அம்மாவுக்கு, சுற்றுவதைப் போலவே, படக்கென கவிழ்த்து நிமிர்த்தினாலும் பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும் என்ற அறிவியல் அறிவு அதிகம். அப்படி வைத்துக் கொண்டு வெறும் பாத்திரத்தில் விழுவது போல் ஏமாற்ற பாத்திரத்தின் ஓரத்தில் கறப்பார்களாம்.  ‘அய்ரம்மா நம்பவே நம்பாதே’ என்று சிரித்தபடியே கறந்தாலும், வேடிக்கை பார்க்கிற சாக்கில் எனக்கு இன்ஸ்பெக்‌ஷன் டூட்டி தப்பாது.

சர சர வென்று கறக்க கறக்க நுரையில் பால் பீய்ச்சி வரும் இசை கேட்டு எவ்வளவு வருஷமாகி விட்டது. கறந்து எழுந்து நுரை வழித்து மாட்டு வாசனையோடு மீசை போடுவார். உதட்டால் நக்குவதை ரசித்துச் சிரித்தபடி பால் ஊற்றுவார். குழந்தையிருக்கும் வீடுகளுக்கு மட்டும் கறந்தபால். அப்புறம் எருமை கொம்பு அடுக்கிலிருந்து தண்ணீர் டபக்கென கலக்கும்.

பாலைக் கொண்டு வீட்டில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்க ஓடி வந்து விடுவேன். பசுக்களை அவிழ்த்துவிட்டு போங்க போங்க என்றால் போதும் தானே போய்விடும் வீட்டுக்கு. எருமைகளுக்கு பிடிக்கும் சனி. முட்டி மடக்கி குத்துவதில் என்ன ஆனந்தமோ. ‘தே! ட்ரு’க்கு சண்டி பிடித்து இன்னும் ரெண்டு குத்து வாங்கித்தான் போய் நிற்கும்.

அதில் ஒரு மாட்டுக்கு மட்டும் லுங்கியை தூக்கி ட்ரவுசர் உள்ளே கை விட்டு ஒரு பெரிய வயால் மருந்து எடுப்பார். அடுக்கின் அடியில் தட்டி முனை உடைப்பார். அடுக்குக்குள்ளிருந்து ஊசியெடுத்து, மருந்து உறிஞ்சி பெரிய டாக்டர் மாதிரி கொஞ்சம் மருந்து பீய்ச்சியெடுத்து, உள்ளங்கையில் பிடித்து அடி மடி அருகே ஒரு குத்து குத்தும்போது என்னையறியாமல் ‘ஸ்ஸ்ஸ்’ வரும். கட்டை விரலால் மருந்தேற்றி, தள்ளி விட்டு, மற்ற மாட்டு அருகே உட்கார்ந்து கறக்க ஆரம்பிப்பார்.

அதற்குள், காமாச்சி அடுக்குகளுடன் வர எல்லா மாட்டுக்கும் கறந்து முடித்து, கைக்கு ரெண்டு அடுக்கும் ஆழாக்கும் சொருகியபடி அம்மா பால் என்று விடும் சவுண்டில் மூன்றாவது வீட்டு ஆட்கள் வந்து விடுவார்கள். ஐந்தரை மணிக்குள் வாடகை வீட்டுப் பால் கடமை முடிந்து, சைக்கிளில் டீக்கடைக்கு எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்தால் ஒன்பது மணிக்கு பல் விளக்கி நாஷ்டா சாப்பிடும் வரை தூக்கம்.

பிறகு நீர் இறைத்து, மாட்டைக் கழுவி தவிடு, புண்ணாக்கு, வைக்கோல், பசுவுக்கு மட்டும் புல் என்று பிரித்துப் போடுவார். அதற்குள் தொழுவத்தை காமாட்சி சுத்தமாக கழுவி விட்டிருப்பாள். பிறகு சைக்கிள் எடுத்துக் கொண்டு போய் தீவனம் வாங்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டு, குளித்து முடித்து வர பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளுடன் சாப்பிடக் காத்திருப்பார்.

ஒரு தூக்கத்துக்குப் பிறகு மாலை மீண்டும் பால் வேலை. ஆறு மணியளவில் குளித்துவிட்டு கிளம்பும் போதே காமாச்சி குரல் கொடுக்கும் ‘ஒய்ங்கா வர்ணும் தெர்தா’ என்று. ஏழரை மணி வாக்கில் பெரும்பாலும் ஒழுங்காகவே வந்து சாப்பிட்டு ஒரு பீடி குடித்து விட்டு, திண்ணையில் பாய் விரித்து கட்டையை நீட்டுவார்.

அக்கம் பக்கம் சண்டைகளில் சொம்பில்லாத நாட்டாமையாக குரலை மட்டுமே வைத்து சமாதானம் செய்வதில் சமர்த்தர். கட்சித் தொண்டர் வேலை வேறு. அந்தச் சமயங்களில் காமாச்சியிடம் பெருமிதம் கலந்த திட்டு வாங்கும் போது வாய் கொள்ளாச் சிரிப்போடு சமாளிப்பார்.

அவர் மகனும் என் வகுப்பில் படித்தாலும் முரடன், என்னை விட பெரியவன் என்பதால் நெருக்கமில்லை. ஒரு முறை தவிட்டுக்கு கொடுத்த காசை ஆட்டையப் போட்டு விட்டு, பள்ளிக்கு வந்துவிட பாதி வகுப்பில் ஜன்னல் வழியாக மணிக்கோனார் குதித்து வீசிய அணைக்கயிற்றடிக்கு அவன் தாவிவிட, தடுக்க வந்த ஆசிரியரின் முழுக்கை சட்டை கிழிந்துபோகும் அளவுக்கு விழுந்தது அடி. ஒத்து சார் என்று கத்தியபடி வீசிய அடுத்த வீச்சில் மகனின் சட்டையும் முதுகும் சேர்ந்து பிய்ந்தது.

குத்து வாங்கும் எருமை போலவே சட்டை செய்யாமல் நின்றவனின் மேல் அடி விழாமல் மத்த வாத்திகள் மணிக்கோனாரை அழுத்தி தவிட்டுக்காசை மீட்டுக் கொடுத்தார்கள். இருவருக்கும் எப்போதும் ஆகாது. பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆகி படிக்கமாட்டேன் என்று அடி வாங்கி, சரி மாடுதான் இவனுக்கும் என்றானதில் கோனாருக்குக் கொள்ளை வருத்தம்.

இரண்டு மூன்று வருடங்கள், அஸிஸ்டண்டாக வந்து கோனார் மேற்பார்வையில் பால் கறந்து, வீடு கடைகளுக்கு ஊற்றினாலும், காசு விஷயம் மட்டும் கோனார்தான் பார்த்துக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக கோனார் ரிடையர்மெண்ட் எடுத்து, வீட்டோடு இருந்த ஒரு நாளில் பெரிய சண்டை அவர் வீட்டில். வீதிக்கு வீதி போய் பால் ஊற்ற அவசியமில்லை. பால் டிப்போவில் மொத்தமாகக் கறக்கலாம் என்பது பையன் வாதம்.

துட்டு பெரிசில்லடா! மனுசாள் முக்கியம்! எத்தினி வர்சம் தெரியுமா? தாயா புள்ளையா செய்ற தொழிலு. என் கை பால் குடிச்சி வளந்த பசங்க கொய்ந்தைங்களுக்கு கூட என் கை பால்தான். தொரைக்கு அவமானமா இருக்கா என்று கை ஓங்கியவரை நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டான்.

‘என்னையாடா? என் நெஞ்சுலயாடா கை வச்சிட்ட?’ என்று டாக்டரின் ஸ்டெத்தைப் போல் எப்பொழுதும் கழுத்தைச் சுற்றியிருக்கும் அணைக் கயிற்றை கீழே வீசியதோடு ஒதுங்கிப் போனார். அன்று மாலை குடித்துவிட்டு கத்தியபோது மட்டும் காமாச்சி ‘இன்னான்ற’ சொல்லவேயில்லை. பிறகு எப்போதாவது செல்லப் பசுக்களுக்கு பொட்டு, புண்ணாக்கு தண்ணீர் கலக்கி ஊட்டுவதோடு சரி.

கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி, திண்ணையோடு ஒடுங்கியே போனவருக்கு காமாச்சி மட்டுமே எப்போதாவது பேச்சுத் துணை. காமாச்சியின் பிள்ளை குளிப்பாட்டல் சம்பளமும், குடலேற்ற வைத்தியம், கோமயம் வித்த காசும் இவர்கள் செலவுக்கு என்றானது. குடிப்பதும் தினசரியென்றாகிப் போனாலும், அமைதியாக வந்து திண்ணையில் விழுவார். 

குடித்துப் புண்ணான வயிற்றில் டைஃபாய்டும் சேர்ந்து வந்து கிடப்பாய் கிடத்தி கொண்டே போனது. போனது மணிக்கோனார் மட்டுமல்ல. முன்பு சொன்னபடி, காமாச்சியின் மனசையும் கொண்டே போனார். கோனாருக்கு பதில் வீட்டோடு முடங்கிப் போனாள் காமாச்சி. 

54 comments:

கலகலப்ரியா said...

ரொம்பப் பிடிச்சிருக்கு சார்... நச்-ன்னு இருக்கு....

கி.ரா. படிக்கிற உணர்வு வந்தது..

ஈரோடு கதிர் said...

||பசுவுக்கு பித்தளை அடுக்கு. எருமைக்கு அலுமினியம்.||

அடப்பாவி மக்கா

எருமப்பாலுதானே விலை அதிகம்

Unknown said...

Wow! Nice one sir.

Thanks.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க

a said...

ரொம்ப நல்லா இருக்கு சார்........

பழமைபேசி said...

// ஆளென்னமோ ஒல்லியாத்தான் இருப்பாரு. தொண்டை மட்டும் எட்டூருக்கு கேக்கும்//

ம்ம்.... இருக்கட்டு... இருக்கட்டு...

Unknown said...

ஐயா அப்படியே கண்முன் நிற்கும் கோனாரும், காமாட்சியும் நான் பார்த்த நிஜங்கள் ...

Unknown said...

ரொம்ப நல்லா வந்திருக்கு சார்.

வெறும் கேரக்டர் மாதிரி மட்டும் இல்லாம இந்த முறை ஒரு சிறுகதை படிச்ச உணர்வைத் தருது.

vinthaimanithan said...

தேவைக்கு அதிகமா ஒரு கிள்ளு சதைகூட இல்லாத எளஞ்சோட்டு பொண்ணு மாதிரி ரொம்ப கட்டுசெட்டா வந்திருக்கு கதை!

க ரா said...

சார் இந்த கேரக்டர் எல்லாம் சேத்து ஒரு புத்தகமா கொண்டு வாங்க சார்.. சூப்பரா இருக்கும் :)

ரிஷபன் said...

’மணி’யான பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்..bala

ஸ்ரீராம். said...

அருமை.... நெகிழ்ச்சியான கேரக்டர். சாதாரணமாகப் பார்க்கும் மனிதர்களுக்குள் இருக்கும் விசேஷங்களை உங்கள் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

புலவன் புலிகேசி said...

இப்போது கோனார்களுக்கு வேலை எங்கே? மாடுகளுக்கு வைக்கோல் எங்கே? நல்ல கேரக்டர் ஐயா....

உசிலை மணி said...

//கறந்து எழுந்து நுரை வழித்து மாட்டு வாசனையோடு மீசை போடுவார். உதட்டால் நக்குவதை ரசித்துச் சிரித்தபடி
பால் ஊற்றுவார்.//

குதூகலம் நிறைந்த வரிகள்...

மணிஜி said...

பிரமாதம் தலைவரே

Mahi_Granny said...

சின்னச் சின்ன விசயங்களைக் கூட அழகு படுத்தி எழுதி இருக்கிறீர்கள் .. மணிக் கோனாரையும் காமாச்சியையும் கண் முன் கொண்டு வந்துவிட்ட பகிர்வு சார்

ஆடுமாடு said...

பாதி படிச்சிருக்கேன்.
முழுசா படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன். :))

Chitra said...

கலகலப்புக்கும் கண்ணீருக்கும் குறைவிலா பதிவு.

"உழவன்" "Uzhavan" said...

மனதில் நிற்போரை இப்படி அழகாகப் படம் படித்துக் காட்டுவதில் நீங்கள் வல்லவரே:-)
அருமையான பகிர்வு

சத்ரியன் said...

பாலா அண்ணே,

ஞாபகச் சக்தி ரொம்ப அதிகம்ணே. அதே சமயம், சம்பவங்களைக் கதையாக்கும் சாமர்த்தியம், படிப்பவர்களை மெய்மறக்க வைக்கும் லாவகம்... மலைக்க வெக்கிதண்ணே.

சத்ரியன் said...

//ஒரு மாட்டுக்கு மட்டும் லுங்கியை தூக்கி ட்ரவுசர் உள்ளே கை விட்டு ஒரு பெரிய வயால் மருந்து எடுப்பார்.//

இந்தக் கதைய நான் எங்க போயி சொல்ல. மேல இருக்கிற வாக்கியத்தில வர்ர “பெரிய வயால்” -ன்ற சொல்லை, “பெரிய வாயால்”-னு படிச்சிட்டேன்.

போங்க சார், எப்பப்பாத்தாலும் இப்பிடி எனக்கு கொழப்பமா போயிடுது.

நசரேயன் said...

நல்லா இருக்குண்ணே

பிரபாகர் said...

எல்லாம் எந்திரமயமான பிறகு கிராமங்களில் கூட பால் கரக்கும் நிகழ்வுகள் எதார்த்தமாய் இல்லை அய்யா! மனதைத் தொட்ட கேரக்டர் ‘மணிக்கோனார்’.

பிரபாகர்...

(மீ தி லாஸ்ட்(?))

காமராஜ் said...

மனிக்கோனார் என்னை படுத்துகிறார்.எடுத்து வைத்து திரும்பத் திரும்ப படிக்கச்சொல்லுகிறார்.ரோஷமான் போல ஒரு கதையை மூன்றுகோனத்தில் தரிசிக்கிற நேர்த்தி பாலாண்ணாவுக்கு.வந்தனம் அண்ணா.

Thenammai Lakshmanan said...

மாட்டுப் பால் சாப்பிட்டே பத்து வருஷம் இருக்கும்.. சிதம்பரத்தில் இருந்தபோது சாப்பிட்டது.. நல்ல காபிக்கு பசு மாட்டுப்பால்தான் அடிப்படை..
அதிலும் சிந்திப் பசுவின்பாலில் நரசூஸின் முதல் டிக்காக்‌ஷன் விட்டு சாப்பிட்டா அன்னைக்கு நாள் பூரா உற்சாகம்தான்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

//ரொம்பப் பிடிச்சிருக்கு சார்... நச்-ன்னு இருக்கு....

கி.ரா. படிக்கிற உணர்வு வந்தது..//

நிறைவா இருக்கும்மா. நன்றி

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
||பசுவுக்கு பித்தளை அடுக்கு.

//எருமைக்கு அலுமினியம்.||

அடப்பாவி மக்கா

எருமப்பாலுதானே விலை அதிகம்//

ம்கும். வெலயப்பாத்துதான் பாத்திரமா

vasu balaji said...

Sethu said...

//Wow! Nice one sir.

Thanks.//

நன்றிங்க சேது

vasu balaji said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்லாயிருக்குங்க

நன்றிங்க

// வழிப்போக்கன் - யோகேஷ் said...
ரொம்ப நல்லா இருக்கு சார்........
//

ரொம்ப நன்றிங்க யோகேஷ்

// பழமைபேசி said...
// ஆளென்னமோ ஒல்லியாத்தான் இருப்பாரு. தொண்டை மட்டும் எட்டூருக்கு கேக்கும்//

ம்ம்.... இருக்கட்டு... இருக்கட்டு...//

இஃகி

vasu balaji said...

கே.ஆர்.பி.செந்தில் said...

//ஐயா அப்படியே கண்முன் நிற்கும் கோனாரும், காமாட்சியும் நான் பார்த்த நிஜங்கள் ...//

நன்றிங்க செந்தில்

vasu balaji said...

முகிலன் said...

//ரொம்ப நல்லா வந்திருக்கு சார்.

வெறும் கேரக்டர் மாதிரி மட்டும் இல்லாம இந்த முறை ஒரு சிறுகதை படிச்ச உணர்வைத் தருது.//

நன்றி முகிலன்

vasu balaji said...

விந்தைமனிதன் said...

//தேவைக்கு அதிகமா ஒரு கிள்ளு சதைகூட இல்லாத எளஞ்சோட்டு பொண்ணு மாதிரி ரொம்ப கட்டுசெட்டா வந்திருக்கு கதை!//

நன்றிங்ணா:)

vasu balaji said...

இராமசாமி கண்ணண் said...

//சார் இந்த கேரக்டர் எல்லாம் சேத்து ஒரு புத்தகமா கொண்டு வாங்க சார்.. சூப்பரா இருக்கும் :)//

நன்றிங்க

vasu balaji said...

ரிஷபன் said...
’மணி’யான பதிவு.

நன்றி ரிஷபன்

vasu balaji said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

/சூப்பர்..bala//

நன்றி சார்.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

//அருமை.... நெகிழ்ச்சியான கேரக்டர். சாதாரணமாகப் பார்க்கும் மனிதர்களுக்குள் இருக்கும் விசேஷங்களை உங்கள் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.//

நன்றிங்க ஸ்ரீராம்

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

//இப்போது கோனார்களுக்கு வேலை எங்கே? மாடுகளுக்கு வைக்கோல் எங்கே? நல்ல கேரக்டர் ஐயா....//

ஆமாம்:(

vasu balaji said...

உசிலை மணி said...
//கறந்து எழுந்து நுரை வழித்து மாட்டு வாசனையோடு மீசை போடுவார். உதட்டால் நக்குவதை ரசித்துச் சிரித்தபடி
பால் ஊற்றுவார்.//

குதூகலம் நிறைந்த வரிகள்...//

நன்றி உசிலைமணி

vasu balaji said...

மணிஜீ...... said...

/பிரமாதம் தலைவரே//

நன்றி ஜி.

vasu balaji said...

Mahi_Granny said...
சின்னச் சின்ன விசயங்களைக் கூட அழகு படுத்தி எழுதி இருக்கிறீர்கள் .. மணிக் கோனாரையும் காமாச்சியையும் கண் முன் கொண்டு வந்துவிட்ட பகிர்வு சார்//

நன்றிங்கம்மா

vasu balaji said...

ஆடுமாடு said...

//பாதி படிச்சிருக்கேன்.
முழுசா படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன். :))//

காத்திருக்கிறேன்.

vasu balaji said...

Chitra said...
கலகலப்புக்கும் கண்ணீருக்கும் குறைவிலா பதிவு.


நன்றிங்க சித்ரா

vasu balaji said...

"உழவன்" "Uzhavan" said...
மனதில் நிற்போரை இப்படி அழகாகப் படம் படித்துக் காட்டுவதில் நீங்கள் வல்லவரே:-)
அருமையான பகிர்வு


நன்றிங்க உழவன்

vasu balaji said...

சத்ரியன் said...
பாலா அண்ணே,

ஞாபகச் சக்தி ரொம்ப அதிகம்ணே. அதே சமயம், சம்பவங்களைக் கதையாக்கும் சாமர்த்தியம், படிப்பவர்களை மெய்மறக்க வைக்கும் லாவகம்... மலைக்க வெக்கிதண்ணே.//

நன்றிங்க சத்ரியன்:)

vasu balaji said...

நசரேயன் said...

/நல்லா இருக்குண்ணே//

நன்றிங்க அண்ணாச்சி.:)

vasu balaji said...

பிரபாகர் said...
எல்லாம் எந்திரமயமான பிறகு கிராமங்களில் கூட பால் கரக்கும் நிகழ்வுகள் எதார்த்தமாய் இல்லை அய்யா! மனதைத் தொட்ட கேரக்டர் ‘மணிக்கோனார்’.

பிரபாகர்...

(மீ தி லாஸ்ட்(?))//

நன்றி பிரபாகர்.

vasu balaji said...

காமராஜ் said...

//மனிக்கோனார் என்னை படுத்துகிறார்.எடுத்து வைத்து திரும்பத் திரும்ப படிக்கச்சொல்லுகிறார்.ரோஷமான் போல ஒரு கதையை மூன்றுகோனத்தில் தரிசிக்கிற நேர்த்தி பாலாண்ணாவுக்கு.வந்தனம் அண்ணா.//

ரொம்ப நெகிழ்வாயிருக்குங்க காமராஜ். நன்றி.

vasu balaji said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

//மாட்டுப் பால் சாப்பிட்டே பத்து வருஷம் இருக்கும்.. சிதம்பரத்தில் இருந்தபோது சாப்பிட்டது.. நல்ல காபிக்கு பசு மாட்டுப்பால்தான் அடிப்படை..
அதிலும் சிந்திப் பசுவின்பாலில் நரசூஸின் முதல் டிக்காக்‌ஷன் விட்டு சாப்பிட்டா அன்னைக்கு நாள் பூரா உற்சாகம்தான்.//

:). நன்றிங்க

VELU.G said...

மிகவும் அருமை

கிராமத்து வாசனை கிளப்புகிறது

க.பாலாசி said...

என்ன மனுஷங்க பாருங்க..இன்னமும் கிராமத்துல ஒரு பழக்கம் இருக்குண்ணா அது இந்த வீட்டுக்கு வாடிக்கையா பால் ஊத்தறதுதான். எனக்குத்தெரிஞ்சு எங்க வீட்டுக்கு 15 வருஷமா ஒருத்தங்களே பால் கொடுத்துகிட்டு இருக்காங்க... இந்த உறவு எத்தன கசப்பு வந்தாலும் கசந்துபோறதில்ல..

இந்த மனுஷனப் படிக்கறச்சே அந்த உருவம் மலைபோல வளர்ந்து நிக்குது மனசுக்குள்ள...

Paleo God said...

//இன்னமும் கிராமத்துல ஒரு பழக்கம் இருக்குண்ணா அது இந்த வீட்டுக்கு வாடிக்கையா பால் ஊத்தறதுதான். //

ஆமா சார் நானும் வந்த மொத நாளே கறந்த பாலுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். அதன் ருசியே தனிதான்.

வழக்கம் போலவே இந்தக் கேரக்டரும் நெகிழச் செய்தது.

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப பிடிச்சிருக்கு சார்.
இதுபோல் மனிதர்களை எங்கள் ஏரியாவிலும் பார்த்திருக்கிறேன்.
முடிவில் கண்கலங்க வைத்துவிட்டீர்கள்.

பத்மா said...

ரொம்ப அழகா வந்துருக்கு ...நல்ல இருக்கு சார்