Showing posts with label தங்லீஷ். Show all posts
Showing posts with label தங்லீஷ். Show all posts

Thursday, November 4, 2010

ஆங்கில மோகமும் அரசு ஊழியனும்...

சென்றமாதம் பதிவர் கே.ஆர்.பி.செந்தில் ஆங்கில மோகம் குறித்து ஒரு அருமையான பதிவு எழுதியிருந்தார். சீனாக்காரன் ஆங்கிலத்திலா படிக்கிறான்? என்னல்லாம் கண்டுபிடிக்கிறான் என்ற சிலாகிப்புக்கு இனி வழியில்லை. கண்டிப்பாக பார்க்கவேண்டிய காணொளியைத் தந்திருக்கிறார் திரு செந்தில்.


அதற்குப் பின்னூட்டமிட்ட நண்பர் ராஜ நடராஜன் இவ்வாறு கூறியிருந்தார்.:
//இப்போதைய காலகட்டத்தில் ஆங்கிலம் நமக்கு அவசியம் தேவை.


இந்தியாவில் தமிழனை விட மொழியை நேசிக்கும் இன்னொரு மாநிலக்காரன் இல்லை என்பேன்.


தமிழை தமிழாகவும்,ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவோம்.


ஆனால் நாம் எங்கே கோட்டை விட்டு விடுகிறோமென்றால் தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதில்.சன்,கலைஞர் தொல்லைக்காட்சிகளனைத்தும் சமீபத்து மொழி வில்லன்கள் மட்டுமே.உண்மையான மொழி வில்லன்கள் அரசாங்க அலுவலகம் முழுதும் ஒளிந்து கொண்டிருக்க்றார்கள்.இவர்களிடமிருந்தே இந்த நோய் மொத்த சமூகத்திற்கும் பரவியுள்ளது என்பது எனது கணிப்பு.


மாற்றுக்கருத்தாளர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்ட வேண்டுகிறேன். //


செந்தில் அனுமதித்தால் தனியே இடுகை போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். செந்தில் பெருந்தன்மையாக இதற்கு அனுமதி எதற்கு என்று பின்னூட்டி இருந்ததைத் தாமதமாகத்தான் பார்த்தேன். இதற்கு பதிலளிக்க எனக்கிருக்கும் ஒரே தகுதி அரசாங்க ஊழியன் என்ற ஒரே தகுதி. மற்றபடி மொழி குறித்த சிறப்புத் தகுதி எதுவுமெனக்கில்லை என்பதை உணர்ந்தே இதை எழுதத் துணிகிறேன்.


அட சை! இந்த எளக்கியத் தமிழெல்லாம் நமக்கு சரிப்படாது. நம்ம வழியிலையே போவம். அண்ணோவ்! புடிங்க பாயிண்டு.


இந்தியாவில் தமிழனை விட மொழியை நேசிக்கும் இன்னொரு மாநிலக்காரன் இல்லை என்பேன்.


தப்புண்ணா! இந்த பெங்காலி பெங்காலின்னு இருக்காவளே. அவனுவளவிடவா. பரோடா ரயில்வே காலேஜில் தெரியாம ஹிந்தி தெரியாதுன்னு சொல்லி மாட்டிக்கிட்டேன். கூட ஒரு பெங்காலியும். சிக்கினாண்டா சின்ராசுன்னு ஸ்பெஷல் க்ளாஸ்னுட்டானுவ. நான் தொண்டை கட்டினா மாதிரி க 4, ச 4னு சாவறப்ப, பெங்காலி டவுட் கேக்கறேன்னு அந்தாளுக்கு பெங்காலி சொல்லிக் குடுத்துட்டிருக்கான்.


தமிழை தமிழாகவும்,ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவோம்.


முதல்ல தமிழை எடுத்துக்குவோம். எந்தத் தமிழைப் பேசறது. சென்னை, மதுரை, கொங்கு, தஞ்சைன்னு விதவிதமால்ல இருக்கு. அந்தந்த ஊர்த் தமிழையே சுத்தமா பேசினா அந்தூர்க்காரங்களுக்கே புரியுமான்னு இல்லை சந்தேகம். மதுரைக்காரர் ‘வாரேன்’னா சென்னைக்காரன் என்னத்தை ‘வாரச்சொல்றான்’னு இல்ல நிப்பாரு. ஒரு லிஸ்டே இருக்கே! ஜன்னல்ல இருந்து எதெல்லாம் வேற்று மொழியில இருந்து வந்ததுன்னு. ஜன்னலை ஏத்துக்க முடியுதுன்னா டிக்கட் ஏன் உறுத்தணும்?


ஆங்கிலம் பாடு இன்னும் அதோகதி. ஆந்திரக்காரனுக்கு  ‘அயரன்’, கேரளாக்காரனுக்கு  ‘செண்டிமெண்ட்’,வடக்கூரானுக்கு ‘புய்புல்’, பெங்காலிக்கு ‘பொவர்’, தமிழனுக்கு ‘றுப்பீஸ்’ இப்படி அடிபட்டு மிதிபட்டு குத்துயிரால்ல இருக்கு. ஆக தமிழன்னே இல்லை. இந்திய மொழி எல்லாமும், இந்தியன் எல்லாருட்டயும் ஆங்கிலமும் இப்படி கலந்தாங்கட்டியா அடி வாங்கிட்டுதான் இருக்கு. இந்தச் சுட்டியைப் பாருங்க. எல்லாரும் உலக அளவில் பிரபலமானவங்கதான். இந்த ஆங்கிலத்தில் எத்தனை பேப்பர் விவாதித்திருப்பார்கள்? ஆங்கிலம் பாருங்க எப்படி இருக்குன்னு. ஹி ஹி. நம்ம ப்ரணாப்ஜி அவரோட ஆங்கிலத்தை வச்சிக்கிட்டு வெளியுறவுத்துறை அமைச்சரா வேற இருந்தாரே.


இப்ப வருவோம் அரசு ஊழியர் கதைக்கு
அது முக்கியமா மத்திய அரசு ஊழியர்களைக் குறிக்கிறதுன்னு வைத்துக் கொள்ளலாம். மாநில அரசில் தமிழ் பயன்பாடு அதிகம். மக்களுடனான தொடர்பிலும் தமிழ்தான் ப்ரதானம். இது இன்றைய நிலமைன்னு சொல்லிட முடியாது.75 வருடத்துக்கு முன்னாடி எடுத்துண்டாலும், பத்திரத்தில் எழுதின ‘தாவர ஜங்கம சொத்துதான்’ அர்த்தமே புரியாமல் இன்றும் தொடர்கிறது.


மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்து பேச வேண்டியிருக்கும் அலுவலகத்தில். காரணம் இடமாற்றல் ஷரத்துக் காரணமாக பெரும்பாலான மத்திய அரசு அலுவலகங்களில் மற்ற மாநிலத்தவருடன் பகிர வேண்டியிருப்பது. மத்திய அரசு அலுவலகத்தில் போலீஸ் ஸ்டேஷன் மாதிரியே ரைட்டர் என்று ஒருத்தர் எல்லா செக்‌ஷனிலும் இருந்திருக்கிறார். இன்னமும் சில அலுவலகங்களில் இருக்கிறார். அவருக்குத்தான் ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக எழுத வரும். இதில மத்தவங்கள எங்க போய் கெடுக்கறது?


நம்ம ஊர்ல ’பட்லர் இங்கிலீஷ்’னே சொல்லுவாங்களே. இப்ப சாதாரணமா எல்லாரும் பேசுறதே அப்படி இருக்கிறதால இதை அதிகம் கேக்க முடியறதில்லை. அப்படி வெகுஜனங்களிடையே பரவியிருக்கலாம். பத்திரிகைகளிலும் ஆங்கில வார்த்தைகள், வடமொழி எழுத்துகள் அப்படியேதான் எழுதப்பட்டதில்லையா.


முக்கியமாக இன்னமும் ஆங்கிலோ இந்தியர்கள் நம்மிடையே பரவலாக இருக்கிறார்களே. அவர்களும் ஒரு காரணியாக இருக்கலாம் அல்லவா? ஒரு ஆச்சரியமான விஷயம் இவர்கள் அதிகம் வாழும்/வாழ்ந்த புரசைவாக்கம், பெரம்பூர் பகுதிகளில் இந்தத் தலைமுறை ரிக்‌ஷாக்காரர்கள் கூட 'Doveton','Five' எல்லாம் ‘ட்வ்ஃப்டன்’,  ‘ஃபைவ்ஃப்’ என்று அழகாக உச்சரிப்பதைக் காணலாம்.


ரஜனிமாதிரி ‘ஐ கேன் டாக் இங்க்லீஷ், வாக் இங்க்லீஷ், ஸ்லீப் இங்க்லீஷா’ இருந்தாலுமே கூட இந்தியனின் ஆங்கிலம் வேறு வேறு ரூபத்தில்தான் இருக்கும் இல்லையா? நம்மாளுக்கு ஆங்கிலத்தில் எழுதுறது ரொம்ப சுலபம். ஆங்கிலத்தில் நினைச்சு ஆங்கிலத்தில் எழுதிடுவான். பேசுறப்பதான் மென்னிய பிடிக்கும். காரணம் தமிழில் நினைத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து  அப்புறம் பேசுவது. எங்கே சொன்னது சரியாகப் புரியாமல் போயிருக்குமோ என்று தமிழிலும் சொல்லுவதும் ஒரு மனப்பாங்கு. 

அதையும் விட ‘டமிலனுக்கு’மட்ட்ட்ட்டும் கொஞ்சம் கேப் விட்டுப் பேசறது பெரிய வெட்கப்படக்கூடிய விஷயம். வெள்ளைக்காரனே கொஞ்சம் 'well'..er...i... i..i mean' இப்படியெல்லாம் ஃபில்லர் போட்டு சரளமா பேசினாலும் நம்மாளுவ இப்படி பேச மாட்டாங்க.


முக்கியமான இன்னொரு விஷயம் ஊடகங்கள் வாயிலாக மேநாட்டு கலாச்சார அறிமுகமும், ஆங்கில வழிக் கல்வி வாயிலாக அதன் பயன்பாட்டின் சுலபமும் கூட ஒரு காரணி என நினைக்கிறேன். உதாரணமாக 'I love my brother' இதைத் தமிழில் சொன்னால் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றும். தமிழில் இந்த உணர்வு இல்லாமலா இருந்தது. அதன் வெளிப்பாடு இல்லை. ‘என் அண்ணன்னா எனக்கு உசிரு’ என்பது இந்த நெருக்கம் தருமா? கோபத்தில் உதிர்க்கும் ‘WTF', 'Shit' போன்ற வார்த்தைகளை தமிழில் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இருக்கிறதா? அடிதடியில் அல்லவா முடிகிறது. ஆங்கிலத்தில் கெட்டவார்த்தையாக, வசவாகத் தோன்றாத ஒன்று தமிழில் அப்படி மாறிவிடுவது ஏன்?


இது இப்படியே அறைகுறையாத்தான் இருக்குமான்னா அப்படித்தான் தோன்றுகிறது. காரணம், நாற்பது வருஷத்துக்கு முன்னயும் சரி, இப்பவும் சரி தமிழோ, ஆங்கிலமோ, மற்ற மொழியோ பள்ளியில் துணைப்பாடம்தான். ஹிந்திப் ப்ரசார் சபாவில் தனியா ஹிந்தி படிக்கப் போனாமட்டும் அழகா இலக்கணத்துல ஆரம்பிச்சி சொல்லித்தராங்க. 'Wren and Martin' க்ராம்மருக்கு கீ போடுவாங்க இந்தியர்கள்னு தெரிஞ்சிருந்தா வெள்ளைக்காரன் தூக்கில் இல்லையா போட்டிருப்பான். ஒரிஜினலை விட இந்த கீ இல்லையா அதிகம் விற்றது?


இன்றைக்கு வெகு சரளமாக ஓரளவு ஆங்கிலத்தை ஆங்கிலமாக பேசுபவர் என்று கருதப்படுபவரில் எத்தனை பேருக்கு ‘Sesame and Lillies' புரியும்? புரியுறது அப்புறம் இருக்கட்டும். அந்த அழகு கெடாமல் வாசிக்க முடியும்? எனக்கு இதைப் படிக்கச் சொன்னவர் அந்தக் காலத்தில் சிக்ஸ்த் ஃபார்ம் ட்ராப் அவுட். அலுவலகப் பரிட்சையில் ஜெனரல் இங்கிலீஷ் என்ற ஒரு பேப்பர் உண்டு. அதிலும் ‘Precis Writing' 30 மார்க். 1960லிருந்து அந்தப் பரிட்சையில் ஃபெயிலாகி 1980ல் என்னோடு பாஸ் செய்தார் ஒருவர். ஹி ஹி. அவர் எழுதின லட்சணம் அப்படின்னு இல்லை. திருத்துற ஸ்டேண்டர்ட் குறைஞ்சிட்டுது.


இப்பொழுதெல்லாம் ஸ்டெனோக்ராஃபர்ஸ் ரொம்ப நக்கலா சொல்லிடுறாங்க. நீங்க சொல்லுங்க சார். இங்கையே டைப் பண்ணிடுறேன்னு. ரெண்டு வரி சொல்லிட்டு, எங்க படின்னு கேட்டு, இல்லை வேணாம், அடிச்சிட்டு இது எழுதிக்கோன்னு சொல்ற லட்சணத்துக்கு ஷார்ட் ஹேண்ட் வேற எதுக்கு?


ஆக, நல்ல தமிழோ நல்ல ஆங்கிலமோ (ஓரளவுக்கு) பேச, எழுத கல்வி முறை மாறவேண்டும். தாய் மொழியில் அடிப்படை இலக்கணமே தெரியாத பொழுது ஆங்கில இலக்கணம் எங்கிருந்து படிக்க? வீட்டில் வந்தால் எத்தனைப் பேருக்கு சொல்லித்தரும் அளவுக்கு தெரியும். அல்லது நேரமோ பொறுமையோ இருக்கிறது? பயிற்சி நிலையம், ட்யூஷனென்று போனாலும் தரம் இதேதான் என்னும் போது மாற்றம் சாத்தியமேயில்லை.


Sesame and lillies தரவிறக்க சுட்டி

(அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் !!!)