வந்து விழுந்தது துவைத்த அரையாடை
சற்றே முகம் சுளித்து யார் நீ என்றது
பக்கத்திலிருந்த பழந்துணி..
நீரில் நனையேன்
நின் போல் சிறு நெருப்பில் கருகேன்
நிர்வாணம் தவிர்க்க நினைப்போர்க்குக்
காவலன் நான்..நீச்சலுடை நானென்றது..
‘கட்டவே’ முடியாத நீயெல்லாம் காவலனா சீச்சீ
பாட்டனின் பட்டாயிருந்து
பாதி பாதியாய்க் கிழிபட்டுப்பட்டு
இற்றுப் போயிடினும் இனி தைக்க
இடமின்றிப் போயிடினும்
ஒட்டுப் போட்டாலும்
ஓட்டையே விழுந்தாலும்
‘கறை’யே இருந்தாலும்
‘கரை’ உண்டென்ற
கோபுரம் உண்டெனக்கு
கோவணம் எனது பெயர்.
பகட்டுக்கு என்னருகில் இடமில்லை
பறந்துவிடு என்றது..
சுழன்றடித்த காற்றில்
நழுவியது அரையாடை
படபடத்த பட்டுக் கோவணம்
பாதி பிரிந்த கம்பியில் சிக்கிக் கிழிந்தது..
சேதாரமில்லையெனக்கென சிரித்தது அரையாடை
பாதியாய்க் கிழிந்தாலும் வரும்
பரம்பரைக்கும் காவலன் நான்
படபடத்துச் சிரித்தது
பாரம்பரியக் கோவணம்..
~~~~~~~~~~~~~~~