Sunday, May 22, 2011

பொத்திக்கிட்டிருந்தா உத்தமம்..

மதிப்பிற்குரிய கலஞ்ஜர் அவர்களுக்கு,

    கலஞ்ஜர் என்பது உங்களைக் கிண்டல் செய்வதற்காகச் சொல்லப்பட்டதல்ல. கட்சி கட்சி என்று கஞ்சிக்கு வழியில்லாவிட்டாலும் உங்களைப் பாசமுடன் அழைக்கும் சாமானியத் தொண்டனால் அப்படித்தான் அழைக்கப்படுகிறீர்கள். வெள்ளிக்கிழமை உங்களை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது வருத்தத்தை விட கோபம் மேலோங்கியது. இன்று உங்கள் வழக்கமான பாணி சுய கேள்வி பதிலைப் படித்ததும் உங்களுக்கு வேண்டியதுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்த புகழ்பெற்ற பராசக்தி வசனத்திலிருந்தே இரு வரிகளைக் கடனாக எடுத்துக் கொள்கிறேன், இதற்கும் காசு எதிர்பார்க்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு.

    //உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். //

    ஓட்டுப் போடும் வயது வரும் முன்னரே ‘சூரியன் சின்னத்தப் பார்த்து போடுங்கம்மா ஓட்டு’ என்று நாலு தெரு சுத்தி, நடுமுதுகில் அடிவாங்கி ஒரு வேளை சோறு மறுக்கப்பட்டவன். உங்கள் ‘இதயத்தைத் தந்திடண்ணாவை’க் கேட்டுக் கேட்டு அழுதவன். திமுக படிப்பகத்தில் கலைந்து கிடக்கும் பத்திரிகைகளை அடுக்கி வைத்துக் காத்தவன். உங்கள் அரைநாள் உண்ணாவிரதம், மற்றும் காங்கிரசுக்கு கட்சியை தாரை வார்த்த கொடுமைகளைச் சகிக்காமல் கடந்த இரண்டு தேர்தல் தவிர திமுகவுக்கே ஓட்டளித்தவன். எல்லாவற்றையும் விட குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரை உள்ள தர்பைப் புல் சம்மந்தமுடைய பார்ப்பான்.

    நெஞ்சுக்கு நீதி ஐந்து பாகங்கள் எழுதிவிட்டேன். இது அடுத்த பாகத்துக்கான முன்னுரை அல்லது ‘மன ஓலம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏப்ரல் 27க்குப் பிறகு நீங்கள் எழுதவேண்டியதெல்லாம் ‘நெஞ்சுக்கு அநீதி’ என்பதை எப்போதாவது உணராமல் இருந்திருக்கமாட்டீர்கள். இந்த நிலையிலும் உங்கள் தோல்விக்கு வேறெதுவும் காரணமில்லை, தேர்தல் கமிஷன் எனும் பிரம்மராட்சச பூதமே என்பீர்களேயானால், உங்கள் நெஞ்சுக்கு மட்டுமல்ல, உங்களை நம்பி உழைத்த தொண்டனுக்குமே அநீதி செய்கிறீர்கள்.

    //பதினான்கு வயதில் ‘பனகல் அரசரைப் படித்து....வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான் தொடும் மாளிகைக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக் கொள்ள நினைத்ததும் இல்லை, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை.//

    இதை எழுதும்போது உதட்டை ஒரு ஓரமாக சுழித்து குறும்புத்தனமாக சிரிப்பீர்களே அது ஏனோ கவனத்துக்கு வந்து தொலைகிறது. இது அரசியல் வியாதியின் பாலபாடமல்லவா? டாஸ்மாக் சரக்கில் மட்டையான நிலையிலும் கூட உங்கள் விசுவாசத் தொண்டனாயினும் இதற்கு என்ன பதில் வரும் என்பதை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என நம்ப முடியவில்லை.

    //அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டுகாலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டுகாலம் ஆட்சிக்கு முதலமைச்சராக இருந்த கால கட்டங்களில் எதுவுமே சம்பாதிக்கவில்லையா என்ற கேள்விக்கு //

இப்படி ஒரு கேள்வி எழுப்பி புளுகத் துணிவில்லை; சம்பாதித்தேன் என்று சொல்லி அதற்காக திரைப்படங்களில் சம்பாதித்ததாக ஒரு கணக்குக் கொடுத்தீர்கள் பாருங்கள், அட அட!! இப்போது கூட உங்களுக்காக கூவி ஒடுங்கிப் போன வடிவேலுவின் ‘இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது’ என்ற வசனம் கவனம் வரவில்லையா?

பொருளாளராக இருப்பதற்கும், தலைவராக இருப்பதற்கும் கூடவா தனித்தனியாக கட்சியில் இருந்து சம்பளம் தருகிறார்கள்?

‘தாய் சேய் நலவிடுதி’ கட்டினீர்கள் சரி. பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்பு விழா நடத்தினீர்கள் சரி. இந்தத் தராசில் வைத்துப் பார்த்தால் இதைவிட பன்மடங்கு செலவிட்டு நூற்றுக் கணக்கில் தொழிற்கல்விக் கல்லூரிகள் கட்டியவர்கள் பெரிய தியாகிகள். அந்த முதலீடுகள் மக்களுக்காகவே.

அதென்ன தலைவரே 1940களில் வாங்கிய சம்பளத்துக்கு அப்புறம் 2004-2005க்கு போய்விட்டீர்கள்? சரி உங்கள் சம்பாத்தியம், உங்கள் கணக்கு. ஒரு பேச்சுக்கு 1940முதல் 2003 வரை உங்கள் வருமானமும், உங்களைச் சார்ந்தவர் வருமானமும் எவ்வளவு என்று சொல்ல முடியுமா? நிஜமாக சொல்லுங்கள், கடன் வாங்கிப் படம் எடுப்பவன் அல்ல சொந்தப் பணம் சுரண்டல் பணமேயானாலும், பெண் சிங்கத்துக்கும், இளைஞனுக்கும் கொடுக்கப் பட்டதாகச் சொல்லப்பட்ட பணம் தகுமா?

//கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள் உயிரினும் மேலான உடன் பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். //

அருமை அருமை தலைவரே. ஆம் ஆயிரம் ஆயிரம்தான். கூடவே கட்சிக்கு ஒரு துரும்பும் சம்பந்தமற்ற குடும்பம் கிள்ளியெடுத்த கோடிகளை ஒப்பிட முடியுமா?

//ஈழத் தமிழர் நிவாரணத்துக்காக நிதி திரட்டப்பட்டபோது சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை//

இதயம் இனிக்கிறது. கண்கள் பனிக்கிறது. கூடவே குமட்டிக் கொண்டும் வருகிறது.

இந்தக் காலகட்டங்களில் கதை எழுதியே இத்தனை சம்பாதித்தேன் என்றால், அதிலும் கொடுத்தது போக இவ்வளவு இருக்கிறதென்றால் ஆச்சி மனோரமா பாதி தமிழ்நாட்டை வாங்கியிருக்கலாம். குதிரையில் விட்டார். குடித்து அழித்தார் என்றெல்லாம் கூட சொல்ல முடியாது.

அந்தக் கணக்கை வடிவேலு மாதிரி அப்படியே திருப்பிச் சொல்லு என்றால் உங்களாலும் சொல்ல முடியாது எனத் தெரியும்.

//என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ள//

அதெப்புடிங்க எசமான் வருமானம்னு வரும்போது மட்டும் உங்கள் சம்பாத்தியமும், உங்கள் கொடைத்திறனும் மட்டும் சொல்வீர்கள். ஊழல் என்று வரும்போது, தோல்வி என்று வரும்போது மட்டும் குடும்பம் வந்து சேர்ந்து கொள்ளும். ஒன்று வஞ்சம் தீர்க்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் வருமானத்தையும் சேர்த்துச் சொல்லுங்கள். அல்லது ஒரு தனிமனிதனாக கட்சியை இழுக்காமல் அந்த ஊழலுக்கு சப்பை கட்டுவதோ எதிர்ப்பதோ செய்யுங்கள்.

நேற்று ஒரு தோழர் பட்டாசு வெடித்தவர்கள் சாதிவாரி கணக்கெடுத்தாற்போல் சொன்ன கருத்தை ஒரு நேர்மையான உடன் பிறப்புடன் வருத்தத்துடன் சுட்டியபோது தெரியவில்லை. இன்று உங்கள் ‘தர்பைப் புல்’ புலம்பலைப் பார்த்ததும் புரிந்தது. தலைவன் எவ்வழி? தொண்டன் அவ்வழி!!.

நீங்களே கேள்வி கேட்டு நீங்களே வசதிக்கு பதில் எழுதும் வித்தகர் நீங்கள். முடிந்தால் இந்தக் கேள்விகளையும் நீங்களே எழுதி பதில் சொல்லுங்களேன்.

1) எத்தனை வருடமாக மஞ்சள் துண்டு அணிகிறீர்கள்? ஏன்? அணியச் சொன்னவர் ‘தர்பையை’த் தொடாதவரா?
2. பிரார்த்தனை என்று உங்கள் குடும்பத்தார் ஏன் தர்பைக் கோவிலுக்கே போகிறார்கள்? ஒரு சொள்ள மாடனுக்கோ, அய்யனாருக்கோ பொங்கல் வைத்ததாகவோ, கெடா வெட்டோ பத்திரிகையில் வரவில்லையே?
3. இன்னும் என்ன தர்ப்பை எழவு. நீங்கள் தோற்கும்போதெல்லாம் அடிப்பதற்கு என்றே இருக்கிறதே பார்ப்பன இனம். அதன் பாலான உங்கள் காழ்ப்பு உங்கள் சொந்த வெறுப்பா கட்சியின் கொள்கையா? அப்படியானால் திமுகவில் பார்ப்பனர்களுக்கு அடிப்படை உறுப்பினராகக் கூட சேரும் உரிமையில்லை. இதுவரை கட்சிக்காக உழைத்த பார்ப்பனர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். தேர்தலில் பார்ப்பனர்களின் ஓட்டுத் தேவையில்லை எனச் சொல்ல என்ன கஷ்டம்?
4. சொந்தக் கருத்தே எனினும், உங்கள் வைத்தியத் தேவைக்கோ, வக்கீல் தேவைக்கோ, உங்கள் குடும்பத்தினரின் பிஸினஸ் தொடர்பு கூட பார்ப்பனர் அல்லாதவரோடு மட்டுமே என்று சொல்ல முடியுமா?
5. அட குறைந்தபட்சம் பார்ப்பனத் தலைவர் அல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டு என்றாவது சொல்லுவீர்களா?

ஒரு விதத்தில் ராஜபட்சே மேல். வெளிப்படையாக அவன் குடிமக்களில் ஒரு இனத்துக்கு எதிரி என்று தெரியும். தமிழனாயினும் ஒரு இனத்தினை இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் தான் ஆண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.

உண்மையாகவே நீங்கள் வேண்டிப் பெற்ற அண்ணாவின் இதயத்துக்கு மதிப்பிருந்தால், கோடானு கோடி தொண்டர்களை நினைத்தாவது கட்சித் தலைமையை ஸ்டாலினிடம் ஒப்படைத்து ஒதுங்கி இருங்கள். பேராசிரியர் போன்ற ஒரு சிலரின் வழிநடத்தலில் தி.மு.க. தழைக்கும். இல்லையேல் உங்களுக்கு நம்பிக்கையான ஒரு தர்ப்பையைப் பிடித்து யாருக்கும் தெரியாமல் கட்சிக்கு எள்ளும் தண்ணியும்  விடுங்கள்.


இப்படிக்கு
இத்தனை காலம் உங்களுக்கு வாக்களித்த ஒரு தர்ப்பை.

31 comments:

ஜோதிஜி said...

இது நிச்சயம் மணிமகுடம் சூட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்த கட்டுரைக்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்ள் தலைவரே.

ராஜ நடராஜன் said...

இன்னுமா சாத்தானுக்கு வேதம் ஓதுறீங்க?

நம் பணி தேர்தலோடு முடிந்து விட்டது.

Unknown said...

சரியான செருப்படி நண்பரே ஒவ்வொரு தி மு க தொண்டனும் படிக்க வேண்டிய பதிவு

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தர்ப்பைப் புல் பற்றிய புலம்பல் கலஞ்சருக்குப் புதிதும் அல்ல. புரியாததும் அல்ல.

அவர் வென்றால் ஒரு வாதமும் தோற்றால் ஒரு வாதமும் என என்றோ எழுதிவைத்து ஒரு கிளிப்பிள்ளையின் குரலாய் காலங்காலமாய் ஒலித்துக்கொண்டிருப்பத்துதானே பாலாண்ணா?

தன் சொத்துக்கள் பற்றியும் ஊழல் குறித்தும் தான் சொல்வது எத்தனை பிதற்றல் என்பது அவருக்கே தெரியாதது என்றால் எத்தனை பைத்தியக்காரத்தனமான நிர்வாகி நம் முதல்வராக இருந்திருக்கிறார் என்று நொந்துகொள்வதைத் தவிர வேறென்ன செய்வது?

ramalingam said...

இவர் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அடுத்த ஐந்தாண்டும் அதிமுகதான்.

ஸ்ரீராம். said...

அருமை. "இன்னுமா உலகம் நம்மளை நம்புது" கேள்வி ஒவ்வொரு தொண்டனுக்கும் எழும் கேள்வியாக இருக்கலாம். தர்ப்பைகளின் குறிப்பும் ரசித்தேன். அவர் இதையெல்லாம் படிக்க மாட்டாரே...அதுதான் குறை!

பெசொவி said...

அவர் பேசற பேச்சுக்கெல்லாம் அவர் வாயில தரப்பைய வச்சுதான் பொசுக்கனும்! இதுக்குப் போயி ஒரு பதிவா, பாலா சார்!

பெசொவி said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

What is this, Bala Sir?
:)

நசரேயன் said...

ஜோதிஜி,நடாஜி மற்றும் அண்ணாஜி ஏதும் உதவி தேவையா ?

creativemani said...

இதெல்லாம் கேட்டா, பூனைக்குட்டி வெளிய வர்றது, புலிக்குட்டி உள்ள ஓடறது'ன்னு வேறே சொல்வாங்க சார்..

நிகழ்காலத்தில்... said...

\\ஒரு விதத்தில் ராஜபட்சே மேல். வெளிப்படையாக அவன் குடிமக்களில் ஒரு இனத்துக்கு எதிரி என்று தெரியும். தமிழனாயினும் ஒரு இனத்தினை இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் தான் ஆண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.\\

முழுக்க முழுக்க உண்மை, பசுத்தோல் போர்த்திய நரியாய் இத்தனை வயதுக்குப்பின்னும் இப்படி இருக்கக்கூடாதுதான்:(

ராஜ நடராஜன் said...

//ஜோதிஜி,நடாஜி மற்றும் அண்ணாஜி ஏதும் உதவி தேவையா ?//

நசர்ஜி!இது வ்ரைக்கும் 2G தான்!இதென்ன 3G!அண்ணாஜியும் ஆட்டத்துல கலந்துகிட்டதாலா:)

பிரபாகர் said...

அய்யா... உங்களின் கேள்விகளும் வாதங்களும் மிக மிக நேர்மயானவை. நேர்மையற்றவர்களிடம் இதற்கெல்லாம் பதிலையா எதிர்பார்க்கமுடியும்?...

பிரபாகர்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//ஒரு விதத்தில் ராஜபட்சே மேல். வெளிப்படையாக அவன் குடிமக்களில் ஒரு இனத்துக்கு எதிரி என்று தெரியும். தமிழனாயினும் ஒரு இனத்தினை இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் தான் ஆண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. //
சரியா சொன்னீங்க

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//பொத்திக்கிட்டிருந்தா //
தலைப்பு தான் சற்று ....

vasu balaji said...

bandhu has left a new comment on your post "பொத்திக்கிட்டிருந்தா உத்தமம்..":

தேவையானபோது குழைவதும் தேவையில்லாதபோது குலைப்பதும் இவர் நன்றியில்லாதவர் என்றே மறுபடி மறுபடி நினைக்கத்தோன்றுகிறது!

அஹோரி said...

காமெடி பீச கண்டுகாதீங்க. அவரு கேள்வி பதில் பாணிய படிச்சி அதுக்கு இவ்வளவு பெரிய பதில் சொல்லரீங்களே ... உங்களுக்கு என்ன ஆச்சு ? அல்லகைகளே அத கண்டுகறதில்ல ... போங்க போங்க ...

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

இந்த ஒரு பதிவிலேயே ஹாட்ரிக் அடித்திருக்கிறீர்கள்..!

நன்றி..!

பொன் மாலை பொழுது said...

நாயின் வாலை நிமிர்த்தவா முடியும்? தெரிந்த கதைதானே. இதை எல்லாம் மக்கள் நம்புவதாக இன்னமும் அவர் நினைதுக்கொண்டுள்ளதுதான் புரியவில்லை.

Jayadev Das said...

நீங்க நிஜமாவே இத்தனை வருடம் தி.மு.க. வுக்கு ஓட்டு போட்டவர்தானா? ஏன் கேட்கிறேன்னா, இவ்வளவு தெளிவா புட்டு புட்டு வைக்கும் ஒருத்தர் இந்த மாதிரி கட்சியை ஏற்றுக் கொண்டிருக்கவே முடியாது என்பதுதான். நான் தெரியாமத்தான் கேட்கிறேன், இந்த அண்ணாதுரை என்றா ஆள் யார் சார்? விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதிரியும் தெரியல, காமராஜர் மாதிரி ஒருத்தரை கவிழ்திட்டு ஆட்சியைப் பிடித்திருந்தாலும், தமிழகத்திற்கு சொல்லிக் கொள்ளும் படியாக எதுவும் செய்த மாதிரியும் தெரியவில்லை, தனக்குப் பின் ஒரு நல்ல தலைவரை விட்டுச் சென்ற மாதிரியும் தெரியவில்லை. போயும் போயும் கருணாநிதி மாதிரி ஆளை கொண்டாந்து தமிழக மக்கள் தலையில் கட்டியது தான் மிச்சம். தி.மு.க. என்ற கட்சிக்கு கருணாநிதி குடும்பம், அவரது வட்டம், மாவட்டங்களின் குடும்பம் ஆகியோர் நலனுக்கு கொள்ளையடிப்பது என்ற கொள்கையைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அண்ணாதுரை, கருணாநிதி இரண்டு பேருமே தேனொழுகப் பேசுபவர்கள், பொய்யையும் புரட்டையும் விற்பவர்கள், ஆனாலும் எதைப் பார்த்து தமிழன், இவர்களுக்கு கொள்கை என்று இருப்பதாக நம்பினான் என்று தெரியவில்லை. எதை வைத்து இவர்களுக்கு ஓட்டு போட்டான் என்று புரியவில்லை. நீங்கள் போட்டேன் என்கிறீர்கள், அப்படி என்ன சார் கண்டீங்க இவனுங்களுக்கு அத்தனை வருஷம் ஓட்டு போடுவதற்கு? ஒரு தேர்தலிலேயே ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை இவர்கள் வடிகட்டின அயோக்கியர்கள் என்று?

Anonymous said...

அருமை

Anonymous said...

hahaha.எதுடா சாக்கு என்று அலையும் மட்ட மிருகங்களுக்கு எதுவும் உறைக்காது

ஈரோடு கதிர் said...

பொத்திக்கிறதுக்கு இப்போ மஞ்சத் துண்டு கூட இல்ல போல!
மஞ்சத் துண்டு இனிமே செல்லாது, வெள்ளைத் துண்டுதான்னு எந்த பகுத்தறிவு சொல்லுச்சோ தெரியலையே! :(

தாராபுரத்தான் said...

/இது நிச்சயம் மணிமகுடம் சூட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்த கட்டுரைக்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்ள் தலைவரே./யானும் அவ்வண்ணமே கோரும்...அப்பன்.சுனா..பானா

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி:)

குறையொன்றுமில்லை. said...

உங்க
ளை வலைச்சரத்தில் அறிமுகம்
செய்திருக்கேன் நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

vasu balaji said...

நன்றிங்க லக்ஷ்மி.

'பரிவை' சே.குமார் said...

//இது நிச்சயம் மணிமகுடம் சூட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்த கட்டுரைக்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்கள்//

yes...

rajamelaiyur said...

Super super super . . . No words to write . .

குணசேகரன்... said...

இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தைரியமாக கருத்துரைத்த உங்களுக்கு என் வாழ்த்து.
http://zenguna.blogspot.com/