Friday, October 8, 2010

ங்கொய்யா டிவியில் ‘போட்டிக்கு பேட்டி’...



(இந்த படம் காட்டதான் முடியும்..ஓட்ட முடியாது. ஹி ஹி)

வலையுலக வரலாற்றில் முதல் முறையாக, ங்கொய்யா டிவியில் கிரகணம் பிக்சர்ஸ் வழங்கும், சமூக ஆர்வலர் கதிர் (வலிக்காத மாதிரியே) நடிக்கும் ‘போட்டிக்கு பேட்டி’ நிகழ்ச்சி!! தூண்டுகோல்: தளபதி நசரேயன் ..உலகெங்கும்  ஒரே நேரத்தில் எல்லா கணினியிலும் ரிலீசாகும் முதல் தமிழ் பேட்டி!! காணத்தவராதீர்கள்..

வா.பா. வணக்கம் வலையுலக நண்பர்களே. முந்தா நாள் ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் அட்டகாசமான பேட்டியளித்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய திரு.கதிர், ஈரோடு கதிர், சமூக ஆர்வலர், மாப்பு என்று பலருக்கும் அறிமுகமான பி.ப. திரு கதிர் அவர்கள் தனது பேட்டி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம். வணக்கம் கதிர் அவர்களே.

கதிர்: வணக்கம்.

வா.பா. வணக்கம்னு சொன்னா போதும். எலக்‌ஷன்ல நிக்கிறவரு மாதிரி கூப்புன கை கூப்புன படியே இருந்தா எப்புடி. முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு வயசு கூடி இருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க.

கதிர்: இப்படியெல்லாம் அலும்பு பண்ணுவீங்கன்னுதானே உசாரா பென்சமின் பட்டன் படம் பார்த்தேன்னு போட்டேன். ஒரு வயசு இளைஞனா ஆனா மாதிரிதான் ஃபீல் பண்றேன். ஆமாம். நீங்க மட்டும்தான் பேட்டி எடுப்பீங்களா?

வா.பா. இல்லைங்க பரவை முனியம்மாவும் பங்கேற்கிற மாதிரி இருந்தது. அவசரமா ஒரு ஷூட்டிங்னு போய்ட்டாங்க. தேவைன்னா டெலிகான்ஃபரன்ஸிங்ல கேப்பாங்க. சரியா.

கதிர்:ரொம்பத் தேவை. கேளுங்க

வா.பா: செந்தமிழ் மாநாட்டுலயே உங்க பேச்சைக் கேக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தது வலையுலகம். அங்க ஏற்பாடு சொதப்பி பேச முடியாம போயிருச்சி. அந்த கடுப்பிலதான் நீங்க அம்மா கட்சிக்கு மாறி ஜெயா டி.வில பேட்டி குடுத்தீங்களா?

கதிர்:இப்புடியெல்லாம் கெளப்புவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் ஊட்டுல சோனி டிவி இருந்தாலும் ஆஃபீசுல கலைஞர் டி.வில என் பேட்டி பார்த்தேன். யார்ட்ட. ஹெ.

வா.பா: ஆமாம். ஈரோட்டில கரண்ட் இருக்காது 8-10னு சொன்னீங்க. அப்புறம் எப்படி சரியாச்சி.

கதிர்:அது ரொம்ப சுவாரசியங்க. ஒரு நாள் ‘மனுசன் கண்டு புடிச்ச கரண்ட மனுசன் ஆசையா தொட்டு பார்க்க முடியல, ஆனா கரண்டுல காக்கா ஊஞ்சலாடுதேன்னு’ ஒரு பஸ் போட்டேன். கண்ணு பட்டு ஒரு காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சாம். அதோட சாபம்னு அந்தியூர் சந்தையில சோசியம் சொன்னுச்சு. அவங்க சொன்னா மாதிரியே போன ஞாயித்துகிழமை சைலண்டா எஸ்ஸாயி, காக்காத்தா கோவில்ல காக்கா பிரியாணி போட்டேன். கரண்ட் வந்துடுச்சி. அதான் பஸ்ஸே தூக்கிட்டேன் இப்போ.

வா.பா.: ரொம்ப சிலிர்ப்பான அனுபவங்க. அப்புறம் அந்த பேட்டில ஒரு ஆச்சரியமான விஷயம், உங்க ஷூ மினு மினுன்னு மின்னிச்சே. சென்னை தூசுல ஒரு ஷூ பாலிஷ் போட்டு மறு ஷூ போடுறதுக்குள்ள ஒரு இஞ்சுக்கு மூடிக்குமே. நீங்க கூட அடிக்கடி தூசு வந்துடுச்சோன்னு பார்த்துகிட்டே இருந்தீங்க. ஷூட்டிங் ரூம்ல இன்ஸ்டா ஷைன் போட்டீங்களா?

கதிர்: (யோவ்! மூக்குதான் காக்கா மாதிரி இருக்குன்னு பார்த்தா முழி கழுகால்லயா இருக்கு. ஆத்தாடி) ஹி ஹி. ஆமாங்க. முடி கலைஞ்சுடுச்சான்னு பார்த்துகிட்டேங்க அப்பப்ப. லுக்கு முக்கியமில்லையா?

வா.பா.
:யப்பா! தாங்கல சாமி! அந்த பேட்டில நாற்பது நிமிஷம் அந்த சோஃபால முகம் சிரிச்சா மாதிரி இருந்தாலும், சலூன்ல முடி வெட்ட சேர் மேல பலகை போட்டு உக்கார வச்ச பையன் மாதிரி கவட்டிக்குள்ள கைய இடுக்கிக்கிட்டு வெறச்சா மாதிரி இருந்தீங்களே, ஏன் அப்படி?

கதிர்: அது ஃபேசு ஸ்ட்ராங்கு. போஸ்ச்சரு வீக்கு. ஹி ஹி.

வா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்?

கதிர்:
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு விட்டுட்டாங்களோ?

வா.பா:பேட்டில உங்க படிப்பு எல்லாம் கிராமப்புறத்துல, அரசு பள்ளிலன்னு சொல்லியிருந்தீங்க. அது எங்கன்னாலும் ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், சமூகப்பாடம்னு அஞ்சு பாடம் இருந்தாலும் அதெப்படி சமூகத்துல மட்டும் ஆர்வம் அதிகமாகி சமூக ஆர்வலர்னு பட்டம் வாங்கினீங்க?

கதிர்: (அடப்பாவிங்களா! இப்படியெல்லாமா புரிஞ்சுக்குவீங்க. சமாளிடா கதிரு). அது வந்துங்க நான் ஒன்னாப்பு படிக்கும்போதே கற்பனை கசிய ஆரம்பிச்சிடுச்சி. மத்த சப்ஜெக்ட்ல கதை விட முடியாது. சமூகப்பாடத்துல சொந்த சரக்கும் சேர்த்து அடிப்பேன். ஒன்னாப்புல இருந்து 12ம்பு வரைக்கும் சமூகப் பாடத்துல முதல் மாணவனானதால அந்தப் பட்டம். ஹி ஹி.

வா.பா: ஆமா! நீங்க ரெண்டாயிரத்து எட்டில இருந்து பதிவுலகுக்கு பரிச்சியம்னு சொல்லியும் பேட்டி எடுத்தவர் திரும்ப எத்தன வருஷமா எழுதுறீங்கன்னு கேட்டாரே. அப்ப என்ன நினைச்சீங்க.

கதிர்: எங்காளுங்க படிக்காமலே பின்னூட்டம் போடுவானுங்க. பதிவுலகம்னு சொன்ன தோஷமா. என்ன சொல்றேன்னு உள் வாங்காமலே இப்புடி கேக்கறாங்களே இவங்கன்னு தோணிச்சி.

வா.பா. ஆமாங்க. இன்னோரு ஆச்சரியம். முதல் பகுதி முடிஞ்சதும் வந்த விளம்பரத்துல ‘கும்மியடி பெண்ணே கும்மியடின்னு’ பாடிக்கிட்டு அனிதா குப்புசாமி எண்ணெய் வித்தாங்க. நான் கூட நினைச்சேன் பதிவர்னதும் கும்மி பொருத்தமா போட்டாங்களான்னு.

வா.பா. திரு ஈரோடு கதிர் அவர்கள் தன்னோட பேட்டி பத்தி மேலதிக விளக்கம் ரொம்ப சுவையா சொல்லிட்டிருக்காரு. ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம் நேயர்களே.

(ஆரோக்கியமான பல்லுக்கு மெஸ்வாக் டூத் பேஸ்ட்..ஆலங்குச்சி சாற்றில்......)

வா.பா.:நேயர்களே. இடைவேளிக்கு முன்பு திரு கதிர் அவர்கள் தன்னுடைய பேட்டி அனுபவங்களை சொல்லிட்டிருந்தாரு. தொடர்வோம். கதிர்! அந்த பேட்டியில கண் தானம் பத்தி வெகு சிறப்பா சொல்லியிருந்தீங்க. இந்த கண்ணுல பூ விழாட்டி தானம் பண்ணலாம்னு ஏதோ சொன்னீங்க. அப்ப நீங்க சந்திக்கிறவங்கள எல்லாம் முதல்ல இது நல்ல கண்ணா இல்ல நொள்ளைக் கண்ணான்னுதான் பார்ப்பீங்களா?

கதிர்:ஹி ஹி. பேட்டி எடுத்த ரெண்டு பேத்தையுமே அப்படி பார்த்தேன். அந்த வெளிச்சத்துல கண்ண சுருக்கிட்டாங்க. சரியாத் தெரியல.

வா.பா: அப்புறம் கதிர், ரத்த தானம் பத்தி சொல்லும்போது, நிறைய பேரு தயங்குவாங்க. சேராதும்பாங்க. அதனால, அரசு மருத்துவமனைல போய் ரத்தம் கொடுத்துட்டு வந்தாதான் நாங்க அரேஞ்ச் பண்ணுவோம்னு சொன்னீங்க. இந்த ஐடியா எப்படி வந்தது.

கதிர்: ஆரம்பத்துல நாங்களும் யார் கேட்டாலும் ரத்தம் ஏற்பாடு பண்ணமுங்க. அப்புறம் பதிவுலகம் வந்தப்புறம்தான், இந்த நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி. இத பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி, விசேசத்துக்கு மொய் எல்லாம் கணக்கு எழுதி வச்சி திரும்ப செய்யறதுங்கறது டமிலன் பண்பாடு. அது ரத்தத்துல ஊறின விஷயமாச்சே. அதனாலதான் ரத்ததானத்துக்கும் ஒர்கவுட் ஆகுதுன்னு கண்டு புடிச்சனுங்க.

வா.பா: அபாரங்க. முக்கியமா உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சதுங்க. பேட்டி முழுசும், 97 ஜோடி கண் தானம், 37 வாட்டி ரத்த தானம், 4000 மரம், 11 ஆயிரம் மரம், 2 லட்சம் டன்னுன்னு ஒரே புள்ளி விபரமா கொட்டுனீங்க. யூத்து யூத்துன்னு வேற அலப்பறை தாங்கல. ஒரு வேளை டி.வி.க்கு வந்தாச்சி. அடுத்தது வெள்ளித் திரையில விஜயகாந்த் விட்ட இடத்த புடிக்கிற அகுடியா இருக்கா?

கதிர்:ஹி ஹி. கண்டு புடிச்சிட்டீங்களா?

வா.பா.
அப்புறம் அந்த ப்ளாஸ்டிக் கேரி பேக் பத்தி சொன்னீங்க. அது மேல உங்களுக்கு வெறுப்பு எப்படி ஏற்பட்டது? அங்க நீங்க என்னதான் கதை விட்டாலும், மொத நாள் சொல்லி சக்கரை வாங்க மறந்துட்டு, காலைல தூங்க விடாம விரட்டின வெறுப்புல தூங்கிட்டிருந்த நாயை ச்சூன்னு எழுப்பி விட்டு (அதை ஒரு இடுகையா தேத்தினதும் தெரியும்டி) அது தொறத்தினதுல ஓடி பை அறுந்து கொட்டி ஊட்டுல வாங்கிக் கட்டிக்கிட்டதுதானே உண்மையான காரணம்?

கதிர்:ஹி ஹி. அது மட்டுமில்லைங்க. ஒரு வாட்டி சோப்பு, ஷேவிங் ஐட்டமெல்லாம் வாங்கி பாத்ரூம்ல வச்சிட்டு கைமறதியா கேரி பேக்கை ஃப்ளஷ்ல போட்டுட்டேன். அது ஃப்ளஷ் பண்ணும்போதெல்லாம் உப்பி அடைச்சிகிட்டு 500 ரூபாய்க்கு ஆப்பு வச்சிடுச்சி. எடுத்த ஆளு, எந்த கூமுட்ட இத ஃப்ளஷ்ல போட்டுச்சின்னு திட்டிட்டான். அதான்.

வா.பா.
இந்த ப்ளாஸ்டிக் டம்ப்ளர் பத்தி சொல்றப்ப ரீ சைக்கிள் பண்ணமுடியாதுன்னீங்க. எவர்சில்வர் டம்ப்ளர் வச்சா ஆட்டய போட்டுட்டு போறாங்கன்னு தானே இது வந்துச்சு. பின்ன என்ன பண்ணலாங்கறீங்க.

கதிர்:
பேப்பர் கப் உபயோகிக்கலாமே.

வா.பா. அதுக்கு மரக்கூழ் வேணுமே. மரமும் வெட்ட கூடாதுங்கறீங்களே.

கதிர்: அது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க! வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க.

வா.பா: சரிங்க. இந்த வலைப்பூ பத்தி சொல்லும்போது தமிழ்ல எழுதறதப் பத்தி சொன்னீங்க. என்னமோ கருப்புன்னு உள்வாங்கி ப்ளாக்னு வெளிய துப்பின்னு வலை நண்பர்களுக்கு புரியறா மாதிரி சொல்லுங்களேன்.

கதிர்: ஒரு நாள் ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பிட்டேங்க. அரை மணில தங்க்ஸ் ஃபோன் பண்ணி ஏங்க டிஃபன் ஆறிப்போகுது எங்க தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. ஏம்மா ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டுதானம்மா வந்தேன்னேன். ஏங்க புரியறா மாதிரி ஆணி புடுங்க போறேன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்லங்கன்னு சொன்னாங்க.

இன்னோரு நாள் மக கூட லேப்டாப்ல விளையாண்டுக்கிட்டிருந்தேன். காலிங் பெல் அடிக்கவும் போய் பார்த்தா யாரோ அட்ரஸ் மாத்தி வந்துட்டாங்க. வந்ததும் மக கேட்டாங்க யாருப்பான்னு. யாருன்னு தெரியலைம்மான்னு சொன்னதும் டக்னு ஓ!  ‘அனானி’ யான்னுச்சு. இப்படி நாம சொல்ற விஷயத்த அவங்களுக்கு ஏத்தா மாதிரி புரிஞ்சிக்க வைக்கிறததான் அப்படி விளக்கினேன்.

வா.பா: அருமையா விம் போட்டு விளக்கிட்டீங்க. இந்த வலைப்பூ அறிமுகம்னு ஒன்னு பத்தி சொன்னீங்க. நிறைய பேர் வலைப்பூ ஆரம்பிக்கணும். வலையில பதிவேத்தணும்னு சொன்னீங்க. இந்தக் கொலை வெறிக்கு என்ன காரணம். அங்க நீங்க என்ன காரணம் சொன்னாலும் எனக்கென்னமோ ‘தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்துச்சாம்னு’ ஒரு சொலவடை கவனம் வருது. சரிதானா?

கதிர்:
ஏனுங்க ரெண்டாவது வெளம்பர இடைவேளை விடலையே.

வா.பா. என்னாங்க பதிவர் நீங்க. தமிழ் பதிவில கூகிள் அட் கூட வராது. ஒன்னு விட்டதே பெரிய காரியம். உங்க பேட்டி பற்றிய சுவையான தகவல்களை பகிர்ந்துகிட்டதுக்கு ங்கொய்யா டீவி சார்பிலும், வலைப்பூ நண்பர்கள் சார்பிலும் மிக்க நன்றி வணக்கம்.

கதிர்: யோவ். நானா பகிர்ந்துகிட்டேன். பாதிக்கு மேல நீங்களே சொல்லிட்டு என்னைய மாட்டி விடுறீங்களா. நாட்டாமைக்கே சொம்பா? நல்ல்ல்ல்லா இருங்கடி. வணக்கம்.  
~~~~~~~~~~~

Tuesday, October 5, 2010

நாமார்க்கும் குடியல்லோம்...

"செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்”
அந்த மார்கழிமாத ஒடுக்கும் குளிரிலும் பிசிறின்றி வெள்ளி மணியாய் ஒலிக்கிறது கோப்பெருந்தேவியின் குரல். அவளுக்கேயான பிரத்தியேக நேரம் அது. கண்ணனோடு மனதால் குறை சொல்லி, வாயால் பாடி ஆரத்தி எடுத்து சேவித்து எழுந்தாளானால், திரும்ப மாலை விளக்கேற்றும் வரை அவள் கடமைகளே அவளுக்கு ஆராதனை. ஒரு விரல் நுனி வெண்ணையும், பாலும் நைவேத்தியம் காட்டி, ஹாரத்தி எடுத்து, வணங்கி முடித்த பின் பூஜை மண்டபத்தில் எல்லாவற்றையும் சீராக்கி அடுக்களை புகுந்தாள்.

காஃபிக்கு வெந்நீர் வைத்தபடி, சன்னக் குரலில் ‘ஜகத்தோத்தாரண ஆடிசிதள யசோதா’ தவழத் துவங்கியது. மெல்லிய மயிலிறகால் வருடினாற்போல் சேஷனுக்கு உறக்கம் கலைந்தது. காதுக்குள் ரம்மியமாக வந்து கண்ணன் மனசை நிரப்பினான். உள்ளங்கையால் கண்களை வருடி, உள்ளங்கையில் பார்த்து க்ருஷ்ண க்ருஷ்ண என்று மெதுவே எழுந்து பாயைச் சுருட்டி வைத்தார். துண்டோடு, பாத்ரூமில் நுழைந்தாரென்றால் பல் விளக்கி, காலைக் கடன் முடித்து, குளித்து வெளியே வந்து, மடியுடுத்தி, திருமண் சாத்தி,  சந்தியாவந்தனம் முடிக்கவும், கோப்பு எனும் கோப்பெருந்தேவியின் கைப்பாகத்தில் மணக்க மணக்க  காஃபி தயாராயிருக்கும்.

கோப்புக்கு என்னமோ மனதில் குறை இன்னைக்கு என்று அநிச்சையாக உணர்ந்தார் சேஷன். இன்று ரொம்பவும் குழைந்து கண்ணனைச் சீராட்டிக் கொண்டிருக்கிறாள் பாட்டில் என்ற நினைப்பு தோன்றியது. அடுக்கடுக்காய் குழைவாய் வகை வகையாய் கண்ணனைப் பாடப் பாட, ஜபம் செய்ய விடாமல் மனது கொஞ்சம் அலைக்கழிந்தது. பாட்டென்றால் கொள்ளைப் பிரியம் கோப்புவுக்கு. மாமனாரிடம், மெட்ராஸில் அவளுக்குப் பாட்டுச் சொல்லித்தர ஏற்பாடு செய்வதாய் கொடுத்த வாக்குறுதியும், இரண்டாவது மாதமே கோப்பு பிள்ளையுண்டானதில் அது குறித்து மறந்தே போனதும் நினைவுக்கு வந்து தொலைத்தது.

வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், எப்போதாவது ஓய்ந்திருக்கையில், ‘கோப்பு! ஜயதி ஜயதி பாரதமாதா பாடுடீ’ என்று கேட்டு, சிலிர்த்து, கண்ணோரம் கசியவிருக்கும் நீரை அடக்கி,  ‘மாமாக்கு உனக்கு பாட்டு கத்து குடுக்கறேன்னு வாக்கு குடுத்தேனேடி. பண்ண முடியலையே. குறையோடயே போய் சேர்ந்திருப்பார். இப்போ கத்துக்கறயா சொல்லு, விசாரிக்கட்டுமா?’ என்பார்.

‘நன்னாருக்குன்னா! கெடக்கறதெல்லம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மணையில வைன்னு இப்போ போய் பாட்டு கத்துக்கறதாம். ஆச்சு, நப்பின்னைக்கு ஆறு வயசாயிடும் இந்த அப்பசிக்கு. விஜய தசமிக்கு அவள சேர்த்துவிட்டு ஒங்க ஆசைப்படி அவளுக்கு சொல்லிக் கொடுங்கோ’ என்று எழுந்து போவாள். ஏனோ இன்று இவையெல்லாம் கவனம் வந்து ஜபம் செய்யவிடாமல் கோப்புவின் பாடல் மனதைப் புரட்டிப் போட்டது.

சந்தியாவந்தனம் முடித்து, பஞ்சபாத்திர தண்ணீரை துளசிக்கு வார்த்து, ஸூக்தம் சொல்லி, மந்த்ர புஷ்பம் சொல்லி முடித்து சேவித்து எழுந்தார். பொத்தென்று பேப்பர்க்காரன் வீசிய ஹிந்து ஹாலுக்குள் விழுந்தது.


‘கட்டேல போறவன்! எத்தனவாட்டி சொன்னாலும், க்ரில்லுல சொருக மாட்டான்’ என்றபடி பேப்பரை குனிந்து எடுத்தார். பித்தளை டபரா டம்ப்ளரில் மணக்க மணக்க காஃபியைக் கொண்டு வந்தாள் கோப்பு.

‘மொழக்க மொழக்க ஸ்லோகம் சொல்லி முடிச்சி, இப்படிச் சபிக்கணுமா அந்தப் பையனை. என்ன மனுஷனோ’ என்று நொடித்துக் கொண்டு நப்பின்னைக்கு குரல் கொடுத்தாள்.

மணி ஆறு. ஏழுக்கு கிளம்பினால்தான் ஆஃபீசுக்கு நேரத்துக்கு போகமுடியும். அவள் குளித்த பிறகு அவள் தம்பி ஸ்ரீதரன் ரெடியாக வேண்டும் காலேஜுக்கு. ஒரு கையில் காஃபியும் தரையில் விரித்த பேப்பருமாய் அடுத்த கட்ட தவத்திலிருந்தார் சேஷன். 


‘சனியனே! குளிக்காம தளிகையுள்ளில வராதேன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன். புக்காத்தில, பொண்ண வளர்த்திருக்கா பாருன்னு நான்னா சீப்படப் போறேன்’ என்று சலித்துக் கொண்டால் கோப்பு. அதை சட்டை செய்யாமல் கிசு கிசு குரலில்  ‘அப்பாவை கேட்டியாம்மா?’ என்றாள் நப்பின்னை.

‘நீ சித்த ஹாலுக்கு போறியா? காஃபி கொண்டு தரேன். குடிச்சிட்டு குளிக்கிற வழியப்பாரு. நன்னா மாட்டிண்டு முழிக்கிறேன் உங்க ரெண்டு பேருட்டயும்’ என்று சலித்தபடி விரட்டினாள். உர்ரென்று ஹாலுக்கு வந்து உட்கார்ந்த மகளை ஒரு கண்ணால் பார்த்தபடி, ‘என்ன அவகிட்ட குசுகுசு? என்ன வேணும் நோக்கு?’ என்றார்.

ஒரு கண்ணால் பூஜை மண்டப கண்ணனுக்கு இறைஞ்சி, ‘ஏன்னா!கத்தாதேங்கோ. கோந்த ரொம்ப சிரமப் படறான்னா. வேற என்னன்னாலும் பரவால்லன்னா. பஸ்ல கண்ட காலியும் கயவாளித்தனம் பண்றாம்மா, கூசிப்போறதும்மான்னு அழற குழந்தைகிட்ட, பொறுத்துகோடின்னு அம்மாவா எப்படிச் சொல்றது? அவ ஆஃபீஸ்ல லோன் கிடைக்குமாம்னா. ஒரு ஸ்கூட்டி வாங்கிக்கறேம்மான்னு கெஞ்சறது குழந்தை. சரின்னு சொல்லுங்கோன்னா’ என்று தயங்கித் தயங்கிச் சொல்லி, மகளைப் பார்த்த பார்வையில், என்னால் முடிந்தது இவ்வளவுதான் என்ற கழிவிரக்கம் தெரிந்தது.
 

‘இங்க பாரு கோப்பு, நோக்குதான் லோகம் தெரியாது. இவள் எப்படித்தான் வேலைக்குப் போறாளோ தெரியலை. வண்டி இருந்தா மட்டும், கயவாளிக சும்மா இருக்காங்கறயா. விரட்டிண்டு போறதும், நாய் கத்தறா மாதிரி ஹாரன் வச்சிண்டு பக்கதுல வந்து பயமுறுத்தறதும், எத்தன குழந்தைகள் கீழ விழுந்து அடி பட்டுண்டு, நாராயணா! என்னால நினைச்சிக் கூட பார்க்க முடியலைடி.’

‘தோ! எழுந்து விறு விறுன்னு ரெடியாகி, அஞ்சு நிமிஷம் முன்னாடி கிளம்பினா டெர்மினஸ்க்கு போய்ட்டு உக்காந்துண்டு போலாமேடி. பகவானேன்னு வரன் குதிர்ந்து இவள ஒருத்தன் கையில புடிச்சி குடுத்தாச்சுன்னா அவன் பாடு அவள் பாடுன்னு, இன்னும் சித்த ஸ்லோகம் சொல்லிப்பேன், எங்கொழந்தைக்கு ஒன்னும் ஆகப்படாதுன்னு.’

‘அவளை மடமடன்னு குளிச்சிட்டு சாட்டு கெளம்பற வழியப்பார்க்கச் சொல்லு’ என்றார்.

சப்தம் கேட்டு விழித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதரன்.

‘சார் வாளுக்கு, பைக் வேணுமோ? இப்போ அதானே ஃபேஷன். காலேஜ் சேர்ந்த கையோட புக் வாங்கியாறதோ இல்லையோ பைக் வாங்கியாகணுமே ’ என்றார். 

‘ம்க்கும்! கம்ப்யூட்டர் சயின்ஸில சேர்த்துட்டு லேப்டாப் வேணும்னு கேட்டா, மெடிகல் காலேஜ்ல சேர்ந்திருந்தா படிக்கிறதுக்கு தினம் ஒரு பிணம் வேணும்னு கேப்பியான்னு கேட்ட மனுஷன்கிட்ட பைக் வேணும்னு கேக்கற அளவுக்கு நானொண்ணும் லூசு இல்லை’, என்று பாத்ரூமுக்குள் நுழைந்தான் ஸ்ரீதர்.

ஹிந்துவை மனது ஒட்டாமல் புரட்டியபடி இருந்தவர், ‘தளிகையாயிடுத்துன்னா! சாப்பிட வரேளா என்றவளிடம் பதில் சொல்லாது, பேப்பரை மடித்து வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார். ஆஃபீஸில் இன்று டெண்டர் ஓப்பனிங். பெரிய டெண்டர். இன்னைக்குள் முடிச்சி அனுப்பிடணும். கையில் வைத்திருந்தால், காண்ட்ராக்டர் தொல்லை தாளாது. புதுசா வந்திருக்கிற அதிகாரி வேறு அவ்வளவு சரியில்லை என்று கேள்வி என்று மனதுக்குள் ஆஃபீஸ் வந்து உட்கார்ந்து கொண்டது.
 

ஆஃபீஸ் போய் சேர்ந்து, எல்லாம் தயார் படுத்திக் கொண்டு டெண்டர் பாக்ஸ் அருகே போனார். காத்திருந்த டெண்டரர்களிடம் சீல் உடைபடாமல் இருக்கிறது என்று சாட்சிக் கையெழுத்து வாங்கி, பெட்டியைத் திறந்து, வந்திருந்த டெண்டர்களை அள்ளிக் கொண்டு தன் இருக்கைக்கு வந்து, முறைப்படி ஒவ்வொன்றாகப் பிரிக்கத் தொடங்கினார். 

முதல் டெண்டரைப் பார்த்ததுமே சலிப்பு வந்தது. நாசமாப் போறவன். இந்த கோபால் ரெட்டிக்கு என்ன தெரியும்னு இந்த டெண்டரை கேக்கறான். ஜல்லி சப்ளை பண்ற கடங்காரனுக்கு ஆப்டிக் ஃபைபர் காண்ட்ராக்ட் எழவு எப்படி முடியும், என்று நினைத்தபடியே, ரேட்டைச் சுழித்து கையொப்பமிட்டபடி வந்தவரின் கண்ணில் அந்தப் பக்கத்தின் அடியில் கையொப்பமிடாதது கண்ணில் பட்டது.

அப்பாடா! தப்பிச்சேன். இல்லைன்னா எக்ஸ்பீரியன்ஸ் இல்லை, க்ரெடென்ஷியல் சரியில்லைன்னு எழுதப் போய், பணத்தால் அடிக்கப் பார்ப்பான். மேல இருக்கிறவன் ஒரு வேளை மடிஞ்சிட்டான்னா என் பாடுன்னா திண்டாட்டமாப் போகும். ஆச்சு! இன்னும் ரெண்டு வருஷம் தள்ளியாச்சின்னா, போதுண்டா சாமின்னு ரிடையராயிடலாம் என்ற நிம்மதிப் பெருமூச்சு நிலைக்கவில்லை.

சுருட்டு நாத்தமும், வியர்வை நாத்தமுமாய் ஒருத்தன் வந்து, ரெட்டிகாரு கார்ல இருக்குது சார். சார்னு கொஞ்சம் ரம்மன்னாரு சார் என்றான். கண்கள் சிவக்க அடித்தொண்டையில், ரெட்டியில்லை, என்னப்பன் நாராயணனே டெண்டர் போட்டிருந்தாலும், எனக்கு அவன்கிட்ட போக வேண்டிய அவசியமில்லைன்னு போய்ச் சொல்லு என்றார். சற்று நேரத்தில் ரெட்டியே இளித்துக் கொண்டு வந்தான். 


‘பாகுன்னாரா ஸாமி? ஏமண்டி பாப்பக்கு ஒக பண்டி கொனீய குடுது? பஸ்ஸுக்கு ஓடி போய் அந்த கும்பல்ல ஏறி அவஸ்தை பட்டதை பார்த்தேன் காலைல. அல்லாரும் பொறுக்கி பசங்க சாமி. ’

'இண்ட்லோ கம்ப்யூட்டர் கூட லேதுனு கேள்வி பட்டேன். '

'பையன் கம்ப்யூட்டர் இஞ்சினீரிங் சதுவுத்துன்னாடண்டா. மவுண்ட்ரோடுல ரெட்டி மோட்டார்ஸ் நம்மளதுதான் சாமி.'
'பாப்பாக்கு கூட்டினு போய் ஏ பண்டி காவாலோ செலக்ட் மட்டும் பண்ண சொல்லு.'
'நாளைக்கே டெலிவரி பண்ணிடலாம்.’
‘லேப்டாப் சாயந்திரம் நம்ம மேனேஜர் ஊட்டாண்ட கொண்டு வந்துடுவான்.’

'நீ ஒன்னும் செய்யொத்து சாமி. '

'ஆ, லஞ்சா கொடுக்கு மேனேஜர் சேசின பனி.'
'சரியா பார்க்காம டெண்டர் போட்டுட்டான்.'
'நேத்தே பார்ட்டில உங்க பாஸ் கிட்ட பேசியாச்சி. ஒன் அவர்ல அவர் ரூம்ல இருப்பேன்.'
'நீ ஒன்னும் எழுதாத டெண்டர் ஃபாரம் உள்ள அனுப்பினா போதும் 'என்றான். 

ரெட்டியை கண்ணுக்குள் பார்த்தபடி, ரெட்டி நோக்கு காண்ட்ராக்டும் தெரியலை. காண்டக்டும் சரியில்லை. மரியாதையா எழுந்து போறியா? விஜிலன்ஸுக்கு ஃபோன் பண்ணவா என்றபடி ஃபோனை அருகில் இழுத்தார்.
 

'புத்திலேனி வெதவா!  சம்பளம் தீஸ்கோனி ஏம் பதுகுதாவைய்யா. ச்ச்சாவு போ!'
'ரெட்டி எவரனி நீக்கு சூபிஸ்தானு'
என்று கருவியபடி வெளியே போனான் ரெட்டி. எதற்கும் இருக்கட்டும் என்று அவன் டெண்டர் ஃபார்மை ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்தார். ஆவணங்களைத் தயார் செய்து, ப்ரோஸீடிங் எழுதி, அதிகாரியின் ரூமுக்கு கொண்டு செல்லும்போது மணி ஒன்றாகி விட்டிருந்தது.  சாரி சார்! லஞ்ச் டைம். லாக் பண்ணி வச்சிட்டு போங்கோ என்று கொடுத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார்.

சேஷனை ஒரு கேலியான பார்வையோடு கடந்தான் ரெட்டி. சற்று நேரத்தில் அதிகாரியும் அவனும் வெளியே கிளம்பினர். ரெண்டரை மணியளவில் இரைதின்ற பாம்புபோல் வீங்கிய வயிற்றைத் தூக்க முடியாமல் சுமந்து கொண்டு அதிகாரியும் ரெட்டியும் மீண்டும் வந்தனர்.

அடுத்த கட்ட வேலையில் மும்முரமாயிருந்த சேஷனை, அதிகாரி அழைப்பதாகப் ப்யூன் வந்து சொன்னான். என்ன எழவெல்லாம் வந்து சேருமோ தெரியலையே க்ருஷ்ணா, என்றபடி அதிகாரியின் அறைக்குச் சென்றார் சேஷன். 

‘என்ன சேஷன் சார்? என்னமோ நீங்க ரொம்ப சின்சியர்னு கேள்வி பட்டிருந்தேன். சார் உங்க மேல ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்காரு.'

'ரிடையர் ஆகப் போற நேரத்துல உங்க புத்தி இப்படி கெட்டு போகணுமா சார்?’ ‘நீ ஜல்லி சப்ளை பண்ற ஆளு, உனக்கும் இந்த டெண்டருக்கும் என்ன சம்மந்தம்?’

‘எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு எழுதுவேன், க்ரெடென்ஷியல் இல்லைன்னு எழுதுவேன்.’
‘நான் எழுதறதுதான்.’
‘மேல இருக்கற மடப்பயலுக்கு எங்க என்ன பார்க்கணும்னு கூட தெரியாது. பணம் வாங்க மாட்டேன்.’
‘ஒரு ஸ்கூட்டியும் ஒரு லேப்டாப்பும் வாங்கி வீட்டுக்கு அனுப்புன்னு கேட்டிங்களாமே!’  
‘சேஷனாவது அப்படியெல்லாம் கேக்கறதாவதுன்னு திட்டிட்டேன். ’
‘சாப்பிட்டு வந்து, நீங்க குடுத்த பேப்பரை பார்த்தப்போதான் தெரிஞ்சது. எவ்வளவு கேவலமா நடந்துட்டிருக்கீங்கன்னு.’
‘மொட்டைக் கையெழுத்து போடுவேன்னு நினைச்சீங்களா?’
‘அதெப்புடி சார், கையெழுத்து போட்ட ஒரு டாகுமெண்ட்ல கையெழுத்து இல்லை, செல்லாதுன்னு எழுதி சார் டெண்டரை விட்டுட்டு மத்ததை ரெகமண்ட் பண்ணுவீங்க? ’
‘நான் உங்கள நம்பி கையெழுத்து போட்டிருந்தா என் வேலை போயிருக்குமா இல்லையா?’
‘இங்க பாருங்க, கையெழுத்து இருக்கா இல்லையா?’
‘ஏன் சுழிக்காம விட்டு, கையெழுத்து இல்லைன்னு நோட் எழுதுனீங்க?’

திகைத்துப் போனார் சேஷன். அவர் சர்வீஸில் இப்படி ஒரு ஆளைக் கண்டதில்லை. 

‘புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.'
'போங்க சார். கொண்டு போய் வேற மாத்தி எழுதி கொண்டு வாங்க.'
'இங்க பாருங்க கம்ப்ளெயிண்ட். '
'நீங்க அது சரியில்லை, இது சரியில்லைன்னு எழுதினா, எனக்கு வேற ப்ரூஃபே வேணாம். இந்த கம்ப்ளெயிண்ட்டே போதும். ஆக்‌ஷன் எடுக்க வேண்டி வரும் என்றார். '

நிற்க முடியாமல் உதறியது சேஷனுக்கு. 

'சார்! அதிகாரியாச்சேன்னு பார்க்கிறேன். என் லீவ் சர்வீஸ் இருக்காது உங்களுக்கு.'
'என்னையா மிரட்றீங்க? '
'ஏதோ ஒரு டவுட் வந்துதான், நான் இந்தாளு ஃபார்மை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கேன். இப்போவே விஜிலன்சுக்கு கொடுக்கிறேன். ஆனதைப் பார்த்துக்குங்க' என்றார் சேஷன்.

'சாரி மிஸ்டர் சேஷன். இவ்வளவு மோசமா பிஹேவ் பண்ணுவீங்கன்னு நினைக்கலை.'

'ஐ ஹேவ் நோ அதர் கோ!'
'ஐ ஹேவ் டு ஸஸ்பெண்ட் யூ.'
'நீங்க இப்படியே வீட்டுக்கு போலாம். '
'உங்க டேபிள்ள உங்க பெர்சனல் திங்ஸ் இருந்தாச் சொல்லுங்க, ஐ வில் விட்னஸ் அண்ட் ஹேண்ட் ஓவர் டு யூ.'
'யூ ஷுட் நாட் டச் எனி அஃபிஷியல் டாகுமெண்ட்ஸ். '
'இந்தாங்க உங்க சஸ்பென்ஷன் ஆர்டர். '


'உட்கார்ந்து  நிதானமா சார்ஜ் ஷீட் படிச்சி பார்த்து அக்னாலட்ஜ் பண்ணுங்க.' 

'மீன் வைல் ஐல் கெட் யுவர் திங்ஸ்'
என்று வெளியே சென்றவன் ஜெராக்ஸ் காபி ஃபார்மை மட்டும் கொண்டு வந்தான். படிக்கப் படிக்க மயக்கம் வரும் போலிருந்தது சேஷனுக்கு. இத்தனை வருட சர்வீஸில் இப்படி ஒரு பேச்சு வாங்கியதில்லை. அதுவும் நேர்மையாய் இருந்தும் எவ்வளவு கேவலமாக பேசிவிட்டான். லஞ்சப் பேர்வழி என்ற பேர் போதாமல், ப்ளாக் மெயில் செய்ததாக வேறு ஜோடித்தால் என்ன செய்வது?

'ஓக்கே ரெட்டி. ஹியரீஸ் த ஜெராக்ஸ்.'

'உங்க கம்ப்ளெயிண்ட் மட்டும் இருக்கட்டும்.' 
'சாலா தேங்க்ஸண்டி. ஈவினிங் பார்ட்டில மீட் பண்ணுவோம் 'என்றான். ரெட்டி, 


'அய்காரு! இப்புடு சூச்சுகுன்னாவா?'
'செப்பின மாட்ட கேக்க மாட்டய்யா மீரு.'
'ஒக சின்ன தப்பு நடந்து போச்சின்னு வந்து கேட்டா சரினி சொல்லாம இப்புடி அசிங்கப்பட்டு நிக்கறியேய்யா. '
'உன்ன மாதிரி எவ்வளவு பேரை பார்த்திருப்பேன். பொழைக்க தெரிஞ்சிக்க ஸாமி' என்று கிளம்பினான்.


'அட, குடு சார் அந்த சார்ஜ் ஷீட்டை. என்னமோ மினிஸ்டர் கிட்ட இருந்து அப்ரிஸியேஷன் பண்ணி வந்தா மாதிரி இந்த டென்ஷன்லையும் அத படிச்சிக்கிட்டு' என்று வெடுக்கென பறித்துக் கொண்டு நடந்தான்.  

அதிகாரி, 'நீங்க அரை நாள் லீவ் போட்டுட்டு போங்க சேஷன். நான் வேலையை முடிச்சிடுறேன்'என்றார். 

சர்வமும் தளர்ந்து குறுகிப் போய் அமர்ந்திருந்தார் சேஷன். சுற்றி நடப்பதும் இருப்பதும் ஏதுமறியாமல் ஒரு வெறுமை. சம்மந்தமின்றி எங்கிருந்தோ மென்மையாக கோப்புவின் குரலில்  ‘ஜயதி ஜயதி பாரதமாதா’ கேட்டது.
~~~~~~~~~~~~~~~~~~

Saturday, October 2, 2010

கேரக்டர் - ரமணி..


ரமணி..ரமணியை முதன் முதலில் பார்த்ததே ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவில். பார்த்ததுமே பிடித்துப் போனது. காரணம், ஜெய்சங்கர் மாதிரி அலை அலையான கிராப்பும், டையும். நேரில் பார்த்தது அவர் கலியாணத்தில். சரியான உயரம், அம்மாவைப் போல் நல்ல நிறம், வாய் கொள்ளாச் சிரிப்பு, அலைபாயும் கண்கள், வெடுக் வெடுக்கென்று காகம் போல் தலை திருப்பிப் பார்க்கும் மேனரிசம். 

திருமணம் ஆனகையோடு பூனாவுக்கு மாற்றல் வாங்கியிருப்பதைச் சொல்லி குஜராத்தை விட பூனா அருகில் என்ற சமாதானத்தோடு புதுக்குடித்தனம் போன மணப்பெண்னிடமிருந்து வந்த முதல் கடிதம் வீடெங்கும் சிரிப்பலையை உண்டாக்கியது. ‘சரியான கஞ்சனப்பா. ரெண்டு பேருக்கு 4 கத்திரிக்கா போதும், கைப்பிடி வெண்டைக்காய் போதும்னு குத்து மதிப்பா வாங்கறதாவது பரவால்லைப்பா. மனுஷன், கடை கடையா ஏறி இறங்கி எந்தக் கடையில் கடுகு காரமா இருக்குன்னு தரம் பார்த்து வாங்கறார்’ என்று வந்த கடிதம் தந்த சிரிப்பு அது.

அரிசிப்பஞ்சம் இருந்த காலம் அது. மைத்துனனிடம் சொல்லி, ஹோல்டால் முழுதும் ஒரு மூட்டை அரிசி நிரப்பி, பொங்கல் சீர் செய்ய பூனேக்கு போனார்கள், பெண்வீட்டார். ஊர் சுற்றும் சாக்கில் மருமகனோடு போய் மார்க்கட்டில் பேரம், விலை என்று அலைந்து களைத்த பெரியவர், ‘அஞ்சு பைசா குறைவுன்னு இந்த அலைச்சல் தேவையா மாப்ள? எத்தனை எனர்ஜி வேஸ்ட்’ என்று சொன்னபோது கிடைத்த ஞான வசனம் இது.

“மாமா! பஸ்ல போறோம். ஒரு ரூபா டிக்கட். தொன்னுத்தஞ்சு பைசாதான் இருக்குன்னா கண்டக்டர் விடுவானோ. தொன்னுத்தஞ்சு பைசாக்கு அங்க மதிப்பில்லை. இல்லாத அஞ்சு பைசாதான் பெருசு”.

மாப்பிள்ளை சிக்கனக்காரர் என்று கொண்டாடுவதா? கஞ்சனென்று வருந்துவதா? ஒரு முறை அவரின் பெற்றோருடன் ஹைதையில் பஸ் ஏற, அந்தப் பெண் டிக்கட் எடுத்திருக்கிறார். மாமியாருக்கு கோபம். அவன் வேற எடுத்திருப்பான். நீ எதுக்கு அதிகப்பிரசங்கியாட்டம் வாங்கற என்றவருக்கு மருமகள் பதில் சொல்லவில்லையாம். இறங்கியபின், மருமகள் சொன்னபடி அவர் அம்மா மகனிடம் விசாரித்தாராம்.

‘ஹி ஹி! நான் நேக்கு வாங்கிட்டேனே. இவள் எனக்கும் சேர்த்து வாங்கிட்டாளா? ஒரு டிக்கட் காசு போச்சா’ என்று பதற, மருமகளின் பார்வையை சந்திக்க முடியாமல்,  ‘இவன் இன்னும் மாறாம அப்படியே இருக்கான். நீயாவது மாத்தப்படாதா?’ என்ற முனகலே பதிலாயிற்றாம்.

 குன்னூரில் இருந்தபோது, ஏதோ டெஸ்ட் எடுக்க உதவ, பாய்ச்சர் இன்ஸ்டிட்யூட்டில் பணி புரியும் பக்கத்து வீட்டுக்காரர்,  இவரை டெஸ்டுக்கு அழைத்துக்கொண்டு போய் பட்ட பாடு இருக்கிறதே. சொல்லத் தரமன்று.

ரெண்டு விலையுயர்ந்த கண்ணாடி டிஷ் கையில் கொடுத்து சேம்பிள் கேட்டிருக்கிறார்கள். நண்பர் இவரை அனுப்பிவிட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டு, சற்று கழித்து லேபில் போய் கேட்க ஆளைக் காணோம். மாலையில் வீட்டுக்கு வந்து,  ‘அம்மா! அந்த சாம்பிள் டிஷ்ஷாவது வாங்கிக் கொடுங்கம்மா. இல்லையென்றால் என் சம்பளத்தில் பிடித்துவிடுவார்கள்’ என்று அழமாட்டாக் குறையாகக் கெஞ்ச, சேம்பிள் கொடுக்காமல், எஸ்ஸாகி சினிமாவுக்கு போய்விட்டு வந்தவரிடம், கெஞ்சிக் கூத்தாடி பேண்ட் பாக்கட்டிலிருந்த டிஷ்ஷை வாங்கி கொடுப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அது ஊட்டியோ, ஜம்முவோ மனைவியோடு வந்து மனைவியோடு ஊருக்குப் போன வரலாறே இல்லை. ரிசர்வேஷன் வேஸ்ட். நாலு ரயில் மாறிப்போனா என்னாயிடும் என்று அன்ரிசர்வ்டில்தான் பயணிப்பார் தனியாக.

நாளை என்ன சமையல் என்று கேட்க வேண்டும். கத்தரிக்காய் சாம்பார், வாழைக்காய் கறி, பூண்டு ரஸம் என்று சொரிந்து சொரிந்து யோசித்து சொல்லுவார். திரும்பவும் காலையிலும் கேட்க வேண்டும். வாழைக்காய் கூட்டு, கத்தரிக்காய் கறி, சீரக ரஸமென்று மாறும். 

பீமன் மாதிரி ரமணி. போஜனப் ப்ரியன்.  எத்தனை முறை வந்தாலும், அதே வீடானாலும், ‘ஏண்டி! கெழக்கு எது?’ என்று கேட்டு திசை பார்த்துதான் சாப்பிட அமர்வார். உப்பு போதவில்லை என்றால் சேர்த்து சாப்பிடுவது சகஜம். மனுஷனுக்கு புளிப்பு போதவில்லை என்றால், பொறுமையாக, வென்னீரில் கொஞ்சம் புளி கரைத்து சேர்த்துக் கொண்டு சாப்பிடுவார். அதிகமானால் வென்னீர் விட்டு இளக்கிக் கொள்வார். கறி ப்ரமாதம். சாம்பார் ஃபஷ்ட்க்ளாஸ். ரஸம் ஏ ஒன் என்ற சிலாகிப்புக்குக் குறைவிருக்காது. யார் சமையல் என்று கேட்டு,  ‘நண்ணா இருந்தது! அன்னதாதா சுகீ பவா’ என்று வாழ்த்தவும் செய்வார்.

சரி! சிக்கனமாக இருப்பதில் தவறில்லைதான். மனுஷனுக்கு தமிழ்நாடும், ஆந்திராவும் பிடிக்காது. பெரும்பாலும் வடமாநிலம்தான். காரணம் என்ன தெரியுமா? சோம்பேறி. வேலையில் நாட்டமில்லை. வட நாடு என்றால் சூப்பரிண்டண்டிடம் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டால், இவர் முடிக்காமல் இழுத்தடிக்கும் வேலையை முடித்துவிடுவார். 

சில நாட்களில் மட்டம் போடுவாராம். ஏன் முடியலையா என்ற மனைவியின் கேள்விக்கு, ‘பக்கத்து சீட்டுக்காரி சனியன் 2 நாள் லீவு போட்டுட்டாள். அவள் வேலையும் எனக்கு சேரும். அதுக்கு வேற தனியா காசு கொடுக்கணும் தண்டம்’ என்று சம்பளமில்லாத விடுப்பானாலும் எடுப்பார். 

மூன்று வருடத்துக்கு ஒரு முறை மாற்றல் தவறாது என்பதால், இரண்டு வருடத்திலேயே தேடி யாரும் போகாத ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்டு விடுவார்.  அதற்கு சொல்லும் காரணம் அபாரமாய் இருக்கும். ‘அவனே போட்டா ஏதாவது தண்ணியில்லாத காட்டுக்கு போடுவான். நாமளா பார்த்து கேட்டுண்டா நல்லது. எப்புடி இருக்குமோ என்னமோன்னு திகைப்பிருக்காது பாரு’ என்பார்.

மாற்றலின் போது ஒரு முறை 4 மணிக்கு கிளம்பி 6 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டிய கட்டாயம். டிஃபனும் சாப்பாடும் ஹோட்டலிலா. வேஸ்ட் என்று பிடிவாதமாக காலைச் சமையலுக்கு வேண்டியதை விட்டு மற்றவற்றை கட்டச் சொல்லி, ஒன்பது மணிக்கு சாப்பிட்ட பிறகு லாரியை அழைத்து வருகிறேன் என்று போனவரை ஆளைக் காணோமாம்.

டிபார்ட்மெண்ட் லாரியாதலால் அவன் நேரத்துக்கு வந்து, அம்மணி இந்தாளை நம்பினால் கஷ்டம் என்று எல்லாவற்றையும் ஏற்றி பார்ஸல் ஆஃபீஸில் புக் செய்துவிட்டு வீடு வர மணி ஒன்று ஆகிவிட்டதாம். பூட்டியிருந்த வீட்டின் முன், கடுங்கோபத்துடன் நின்று கொண்டு, ‘பொறுப்பிருக்கா? எங்க போய் தொலைஞ்ச. எப்போ பார்ஸல் அனுப்பி, எப்போ கிளம்பறது? லாரிக்காரனும் வந்த பாட்டைக் காணோம்’ என்று எகிறி, பூட்டைத் திறந்தபின்  ‘ஹி ஹி! நீயே அனுப்பிட்டியா? பேஷ் பேஷ்!!’ என்ற சிலாகிப்போடு ஒரு வழியாய் ட்ரெய்ன் பிடித்தார்களாம்.

லாரி கூட்டி வரப் போகிறேன் என்று போகும் வழியில் மார்னிங்ஷோ பார்த்துவிட்டு அரக்க பறக்கப் போய், லாரி போயாகி விட்டது என்றதும் போட்ட சீன் அதுவென்றால், ட்ரெய்ன் ஏறி அமர்ந்ததும் ‘ஸ்ஸ்ஸ்ஸப்பா! ஒவ்வொரு வாட்டியும் ட்ரான்ஸ்ஃபர்னா இந்த சாமான் சட்டி தூக்கறது பெரும்பாடு’ என்று சலித்துக் கொண்டது மெகா சீனா இல்லையா?

மனுசனுக்கு சாவென்றால் பயம். வஞ்சனையே இல்லாமல், மாமனார், மாமியார், தாய், தந்தை ஒருத்தர் சாவுக்கும் பிணம் எடுக்கும் வரை போனதேயில்லை. சாப்பிட உட்கார சாஸ்திரம் பார்க்கும் மனுஷனுக்கு இதற்கு மட்டும் சாஸ்திரம் உதவாது.  

காரியம் பண்ணும்போது புரோகிதர், கெஞ்சிக் கூத்தாடி, ‘இங்க பாருப்பா! குறைஞ்ச பட்சம் சங்கல்பம், எங்கப்பாக்கு, எங்கம்மாக்குன்னு வர மந்த்ரங்களெல்லாமாவது நீதான் சொல்லியாகணும்’ என்று மல்லுக் கட்டியும், மந்திரம் சொல்லாமல் வடிவேலு மாதிரி சொல்லியாச்சு சொல்லியாச்சு என்று சொல்லியே கடுப்பேத்தினாராம்.

மனுசனுக்கு உடம்புக்கு வந்து விட்டால்  மனைவியை விட மருந்துக் கடைக்காரன் பாடு திண்டாட்டம். டாக்டர் பத்து மாத்திரை எழுதினால் சீட்டைக் கொண்டு போய் நீட்டி, இது எதற்கு என்று கேட்டு, டாக்டர் சரியான நோவுக்குதான் மாத்திரை கொடுத்திருக்கிறாரா என்று உறுதி செய்து கொள்வார்.  பிறகு ரெண்டே ரெண்டு மாத்திரை கேட்பார். இல்லைங்க ஒரு கோர்ஸ் முழுசா எடுக்கணும் என்றால், இந்த மருந்து கேக்கலைன்னா அவர் மாத்தி எழுதி குடுப்பார். நீ திரும்ப எடுத்துப்பியா என்று டரியலாக்குவார். ரெண்டு மூன்று மாத்திரைகள் என்றால் எது, எதற்கு என்று கேட்டு, வலி மாத்திரை வேணாம். கொஞ்ச நேரம்தான் வலி தெரியாது. எதுக்கு வேஷ்ட் என்பார்.

ஆண்டிபயாடிக் எழுதிவிட்டால் போச்சு. என்னதிது ஒரு மாத்திரை இவ்ளோ காஸ்ட்லி. சீப்பா இல்லையா? ரெண்டு மாத்திரையா போட்டுக்கலாம் இல்லையா? அதைக் கொடு என்று மல்லுக் கட்டுவார். மாத்திரைன்னா அளவா இருக்க வேணாமா, சோழி சோழியா இவ்ளோஓஒ பெருசு பண்ணா எப்புடி முழுங்கறது என்ற கேள்விக்கு மருந்து கடைக்காரன் என்ன சொல்ல முடியும். 

ஆனாலும் ஒன்று. மனுஷன் நேத்து ஒரு மாதிரி. இன்னைக்கு ஒரு மாதிரி என்ற பேச்சுக்கே இடமில்லை இவரிடம்.  ஆயிற்று எழுபது வயது. கொஞ்சமும் மாறாமல் அன்றைக்கு இருந்தாற்போலவே இன்னும் இருக்கிறார். இப்போதெல்லாம் கடைக்குப் போகாவிட்டாலும், மாரி முத்து கடைல கேட்டியா? எவ்ளோ சொன்னான். செட்டியார் கடையில சல்லிசா இருக்குமே? அங்க கேட்டியோன்னோ என்று மனைவியிடம்  ‘Mock பேரம்’  டிவி பார்த்தபடியே தொடர்கிறதாம். 
*****