பாகம் : 4
பிரஸன்னாவுக்குச் சற்றுமுன் திரையிற் கேட்ட மொழி திடீரென்று பரிச்சயமானது போல் தோன்றியது.. சங்கரப்பெருமாள் பேசுவது வேற்றுமொழி போன்று வெறித்துப் பார்த்தான்… கையில் திரிசூலக முத்திரை பிடித்து மேல் நெற்றியில் வைத்து வலிக்க அழுத்தி நெற்றிப்பொட்டு வரை கோடிழுத்தான்… மோதிர விரலை மடக்கி.. நெற்றிப்பொட்டில் ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் ஊன்றி முகத்தின் சதைகள் அனைத்தையும் இழுத்துச் சுருக்கிக் கண்களை இறுக மூடித் திறந்தான்.. நெற்றியிலழுந்தியிருந்த விரல்களை அப்படியே திருப்பித் துப்பாக்கியாக்கி சங்கரப்பெருமாளின் நெற்றிப் பொட்டிற்குக் குறி வைத்துப் பார்வையைக் கூர்மையாக்கினான்… சிகரெட் புகையினூடே தெரிந்த முகம்.. பார்த்தசாரதி கோயிலில் தூபப் புகையினிடை தெரியும் மூலஸ்தானப் பெருமாள் போன்ற பிரம்மையை ஏற்படுத்தியது… நீட்டிய கை தொய்ந்து இறங்கியது…
“என்னடே.. திருதிருன்னு முழிக்க... இதுதான் பூலோகமான்னு..அவ எப்படி இங்க வந்தான்னு கேக்குதியாக்கும்....ஒனக்க அந்த செயராமன் மருந்து ரொம்ப அடிச்சிட்டான் போல....நீ மந்தமா இங்க வந்து நிக்க...எல...ஒன்ன இங்க கொண்டு வந்தது எஸ்.ஐ. செயராமன்...ஒனக்கு மருந்து அடிச்ச அதே காலத்துல ஒனக்க கெட்டிக்கப் போறவளையும் அவளுக்க அப்பனையும் திண்டுக்கல்லு இன்ஸ்பெக்டரு தூக்கிட்டான்...நமக்கு ஒறவு மொறக்காரனாக்கும்...நாம சொன்னா பய கேப்பான்ல..."
டி.நகர் எஸ்.ஐ. ஜெயராமன்...திண்டுக்கல் இன்ஸ்பெக்டர்...இன்னும் யாரெல்லாம் இதில்...எத்தனைப் பேருக்கு இந்த திட்டம் தெரியும்....பிரசன்னா சுற்றிலும் பார்த்து விட்டு கேட்டான்...அவங்கள காணோமே சார்...
சங்கரப் பெருமாள் சிகரெட் புகையுடன் சிரித்தார்... அந்த கதைய ஏன் கேக்குத...அது செம காமெடி... அந்த பய அஞ்சாப்புல லவ் பண்ண பொண்ண இங்கன பாத்தானாம்... பாத்து இருவது முப்பது வருசமாச்சி... போய்ட்டு வாரேன் சார்னு ஒத்த கால்ல நின்னான்...போய்த் தொலைடேன்னுட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்....
செயராமன் இந்தா வர்றேன் சார்னு சொல்லிட்டு பக்கத்து ரூம்ல தூங்கிட்டு இருக்கான்...இப்ப எழுந்துக்குவான்...விடியற நேரமாச்சுல்லா...அது கெடக்கட்டும்டே.. நீ போ… போய்ப் பேசு..”.. வாயில் எஞ்சியிருந்த புகையை மூக்கு வழியாக ஊதினார்… உதட்டை மடித்து.. வலது பக்கம் நீண்டிருந்த மீசையை இடது கையால் நீவி விட்டார்… வலது கையை நீட்டிக் கையிலிருந்த சிகரெட்டால் பக்கத்து அறையின் சுவற்றைச் சுட்டிக் காண்பித்தார்…
ப்ரஸன்னா தமிழ் சினிமாவில் வில்லனிடம் மூன்றாவது தடவையாக அடி வாங்கி விழுந்தெழும் கதாநாயகன் போல் தலையைச் சிலுப்பினான்… லேசாகத் தள்ளாடி நடந்து சென்று அந்த அறையின் கதவின் பித்தளைக் குமிழைத் திருகினான்… கதவு தாளிடப் பட்டிருப்பதை உணர்ந்து… திரும்பினான்… பக்கத்து அறையிலிருந்து சங்கரப் பெருமாள் எறிந்த கீ் அவன் காலடியில் விழுந்தது… தடுமாறிக் குனிந்து அதை எடுத்தான்… சாவித்துவாரத்தைத் தேடி… நடுங்கிய விரல்களால் கீயை நுழைத்துத் திருகினான்…
“..போலீஸ்காரனா போற... ஸ்ருஷ்டியோட ஃபியான்ஸியா போகலை...”.. சங்கரப்பெருமாளின் குரல் காதில் இரைந்தது… உணர்ச்சிகள் சுழன்று சுழன்று அடித்தன… ஸ்ருஷ்டியைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்புத் தெம்பளித்தது… “..அவனுங்களோட லோக்கல் பாஸ்...”.. இதயப்புள்ளியில் கை வைத்துத் தேய்த்துக் கொண்டான்… கனமான கோட்டை வாயிற்கதவை அசைத்துத் திறப்பது போல்... அந்த மரக் கதவை மெதுவாகத் தள்ளித் திறந்தான்…
***********************
சுவர் இடுக்கில் அடங்கி ஒடுங்கும் பல்லி போல சங்கரப் பெருமாளும் பிரசன்னாவும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு பக்கத்து அறையில் படுத்திருந்த எஸ்.ஐ ஜெயராமன் ஜெயராமன் சங்கரப் பெருமாளை நெருங்கினார். “என்ன சார் ஏசி சாரை அங்க தனியா அனுப்பறீங்க?”
திரும்பிய சங்கரப் பெருமாள் கண்களை இடுக்கி ஜெயராமனைக் கூர்ந்து பார்த்தார். ‘இம்புட்டுத்தானா உன் போலீஸ் மூளை?’ என்பதாக இருந்தது அவர் பார்வை. கையிலிருந்த ரிமோட்டில் ஒரு பட்டனைத்தட்டவும், ஸ்ருஷ்டி இருக்கும் அறை அந்த தட்டைத் திரையில் விரிந்தது.
“போலீஸ் நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்னல...எல்லா எடத்திலயும் நக்கணுமாக்கும்...இவன் அவக்க பாய்ஃப்ரண்டு...இந்த பய மேலயும் எனக்கு ஒரு சம்சயமுண்டு.....அதைக் கொண்டில்லா இவன போலீஸ்காரன்னு சொல்லி அனுப்பிச்சுருக்கேன்... இவன் உட்கையா இருந்தான்னு வையி... இப்ப போயி போலீஸ்காரனாட்டும் பேசினா அவ சண்டை போடுவாள்லா? இப்ப ரெண்டு பேரும் என்ன பேசுதாங்கன்னு பாத்தாத் தெரிஞ்சிப்புடுமில்லையா?”
ஜெயராமன் சங்கரப் பெருமாளை மலைப்பாகப் பார்த்தார்.
*************************
அறையின் மூலையில்... கட்டிலில் ஒரு கால் நீட்டி மறுகால் மடித்துச் சரிந்து... அலங்கோலமாகப் படுத்திருப்பது... ஸ்ருஷ்டி..?.. ஓடிப்போய்த் தூக்கி நிமிர்த்த வேண்டும் போலெழுந்த உணர்ச்சியை... இறுக மூடிய முஷ்டிக்குள் அடக்கினான்... “அவங்க லோக்கல் கமாண்டர் யாரு...?..” தலையை உலுக்கினான் .. காதைப் பொத்திக் கொண்டான்...
ப்ரஸன்னாவின் கால்கள் தயங்கின.... பார்வையைச் சுழற்றினான்....அழுக்கான போர்வை கசங்கியிருந்த ஒரு பழைய இரும்புக் கட்டில்...மேல் பூசிய வர்ணம் உதிர்ந்து ஆங்காங்கே துருப்பிடித்த இரும்பு மேலும் துருவேறிக் கொண்டிருந்தது... சுவரோரத்தில் இருந்த கட்டிலைத் தவிர பளிச்சென்று துடைத்து விட்டது போலிருந்த அறையைப் பார்த்துப் பல்லைக் கடித்தான்..
“ப்ளடி.. போலீஸ் புத்தி...”.. மெதுவாக நடந்து.. ஸ்ருஷ்டியை நெருங்கினான்... முடிந்த அளவு குரலில் நிதானத்தை வரவழைத்து... “ஸ்ருஷ்டி..” என்றழைத்தபடி பக்கத்தில் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தான்... குனிந்து அவள் முகம் பார்த்தவன் திகைத்தான்... அவள் சலனமில்லாது அவனை வெறித்துக் கொண்டிருந்தாள்... அந்தப் பார்வையில் இது வரை அவனுக்குத் தெரியாத ஒரு அந்நியம் தெரிந்தது...
”ஸ்ருஷ்டி... ஆர் யூ ஆல்ரைட்..” என்றான் சமாளித்துக் கொண்டு...
“.....................”
“என்ன நடக்குது இங்க....?”
“அத நீதான் சொல்லணும் ப்ரஸன்னா... என்ன இதெல்லாம்..?.. ’திருடன நம்பினாலும் போலீஸ்காரன நம்பாத’ன்னு டாட் சொல்லிட்டிருப்பார்... வாட் அ ஃபூல் ஆம் ஐ..” நிதானமாக உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையிலும் கசப்பும், வெறுப்பும் வழிந்தது....
ப்ரஸன்னாவுக்கு இது அதிர்ச்சி ட்ரீட்மெண்ட்... ‘இவளை விசாரிக்கலாமென்று வந்தால்... இவள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாள்... என்னையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துறாளே..’
”வாட் டு யூ மீன் ஸ்ருஷ்டி.. என்ன சொல்ல வர்ற..?”
“தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பலாம்... உன்னை எழுப்ப முடியாது..”
ப்ரஸன்னா பல்லைக் கடித்தான்...
“இங்க பாரு ஸ்ருஷ்டி... நான் ஏற்கனவே ரொம்பக் குழம்பிப் போயிருக்கேன்.. கொஞ்சம் தெளிவாப் பேசறியா...? ப்ளீஸ்... ஐ வில் பி க்ரேட்ஃபுல்..”
“என்ன தெளிவா பேசணும் ப்ரஸன்னா..? பக்கத்து ரூம்ல உன் கூடப் பேசிக் கொண்டிருந்தது யார்..? இதுதான் உங்க ஸ்டேஷனா..? இப்டி எத்தன பேருக்கு மயக்க மருந்து கொடுத்து இங்க கொண்டு வந்திருக்கீங்க? வாட் டு யூ எக்ஸ்பெக்ட் ஃப்ரம் மீ..?”
“வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட்..... கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு... வாட் மேக்ஸ் யூ திங்க் லைக் திஸ் வே?”
“இங்க என்னை ரூம்ல அடைச்சு வச்சிருக்காங்க... உன்னோட கைல கீ இருக்கு... காண்ட் யூ ஸீ தட்..?” பலவீனத்தை மீறிக் குரல் சீறியது...
”ஓ... அது..” ப்ரஸன்னா தடுமாறினான்... தலையைக் கோதி விட்டுக் கொண்டான்...
சற்று முன் சங்கரப் பெருமாள் சொன்ன போலீஸ் என்ற வார்த்தையை ஒதுக்கி... ”எல்லாம் பேசலாம்... நீ முதல்ல எழுந்திரு..” என்று கை நீட்டினான்...
அவன் கையில் நரகல் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல்... அருவெறுப்புடன் பார்த்தாள்... சட்டென்று விலகி,... நகர்ந்து.. எழுந்து.. சுவற்றுடன் சாய்ந்து அமர்ந்தாள்... நாலு நாள் பட்டினி கிடந்தவள் போல் மெலிவாகத் தெரிந்தாள்...
’ஏதாவது சாப்டறியா..’ என்று தொண்டை வரை வந்ததை விழுங்கினான்... இதைக் கேட்டால் துப்புவாள்... ’அல் கயால்.. நிழல்..’ ம்ம்.. “உனக்கு அரபிக் தெரியுமா..?” என்றான்..
ஸ்ருஷ்டி விருட்டென்று நிமிர்ந்தாள்... “வாட்...?... எதுக்கு இது..?”
அது அவனுக்கே தெரியாது... ஏதோ கேட்க வந்து இதைக் கேட்டு விட்டான்... இப்படி யோசிக்காது தன்னிச்சையாக வந்து விழும் விதிவச வார்த்தைகளால்.. எத்தனை வரலாறுகள் மாற்றி எழுதப்பட்டிருக்கின்றன...
“.. தெரியுமா ஸ்ருஷ்டி..?”
பக்கத்து அறையில்... க்ளாசில் திரவம் ஊற்றப்படும் ஒலியும்... லைட்டர் பற்றவைத்த சத்தமும் கேட்டது...
”.. தெரியும்.. கொஞ்சம் பேச மட்டும்... ஏன்?!”.. முறைத்தாள்... ”நீ என்னை என்கொயரி பண்றியா ப்ரஸன்னா..?” புருவம் உயர்த்தினாள்...
”வெல்... ஐ ஆம் ட்ரையிங் டு கெட் அ பிக்சர்.. அரபிக் எப்போ கத்துக்கிட்ட...?.. உன்னைப் பற்றித் தெரிஞ்சுக்க இன்னும் நிறைய மேட்டர் இருக்கும் போலருக்கே” அவன் குரலில் சந்தேகம் வெளிப்படையாகத் தெரிந்தது...
“ம்ம்... ஃபைவ் இயர்ஸ் அகோ.. யூ.கே.ல ஒரு சிக்ஸ் மந்த்ஸ் கோர்ஸ் பண்ணேன்... அங்க ஓமர்ன்னு ஒரு ஃப்ரண்ட் ஃப்ரம் சவுதி அரேபியா... அவன் கிட்ட கத்துக்கிட்டேன்..”
”ஐ ஸீ... டஸ் ஹி கீப் இன் டச் வித் யூ..?”
“....”
“டஸ் ஹி..? ஸ்ருஷ்டி..?”
“உனக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியல.. ஏதாவதுன்னா கண்ணைப் பார்த்து டைரக்டா கேளு..” நிமிர்ந்து அவன் கண்களைச் சந்தித்தாள்... சலனமின்றிப் பார்த்தாள்...
ப்ரஸன்னா அவள் கண்களில் எதையோ தேடினான்... அரை நிமிடம் கழித்துப் பெருமூச்சு விட்டான்... கால் மடித்து அவளுக்குச் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்... ”ஸ்ரீதரன்...” என்ற பெயர் இடது மூளையில் எங்கோ நெருடியது... ’ஸ்ரீதரன் என்ன ஆனார்..’.. ஆஃபிஸ் போய் காத்திருந்து ஏமாந்திருப்பாரா..? ’சுத்தமா ப்ளாக் அவுட்... காட் டாமிட்..’
குரலைத் தழைத்து ”ஸ்ருஷ்டி.. என்னை நம்பு.. நான் உன்னைச் சந்தேகப்படல... நீ இப்போ இருக்கிற அதே நிலமைதான் எனக்கும்... எல்லாரும் ஒவ்வொரு பக்கத்துக்கு இழுத்தா எதுவும் செய்ய முடியாது... ஸ்ரீதரன் அங்கிள் கிட்ட சமீபத்தில ஏதாவது மாற்றம் தெரிஞ்சதா..?..”
”ம்ம்...... ..................... இல்ல... அப்டி எதுவும் தெரியல... நேற்று நாலு தடவை ஃபோன் பண்ணிப் பேசினாரு.....” கொஞ்சம் யோசனையாக ஆரம்பித்து... சாதாரணமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தவள்... சடாரென்று நிமிர்ந்தாள்...
”ஓ... வெய்ட்... ஆமா டாட் அநாவசியமா ஃபோன் பண்ண மாட்டாங்க... ரெண்டு, மூணு நாளா... சும்மா சும்மா ஃபோன் பண்ணி... எங்க இருக்க... இன்னைக்கு என்ன ப்ளான்னு எல்லாம் பேசினாங்க... எனக்கு அப்போ எதுவும் தோணலை... ரெண்டு நாள் முன்னாடி ஆஃபீஸ்ல ஒரு கான்ஃபரன்ஸ்ல இருந்தேன்... செல்ஃபோன கார்ல மறந்து வச்சிட்டேன்..கால் அட்டெண்ட் பண்ணலைன்னதும்.. நேர ஆஃபீஸுக்கே வந்துட்டாங்க.. அப்போ கொஞ்சம் ஆச்சரியமா இருந்திச்சு...” என்று நிறுத்தி... அவனைப் பார்த்தாள்...
“ஆமா யூ ஆர் ரைட்... டாட் வழக்கத்த விட அதிகமா... ரொம்ப அதிகமாவே என் மேல அக்கறை எடுத்துக்கிட்டாங்க... பை த வே... இதெல்லாம் ஏன் கேக்கற ப்ரஸன்னா... எனக்குப் பயமா இருக்கு... என்னைச் சுத்தி என்ன நடக்குது..?! என்ன இதெல்லாம்..”
அவள் சொன்னதைக் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தவன்... தலையைப் பிடித்துக் கொண்டான்... ஏதோ பிடிபடுவது போலவும்... ஒன்றும் பிடிபடாதது போலவும் ஆட்டம் காட்டியது... மண்டைக்குள் பெருச்சாளி குடைந்தது... மண்டையோடு அரித்தது... பின் மண்டையில் எதுவோ துளைத்தது... திரும்பினான்...
கதவு நிலையில் சாய்ந்தபடி சங்கரப்பெருமாள் நின்று கொண்டிருந்தார்...
தொடரும்
******************************
இன்றைய பகுதியை எழுதியவர்?:1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்