Showing posts with label யூத்ஃபுல் கவிதைகள். Show all posts
Showing posts with label யூத்ஃபுல் கவிதைகள். Show all posts

Sunday, October 25, 2009

மனக்குளம்...







மனக் குளம்

நிறைந்த மனக் குளத்தில்
என் முகம் பார்க்க
உன் முகம் கண்ட நாள் எத்தனை?

கரையோர ஆலமரக் கனி விழ
சிற்றலையாய்த் தோன்றிய கலங்கலுக்கு
காரணம் நானெப்படியாவேன்?
விழுந்த ஆலங்கனி விஷ வித்தாய்!

குளம் குழம்பி குட்டையாக
முகம் பார்க்க முயலும்
முட்டாள் நான்
முழுதாய்த் தொலைந்து போனேன்.

உன் முகம் காண முயன்று
முற்றாய்த் தோற்று
என் உயிர் தேடும்
பிரயத்தினத்தில் மூச்சடைக்கிறது!

ஏன் என் உயிர் என்னை
வெறுப்பதாய்ச் சொல்கிறது?
என் ஏக்கம் மறுத்தேன்
எள்ளி நகைக்கிறது?

நானறிவேன்! என் உயிருக்கு
வெறுக்கத் தெரியாது.
உயிர்ப்பிக்கும் தேவதைக்கு
உயிர்வாங்கத் தெரியாது

உயிர் அளிப்பது இறைவனெனில்
நீயும் அதுவன்றோ?
ஏங்கி அழாமல் நீங்கள்
எப்பொழுது வந்தீர்கள்?

வரமளிப்பது இறைவனெனில்
நீயும் அது தான்
ஆரத் தழுவி
தன்னுள்ளடக்கையில்!


               __/\__                                                                                                                

Wednesday, October 21, 2009

நீ சிலையா ஓவியமா?


(படம்: நன்றி யூத்ஃபுல் விகடன்)
யூத்ஃபுல் விகடன் படைப்புகளில் வெளிவந்த என் கவிதை.


ஓராயிரம் முறை நான் எனக்குள் வைத்த பட்டிமன்றத்தில்
தீர்ப்பானது,  நீ ஓவியம்!
உன் உதடெழுதி பிரமனிட்ட கையெழுத்தின்
கடைசிப் புள்ளி உன் கன்னத்தில்.

உன் உதட்டோரம் தொடங்கி காதோரம் போக‌
கண்களால் பயணித்தேன் உன் கன்னச் சாலையில்
கண்டு கொண்ட நீ நாணிப் புன்னகைத்தாய்
கனவாய்த் தோன்றிய கன்னக் குழியில் நான் காணாமல் போனேன்.

அட்சய பாத்திரத்துக்கு
எதிர்ப்பதமா உன் கன்னம்?
எத்தனை முத்தங்களால் நிறைத்தாலும்
அது நிறைவதில்லையே!

அழகு நிலையப் பெண்கள்
அன்றாடம் திட்டுகிறார்கள்..
உன்னைப் போல் அழகாக்க வேண்டுமென‌
உயிரெடுக்கிறார்களாம் வருபவர்கள்.

காவல் துறையும்
கலங்கி நிற்கிறது.
நீ கடந்து செல்கையில்
போக்குவரத்து நெரிசலாம்.

உன் ஊரில் கலியாணத் தரகர்கள்
காணாமல் போனார்கள்!
எல்லோரும் உன்னைப் போல்
பெண் தேடச் சொன்னதால்.

அடிக்கடி நீ உன்
உதடு கடிப்பாய்..
அதனால் சிவப்பது உன் உதடா?
அல்லது ஜொலிப்பதுன் பற்களா?

என்னைப் பித்தனாக்கிய  தத்தையே
நான் கொடுத்த ஒற்றை ரோஜா
இன்னும் அழகாய்த் தெரிகிறது!
நீ ஏற்றுக் கொண்டதால்!

______/\______