பகவத் கீதை
அத்தியாயம் 19
ஜங்க் மெயில் யோகா.
அத்தியாயம் 19
ஜங்க் மெயில் யோகா.
அர்ச்சுனன்: ஹே வாசுதேவா! மிகக் கேவலமானதும் மன்னிக்க முடியாததுமான ஜங்க் மெயில்களை என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் அனுப்பி வைக்கும் ஈனச் செயலை நான் எப்படிச் செய்வேன்?
க்ருஷ்ணன்: ஹே பார்த்தா! இந்த நொடி யாரும் உன் நண்பனோ எதிரியோ, உறவோ பகையோ, இளையோரோ முதியோரோ, நல்லதோ கெட்டதோ எதுவுமில்லை. உன்னுடைய வலை தர்மத்திலிருந்து நீ தப்பிக்க முடியாது. உடனடியாக வலைமனை புகுந்து ஜங்க் மெயிலை அனைவருக்கும் அனுப்பு. அதுவே உன் கடமையும் நீ கடைப் பிடிக்க வேண்டிய தருமமும் ஆகும்.
அர்ச்சுனன்: ஹே முராரி! என் மனசாட்சியை உறுத்தும், என் ஆன்மாவை வதைக்கும் எச்செயலையும் என்னைச் செய்யத் தூண்டாதே!
க்ருஷ்ணன்: ஹே குந்தியின் மைந்தனே! மாயையின் கொடுமையான பிடியில் சிக்கித் தவிக்கிறாய் நீ. இந்த மெய்நிகர் உலகில் உனக்கும், உன் தர்மத்துக்கும், உன் மௌசுக்கும் தவிர நீ யாருக்கும் கடமைப்பட்டவனல்ல. ஜங்க் மெயில்கள் கடந்த 25 வருடங்களாக இருக்கின்றன. உனக்குப் பிறகும் கல்ப கோடி காலம் இருக்கும். மாயையிலிருந்து எழுந்து வா! உன் கடமையைச் செய்.
அர்ச்சுனன்: க்ருஷ்ணபகவானே! ஜங்க் மெயில் எப்படி மாயையாகும் எனத் தெளிவு படுத்தும்படி ப்ரார்த்திக்கிறேன்.
க்ருஷ்ணன்: வத்ஸ! ஜங்க் மெயில் என்பது ஆறாவது பூதமாகும். நிலம், நீர், வாயு, நெருப்பு, ஆகாசம், ஜங்க் மெயில் என்பவை அவை. அசைவோடும் அசைவின்றியும், உயிரோடும் உயிரின்றியும் இருப்பவை அவை. உன் சிஸ்டத்தையும் ஹார்ட் டிஸ்கையும் அளவுக்கதிகமாக நிரப்பும். ஆனால் அது ஒரு சிறந்த பலனைத் தருவதாகும். அது மக்களை அவர்களின் நேரத்தை இத்தகைய ஜங்க் மெயில்களைப் படிப்பதிலும், முன்னனுப்புவதிலும் அறிவைத் தேடும் செயலாக நம்ப வைக்கிறது. அது அவர்களின் அறிவையோ முயற்சியையோ பயன்படுத்தாமல் ஒரு சாதனையைப் படைத்ததான நிறைவைத் தருகிறது. எப்படி ஆன்மா ஒரு ஸ்தூல சரீரத்தை விட்டு மற்றொன்றுக்குத் தாவுகிறதோ அதுபோல் ஜங்க் மெயிலும் ஒரு சிஸ்டத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்லுமே தவிர அதற்கு அழிவோ சாவோ இல்லை.
அர்ச்சுனன்: அருமை கிரிதாரி! ஜங்க் மெயிலின் லட்சணங்களைக் கூறுவாயாக
க்ருஷ்ணன்: அதை நெருப்பு அழிக்க முடியாது. காற்றில் கரைந்து போகாது. அதை வெல்லவோ அடிமைப்படுத்தவோ இயலாது. அது உன் ஆன்மாவைப் போல் எங்கும் நிறைந்திருப்பது. அழிவற்றது. உன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பல நேரங்களில் நீ அனுப்பிய ஜங்க் மெயில் உன்னிடமே சில மாதங்களுக்கு , ஏன் சில வருடங்களுக்குப் பிறகு கூட வந்து சேர்ந்து நீ மீண்டும் அவர்களுக்கே அனுப்ப வகை செய்யும்.
அர்ச்சுனன்: அருமை அருமை சாரதி! என் வணக்கங்கள். ஜங்க் மெயில் கலாச்சாரத்தை எனக்குக் காட்டினாய். நான் இந்த மாயையில் சிக்கி என் இதர கடமைகளை மறந்து இந்த ஜங்க் மெயில்களை சிரத்தையாய் படித்துவந்தேன். இனி, படிக்காமலே முன்னனுப்பும் பொத்தானை அழுத்தி நட்பு, பகை, உறவு, எதிரி, இளைஞர் முதியோர் அனைவருக்கும் அனுப்பிவிடுவேன். இந்த குருக்ஷேத்திரப் போரில் அது அவர்களை என் முன் மண்டியிடச் செய்யும்.
க்ருஷ்ணன்: அர்ச்சுனா வெற்றியோ தோல்வியோ உன் கையில் எதுவுமில்லை. உன் செயலுக்கான பலனைக் குறித்து கவலைப்படாதே. ஜங்க் மெயிலை முன்னனுப்பி அனைவரும் அதைப் படித்து பைத்தியம் பிடிக்க வைப்பதோடு உன் கடமை முடிந்தது. ததாஸ்து!!
இவ்வாறு க்ருஷ்ணன் உபதேசித்தான்.
(மின்னஞ்சல்: யாரோ!! மொழியாக்கம்: நாந்தேன்)
