Monday, June 17, 2013

பக்கோடா புராணம்

பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல. மனிதன் கண்டு பிடித்த அமிர்தம் அது. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பது  சொலவடை. மாங்காய் எல்லா நேரத்திலும் கிடைக்குமா என்ன? மனிதனின் தீனிக் கண்டுபிடிப்பில் ஆகச் சிறந்தது பக்கோடா.

பக்கோடாவில் முந்திரிப்பருப்பு பக்கோடா, வேர்க்கடலை பக்கோடா, பனீர் பக்கோடா, காலி ஃப்ளவர் பக்கோடா என்று பல இருந்தாலும் மேட்டுக்குடி மனிதரிலிருந்து டாஸ்மாக் குடிமகன் வரை காற்றில் மிதந்து வரும் வெங்காயப் பக்கோடா மணத்துக்கு வாயில் வெள்ளம் பொங்காத மனித ஜந்து எதுவுமே இருக்க முடியாது.

பக்கோடா என்ற ஒன்று கண்டு பிடிக்கப்படாமலிருந்தால் தானே சமைக்கிறேன் என்ற பெயரில் வைக்கும் கலர் தண்ணீர் சோற்றை பேச்சிலர்கள் தின்றிருக்க முடியுமா? அதற்குச் சற்றும் குறையாத தரத்தில் ஒரு குழம்பை வைத்துவிட்டு உருளைக்கிழங்கு ஃப்ரை உங்களுக்கு பிடிக்கும்னு செஞ்சனா. அப்பதான் ஃபோன் பண்ணீங்களா? லைட்டா தீஞ்சிடுச்சுங்க என்று 7வது டிகிரி பர்ன் என்ற அளவுக்கு நிலக்கரி பொரியலிலிருந்து கொலைக்கேசில் தப்புவித்து தம்பதியரைக் காப்பாற்றும் சமய சஞ்சீவியல்லவா அது?

ஏசி ரூமில் உட்கார்ந்து அள்ளிச்சாப்பிட்டால் ஏற்படக்கூடிய பின் விளைவுக்கு பயந்து கொரிப்பது முந்திரிப் பக்கோடாவாக இருக்கலாம். ஆனால் அது முழுமையான பக்கோடா ஆக முடியாது. தனியாகச் சாப்பிட்டாலும் பக்கோடாவாகச் சாப்பிட்டாலும் கடைசி கடலை சொத்தையாகவே அமைவது ஏன் என்பது எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்கப்படாத ரகசியம் என்பதால் சரக்கு கசப்பா சைட் டிஷ் கசப்பா என்றறிய முடியாத போதத்திலிருப்பவர்களுக்கான வேர்க்கடலைப் பக்கோடாவையும் பக்கோடா என்றேற்பதற்கில்லை.

பல்லிருக்கவன் பகோடா திங்கான் என்று தனக்காக ஒரு பழமொழியையே கொண்ட ஒரே தின்பண்டம் பக்கோடாதான், பகோடாவைத் தின்னவும் முடியாமல் அதற்காக ஏங்குவதை தவிர்க்கவும் முடியாமல் தவிப்பவர்கள் செய்த கூட்டுச்சதி காலிஃப்ளவர் மற்றும் பனீர் பக்கோடா. மேற்படி எதுவுமே மூலப் பொருளோடு சுருதி சேராமல் பக்கோடா மாவு டேஸ்ட், மூலப் பொருள் டேஸ்ட் என்று அபஸ்வரமான கலியாணக் கச்சேரி மாதிரிதான் இருக்கும்.

ஒரு தேவ ரகசியம் சொல்லட்டுமா? கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கும் மிகப் பிடித்தது பக்கோடாவாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் பள்ளியிலேயே விடைத்தாளைக் கொடுக்கும் ஆசிரியர் பக்கோடா மடிக்கத்தான் லாயக்கு என்று ஆசீர்வதித்துக் கொடுப்பார். இதப் பகடி என்போர் சயனைட் கவுஜ சரஸ்வதி, கல்வியைத் தன்பேரில் சுமந்திருக்கும் வித்யா என்கிற விதூஷ் தன்னுடைய படைப்புக்களை பக்கோடா பேப்பர் என்ற வலை மனையில்தான் மடித்துத் தருகிறார் என்பதற்கு வேறேதும் மறுப்பு சொல்லக் கூடுமோ?

‘ன்னாச்சி’ என்று திரும்பத் திரும்ப வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தவர்கள், அறிவார்களா? இது ஒன்றும் புதுமையில்லை. மதராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் ‘அப்பா பக்கோடா’ என்ற ஒரே வசனத்தை படம் முழுதும் பேசி பக்கோடா காதர் என்ற மாபெரும் கலைப் பொக்கிஷத்தை அளித்த ஒரே தின்பண்டம் பக்கோடாதான்.

சும்மா கண்ட மானிக்கு வெங்காயம் நறுக்கி, கடலை மாவில் பிரட்டி எருமைமாடு நடந்து கொண்டே சாணி போடுவது போல் வாணலிக்குள் விழுவதல்ல பக்கோடா. பக்கோடாவின் பெயரைக் கெடுத்து

“நசுகு பித்து பித்தி நா கொம்ப கூல்ச்சேவு
டர்ருமனி பித்தரா நா பாக்ய சாலுடா”
 என்று கவி வேமனவை அலறவைத்த சதி அதில் எழவெடுத்த பூண்டைப் போடுவது.

நல்ல கடலை மாவில் (கோதுமை அரைத்த பிறகு அரைக்கலாகாது) அளவாக அரிசி மாவு சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், புதிதாய்க் காய்ச்சிய சுட்டெண்ணெய் (பஜ்ஜி, அப்பளம் எல்லாம் காய்ச்சி ட்ரான்ஸ்ஃபார்மர் ஆயில் கணக்காய் கரேலென்றிருக்கும் சுட்டெண்ணெய் அல்ல) கொஞ்சம் விட்டு உப்பு போட்டு பிசிறி வைத்து விட்டு, வெங்காயம் நீள நீளமாய் நறுக்கி உதிர்த்து விட்டு பச்சை மிளகாய் வட்ட வட்டமாக மெல்லிசாய் நறுக்கிஅதில் போட்டு கலந்து, பின்னும் சிறிது எண்ணெய் ஊற்றிப் பிசிறிவிட்டு பத்து நிமிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நீர் விட்டு பிசைந்து கெட்டியான பதத்திலேயே பின்னும் ஒரு பத்து நிமிடம் விட்டு, கருவேப்பிலை உருவிப் போட்டு, கொஞ்சமே கொஞ்சம் ஒரு சிட்டிகைப் பெருங்காயப் பொடியிட்டு தண்ணீர் அளவளவாகச் சேர்க்கவேண்டும். ஒரு கை மாவெடுத்து பிசிறி விட்டால் மொத்தையாக கொஞ்சம், தூள்தூளாக மீதி விழக்கூடாது. அப்படிப் பிசிறுவது பரதநாட்டிய அடவு மாதிரி அத்தனைக் கலை நயத்தோடும் பதமாகத் தண்ணீர் சேர்ப்பது ஒரு விஞ்ஞானியின் கவனத்தோடும் செய்யப்பட வேண்டியது. Practice brings perfection.

புகையாமல் நன்றாகச் சுட்ட எண்ணெயில் ஒரு சுண்டைக்காய் மாவு போட்டால் ஒலிம்பிக் வீரர் பெல்ப்ஸ் மாதிரி போட்ட வேகத்தில் மேலே வந்து சுவாசிக்க வேண்டும். அதே சூட்டை கடைசி வரை மெயிண்டெய்ன் செய்வதும், பக்கோடா, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாமே பொன்னிறத்தில் வரும்போது சுவாசம் மட்டுப் பட்டிருக்கும் போது சரியான பதத்தில் எடுப்பதும் பழக்கத்திலேயே வரும்..

பக்கோடா செய்வது மட்டுமல்ல. தின்பதும் கலையே. சுடச்சுட ஹாவு ஹாவு என்று தின்பதோ நமர்த்துப் போய் தின்பதோ பக்கோடாவுக்குச் செய்யும் அவமரியாதை. கை பொறுக்கும் சூட்டில் ஒவ்வொன்றாக வாயிலிட்டால் பொறபொறவென உதிர்ந்து மெத்தென்ற உள்ளொளி காட்டும். பச்சை மிளகாய், வெங்காயம், கடலைமாவு எல்லாம் உமிழ்நீரின் தம்பூராச் சுருதி சேர்ந்து ஆத்மானுபவம் அளிக்கும்.

கடைப் பக்கோடா என்பது வணிக நோக்குடன் செய்யப்படுவது. அது ஒரு ரசிகனுக்கு உகந்ததல்ல. அத்தகைய பக்கோடாவைத் தின்பதன் மூலம் ஒருவன் உப்புசம், ஏப்பம், லிஃப்ட், மீட்டிங்கில் பங்கேற்க முடியாத அவஸ்தை, மண்ணைத் தின்றது போன்ற புறவயமான அனுபவங்களை மட்டுமே பெறவியலும். நல்ல பக்கோடா என்பது செவ்விலக்கியத்துக்கு ஒப்பானதாகும். ஒரு தேர்ந்த பக்கோடாக் கலைஞர் ஒரு யோகியின் அர்ப்பணிப்போடு, யாகத்தின் கவனத்தோடு, கலை ரசனையோடு செய்யும்போது கிட்டும் தரிசனம். அதை உண்ணும் ரசிகனும் அதற்கான தகுதியை உருவாக்கிக் கொள்ளும்போதே பக்கோடா முழுமை பெறுகிறது.

மாறாக வணிகநோக்கு பக்கோடாக் கலைஞனை மட்டுமல்ல அது மடிக்கும் பேப்பரையும் காலம் புறந்தள்ளி ஏதோ ஒரு கடையில் முழங்கை வரை மாவைக் கலக்கி வேர்வையும், தூசுமாய் கரேலென்று வழித்து விட்டு வருடக்கணக்காய் ஊறிய சோடாமாவை ஊற்றி ட்ரான்ஸ்ஃபார்மர் எண்ணெயில் பஜ்ஜி போடவும், அதைப் பிழிந்து விட்டெறியவும் வைக்கும்.

Tuesday, January 22, 2013

தினத் தந்தி - ஒரு வாசிப்பனுபவம்

பள்ளியில் படிப்பேறவில்லை என்று ஒன்னாப்புலேயே நிறுத்திக் கொண்டவர்களைக் கூட எழுத்துக் கூட்டி படிக்கவைத்த பெருமை வாய்ந்த பத்திரிகை என்பதோடு கடும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இசப்கோல் கூட தரவியலாத நிவாரணத்தை அளித்து தமிழரின் உணவோடும் உணர்வோடும் கலந்துவிட்ட பத்திரிகை என்றால் அது தினத்தந்திதான். எல்லாப் பத்திரிகைகளையும் போலன்று தினத்தந்தி வாசிப்பு. அது ஒரு நவரசானுபவம்.

இன்றைய தினத்தந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி கர்நாடகா மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட உத்தரவிட்ட முதலமைச்சரின் செய்தி. படிக்கும்போதே வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட்டு நஷ்ட ஈடு வாங்கி உண்மையான தமிழ்ப்புத்தாண்டுக்கு முன்பாக ஏழை விவசாயிகளுக்கு பங்கிடப்படும் என நம்பிக்கை தருவதோடு, இழுத்தடிப்பதற்கு இது ஒன்றும் சொத்துக் குவிப்பு வழக்கில்லை என்ற உண்மையும் தாயுள்ளத்தோடு செயல்படும் முதல்வரின் நடவடிக்கை மனதோடு மலத்தையும் இளக்குவதாக உள்ளது.

இதற்கெல்லாம் அசையமாட்டோம் என்று பிடிவாதக்கார மலச்சிக்கல் ஆசாமியா நீங்கள்? இதோ தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வும், ரெயில் கட்டண உயர்வு காரணமாக கூடுதல் கட்டணம் செலுத்த சிறப்பு கவுண்டர்கள் அமைத்துள்ள செய்தியும் எப்பேற்பட்ட பாறையையும் அசைத்துப் பார்க்கக் கூடியது.

அடுத்த பக்கத்தில் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டு பிடிபட்ட செய்தி ஒரு கையால் கலங்கும் வயிற்றைப் பிடித்துக் கொண்டே நம்மிடம் இந்த மாதக் கடைசியில் எங்காவது 500/1000ரூ நோட்டு இருந்து தொலைக்குமோ என்ற பீதியைக் கிளப்புகிறது..

கல்லூரிக்குப் போன மாணவி எரித்துக் கொலை, கலெக்‌ஷனுக்கு போன தனியார் நிறுவன ஊழியரை வெட்டிக் கொள்ளை, டெல்லி கற்பழிப்பு வழக்கில் விசாரணை ரகசியமாக நடைபெறும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் செய்தி, மாமனார் நடுரோட்டில் படுகொலை, மனைவி மாமியாரும் வெட்டிச் சாய்ப்பு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீர் தற்கொலை, மகளுடன் கிணற்றில் குதித்த தாய் சாவு, ரெயிலில் அடிபட்டு மாணவி உள்பட இரண்டு பேர் சாவு போன்ற இழவுச் சிறப்புச் செய்திகள்..பக்கத்துக்குப் பக்கம் விரவிக்கிடக்கும் இத்தகைய உற்சாகமூட்டும் செய்திகள் அதிகாலையில் கொடுக்கும் புத்துணர்ச்சி சொல்லத் தரமன்று.

இன்றைய பத்திரிகையின் சிறப்புச் செய்திகள் இரண்டு. 27ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் திருமணம் நடந்தால் தூக்கில் தொங்குவேன் என்று மாப்பிள்ளை மிரட்டும் காரணம் என்னவென்றே தெரியவில்லை என்று முதல் பத்தியில் கமிஷனரிடம் மனு கொடுக்கும் பெண் இரண்டாம் பத்தியில் மணமகனின் தாய் அந்தப் பெண் ஏற்கவே ஒருத்தரைக் காதலித்து வீட்டை விட்டு ஓடியதை வேறொருத்தியுடன் திருமணமான அவரின் முன்னாள் காதலனே மணமகனிடம் தெரிவித்ததாக கூறியதை நேர்மையோடு ஒப்புக் கொண்டு அவன் மீதும் போலீஸில் கேஸ் கொடுக்க இருப்பதாகவும், முருகனை என் கணவனாக கனவு கண்டுவிட்டேன், எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் அவரைக் கைப்பிடித்தே ஆவேன் என்று கண்ணீர் பொங்க ஆவேசப் பட்டதைப் படிக்கையில் நமது கண்ணிலும் கண்ணீர் வழிகிறது. சவாலில் ஜெயித்து முருகனை மணப்பாரா என்று (என்பதை வெள்ளித் திரையில் காண்க என்று பாட்டு புத்தக பாணியில் எழுதாத குறையாக) எழுதியிருக்கும் ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அடுத்ததாக கிளுகிளுவோடு நகைச்சுவையும் தளும்பும் வால்பாறை தலைமை ஆசிரியர் வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த காட்சி இணைய தளத்தில் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மூணாப்பு சிறுவர்களை வைத்து நடத்திய மறியல் செய்தி படத்துடன் வெளியிட்டது. சிறுவர்கள் முகத்தில் ததும்பும் சிரிப்பைப் பார்த்தால் செய்தியின் தாக்கம் புரிகிறது. இதற்கு முன் பாலியல் கல்வியால் சிறுவர்கள் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போகத்தான் முடியும் என்ற ஆசிரியரின் தலையங்கத்தை நினைவு கூர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

விளையாட்டுப் பகுதியில் டென்னிஸ் போட்டி புகைப்படங்கள் வாசகர்களின் மனதில் அதெப்படி டென்னிஸ் போட்டி கேமிராக்கள் பெண் ஆட்டக்காரர்களை மட்டும் டாப் அல்லது பாட்டம் ஆங்கிளில் மட்டுமே புகைப்படம் எடுக்கிறது என்ற புதிரைத் தோற்றுவிக்கும்.

இறுதியில் சினிமா விளம்பரங்கள் பகுதிக்கு வருகையில் காதல் வலி, கில்லி பசங்க, நேசம் நெசப்படுதே, ஆதி பகவன், பத்தாயிரம் கோடி போன்ற திரைக்காவியங்களுக்கு அண்ணன் உண்மைத்தமிழன் விமரிசனம் எழுதிவிட்டால் என்று நினைக்கும்போதே உபாதை நீங்கி உடல்பறப்பது போன்ற உணர்வு திண்ணம்.

வெறும் 400 காசில் இணையற்ற இந்த அனுபவங்களுக்குப் பின்னால் தினத்தந்தி அளிக்கும் சேவை சொல்லில் அடங்காது. ஒரு சில இங்கே:

*தினத்தந்தி இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு பயலும் பஜ்ஜி சாப்பிட முடியாது.

*சாப்பாடு கட்டிக் கொண்டு போய் பீச்சை குப்பை மேடாக்கியதில் பெரும்பங்கு தினத்தந்திக்கே.

*தினத்தந்தியை துண்டு துண்டாக கிழித்து பெட் பாட்டில், ஃப்ளாஸ்க் ஆகியவற்றில் போட்டு நீறூற்றி ஒரு இரவு ஊறவைத்து அடுத்த நாள் நன்றாகக் குலுக்கி கழுவிப் பாருங்கள். கறை என்பதே இருக்காது.

*துணிகளில் எண்ணெய்க் கறை இருப்பின் தினத்திந்தி பேப்பரை அதன் மேல் வைத்து அயர்ன் செய்தால் கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

Tuesday, November 20, 2012

இணையத் தமிழ்ச் சங்கம்

முருகன்: தந்தையே தமிழகத்தில் மீண்டும் தமிழுணர்வு தழைத்தோங்குகிறது தந்தையே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததொருகாலம். இப்போது டொட்காம் வைத்து வளர்க்கிறார்கள். தந்தையீர் உதவ வேண்டும்.

சிவன்: என்ன வேண்டும் கேள் மகனே.

முருகன்: புலவர்கள் அனைவருக்கும் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் கொடுத்து மீண்டும் தமிழகத்தில் பிறக்கச் செய்ய வேண்டும்.

சிவன்: ஆகட்டும். யாரங்கே! சித்திரகுப்தனிடம் புலவர்கள் அனைவருக்கும் ஒரு வாரம் க்ராஷ் கோர்ஸ் கொடுத்து ஜிமெயில் கணக்கு ஆரம்பித்து பூலோகத்துக்கு அனுப்பு.

முருகன்: நன்றி தந்தையே.

அவ்வையார்: ப்ளாகும் ப்ளஸ்ஸும்
                             ட்வீட்டும் முகநூலும் இவை
                             நான்கும் கலந்துனக்கு
                            ஸ்டேடஸ் உடுவேன்
                            துங்கக் கரிமுகத்துத் தூமணியே
                            நீ எனக்கு அன்லிமிடட் ப்ராட் பேண்ட் தா!
விநாயகர் : அவ்வையே! உன் அன்புக்கு மெச்சினோம்.

முருகன்: அவ்வையே! உனக்கு இண்டர்நெட் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்து தமிழ் வளர்க்க சொன்னது நான். நீயோ அண்ணனிடம் டீலிங் பேசுகிறாய். தமிழ்ப் பண்பாட்டைக் காட்டிவிட்டாயல்லவா! நீ விடும் ப்ளஸ்ஸெல்லாம் கைய புடிச்சி இழுத்தியா ஆகக் கடவது.

அவ்வை:முருகா! குமரா! என் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும்...

முருகா: அவ்வையே! போதும் உன் சமாதானம். நான் உன்னை ப்ளாக் செய்துவிட்டேன். நீ டேக் பண்ணாலும் எனக்கு மெசேஜ் வராது.

அவ்வையார்: இதுவும் கடந்து போகும்.

அவ்வையார்: வள்ளுவரே! ஏன் வாட்டமாய் இருக்கிறீர்?

திருவள்ளுவர்: என்னத்தைச் சொல்ல சகோ! என் நிலமை இப்படி ஆயிருக்க வேண்டாம். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என்று குறளெழுதினேனாம். பாலியல் குற்றத்தில் பிடிக்கப் போகிறார்கள் என்று திருமூலர் சொல்கிறார்.

அகநாழிகை: கவலை வேண்டாம் வள்ளுவரே. நீர் அறம் பொருள் மட்டும் அப்டேட் பண்ணும். அது ஆவின் பாலை விட மட்டமாக இருக்கும். காமத்துப்பால் காண்ட்ராக்ட் போகன் என்று கோத்து விடுவோம்.

வள்ளுவர்: நன்றி கவிஞரே.

அவ்வையார்: ஹி ஹி. திருவள்ளுவரே பழைய படிக்கும் பாதில உடைஞ்ச பென்சில் ஊக்கு மாதிரி செய்யுள் எழுதாதீரும். செய்யுளெல்லாம் சீந்துவார் இல்லை. கவிஞருக்குதான் மவுசு.

அகர முதல
எழுத்தெல்லாம்
ஆதி பகவன்
முதற்றே
உலகு

இப்புடி எழுதணும். சிரமம்தான். நான், நாலடியாரெல்லாம் அப்பவே இப்படி.

போகன்:: அவ்வையே கர்வம் வேண்டாம். அமுதம் கங்கையிடம் அப்ரசண்டியாகி கவிதை எழுதப் பாருங்கள். நீங்கள் ஒரு கவுஜ ப்ளஸ் விடுவதற்குள் 50 கவுஜ ஃப்ளீட்டே விடுவார்.

அவ்வையார்: ஆ! தொல்காப்பியரே! இதைக் கேட்பார் இல்லையா? இலக்கணம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா?

தொல்காப்பியர்: அட அப்டி ஓரமா குந்தும்மா! நானே கடுப்புல இருக்கேன். இலக்கணம் பிலாக்கணம்னு

அவ்வையார்: தொல்காப்பியரே! என்ன மொழி இது? தமிழ் போலிருக்கிறது. ஆனால் ஒன்றும் புரியவில்லை..

தொல்ஸ்: இப்ப புரியுதா? தமிள் இழமை வாய்ந்தது. தழ தழவெண்று செளித்தோங்குவது. பழ்ழம் கண்டு பாயும் நீர் போல் நம் மனதை நிரப்பி கழிப்பிக்கச் செய்வது...

அவ்வையார்: அய்யோ தொல்காப்பியரே. தமிழன்னை இந்த நிலையிலா இருக்கிறாள்?

தொல்ஸ்: இன்னாது? ஒரு கும்பலே வந்து மிரட்டிட்டு போயிருக்கிறார்கள். திருத்து அல்லது திருத்தப் படுவாய்னு. என் ஃபாலோயரைப் பார்த்தாயா? சித்தார்த் ஃபேமிலில மூணு பேர், ஹிட்டன் ஐடில ஜெ.மோ...அவ்வ்வ்ளோதான்

அவ்வையார்: பாவம் நீர். இதோ செம்புலப் பெயநீரார். ஏன் அழுது கொண்டு வருகிறார்?

செ.பெ: அன்னையே! நீரே சொல்லும். யாயும் ஞாயும் எழுதியது நாந்தானே

அவ்வையார்: யார் இல்லை என்றது?

செ.பெ: இதோ இந்தப் பெரியப்ஸ் டைனோஜி சொல்கிறார் எழுதியது வைரமுத்து. பாட்டு போட்டது ரகுமானு. நறுமுகையே நறுமுகையே அவர் எழுதியதை நான் சுட்டு நான் எழுதியது என்கிறேனாம்.

டைனோ: லிங்க் இதோ. நீங்கள் எழுதியதற்கு சுட்டி இருந்தால் கயுவி கயுவி ஊத்துங்கள்.

அவ்வையார்: தொல்காப்பியரே! கயுவி என்றால்

தொல்ஸ்: ஏ கிழவி! ஓடிப் போயிடு. கயுவி கியுவின்னா ப்ளாக் பண்ணிடுவேன்.

அவ்வையார்: நீர் என்ன ஓய் ப்ளாக் செய்வது. இப்போதுதான் தெரிகிறது ஏன் உமக்கு ஃபாலோயர் இல்லை என்று.

ரா சு: தொல்காப்பியரே! உங்கள் நிலை பரிதாபத்துக்கு உரியதுதான். எதற்கும் ஸ்ரீதர் நாராயணனை ஃபாலோ செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போதுக்குன்னு பஞ்சாமிருதத்துல பிரியாணி தயிர்பச்சடி லெக்பீசெல்லாம் கலந்தா மேரி சிலது எடுத்து வச்சிருக்கார். அதுலருந்து நாலு எடுத்து உட்டார்னா தெளிஞ்சாலும் தெளியும். இல்லைன்னா ஞை ஞைன்னு போவலாம்.

சீத்தலை: அய்யாங். ஞை ஞை நானு நானு. சைபர் போலீஸ் இவிங்கள புடிச்சி கேஸ் போடுங்கைய்யா.

இளங்கோவடிகள்: அய்யோ என்னை விட்டு விட்டு விடுங்கள். விட்டு விடுங்கள் (ஓடி வருகிறார்)

அவ்வை: இளங்கோவடிகளே நில்லும். ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள். உங்களைத் துரத்தும் இவர்கள் யார்? ஏன் துரத்துகிறார்கள்?

இளங்கோவடிகள்: அன்னையே! தமிழகத்தில் காவிரி வறண்டு விட்டதென்று தெரியாமல் கர்நாடகம் சென்று அங்கே காவிரியோரம் உட்கார்ந்து மணிமேகலையின் கொள்ளுப் பேத்தியை வைத்து ஒரு காவியம் படைக்க விழைந்தேன். ஒரே ஒரு பாட்டெழுதினேன். இதோ இந்த ஜீவ்ஸ் வெடுக்கென்று காபி பேஸ்ட் செய்து மச்சி இதப் பாரேன் என்று கேவியாருக்கு ஷேர் போட்டார். அந்த மனிதர் பிரித்து மேய்ந்து  ‘மச்சி! இதப் பாருடே’ என்று சுபைருக்கு டேக் செய்தார். மூவரும் சேர்ந்து தளை தட்டுகிறது, கிளை முட்டுகிறது என்று கலாய்க்கிறார்கள்.

சிலப்பதிகாரம் எழுதிய எனக்கா தளை தட்டுகிறது என்று அங்கே போய்க்கொண்டிருந்த ஜ்யோவ்ராம் என்ற ஒருவரிடம் காட்டி நீதி கேட்டேன்.

எப்படிங்க இப்படி மொக்கையா எழுதீட்டு இதைக் காப்பியம்னு வேற சொல்றீங்க என்று சொல்லிவிட்டார்.

அப்துல்லா: அண்ணே அழுவாதண்ணே. அக்கா சொல்லுக்கா. எல்லாம் நம்ம பயகதான். இப்ப என்னாகிப் போச்சு. ஆரம்பமே காப்பியம், ஓப்பியம்னா இங்கல்லாம் ஒத்துக்கிர மாட்டாங்க. அதும் இவிங்க வில்லங்கம் புடிச்சவங்க. மொதல்ல என்கிட்ட குழந்தை கவிதை எழுதப் பழகுங்க. அப்புறம் விதூஷக்காட்ட சேர்த்து விடுறேன். சிலப்பதிகாரத்துல ஒரு பாட்டை எடுத்து போட்டு டிங்கரிங் பண்ணி சயனைட் கவுஜன்னு டேக் பண்ணுங்க. பய புள்ளைங்க யம்மேன்னு தெறிச்சி ஓடுவாய்ங்க.

கம்பர்:மகனே ஜீவ்ஸ்! என்னை மாதிரி கவிஞன் உண்டா என்பாயே. நெட்டு புடுங்கிட்டான். சப்ஸ்க்ரிப்ஷன் கட்டுவாயா என் சடையப்ப வள்ளலே.

ஜீவ்ஸ்: கம்பு மாம்ஸ்! இப்படித்தான் ஒரு கதை சொல்லுவாய்ங்க. உம்பாட்ட படிச்சேன் எனக்கு சந்தோசமா இருந்துச்சு. என்னா எழுத்துடான்னு எழுதுனேன் உனக்கு சந்தோஷமாச்சு. அதோட முடிஞ்சது. நீங்க என்ன பண்றிங்க கேளுங்கள் கிடைக்கும்னு ஒரு க்ரூப்ல சேர்ந்து யார்னா ராஜாவ போய் கேளுங்க.

அவ்வை: சரி வாரும். அதியமான் எனக்காக நெல்லிக் கனி கொடுத்தவன். சப்ஸ்க்ரிப்ஷனா கட்டமாட்டான். மன்ன்ன்ன்ன்ன்ன்னா

அதியமான்: அவ்வையே! மன்னர் மரபெல்லாம் ஒழிந்து நானே மானியத்தில் உயிர் வாழ்கிறேன். உங்களுக்கு என்ன கொடுப்பது? இணையத்தில் அட்வைஸ் மட்டுமே எல்லாரும் தயக்கமின்றி கொடுப்பது பழக்கம். கூகிள் அட் சென்ஸ் விட்ஜட் போட்டு காசு தேத்தப் பாருங்கள். வர்ட்ட்ட்டா..

அவ்வையார்: முருகா! ஞான பண்டிதா. உன் கோபம் தணிந்ததா?

முருகன்: அவ்வையே! ஃபேக் ஐடியில் வந்து புலம்புகிறாயே இது உனக்கு அழகா? இனி என்ன எழுதினாலும் அம்பலவாயறும், ஜாக்கியும் பிழைதிருத்தினால்தான் டொட்காம் ஏற்கும்.

ஜாக்கி: உ.த அண்ணே. சொல்லி வைண்ணே. நாம்பாட்டுக்கு தாதாயிசம் போல...

உ.த: இருய்யா இருய்யா. ஆரம்பிக்காத. என்னாச்சி இப்ப

ஜாக்கி: உங்காளு அநாவசியமா என்ன சீண்ட்றான். ஓ...

உ.த: அய்யோ ஸ்டாப் ஸ்டாப். நான் பாத்துக்கறேன். அப்பனே முருகா இது ரத்த பூமி. நீயும் உங்கப்பனும் சேர்ந்து எதுனா பண்ணி வச்சா நீ ஏண்டா சொம்பு தூக்கிட்டு பஞ்சாயத்து பண்ணலன்னு என்ன கலாய்ப்பாங்க. அப்புடியே இதெல்லாம் எரேஸ் பண்ணிட்டு போ ராசா. ஸ்ஸ்ஸப்பா! நாம சொன்னா எவன் கேக்குறாய்ங்க. 66 ஏ வந்தாதான் அடங்குவானுங்க.