Thursday, August 12, 2010

ஆறும் ஐந்தும் நானும்!

சென்னை வியாசர்பாடி ஜீவாவிலிருந்து பெரம்பூர் வரை ரயில் பாதையோடு வரும் பெருவீதியது. இரண்டுக்கும் நடுவே அடர்ந்த புதரும், அதனடி நீரும், விஞ்ஞான அதிசயமாக தவளையும் கொசுவும் ஒன்றாய் இனவிருத்தி செய்யும் இடம். அதனை ஒட்டியதோர் அகலமான நடைபாதை. அதன் கீழ் பெருங்கால்வாய். இரவில் திறந்திருக்கும் ஒரு சில மூடிகளைத் தள்ளிக் கடக்கையிலேயே கொதிகலத்தின் சூட்டோடு, நாற்றமும் முகத்திலறையும். 

அந்தப் பாதையின் ஒரு முன்னூறு மீட்டர் தூரத்தில் ஓர் உலகம். தினமும் மாலை ஏழிலிருந்து எட்டேகால் வரை நான் அலுவலகத்திலிருந்து திரும்பும் பல சமயங்களில் என் மனதில் பெரும் தாக்கத்தையும், பல கேள்விகளையும் எழுப்பும் ஓர் உலகம். அதிலும் புதன் கிழமை எனக்கு பெரும் நரகம் அக்காட்சிகள். 

ஆம்! தெலுங்கு பேசும் குறவர்கள் என நினைக்கிறேன். என்ன வேலை செய்கிறார்கள். என்ன பிழைப்பு. எதுவும் தெரியாது. சில நாட்கள் கட்டு கட்டாய் புற்கள் இருக்க துடைப்பம் செய்வார்கள். சில நாட்களில் ஒட்டடைக்குச்சிகள் கட்டுவார்கள். பெரும்பாலும் நான் காண்கையில் ஒரு சின்ன குண்டானில் இரண்டு அரைச்செங்கல் அடுப்பில் சமையல். காகிதம் மடித்து கல்லால் தட்டி மசாலா பொடிப்பார்கள். எப்போதாவது பிடிபட்ட பூனையோ, கால்வாய்களில் கிடைக்கும் கருத்த மீனோ ஒரு சில குடும்பங்கள் கூடி நறுக்கிக் கொண்டிருக்கும். ஒரே ஒரு நசுங்கிய அலுமினயத் தட்டில்தான் அனைவருக்கும் சாப்பாடு. 

முப்பது குடும்பங்கள் இருக்கலாம். ஒரு பார்வையற்ற மூதாட்டி குத்துக்காலிட்டு, பழைய புல்புல்தாராவில் இசைக்கும் ‘ப்யார் க்யாதோ டர்னா க்யா’வும், ஒன்பது அல்லது பத்து வயதான சிறுமி உச்சக் குரலில் சுருதி தப்பி தன் தம்பி தங்கைகளுக்கு ஒரு இத்துப்பொன ஆர்மோனியத்துடன் சொல்லிக் கொடுக்கும் ‘ஏடு கொண்டல சாமி எக்கடுன்னாவையாவும்’ தாண்டிவருவதென்பது பெரும் ப்ரயத்தனம். பசிக்கு அழும் ஒரு வயதுக் குழந்தையை ‘ஸம்பேஸ்தா’ என்று பளிச்சென அறையும் அக்குழந்தையின் தாய்க்கு வயது 15 இருந்தால் அதிகம். ஒன்றல்ல இரண்டல்ல அத்தனைக் குடும்பத்திலும் இத்தகைய குழந்தைத் தாய்கள் குழந்தைகளுடன். 

அழுக்கு லுங்கியும் அதைவிட அழுக்கான சட்டையும் தாடியும் தலைமுடியும் கொண்ட கணவன்மார். தவறாமல் ஒரு செல்ஃபோன். எப்படி சிம்கார்ட் கிடைக்கும்? எந்த முகவரி அத்தாட்சி கொடுத்திருப்பார்கள்? எங்கே சார்ஜ் செய்வார்கள் என்ற குறுக்குக் கேள்வி குடைந்தாலும், சில நாய்கள் குடித்துவிட்டு தட்டில் அன்னமிட்டு, குழம்பு ஊற்றி நீட்டும் மனைவியை ஒரு கையில் தட்டை வாங்கியபடி மறுகையால் ‘முக்கலெக்கடவே லஞ்சா!’ என அறைகையில் எட்டி மிதிக்கத் தோன்றும். 

இவையொன்றும் அறியாமல் அசந்து தூங்கும் பெருசுகள். கொஞ்சம் வசதியுள்ளவர்கள் எப்படியோ நான்கு கம்பி நடுவில் நட்டு கட்டி வைக்கும் கொசுவலைகள் அல்லது சீலைத் தடுப்புகள். கும்பலாய் அழுக்காய் விளையாடும் குழந்தைகள். வெள்ளிக் கிழமைகளில் இரந்து கொண்டுவந்த நீரில் குளியல். எதிர்ப்புறமிருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தடியில் படுக்கக்கூடாது என்ற விஞ்ஞானம் மறைந்த ‘முசலோள்ளு மாட்ட’(மூத்தோர் சொல்) அறிந்தவர்களுக்கு கால்வாய் மூடியருகில் உறங்கக் கூடாது என்ற மெய்ஞ்ஞானம் சொல்வது யார்?

குல்ஃபி ஐஸ் விற்பவன் தவலையை உலுக்கி, கரைந்த ஐஸ் நீரை கீழே ஊற்ற விடாமல் உப்பு கலந்திருந்தாலும் ‘அன்னையா! தீண்ட்லோ பொய்’ (அண்ணா! இதிலே ஊற்றுங்கள்) என்று குழம்பு வைத்த சட்டியை தூக்கிக் கொண்டு வந்து கெஞ்சும் குழந்தைகள். சில நேரம் இரக்கமற்ற இயற்கை இவர்கள் சமைக்கும் நேரம் மழையாய் வருகையில் உழைத்த காசுக்கு வாங்கிய அரிசி நனையாமல் சுற்றியெடுத்து, ஜீவா இரயில் நிலைய நடைமேடையில் அழும் குழந்தைகளோடு அடைக்கலம் புகும் இந்தக் குடும்பங்கள். 

இரக்கம் இத்துப் போன இப்பூமியிலும் ஒரு சில நல்ல உள்ளங்கள் இவர்களுக்காய், இச்சமயங்களில் இட்டிலி பொட்டலம் கொண்டுவருமென்ற நம்பிக்கையில் காத்திருக்கும். ஒரு குடும்பத்தின் மொத்த உடமைகளையும் ஓரிரு சிமெண்ட் பைக்குள் அடக்கி விடுவார்கள். காலையில் விடிவதற்குள் இடம் சுத்தமாகிவிடும். ஆம்! படு சுத்தமாகிவிடும். சமைத்ததோ, உறங்கியதோ, குடித்துவிட்டு கக்கியதோ ஒரு அடையாளமும் இருக்காது. எதிர்ப்புறம் கைக்குழந்தைக்காரக் குழந்தைகள் ஒரு சிலர் மட்டும் சோள ரொட்டி சுட்டு அடுக்கிக் கொண்டிருப்பார்கள் ஒரு அழுக்குத் துணியில். பதினாறாய் மடித்து மெத்தென ஒரு மார்க்கமாய்க் கட்டிய தூளியில் கருவிலிருப்பதாய் முடங்கி உறங்கும் பிஞ்சு.

சனி ஞாயிறுகளில் கள்ள இரயிலோ, நல்ல இரயிலோ ஏறி ஊருக்குச் சென்றுவிடுவார்கள் போலும். அந்த நேரம், அதிலும் ஞாயிறுகளின் மாலைகளில், உண்டோ இல்லையோ அது ஒரு புறமிருந்தாலும் இருக்கிறதென நம்பி குழந்தைகளுடன் இவர்கள் வசிக்கும் இடத்தில், சூனியம் வைப்பவர்கள், கழிப்பு எடுப்பவர்கள், நகையும் நட்டுமாய் வந்திருந்து இந்த எழவெடுத்து படையலுக்கு வைத்த பிரியாணியும், கறிக்குழம்பும் அதே இடத்தில் தின்று கழித்து, குடித்து, குட்டிச்சாத்தான் பொம்மை, மயிர்க்குப்பை, கோழிரத்தம், இத்தியாதி கழிசடைகளை விட்டுப் போகும். இந்த வீடுள்ள நாய்களுக்குத் தெரியுமா? இந்தக் கழிசடைகளை சுத்தம் செய்து இங்கே உண்டு உறங்க வானம்பார்த்த குடிகள் வருமென்று?

பிறந்த ஊரில் (அப்படி ஒன்று இல்லாமலா போய்விடும்?) பிழைக்க வழியின்றி எந்த நம்பிக்கை இவர்களுக்கு வாழ வழி சொல்கிறது? எப்படிப் பார்த்தாலும் ஒப்பீட்டுக்கு வழியேயின்றி உறங்க ஓர் கூரையும், உண்ண ஓர் இடமும், ஒதுங்க மறைவும் இருந்தும் அமைதி தொலைத்த வாழ்வும், ரோகமும் எப்படி நமக்குப் பெரிதாய்த் தோன்றுகிறது. இவர்கள் ஏழைகளா? பெருந்தனக்காரர்களா?

நிற்க! புதன் கிழமை நரகம் எனக்கு எனக் குறிப்பிட்டது இவர்களைத் தாண்டி ஒரு ஒரு ஐம்பது சதுரடிக்குள் தவறாமல் கட்டப் பட்டிருக்கும் எருதுகள். ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு குடும்பத்துக்கு உழைத்து ஓடாய்த் தேய்ந்து, கடனுக்கோ, கலியாணத்துக்கோ காசாகி, தரகனிடம் கைமாறி, மைல் கணக்கில் நடந்து வந்து அடுத்த நாள் வெட்டுப்பட காத்திருக்கும் ஜீவன்கள்.  

பிரித்துப் போட்ட புற்களை மேய்ந்தபடி நிற்கும் இவைகளின் கண்ணில் தெரியும் சோகம் என் கற்பனையா? மிருகங்களுக்கு உள்ளுணர்வு அதிகமாமே? இல்லாவிடினும் தன் வாழ்வின் கடைசி நாள் என்ற உணர்வு தோன்றாமலா போய்விடும்? இதோ இவகைகளை வாரா வாரம் வாங்கி வந்து அடிக்குக் கொடுத்து, குடித்து உருள்கிறார்களே நான்கைந்து பேர். 

சக்கியடிப்பவனுக்கான சாப விமோசனம் இவர்களுக்கு உண்டா? இதோ இப்போது தூங்கிவிடுவார்கள் அல்லது மயங்கிவிடுவார்கள். புல்தின்ற இவைகளுக்கு இந்த வெக்கையில் தாகமெடுக்காதா? காலையில் விடியுமுன் காசு பார்க்கும் அவசரத்தில் ஓட்டிச் செல்வார்களே. அப்போது ஏதும் கொடுப்பார்களா இவைகளுக்கு? ஒரு நாளும் அம்மா என்ற குரல் இவைகளிடம் கேட்டதில்லை. ஒரு பெருஞ்சோகம் சூழ்ந்திருப்பதாய்த் தோன்றும். 

இன்று ஒரு கூழைக் காளை பார்வையில் கொன்றது என்னை! வெள்ளைக் காளை. துளி அழுக்கில்லை. கண்ணைச் சுற்றி மட்டும் மையெழுதினாற்போல் ஒரு கருப்பு. பசுவின் சாயலில் அழகானதோர் முகம். கடந்து வருகையில் ஓரிரு நிமிடம் நான் நிற்க, அது புல்லுண்பதையும் நிறுத்திப் பார்த்த பார்வை இதயத்தின் உள்வரை ஊடுருவி வலித்தது. நாளை காலை அலுவலகம் செல்கையில் ஏதோ ஒரு மூன்று சக்கர வண்டியில் தோலிழந்து போகும் இதைக் கடக்கலாம். இன்னோர் வண்டியில் போகும் தோலில் ஒன்று இதனோடதாயிருக்கலாம். ஆட்டுத் தொட்டி தொடங்கி படாளம் வீதிகளில் அடிக்கொரு கடைவாசலில் ‘சுவையான சூடான பீஃப் பிரியாணியில்’ துண்டாயிருக்கலாம். 

வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா? இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா? அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா? எது?

(சக்கியடிப்பவன்=சிறைச்சாலையில் தூக்குத் தண்டனைக் கைதி நிற்கும் பலகையை இழுப்பவன். )

Tuesday, August 10, 2010

ப்ளடி ப்ளாகர்!...



குப்பு: இந்த ராமசாமி ப்ளாக் எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சான். பெரிய ரோதனையாப் போச்சுடா குப்பு!

சுப்பு:  என்ன செஞ்சான்?

குப்பு: நேத்து ஒரு கலியாணத்துல அவன் ஃபேமலியோட வந்து, இவதான் என் ப்ளாக், இதுங்க ரெண்டும் என் பின்னூட்டங்கள்னு அறிமுகம் பண்றான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ஏன்யா குப்பு, சாதாரண மனுசனுக்கும் ப்ளாக்கருக்கும் என்ன வித்தியாசம்?

குப்பு: மத்தவனுக்கு வாழ்க்கைல நடக்கறதெல்லாம் அனுபவம். ப்ளாக்கருக்கு அது எல்லாம் ஒரு இடுகைக்கு மேட்டரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: என்னடா குப்பு தலைல கை வச்சிட்டு உக்காந்திருக்க?

குப்பு: சென்னை மாநகர் நடுவில், இயற்கைச் சூழலில், புகழ் பெற்ற கல்லூரி அருகாமையில் மனை ஒரு கிரவுண்டு 25லட்சம்னு ராமசாமி சொன்னானேன்னு அட்வான்ஸ் பணத்தைக் கட்டிட்டேன். இடத்தைக் கூட பார்க்கலை. அது எங்கயோ திண்டிவனம் கிட்ட இருக்கு. ராமசாமியை ஏண்டா புளுகினன்னு கேட்டா, அத புளுகுன்னு சொல்லாத, அது சொற்சித்திரம்னு சொல்றான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ஏண்டா ராமசாமி பத்திரிகைல வேலை கிடைச்சதுன்னு போனானே. இப்போ வேலைய விட்டு தூக்கிடாங்கன்னு கேள்விப்பட்டேன் என்னாச்சு?

குப்பு: பின்ன? முதலமைச்சர பேட்டி எடுத்து பத்திரிகைல போட்டு புனைவுன்னு போட்டுட்டான் பழக்க தோஷத்துல. தூக்கிட்டாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குப்பு: இந்த ராமசாமி தொல்லை தாங்கலைடா சுப்பு.

சுப்பு: என்னாச்சு?

குப்பு: எலக்‌ஷன் கமிஷனருக்கு லெட்டர் போட்டு, நீங்க நிறுத்தற வேட்பாளர் யாரும் எனக்கு ஓட்டு போடுறதில்லை. அதனால நானும் போடமாட்டேன்னு சொல்லிட்டானாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ராமசாமி குழந்தைக்கு பேரு மாத்தப் போறேன்னானே! நியூமராலஜியா?

குப்பு: அதெல்லாமில்லை. ஒரு பொண்ணுக்கு தமிழிஷ்னு பேரு வச்சிருந்தானாம். அது இப்போ இல்லைன்னு இண்ட்லின்னு மாத்தணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுப்பு: இராமசாமி ரூமை எல்லாரும் கேரோ பண்ணிட்டிருக்காங்களே! என்னாச்சு?

குப்பு: நெகடிவ் வோட் போட்டான்னு அவன் ஸ்டெனோவ ஸஸ்பெண்ட் பண்ணிட்டானாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: யோவ் குப்பு! வர வர ராமசாமி அட்டகாசம் தாங்க முடியலைய்யா.

குப்பு: இன்னைக்கென்ன கூத்தடிச்சான்?

சுப்பு: ஆஃபீஸ் கரஸ்பாண்டன்ஸ்ல ரிமார்க்ஸ் ப்ளீஸ்னு போடுறதுக்கு, பின்னூட்டம் பெறன்னு போட்டு அனுப்பறான்யா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குப்பு: ராமசாமி! நீங்க பண்றது கொஞ்சமும் சரியில்லை.

ராமசாமி: என்னாச்சுய்யா?

குப்பு: ஒரு நோட் எழுதி ஆர்டர் கேட்டா அக்ரீட்னோ நாட் அக்ரீட்னோ போடணும். என் நோட்ல இருந்து அங்கங்க நான் எழுதினத மார்க் பண்ணி கீழ எழுதி,  “கலக்கிட்ட”,  “சான்சே இல்லை”, “எப்பூடி இப்படியெல்லாம்”ன்னு எல்லாம் போட்டா நல்லாவா இருக்கு? 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: ராமசாமிக்கு செம டோஸாமே காலைல. என்னாச்சு?

குப்பு: நம்ம கம்பெனி டெண்டர் ரிஜக்ட் ஆன லெட்டரைக் கொண்டு போய் முதலாளிகிட்ட “வடை போச்சே”ன்னு சொல்லி நீட்டினானாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: யோவ் குப்பு. என்னய்யா ராமசாமிக்கு ஆக்ஸிடண்டா? எங்க பார்த்தாலும் கட்டு?

குப்பு: இல்லைய்யா! கிருஷ்ணனோட ரெண்டாவது குழந்தைக்கு பெயர் சூட்டு விழாக்கு போனப்ப, பெரிய மனுஷனாச்சேன்னு பேரு வைக்கச் சொன்னா ‘மீள் பதிவு’ன்னு வெச்சானாம். டின்னு கட்டிட்டாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குப்பு: சார்! இந்த ராமசாமிய கொஞ்சம் வார்ன் பண்ணுங்க சார்.

அதிகாரி: என்னய்யா பண்ணான்?

குப்பு: அவன் வேலையை அறைகுறையா பண்ணிட்டு, இதைத் தொடர குப்புவை அழைக்கிறேன்னு ஸ்லிப் எழுதி என் டேபிள்ள போட்டுட்டு போறான் சார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுப்பு: குப்பு! நேத்து சென்ஸஸ் எடுக்க வந்தவங்கள டரியலாக்கிட்டான்யா ராமசாமி!

குப்பு: என்ன தகராறு அவங்க கூட.

சுப்பு: குடும்ப உறுப்பினர் பெயர் சொல்லுன்னா, தன்னோட எண்பத்து மூணு ஃபாலோயர் பேரையும் சேர்த்தாவணும்னு சண்டை போடுறான்யா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிஸஸ் ராமசாமி: இங்க பாருங்க. நீங்களும் உங்க ப்ளாகும் பாழாப்போங்க. அதுக்காக கவிதாங்கற என் பேரை கவுஜா கவுஜான்னு கூப்பிட்டா நடக்கறது வேற.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பு: யோவ் சுப்பு. ராமசாமி கிரகப்பரவேச பத்திரிகை பார்த்தியா?

குப்பு: பார்த்தேன்! படுபாவி, புது வீட்டுக்கு ‘திரட்டி’ன்னு பேரு வச்சிருக்கானேய்யா, லூசு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மன நல மருத்துவர்: ஸோ மிஸ்டர் ராமசாமி! ப்ளாக் ஒரு ஹாபின்னு புரிஞ்சிண்டீங்கன்னா ஒரு பிரச்சனையும் வராது. வேற ஏதாவது உங்களுக்கு கேக்கணுமா?

ராமசாமி: டாக்டர்! இன்னைக்கு இடுகைக்கு சரக்கே இல்லை டாக்டர்.  “மருத்துவ உலகில் நான் எப்படிப்பட்டவன்”னு ஒரு பத்து கேள்வி தரேன். பதில் சொன்னா இடுகை தேத்திடுவேன், ப்ளீஸ்.

மன நல மருத்துவர்: அய்யய்ய்யோ! டொய்ங்....
*********************************************

Monday, August 9, 2010

நிழலின் ஒளி

கடந்த ஆறு நாட்களாக வெளிவந்த இரண்டாம் நிழல் நெடுங்கதை நேற்றுடன் முடிவுற்றது. தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. 

முதலில் இந்தக் கதையை எழுதியவர் யார் என்பதில் ஒரு ஆர்வத்துக்காக திரு கதிர், திரு பிரபாகர், திரு பலாபட்டரை ஷங்கர், திரு நசரேயன் ஆகியோரின் அனுமதியின்றியே அவர்கள் பெயரைச் சேர்த்ததற்கு கோபப்படாமல் இருந்தமைக்கு நன்றி. 

இது வரை யாரும் முழுதாக கண்டுபிடிக்கவில்லை. அதனால் பரிசு (அப்புடி ஒன்னு இருந்துச்சான்னு அடிக்க வராதீங்க! ஹி ஹி) கம்பெனிக்கே. 

அது சரி மற்றும் கலகலப்ரியாவின் முயற்சியில் உருவான முயற்சி இது. இனி எழுதியவர்கள்:

முகிலன், அது சரி -----------------------------முன்னுரை


வானம்பாடிகள்---------------------முதல் பாகம்

முகிலன்------------------------------இரண்டாம் பாகம்

அது சரி--------------------------------மூன்று, ஐந்து மற்றும் ஆறு

கலகலப்ரியா, அது சரி-----------நான்கு 

முதல் பாகம் என்பதால் எனக்கு எந்த அழுத்தமும் இன்றி என்னால் எழுத முடிந்தது. திரு முகிலன் அவர்கள் கொண்டு வந்த ஒரு திருப்பத்தைக் கதைக் கருவாக்கி பரபரப்பாக கொண்டு சென்றதில் அது சரியின் பங்களிப்பும், கலகலப்ரியாவின் பங்களிப்பும் மிகச் சிறப்பானது என்பதில் ஐயமில்லை. இதில் எனக்கும் ஒரு பங்களித்தமைக்கு நன்றி.

பின்னூட்டத்தில் ஆர்வமாக பங்கேற்ற எல்போர்ட், மற்றும் பிரபா பதிவர்களுக்கு ஒரு பாடம் சொல்லியிருக்கிறார்கள்.

முகிலன்: ஸ்ரீதரனின் டேபிளை கிரிக்கட் மைதானம் என வர்ணித்ததை வைத்து பிரபா இரண்டாம் பாகம் உங்களுடையது எனக் கண்டு பிடித்து விட்டார்.    

அது சரி: வார்த்தைகளுக்கு நடுவே புள்ளிகளை கணக்கு வைத்து சரியாகக் கண்டு பிடித்து விட்டார் எல்போர்ட்.

கலகலப்ரியா: புள்ளிகளையும் தமிழையும் சொன்னாலும் ப்ரியா எந்தத் தமிழும் எழுதுவார் என்பதால் புள்ளிகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். 

க்ளூவை எல்போர்ட் சொல்லிவிட்டதால், புள்ளிகளை நீக்கியபின் 5,6 பாகங்களை எழுதியவர் யார் என அவரால் சரியாக ஊகிக்க முடியவில்லை. 

இதுவரை படிக்காதவர்கள், ஒரே கோப்பாக பெற இங்கே சுட்டவும்.

ஊக்குவித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி.
~~~~~~~~~