Tuesday, September 1, 2009

ஹீரோ டு ஜீரோ

எங்கப்பாரு ஒரு அற்புதமான மனுசனுங்க. ஞாயிறு தவராமல் அவர் இராணுவத்தில் இருந்த பொழுது கிடைத்த ரிப்பன், விக்டோரியா ராணி படம் போட்ட ஒரு வெள்ளி மெடல், நட்சத்திரம் மாதிரி ஒரு வெண்கல மெடல் எல்லாம் பள பளன்னு துடைச்சி வைக்கிறப்ப அப்பாவ யூனிஃபார்ம்ல துப்பாக்கியோட (அந்த வயசில நமக்கு தெரிஞ்ச துப்பாக்கி குறவர் கைல இருக்கிறதுதான்) கற்பனையா பார்க்குறப்ப பயத்த விட சிரிப்புதான் வரும். அப்பிடி ஒரு ஹீரோ இமேஜ டேமேஜ் பண்ணன்னே பொறந்தான் எந்தம்பி.

குரங்கா படைக்கிறதா குழந்தையா படைக்கிறதான்னு கன்ஃப்யூசன்ல டாஸ் போட்டு அது களிமண்ணுல நட்டுகிட்டு நின்னிச்சோ தெரியல. பிரம்மா பாதி பாதியா படைச்சுட்டான். பயபுள்ள பண்ண அட்டகாசத்துக்கு அளவே இல்ல. 11 மாச குரங்கு, சை குழந்தை கால்கிலோ வெண்ணெய நக்குமாங்க. சரி தெரியாம தின்னுட்டான் குழந்தைன்னா, போய் மூலைல சுத்தி வச்ச பாய பிரிச்சி அது பின்னாடி போய் ஒளிஞ்சி மப்படிச்சி மயங்கி கிடந்தா மனுசன் என்னாறது? அந்த கதை ஒரு இடுகைக்காகும். அதனால இப்ப விடுவோம்.

அந்தகாலத்தில மாவு திரிக்க யந்திரக்கல்லுன்னு ஒன்னுண்டு. கீழ வட்டமா ஒரு கல்லு. மேல வட்டமா ஒரு கல்லு. கீழ் கல்லு கொஞ்சம் கனமா உசரமா இருக்கும். நடுவில ஒரு விரக்கடை அளவு குழி. மேல கனம் கம்மியா ஒரு கல்லு. அதுக்கு ரெண்டு காது மாதிரி இருக்கும். ஒன்னில ஒரு குழி. நடுவில ஒரு குழி. கீழ்க் கல்லுக்கு ஒரு கட்டை அடிச்சிருக்கும். அது கல்லு குழிவழியா வர அச்சு. கைப்புடிக்கு ஒரு கட்டை. ரெண்டு தினத்தந்தி பேப்பர பரத்தி அதுமேல இத ஏத்தி வச்சு மேல் கல்லு குழில கைப்பிடி கைப்பிடியா அரிசிய போட்டு அரைக்கிறது. ஒரு கால மடிச்ச வாகில ஒரு கால நீட்டிகிட்டு அம்மா அரைக்கிறப்போ போட்டி போட்டுகிட்டு அரிசிய போடுறது.

வில்லங்கம் அங்கதான் உருவாச்சி. கைப்புடி கட்டை சைசா, வாகா கிடைச்சி போச்சி. நடு முளை மட்டும் எங்கப்பாரு எட்டு குட்டிகரணம் அடிச்சி என்னல்லாமோ பண்ணாலும் அரைக்கிற ஜோர்ல புட்டுக்கும். சுத்திய வெச்சி தட்டி தட்டி அதுந்தலை ஆத்துல ஊரின பனங்கொட்ட மாதிரி ஆகிப்போய் ஒரு கட்டத்துல மேக்கல்லு உள்ள போகமாட்டன்னு அடம் புடிச்சது. அரைக்கமாட்டேன்னு அம்மாவும் அடம் புடிச்சாங்க. அப்பாருக்கு வந்தது ரோசம். இதுக்கு நிரந்தரமா ஒரு தீர்வுன்னு பழைய இரும்புக் கடைல போயி ஒரு கம்பி, ஆக்ஸா ப்ளேடு வாங்கிண்டு வந்து அளவா அறுக்கிறதுக்குள்ள அரை நாளாயிடிச்சி. நமக்கு மண்டைக்குள்ள குடைச்சல். அத்தசோடு குழிக்குள்ள இந்த மெல்லிசு கம்பிய எப்பிடி பொருத்துவாங்கன்னு. இத பார்த்துண்டிருக்கிறதுக்குள்ள ரென்டு வாட்டி கடிச்சி வெச்சிட்டான் என்ன குரங்குப்பய.

அடுத்ததா வீட்டில ரசம் வைக்க இருந்த ஈய சொம்பு. அது ஓட்டையாகி கன காலமாச்சு. அத சுத்திய வெச்சி அடிச்சி துண்டாக்கவும் ஐடியா புடிபட்டு போச்சி. தம்பிப் பய புள்ள எப்போ என்ன பண்ணுவான்னு தெரியாதா. முதல்ல அரைஞாண் கயித்தில தூளிக்கயித்த கட்டி இவன புடிச்சி கதவோட கட்டி போட்டாங்க. கடிச்ச நாய கட்டிப் போட்டாங்கடான்னு சந்தோசம். யந்திரக்கல்ல நகர்த்தி வெச்சி, அம்மாக்கு கம்பிய நான் சொல்றப்ப ஆட்டாம இப்படி பிடிக்கணும்னு காண்பிச்சி, பம்ப் ஸ்டவ்ல தாளிக்கிற கரண்டிய வெச்சி அதில ஈயத்த போட்டு காய்ச்சிட்டிருந்தாங்க. நாமதான் கலாய் பூசுறவன் அப்ரசன்டியாச்சா. கல்லுல ஈயம் ஒட்டாதுப்பான்னு சொன்னா யாரு கேக்குறா? அவரு பாட்டுக்கு உருக்குனாரு. ஊத்தினாரு. கொஞ்ச நேரத்துல அம்மா ஒரு ஆட்டு ஆட்டி பார்க்க லாலிபாப் மாதிரி வந்துடுச்சி. சொன்னேன்லனு கெக்கெக்கேன்னு சிரிக்க, ஆற முன்னாடி ஏன் எடுத்தன்னு அம்மாவை திட்றாங்க. திரும்ப உடைச்சி திரும்ப உருக்கி ஊத்த, ஆறலைன்னு ஏன் திட்டு விழணும்னு அம்மா ஒரு டம்ளர் தண்ணிய ஊத்தினாலும் திரும்ப லாலி பாப்.

சிரிச்ச சிரிப்பில மனுசன் கொலவெறியாய்ட்டாரு. வந்துது வினை எனக்கு. டேய். தெருவில தார்ரோடு போட்டிருக்கான்ல. அதில சின்ன சின்ன கல்லா கொஞ்சம் பொறுக்கியாடான்னாரு. மனுசன் ஈயத்துல காங்கிரீட் போடுறாராமா. ஓடிப்போய் பொறுக்கியாந்து குடுத்தேன். கம்பிய நட்டு, சுத்தியும் பொடி கல்ல போட்டு, அசையாம புடிக்க சொல்லிட்டு ஈயத்த உருக்கி ஊத்துனாரு. டும்முன்னு ஒரு சத்தம். வெளிச்சம் காணோம். யம்மா பப்பரப்பேன்னு விளுந்து கிடக்கு. அப்பாக்கு ஒரு கண்ண காணோம். குண்டு பல்பில பேப்பர் ஒட்டி மறைச்சா மாதிரி இருக்கு. கட்டிவெச்ச நாப்பய வீல்னு அலறி அழுறான். எட்டு வயசுப்பய எதுக்குன்னு தான் சிரிக்கிறது. விஷயம் என்னன்னா முதல்ல ஊத்தின தண்ணி குழிக்குள்ள இருந்திருக்கு. சூடா ஈயம் விழவும் வெடிச்சி அப்பாவோட கண்ணாடி, குண்டுபல்பு எல்லாத்துக்கும் கலாய் பூசிடுச்சி.

பயபுள்ள தெய்ய தெய்யன்னு அலற்றானே கைய கைய பார்த்துன்டுன்னு ஓடிப் போய் பார்த்தா கை, தலையெல்லாம் ஈயம். பக்கத்துல இருந்த எங்களுக்கெல்லம் ஒன்னும் ஆகல. அவன் எங்கயோ இருக்கான். கணிசமா ஈயம் தலைல போய் விழ சூட்டில கைய வெச்சி தொடைச்சிட்டான். நானும் அக்காவுமா தூக்கிட்டு பக்கத்து ஆசுபத்திரிக்கு ஓட டாக்டர் இத கொலகேசா மாத்தப் பாக்குறாரு. ஈயம் எப்படி வந்திச்சி? புல்லட் மாதிரியாச்சே. அவன் தொடைக்கலன்னா மண்டைய பொத்துகிட்டு போயிருக்கும். பெரியவங்க எங்க? போலீசுக்கு சொல்லணும்னு. ஆர்மி ட்ரெஸ்ல பார்த்த அப்பாவ கைதி ட்ரெஸ்ல கற்பனை பண்ணி பார்க்க முடியுமா? பதறி அடிச்சி பாதில வந்தவர மடக்கி டாக்டரு போலிசுக்கு சொல்லணுங்கிறாருன்னு அழ அவரு அப்படியே ஸ்டன்னாயிட்டாரு.

அதுக்குள்ள அம்மா போய், கலாய் பூசுற இடத்தில நிக்கிறப்ப ஆயிடுத்துன்னு கதைவிட்டு, அப்பாரு ஊருக்கு போயிட்டாருன்னு புளுகி, அம்மாவ பார்த்ததில பய புள்ள ஓவரா அலறுனத வலி தாங்கலைன்னு நினைச்சி டாக்டர் வைத்தியம் பார்த்தாங்க. பயலுக்கு 40 வயசு வரைக்கும் அந்த இடம் வட்டமா வழுக்கையாவே நின்னுபோச்சு. அப்புறம் வளந்துச்சான்னு கேக்கிறீங்களா? இல்லைங்க. மொத்தமா வழுக்கையாய்ட்டான்.

13 comments:

ஈரோடு கதிர் said...

அட ராகி கல்லு

//அதுந்தலை ஆத்துல ஊரின பனங்கொட்ட மாதிரி//

இஃகிஃகி

//ரென்டு வாட்டி கடிச்சி வெச்சிட்டான்//

ஹி...ஹி

//கலாய் பூசுறவன் அப்ரசன்டியாச்சா. //

ஆமாமா

//மனுசன் ஈயத்துல காங்கிரீட் போடுறாராமா//

அய்யோ... அய்ய்ய்யோ

//எதுக்குன்னு தான் சிரிக்கிறது.//

இப்போ நான் எதுக்கு சிரிக்கிறது

//வளந்துச்சான்னு கேக்கிறீங்களா? //
ம்ம்ம்ம் எப்படி வளரும்

.....அய்யோ சாமீ... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

சான்சே இல்ல... அருமையான கக்கவைக்கும் சிரிப்பு பதிவு

சூசூசூசூசூசூசூப்பப்ப்ப்ப்ப்பபபபபர்ர்ர்ர்ர்

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/சான்சே இல்ல... அருமையான கக்கவைக்கும் சிரிப்பு பதிவு

சூசூசூசூசூசூசூப்பப்ப்ப்ப்ப்பபபபபர்ர்ர்ர்ர்/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இப்பத்தாங்க சரி நாமளே பின்னூட்டம் போட்டு போராட்டம் நடத்துவம். பழமை, கதிர் எல்லாம் ஒப்பமுக்கு மட்டும் செஞ்சிட்டு ஒன்னுஞ்சொல்லாம போயிட்டாங்களேன்னு. பார்க்க சந்தோசமா இருக்கு.

நன்றிங்க!

க.பாலாசி said...

//அப்புறம் வளந்துச்சான்னு கேக்கிறீங்களா? இல்லைங்க. மொத்தமா வழுக்கையாய்ட்டான்.//

அந்த சின்னப்பையனை போட்டு (இப்ப 40 வயசு) அப்பா, அம்மா, புள்ள, குட்டின்னு என்னா பாடு படுத்தியிருக்கீங்க....

நல்லாருக்கு அன்பரே...உங்களின் நகைச்சுவைக் கலந்த அனுபவப்பதிவு...

பாதி தூரத்துல டமால் வெடிச்சதுன்னுவுடனே எனக்கே கொஞ்சம் பதட்டமாதான் இருந்துது...என்ன ஆச்சோன்னு....ஒன்னும் தெரியாத ஓரமா கட்டிப்போட்டிருந்தவரு மாட்டிக்கிட்டாரு...நீங்கள்லாம் தப்பிச்சிட்டிங்க...

vasu balaji said...

க.பாலாஜி said...
/அந்த சின்னப்பையனை போட்டு (இப்ப 40 வயசு) /

இல்லிங்க. 45.:)))

/என்னா பாடு படுத்தியிருக்கீங்க..../

நாங்களா. அவன் படுத்தின பாடு உங்களுக்கெங்க தெரியும். இப்ப கூட ஏதாவது விசேஷம்னா ரெண்டு பேருமா நின்னா, ஐயரு என்கிட்ட நீ அங்கால பக்கத்துல நில்லு, அண்ணந்தான் பண்ணனும்னு அவன கூப்டுவாங்க. நான் அலறணும், யோவ் நாந்தேன்னு. ஒண்ணுமே பண்ணாம இப்படியெல்லாம் ஆப்பு வைக்க அவனாலதான் முடியும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))))

vasu balaji said...

ஸ்ரீ said...

:-))))))))))))))

வாங்க ஸ்ரீ:)))))

ப்ரியமுடன் வசந்த் said...

//குரங்கா படைக்கிறதா குழந்தையா படைக்கிறதான்னு கன்ஃப்யூசன்ல டாஸ் போட்டு அது களிமண்ணுல நட்டுகிட்டு நின்னிச்சோ தெரியல. பிரம்மா பாதி பாதியா படைச்சுட்டான். //

கலக்கல் காமெடி ரவுசு பண்ணிட்டீங்க சார்........

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/கலக்கல் காமெடி ரவுசு பண்ணிட்டீங்க சார்......../

ஹி ஹி. நன்றிங்க வசந்த்.

vasu balaji said...

இது நம்ம ஆளு said...

:)

:))). வாங்க

ஆரூரன் விசுவநாதன் said...

குரங்கா படைக்கிறதா குழந்தையா படைக்கிறதான்னு கன்ஃப்யூசன்ல டாஸ் போட்டு அது களிமண்ணுல நட்டுகிட்டு நின்னிச்சோ தெரியல.//

எட்டு வயசுப்பய எதுக்குன்னு தான் சிரிக்கிறது//

நாயமான கேள்விதான்.....

அன்புடன்
ஆரூரன்.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்

/நாயமான கேள்விதான்...../

:)). வாங்க ஆரூரன்

Unknown said...

மனசுல இருந்த இருக்கத்தை எல்லாம் கழுவிட்டு வாய் விட்டு சத்தம் போட்டு சிரிக்க வைத்துவிட்டது உங்கள் பதிவு.
நன்றி சிரிக்க வைத்ததற்கு

vasu balaji said...

Siva

/மனசுல இருந்த இருக்கத்தை எல்லாம் கழுவிட்டு வாய் விட்டு சத்தம் போட்டு சிரிக்க வைத்துவிட்டது உங்கள் பதிவு.
நன்றி சிரிக்க வைத்ததற்கு/

நன்றிங்க சிவா. என் எழுத்துக்கான அங்கீகாரம்.