Friday, December 3, 2010

சான்றோனாக்குதல்...

‘எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்’

இது வெறும் சினிமாப் பாட்டு அல்ல. பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பும் இவ்வளவுதான். என்னை விட நல்லாருந்தா நல்லது.( அந்த நல்லாக்கு விளக்கம் தெரியாது). இல்லைன்னா என்ன மாதிரி அமைதியா வாழ்ந்தா போதும். படிப்பு, முடிஞ்சதும் ஒரு வேலை, அப்புறம் நாம பார்த்து வச்சி கலியாணம், அப்புறம் அவன்பாடு.

ஒரு கஷ்டம் தெரியாம வளர்த்தம்பா புள்ளைய. இன்னைக்கு என்ன பார்த்து எனக்கு என்ன செஞ்சிட்டன்னு கேட்டுட்டான்பா என்று வருந்தாத பெற்றோர்கள் மிகக் குறைவு. அவர்களாக விரும்புவது, ஆத்தா அப்பன் விருப்பத்துக்கு என்று சீராட்டி, ஏதானாலும் கேட்கப் பிறந்தவர் நாம். கொடுக்க வேண்டியவர்கள் அவர்கள் என்ற மனப்பாங்குடன் வளர்கிறது பிள்ளைகள்.

ராஜு சைக்கிள் வச்சிருக்கான். எனக்கும் வேண்டுமென்றால் எப்படியோ வாங்கிக் கொடுத்து விடுவோம். கம்ப்யூட்டர் வேண்டுமென்றாலும் அப்படியே. வளர்ந்து பைக் என்றாலும் வாங்கலாம். கார் என்று நின்றால்? முடியாது என்ற நிலை வருமானால்? அங்கே முளைக்கும் மோதல். புறத்தேவைகளை மட்டும் நிறைவேற்றி மனதால் ஒன்றாமல், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் வருகையில் ஒருவருக்கு ஒருவர் எதிரியாகிறார்கள்.

ஒரு குதிரைக் குட்டி வாங்கி, செழுமையாக வளர்த்து, ரேஸில் ஓடவிட்டு, கமான் கமான் என்று கத்திக் கத்தி ஜெயித்தால் பெருமைப்பட்டு, தோற்றால் கடுமையாகி, தடுக்கி விழுந்தால் சுட்டுவிடுவதற்கும், ஒரு எதிர்பார்ப்பில் ஏமாற்றம் வரும்போது கை மீறிய நிலையில் புலம்பி வார்த்தையால் கொல்லுவதற்கும் வேறுபாடு தெரியவில்லை எனக்கு.

செலவுக்குக் கொடுக்கும் காசு செலவு செய்வதற்காக மட்டுமே அல்ல. உன்னிடம் உன் வாழ்க்கைக் கணக்கைச் சரியாய்த் துவக்கத் தரப்படும் வாய்ப்பு என்பதை சொல்லிக் கொடுக்கிறோமா? இன்றைக்கு வீடெல்லாம் சுத்தம் செய்கிறாயா? உனக்கு 20ரூபாய் தருகிறேன். உழைப்புக்கு ஊதியம் கேவலமில்லை என்று சொல்லிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். விடுமுறை நாட்களில் ஏதாவது வேலை பாரேன். ஒரு தொழிலைத் தெரிந்து கொள்ளலாமே. உனக்கு வேண்டியதை அது வேண்டுமா வேண்டாமா என்று நீயே தீர்மானிக்கலாமே. உன்னால் முடியும் எனில் அவசியம் எனில் உன் உழைப்பில் வாங்கியது என்ற உணர்வு அதன் மதிப்பை எவ்வளவு உயர்த்தும் எனச் சொல்லிக் கொடுக்கிறோமா?

இந்த வாரம் 20ரூ பாக்கட் மணி. உன்னிடம் 5ரூதான் இருக்கிறதா? நண்பனின் பிறந்த நாளுக்கு கிஃப்ட் வாங்க வேண்டுமா? சரி இன்னொரு 5ரூ தருகிறேன். அடுத்த வார பாக்கட் மணியில் கழித்துக் கொள்வேன் என்றால் உலகில் எதுவும் இலவசமாய்க் கிடைப்பதில்லை என்ற பாடம் படிப்பிக்கலாம். கல்லூரியில் சேர்ந்ததும் அந்த மூன்று அல்லது நான்கு வருடங்கள் யவ்வனத்தின் கடைவாயில். இது முடித்தபின் மகிழ்ச்சி என்பது இருக்கப் போவதில்லை. பொறுப்பு என்ற சுமை வந்து சேரும் என்பதுதானே இன்றைய இளைஞர்களின் மனோபாவமாக இருக்கிறது? பெற்றோருடன் உரசல் வெடிக்கும் காலமும் இதுதானே?

எத்தனை முன்னோக்கு சிந்தனையுள்ள பெற்றோராயினும், கல்லூரி முடித்தபின் வெளிநாட்டில் படிக்க ஆசையாயிருக்கிறது என்று பிள்ளைகள் சொல்லும்போது பளிச்சென மனதில் தோன்றுவது, கையில் புட்டியும், வெளிநாட்டு பாலியல் சுதந்திரத்தால் கெட்டுப் போய்விடுவார்களோ என்ற பயமும், எல்லாம் விட ஏதோ ஒரு நாட்டுக்காரி மருமகளாகவோ மருமகனாகவோ வரக்கூடும் என்ற திடீர் தேசபக்தியும்தானே.

பட்டப் படிப்பை முடித்து வெளிநாட்டில் மேற்படிப்புக்குச் செல்லும் ஒரு பிள்ளையையும் இங்கே மேல் படிப்பு படிக்கும் ஒரு பிள்ளையையும் ஒப்பு நோக்கினால், எத்தனை வியத்தகு மாற்றம். மனது கொள்ளாச் சந்தோஷத்துடன், கேண்டீனில் வேலை கிடைத்திருக்கிறது. பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறேன். எனக்கு செலவுக்குத் தாராளமாயிருக்கிறது. நானே சமைத்துக் கொள்கிறேன். இரண்டு நாளைக்கு வைத்திருந்து சாப்பிட்டால் செலவு குறைவு. ஸ்காலர்ஷிப் கிடைக்கும். நன்றாக முயற்சி செய்தால் போதும் எனக் கேட்கும் பெற்றோர்கள் மனதில் ஒரு வியப்பு. ஒரு ஆச்சரியம், எல்லாம் தாண்டிய ஒரு பெருமையும், நிம்மதியும் வருகிறதா இல்லையா?

என் மகனா? ரூ 2500க்கு கார்கோ பேண்ட் வாங்கவில்லை எனில் கல்லூரி மாணவன் என்று எப்படிச் சொல்ல என்று சண்டை போட்ட பிள்ளையா இது? பிறந்த நாள் பார்ட்டிக்கு 1000ரூ கேட்டு 2 நாள் சாப்பிடாமல் அழிச்சாட்டியம் செய்ததா இது? தினம் சாம்பாரா என்று பிட்ஸாவுக்கு ஃபோன் செய்த பிள்ளையா இது? பஸ்ஸில் கூட்டம், ட்ரெயினில் போனால் தூரம் என்று ஆட்டோ தேடிய குழந்தையா? எப்படி வந்தது இந்த மாற்றம். தான் சம்பாதிக்கிறோம். நான் யார் தயவிலும் இல்லை என்ற எண்ணம் தந்தது இறுமாப்பா? இல்லையே, முன்னை விட பெற்றோர்களை நட்பாக, மரியாதையுடன் இன்னும் நேசமாகப் பேச முடிகிறதே.

எதையும் நேரிடைப் பேச, தயக்கமின்றி விவாதிக்க, என் கருத்து இது, என் முடிவு இது என்று சொல்லும்போது பெருமையாய்த்தானே இருக்கிறது? அதே நேரம் இங்கே மேல் படிப்பு படிக்கும் பிள்ளைகளில் பெரும்பாலும் இந்த மாற்றங்கள் இல்லையே? அப்படியே ஒன்றிரண்டு பேசிவிட்டாலும், உனக்கென்ன உலகம் தெரியும் என்ற எண்ணத்தோடுதானே இருக்கிறோம்.

ஆக இந்த அடிப்படை மாற்றத்துக்கு காரணம் என்ன? பொறுப்புணர்ந்த சுதந்திரம், சுயத்தை உணரும் வாய்ப்பு, அதை மதிக்கும் ஒரு சமூகம் அது கொடுத்த வாய்ப்பல்லவா? சம்முவம் பையன் அமெரிக்காவில் ப்ளேட் கழுவிப் படிக்கிறான் என்று எள்ளலாய் யாராவது சொல்வார்களா? இதே இங்கே ஒரு பிள்ளை விடுமுறை நாளில் ஒரு ஹோட்டலில் சர்வராய் இருந்தால், என்னப்பா? படிப்பு நிறுத்திட்டியா? அந்த ஓட்டல்ல சர்வரா இருந்தானே உன் பையன் என்று யாரோ ஒருவர் பொரணி பேசும் சமுதாயமும், அதற்குப் படும் அவமானமும் யாருடைய தவறு? அவர் கல்லூரிச் செலவுக்கு அவர் உழைத்துச் சம்பாதிப்பாராம் என்று பெருமையாய்ச் சொல்ல முடிவிதில்லையே? காரணம் யார்? சொசைட்டி? கவுரவம்?

ஆக ஒரு நல்ல பிள்ளை என்பது பெரும்பாலும் பிள்ளைகளால் அமைவதில்லை. நாம் அமைத்துக் கொடுக்கும் வாய்ப்பும், நாமே அமைத்துக் கொண்ட குறிக்கோளும், அதில் தோல்வி எனில் நிராகரிப்பும், வெற்றி பெற்றால் அதற்கான முழுப் பெருமையும் நமக்கே என நினைப்பதுவுமே அல்லவா? சரியாக வழிகாட்ட, சரியான புரிதலை கற்றுக் கொடுக்க, எல்லாவற்றையும் விட சுயமரியாதை என்பது புறப் பூச்சுக்களால் அல்ல, உன்னை நீ மதிப்பது என்பதைக் கற்றுக் கொடுக்காத எந்தப் பெற்றோரும் எவ்வளவு உயர்ந்த கல்லூரிப் படிப்புக்கு வழி செய்தாலும், சுக வாழ்க்கைக்குத் தியாகம் செய்தாலும், அது தன்னுடைய நலம் கருதிய ஒரு முதலீடு என்றே நினைக்கிறேன். அதற்குக் கொடுக்கும் விலை தன் பிள்ளைகளின் சுயமரியாதையை. ஒரு பிள்ளையை அடிமையாக்கும் இழிசெயல்.  


(பொறுப்பி: இது சம்பந்தமான விவாதங்களுக்கும், சில கையேடுகளுக்கும் நன்றி ப்ரியாவுக்கு)
~~~~~~~~

61 comments:

பழமைபேசி said...

முதற் சான்று!

vasu balaji said...

:)

க ரா said...

ஆஹா இன்னிக்கு நாமதான் முதல்ல கமெண்டு போட போறோம்னு நினச்சா எனக்கு முன்னாடி ஆள் வந்தாச்சா :) காத்துகிட்டே இருப்பாங்க போல...சொல்லிருக்கறது அத்தனயும் நிதர்சனம் சார்...

vasu balaji said...

சேதுகாரு!! பனிமீத உன்னாரா? வடை போயிந்தண்டி:))

vasu balaji said...

நன்றிங்க இராமசாமி

பழமைபேசி said...

சேதுகாரு, இண்டிகி வெல்த்துன்னாரு!!!

நசரேயன் said...

ம்ம்ம்

vasu balaji said...

அலானா! ஆயினக்கு பொத்து போயிந்தேமோ. தரவாத சூத்தாம். க்ருதக்ஞதலண்டி பழமைகாரு:)))

vasu balaji said...

தளபதி..அவ்வ்வ். திரும்ப ம்ம்ம் ஆ.

Unknown said...

எப்போதும் முதல்ல வந்து பழமையார வெறுப்பேத்த வேணாம்னு, இண்டிக்கு ஒச்சானு (எங்க ஊரு தெலுங்கு) . நீங்க எல்லோருக்கும் நன்றி சொல்றத படிச்சிட்டுத் தானிருந்தேன். என்ன இருந்தாலும், பழமைக்கு முன்னாடி பெஞ்சில இடம் பிடிக்கிறது சரியில்லைன்னு தோன்றுகிறது.

Unknown said...

'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றாம்கானும் எனும் சொல்'.

பிழை பழைமை திருத்துவார்.
-எனக்கு தகுதியில்லை.

"இந்த வாரம் 20ரூ பாக்கட் மணி. உன்னிடம் 5ரூதான் இருக்கிறதா? நண்பனின் பிறந்த நாளுக்கு கிஃப்ட் வாங்க வேண்டுமா? சரி இன்னொரு 5ரூ தருகிறேன். அடுத்த வார பாக்கட் மணியில் கழித்துக் கொள்வேன் என்றால் உலகில் எதுவும் இலவசமாய்க் கிடைப்பதில்லை என்ற பாடம் படிப்பிக்கலாம். "

சார்! இங்க எல்லோரும் சொல்ற மாதிர்யே சொல்றீங்க. நீங்க ரொம்ப அமெரிக்க புக் படிச்சு இங்க மாதிரியே பசங்கள அங்கு வளர்க்கனும்னு பார்கறீங்க. நடக்கட்டும்.

Unknown said...

சார், இங்க கதையே அப்பிடியே உரிச்சு வைச்சு எழுதுறீங்க. நல்லா இருக்கு சார். நல்ல மனசு உங்களுக்கு.

vasu balaji said...

@Sethu
/நீங்க ரொம்ப அமெரிக்க புக் படிச்சு இங்க மாதிரியே பசங்கள அங்கு வளர்க்கனும்னு பார்கறீங்க. நடக்கட்டும். /

இதெல்லாம் கேடு கெட்ட மேல்நாட்டு நாகரிகம்னு சொல்ல முடியாதில்லையா சேது. இதுதானே தேவை? இது குடுக்காத சமுதாயமோ, மண்ணாங்கட்டியோ எதுக்கு உதவப் போகுது?

vasu balaji said...

இதுக்கு புக்லாம் படிக்கலை. பொறுப்பில இருக்கே. அதோட புரிதல் இது. எனக்கு முக்கியமான சமயத்தில் ரொம்ப ஹெல்ப் பண்ணுச்சு.

Unknown said...

ஒரு ஆந்திரா மில் அதிபரின் மகன், பல கோடி சொத்துக்காரன், எல்லா லேட்டஸ்ட் சாதனங்களும் அங்கேயே கையில், இருந்தும், இங்க வந்து படிக்கும் போது எல்லாம் மாறி, கூட 3 பேரோட சேர்ந்து சாப்பிட்டுக்கிட்டு, pizza supply பண்ணி, இங்கிருக்கிற பணக்கார சித்தப்பா கிட்ட கூட உதவி வழிய வந்து செய்தாலும் கூட வேணாம்னு சொல்லிட்டு மாஸ்டர்ஸ் பண்ணிட்டுப் போன பயனை நேரில் பார்த்த போது பிரமிச்சுப் போயிட்டேன்.

மணிநரேன் said...

சார்..நீங்க சொல்லியிருப்பது எல்லாம் நியாயமாகத்தான் இருக்கு. ஆசையாத்தான் இருக்கு.ஆனால் நம்ம ஊருல இது சாத்தியமாவென்று தெரியவில்லை.
காரணம் நீங்களே சுட்டியுள்ளது போல
"காரணம் யார்? சொசைட்டி? கவுரவம்?". நம்ம ஊருல பலரும் இந்த சொசைட்டிக்கென்று கூறிக்கொண்டே ஒருவித போலித்தனமான வாழ்க்கையைதான் வாழறாங்களோனு தோன்றுகிறது.
நம் ஊரில் என்ன படிப்பதென்பதையே பல நேரம் சுற்றியுள்ளவர்கள் (அதாகப்பட்ட சொசைட்டி) தீர்மானித்து ஒருவனின் தரத்தை முடிவு செய்து கொண்டிருக்கும்போது நீங்கள் கூறும் வேலையெல்லாம் பொதுவான விடயமாக அடுத்த தலைமுறையிலாவது வருமாவென்பது ஒரு கேள்விக்குறியாகத்தான் எனக்கு தோன்றுகிறது.

வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

Unknown said...

'/நீங்க ரொம்ப அமெரிக்க புக் படிச்சு இங்க மாதிரியே பசங்கள அங்கு வளர்க்கனும்னு பார்கறீங்க. நடக்கட்டும். /'.

சார்! இத நான் குதர்க்கமா சொல்லல. தவறா நினைக்காதீங்க.

நீங்க நினைக்கிற மாதிரி நல்லா மாறும் சார். வேறு பட்ட மொழி, சாதி, கலாசாரம், அளவில்லா ஊழல், எல்லாம் இருந்தும் ஒரு ஒன்று பட்ட சமுதாயமா இன்னும் இந்தியா ஓடிக்கிட்டு இருக்கு. நல்ல படியா மாறுவதற்கு உங்க எழுத்தும் ஒரு நல்ல போராட்டம் தான். மாறும் சார்.

பிரபாகர் said...

ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய இடுகை. என்னமாய் எழுதியிருக்கிறீர்கள்? அதற்கு முதலில் என் சல்யூட்!...

//ஒரு குதிரைக் குட்டி வாங்கி, செழுமையாக வளர்த்து, ரேஸில் ஓடவிட்டு, கமான் கமான் என்று கத்திக் கத்தி ஜெயித்தால் பெருமைப்பட்டு, தோற்றால் கடுமையாகி, தடுக்கி விழுந்தால் சுட்டுவிடுவதற்கும், ஒரு எதிர்பார்ப்பில் ஏமாற்றம் வரும்போது கை மீறிய நிலையில் புலம்பி வார்த்தையால் கொல்லுவதற்கும் வேறுபாடு தெரியவில்லை எனக்கு.
//
நன்றாய் உதாரணம் சொல்லியிருக்கிறீர்கள். திறமைகளை வெளிக்கொணற வாய்ப்புக் கொடுக்காமலே அவர்களை தங்களது கவனத்தில் செலுத்துகிறோம் என எண்ணி செக்கு மாடாக்கி, கடைசியில் சண்டி மாடாகவும் மாற்றுகிறார்கள்.

//இன்றைக்கு வீடெல்லாம் சுத்தம் செய்கிறாயா? உனக்கு 20ரூபாய் தருகிறேன். உழைப்புக்கு ஊதியம் கேவலமில்லை என்று சொல்லிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். விடுமுறை நாட்களில் ஏதாவது வேலை பாரேன். ஒரு தொழிலைத் தெரிந்து கொள்ளலாமே//
//
செய்தால் மிக நன்றாக இருக்கும். இவ்வாறு செய்தான் சேமிக்கும் பழக்கமும் தானே வளரும். நீங்கள் சொல்லியது போல் பணத்தின் அருமையும் தெரியும்.

//உன்னை நீ மதிப்பது என்பதைக் கற்றுக் கொடுக்காத எந்தப் பெற்றோரும் எவ்வளவு உயர்ந்த கல்லூரிப் படிப்புக்கு வழி செய்தாலும், சுக வாழ்க்கைக்குத் தியாகம் செய்தாலும், அது தன்னுடைய நலம் கருதிய ஒரு முதலீடு என்றே நினைக்கிறேன். அதற்குக் கொடுக்கும் விலை தன் பிள்ளைகளின் சுயமரியாதையை. ஒரு பிள்ளையை அடிமையாக்கும் இழிசெயல்.
//
மிகச் சரி அய்யா!... கண்டிப்பாய் இந்த இடுகையில் உள்ள கருத்துக்களை கருத்தில் கொள்கிறேன்.

பிரபாகர்...

Thekkikattan|தெகா said...

வரிக்கு வரி வழிமொழிகிறேன்...

//அதற்குப் படும் அவமானமும் யாருடைய தவறு? அவர் கல்லூரிச் செலவுக்கு அவர் உழைத்துச் சம்பாதிப்பாராம் என்று பெருமையாய்ச் சொல்ல முடிவிதில்லையே? காரணம் யார்? சொசைட்டி? கவுரவம்? //

அருமையான கேள்விகள். பதில் கொடுத்துக் கொள்வார்கள் யாரோ? = வறட்டுக் கவுரவம்???

வருண் said...

***முடியாது என்ற நிலை வருமானால்? அங்கே முளைக்கும் மோதல். புறத்தேவைகளை மட்டும் நிறைவேற்றி மனதால் ஒன்றாமல், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் வருகையில் ஒருவருக்கு ஒருவர் எதிரியாகிறார்கள்.***

எதிரியா??

பெற்றோரும் பிள்ளைகளுமா? தன் தாய் தந்தயரின் "affordability" வளர்ந்த பிள்ளைக்குத் தெரியாதா? :(

நான் எல்லாம் "மார்ஸ்"ல்யா பிறந்து வளர்ந்தேன்?!!!

இல்லை நான் மட்டும்தான் இதிலும் விதிவிலக்கா? ஹும்ம்ம்!

Chitra said...

அந்த ஓட்டல்ல சர்வரா இருந்தானே உன் பையன் என்று யாரோ ஒருவர் பொரணி பேசும் சமுதாயமும், அதற்குப் படும் அவமானமும் யாருடைய தவறு? அவர் கல்லூரிச் செலவுக்கு அவர் உழைத்துச் சம்பாதிப்பாராம் என்று பெருமையாய்ச் சொல்ல முடிவிதில்லையே? காரணம் யார்? சொசைட்டி? கவுரவம்?

.......இங்கே மேற்படிப்புக்காக வரும் சிலரை சந்தித்து பேசி இருக்கிறேன். முதலில் அவர்களுக்கு இருக்கும் attitude and perceptions க்கும், ஒரு செமஸ்டர் க்குள் மாறி இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் சமூதாயத்தை குறித்த கவலை மற்றும் தேவை இல்லாத கௌரவம் குறித்து கேள்விகள் எனக்கும் உண்டு. . நன்றாக எழுதி இருக்கீங்க, சார்.

sriram said...

பாலண்ணா,,
அருமை, எல்லா பெற்றோரும் முக்கியமா பசங்களும் படிக்க / தெரிஞ்சிக்க வேண்டியது.

தொடர்ந்து படிக்கறேன் அண்ணா, பல இடுகைகள் படிச்சவுடனே மனசு கனத்துப்போயி பின்னூட்டமிடாமல் போயிடுவேன்.

ஒரிரு நாளில் கூப்படறேன் பாலாண்ணா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பவள சங்கரி said...

அருமை சார்......பெற்றோரும், குழந்தைகளும் படிக்க வேண்டிய இடுகை..........நன்றிங்க.

காமராஜ் said...

எனக்கு, பல புரியாத கேள்விகளுக்கு விடை சொல்லியிருக்கீங்கண்ணா.நன்றி.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு வாழ்க்கைப் பாடம்..
எடுத்துச்சொன்னவிதம் அருமையாகவுள்ளது..

Ravi kumar Karunanithi said...

super and nice topic

கலகலப்ரியா said...

அருமையான கட்டுரை சார்...

ரொம்பப் புரிதலோட எழுதி இருக்கீங்க...

என்னோட பேரப் போட்டு எதுக்கு மக்களைக் கன்ஃப்யூஸ் பண்ணனும்.?..

பதிலா.. ஸ்ரீ பேரு போட்டுச் சொல்லி இருக்கலாம்... :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிறப்பான கட்டுரை பாலாண்ணே.

கட்டுரையில் உள்ள பல விசயங்களை நானும் யோசித்திருக்கிறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே ந்னு சொல்லிபோட்டு போயிட்டரு வள்ளுவரு..நீங்களும் சுளுவாச் சொல்லிபோட்டீங்க ஆசானே.....

ஆனா இங்க முடிய மாட்டீங்குதே.

சரி நமக்குப் பொறந்தது
எப்புடியிருக்கும்...
நம்மளமாதர தானே..

நம்பப்பன் எம்புட்டு தண்ணி குடுச்சிருப்பாரு, நம்ம சான்றோனாக்க...முடிஞ்சிதா?...முடியலைல்ல......பொறவு.....

பழமைபேசி said...

மேலை நாட்டுல எல்லாமே நல்லா இருக்குங்றதும் அவ்வளவு சரியல்ல; பொருளாதாரக் கட்டமைப்பும் கருத்தில் கொள்ள வேண்டும்...

(உ-ம்)

ஊர்ல இருக்குற வரைக்கும் ஒருத்தன் கெட்டவனாவே இருக்கான்... அவனே இங்க வந்தா நல்லவன்...

அதே போல, இங்க இருக்குற வரைக்கும் நல்லவன்... ஊருக்கு போன உடனே அதுல சறுக்கல்.... எல்லாம், பொருளாதாரமும் அதை சம்பாதிக்க முற்படும் போது கையாளப்படுவதில் ஏற்படும் மாற்றமும்தான் காரணம்....

வியாபாரிகளையும் வியாபாரத்தையும் திணித்துவிட்டுச் சூத்திரதாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நாம் வாதாடியே வஞ்சத்தை உணராமல் இருக்கிறோம்....

ஊரும், சமூகமும் எண்ணற்ற குழந்தைகளை கிராமத்தில் இதுகாறும் வளர்த்ததை என்னால் மறக்கவோ மறுக்கவோ முடியலை சாமீ!

காலையில, பெத்துதகளை அப்படி அப்படியே வுட்டுப்போட்டுப் போய்டுவாங்க... எல்லாம் ஊர்க்காரங்க இருக்காங்கன்ற துணிவுதான் காரணம்...

எந்தக் குழந்தைய, எந்தப் பெரியவர் வேணுமானாலும் கண்டிக்கிற மாதிரி இருந்துச்சு...

அப்புறமா, சமூகத்தில் ஊடுருவிய கபடம் கிராமியச் சூழலை செல்லரிக்க விழைந்தது....

21 வயது வரையிலும், என்னைப் பெற்றோருக்கு இணையாக ஊராரும் வளர்த்தார்கள். நான் இன்றைக்கு இதைச் சொல்லவில்லை...

http://maniyinpakkam.blogspot.com/2008/06/blog-post_1863.html

பதிந்த வருடம்: 2008

பழமைபேசி said...

// Sethu said...
ஒரு ஆந்திரா மில் அதிபரின் மகன், பல கோடி சொத்துக்காரன், எல்லா லேட்டஸ்ட் சாதனங்களும் அங்கேயே கையில், இருந்தும், இங்க வந்து படிக்கும் போது எல்லாம் மாறி, கூட 3 பேரோட சேர்ந்து சாப்பிட்டுக்கிட்டு, pizza supply பண்ணி, இங்கிருக்கிற பணக்கார சித்தப்பா கிட்ட கூட உதவி வழிய வந்து செய்தாலும் கூட வேணாம்னு சொல்லிட்டு மாஸ்டர்ஸ் பண்ணிட்டுப் போன பயனை நேரில் பார்த்த போது பிரமிச்சுப் போயிட்டேன்.
//

இதே போலத்தான் ஒரு பணக்கார நாதாரி, ஊர்ல இருக்கானேன்னு பார்க்கப் போக, என்னை வாசல்லயே நிக்க வெச்சி பேசியும் பேசாம அனுப்பி வுட்டுட்டான்.... வாசலுக்கு வர்றதுக்கே கூட அரை மணி நேரம் ஆச்சு....

ஏன்னா, ஊர்ல அவுரு பெரிய்ய்ய்ய ஆளாம்....

க.பாலாசி said...

//ஆக இந்த அடிப்படை மாற்றத்துக்கு காரணம் என்ன? பொறுப்புணர்ந்த சுதந்திரம், சுயத்தை உணரும் வாய்ப்பு, அதை மதிக்கும் ஒரு சமூகம் அது கொடுத்த வாய்ப்பல்லவா?//

ரொம்ப சரியான வார்த்தைங்க.. என் வயசுக்கு விவரம் அறிந்து நான் உணர்ந்தவைகள் இதெல்லாம்.. மிகத்தெளிவான, தெளிவுபடுத்தும் கட்டுரை.

Unknown said...

"இதே போலத்தான் ஒரு பணக்கார நாதாரி, ஊர்ல இருக்கானேன்னு பார்க்கப் போக, என்னை வாசல்லயே நிக்க வெச்சி பேசியும் பேசாம அனுப்பி வுட்டுட்டான்.... வாசலுக்கு வர்றதுக்கே கூட அரை மணி நேரம் ஆச்சு....

ஏன்னா, ஊர்ல அவுரு பெரிய்ய்ய்ய ஆளாம்...."

- எங்கே பழமை இது? உங்க ஊர்லயா? உங்களையேவா?

பழமையாரை மதியாதவருக்கு எனது கண்டனம்.

பழமைபேசி said...

சரி, முத்தாய்ப்பா, அண்ணனோட இடுகைக்கு பெரியதொரு வழிமொழிதலை அர்ப்பணிச்சுட்டு, நேன் பணிகு எல்த்துன்னாரு காரு, சேதுகாரு!!

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல பதிவு. இன்றைய பெற்றோர்களும் நாளைய பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

"ஆக ஒரு நல்ல பிள்ளை என்பது பெரும்பாலும் பிள்ளைகளால் அமைவதில்லை. நாம் அமைத்துக் கொடுக்கும் வாய்ப்பும், நாமே அமைத்துக் கொண்ட குறிக்கோளும், அதில் தோல்வி எனில் நிராகரிப்பும், வெற்றி பெற்றால் அதற்கான முழுப் பெருமையும் நமக்கே என நினைப்பதுவுமே அல்லவா? சரியாக வழிகாட்ட, சரியான புரிதலை கற்றுக் கொடுக்க, எல்லாவற்றையும் விட சுயமரியாதை என்பது புறப் பூச்சுக்களால் அல்ல, உன்னை நீ மதிப்பது என்பதைக் கற்றுக் கொடுக்காத எந்தப் பெற்றோரும் எவ்வளவு உயர்ந்த கல்லூரிப் படிப்புக்கு வழி செய்தாலும், சுக வாழ்க்கைக்குத் தியாகம் செய்தாலும், அது தன்னுடைய நலம் கருதிய ஒரு முதலீடு என்றே நினைக்கிறேன். அதற்குக் கொடுக்கும் விலை தன் பிள்ளைகளின் சுயமரியாதையை. ஒரு பிள்ளையை அடிமையாக்கும் இழிசெயல்."

வைர வரிகள், ஸார்!

Unknown said...

என்னோட பசங்க பண்ற அழும்பு இருக்கே... தாங்கலே...

தாராபுரத்தான் said...

அய்யா..வணக்கம்..தீடிர் தேசபக்தி

ஸ்ரீராம். said...

எந்த வரிகளையும் மறுக்க முடியாது. அருமை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல பகிர்வு.. உழைப்புக்கு ஊதியம்.. சுலபமாக எதுவும் கிடைப்பதில்லை.. இதெல்லாம் சிறு வயிதிலேயே சொல்லி வளர்ப்பது, ரொம்பவும் சரியான... வழி தான்..

நான் எங்க வீட்டில் இரு குழந்தைகளிடமும், அவர்கள் படிப்பு, இதர வேலைகளை ஒழுங்காக செய்தால் ஒரு ஒரு முறையும், ஒரு ஸ்டிக்கர் குடுப்பது வழக்கம்.. அந்த ஸ்டிக்கர்-ஐ ஒரு பேப்பர்-இல் சேர்த்துக் கொண்டே வருவாங்க..

25 ஸ்டிக்கர்ஸ் சேர்ந்ததும்... அவங்களுக்கு ஒரு டாலர் குடுப்பேன்.. அதை அவர்கள் piggy bank -இல் போட்டு வைப்பாங்க..

என் குட்டீஸ், ரீசென்ட்-ஆ அவங்க ஸ்கூல்-ல புக் சேல்ஸ் வந்தபோது, அம்மா என் piggy -ல 10 டாலர் இருக்கு..

எதாச்சும் ஒரு புக் வாங்கி குடுங்கம்மா என்று சொன்னாள்.. எனக்கு ஒரே சந்தோசம்.. :-))

(சாரி.. ரொம்ப பெரிய கமெண்ட் ஆகிருச்சு.... )

T.V.ராதாகிருஷ்ணன் said...

வழிமொழிகிறேன்...

பனித்துளி சங்கர் said...

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய பதிவு , ஒரு குறிப்பிட்ட நிலையில் நின்றுவிடாமல் அனைத்து தரப்பட்ட ( வசிதியின் அடிப்படையில் ) புகுந்து ஒவ்வொரு குழந்தைகளின் எண்ணங்களையும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளையும் மிகவும் தெளிவாக வெளிப்படித்தி இருக்கும் விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது !. பகிர்வுக்கு நன்றி அய்யா !

vasu balaji said...

**நன்றிங்க பழமை
**நன்றி இராமசாமி
**நன்றிங்க மணிநரேன்
**ரொம்ப நன்றி பிரபா

vasu balaji said...

**நன்றி தே.கா.

vasu balaji said...

வருண்

/நான் எல்லாம் "மார்ஸ்"ல்யா பிறந்து வளர்ந்தேன்?!!!

இல்லை நான் மட்டும்தான் இதிலும் விதிவிலக்கா? ஹும்ம்ம்!/

தெரியலையேப்பா..(நாயகன் நாயகன்:)))

vasu balaji said...

**நன்றிங்க சித்ரா
**நன்றி ஸ்ரீராம்
**நன்றிங்க நித்திலம்.

vasu balaji said...

@காமராஜ்

நன்றி காமராஜ்

vasu balaji said...

@முனைவர்.இரா.குணசீலன்

நன்றிங்க குணா

vasu balaji said...

@Ravi kumar Karunanithi

Thank you

vasu balaji said...

@கலகலப்ரியா

ம்ம். நன்றிம்மா. உன் பேரைப் போடாம எப்படி. இப்படியெல்லாம் இருக்குன்னு தெரியவந்ததுக்கு காரணம் நீயில்லையா? அப்புறம் ஸ்ரீக்கும் இன்ஸ்பிரேஷன் நீதானம்மா.

vasu balaji said...

@ச.செந்தில்வேலன் / S.Senthilvelan

நன்றிங்க செந்தில். நீங்கள்ளாம்தான் நடைமுறைப் படுத்தணும்.

vasu balaji said...

@ஆரூரன் விசுவநாதன்

அது அது. அப்ப அதையே புடிச்சிட்டு தொங்காம வேற வழி பார்க்கோணுமா இல்லையா.

vasu balaji said...

@பழமைபேசி

இதுல மேலை நாடு கீழை நாடு வித்தியாசம் எங்க வருதுங்க. இதே மாதிரி நம்ம ஊர்ல ஏன் முடியலை. இன்னும் பார்க்கப் போனா நிறைய விஷயமிருக்குதுங்க பண்ணக் கூடியது. சொன்னாமாதிரி எல்லாம் காசுதேன்.

vasu balaji said...

@க.பாலாசி

நன்றி பாலாசி

vasu balaji said...

@கனாக்காதலன்

நன்றிங்க

vasu balaji said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி

நன்றிங்க ஆர்.ஆர்.

vasu balaji said...

@கே.ஆர்.பி.செந்தில்

நாமதானுங்க சொல்லணும்.

vasu balaji said...

@தாராபுரத்தான்

அண்ணே! உள்குத்தா:))

vasu balaji said...

**நன்றி ஸ்ரீராம்.

vasu balaji said...

@Ananthi

நன்றிங்க ஆனந்தி. பாருங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு. கீப் இட் அப்.

vasu balaji said...

**நன்றி சார்
**நன்றி பனித்துளி.