Saturday, November 7, 2009

பசி!


 யூத்ஃபுல் விகடன் படைப்புகளில் வெளியான என் சிறுகதை.

அலுவலகம் செல்லுவதற்காக பஸ் நிறுத்ததில் நின்றிருந்தான் ராஜா. அலுவலக நேரத்துக்கு வந்தால் பஸ்ஸில் தொங்கக் கூட இடம் கிடைக்காது என்பதால் எட்டு மணிக்கே கிளம்பி வந்திருந்தும் கூட்டம் இருந்தது. பள்ளிக்கூட பஸ் வருவதற்காக சற்று தள்ளி ஒரு சிறுவர் சிறுமியர் கூட்டமும் நின்றிருந்தது. கூச்சலும் கும்மாளமும் கலாய்த்தலுமாய் இருந்த அவர்கள் மேல் ஒரு கண்ணும், பஸ் வருகிறாதா என்பதில் குறியாக ஒரு கண்ணுமாய் காத்திருந்தான்.

திடீரென‌, ப‌க்க‌த்திலிருந்த‌ பெருசு, ஏய்! போடா! இவ‌னுங்க‌ தொல்ல‌ தாங்க‌ முடிய‌ல‌. கொழுப்பெடுத்து பெத்து போட்டு தெருவுல‌ உட்டுடுவாங்க‌ என்று அல‌ற‌வும், திரும்பிப் பார்த்தான் ராஜா. 4 வ‌ய‌திருக்கும். அழுக்காக‌, க‌ளையாக‌ ஒரு சிறுவ‌ன் சினேக‌மாய்ச் சிரித்த‌ப‌டி, கை ஏந்திய‌ப‌டி ராஜாவிட‌ம் வ‌ந்தான். காணாத‌து போல் முக‌த்தைத் திருப்பிக் கொண்டு ப‌ஸ் வ‌ருகிற‌தா என‌ப் பார்த்தான் ராஜா.

அவன், அருகில் வ‌ந்து மெதுவாக‌க் காலைச் சுர‌ண்டிய‌ப‌டி, அண்ணே! ப‌சிக்குத‌ண்ணே என்ற‌து. அந்த‌ப் பெருசு ந‌ல்லா ருசி க‌ண்டுட்டானுங்க‌. கை நீட்டினா காசு வ‌ரும்னு. பேப்ப‌ர் பார்த்திங்க‌ளா சார். ஒரு நாளைக்கு 1000ரூ ச‌ம்பாதிக்கிறாங்க‌ளாம். இதுக்காக‌வே பிள்ளைக‌ளை பெத்த‌வுங்க‌ பிச்சை எடுக்க‌ விடுறாங்க‌ளாம். என்னா அநியாய‌ம் பாருங்க‌ என்ற‌தில், இல்லையென்றும் சொல்லாம‌ல், காசும் த‌ராம‌ல் ச‌ற்று தள்ளி ப‌ள்ளி ப‌ஸ்ஸுக்கு காத்திருந்த‌ பிள்ளைக‌ளின் அருகாமையில் சென்றான்.

அந்த‌ச் சிறுவ‌னும் மெதுவே ந‌க‌ர்ந்து அவ‌னை விட‌ கொஞ்ச‌ம் பெரிய‌ ஒரு சிறுவ‌னைப் பார்த்து சிரித்தபடி கடக்க‌ அந்த‌ச் சிறுவ‌ன் இங்கே வா என்றான். அவ‌னும் அருகில் வ‌ர, ப‌சிக்குதா என்றான். ஆமாண்ணே என்ற‌து அந்த‌ வாண்டு. இங்கே வா என்று ஓர‌மாக‌ கூட்டிக் கொண்டு போய் சாப்பாட்டுப் பையிலிருந்து த‌ண்ணீர் பாட்டிலை எடுத்து , கை க‌ழுவிக்கோ என்று ஊற்றினான்.

மிர‌ண்ட‌ப‌டி, கையைக் க‌ழுவி உத‌றி பார்த்துக் கொண்டிருக்க‌, த‌ன்னுடைய‌ ட‌ப்ப‌வைத் திற‌ந்து, நூடில்ஸ் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அவ‌ன் கையில் வைக்க‌ அடுத்த‌ நொடி காணாம‌ல் போய் கை நீண்ட‌து. சிரித்த‌ப‌டியே அடுத்தடுத்து அவ‌னுக்கு கொடுக்க சில‌ நிமிட‌ங்க‌ளில் ட‌ப்பா காலியான‌து. கை க‌ழுவாம‌ல் அப்ப‌டியே அழுக்குச் ச‌ட்டையில் துடைத்த‌ப‌டி, த‌ண்ணி குடுண்ணே என்று கை குவித்து வாங்கிக் குடித்த‌ சிறுவ‌னின் முக‌ம் அழ‌கா, அவ‌னுக்கு சாப்பிட‌க் கொடுத்த‌ சிறுவ‌னின் முக‌த்தில் இருந்த‌ ச‌ந்தோஷ‌த்தில் இவ‌ன் முக‌ம் அழ‌கா என்று திகைத்தபடி நின்றான் ராஜா.

ஏதும் பேசாம‌ல் பையை எடுத்துக் கொண்டு வ‌ந்த‌ சிறுவ‌னிடம்,  உனக்கு நூடில்ஸ் பிடிக்காதா? உன் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டாயே, ம‌திய‌ம் என்ன‌ செய்வாய்? என‌க் கேட்டான் ராஜா. இல்லண்ணா, ஸ்னாக்ஸ் இருக்கு. அது ல‌ஞ்சுக்கு சாப்பிட்டுக்குவேன். இல்லைன்னாலும் ஃப்ர‌ண்ட்ஸ் ஷேர் ப‌ண்ணுவாங்க‌. அவ‌னுக்கு யாரு த‌ருவா என்ற‌தும் ஒரு ப‌க்க‌ க‌ன்ன‌ம் ஜிவு ஜிவு என்ற‌து.

குற்ற‌ உண‌ர்ச்சி குறு குறுக்க‌, அந்த‌ச் சிறுவ‌னை அழைத்து ஒரு 5ரூ நாண‌ய‌த்தை நீட்ட‌, வேணாண்ணே அந்த‌ண்ண‌ன் சாப்பாடு குடுத்தான். இப்போ ப‌சிக்க‌லைண்ணே என்று சிரித்த‌ப‌டி ந‌க‌ர்ந்தான் அவ‌ன். இன்னொரு க‌ன்ன‌மும் ஜிவு ஜிவு என்ற‌து ராஜாவுக்கு. கூசிக் குறிகிப்போய் ப‌ஸ் வ‌ருகிற‌தா எனப் பார்க்க‌, த‌ன்னைத்தான் பார்க்கிறானோ என்று த‌ரையைப் பார்த்தார் பெரிய‌வ‌ர்.
Post a Comment