Wednesday, July 7, 2010

ப்ரோட்டகால் - ஒரு விளக்கம்.

அரசு கடிதப் போக்கு வரத்தில் பெயர் குறிப்பிடாத காரணம் குறித்து பாஸ்டன் ஸ்ரீராமின் பின்னூட்டம் இது:


போன பதிவின் follow up

//வானம்பாடிகள் said... sriram said... பாலாண்ணா.. பதிவுலக ப்ரோட்டோகால் பத்தியும் சொல்லுங்களேன்.. அப்புறம் - அரசு அலுவலகங்களின் கடிதப் போக்குவரத்துக்களில் பேர் போடாம பதவி மட்டும் போடும் காரணம் பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே - எப்ப சொல்வீங்க? என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
சொல்றேனே:)//

பாலாண்ணா..
மொதோ மேட்டர் (பதிவுலக ப்ரோட்டோகால்) எப்போ சொல்வ்றீங்க, ரெண்டாவது மேட்டர் (அரசாங்க கடிதப் போக்குவரத்து) எப்போ சொல்றீங்கன்னு என் கையில் அடித்து (கிள்ளி) சத்தியம் பண்ணி சொல்லுங்க, அப்போதான் நம்புவேன்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//


ஹி ஹி. பதிவுலகில ப்ரோட்டகால்னு ஒன்னு கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். அதுமில்லாம நான் பதிவுலக கத்துகுட்டி. அதனால சும்மா இருப்பதே சுகம் அப்படிங்கற ப்ரோட்டகால்தான் சரி.


~~~~~~~~~~~~~~~

அரசு அலுவலக கடிதங்கள் பொதுவா ரெண்டு வகை. ஒன்னு அலுவலகங்களுக்கு இடையிலானது.  மற்றது அலுவலகத்துக்கும் ஒரு தனிப்பட்ட ப்ரஜைக்கானது. முதலாவது அஃபிஷியல் கரஸ்பாண்டன்ஸ். இதுலயும் அஃபிஷியல், பெர்ஸனல்னு ரெண்டு வகை உண்டு.
முதலாவது ஒரு செக்‌ஷன், அல்லது அலுவலகத்துக்கு இடையிலானது. அடுத்தது ஒரு அதிகாரிக்கும் மற்ற அதிகாரிக்குமோ அல்லது ஒரு அதிகாரிக்கும் அவரின் ஊழியருக்குமோ இடையிலானது.

அலுவலகத்துக்கும் அலுவலகத்துக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து என்பதால், அட்ரஸ், சல்யூட்டேஷன் எல்லாம் இருக்காது. உதாரணத்துக்கு ஒரு செக்‌ஷன் மேனேஜர் இன்னோரு செக்‌ஷன் மேனேஜருக்கு எழுதும் கடிதத்தில், பதவி மட்டுமே குறிப்பிடப்படும். ஒரு அலுவலகம் இன்னோரு அலுவலகத்துக்கு எழுதும் கடிதத்தில் அலுவலக தலைமை அதிகாரியின் பதவி மட்டுமே குறிப்பிடப்படும். கையெழுத்துப் போடுபவர் for என்று போட்டு கையெழுத்துப் போடுவார். 

ஒரு அலுவலக அதிகாரிக்கும் மற்ற அலுவலக அதிகாரிக்கும் இடையேயான பெர்ஸனல் கரஸ்பாண்டன்ஸ் டெமி அஃபிஷியல் எனப்படும். இது பெரும்பாலும் முக்கியமான விடயத்தில் பொறுப்பாளியாக்க பயன்படுத்தப்படும். இதில் அதிகாரியின் பெயர் இருக்கும். கடிதம் பெயரிட்டு தொடங்கும். முடியும் போது க்ரீட்டிங்ஸ், யுவர்ஸ் சின்சியர்லி எல்லாம் இருக்கும். இதில் ப்ரோட்டோகால் கீழ்க்கண்டவை:

1. எழுதப்படும் கடிதம் எழுதுபவரை விட பதவியில் உயர்ந்தவருக்கோ, அல்லது அதே பதவியில் சீனியருக்கோ என்னும் பட்சத்தில் Dear Sri  என ஆரம்பிக்கும். க்ரீடிங்க்ஸில் ஃபேர் காபியில் கையெழுத்திடுபவர் தன் கையெழுத்தில் with regards என்று எழுதுவார்.
2. ஒரே க்ரேடில் இருப்பவரோ அல்லது ஜூனியரோ எனில் My dear என ஆரம்பிக்கும். க்ரீடிங்கில் ' with best wishes' என எழுத வேண்டும்.
3. பெறுனர் பெண்களாயின் ‘Dear Ms/Mrs' என்றே அட்ரஸ் செய்ய வேண்டும். 

இதில் அடுத்ததாக பெர்ஸனல் கரஸ்பாண்டன்ஸ் என்பது ஒரு ஊழியரைக் கண்டிக்கவோ, தண்டனை தரவோ அல்லது பாராட்டவோ எழுதப்படுவது. இதுவும் பதவிக்கும், ஒரு ஊழியருக்கும் என்பதால் ஊழியரின் அலுவலக முகவரியும், ஆணையிடுபவரின் பதவியும் மட்டுமே இருக்கும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரசு அலுவலக கடிதத்துக்கும் தனிப்பட்ட பொது ஜனத்துக்குமான கடிதப் போக்குவரத்து என்பது பொதுவாக ஒரு தகவலாகவோ, அல்லது விளக்கமாகவோ மட்டுமே இருக்கும். எனவே தனிப்பட்டவருக்கு ஒரு பதவி எழுதும் கடிதம் என்பதால் இதிலும் அட்ரஸ், கையொப்பமிடுபவர் பெயர் இருக்காது. 

ஆனால், ஒரு தனிநபரின் சாதனைக்காகவோ, அல்லது அன்னாரின் குடும்பத்தில் இருந்த அரசு ஊழியரின் தியாகத்தைப் பாராட்டியோ (உ.ம். கலவரத்தில் இறந்த போலீஸ் ஊழியர், போரில் இறந்த ராணுவ வீரர், தன் சாதனைகளுக்காகப் பாராட்டப் படும் தனிப்பட்ட ஒருவர்) எழுதப்படும் கடிதங்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி, தனிப்பட்ட முறையில் விளித்து, வாழ்த்து அல்லது நன்றி பாராட்டி, தன் பதவியின் பெயரோடு தன் பெயரில் கையெழுத்திடுவார். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவலறியும் சட்டம் வந்த பிறகு, தவறான தகவல் அளித்தமைக்கு, அல்லது தகவல் அளிக்க சட்டத்திற்கு விரோதமாக மறுத்தமைக்கு பொறுப்பு என்பதால், எல்லாத் தனிநபருக்கான அரசு கடிதத்திலும் பெயரும், பதவியும் போட்டாக வேண்டும் என்ற ரூல் வந்துவிட்டது. ஆனாலும் பெயர் குறித்து விளிக்கவேண்டிய அவசியமில்லை. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காமெடி பீஸ்:
1. டெமி அஃபிஷியல் லெட்டர்களில் பெண் அதிகாரிக்கு எழுத வேண்டுமெனில் சீனியரா ஜூனியரா கண்டுபிடி என்று உயிரெடுப்பார்கள். திருமணமாகிவிட்டதா இல்லையா என்று கேட்கச் சொல்லுவார்கள். கிருத்திருமம் பிடித்த ஸ்டெனோ டைவர்ஸ் ஆயிருக்கான்னு கேக்க முடியுமா சார் என்று டரியலாக்குவான். 
2. உதாரணமாக ஒரு அதிகாரியின் பெயர் உமா ராஜகோபால் என்றிருந்தால் ஜூனியர்தான் ஆனா தெரியாது அவங்கள, அதனால டியர் மிஸஸ் உமான்னு போடுங்க என்பார். ஸ்டெனோ மிஸஸ் போட்டா ராஜகோபால்தான் போடணும்னு க்ளாஸ் எடுப்பான். 
3. பிடிக்காத சீனியருக்கு எழுதும் கடிதத்தில் ‘நாசமா போக’ இவனுக்கு 'with regards' வேறன்னு திட்டிக் கொண்டே கையெழுத்து போடுவது ப்ரீச் ஆஃப் ப்ரோடாகாலில் வராது. 
4. கிறித்துவ மத ஆஃபிஸருக்கு Sri/smt  போடக்கூடாதுன்னு Mr./Ms/Mrs போட்டு டைப் செய்து வரும் ட்ராஃப்டில் சுழித்து Sri/smt போடும் அதிகாரிகள் உண்டு.
5. முஸ்லிம் மதத்தினருக்கு Sri/Mr/Smt/Mrs/Ms போடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை என்றால் கேட்காமல் போட்டாக வேண்டும் என பிடிவாதம் பிடித்து ஃபோனில் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அதிகாரிகள் உண்டு. ஹி ஹி. 

Sunday, July 4, 2010

கெரடி கற்றவன் இடறி விழுந்தால்...




டோனி! டோனி! டோண்ட் ப்லே இன் த வெயில்!
நோமா! ஐம் ப்லேயின் இன் புள்யா மரம் நெழல் மா!

வாட் அண்ணாச்சி! ஆஃப் கிலோ கத்ரிக்கா டென் ருப்பீஸ் சொல்து. எட் ரூபாதான். வெங்காயம் ஆஃப் கிலோ போடு. ஓ மை காட்! இட்ஸ் எய்ட் ஓ க்லாக் ஆல்ரெடி. தொர கத்தும்.

ஏங்க சிரிக்கிறீங்க? இதென்னா மொழின்னா?

ஆப்பக்காரங்கன்னு நாம நக்கலா பேரு வச்சிருக்கோமே ஆங்கிலோ இந்தியர்கள், அவங்க பேசுறதுதான். 

ஹேய்! வாட்டாபன் டூ யூயா! நோ கால், நோ மெசேஜ், நோ மெயில்? எங்க தொலஞ்ச? ஹான்?

அட போ மச்சி! உனக்கு எல்லாம் ஃபந்தான். இஃப்யூ வெர் இன் மை பொசிஷன் இன்னேரம் மெண்டல் ஹாஸ்பிடலோ இல்ல சங்கோதான் யூ நோ!

அட ஏங்க சிரிக்க மாட்டேங்குறீங்க. இது என்ன மொழின்னு கேக்க மாட்டீங்குறீங்க. இது டமில்னு சுலபமா கண்டு பிடிச்சிட்டீங்கல்ல.

ஆங்கிலோ இந்தியர், தாய் மொழி ஆங்கிலம்னாலும் நம்ம மொழி கலந்து பேசினா சிரிக்கிறமே, நாம இப்புடி ஆங்கிலம், இந்தின்னு கலந்து பேசினா அவுங்க சிரிப்பாங்களேன்னு நமக்கு ஏங்க தோண மாட்டங்குது?

இப்படி பேசலைன்னா நம்மள மதிக்க மாட்டங்குறாங்களே, அந்தக் கொடுமைய எங்க போய் சொல்றது. ஒரு வாக்கியத்துல குறைந்தது ரெண்டு ஆங்கில வார்த்தை கலந்தோ அல்லது ஆங்கிலத்துல ஒரு வாட்டி தமிழ்லையும் சொல்லாமலோ பேசிப் பாருங்க. நீங்க டமில் மீடியமான்னு கேட்டுடுவாங்க. அது என்னமோ கொலக்குத்தம் மாதிரி.



இப்ப பாருங்க நீங்கல்லாம் ஏதேதோ நாட்டில் இருந்தாலும், ஒரு தமிழ்ப்பள்ளி ஆரம்பிச்சி, புள்ளைங்களுக்கு தமிழ் கத்துக் குடுக்கிறீங்களா இல்லையா? அதும் ஸ்விஸ் நாட்டுல பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முன்னாடி என்ன பண்ணனும்னு ஒரு கையேடு பார்த்தனுங்க. உங்க தாய் மொழி எதுவானாலும் குழந்தைகிட்ட அதில பேசுங்க. நிறைய தாய்மொழி வார்த்தை தெரிஞ்சாதான் அன்னிய மொழி கத்துக்க முடியும்னு போட்டிருந்துச்சு.

இங்க குழந்தை பிறந்ததும் இயல்பா வர ம்மா, ப்பா வந்தாலும் அதோட மல்லுக்கட்டி மம்மி சொல்லு, டாடி சொல்லுன்னு அதுங்கள கெடுக்கறமே. இயல்பா வராம, தமிழ்ல யோசிச்சி ஆங்கிலத்துல மொழிமாற்றம் செஞ்சு திக்கித் திக்கின்னாலும் ஆங்கிலத்துல பேசுறமே. இதுல வேற புள்ள அப்பதான் சுலுவா ஆங்கிலத்துல பேசும்னு வேற ஒரு மாயை எப்படிங்க வந்துச்சு?

ஆங்கிலோ இந்தியர்னு சொன்னேனே, அவங்கள்ள இளைய தலைமுறையெல்லாம் அதென்ன இந்தக் கூட்டத்துல நாங்க சிறுபான்மையா இருக்கிறதுன்னு அவங்க வேரைத் தேடி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துன்னு போய்ட்டாங்க. வயசாளிங்க, அங்க போக வழியில்லாதவங்க இந்தியாவை விட்டு போக மனசில்லாதவங்கன்னு ரொம்பக் கொஞ்சப் பேரு இருக்காங்க இன்னும்.

இரயில்வேயில் மிகத்திறமையான டிரைவர்கள், கார்டுகள்(தொழிற்பெயருங்க) இவர்கள். அலுவல் நிமித்தம் அவர்களுக்குள்ளே, அலுவலகத்திலோ, தேவாலயங்களிலோ ஒரே ஒரு வார்த்தை தமிழ் கலப்பின்றி பேசுபவர்கள் இவர்கள். சாமானிய மக்களூடன், அங்காடிகளில் பேசும்போது மட்டுமே கூடிய வரை இப்படித் தமிழ் கலந்து பேசுவார்கள். ஆங்கிலம் இரண்டாவது மொழியானதால் இவர்கள் பிள்ளைகளுக்குத் தமிழையே முதல் மொழியாகப் படிப்பித்தவர்கள்.

இவர்களுக்காகத் தனியே ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் அங்கீகாரத்துடன் இருந்தாலும், ஃப்ரெஞ்ச், இலத்தீன், இந்தி இவற்றோடு தமிழும் ஒரு விருப்ப மொழியாக வைத்ததோடன்றி பெரும்பாலான மாணவர்கள் தமிழ் மொழியை விரும்பிக் கற்கவும் வழி வகை செய்தார்கள்.

ஆனால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்தாலும், பதினொன்றாம் வகுப்பில் சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஃப்ரெஞ்ச் என்று மாணவர்கள் இன்று தமிழ்நாட்டில் மாறும் நிலை இருக்கிறதே! அடிப்படையில் எழுத்துக்களில் இருந்து ஆரம்பித்து வேற்று மொழியை இரண்டே வருடத்தில் கற்று அதிலும் அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்களால் முடிகிறதென்றால் அவர்கள் திறமையில் குறையொன்றுமில்லை அல்லவா?

பின் ஏன், பத்து வருடம் படித்த தமிழைத் தொடராமல், வேற்று மொழியை நாடுகிறார்கள்? தமிழ் மொழியில் மதிப்பெண்கள் பெறுவது கடினம். மொத்த மதிப்பெண் குறைந்துவிடும் எனப் பயப்படுகிறார்கள்? தமிழ் தனக்கு நன்றாகத் தெரியும் என்ற மனத்திடம் இருக்குமானால் என் மதிப்பெண் ஏன் குறையப் போகிறது என்றல்லவா இருப்பார்கள்?

தகுந்த அடிப்படிக் கல்வியளிக்காமல், விடைத்தாள்களைத் திருத்துகையில் மதிப்பெண்களைக் குறைத்தே போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் புறந்தள்ளினாலும், மாணவர்களுக்கு தன் தாய் மொழியில், பத்து வருடங்கள் கற்ற மொழியில் ஒரு தேர்வை எதிர்கொண்டு, சிறந்த மதிப்பெண் பெற முடியுமென்ற தன்னம்பிக்கையை விட, இரண்டே வருடத்தில் வேற்று மொழியைக் கற்று தாய் மொழியை விட அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இந்திப் ப்ரசார் சபா மூலம் தேசிய அளவில் சிறுவயதில் இருந்தே பள்ளிக் கல்வி தவிர்த்து பல நிலைகளில் இந்தி கற்க வாய்ப்பிருக்கிறதே. பல தனியார் பயிற்சி மையங்கள் இருக்கிறதே. வெளி நாடுகளில் இன்னும் சிறப்பாக தமிழ்ப் பயிற்சி மையங்கள் இருக்கிறதே. தமிழ் நாட்டில் இருக்கிறதா?

இங்கு இந்தி கற்பிக்கப்படும். ஃப்ரெஞ்ச் கற்பிக்கப்படுமென வீதிக்கு ஒரு பெயர்ப்பலகை தொங்குகிறதே. தமிழ் கற்பிக்கப்படும் என்று ஒரு பலகையாவது பார்த்திருக்க முடியுமா? அடிப்படைக் கல்வி கற்காவிடினும், திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் படிக்க எழுதத் தெரிந்தவர்கள் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு படிக்கலாம் என்ற வழி வகை இருக்கிறது. 

இவர்களுக்குக் கூட எத்தனை ஆர்வமிருப்பினும், தனியாகத் தமிழ் பயில வாய்ப்பில்லை என்றுதான் கூற வேண்டும். செந்தமிழ் மாநாடு நடக்கப் போகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் பல அறிஞர்கள் அங்கும் பங்கேற்கக் கூடும். விழா மலரில் கட்டுரைகள் எழுதக் கூடும்.

இந்தி ப்ரசார் சபா போல் குறைந்த பட்சம், தமிழ்நாட்டில் மட்டுமாவது எல்லா ஊர்களிலும் தமிழ் கற்க மானியம் கொடுத்தாவது ஒரு மத்தியப் பயிற்சி நிலையத்தின் கீழ் சிறு பயிற்சி நிலையங்கள் அமைத்திட வேண்டிய அவசியத்தை உணர்த்துவீர்களா? எளிமையான ஆர்வமூட்டும் பாடத்திட்டம், திறமையான ஆசிரியர்கள், தமிழார்வலர்கள் ஆகியோரின் உதவியுடன், ஊக்கத் தொகை கொடுத்தாவது தமிழின்பால் ஆர்வத்தை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

இல்லையேல் டாடி மம்மி வீட்டிலில்ல, தட போட யாருமில்லன்னு குத்தாட்டம் போடும் குழந்தையை ஸோ க்யூட் யார்? எப்புடி ஆடுறா பாரேன்னு கொஞ்சிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான். நல்லா படிச்சி அது தொழில் முறையாகவோ மேற்படிப்புக்கோ வெளிநாடு வரும்போது இப்படி விழாவில் பங்கேற்று தமிழ் ஆர்வம் கொள்ளும் வரை காத்திருக்க வேண்டியதுதான். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 23வதுஆண்டு விழா மலரில் வெளியான என் கட்டுரை. தலைப்புக்கு உதவிய கலகலப்ரியாவுக்கும்,  விழா மலருக்கும், ஊக்குவித்த சகோதரி திருமதி தேவகி செல்வம் அவர்களுக்கும் நன்றி. நண்பர்கள் பழமைபேசி, கதிர், பாலாசி ஆகியோரின் கட்டுரைகளும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. பாராட்டுகள்.)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விழா நிகழ்ச்சிகள் தமிழ்மணம் முகப்பிலும், www.fetna.org தளத்திலும் நேரடி ஒளிபரப்பு நடைபெறுகிறது. 
-----::-----

Saturday, July 3, 2010

கேரக்டர் - கண்ணன்.

என்றாவது தங்கசாலை வீதிவழியே செல்ல நேர்ந்தால் இரயில்வே அலுவலகத்தின் கிழக்கு வாயிலோரம் நடைபாதையின் அருகில் இருக்கும் தேனீர்க் கடையருகே சற்றே நில்லுங்கள்.

யாருடனாவது பேசுகையில் குழந்தைபோல் சிரிப்பும், தனித்திருக்கையில் ஒரு ஞானியின் தெளிவும் காட்டும் முகத்துடன் ஐந்தடி மூன்றங்குலத்தில் கருப்பாக டீ கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்க்க நேரிடின் மனதிற்குள் ஒரு சல்யூட் வையுங்கள். ஆம் அவர் அதற்கு முற்றிலும் தகுதியானவர். சாதனையாளர்.

உருவத்துக்கேற்ற பெயர், கண்ணன். சற்றேறக் குறைய முப்பது வருடங்களுக்கு மேலானது எங்கள் நட்பு. எனக்கு மட்டுமல்ல, எங்கள் அலுவலகத்தின் மூவாயிரத்து சொச்சம், மற்றும் இதர அலுவலகங்களிலிருந்து வருவோர் போவோர், தங்கசாலைத் தெரு கடை வாடிக்கையாளரெனெ அவரின் நட்பூத் தோட்டம் மிகப் பெரியது.

79-80ல் என நினைக்கிறேன். சுயவேலை வாய்ப்பு இளைஞர்களின் தேசியக் குழுமம் என்ற பெயரில் தேநீர்க் கடைகள் தெருவெங்கும் முளைத்திருந்த காலம். அலுவலக ஓரம் ஆரம்பித்தது இவர்கள் தேனீர்க்கடை.

மொத்த ரயில்வே அலுவலகத் தொழிலாளர் ஆதரவும் இவர்கள் பக்கம் சாய, வாழ விட்டுவிடுவார்களா என்ன? எத்தனையோ காரணம் சொல்லலாம். ஒரு நாள் கடை தடை செய்யப் பட்டது. சற்றும் மனம் தளராமல் எதிர்ப்புறம் ஒரு தடுப்பில் தேநீர் தயாரித்து ட்ரம்மில் வீதியோரம் வியாபாரம் தொடர்கிறது, பதினைந்து வருடங்களுக்கும் மேல்.

மழையோ வெயிலோ புயலோ கண்ணன் காலோய உட்கார்ந்து பார்த்ததில்லை. உழைப்பு என்ற வார்த்தையின் அர்த்தம் அவர். தினமும் பார்ப்பதில்லை. பேசுவதில்லை. பார்க்க நேரிடின் பேசாமல் போனதில்லை. ஆனால் ஒரு நாள் நான் லீவ் என்றால் அடுத்த முறை பார்க்கையில் லீவில் போனீர்களா? நலம்தானே என விசாரிக்காமல் இருந்ததில்லை.

மூத்த மகள் சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் வேதியியல் படித்தார். பரதநாட்டியத்தில் சிறந்த பயிற்சியுடையவர். பதின்ம வயதுக்கே உரித்தான ஆர்வமும் சேர கண்ணன் சற்றே கவலைப்பட்ட நாட்கள். சாதிக்கப் பிறந்தவள் என்ற நினைப்பை மனதில் ஊட்டிய முறையோ, தந்தையின் உழைப்பை உணர்ந்த பொறுப்போ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் அப்ளைட் கெமிஸ்ட்ரியில் பட்ட மேற்படிப்பு படித்தார். முதன்மையான மாணவியாய்த் திகழ்ந்தவளுக்கு உமி கொண்டுவா! அவல் நான் தருகிறேன் என்ற அளவில் வந்த லண்டன் ஆராய்ச்சி வாய்ப்புக்கு தேவையான தொகையில் அவளுக்கு திருமணம் முடிக்கக் கூடும் என்பதால் ஏற்க இயலவில்லை.

புன்னகையுடன் புறந்தள்ளி, தைவானில் ஆராய்ச்சி மாணவியாகச் சேர்ந்து, அங்கும் பரதநாட்டியக் கலைக்குழு ஆரம்பித்து, ஒரே வருடத்தில் உழைப்பின் பயனாய் நியூஸிலாந்தில் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்தார்.

விரிவுரையாளருக்கான வாய்ப்பையும் புறந்தள்ளி ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கும் மும்மரத்தில் இருக்கும் இவர், இன்று மருத்துவ வேதியியலில் எடுத்துக் கொண்டுள்ள ஆராய்ச்சி மனித இனத்துக்கு பெரும் வரமாகும். என்றோ ஒரு நாள் இவரின் பங்களிப்பை உலகம் பேசக் கூடும்.

தக்க நேரத்தில் அவளுக்கேற்ற கணவனாக ஒரு மருத்துவரை மணமுடித்து ஒரு நிறைவான தகப்பனாய், ‘நம்ம கையில என்ன இருக்கு சார்!’ என்று  சிரிக்கும் போது இந்த மனதுக்குத்தானே அய்யா அவனவன் கோவில், குளம், இமய மலைன்னு போறாங்க என்று தோன்றும்.

அடுத்த மகளும் HCLல் பணிபுரிந்தபடி MBA தொடர்கிறார். B.Com படிக்கும் மகன் தன்காலில் நின்றால், நான் கொஞ்சம் உட்காருவேன் என்று, சாதனை தலைக்கேறாமல் சாமானியனாய்  5 டீ ரெண்டு ராகி, கப கபன்னு க்ளாஸ் சுத்தமா கழுவி வை, நாலாவது மாடிக்கு 25 டீ மூணு மணிக்கு கொண்டு போயாச்சா?  என்றபடி காலை முதல் மாலை வரை உழைக்கும் இந்தத் தேனீ!
~~~~~~~~~~~~