Showing posts with label அனுபவம்.. Show all posts
Showing posts with label அனுபவம்.. Show all posts

Tuesday, August 14, 2012

வீடு

'வனக்கம் சார்! மெனையா பாக்கறீங்களா? ஊடு இர்ந்தா பரவால்லியா?’

‘வணக்கங்க. மனை இருந்தா நல்லது. இல்லைன்னா ரொம்ப பழைய வீடு இருந்தாலும் பரவால்ல’

‘இன்னா பஜ்ஜிட்ல பாக்குறீங்கோ?’ (கேட்கும்போதே குத்துமதிப்பா எவ்வளவுக்கு நான் ஒர்த் என்ற எக்ஸ்பர்ட் அனலிஸிஸ்)

‘இடம் பிடிச்சிருந்தா கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் பரவாயில்ல’ (ஒன்னைய மாதிரி எத்தன பேருட்ட நான் பதில் சொல்லிருப்பேன்)

‘அப்பார்மெண்டு வோணாவா?’ (உன்னப் பாத்தா தனியா மனை வாங்கி கட்டுற அளவுக்கு ஒர்த்தா தெரியலையே)

‘இல்லைங்க. அபார்ட்மெண்ட், டூப்லெக்ஸ் எல்லாம் வேணாம்.’

‘கொள்த்தூர் பிஜ்ஜு கிட்ட சூப்பரா ஒரு எடம் இருக்குது பாக்குறியா’ (ங்கொய்யால! உன் தம்புடி எப்புடின்னு கண்டு புடிக்கறேன் மவனே)

‘பெரியார் நகர், ஜவஹர் நகர், பெரம்பூர், அயனாவரம் இதுக்குள்ள சொல்லுங்க சாமி’

‘லோக்கோ டேசன் கிட்ட ஒரு வெடம் கீது. நாப்பத்தஞ்சிக்கு அம்பத்தஞ்சி. நல்ல ஏரியா. பேப்பர் க்ளீனா இருக்குது. மெனதான். ஒன்னு நாப்பது சொல்றாங்கோ. பார்ட்டி கிட்ட இட்டும்போறேன். உக்காந்து பேசிக்கிங்க. தோ! லோக்கோ பிஜ்ஜி கீய லெப்ட்ல திரும்புனாங்காட்டியும் நேர கார்னர் ப்ளாட்டுக்கு அடுத்த ப்ளாட்டு. ஊடு நல்லாருக்குது. சரிபட்டா பார்க்கலாம். இல்லன்னா இட்சி கட்டிக்கலாம். நாப்பதுக்கு முப்பது. தொர ஊடு. பேசனா மேண்டேன்ஸ் பண்ணிக்கிறாரு. உங்க இஸ்டம். ஒன்னு இரவத்தஞ்சு. ஒன்னு இரவது வரிக்கும் கேட்டாங்கோ குடுக்கல. நீங்க ஒக்காஞ்சு பேசுங்க. இன்னா நா சொல்றது’

போகும் வழியில் அவன் காட்டிய வீட்டைப் பார்க்கிறேன். 1964-65களில் அப்பாவின் விரல் பிடித்துக் கொண்டு லோகோவர்க்ஸ் ஸ்டேஷனின் தென்புறம் இறங்கி கண்டெம்ட் வேகன்களை கடையாக்கி சோடா ஃபேக்டரிகளில் ஒன்றில் பச்சை கலர் கோலி சோடா. குடிக்க முடியாமல் முக்கி முக்கி குடித்தும் பாதிக்கு மேல் அப்பாவுக்கு. பிறகு திரும்ப ப்ரிட்ஜ் ஏறி பட்மோடாக இருந்த தரிசு நிலத்தில் இருந்த கேம்பில் டெண்ட் ஆஃபீஸில் முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்து ஆஃபீஸில் மஞ்சள் பையிலிருந்து கட்டுக் கட்டாக காகிதங்கள், டிஸ்சார்ஜ் புக், ஜார்ஜ் படம் போட்ட வெள்ளிப் பதக்கம், ராணி படம் போட்ட செம்பு ஸ்டார் பதக்கம் எல்லாம் காட்டி சண்டை போடுவதும் வருவதுமாக இருந்தது. யாரு சண்டை போட்டா நமக்கென்ன போச்சு. நமக்கு பச்சை சோடா கிடைச்சா சரி.

மாசம் ரண்டு மூணு வாட்டி இதுக்கே அலைய முடியாதுன்னு அம்பத்தூரிலிருந்து அயனாவரத்துக்கு 65ல டேரா தூக்கியாச்சு. மாசம் நாலு பச்சை சோடா கேரண்டின்னு ஒரே சந்தோஷம். ஒன்னு ரண்டு மாசம் அப்படியும் நடந்தது. சபிக்கப்பட்ட ஒரு ஞாயிறு. அந்த ப்ரோக்கர் சொன்ன அதே வீதியில் கார்னர் ப்ளாட். ஒரு க்ரவுண்ட் என்று கவனம். அப்பாவுக்கு இடம் காட்டின ஆசாமி ஏதோ சொல்லி டெண்டுக்குள் அழைத்துப் போனான். கொஞ்ச நேரத்தில் அப்பாவின் இடி முழக்கக் குரல். இங்கயே இருக்கணும்னு நிறுத்திப் போன இடத்தில் இருந்து அசையும் அளவுக்கெல்லாம் நமக்கு தைரியமும் இல்லை.

கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்த கையோடு கையில் இருந்த பேப்பரெல்லாம் சுக்கு நூறாக கிழித்து வீசி டிஸ்சார்ஜ் சர்டிஃபிகேட்டை கிழிக்க முயன்றபோது அது காலிக்கோ பௌண்ட் என்பதால் முடியாமல், ‘அப்பா வேணாம்பாக்கும், சார்! என்ன இதுக்கும்’ அடங்கிப் போய் அதை மட்டும் பையில் போட்டுக் கொண்டு தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்.

வீட்டுக்குப் போய் 500ரூ லஞ்சம் கேக்கறான். கேட்டா நீ சிப்பாய் இல்லை. க்ளார்க்குங்கறான். நான் ஆஃபீஸ்ல உக்காந்தா கிழிச்சேன். பர்மா காட்டுலயும், பாகிஸ்தான்லயும் குண்டுக்கு நடுவில இருந்தாக்கும் வேலை பார்த்து அந்த மெடல் வாங்கினது. இப்படி ஒரு கேவலப்பட்டு காசு குடுத்து அந்த மனை வாங்கத் தேவையில்லை என்ற வீராப்பு (500ரூ அப்போ ஒரு ஆறேழு மாச சம்பளமா இருக்கும்)

சரிங்க பார்க்கலாம் என்று ப்ரோக்கரிடம் சொல்லிவிட்டு வந்து ஒரு குட்டித் தூக்கம். கனவில் அப்பா.

‘அப்பா! புருபுருன்னு கத்திண்டு பேப்பர கிழிச்சி போட்டு வந்தீங்களே. அந்த இடத்துல பாதி ஒன்னேகால் கோடி சொல்றாம்பா! ஒரு ஐந்நூறு அழுதிருக்கப்படாதா?’

‘ஒழச்ச ஒழப்புக்கு மரியாத இல்ல. க்ளார்க்குன்னு சொல்றான். சரி சொல்லிட்டு போ. அதுக்கு லஞ்சம் குடுத்தா மட்டும் சரியாயிடுமா. அப்படி மானத்த விட்டு மனை வாங்கி என்ன பொழப்புடா அது’

‘ம்க்கும். அதான் மானத்த பாத்துண்டிருக்கா மாதிரி ஆகிப் போச்சு பொழப்பு. ரண்டு கோடி போச்சேப்பா’

‘வெங்கட்ராமையர் காலனில 5 வீடு. மாசம் அம்பதுரூபா மேனிக்கு அம்பது மாசம் குடுத்து க்ரயம் பண்ணிக்கோ வாசுன்னு அந்த ப்ராம்மணன் எவ்வளவோ சொன்னார். இரவத்தஞ்சி ரூபா வாடகையோட இன்னும் இரவத்தஞ்சு கட்டிருக்க முடியாதா. பையன் வளந்தா காலேஜுக்கு எல்லாம் கஷ்டம். பட்டணம் போறேன்னு ஒரே பிடிவாதம்.’.இது அம்மாவோட குரல்.

‘வாய மூடுடி! எனக்கு நீ புத்தி சொல்ல வேணாம். விதிச்சிருந்தா வேண்டாம் வேண்டாம்னாலும் வந்தடையும்.’

அதிசயமாக அம்மாவுக்கு எதிரான அப்பாவின் குரல். அதைவிட அதிசயமாக அம்மாவிடம் சைலேன்ஸ்.

‘அசுர சந்தியாச்சு. எழுந்திருங்கோ. விளக்கேத்தணும்’ (எங்கூட்டம்மணி)

‘ம்! காஃபி குடு’ (அப்பாவுக்கேத்த தப்பாத ஒபீடியண்ட் புள்ள)

(ராத்திரி 12.30 மணி)

மீ: ஓய் இருக்கியா?

மொவன்: சொல்லு நைனா

மீ: லோக்கோல ஒரு இடம் பார்த்தேண்டா. ஒன்னேகால் சொல்றான்.

மொவன்: இதெல்லாம் ஆவறதில்ல நைனா. பேசாம பொள்ளாச்சி, ஈரோடுன்னு எங்கனா ஒரு அரை ஏக்கர் பாரு நைனா. ஒரு கொட்டாய் போட்டுக்கலாம். நீ ஜம்முன்னு புக்கு படிச்சிக்கினு நெட்டுல மொக்க போட்டுனு இரு. நான் ஒரு நாலு மாடு வச்சிக்கினு வெவசாயம் பண்றேன். ஜாலியா இருந்துக்கலாம்.

(என்ன பெத்ததும் சரியில்ல. நான் பெத்ததும் சரியில்ல.=)))))))

Wednesday, February 16, 2011

கேரக்டர் - அய்யர்.

அய்யரை நீங்கள் பார்த்திருக்கலாம். ஐந்தடி ரெண்டங்குலம் உயரம். கட்டையான சுமாரான பருமன். நல்ல நிறம். சிலர் நகம் வளர்ப்பார்கள். சிலர் மீசை வளர்ப்பார்கள். அய்யருக்கு மூக்கிலும், காதிலும் முடி வளர்ப்பதில் தனி ஈடுபாடு. காதில் உள்ளே வெளியே என்று பொசு பொசுவென்று காதை அடைத்துக் கொண்டு அப்படி ஒரு முடியென்றால் மூக்கில் ஷேவிங் ப்ரஷ்ஷை சொருகினார்போல் இருக்கும்.

பழைய ஐந்து பைசா போல் சதுரமுகம். இறுக்கி இறுக்கி தடித்த உதடுகள். மினுமினுக்கச் சிரிக்கும் கண்கள். மீசை வைத்தால் ஷேவிங் பிரஷ்ஷை மறைக்கும் ஷூ பாலிஷ் போடும் ப்ரஷ் போல் இருக்கும் என்பது போல் அகலமாக மூக்குக்கும் மேல் உதட்டுக்கும் இடைவெளி.

பொதுவாக சிலர் வெற்றிலை போடுவார்கள். சிலர் மூக்குப் பொடி போடுவார்கள். இதிலும் நம்ம அய்யர் தனி. ரெண்டும் உண்டு. அந்தக் காட்டுக்குள் மூச்சு போய் வருவதே கஷ்டம். இதில் பொடி வேறு எப்படி உள்ளே போகிறது என்ற சந்தேகத்துக்கே விடை தெரியாதபோது, வெற்றிலை குதப்பி இடுக்கிக் கொண்டு உம்ம்ம்ம்ம் மென்றிருக்கையில் வாயிலும் இல்லாமல் மூக்கிலும் இல்லாமல் மீன் போல் காதினாலும் இல்லாமல் எப்படித்தான் சுவாசிக்கிறார் என்ற கேள்விக்கு விடையேயில்லை.

பொதுவாக வெற்றிலை பாக்கு புகையிலை போடுபவர்கள் உம்மணா மூஞ்சிகளாக இருப்பது வழக்கம். புகையிலை எச்சில் ஊற ஊற கன்னம் கொள்ளாமல் பிதுக்கிக் கொண்டு, வாயோரம் கசியாமல் உதடு கூட்டிக் கொண்டு எழுதுவதும், ஏதாவது கேட்டால் அமாவாசை இரவில் ஊளையிடும் நரி போல் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு ‘அடெல்லாம் எழ்ழ கேட்டா டெரியாடு! அங்ஙடாழ் இழுக்கும் டேழு’ என்ற பதில் வரலாம். தானாக ஜோக் அடிப்பதோ அடிக்கப்படும் ஜோக்குக்கு சிரிப்பதோ இயலாத காரியம்.

ஆனால் அய்யர் அப்படியில்லை. ஒட்டகம் நீரைச் சேமிப்பதுபோல் புகையிலை நீரை சேர்த்து வைக்க தனி பை இருந்திருக்குமோவென்ற சந்தேகம் எப்போதும் உண்டு. காதைத் தீட்டிக் கொண்டு சுற்றிலும் நடப்பதைக் கேட்டுக் கொண்டு சிரிப்பு வந்தால் தேன் தடவிய குழந்தை போல் உதட்டைக் கூட்டிச் சுழித்து உப்பென்று நின்றால் கண்கள் கலகலவென சிரிக்கும்.

புகையிலை நீர்ப்பையில் பதுக்கினாற்போல் பெரும்பாலும் புகையிலை உருண்டை மட்டும் அடங்கி புடைத்த கன்னத்தோடு பளிச்சென வெடிச்சிரிப்பு கமெண்ட் அடித்து வாய் கூட்டிய மறு நொடி இரண்டு கன்னமும் உப்பிக் கொள்ளும்.

சாப்பிட்டுவிட்டு ஆஃபீஸ் வந்ததும் ஒரு முறை கொப்பளித்த கையோடு வெற்றிலை போட்டால் காஃபி வரும் வரை தாங்க முதல் கச்சேரி. வெற்றிலை போடுபவர்கள் சாதாரணமாக மேம்போக்காக காம்பு நீக்காமல், சீவல், பின்னால் ரெண்டு வெற்றிலை காம்பு கிள்ளி சுண்ணாம்பு அப்பி இடுக்கிக் கொண்டு, ஒரு உருண்டை பன்னீர் புகையிலை திணித்துக் கொள்வார்கள். அய்யருக்கு அது தவம்.

நெய் சீவல் இருந்தால் முகத்தில் தெரியும் வாஞ்சையே தனி. இல்லாவிட்டாலும் சீவலை விரலால் எடுக்கும்போதே அளவாய் வரும். ‘பாப்பான் நண்டு பிடிக்கிறார்போல்’ என்ற சொலவடை செல்லாது. சரியான அளவில் விரல் பிரிந்து சரியான அளவை அள்ளும். ஒரு முறை போட்டால் இன்னும் கொஞ்சம் என்ற பேச்சே இல்லை. அப்புறம் ரோஸ் சுண்ணாம்பை வழித்து ஆள்காட்டி விரல் முனையில் வைத்துக் கொண்டு துளிர் வெற்றிலையாக எடுத்து ஒரு உதறு. பிறகு ஒன்றொன்றாக முன்னும் பின்னும் பார்த்து சட்டையிலோ உட்கார்ந்திருந்தால் பேண்டிலோ துடைப்பார்.

துடைப்பது என்றால் அதற்கு அர்த்தமே வேறு. தங்க நகைக்கு நாய்த் தோலால் பாலீஷ் போடுவார்களே அப்படி. பின்பு கட்டை விரலால் வெற்றிலை நரம்பில் ஒரு நீவல். எடுத்த சுண்ணாம்பு சீராக எல்லா வெற்றிலையிலும் தடவி, முதுகுப் புறம் மடித்து, நுனி கிள்ளி, நடு நரம்பை இழுத்தால் சர்ஜன் மாதிரி காம்பு மட்டும் வரும்.

அந்த கேப்பில் விரலிடுக்கில் வெற்றிலையை வைத்துக் கொண்டு கட்டளைகள், விளக்கங்கள் சொல்லி ஒன்றொன்றாய் உள்ளே அனுப்புவதற்குள் சீவல் ஊறி பதமாய் இருக்கும். வெற்றிலை உள்ளே போனதும் புகையிலை உருட்டுவதெல்லாம் கிடையாது. அது ஒரு சீராக அரைபட்டு சீவலோடு கலந்தபிறகு, கண்ணாடித்தாள் பையிலிருந்து பன்னீர் புகையிலை அளவாக விரலிடுக்கில் சிக்கும். உள்ளேயே உருட்டி பந்தாக்கி வாய்க்குள் போட்டால் ஆலாபனை முடிந்த கச்சேரிபோல் முகத்தில் ஒரு எக்ஸ்டஸியோடு அமைதியும் சேரும்.

அந்த சுகத்தில் கொஞ்சம் திளைத்து விரல் சுண்ணாம்பைத் துடைத்து ஒரு சிட்டிகை பொடி எடுத்து திணித்த பிறகு மூலை மடித்த கர்ச்சீப்பால் மூக்கு ப்ரஷ்ஷுக்கு பாலிஷ். சன்னதம் வந்தவர் போல் ஆகிவிடுவார்.

அய்யர் குள்ளம் என்பதால் பெரும்பாலும் நின்றபடியேதான் வேலை செய்வார். நெடிய நோட் எழுத வேண்டும் என்றால் மட்டும் உட்காருவார். அரியர்ஸ் பில், மட்டமடித்ததால் சம்பளம் போடாத கேசுகளுக்குத் தெரியும். இந்த முயக்கத்தில் அய்யரிடம் போய் நின்றால் வரம்தான் என்று.

இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார் அல்லது தானே செய்வார். அப்படி ஆட்களையெல்லாம் நிறையச் சொல்லியாகிவிட்டது. அய்யரின் ஸ்பெஷாலிடி வேறு.

என்னதான் பேரை மாத்தி வச்சிக்கோ எனக்கென்ன போச்சு என்று இராயப்பேட்டையை கொலைகாரன் பேட்டை என்றுதான் சொல்லுவார். தன் பதின்ம வயதில் யாரோ யாரையோ வெட்டத் துரத்தி வந்ததற்குப் பயந்து தில்லகேணி வரை ஓடி திரும்பி வர வழி தெரியாமல் திகைத்த கதை எத்தனை கேட்டாலும் அலுக்காது. அலுவலக வேலையில் மூழ்கி லேட்டான காலங்களில் அடிவயிறு கலங்க வீடு திரும்புகையில் நம்ம அய்யருடா என்று ஆறுதல் அளிக்கும் குரல் பலத்தில் ஓடிப் போய் வீடு சேரும் காமெடியை புகையிலை எச்சையோடு மற்றவர் புரையேறச் சிரித்தாலும் கண்ணால் சிரித்தபடி சொல்லும் கலைஞர்.

இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்த வடக்கத்தியான் கோஷ்டியை  “உன் ஜர்தா என்ன பெரிய கொம்பா? இதைப் போடு” என்று பன்னீர்ப் புகையிலை பீடா கொடுத்து, கடைசி நாளில், வந்ததற்கு ரெண்டு பேராவாவது எழுதணுமே அய்யர் என்று கண்கள் கலங்க கெஞ்சி அவர் விருப்பத்துக்கு ரெண்டு ஜுஜூபி அப்ஜக்‌ஷன் எழுத வைத்தவர். 

சோதனைபோல் ப்ரமோஷனில் பெங்களூரு கண்டோன்மெண்டில் போட்டுவிட்டார்கள். சவம் பெங்களூர் மெயிலில் 365 நாளும் கூட்டம்தான். அதனால், சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு கிளம்பினால் ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் முன்னதாக வந்து மேலே படுத்துவிடலாம். ஜோலார்பேட்டில் இறங்கி ஒரு பால் சாப்பிட்டு முடிக்க ஐலேண்ட் எக்ஸ்ப்ரஸ் காலியாக வரும். தூக்கம் தொடரலாம். திரும்பும் போதும் இப்படியே. வெள்ளி இரவு கிளம்பி சென்னை வந்து ஞாயிறு இரவு கிளம்பி பெங்களூர் சேருவது வழக்கம்.

அப்படி ஒரு முறை திரும்பும்போது ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் பாய்ந்து இடம் போட்டு ஏறியும் வண்டி கிளம்பவில்லை. கக்கூசில் தண்ணியில்லை என்று செயினை இழுத்ததால் நீர் நிரப்பும் வேளையில், ஆயில் துடைத்த துணிப்பந்தத்தைக் கொளுத்தி கோச்சின் அடியில் ப்ரேக் கட்டையை சரி பார்ப்பதை எண்ணெய்ப் புகையும் நெருப்பு வெளிச்சமும் பீதியைக் கிளப்ப, ‘அய்யய்யோ, வண்டியில் நெருப்பு’ என்று முதலில் பாய்ந்தவர் நம்ம அய்யர்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் கோச்சில் இருந்தவர்கள் முழுதும் ப்ளாட்ஃபார்மில்.  அது நெருப்பில்லை, ப்ரேக் செக்கிங் எனத் தெரிந்து ஆசுவாசமாவதற்குள் விசில் ஊத அனைவரும் பாய்ந்தேறிய பிறகு பார்த்தால் நிற்க இடமில்லாமல் நின்றிருந்த அய்யர் லக்கேஜில் படுத்திருந்தார்.

படுத்திருந்தவர்கள் எல்லாம் நின்றபடியும், நிற்க இடமில்லாதவர்கள் வசதியாகவும் ஒரு நொடியில் மாற, ‘யார்யா சவுண்ட் விட்டது’ என்ற எரிச்சல் கேள்விகளுக்கு புகையிலை அடக்கியபடியே அய்யரால் மட்டும்தான் வெடிச்சிரிப்பு சிரிக்காமல் இருந்திருக்க முடியும்.

அய்யருக்கு இன்னோரு ஸ்பெஷாலிட்டியும் உண்டு. மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடித்துவிடும் என்றபயம். ஒரு நாளும் கையால் ஸ்விட்ச் போட்டதோ அணைத்ததோ இல்லை. இருப்பா! நானும் கிளம்பிட்டேன் லைட்டை அணைத்துவிடு என்று கிளம்புவார். வேறு வழியில்லை எனில் இதற்காகவே பதுக்கி வைத்திருக்கும் 4 அடி நீள கட்டையால் முதல் முறை பட்டாசு கொளுத்தும் குழந்தைபோல் பீதியோடு அணைக்கும் அழகே அழகு.

கொடுமை கொடுமை என்று அய்யரைப் பழிவாங்கவே அடிக்கடி ஜல்ப் என்னும் ஜலதோஷம் பிடித்து ஆட்டும். மூக்குப் பொடியும் போட முடியாமல், புகையிலை எச்சையும் அடக்க முடியாமல் தும்மிக் கொண்டே இருந்தால் மனுசனுக்கு வேறே நரகம் என்ன இருக்கிறது? அப்போதெல்லாம் மருந்துக் கடைகளில்தான் ப்ராந்தி கிடைக்கும். அதுவும் ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்க வேண்டும். அவுன்ஸ் க்ளாசில் ஊத்தி ராவாக கொடுப்பார்கள். அதை சிரப்பு என்று என்று நம்பிக் குடித்தவர் அய்யர்.

பெங்களூர் குளிருக்கு ஜல்பின் தொல்லை அதிகமாக ப்ரிஸ்க்ரிப்ஷனோடு மருந்துக் கடைக்குப் போனபோதுதான் அது சிரப்பில்லை ப்ராண்டி எனத் தெரிந்து கொண்டு, ஜல்பா ப்ராண்டியா என்று பட்டி மன்றம் நடத்தி ஒரு வாய் ஊற்றிக் கொண்டு மிச்சத்தை அப்படியே வைத்து விட்டு  வருவதை சொன்னதற்கு சிரிக்கவா? அல்லது  ‘அதுவரைக்கும் எனக்கு போதைன்னே தோணினதில்லை! ப்ராண்டிக் கடையில் குடித்தால் மட்டும் பறக்கறாமாதிரி கால் பின்னும்’ என்று குழந்தை மாதிரி சொல்வதற்கு சிரிக்கவா?

எட்டாம் நம்பர் சாராயக் கடையில் 50 மில்லி வாங்கி பன்னீர் சோடாவில் கலந்து மிளகு போட்டுக் கொண்டு வரச்சொல்லி அதை ஃபாரின் சிரப்பு என்று ஏமாற்றிக் கொடுத்து அய்யரின் அலம்பல் தாங்காமல் அவர் நண்பர் நொந்து போனது வேறு காவியம்.

இப்படிக் குழந்தையாகவே இருந்து ரிட்டையர் ஆகி கொஞ்ச வருடங்களுக்கு முன் இறந்து போனார் அய்யர்.
-:o:-

Wednesday, December 15, 2010

கேரக்டர் - ராஜன்...

உழைத்துக் கரம்பேறிய உலக்கைக் கைகளும், முரட்டு முகமும், சாராய வாடையுமாய் ஒருவன் அவரை நெருங்குகிறான். அவர், கிள்ளியெடுக்க சதையின்றி, கொஞ்சம் அதி வெளிச்சமான ஆர்க் லேம்ப் போட்டால் ஸ்கேனிங் இல்லாமலே உடலுறுப்புக்களைப் பார்க்கலாம் போன்ற செக்கச் சிவந்த ஒல்லியான தேகம். துறுத்தி நிற்கும் நெஞ்சுக்கூட்டில் ஒற்றை ருத்திராட்சம். தாடி என்றே குறிப்பிடும் அளவுக்கு அடையாளமான வெண் தாடி. தலைமுடியை இறுக்கி பின்னிழுத்துப் போட்ட ரப்பர் பேண்ட். ஆண்களில் அதிகம் காணமுடியாத செக்கச் சிவந்த உதடுகள். தீர்க்கமான நாசி. அதைவிட ஊடுருவித் துளைக்கும் பார்வை. நெற்றியில் காமாட்சி குங்குமம். பார்க்கும் யார்க்கும் கும்பிடத்தோன்றும் உருவம்.

‘சாமி! ஃபி எப் போட்டுக்குறேன் சாமி. ஐந்நூறு ரூபாய்தான். வந்துகினே கீது சாமி. கொய்ந்தைக்கி பீஸ் கட்டணும். ஆப் டே சி.எல். போட்டுக்கிறேன். மன்ஸு வை சாமி’ என்கிறான்.

நெற்றிக் குங்குமம் மாதிரியே சிவந்த முகத்துடன் “த்தா! ஏண்டா என் தாலியறுக்கறீங்க. மனுஷனா மாடா. வந்ததையெல்லாம் செக் போட்டு கொண்டு கொடுத்துட்டு இப்பதானே உக்கார்றேன். ஃபீஸ் கட்றானாம் குடிகார நாயி. ஒரு நிமிஷம் நின்னா பளார்னு அறைஞ்சிடுவேன்” என்ற பதிலுக்கு அந்தச் சண்டியனின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?

முகமெல்லாம் மலர, ‘டாய்ங்ஸ் சாமி! மச்சான் போலாம். வா! சாமி கெட்ட வார்த்தைல திட்டிடிச்சி. ஒரு டீ சாப்டு வந்தா துட்டு வாங்கிக்கலாம்’ என்று போவான். தலை எழுத்துடா என்று குழந்தை மாதிரி சிரித்தபடி மதிய உணவைப் புறம் தள்ளித் தேடிப்போவார். ‘ஒரு செகண்ட்ல திட்டிட்டேன். பாவம். நம்பிண்டு போறான். போட்டுக் கொடு’ என்று கேட்டு வாங்கி, செக் எழுதி, கேஷியரிடம் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்து சாப்பிடுவார். அவர்தான் ராஜன்.

நாலு முழக் கதர்வேட்டி, அண்ணன் மகன்கள் போதவில்லை என்று கொடுத்த சட்டை, தடியான இங்க் பேனா, பாக்கட் கொள்ளாக் காகிதங்கள், செக் எழுது்ம் நேரம் தவிர ஓய்வின்றி நடையும் உழைப்பும். செங்கல்பட்டில் வீடு. காலை முதல் பேசஞ்சரில் வந்துவிடுவார். இரவு  பாண்டியனில் திரும்பினால்  சீக்கிரம். அப்போதும் பை நிறைய பில்லும், செக்கும், ஸ்டேட்மெண்டுமாய் வேலை பார்த்தபடி போவார். ராஜனிடம் பில் போனால் செக் நிற்காது என்று நம்பிப் போவார்கள்.

இரவு ஏழரை மணிக்குக் கிளம்புவார். டேபிள் அடிகளில் ஏதாவது செக் தாள் பறந்திருக்கிறதா என்று பார்த்து, காந்தி படத்தின் முன் கை கூப்பி வணங்கி ‘ராமச்சந்திர மூர்த்தி! கிளம்பலாம்’ என்று கிளம்பி பறக்க பறக்க வண்டி பிடிக்க ஓடுவார். ராஜன் திட்டினார் என்று ஒரு முகம் சுணங்கியதில்லை. சாரி சொல்லிவிட்டுப் போவார்கள். சம்பளப் பட்டுவாடாவுக்கு  விரட்டி விரட்டி பில்லை பாஸ் செய்ய வைத்து இரண்டு நாள் முன்பாகவே செக்கை அனுப்பிவிட்டு, மலர்ந்த முகத்துடன் எல்லா செக்கும் அனுப்பியாச்சுப்பா. நம்பிண்டு போய் சம்பளம் வரலைன்னா கஷ்டம் என்று போவார்.

சில நேரங்களில் கடவுளையே நீ இருக்கிறாயா என்று கேட்கத் தோன்றும் தருணங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்க்கும். இவர் விஷயத்தில் ரொம்பவே அப்படியான தருணங்கள் அமைந்தது. வாய் ஓயாமல் ஸ்லோகம் சொல்லிக் கொண்டு, கீர்த்தனங்கள் பாடிக் கொண்டு, செய்யும் தொழிலில் நேர்மை, அன்பு, இடையறா உழைப்பு என்று இருக்கும் ஒருவனை விட வேறே மனிதனை எங்கே தேட? லக்ஷ்மணனைப் போல அண்ணன் மீது அவ்வளவு மரியாதை. பாசம். அவரின் குழந்தைகளைத் தன் பிள்ளைகளாக வளர்த்தார் என்றோ அவருக்கு பிள்ளை இல்லாமல் போகும்?

மனைவிக்கு மன நலம் அவ்வளவு சரியில்லை. சுயமாக ஒன்றும் செய்யத் தெரியாது. பயந்த நாட்களில் அறையை விட்டு வெளியே கூட வரமாட்டார். காலையில் எழுந்து, பூஜை புனஸ்காரங்களோடு சமையலும் செய்து, மனைவிக்குச் சாப்பிடக் கொடுத்து, மதியத்துக்கும் எடுத்து வைத்து, அக்கம் பக்கம் பார்த்துக் கொள்ளச் சொல்லி முதல் காஞ்சிவரம் பாஸஞ்சர் பிடித்து ஒன்பதரைக்கு ஆஃபீஸில் இருக்க முடியுமா? ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல 35 வருடம் இந்த நெறியில்தான் வாழ்க்கை என்றால் மனிதனுக்கு சலிப்பு தட்டாதா?


ரிடயராகி பத்து வருடமிருக்கும். இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்தேன். வெளியுருவில் சற்றும் மாற்றமில்லை. முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். கையைப் பிடித்துக் கொண்டு ‘எப்படி இருக்க பாலு’ என்ற நொடியில், ஒரு நல்ல சங்கீதத்தில், கோவில் ஹாரத்தியின் போது, அமைதியான ஒரு நொடியில் அலை அலையாய் உடலில் ஒரு சிலிர்ப்பு பரவுமே! உடலின்றி கனமின்றி பரப்பது போல், கனவா நனவா என்று ஒரு உணர்வு வருமே, அப்படி வந்தது. மனமெல்லாம் துடைத்துவிட்டது போல் இருந்தது. அதிகாலையில் குளிர்ந்த நீர் ஆற்றில் இறங்கி நிற்கையில் அடி வயிற்றில் சூடாக நெஞ்சு வெடிக்கும் போல் கனமாக இருக்குமே அப்படி ஓர் உணர்வு.

நீங்க எப்படி இருக்கீங்க சார் என்று கேட்கவே தொண்டையடைத்தது.  ‘ஆண்டவன் புண்ணியத்தில் நல்லாயிருக்கேண்டா. பூஜை கோயில்னு போயிடுறது பொழுது. இனி என்ன தேவையிருக்கப் போறது சொல்லு’ என்று ஆசி கூறிப் பிரிந்தார்.
 

எத்தனையோ உருப்படாத கேஸ்களுக்கு சற்றும் தகுதியில்லாவிடினும் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து உதவ முடிந்திருக்கிறது. உழைப்பைத் தவிர ஒன்றறியாத இந்த உத்தமருக்கு என்றைக்கோ சரியாக செய்த சம்பள நிர்ணயத்தை தப்பாக மாற்றி வந்த ஒரு ஆணைக்கு எதிராக போராட ஒரு நரசிம்மன் இல்லை.

செய்யக் கூடியவர்கள் ‘ப்ச்! ரூஊஊஊல் அப்படி இருக்கிறது என்பதற்கு மேல் செய்யத் தயாரில்லை. தீர்வாணையத்தில் ஒரே ஹியரிங்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு பெறக்கூடிய எளிய கேஸ். இத்தனைக்கு அவரின் உறவினர் அங்கே குமாஸ்தா. பல தேர்ந்த வழக்கறிஞர்களும் அனுமதி கட்டத்திலேயே தீர்ப்பாகிவிடும் என்று சொன்ன வழக்கு. ஒரு பகல் போதில் அரசு ஆணை! விசாரணைக்குத் தகுதியற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்ட போது அதிர்ந்து போனேன். உயர் நீதி மன்றத்துக்குப் போகலாம் சார் என்று எவ்வளவோ சொன்னேன்.
என் பெரிய தோல்வி இதிலிருக்கிறது.

தளர்ந்த மனதுடன்,  ‘இது எனக்கு இல்லை பாலு. நீ சொன்னாய். அத்தனை வக்கீல்மாரும் சொன்னார்கள். அப்படியும் இப்படி ஆகிறதென்றால் எனக்கு இது விதிக்கலைடா. எனக்குப் போராட தெம்பில்லைடா. என்ன ஒரு அம்பது ரூபா பென்ஷன்ல வருமா? உழைச்ச உழைப்பை இல்லைடான்னு பதினஞ்சாயிரம் என் வயித்தில அடிச்சானா? இதைப் போராடி வாங்கித்தான் என்ன பண்ணப் போறேன்? விடு, அதை விட அசிங்கம் ஒன்னுமில்லை’ என்று போனது இன்னும் கண்முன்னிருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~