இரயில்வேத்துறையில் அப்ரெண்டிஸ் சர்வீஸ் என்ற ஒன்றிருப்பதை பலரும் அறிவார்கள். அது தொழிற்பயிற்சி மட்டுமே, வேலை உத்தரவாதமில்லை என்பதும் அறிந்ததே. ஆனால் Special Class Railway Apprentices என்ற ஒரு பயிற்சி குறித்து பரவலாக அறிந்திருக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.
இது பி.யூ.சி/+2 படித்தவர்களுக்கான அனுமதித் தேர்வு. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஜமால்பூரிலுள்ள இந்திய இரயில்வே இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெகானிகல் அண்ட் எலக்ட்ரிகல் எஞ்சினீரிங் எனும் பயிற்சிக் கல்லூரியில் நான்காண்டு கடும் பயிற்சிக்குப் பிறகு Indian Railway Service of Mechanical Engineer பிரிவில் Class I அதிகாரியாக இரயில்வேயில் பணியில் சேரலாம். இந்தப் பயிற்சித் திட்டமானது பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ராஞ்சியின் செமஸ்டர் திட்டப்படி நடக்கும்.
பயிற்சிக்காலத்தில் கிட்டத்தட்ட மாதம் ரூ 12,000க்கும் அதிகமான ஸ்டைபண்ட், மருத்துவ உதவி, பாஸ் மற்றும் பி.டி.ஓ என்ற சலுகையும் பெறலாம். இதற்கான நுழைவுத் தேர்வு குறித்த தகவல் இங்கே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புறாக்கூண்டு போன்ற ஓர் ஒண்டுக் குடித்தனத்திலிருந்து, ஒரு நடுத்தர வர்க்கத்தினருக்கு ரெண்டு பெட்ரூம் அபார்ட்மெண்ட் என்பது கனவுலகம். கடனை உடனை வாங்கி, நகை நட்டை விற்றோ அடமானம் வைத்தோ ஓர் அளவான ஃப்ளாட் வாங்கலாம் என்று போனால், தங்க முலாம் பூசிய குழாய் (வருவது கடலிலிருந்து நேரடியான உப்புத் தண்ணீர்), க்ளோஸ்ட் லாஃப்ட், இன்ன பிற லக்சுரி அயிட்டங்களைச் சேர்த்து சதுர அடி ரூ 3000-4000 என்று ப்ளானில் பெரிய பங்களா மாதிரி தோற்றம் தரும் ஃப்ளாட்டை வாங்கி, குடியேறிய பின், ஒரு பெட்ரூம் ஸ்டோர் ரூம் ஆக மாற, பழையபடி புறாக்கூண்டு போலவே நெருக்கடியாய் அமைந்து விடும்.
சிலவோடு சிலவென்று இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி ஃபர்னிச்சர் என்று போனால், அசல் தேக்கு என்று ஏமாற்றி விற்கும் மரச் சாமான்களும், உரிந்து வரும் சீன ஃபர்னீச்சர்களும் ஏமாற்றக் காத்திருக்கும். இருக்கும் இடத்தை எவ்வளவு அழகாக, நேர்த்தியாக பயன்படுத்தி வித விதமான ஃபர்னிச்சர்களை உருவாக்கியிருக்கிறார்கள். நம்ம ஊரில் மட்டும் ஏன் இப்படி யோசிப்பதில்லை. அவ்வ்வ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம்ம கவுண்டர் காந்தக் கண்ணழகி என்று அலப்பறை செய்யும் காட்சி கவனமிருக்கும்.லண்டனில் ஒரு அம்மணி நிஜமாகவே காந்தசக்தி கொண்ட உடல் வாகாம். சின்ன வயதிலிருந்து கடிகாரம் கூட ஓடாமல் கெட்டுப் போகுமாம். டி.வி., ம்யூசிக் ஸிஸ்டங்கள் கெட்டுப் போவது ஒரு புறம், கடை கண்ணிக்கு போனால், எடை போடும் எந்திரங்கள் ஆகியவை தாறுமாறாக அம்மணிக்கு எத்தனை சங்கடம். 45 நிமிடம் இந்த காந்த சக்தி இருக்குமாம். செம்பு, பித்தளை, இரும்பு எல்லாம் ஒட்டிக் கொள்ளுமாம். ஹூம். நமக்கு இந்த சக்தி இருந்தால் பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சினிமால ஹீரோவா வாரவங்க எல்லாம் நிஜத்தில அப்படி இருக்கணுமா என்ன? நாமளுந்தான் ப்ளாக் வெச்சிருக்கோம். எப்புடியெல்லாமோ பின்னூட்டம் வருது. வடிவேலு மாதிரி வந்தல்ல, அடிச்சியா போய்க்கேயிருன்னு நம்ம வேலைய பார்க்கிறோம்ல. இந்த அமிதாப்பு பதிவுல எவனோ டாஆஆர்ச்சர் பண்றான்னு சின்னப்புள்ளத்தனமா போலீசுக்கு போயிருக்காரு. ஹெ ஹேஹே..என்னதான்னாலும் நம்ம டமில் ப்ளாகர் மாதிரி வருமா..வீஈஈரய்ங்க நாம..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பேச்சே பாட்டுப் போலிருக்கும் மலையாள மொழியில் நான் ரசித்த நாடன் பாடல் எனும் நாட்டுப்புறப் பாடல். உழைத்துப் பிழைக்கும் ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்ய ஒருவன் வருவான் என ஆறுதலாக தோழியர் பாடி, காதில் கழுத்தில் கையில் காலில் நகையில்லாவிடினும், அழகில்லாவிடினும், உன் அழகான மனதை நாடி வருவான் என்று பாட, திருமணம் செய்ய வருபவனுக்கு காசு, பணம்தான் முக்கியம் என அந்தப் பெண் பாட மனதை ஏதோ செய்யும் பாடல். ஆடும் பெண்களின் உற்சாகம், பாடும் குரலின் அழகு..
அறிமுகப்படுத்திய மஹேசுக்கும் பகிர்ந்த ப்ரியாவுக்கும் நன்றி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி..
கடந்த வார நட்சத்திரப் பதிவராக வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவினருக்கும், பாராட்டி ஊக்குவித்த சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
__/\__
