Showing posts with label நனவுகள். Show all posts
Showing posts with label நனவுகள். Show all posts

Thursday, July 15, 2010

நனவாகவே..


பொறந்த மூணும் பொட்டையாப் போன துக்கத்துல
மூணுவட்டிக்கு வாங்கின கடன்
கருவாச்சி கருப்புன்னா செங்கருப்பு பார்த்தாலே தள்ளாடுற மாதிரி
பாட்டில் சரக்கும், வறுத்த கோழியும், நெறய சிப்சும்
பந்தாவா ஊரு கண்ணு ஒன்னாப் பட

மொத ரவுண்டு மூணு கட்டிங் புண்ணியத்துல
மூத்தவ குத்த வச்சப்ப வாங்கின குண்டுமணியளவு தோடு முழுகிப்போச்சு
ரெண்டாவது ரவுண்டு நாலு கட்டிங்குல சேக்காளிக்கு ஒன்னு போக
சின்னவனோட பழய சைக்கிளும், இசுகோலு பீசும்கூட
மூணாவது வாங்கின நாலு ரவுண்டுல ஓவராப்போயி
வாந்தியெடுத்து விழுந்து இன்னும் கடனும் ஆசுபத்திரியும் மிச்சம்

அறுத்த வகுறும், காரமில்லாச் சாப்பாடும்
எப்படியும் இனிமே காசு சேர்த்து எப்புடியாவது பொழைக்கலாம்னு
மொதப்பா இருந்த நெனப்புல பொசக்கெட்ட பய
பெரியாத்தா சாவுல ஊத்திக்கிட்டு போட்ட ஆட்டத்துல போய்ச் சேர
மண்ணள்ளிப் போட்டது அவன் சவத்து மேல மட்டுமில்ல
புள்ள குட்டிகளோட வாழும் இவ நனவிலயும்தான்

கனவாகவே இங்கே

(டிஸ்கி: இது ஒரு சமுதாய அக்கறைக் கவுஜ!)

Monday, September 21, 2009

இரு புள்ளிக் கோலம்..

"எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான், பாடினவன் பாட்டைக் கெடுத்தான்" என்பது சொலவடை. பாமரன் ப்ளஸ் இரண்டு புள்ளிகளில் தொடங்கி, பாலா பிளஸ் டூ புள்ளிகளாக பரிணமித்து வானம்பாடிகளா பதிவைக் கெடுக்காம ஏதோ எழுதிட்டிருக்கேன்னு இருந்தேன். இந்தக் கலகலப்ரியா நாம எழுத வந்த வரலாற்றை எழுதுங்கன்னு இழுத்து விட்டுச்சு. அதனோட விளைவு....




படிக்கிற காலத்துல அது பள்ளியின் குறையா? அல்லது என் கவனக் குறைவா தெரியவில்லை. எழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி என்று எதுவும் நடந்ததாகக் கவனமில்லை. சொல்லிக் கொடுத்தவற்றை கிளிபோல் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதுடன் சரி. ஐந்தாம் வகுப்பு வரை கற்பலகையில்தான் பரீட்சையே. ஆறாவதில் பேனாவைக் கையால் தொடும் பாக்கியம் கிடைத்தது. அது வரை ஒரு நோட்டுப் புத்தகமும், பென்சிலும் கையெழுத்துப் பழகத் துணையிருந்தன.

கட்டுரையும், இலக்கணமும் ஒன்பதாவது வகுப்பில் திடீரெனத் திணிக்கப்பட்டது. திருவள்ளுவரும், புத்தரும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்று தமிழாசான் எழுதிய புத்தகம் பற்றி விவாதித்தது ஒன்றே கிளிப்பிள்ளை பாடம் தவிர்ந்த ஒரு புது முயற்சி. பதினோராம் வகுப்பில் 'போட்டி' நம் பள்ளிக்கும் அறிமுகம் ஆனபோது, பாரதியார் கவிதையை குழந்தை மாதிரி ஒப்பித்து, கிடைத்த பரிசை வாங்கச் செல்ல வழி தெரியாத காரணத்தால் பேசாதிருந்து விட்டேன்.

ஐந்தாவது படிக்கையில் தினமணிக்கதிர் வாயிலாக என் தந்தை மகற்காற்றிய பேருதவி.. மஞ்சரி, கல்கி, கலைமகள், அமுத சுரபி, ஆனந்த விகடன் என்று விரிந்த.. அந்த உலகமே பள்ளி தவிர்த்த என் வாழ்க்கையானது. அதனூடாக கல்கி, கோ.வி. மணிசேகரன், சாண்டில்யன், அகிலன், ஸ்ரீ வேணுகோபாலன் ஆகியோர் எழுத்துக்களின் அறிமுகம் கிடைத்தது.

கி.ரா, ஜெயகாந்தன், தேவன் ஆகியோரைப் படிக்கையில் இயல்பாக உணர்ந்தேன். கண்ணதாசன் கவிதைகளும், வாலி, வைரமுத்து, பாரதி ஆகியோரின் கவிதைகளும் மெதுவே எழுதினால் என்ன என்ற ஆசையைத் தூண்டி விட்டது. இலக்கணம் சற்றுப் பயமுறுத்தியது.

ப்ரியாவின் அறிமுகமும், எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றிய விவாதமும், அவளின் எழுத்துக்களும், இவளைப் போல் நாமும் முயன்றால் என்ன  என்ற ஒரு மனோதைரியத்துடன் மனதில் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தின.

எழுதிப் பார்க்கலாம் என்று எழுதிய கவிதையை படித்துப் பாராட்டி அவள் ஊக்குவித்ததில் நானும் கிறுக்கினேன். நன்றாக இருப்பதை பாராட்டும் அதே தருணம் குறையென்று கூறாமல், நளினமாக ஒரு வார்த்தை மாற்றினால் என்று ஆலோசனை கூறும்போது அது மிக அழகாய் மாறிவிடுவது என்னைச் செம்மைப் படுத்திக் கொள்ள பெரிதும் உதவியது.

செய்திகளின் தாக்கத்தில் புழுங்கி, பதிவுலகம் பக்கம் வந்தபோது என் மன அழுத்தத்தைப் போக்க இது ஒரு வாய்ப்பு என்ற எண்ணம்தான், என் எழுத்தின் உடனடி உந்துகோலாக இருந்தது. என் மனதில் உள்ளவற்றை அப்படியே எழுதும் பதிவர்களுக்கு, பின்னூட்டம் இடுவதில் ஆரம்பித்தது என் எழுத்துப் பயணம். "தலையா போய் விடும்" என்று, இலக்கணப் பிழைகள் பற்றியெல்லாம் கவலைப் படாது, மன அழுத்தத்தின் வடிகாலாய் மொட்டு விட ஆரம்பித்ததே, இப்போது பூத்துக் கொண்டிருக்கும் என் வலைப்பூ.

கவிதை, சொந்தக் கதை, பார்த்த கதை, பாராத கதை எல்லாவற்றுக்குமிடையே.. "நறுக்குன்னு நாலு வார்த்தை" என் அழுத்தத்தின் வெளிப்பாடாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது..

பாராட்டுதல், பிழை எடுத்துக் கூறல் என்று பழமைபேசியின் பங்களிப்பும், ஆரம்பம் முதலே ஊக்குவிக்கும் ராஜ நடராஜன், ராகவன் போன்ற அன்புள்ளங்களும் என் எழுத்தின் தூண்டுகோல்கள்.     

 இந்த தொடர்பதிவுக்கான அழைப்பை ஏற்று நீங்க எழுத வந்த கதையும் எழுதுங்களேன்.

Saturday, September 12, 2009

தொலைந்து போனவர்கள் - 4

பாண்டி பஜார் வளையல் கடையில் வளையல் வாங்கப் போனேன். மச்சான் இது எவ்வளவு என்று  கடை ஆள் குரல் கொடுக்க உள்ளிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்து என்ன போட்டிருக்கு என்கிறது. ’ருங்டுக்’ என்கிறான் இவன். மொழி பெயர்த்து டஜன் 65 ரூபாய் என்றான். போன முறை ஐம்பதுக்கு தந்தாய் என்றேன். திரும்ப மச்சான் ’குர்டு’ ங்கிறாங்க என்கிறான். அந்தாளு அது ’துன்சி ’ என்கிறார். இவனும் இதும் ’துன்சி’ தான் ’சுரிபெ’ இல்லை என்றான். சரி கொடு என்றதும், மெதுவாய் சிரித்து என்ன பாஷை இது என்றேன். மலாயா தமிழ் சார் என்றான். கண்ணா, 20 வருசம் முன்னாடியே நாமளும் பேசின பாஷை தான். சுரிபெ என்றால் பெரிசு, துன்சி என்றால் சின்னது என்று. நானும் தலைகீழாய் நின்று பார்த்து விட்டேன், நம்பர் மட்டும் புரியுதில்லை. டுங் என்று ரெண்டு எழுத்து போட்டு 1300 ரூபாய் என்று எப்படி மொழி பெயர்க்கிறீர்கள் என்றேன்.  விவரமான ஆளுங்க சார் நீங்க என்ற பாராட்டோடு கேனையனாய் வெளியே வந்தேன். மண்டைக்கு மேல் சுருள் சுருளாக. அட முடி இல்லைங்க. ஃப்ளாஷ்பேக்.

ஏழாவது வகுப்புப் படிக்கும்போது என் கணக்கு நோட்டை வாங்கிக் கொண்டு சென்ற என் வகுப்பு மாணவி இரண்டு நாள் பள்ளிக்கு வரவில்லை. வீட்டுப் பாடம் சேர்ந்து விட, வாங்கப் போனபோது எப்பொழுதுமில்லாமல் அவள் அம்மா மறித்துக் கேட்டார்கள். என் கணக்கு நோட்டு வாங்கிக் கொண்டு வந்திச்சி. வீட்டுப் பாடம் எழுதணும். பள்ளிக்கு வரவில்லை அதனால் வாங்கிக் கொண்டு போக வந்தேன் என்றேன். உள்ளே கூட அழைக்காமல், கடவடைத்து பிறகு தானே கொண்டு வந்து தந்தார்கள். உர்ரென வந்து அம்மாவிடம் புலம்பிய போது சிரித்துக் கொண்டே சொன்னார்கள். அவள் பெரிய மனுஷி ஆயிட்டா. நீ அங்க போகக் கூடாதென்று.

டேய் மூக்கா. ப்ளீஸ் அப்பா வந்துடுவாங்கடா. தம்பியக் காணோம். ஓடிப்போய் தேங்காய் சில்லு வாங்கிட்டு வாடா. சமையல் முடியலன்னா தட்டு பறக்கும் என்பாள் கௌரி அக்கா. வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் தேங்க்ஸ்டா மூக்கா என்று மூக்கைத் திருகுவாள் அலற அலற.  திருமணமாகி முதல் முறை வந்த போது பார்த்தும் பாராமல், எப்படி இருக்கிறாய் என்ற போது யாரோவானாள்.

தயிர்க்காரன், பால்காரனென்று வீதியில் பேரம் பேசி வாங்கும் பக்கத்து வீட்டு மாமி, மாமாவின் நண்பரோ வெளியாட்களோ வந்தால், கதவு மறைவில் நின்று பதில் சொல்லும்.  எட்டு மணிக்கு சாப்பிட்ட ஃபாரக்ஸ் உதட்டைச் சப்பிக்கொண்டு அழகாய்ச் சிரிக்கும் குழந்தை கூட தூக்கப் போனால் அலறும். கண்ணகியின் மறு வாரிசென புளகித்துப்போய் ஆம்பிளப் பசங்கள பார்த்தா அழுவான்னு அலட்டும் அவள் அம்மா.

ஒடிசலான உருவம். வெயிலில் அலைந்து அலைந்து கருத்துச் சுருங்கிய சருமம். தலையில் முண்டாசு. வெள்ளைக் காடாக்குள் வைத்துக் கட்டி ஒரு தோளில் தொங்கும் பாரம். இரண்டடிக்கு இரண்டடியில் பிடி வைத்த ஒரு மரப்பெட்டி மறுகையில். வாலிபத்தில் கால் வைத்து மீசை வரைந்தாற்போல் பேரனும் இதே கோலத்தில். அடிக்கிற வெயிலில் அலைந்து, சலித்து “தல்லி! ஸல்லகா மஞ்சி நீள்ளு ஈ ரா” என்ற குரல் வந்ததும் அத்தனை தடையும் உடைத்து பெண்கள் சூழ்ந்து கொள்வார்கள். அவர்தான் வளையல் தாத்தாவும் அவர் பேரனும்.

தண்ணீர் குடித்து, முகம் கழுவி, முண்டாசு பிரித்து உதறி துணி மூட்டை அவிழ்ப்பார். அவசரமின்றி மொத்தம் எடுத்து அடுக்குவார் கட்டி வந்த துணியில். அவரவர் விருப்பத்துக்கு வளையல் காட்டுவார். கண் பார்வையிலேயே இது சின்னதும்மா. உன் கைக்கு சரி வராது. இது பெரிசு. வேற பாரு என்பார். பேரனும் கடை திறந்து வைத்திருப்பான். தலை வெளுத்தவரெல்லாம் அவ்வா, மற்றவரெல்லாம் அக்கா. விரல் குவித்துப் பிடித்து வளையல் சொருகி பெரும்பாலும் சரியாக இருக்கும். சிலருக்கு ’சவக்காரம் தே ரா’ என்று, கையை நனைத்து சோப்பைக் குழைத்துப் பூசி வளையல் போடுவார்.சிலருக்கு வெறும் கையில் வைத்துப் பிடித்து விட்டு சொடுக்கெடுத்து போடுவார்கள். சிலருக்கு ”நூன”( எண்ணெய்) என்று மஸாஜ் செய்து போடும்போது என்ன மாயமோ, விறைத்திருந்த கை நெகிழ்ந்து தடையின்றி வளையல் ஏறும். பெரிய மனுஷியான வகுப்புப் பெண், புது மணப்பெண் கௌரியக்கா, கதவுக்குப் பின்னால் ஒளியும் மாமி என எல்லாரும் தயக்கமின்றி  கை நீட்டுவார்கள்.

ஒன்றொன்றாய் அவரவர் வாங்க, மதியம் வந்துவிடும். தவறாமல் லட்சுமிப் பாட்டி சாதம் பிசைந்து, பலா இலை கழுவி எடுத்துக் கொண்டு மெதுவாய் வரும். நிதானமாய் உண்டு முடித்து “தேவுடு நின்னு சல்லகா சூஸ்தாடம்மா” என்கையில் கண்கள் பனிக்கும். ஒருவரும் பேரம் பேசி நான் பார்த்தில்லை.  வீதி முழுதுமே அங்கு வந்து விடுவார்கள். ஏக்கமாய் பார்க்கும் வேலை செய்யும் சிறுமிகளுக்கும் சும்மாவே 2 வளையலாவது போட்டு விடுவார் தாத்தா. வியாபாரம் முடிந்ததும், கலியாணம், சீமந்தம், வளைகாப்பு என்று விசேஷமிருப்பவர்கள் வெற்றிலை பாக்கில் பத்திரிகை வைத்து அழைப்பார்கள். நல்ல டிசைனில் கொண்டு வர வேண்டும். இத்தனை பேர் வருவார்கள். எல்லா அளவிலும் கொண்டு வர வேண்டுமென்று கேட்பார்கள். இவர்களும் தவறாமல் வந்துவிடுவார்கள்.

வளையல் அடுக்கி காசு வாங்கியதும், ஒரு தட்டு வாங்கி, பைக்குள் கசங்கிய வெற்றிலை பாக்கில் காசு வைத்து ஆசிர்வாதம் செய்வார். அதும், வளைகாப்பில் பெண்கள் காலில் விழுமுன்னரே பதறி பாதியில் தடுத்து ‘ஒத்துரா சிட்டி தல்லி’ என்று உச்சி முகரும்போது அங்கே வியாபாரி இல்லை, ஜாதி இல்லை, பொருளாதார ஏற்றத் தாழ்வில்லை . நேசம் நேசம் நேசம் மட்டுமே. ஆண்களைக் கண்டால் அழும் குட்டிப் பெண் கூட மடியில் அமர்ந்து முகம் பார்த்து வளையல் போட்டுக் கொள்ளும்.

பிற்பாடு எங்கோ படித்தேன். கி.ரா. என்று கவனம். இந்தத் தொழிலுக்கு வருமுன்னர் தொழில் கற்றுக் கொடுக்கும் முதியவருடன் (தந்தை அல்லது பாட்டன்) குல சாமி கோவிலில் சத்தியம் செய்வார்களாம். நான் மணக்கும் பெண்ணைத் தவிர அனைவரையும் தாயாய், சகோதரியாய் நினைப்பேன் என்று.  அதனால் தானோ அத்தனை பெண்களும் கூச்சமின்றி கை பிடிக்க விட்டு வளையல் போட அனுமதித்தார்கள்? இவர்களை மட்டுமா தொலைத்து விட்டோம்? சிணுங்கிச் சிரிக்கும் கண்ணாடி வளையல் இசையும் சேர்த்தே தொலைத்துவிட்டோம்.