Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Wednesday, April 21, 2010

வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே..




சிறிது நாட்கள் முன்பாக இந்தக் காணொளிக்கான சுட்டி எனக்கு மின்னஞ்சலில் வந்தது. பார்த்துப் பரவசப்பட்டுப் போனேன். நண்பர்களுக்கு பகிர்ந்தேன். அதற்குள் அது நீக்கப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு சுட்டியில் இது கவனத்துக்கு வந்தது. தேடித் தேடி கண்டுபிடித்தும் விட்டேன்.

தமிழுக்கு அமுதென்று பேர். செந்தமிழ்நாடெனும் போதினிலே என்றெல்லாம் சிலாகிக்கப்படும் மொழியின் அற்புதம் கண்டேன். எத்துணை அழகான தமிழில் எவ்வளவு உணர்வுபூர்வமாக கேட்போர் உருகும் வண்ணம் பேசுகிறார் திரு சுகி சிவம். கட்டிப் போடுகிறது தமிழ். உள்ளுணர்வு வரை போய் உலுக்கி எடுக்கிறது. 

என்னதான் காசுக்குப் பேசினாலும் இப்படியும் பேசமுடியுமா? மொழியின் அழகால் விஷம் ஊட்டும் அழகே அழகு. பெயரிலேயே சுகி! சுகித்திருப்பவர் என்றும் ஒரு அர்த்தம் உண்டல்லவா? யாரோ அழைத்து ஈழத்தைச் சுற்றிக்காட்டியிருக்கிறார்கள். முக்கியமாக யாழ்ப்பாணம் போனாராம். அவர்கள் சொல்லச் சொன்னதாகச் சொல்லி வேண்டுகிறார். சொல்லாததையும் சொல்லி வியக்க வைக்கிறார்.

தானே எழுதினாரோ, எழுதிக் கொடுத்ததைப் படித்தாரோ தெரியாது. என்ன ஒரு சிந்தனை? என்ன ஒரு தெளிவு? சுகி சிவம் ஐய்யா! மனிதனுக்கு மறதி வரம்தான். ஆனால் இது மறக்ககூடிய வலியில்லை ஐயா! ஊடகத்தைப் பாருங்கள். அத்தனை உயிர்கள் போனபோது ஒரு செய்தியும் காட்டாத ஊடகம் உருகி உருகி இப்படி ஒரு நிகழ்ச்சியைத் தருகிறது பாருங்கள்.

ஐயா சுகி சிவம் அவர்களே! யாழ்ப்பாணம் போனீர்கள் சரி. சண்டைக் காலத்திலேயே அங்கு ஓரளவு சகஜ நிலை இருந்ததே ஐயா. இப்போதும் அவர்கள் பயப்படுகிறார்கள் என்கிறீர்களே. என்ன ஒரு கொடுமை இது. அவர்கள் பூமி. அவர்களும் ப்ரஜைகள். பயந்து வாழும் அவலம். அப்படியென்றால் என்ன ஒரு ஆட்சி நடக்கிறது அங்கே. 

சண்டை முடிந்த பிறகும் இப்படித்தான் வாழ்கிறார்கள் என்றால் என்ன கொடுமை இது? பழைய கதையைப் பேசக்கூடாதாம். சுகி அய்யா சொல்கிறார். வாஸ்தவம். பேசிவிட முடியுமா? எத்தனை உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் பாருங்கள் சுகிசிவம். முதல்வர் கூட பார்வதி அம்மாள் விடயத்தில் டெசோ, சந்திரகாந்தன் பற்றியெல்லாம் பேசித் தொலைகிறார். சண்டிவியையோ உங்கள் பொன்னான கருத்தையோ அவரே மதிப்பதில்லை.

மன்னன் எவ்வழி! மக்கள் அவ்வழி! ஆல் த மீஜிக் ஸ்டார்ட்.

எப்படி எப்படி சுகி சார். ஓடிப் போனவர்களா? ஒரே ஒரு புலம் பெயர்ந்த தமிழனிடம் பேசி இருக்கிறீரா? விரும்பியா ஓடினார்கள்? இருக்கும் இடம் சொர்க்கமேயானாலும், அவர்கள் மனதில் அவர்கள் மண்ணுக்கான ஏக்கமல்லவா இருக்கிறது? ஒரு புனிதத் தலத்துக்கு போவதற்காக தவமல்லவா இருக்கிறார்கள்.

அட போராட்ட காலத்தில் சின்னஞ் சிறுசுகளின் பேட்டி பார்த்தீர்களா?அந்த மண்ணைப் பார்த்தேயிராத பிஞ்சுகள். உணர்வு பூர்வமாக எம்மண்ணுக்குத் திரும்புவோம் என்றபோது சிலிர்த்துப் போயிற்று.

சண்டைக்காலத்தில் ஓடிப்போனவர்களாம். என்ன ஒரு எள்ளல். உங்கள் தெருவில் ஒரு சோடாபாட்டில் உடைத்தால் நடுத்தெருவுக்கு வந்து என்னவென்று கேட்பீர்களா ஐயா? முதலில் கதவடைத்துவிட்டு உள்ளேயல்லவா இருப்போம். 

பாதி வகுப்பில் குண்டு வீச்சு, சந்தேகத்தின் பேரில் கடத்தல், விசாரணையென்ற பேரில் சித்திரவதை, வயது வந்த குழந்தையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ திருமணம் செய்து கொடுப்பது என்ற கட்டாயச் சூழலில் வாழும் நிலை ஏற்பட்டால், ஓடாமல் என்ன ஐயா செய்ய முடியும்?

என்னதான் மூன்று தலைமுறையாக நகரத்தில் பிழைத்தாலும், உங்கள் பூர்வீக கிராமத்தில் அல்லது ஊரில் இருக்கும் நிலமோ, வீடோ உங்களுக்காக உழைத்த, அட வேண்டாம் ஊரென்றிருந்தால் உறவொன்றிருக்குமே வழியின்றி! அதற்கு கொடுத்துவிட்டீர்களா? பூர்வீக கிராமத்தில் நிலம் வீடெல்லாம் இருக்கிறது. விடுமுறைக்கு போய் வருவது என்று ஒரு வழமையே இருக்கிறதே நம்மிடம். 

அதையெல்லாம் கொடுக்க மறுக்கிறார்களாம். யாரிடம் கொடுப்பது? சமூக அமைப்புகளிடம். சமூக அமைப்புக்கு. ஐ.நா. போன்ற அமைப்புக்களிடம் அங்கீகாரம் பெற்ற அமைப்புக்களுக்கு கொடுக்க வேண்டுமாம். அவர்கள் அங்கிருப்பவர்களுக்கு உதவுவார்களாம்.

மருந்து கிடைக்கவில்லை அங்கே என்று வருத்தப் பட்டீர்களே. ட்ட்ட்ட்டச் பண்ணிட்டீங்க சார். உலகெங்குமிருந்து மருந்தும் உணவும் வந்ததே. கொடுக்க விட்டார்களா? யாராவது முன்னெடுத்து கொடுக்கத்தான் செய்தார்களா?

செஞ்சிலுவைச் சங்கத்தையே ஆட்டிப்படைத்ததய்யா. மக்களுக்காக உழைத்த அமைப்புக்களுக்கு முத்திரை குத்தி விரட்டியது. இவர்களிடம் ஒப்படைத்தால் மக்களுக்குப் போகுமாம். நீர் தருகிறீரா உத்திரவாதம்? ஏன் அங்கிருக்கிறவர்கள் போருக்குமுன் எங்கிருந்தார்கள்? ஆகாசத்திலிருந்தா குதித்து விட்டார்கள்? இருந்த இடத்தில் அவர்களை வாழவிட என்ன தடை?

உலகெங்கும், அவர்களின் மீள் குடியமைப்புக்கு கொடையாக, கடனாகவென்று வாங்கிய காசெல்லாம் எங்கே போயிற்று? அருமையாயகச் சொன்னீரைய்யா. அவர்கள் வாழ கோழி, ஆடு, மாடு, வலை எல்லாம் வேண்டுமாம். ஏன் அங்கு படித்தவர்கள் இல்லையா? அவர்களுக்கு வேலைத் தரச் சொல்லுங்களேன். படிக்க பள்ளி கட்டித் தரச் சொல்லுங்களேன். தமிழர் பிள்ளைகளுக்கு கல்வியை இலவசமாக வேண்டாம், சலுகையில் தரச் சொல்லுங்களேன். ஆடு கோழி வளர்த்துதான் தமிழன் வாழ வேண்டுமா?

அஞ்சி அஞ்சி வாழ்கிறார்களாம். அரசோடு ஒத்துப் போக வேண்டுமாம். எப்படி? இப்படி அச்சத்திலேயே வாழவிடு. நாங்கள் கொட்டிக் கொடுக்கிறோம். அவர்களைக் கொல்லாமல் விட்டால் சரியென்றா? 

கடைசியில் சொன்னீர்களே! சீனாக்காரன் அங்கு உறவாடுகிறான். நம் எல்லை குறித்த அவதானிப்பு மிக முக்கியம். அதனால் அரசியல் பேச வேண்டாமென்று. அதனால் அங்கிருக்கும் தமிழர் பலிகடாவாக இருக்கத்தானே வேண்டும். ஆட்டை வளர்த்துத்தானே அடித்து விருந்து வைக்கவேண்டும். இப்படி ஓர் வாழ்க்கைக்காகத்தானே இவ்வளவு போராட்டமும் இல்லையா ஐயா. 

காசு வாங்கியாச்சி. பேசியாச்சி. அந்த நாள் உங்களுக்கு இனிய நாளாகப் போச்சு. நல்லா இருங்கய்யா. உங்களை வளர்த்த தமிழும், உங்கள் வாழ்வாதாரமான ஆன்மீகமும் உங்களை வாழ்த்தும். என்ன எழவு. பாரதி குறித்தெல்லாம் பொங்கி பொங்கி பேசியிருக்கிறீர்களே. உறுத்தாது? பாரதி கண்முன் வந்தால் இந்த பேச்சுக்கப்புறம் தின்னும் சோறு நரகலாயிருக்காது?

ஹி ஹி. ஒரு கேள்வி. இந்த நிகழ்ச்சியை பதிர்வதற்கு கார் வராவிட்டால், காசு தராவிட்டால் போயிருப்பீர்களா? அதென்ன சார் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் சன் டிவியில் மட்டும்தான் பேசவேண்டும் எனச் சத்தியம் வாங்கிக் கொண்டார்களா என்ன? 

 ஐயா அவர்களை அமெரிக்கத் தமிழ் விழாவுக்கு அழைத்திருக்கிறீர்களாமே. இந்தியத் தமிழரோ ஈழத் தமிழரோ அய்யாவோடு ஒரு சந்த்திப்புக்கு வழி செய்து புலம்பெயர் வாழ்வின் வலியைப் புரியச் சொல்லுங்கள். புண்ணியமாய்ப் போகும்.

(பொறுப்பி: ஏதோ எழுத ஒன்றுமில்லாமல் எழுதியதில்லை இது. உலகின் மனிதர்கள் இருக்கும் ஒரு மகோன்னத தேசத்தில் எந்தக் கவலையும் இன்றி சுகித்து வாழும் வழியிருந்தும் தன் மண்ணை, தன் மக்களை நொடியும் மறவாமல் அவர்களுக்காக அழுது, அவர்களுக்காக உழைத்து, அவர்கள் நல் வாழ்வுக்கு தன் சுகத்தை அர்ப்பணித்து, முடிந்தவரை அவர்களுக்கு உதவும் கலகலப்ரியாவுக்கும் அவரைப் போன்ற இதரப் புலம் பெயர்ந்தும் தன் மண்ணை நேசிக்கும் சொந்தங்களுக்கு, இப்படி ஒன்றுமறியாமல் கூலிக்கு மாரடிப்பவர்களின் சார்பில் நான் கோரும் மன்னிப்பு இது)
~~~~~~~~~~

Saturday, August 29, 2009

ஒன்று எங்கள் சாதியே..

கதிர்,நர்சிம், தங்கமணி பிரபு, காமராஜ், இரும்புத்திரை அரவிந்த் இன்னும் பலர் சிங்களவனின் வெறியாட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார்கள். ராஜ நடராஜன், யூர்கன் ஆகியோர் மனம் வெறுத்து இடுகையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பாமரன்..ஆகிய நான் என்ன செய்யப் போகிறேன்?

கதிர் தன் இடுகையில் "நல்ல இதயங்களே இந்த அவலம் பற்றி ஒரு இடுகை உடனே உங்கள் வலைப்பூவில் எழுதுங்கள் என அன்போடு வேண்டுகிறேன்" ; "இப்போது நாம் இடும் இடுகையின் மூலம் இதுவும் ஒரு நாள் வெடிக்கும் என்ற நம்பிக்கை கீற்று எனக்குண்டு." என்கிறார். விரக்தியில் பின்னூட்டம் இட்டு காத்திருந்த வேளையில் கலகலப்ரியா கொடுத்த ஒரு சுட்டி நம்பிக்கையளிக்கிறது. ஆம். வலைப்பூவின் தாக்கம் பெரிது தான் போல. அதிலிருந்து சில துளிகள் இதோ:

"பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில்."

"எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்."

இதோ இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி அயல் நாட்டுத் தொலைக்காட்சியில் வெளியாகிய விடியோ வந்து 4 நாட்களாகிவிட்டது. ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காட்டப் பட்டதா? எடுபிடிகளாகிவிட்ட பத்திரிகையில் வந்ததா? வந்ததும் சிங்களவனுக்குச் சாதகமான அண்டர்லைன் பத்திரிகையின் பொய் பிரசாரம் தானே. எவனாவது இந்தச் செய்தியை போட்டானா? தனி ஈழக் குல்லாய் போடப் பார்த்த அரசியல் வாதிகள் எங்கே தொலைந்தார்கள்? தமிழக மீனவர்களைக் கடத்துவதும், சுடுவதும் பெயரளவுக்கு எதிர்ப்பைக் காட்டியே புதைக்கிறீர்களே? ஏன்? ஒட்டு மொத்தமாக ஏன் இப்படி அடிமையானோம்? என்னவெல்லாம் சொன்னார்கள் என்று ஒரு மீள் பார்வை பார்ப்போமா?

ராஜபிச்ச: "பாதுகாப்பு வலையம் ஐ.நா. குறிப்பிட்டதல்ல. எமது ராணுவத்தின் யுத்தோபாயம்"
ஃபொன்சேகா: "கெரில்லா யுத்தியினாலேயே வெற்றி பெற்றோம்"
ராம்புக்வெல: "வெற்றி பெற்றவர்கள் மீது விசாரணை நடந்ததாக சரித்திரமில்லை"

இந்த நாய் எல்லாம் இப்படித்தான் பேசும். கலைஞருக்கு என்னாயிற்று? ஒரு பத்திரிகையாளர் இந்தியா ராணுவத் தடவாளங்களை அளித்திருக்கிறது எனப் புத்தகம் வெளியிட்ட பின்பும், ராணுவத்துறை இணை அமைச்சர் புலிகளுக்கு எதிராக ஆயுதம் கொடுக்கவில்லை, இலங்கை அரசைத் தற்காத்துக் கொள்ளத்தான் ஒப்பந்தப்படி ஆயுதம் அளித்தோம் என அறிவித்த பின்பும் பத்திரிகையாளரின் கேள்விக்கு கலைஞரின் பதில் இது:

"ஆயுதங்களோ, போருக்குத் தேவையான கருவிகளோ எதையும் இந்திய அரசு அனுப்பவில்லை என்று பல முறை மத்தியிலே உள்ள பிரதமர் உட்பட அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்." மே 18க்கு முன்பும் இதையே தான் சொன்னீர்கள் ஐயா. நடந்தது என்ன? இப்படி வெட்ட வெளிச்சமான பிறகும் ஏன் இப்படி பேசுகிறீர்கள். தமிழாய் வாழ்ந்து தமிழால் வளர்ந்து இத்துணை காலமும் கடந்த பின்னர் உங்கள் காலத்தில் தமிழுக்கு இப்படி சாபக்கேடு வரலாமா? இருக்கும் மீதித் தமிழர்களை வாழவைக்க எதிர்த்துக் குரல் கொடுத்துப் பாருங்கள். எதிர்ப்பவர்களை தமிழன் எட்டி உதைப்பான். இதோ இன்னோரு செய்தியும் ஐயா.

"இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது குறிப்பிடத்தக்கது."

என்றோ ஒரு நாள் சிங்கள நாய் தமிழக மீனவனைச் சுட இதைப் பயன்படுத்தும் அப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?

எனவே வலைப்பூத்தோழர்களே கட்சி மறந்து, வேறுபாடு மறந்து கலைஞரை வேண்டுவோம். ஐயா இப்பொழுதாவது ஏதாவது செய்யுங்கள் என்று. இந்தக் கொடுமையை எதிர்க்க பின்னிருப்போம் என்று. நிச்சயம் குரல் எட்டும். சினிமா என்ற மீடியாவே பாதிக்கப் படும்போது, தாக்கம் வலுவானது தான். இணைவோம். எழுதுவோம், இறைஞ்சுவோம், போராடுவோம் இல்லையெனில் கிழிப்போம்.

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தங்கள் இடுகைகளை label ஈழம் என்று வகைப்படுத்தினால் நம் அத்தனை இடுகைகளும் திரட்டிகளில் ஈழத்தின் கீழ் வரும்.