Wednesday, January 26, 2011

எலி புராணம்.




அப்பாவுக்கும் எலிக்கும் அப்படி ஒரு ஜென்மப் பகை இருக்கக் காரணமென்ன என்பது எனக்கு இன்று வரை புரியாத ஒரு புதிர். பின்னாளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்த பிறகு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்களைப் பார்க்க நேர்ந்ததில் அவர்களுக்கிடையேயான பகைமையை விட நீயின்றி நானில்லை என்ற உறவு புரிந்தது. அப்புறம் ஏனோ அப்பாவின் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஜெர்ரியின் முகமும் சேர்ந்தே நினைவுக்கு வரும்.


ஒரு மழைக்கால காலையில் அலுவலகம் செல்வதற்காகத் தயாரான அப்பா உத்திரத்தில் மாட்டியிருந்த குடையை எடுக்கப் போனார். குடையென்றால் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அதன் கீழ் ஒரு குடும்பமே நனையாமல் நடக்க முடியுமளவுக்கு பெரிய குடை. மூங்கில் தண்டும் உலக்கைக்குச் சற்றே குறைந்த சைசில் குறுக்குக் கம்பிகளும், திறந்தால் நட்சத்திரம் போல் பல துளைகள் வழியே வெளிச்சமும் தெரியும் குடை அது. தவலையைக் கவிழ்த்துப் போட்டு குடையை எடுக்க அடிப்பகுதியைத் தொட்ட அப்பா 'உய்க்' என்று ஒரு வினோத சப்தத்துடன் தவலை ஒரு மூலைக்கும் அவர் தரையிலுமாக கிடக்க அவர்களுக்கிடையேயான மோதலின் அறிமுகம் நடந்தது.


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக, ஒரு போராளியின் வெறியுடன் ஸ்டூலின் மேல் தவலையைப் போட்டு ஏறி, 'தவலையைப் பிடிடி' என்று அம்மாவுக்கு உத்தரவு போட்டு கரகாட்டக் காரனின் நேர்த்தியுடன் ஏறி நின்றபோது அம்மா தவலையை ஒரு கையிலும் தாலியை ஒரு கையிலும் பிடித்தபடி நின்றிருந்தாள். ஒரு வழியாக குடையின் வாய்ப்பகுதியை சேர்த்துப் பிடித்து, உத்திரத்திலிருந்து எடுத்து வெற்றிக் களிப்பில் அங்கிருந்தே குதித்து தலைசுத்தி தடுமாறினாலும் 'நம்மகிட்டயேவா' என்ற அப்பாவின் தோரணையும், 'ஆம்பிள்ளே சிங்கம்' என்று அம்மாவின் கண்ணில் தெரிந்த பெருமையும் காலத்தால் அழியாத ஓவியம்.


குடையை அவர் பிடித்திருந்த இடத்துக்கு அரையடிக்கு கீழே காட்டி அம்மாவைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி அதற்குக் கீழே தான் சணலால் கட்டி வாளித் தண்ணீரில் முக்கிவிடுவதாகவும் சொன்னபோது அம்மாவின் பார்வையில் அப்பா வில்லனாகிப் போனார். ஆனாலும், மனம் கோணாமல் 'நீங்க அப்படியே புடிச்சிருங்க. நான் கட்டுறேன்' என்று அம்மா, குடையில் புடைத்திருந்த பகுதிக்கு சற்றே மேல் சணலால் இருக்கக் கட்டியிய பிறகு வாளித் தண்ணீரில் முக்கிவிட்டு வெளிவரும் குமிழிகள் அடங்கக் காத்திருந்தார் அப்பா. கட்டிய குடைதானே என்று எலி ஜல சமாதி அடைவதைக் காண, நான், அம்மா, அக்கா, தம்பி என்று காத்திருந்தோம்.


சுறா படத்தில் விஜய் கடலுக்குள்ளிருந்து ராக்கெட் மாதிரி கிளம்புவாரே அப்படி எலி குடையை ஓட்டை போட்டு தண்ணீருக்குள்ளிருந்து எங்களையெல்லாம் விட்டு சரியாக அப்பாவின் மேல் பாய்ந்தது . அப்பா 'அய்யோ' என்று அலறித் துள்ளி முழங்கையை சுவற்றில் இடித்துக் கொண்டு கரண்ட் கம்பியில் அடிபட்ட காகம் போல் விழ, இப்போது எலி 'நம்ம கிட்டயேவா' என்று ஒரு பார்வை பார்த்து வீட்டுக்குள் ஓடி மறைந்தது.


அன்றைக்கு அலுவலகத்துக்கு மட்டமடித்துவிட்டு கந்தசாமி கோவிலுக்குச் சென்று எலிப் பொறி வாங்குவதாக முடிவானது. அதிலும் பொறியை எடுக்க வரும் எலியின் தலையை அழுத்திக் கொல்லும் ஸ்ப்ரிங் பொறிதான் என்று அப்பா கொலை வெறியோடிருக்க, சமரச சன்மார்க்கத்தின் பிரதிநிதியாக மரப் பொறிதான் என்று அம்மா முடிவெடுக்க எப்போதும் போல் 'தாய்க்குப் பின் தாரம்' 'தாய் சொல்லைத் தட்டாதே' என்ற முதுமொழிகளை சேர்த்துப் புரிந்து வைத்திருந்த அப்பா மரப் பொறியுடன் திரும்பினார். எலி புண்ணியத்தில் மழைக்கால மாலையில் சுடச் சுட மசால்வடை எங்களுக்கு வாய்த்தது. அதிலும் முதல் வடை எலிக்கு என்று அப்பா எடுத்து வைத்த பாசத்தை நாங்கள் கண்டதேயில்லை.


வடையை வைத்துவிட்டு விளக்கெல்லாம் அணைத்துவிட்டு வைகுண்ட ஏகாதசி போல் காத்திருக்க, சொல்லி வைத்தாற்போல் அப்பாவின் மேல் ஏறி ஓடியது எலி. காத்திருந்தும் படக்கென்ற சத்தம் வராததால் பொறுமையிழந்து விளக்கைப் போட்டுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, எலி வடையை லவட்டிக் கொண்டு ரிடர்ன் ஜர்னியில் அப்பாவுக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டுப் போனது. பிறகு நெய்தடவி சுட்ட வெங்காயம், சுட்ட தேங்காய்ச் சில்லு என்று விதவிதமாக வைத்தபோதும், தினமும் வந்து நேரத்துக்கு லவட்டிக் கொண்டு போய்விடும்.


ஒரு ஞாயிறு பகல் போதில், அதற்கும் போரடித்ததோ என்னவோ, ஸ்டவ் துடைத்துக் கொண்டிருந்த அப்பாவின் முதுகு வழியேறி காதில் கிசுகிசுத்து துடையில் நின்று ஸ்டைலாய் பார்க்க பதறி, அவர் விட்ட உதையில் மண்ணெண்ணெய் சீசா சிதற, அடுத்த நொடி நான் ஸ்டூல் மீதும் தம்பி அலமாரியில் இரண்டாம் படியிலும் தொத்திக் கொண்டு சிரிக்கத் தொடங்கினோம். 'அடியே கதவைச் சாத்தடி' என்று உத்தரவு போட்ட கையோடு துணி உலர்த்தும் கழியைத் தூக்கிப் பிடித்தபடி டைகர் உட்ஸ் கோல்ஃப் மட்டையைப் பிடித்தாற்போல் பிடித்துக் கொண்டு எலியை எதிர் நோக்கினார் அப்பா.


தம்பி, அப்பா இதோ என்று சரியாக அவர் பின்புறம் காட்ட வீசிய வீச்சில் தாத்தா ஃபோட்டோவின் கண்ணாடி தெறித்தது. எலி எப்படியோ சரியாக அப்பாவின் பின்புறம் தலை நீட்டுவதும், அப்பா கண்ணை மூடிக் கொண்டு கழியைச் சுழற்றுவதும், அதைக் கண்ட எங்களின் கிக்கிக்கீ சிரிப்பிலும் கடுப்பாகிப் போனார் அப்பா. அல்லாட்டத்தில் அவிழ்ந்து தன் பங்குக்கு கடுப்பேற்றிய வேட்டியை தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொள்ள வாய்ப்பளித்து 'இன்று போய் நாளை வாராய்' பாவனையில் எலியும் பார்த்தபடி இருந்தது.


'இப்ப நான் ரெடி', என்று அப்பா தலைக்கு மேல் தடியை உயர்த்த, 'நானும் ரெடி' என்று எலியும் எதிர் நோக்க ஒரே போடு போட்டார் அப்பா. அடி பட்ட எலி 'ஹம்மா' என்று கத்துமா என்ற குழப்பத்தில் இருந்தோம் ஒரு நொடி. பவுன்ஸர் பாலை சிக்ஸருக்குத் தூக்க முயற்சித்து பேட் நழுவி ஸ்டம்பில் விழுந்த பேட்ஸ்மேன் போல், என்னேரம் எலி பாய்ந்துவிடுமோ என்ற பயத்திலோ என்னவோ குச்சி பின்பக்கம் விழ, கூட்டிப் பிடித்திருந்த கையிரண்டு மட்டும் கவட்டியில் நச்சென்று இறங்க அலறியது அப்பாதான். 'விட்டேனா பார்' என்று எலியும் பாய, மூச்சுப் பிடித்த குரலில், 'அடியே கதவைத் திறடி' என்ற குரலுக்கு சமயம் தெரியாமல், 'சிக்கிடிச்சா' என்றாள் அம்மா.


விழுந்த திட்டில் பதறினாலும், உஷாராக கதவின் பின் ஒளிந்து கொண்டாள். எலியோ, 'இப்ப போறேன், நெக்ஸ்ட் மீட் பண்றேன் ரேஞ்சுக்கு' ஒரு பார்வை பார்த்து, ஒரு எலி அடிக்க (பிடிக்க) தெரியாத குடும்பத்தில் இருப்பது இழுக்கு என்று ஓடி மறைந்தது. 

31 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

சூர்யா ௧ண்ணன் said...

ஹா ஹா ஹா ... டாம் அண்ட் ஜெர்ரி பார்த்தது போல இருக்கு.. தலைவா!

க ரா said...

welcome back sir :)

Unknown said...

Hello sir. Welcome back.

Unknown said...

Excellent.

பிரதீபா said...

அருமையான ரசனையுள்ள எழுத்து.. சாதாரண நிகழ்வை நகைச்சுவையேற்றி அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

ராஜ நடராஜன் said...

புதுவருசத்துல இதுவரைக்கும் ரெட்டை மட்டுமேவா!நான் தான் உள்ளேன் அண்ணா சொல்லாமல் இருந்துவிட்டேன் என்று நினைத்திருந்தேன்:)

ஆரூரன் விசுவநாதன் said...

ஆசானே கலக்கல்....

sriram said...

கலக்கல் பாலாண்ணா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஈரோடு கதிர் said...

எலியாரோட பேரன் பேத்திகள் வந்து போறாங்ளா!!!!?

http://erodesupremelions.blogspot.com/2011/01/blog-post.html

'பரிவை' சே.குமார் said...

ரசனையுள்ள எழுத்து.

Unknown said...

சார், எலி பிடிக்க நான் முயன்றபோது என் நிலைமையும் அதே தான். முதல்ல எல்லோரும் சொன்ன cheese வைச்சு 4 or 5 இடத்தில பொறி வைச்சேன். வாட் எ coincidence , மரத்திலப் பண்ணுது தான். காலையிலப் பார்த்தா அழகா வழிச்சு தின்னுட்டுப் போயிடுச்சு. வேற வழி, 4 or 5 இடத்தில கோந்து கொட்டிய tray வைச்சேன். எலி பாமிலி மாட்டிடுச்சு.

Unknown said...

கதிர்,

சுவடுகள் நல்லா வந்திருக்கு. எலி புராணம் இதழ் வெளியீடு வரைக்கும் காத்திருந்திருக்குது. அருமை.

மாதேவி said...

" 'சிக்கிடிச்சா' என்றாள் அம்மா" சிரித்து முடியவில்லை.

Chitra said...

ரொம்ப நாள் கழித்து, செம காமெடியான பதிவோட திரும்பி வந்து இருக்கிறீங்க... கலக்கல்!

Muruganandan M.K. said...

எலி வேட்டையை சூப்பராக சொல்லியிருக்கிறீர்கள்.
வயிறெல்லாம் வலிக்கிறது
சிரித்ததனால்.
எனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.

Mahi_Granny said...

எலி புராணம் அருமை. தொடர்ந்து அடிக்கடி எழுதுங்கள்.

ஸ்ரீராம். said...

//"அதன் கீழ் ஒரு குடும்பமே நனையாமல் நடக்க முடியுமளவுக்கு பெரிய குடை. "//

ஆமாம்...இப்போது அபபடி எல்லாம் வருவதில்லை போலும்.

//"தவலையை ஒரு கையிலும் தாலியை ஒரு கையிலும் பிடித்தபடி நின்றிருந்தாள்."//

:))

திரும்ப வந்த டெண்டுல்கர் மாதிரி சிக்சர் அடித்து விட்டீர்கள். வரிக்கு வரி ரசிக்க முடிந்தது.

Bharathi said...

ROFL :)

ரிஷபன் said...

எங்கள் ஆபிசில் எலிப்பொறியில் வைத்த கேண்டீன் வடையை அது சீந்தக் கூட இல்லை.. அதற்கு ஃபைல்தான் ரொம்ப பிடிச்சிருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

”எலி புராணம்” படிக்க நல்ல நகைச்சுவையாக இருந்தது. பாராட்டுக்கள்.

”எலிஸபத் டவர்ஸ்” என்ற தலைப்பில், இதே போன்று நான் எழுதிய நகைச்சுவை கதையொன்று “தேவி” வார இதழில் தொடர்ந்து இரு வாரங்களுக்கு வெளி வந்தது.

அதை விரைவில் என் ப்ளாக்கில் வெளியிட உள்ளேன்.

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

பாலா சார்,
நான் இன்று முதல் உங்கள் பதிவுகளை ஆபீசில் வைத்து படிக்ககூடாது என முடிவு எடுத்து உள்ளேன் .
பக்கத்து சீட்டுக்காரர் ஒரு மாதிரியா பார்க்கிறார் .

மிக அருமையான சொல் நடை .

காமராஜ் said...

anna nalama

பவள சங்கரி said...

சார் ரொம்ப நாளா காணோமே, நலமா.

VELU.G said...

நல்ல காமெடிங்க

எலி மறுபடி மீட் பண்ணிச்சா இல்லையான்னு இன்னொரு பதிவு போடுங்களேன்

வெங்கட் நாகராஜ் said...

எலிக்கே போரடிச்சு வெளியேறிடுச்சா!.. நகைச்சுவையாய் இந்த விஷயத்தினை சொன்ன உங்களுக்கு நன்றி!

பாட்டு ரசிகன் said...

அருமை...
வாழ்த்துக்கள்..

காமராஜ் said...

தவளையை ஒரு கையிலும் தாலியை ஒரு கையிலும்.க்ளாஸ் அண்ணா

Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள்..!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சார்வாள் அப்ப ’எலி’மெண்ட்ரி ஸ்கூலாக்கும்.....

vinthaimanithan said...

பேசாம ஜெமோ கதைமாதிரி 'அறம்'பாடியே அழிச்சிருக்கலாம்ல?!

ஆமா... எனக்கென்னவோ கதையில வர்ற அப்பா கேரக்டர் நீங்கதானோன்னு ஒரு சம்சயம்.