Tuesday, August 14, 2012

வீடு

'வனக்கம் சார்! மெனையா பாக்கறீங்களா? ஊடு இர்ந்தா பரவால்லியா?’

‘வணக்கங்க. மனை இருந்தா நல்லது. இல்லைன்னா ரொம்ப பழைய வீடு இருந்தாலும் பரவால்ல’

‘இன்னா பஜ்ஜிட்ல பாக்குறீங்கோ?’ (கேட்கும்போதே குத்துமதிப்பா எவ்வளவுக்கு நான் ஒர்த் என்ற எக்ஸ்பர்ட் அனலிஸிஸ்)

‘இடம் பிடிச்சிருந்தா கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் பரவாயில்ல’ (ஒன்னைய மாதிரி எத்தன பேருட்ட நான் பதில் சொல்லிருப்பேன்)

‘அப்பார்மெண்டு வோணாவா?’ (உன்னப் பாத்தா தனியா மனை வாங்கி கட்டுற அளவுக்கு ஒர்த்தா தெரியலையே)

‘இல்லைங்க. அபார்ட்மெண்ட், டூப்லெக்ஸ் எல்லாம் வேணாம்.’

‘கொள்த்தூர் பிஜ்ஜு கிட்ட சூப்பரா ஒரு எடம் இருக்குது பாக்குறியா’ (ங்கொய்யால! உன் தம்புடி எப்புடின்னு கண்டு புடிக்கறேன் மவனே)

‘பெரியார் நகர், ஜவஹர் நகர், பெரம்பூர், அயனாவரம் இதுக்குள்ள சொல்லுங்க சாமி’

‘லோக்கோ டேசன் கிட்ட ஒரு வெடம் கீது. நாப்பத்தஞ்சிக்கு அம்பத்தஞ்சி. நல்ல ஏரியா. பேப்பர் க்ளீனா இருக்குது. மெனதான். ஒன்னு நாப்பது சொல்றாங்கோ. பார்ட்டி கிட்ட இட்டும்போறேன். உக்காந்து பேசிக்கிங்க. தோ! லோக்கோ பிஜ்ஜி கீய லெப்ட்ல திரும்புனாங்காட்டியும் நேர கார்னர் ப்ளாட்டுக்கு அடுத்த ப்ளாட்டு. ஊடு நல்லாருக்குது. சரிபட்டா பார்க்கலாம். இல்லன்னா இட்சி கட்டிக்கலாம். நாப்பதுக்கு முப்பது. தொர ஊடு. பேசனா மேண்டேன்ஸ் பண்ணிக்கிறாரு. உங்க இஸ்டம். ஒன்னு இரவத்தஞ்சு. ஒன்னு இரவது வரிக்கும் கேட்டாங்கோ குடுக்கல. நீங்க ஒக்காஞ்சு பேசுங்க. இன்னா நா சொல்றது’

போகும் வழியில் அவன் காட்டிய வீட்டைப் பார்க்கிறேன். 1964-65களில் அப்பாவின் விரல் பிடித்துக் கொண்டு லோகோவர்க்ஸ் ஸ்டேஷனின் தென்புறம் இறங்கி கண்டெம்ட் வேகன்களை கடையாக்கி சோடா ஃபேக்டரிகளில் ஒன்றில் பச்சை கலர் கோலி சோடா. குடிக்க முடியாமல் முக்கி முக்கி குடித்தும் பாதிக்கு மேல் அப்பாவுக்கு. பிறகு திரும்ப ப்ரிட்ஜ் ஏறி பட்மோடாக இருந்த தரிசு நிலத்தில் இருந்த கேம்பில் டெண்ட் ஆஃபீஸில் முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்து ஆஃபீஸில் மஞ்சள் பையிலிருந்து கட்டுக் கட்டாக காகிதங்கள், டிஸ்சார்ஜ் புக், ஜார்ஜ் படம் போட்ட வெள்ளிப் பதக்கம், ராணி படம் போட்ட செம்பு ஸ்டார் பதக்கம் எல்லாம் காட்டி சண்டை போடுவதும் வருவதுமாக இருந்தது. யாரு சண்டை போட்டா நமக்கென்ன போச்சு. நமக்கு பச்சை சோடா கிடைச்சா சரி.

மாசம் ரண்டு மூணு வாட்டி இதுக்கே அலைய முடியாதுன்னு அம்பத்தூரிலிருந்து அயனாவரத்துக்கு 65ல டேரா தூக்கியாச்சு. மாசம் நாலு பச்சை சோடா கேரண்டின்னு ஒரே சந்தோஷம். ஒன்னு ரண்டு மாசம் அப்படியும் நடந்தது. சபிக்கப்பட்ட ஒரு ஞாயிறு. அந்த ப்ரோக்கர் சொன்ன அதே வீதியில் கார்னர் ப்ளாட். ஒரு க்ரவுண்ட் என்று கவனம். அப்பாவுக்கு இடம் காட்டின ஆசாமி ஏதோ சொல்லி டெண்டுக்குள் அழைத்துப் போனான். கொஞ்ச நேரத்தில் அப்பாவின் இடி முழக்கக் குரல். இங்கயே இருக்கணும்னு நிறுத்திப் போன இடத்தில் இருந்து அசையும் அளவுக்கெல்லாம் நமக்கு தைரியமும் இல்லை.

கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்த கையோடு கையில் இருந்த பேப்பரெல்லாம் சுக்கு நூறாக கிழித்து வீசி டிஸ்சார்ஜ் சர்டிஃபிகேட்டை கிழிக்க முயன்றபோது அது காலிக்கோ பௌண்ட் என்பதால் முடியாமல், ‘அப்பா வேணாம்பாக்கும், சார்! என்ன இதுக்கும்’ அடங்கிப் போய் அதை மட்டும் பையில் போட்டுக் கொண்டு தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்.

வீட்டுக்குப் போய் 500ரூ லஞ்சம் கேக்கறான். கேட்டா நீ சிப்பாய் இல்லை. க்ளார்க்குங்கறான். நான் ஆஃபீஸ்ல உக்காந்தா கிழிச்சேன். பர்மா காட்டுலயும், பாகிஸ்தான்லயும் குண்டுக்கு நடுவில இருந்தாக்கும் வேலை பார்த்து அந்த மெடல் வாங்கினது. இப்படி ஒரு கேவலப்பட்டு காசு குடுத்து அந்த மனை வாங்கத் தேவையில்லை என்ற வீராப்பு (500ரூ அப்போ ஒரு ஆறேழு மாச சம்பளமா இருக்கும்)

சரிங்க பார்க்கலாம் என்று ப்ரோக்கரிடம் சொல்லிவிட்டு வந்து ஒரு குட்டித் தூக்கம். கனவில் அப்பா.

‘அப்பா! புருபுருன்னு கத்திண்டு பேப்பர கிழிச்சி போட்டு வந்தீங்களே. அந்த இடத்துல பாதி ஒன்னேகால் கோடி சொல்றாம்பா! ஒரு ஐந்நூறு அழுதிருக்கப்படாதா?’

‘ஒழச்ச ஒழப்புக்கு மரியாத இல்ல. க்ளார்க்குன்னு சொல்றான். சரி சொல்லிட்டு போ. அதுக்கு லஞ்சம் குடுத்தா மட்டும் சரியாயிடுமா. அப்படி மானத்த விட்டு மனை வாங்கி என்ன பொழப்புடா அது’

‘ம்க்கும். அதான் மானத்த பாத்துண்டிருக்கா மாதிரி ஆகிப் போச்சு பொழப்பு. ரண்டு கோடி போச்சேப்பா’

‘வெங்கட்ராமையர் காலனில 5 வீடு. மாசம் அம்பதுரூபா மேனிக்கு அம்பது மாசம் குடுத்து க்ரயம் பண்ணிக்கோ வாசுன்னு அந்த ப்ராம்மணன் எவ்வளவோ சொன்னார். இரவத்தஞ்சி ரூபா வாடகையோட இன்னும் இரவத்தஞ்சு கட்டிருக்க முடியாதா. பையன் வளந்தா காலேஜுக்கு எல்லாம் கஷ்டம். பட்டணம் போறேன்னு ஒரே பிடிவாதம்.’.இது அம்மாவோட குரல்.

‘வாய மூடுடி! எனக்கு நீ புத்தி சொல்ல வேணாம். விதிச்சிருந்தா வேண்டாம் வேண்டாம்னாலும் வந்தடையும்.’

அதிசயமாக அம்மாவுக்கு எதிரான அப்பாவின் குரல். அதைவிட அதிசயமாக அம்மாவிடம் சைலேன்ஸ்.

‘அசுர சந்தியாச்சு. எழுந்திருங்கோ. விளக்கேத்தணும்’ (எங்கூட்டம்மணி)

‘ம்! காஃபி குடு’ (அப்பாவுக்கேத்த தப்பாத ஒபீடியண்ட் புள்ள)

(ராத்திரி 12.30 மணி)

மீ: ஓய் இருக்கியா?

மொவன்: சொல்லு நைனா

மீ: லோக்கோல ஒரு இடம் பார்த்தேண்டா. ஒன்னேகால் சொல்றான்.

மொவன்: இதெல்லாம் ஆவறதில்ல நைனா. பேசாம பொள்ளாச்சி, ஈரோடுன்னு எங்கனா ஒரு அரை ஏக்கர் பாரு நைனா. ஒரு கொட்டாய் போட்டுக்கலாம். நீ ஜம்முன்னு புக்கு படிச்சிக்கினு நெட்டுல மொக்க போட்டுனு இரு. நான் ஒரு நாலு மாடு வச்சிக்கினு வெவசாயம் பண்றேன். ஜாலியா இருந்துக்கலாம்.

(என்ன பெத்ததும் சரியில்ல. நான் பெத்ததும் சரியில்ல.=)))))))

Friday, June 15, 2012

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா,

நல்லாருக்கியா! நான் நல்லாருக்கேன்! அப்படின்னு கடிதம் எழுதற பாவத்த பண்ணாம நீ போற வரைக்கும் கூட இருந்துட்டன்னு சந்தோஷப் படறதா? இல்ல, ஒரு வேளை அப்படி அமைஞ்சிருந்தா சேர்ந்து இருக்க வாய்ச்சிருக்கக் கூடிய நாள்ள இன்னும் க்ளோசா, சண்டையெல்லாம் இல்லாம இருந்திருப்பமான்னு புரியல.

எப்பவாவது அது எப்பவோ எப்பவாவதுதான் மடில புதைஞ்சிக்கிறப்ப ‘என்ன திடீர்னு அம்மா பாசம் பொங்கறது’ன்னு கை புடிச்சி தள்ளினாலும் மனசு இழுத்து புடிக்குமே அப்படி தோணிப்போச்சு இன்னைக்கு. இந்த நினைப்பு வந்தப்ப நீ பண்ற பருப்பு துகையலுக்கு மனசு ஏங்கித்து. இப்ப ரொம்ப நிஜம்மா நாக்குலயும் அந்த சுவை எப்படி வந்ததுன்னு தெரியல.

டி.யு.சி.எஸ்ல விடியக் கார்த்தால பாலுக்கு போகிறப்ப க்யூல செங்கல் வெச்சிட்டு வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு காஃபி குடிச்சிட்டு புக்கத் தூக்கிண்டு போய் க்யூல நின்னு பத்து பதினோரு மணிக்கா ரேஷன் அரிசி வாங்கி, வரும்போதே பாலிஷ் புடிச்சி அது நாத்த அரிசின்னா இன்னோரு பாலிஷ் அப்புறம் குடம் குடமா அலசி கெரசின் ரேஷனுக்கு போதாதுன்னு சாதம் மட்டும் வெங்கலப் பானையில கும்மட்டி அடுப்புல வைப்பியே. பிடிவாதமா நீ சமைக்கிற வரைக்கும் அப்பா திவசத்துக்கு கூட அதானே. அதெப்புடிம்மா குழையவும் குழையாம விரை விரையாவும் இல்லாம சாதம் வடிச்ச? அது ஒரு ரூபா ரேஷன் அரிசியோ இல்ல பின்னாள்ள கிலோ 12ரூபாயாம்னு சலிச்சிண்ட மூட்டை அரிசியோ அப்படி ஒரு ருசி.

இப்ப மூட்டை ரூ 1800ன்னு பளபளா குக்கர்ல இண்டக்‌ஷன் ஸ்டவ்லயோ கேஸ்லயோ ரண்டு விசில் கணக்குக்கு இறக்கிட்டு அத சாதம்னு சாப்டா சாதம் மாதிரி இல்லையே!

ரசம் பொங்காத ஒரு கண்ணு வச்சிக்கோன்னு சொல்லிட்டு போய் ஆழாக்கோ உழக்கோ துவரம்பருப்பு வாங்கிண்டு வந்து ரண்டு தேங்கா பத்தையோட சேர்த்து மொற மொறன்னு அம்மில ஒரு பருப்பு துகையல் அரைப்பியே. துகையல் சாதம் போக ரசத்துக்கும் மோருக்கும் அதையே தொண்டுட்டு கடைசியா அசடு வழிய ‘ம்ம்மா! கொஞ்சூண்ண்ண்டு துவையல்மா’ன்னு வழிச்சி நக்குவேனே.

டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ல ப்ரீமியம் பருப்பு வாங்கி நெய்ல வருத்து மிக்ஸில தாராளமா தேங்கா வச்சு அரைச்சாறது. பார்க்க அதே மாதிரிதான். அதே மொற மொறப்புதான். வாசனையும் ப்ரமாதம்தான். ப்ச்! என்னமோ அந்த டேஸ்ட் வரல!

நாலே நாலு சாம்பார் வெங்காயம், புளி கரைச்சுன்னா கரைச்சுதான் (அந்த வெளுத்துப் போன மிச்சத்த விளக்கு தேய்க்கன்னு எடுத்து வைப்பியே) அதுல என்னத்தச் சேர்ப்பியோ தேன் மாதிரி ஒரு வத்தக் குழம்பு, அந்த டேஸ்டுக்கு கொஞ்சம் கிட்டக்க வருதுன்னு இப்ப கொள்ள காசு குடுத்து க்ராண்ட் ஸ்வீட்ல வத்தக் குழம்பு பொடி வாங்கறேன்.

எப்பப்பாரு வாழைப்பூ உசிலியான்னு சண்டை போட்டிருக்கேனே! சாதத்துக்கும் இதே, ரசத்துக்கும் இதேவான்னு சண்டை போட்டு அப்புறம் மோருக்கும்  அதே போடுன்னு வெக்கமில்லாம கேட்டிருக்கேன். சில நாள் வாழைப்பூ கடலப் பருப்பு கூட்டு, சில நாள் அதோட பெலாக் கொட்டை இல்லன்னா கருவடாம்னு சேர்த்து போட்டு ஈன்னு இளிப்போட கலவை கலந்தா, வண்டிக்காரன்மாதிரி குழைக்காதன்னு பொட்டுன்னு துடையில அடி விழும்.

இப்பல்லாம் வாழைப்பூவ பார்த்தா சோகமா நழுவிடுவேன். அதென்னமோ உசிலல பருப்பு அதிகமா இல்லன்னா பூ சக்கையான்னு அமைஞ்சு சண்டைதான் வரும்.

லீவு நாள் வந்தா சாயந்திரம் நாலு மணிக்கு அநேக நாள் உன்ன நினைக்காம முடியலம்மா. வேலைக்குப் போற வயசில்ல. எப்பவும் அடி வயத்துல தீயா பசிக்கிற வயசு. போக வர எதாவது தின்னக் கிடைக்குமான்னு அலையற மனசு. ஒரு மணிக்கு ரெண்டாம் வேளை மோர்சாதம் குழைச்சா மாதிரியா பிசைஞ்சு கைல குடுத்து தூங்கினா 3 மணிக்கு காஃபி வாசனைக்குதானே எழுந்திருக்கேன்.

அந்தக் கிறக்கத்துலயே வாய் நம நமன்னு டிஃபனுக்கு ஏங்கும்! ரண்டு கை புழுங்கரிசி போட்டு வறுக்கறப்ப என்ன பண்ணப் போறயோன்னு ஒரு தவிப்பா இருக்கும். அப்புறம் ஒரு கை உளுந்து தனியா வறுத்து கல் இயந்திரத்துல கட்டைய அடிடான்னு ஆர்டர் போட்டு அதை அரைச்சு தனியா சம்புடத்துல எடுத்து வச்சிட்டு ஒம்பாட்டுக்கு வாசல்ல போய் உக்காந்துடுவ. பசின்னு கேக்கவும் தயக்கம். அப்புறமா எழுந்து வந்து வறுத்த புழுங்கல் அரிசில ஒரு ஸ்பூன் நெய்யும் ரண்டு ஸ்பூன் சக்கரையும் ஒரு கப்புல போட்டு இந்தான்னு குடுக்கறதோ இல்லன்னா உளுந்து மாவுல வெல்லத்தையும் சுக்கையும் பொடிச்சி போட்டு அளவா ஒரு ஸ்பூன் நெய் ஊத்தி உருண்டை பிடிச்சி ரண்டுதான்னு சொல்லிட்டு தப்பா மூணு குடுப்பியே. அதத் தின்னா அப்புறம் ரண்டு மூணு டம்ப்ளர் தண்ணி கேக்கும். வயறு திம்முன்னு ஆயிடும்.

ஏழேகால் ந்யூஸ் முடிஞ்சதும் ரண்டு தோசைக்கு மேல திங்க முடியாது. வெயில் காலம்னா 4 மணில இருந்து தண்ணி ஊத்தி குளுகுளுன்னு ஆக்கின வீட்டு வாசல் தரையில, குளிர் காலம்னா பனி இறங்காம பெட்ஷீட்ட நாலு மூலைல கட்டி அதுங்கீழன்னு ஒரு தூக்கம் வருமே. பெட் இருக்கு! ஏஸி இருக்கு. புழுங்கல் அரிசி உளுந்தும் இருக்கு. எழவு அந்த பசியும் இல்ல. நீ பண்ணின படிக்கே பண்ணாலும் அந்த ருசியும் இல்ல. அப்புடி தூங்கின தூக்கமும் இல்ல.

வேலைக்கெல்லாம் போய் கொஞ்சம் வசதி ஆனதும் நீ மோசமாயிட்டம்மா. உளுந்து அப்பளம், அரிசி அப்பளம்லாம் கடைல வாங்க ஆரம்பிச்சிட்ட. உளுந்து அப்பளம் பண்றப்போ, அரிசி அப்பளம் பண்றப்போ, வடாம் போடுறப்போன்னு அந்த மாவ ஆட்டைய போட்டு தின்றப்ப திட்டினாலும் அந்த வேளைக்கு சோத்து செலவு மிச்சம்தானே. அட செலவ விடு உளுந்து அப்பள மாவு மேல் அண்ணத்துல ஒட்டிக்க நாக்கால எடுக்க முடியாம விரல விட்டு வழிச்சி ‘கடா மாடு வயசாச்சு! எச்சை பண்ணுவியான்னு’ பளீர்னு முதுகுல விழுந்தாலும், லேசா அந்த விளக்கெண்ணெய் கசப்பும், சீரகமும் உப்புமா அந்த டேஸ்டும், வடாத்து மாவோட புளிப்பு காரமும் எத்தனை கொட்டிக் கொடுத்தாலும் க்ராண்ட் ஸ்வீட்ல கூட கிடைக்காதே!

தட்டைன்னு ஒன்னு பண்ணுவியே. வேஷ்டிய விரிச்சி போட்டு அதுல தட்டி பொரிச்சு எடுத்தா கடிக்கறப்பவே கரைஞ்சு போகுமே. அதுல வெடுக் வெடுக்குன்னு வேர்க்கடலையும் கடலப் பருப்புமா.  ம்ஹூம். அதென்னமோ பால்கவர் பின்னாடி தட்டின வரட்டியை தட்டைன்னு திங்க மனசு ஒப்பல.

அப்பா திவசத்தன்னைக்கு ராத்திரி பலகாரம்னு எப்பவாவது பண்ணி இருக்கியா? நீ பண்ண எள் உருண்டை, ரண்டு வடை, நாலு அதிரசம். ‘சனியனே! தின்னதும் வயத்த தடவாதன்னா கேக்கறியா’ன்னு அடி வாங்குவேனே. என்னமோ! நானும் காசு பாக்காம சமையல்காரிய வச்சுதான் பண்றேன். உன் திவசத்துக்கு எள் உருண்டை, அதிரசம்னு இலைல வைக்கிறப்ப என்ன அறியாம சாரிம்மான்னு சொல்லிப்பேன். அதிரசம் நான் திங்கறதே இல்லைம்மா இப்ப.

என்னன்னமோ சுக்காங்கீரை பருப்பு, புளியம் பிஞ்சு துவையல், புளியந்துளிர் பருப்பு, புளிச்சக் கீரை பருப்பு, பிரியாணி, வெஜிடபிள் ரைஸ், குஸ்கா, புலாவ், குருமான்னு அது ஒரு ருசியாத் தின்னாலும் இப்படி ஏங்க வைக்கிறதில்லை.

சின்ன வயசுல சில ஸ்பெஷலான மாசக் கடைசில கதம்ப சாதம்னு ஏமாத்தி குழம்பு சாதம், ரசம் சாதம், மோர்சாதம்னு கலந்து வச்சிண்டு இதுக்கு அது தொட்டுக்க அதுக்கு இது தோட்டுக்கன்னு மாத்தி மாத்தி காம்போ வச்சி கைல போட்டு தொட்டுக்க ஒன்னுமில்லையான்னு கேள்வியே வராதபடிக்கு போடுவியே. வேலைக்கு போன அப்புறம் தொட்டுக்க ஒன்னுமில்லையான்னு சண்டை போட தோணித்தே தவிர இப்படி போடுமான்னு கேக்க தோணலையே.

ரொம்ப வருஷம் கழிச்சி நீ போய் சேர்ந்து ஒரு வருஷத்துல ஒரு நாள் ப்ரியாம்மா இங்க வந்தப்ப சமைச்சு அப்படி சாப்பாடு குடுத்தா.குருடனுக்கு கண்ணு தெரிஞ்சி திரும்ப குருடானா மாதிரி இருக்கு.  அப்புறம் ரண்டு வாட்டி வந்தும் அந்த பக்கிக்கு இதுக்கு ஒழியல.

இந்த காசு, பணம், பதவி, பவுசு எல்லாம் என்னத்துக்கு? திரும்ப ஒருவாட்டி உனக்கு பிள்ளையா பிறந்து ஓட்டு வீட்டுல இப்படி ரேஷன் அரிசின்னாலும் பத்தியும் பத்தாம ருசியா சாப்டு அதே சந்தோஷத்துல போய் சேர்ந்துடணும்போல இருக்கு.

வித் லவ்

உம்புள்ள

Sunday, May 13, 2012

கேரக்டர்: கன்னீப்பா

சொல்வனத்தில் வெளிவந்த ரோமாக்கள் குறித்தான கட்டுரையைத் தொடர்ந்து தென்றல்’ஸ் ப்ளஸ்ஸில் ஜிப்சிக்கள் குறித்தான விவாதம் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டு ஜிப்சிகள் குறித்தும் பேசப்பட்டது. என் பள்ளி நாட்களில் ஏறக்குறைய 8 வருடம் அவர்களை அவதானித்திருக்கிறேன். விடுமுறையில் பெரியம்மா வீட்டிற்கோ மாமா வீட்டிற்கோ செல்லும்போதெல்லாம் அவர்கள் ஊரைத் தவிர ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே. வண்டி ப்ளாட்ஃபார்மில் நுழையுமுன்னே சிற்றெறும்புக் கூட்டங்களாகச் சிதறி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக ஓடிப் பதப்படுத்திய அணில் விற்கும் குறத்திகள். சின்னப் பலகையில் பாய்ந்தேரத் தயார் நிலையில் சற்றும் அழகு கெடாத அணிலின் குண்டுமணிக் கண்ணில் எப்படி உயிர் கொண்டுவரமுடியும்? ‘சாம்யோ! ரண்ட்ரூப்பா சாம்யோவில் ஆரம்பித்து வண்டி புறப்படும்போது கூடவே ஓடி வர்ருப்பா குடுசாம்யோவில்’ முடியும் பேரம். முன் தோள் ஒன்று புடைக்க ஒரு கால் முன்வைத்து, பின்னங்கால் இரண்டும் சற்றே மடிய இரை பிடிக்கும் பார்வையோடு பதுங்கி நிற்கும் பதப்படுத்திய நரியின் கோலிக் கண்ணில் அத்தனை கள்ளம் எப்படி வைத்தான் ‘பத்ருப்பா குடு சாமி! காலீல கண்ணு முய்ச்சா லச்சுமி சாமி என்றும், சத்யமா நம்பு சாமி! நரிக்கொம்பு சாமி! ராசி சாமி! அஞ்ச்ரூப்பா குடு சாமி’ என்று கெஞ்சும் அந்தக் குறவன்? அயனாவரம் ரயில்வேக்காலனி குறவர்கள் ஏன் அணில் விற்பதில்லை? கிளிக்குஞ்சும், மைனாக் குஞ்சும் மட்டும், சமைப்பதற்கு கொளுத்திய டயர் கம்பியில் அவர்களே பின்னி, அலுமினிய பெயிண்ட் அடைத்த கூடையில் வைத்து விற்பது ஏன்?

நாய் கடித்துக் குதறி குற்றுயிராய் குப்பைத்தொட்டியில் முடங்கிய நோஞ்சான் பூனைக்குட்டியை புதையல் மாதிரி அள்ளி எடுத்து தெருக்குழாயில் குளிப்பாட்டி, காயத்துக்கு தினத்தந்தி பேப்பர் கிழித்து ஒட்டி, டால்டா டப்பாவில் நேற்று இரவு முறை வைத்து வீதிகளில் ராப்பிச்சம்மா என்று வாங்கிய வெங்காய சாம்பார்,ரசம்,கறிக்குழம்பு,மீன் குழம்பு எல்லாம் ஒன்றாகக் கொட்டிக் கலந்து அதிலிருந்து ஒரு துண்டு மீனோ கறியோ பகிர்ந்து   கொழுகொழுவென்று வளர்த்த அந்தப் பூனையை மடியில் வைத்து ஒரு கையால் தடவிக் கொண்டே மறுகையால் கூராகச் சீவப்பட்ட மூங்கிலை அதன் ப்ருஷ்டத்தில் ஒரே சொருகாகச் சொருகி டயர் கொளுத்திய ரப்பரில் சுட்டு கும்பலாக உட்கார்ந்து பிய்த்துத் தின்ன எப்படி மனம் வரும்?

மருந்துக் கடையில் துவளத் துவள இடுப்பில் குறுக்காக தூளி மாதிரி கந்தல் துணியில் கிடக்கும் குழந்தையைக் காட்டி, எட்டணாவை நீட்டி ’புள்ளக்கி கண்ணு தொர்க்காத ஜொரம் சாமி! நோவால்ஜின் குடு சாமி என்றோ, பத்ருப்பா சில்ற குடுசாமி என்றோ கெஞ்சும் குறத்தியை பெரிய கழியோடு ஏன் கடைக்காரர் விரட்டுகிறார்?

எல்லாம் விட ஐம்பதுக்கும் குறையாத ஆணும், பெண்ணும், குழந்தையுமான கூட்டத்தில் ஆண்களெல்லாம் ‘கன்னீப்பாவாகவும்’ பெண்களெல்லாம் ‘கன்னீமா’வாகவும் இருக்க யாரோ ஒரு கன்னீப்பாவோ கன்னீமாவோ கூப்பிடும்போது எப்படி சரியான கன்னீமாவோ கன்னீப்பாவோ புரியாத பாஷையில் பதில் சொல்கிறார்கள்?

ஐந்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புவரை அயனாவரம் ஜாயிண்ட் ஆஃபீஸ் ஓரம், பள்ளிக்கூட மைதான நிழலில் என்று இவர்களை அவதானிப்பதே பெரிதும் படித்த படிப்பு எனலாம். ஏழாவது வகுப்பு படிக்கும்போது பதினொண்ணாம் வகுப்பு அண்ணன்மார் சொல்லிக் கொடுத்தபடி கும்பலாக போய் குறத்திகளின் எதிரில் மூக்கைச் சொரிந்தால் ‘போசடிகெ, மாதர்சோத்’ என்ற இன்ன பிறவு வசவுகளுக்கான காரணம் பதினொன்றாம் வகுப்புக்குப் சென்றபோது புரிந்து கோபம், பயம், வெட்கம், அருவெறுப்பு என்று கலவையான உணர்ச்சிகளுக்கு ஆளானது சரிதானா?

நாலணாவுக்கு தம்பிடி குறையாது என்று லோலோ என்று கத்தும் கன்னீமா, பிச்சைக்காரியின் குழந்தை கழுத்தில் கருகுமணி போட்டுவிட்டு கொஞ்சுவாள். பேறு வீடுகளில் பேரம் பேசாமல் குழந்தைக்கு கருப்பு வளவியும், கருப்பும் வெளுப்புமான மணிகோத்த கால் கயிரும் கொடுப்பாள். குடலேற்றம் கண்டு துடிக்கும் குழந்தையை இரண்டுகாலை விரலிடுக்கில் பிடித்து தூளி மாதிரி மூன்று வீச்சு வீசி சிரிக்கச் சிரிக்கத் திரும்பத் தருவாள். கையில் நிற்காமல் துடிக்கும் குழந்தையை பார்த்த மாத்திரம் எங்கோ சுளுக்கென்று முறத்தில் இட்டு புடைக்கும் மாயத்தில் அது ‘ஙே’ என்று இளிக்கும். கொஞ்சம் போல சோறோ, குழம்போ, இரண்டு வெற்றிலையோ, ஒரு இணுக்கு கட்டைப் புகையிலையோ கொடுத்தால் போதும். நரம்புச் சிலந்தி எடுத்துக் கொளுத்தி புதுத்துண்டும், கிழிந்த சட்டையும், கவுளி வெத்தலையில் வைத்துக் கொடுத்த 5ரூ தட்சணையோடு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து முடித்த சர்ஜனின் களைப்போடும் பெருமிதத்தோடும் ‘வ்ர்ரேஞ்சாமி’ என்று போகும் கன்னீப்பா கிழவன் அடுத்த அரைமணியில் ஏழாம் நம்பர் சாராயக் கடையில் ஏற்றிக் கொண்டு கன்னீமாவோடு கோவணம் அவிழ மல்லுக் கட்டுவான். கன்னீமாக்கு கொடுக்காமல் மொத்தமும் குடித்த குடிக்கு சண்டை.

தினமும் பார்த்துப் பார்த்து எந்தக் கன்னீமாவுக்கு எந்தக் கன்னிப்பா புருஷன், எந்தக் கன்னீமா மகள், எந்தக் கன்னிப்பா மகன், எந்தக் கன்னிமா அத்தை, சித்தி போன்ற உறவுகள் புரிந்தது. வாரம் ஒருமுறை செங்கல் அடுப்பில் அலுமினிய டேக்ஸா ஏறுகையில் இன்னைக்கு எந்தப் பூனைக்கு ஆயுசு முடியும் என்று பெட் கட்டும் அளவு புரிந்து வைத்திருந்தோம். கருக்கலில் பால் வாங்கிக் கொண்டு வருகையில் கன்னீப்பா கிழவன் காக்கா அடிக்கத் தயாரானால் அன்றைக்கு வீட்டில் திட்டுதான். பால் வண்டி லேட்டு என்று சொல்லிவிடலாம். அதற்காக ‘கன்னீப்பா கிழவன்’ காக்கா அடிக்கும் காட்சியை விட முடியுமா என்ன?

விரலளவு அடிக்கணுவில் ஆரம்பித்து சிறுத்துக் கொண்டே வந்து மெலிதாக முடியும் முனையில் சின்னக் கோலிக் குண்டு அளவு தார் உருட்டி வைத்திருப்பான். டால்டா டப்பாவிலிருந்து இரண்டுகை சோறு விசுறுவான். ‘க்ராவோவ்வ்வ்வ்வ்க்ரா’ என்று ஒரு குரலுக்கு இருபது முப்பது காக்கைகள் வந்திறங்கும். மறைவிலிருந்தபடியே அந்த மூங்கிலின் வீச்சுக்கு பத்து காகமாவது சுருண்டு விழும். பாய்ந்து அள்ளிப் பிடித்து றெக்கை முறுக்கி வலைக்கூடையில் வைக்க ஆரம்பிக்க வொர்க்‌ஷாப் ஆட்கள் எனக்கு உனக்கு என்று போட்டியிடுவார்கள். அந்த ஒரு வீச்சுதான். கிடைத்தவர்களுக்கு சந்தோஷம். கிடைக்காதவர்களுக்கு வருத்தம். ஏதேதோ வியாதிக்கு ரத்தம் கறி என்று மருத்துவப் பக்குவம் வேறு இலவசம்.

காலையில் எட்டரைக்கெல்லாம் தொழில் பார்க்கக் கிளம்பி விடுவார்கள். மைடப்பா, சாந்து புட்டி, பாசி மணி, ஊசி மணி, கருப்பு வளவி, திருஷ்டி மணி, ப்ளாஸ்டிக் மோதிரம், ப்ளாஸ்டிக் வாச், சீப்பு இதர சாமான்களோடு. ரிட்டையரான பெருசுகளும், அன்றைக்கு சமைக்கும் ஒன்றிரண்டு குடும்பங்களும் மட்டும் இருக்கும். எட்டாவது முழுப்பரிட்சை முடியும்போதுதான் அந்தக் கன்னிம்மா சிறுமி படுத்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. வலது கை முழுதும் ரத்தக் களறியாய்க் கொப்புளங்கள். ஓயாது அழுகை. என்னமோ எண்ணெய் போடுவாள் ஒரு கிழவி. முழுப்பரிட்சை முடிந்து திரும்பவும் பள்ளிக்குச் சென்றபோது பார்த்தால் பேரதிர்ச்சி. கையில் சதை என்பதே இல்லை. மஞ்சளும் சிவப்புமாய் எலும்பும், சதையுமாய் அரை மயக்க நிலையில் கிடப்பாள். எல்லாரும் போனதும் ‘கன்னீப்பா கிழவன்’ வீதியோர வெள்ளை கருப்பு கல்லைக் கழுவுவான். ஏதோ இலைகள், கொடிகள், மஞ்சள் கிழங்கு அதைத் தட்ட உடைந்து போன ஒரு குழவி. அதில் அரைத்து ஏதோ எண்ணெயில் வதக்கி ஆற வைத்து அவள் கையில் பற்றுப் போட்டு வலியில் அவள் கதற, அவளை அடக்க இவன் கத்த என்று ஒரு கூட்டம் சேர்ந்துவிடும்.

‘காக்கா கிழவன்’ என்று பேர்தானே தவிர நரைத்தாலும் தலை கொள்ளாத முடியும் குடுமியும் எங்கிருந்தோ வித்தியாசமான தேன் கலர் சருமமும், வழக்கமான தூசும், டயர்கரியுமற்ற உருவம். நல்ல உயரம். கையில் மார்பில் கிளி, கன்னமா (கன்னீம்மா) பெயர், ஒரு வாளைச் சுற்றிப் படர்ந்த இரண்டு பாம்புகள், நெற்றியில் மூன்று புள்ளிகள் என்று பச்சை குத்தியிருப்பான். கரண்டை கரண்டையாக காலும் கையும் ஒட்டிய வயிறும் கிண்ணென்றிருக்கும். கையில் வாட்ச் இல்லாத ஸ்ட்ராப் மட்டும். எல்லா விரலிலும் ஸ்டீல் அல்லது செம்பு மோதிரம். நரிப்பல் கோர்த்த பவளமணி. எம்.ஜி.ஆர் படம் வைத்த ரெக்ஸின் பர்ஸ். பல வண்ண ஒட்டுப் போட்ட ரெக்ஸின் பை. அதற்குள் ப்ளையர், மணிகள், மணி கோர்க்கும் அலுமினிய செம்பு கம்பிகள்.  எப்போதும் புதிதாக இருக்கும் சிவப்பு அரணாக் கயிற்றில் அழுக்குக் கோவணம். வெற்றிலை குதப்பிய வாய். கொச்சைத் தமிழில் எம்.ஜி.ஆர் படப்பாட்டு. சாயந்திரமானால் சாராயம், கன்னீமாவோடு பஞ்சாயத்து.

அந்தப் பெண்ணுக்கு வைத்தியம் என்பதாலோ அல்லது ஆஃபீஸ் வாசலிலே கடையும் போடுவதாலோ காக்காக் கிழவன் வேறெங்கும் போவதில்லை. நாளாக நாளாக அந்தப் பெண்ணின் புண் ஆறுவதாகவும் தெரியவில்லை. அந்தக் கிழவனின் வைத்தியமும் நிற்கவில்லை. ஒன்பதாவது பரீட்சை முடிந்தபோது அந்தச் சிறுமி பிழைக்காது என்ற நிலையில் கிடந்தாள். விடுமுறை முடிந்து வந்தபோது காயங்கள் முற்றிலும் ஆறி செம்புண்ணாக உரித்த கோழி நிறத்தில் இருந்தது கை. சிரிப்பும் சுளிப்புமாக கிழவனுக்கு ஒத்தாசை செய்து கொண்டு தூசும் அழுக்குமாக இருப்பாள். எப்படியோ பள்ளி முடிந்து போகும்போது கன்னீமா வளர்ந்துவிட்டிருந்தாள். அந்தக் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது. பின்பு படிப்பு முடிந்து வேலை என்றோடி அவர்களை அவதானிக்கும் வாய்ப்பே அற்றுப் போனது.

ஐந்தாறு வருட இடைவெளி இருக்கும். ஆஃபீஸ் முடிந்து கேரேஜ் ஸ்டேஷனில் இறங்கி ஜாயிண்ட் ஆஃபீஸ் வழியாக வரும்போது பழைய இடத்தில் ஒரு பெண்ணும் ஒரு கிழவனும். அந்த தேன் நிறம் சட்டென்று பார்க்க வைத்தது. மடிப்பு மடிப்பாக தடித்து கிடந்ததது தேகம். காது சுருங்கி, மூக்கிருந்த அடையாளமாக இரண்டு ஓட்டைகள், உதடற்ற பற்கள், விரலற்ற இரண்டு உள்ளங்கைகளில் அழுந்தப் பிடித்த அலுமினிய டம்ப்ளர். ஊதிக் கூட குடிக்க முடியாததால் சூடாக இருந்ததாலோ என்னவோ விரலற்ற கால்களுக்கிடையில் டம்ப்ளரை இறுக்கியபடி இரண்டு உள்ளங்கைககளாலும் ஆரஞ்சு சைசில் இருந்த ஒரு கல்லை எடுத்து அடுப்பில் கிளறிக் கொண்டிருந்தவளின் முதுகில் வீசினான். எழுந்து வந்து டம்ப்ளரில் இருந்ததை ஆற்றிக் கொடுத்துப் போனாள். சாப்பிட்ட பிறகு ஒரு கம்பியை வளைத்து பீடியை சொருகி, அடுப்புக் கங்கில் கொளுத்திக் கொடுத்தாள். இரண்டு உள்ளங்கையிலும் பிடித்து பல்லில் கடித்து கைகொண்டு பொத்தி எப்படியோ உறிஞ்சி புகைத்தபடி திரும்பியவன் நிமிர்ந்தான். இமைகளும் சுருங்கி பிதுங்கிய வெண்ணிறக் கோளமாக கண்கள். மெதுவே கை பிடித்து அழைத்துப் போய் கால்வாயோரம் போன கன்னீமாவின் கழுத்தில் கருகமணி.

திடீரென வந்தது போலவே திடீரென ஓரிரு மாதங்களில் காணாமல் போனார்கள். கும்பலிலிருந்து எப்படி இவர்கள் மட்டும் பிரிந்து வந்தார்கள்? ஒரு வேளை அந்தப் பெண்ணை மணந்ததால் ஒதுக்கி வைத்துவிட்டார்களா? புற்று வைத்த கையை இலை தழையால் குணமாக்கியவனுக்கு பெருநோய்க்கு மருந்தில்லையா? திடீரென எப்படிக் காணாமல் போனார்கள். ஒரு வேளை காக்கா கிழவன் இறந்திருக்கக் கூடுமோ? இதை எழுதும்போது கூட அன்றெழுந்த இந்தக் கேள்விகளுக்கு பதிலில்லை. அப்புறம் அவர்கள் எவரையும் பார்க்கவும் முடியவில்லை.