Friday, April 15, 2011

கேரக்டர் - திருமதி ராஜம் ஆறுமுகம்..

கேரக்டர் தொடரில் ஏன் இது மட்டும் திருமதி ராஜம் ஆறுமுகம் என்ற கேள்வி எழலாம். இது உண்மையில் இரண்டு கேரக்டர்களைப் போல் தோன்றினாலும் என் மனதில் அவர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாமையா? அல்லது இன்றைய ராஜத்தின் நிலையா என்பதை முடிவில் நீங்களாக முடிவு செய்துக் கொள்ள வேண்டியதுதான்.

அயன்புரம் மார்க்கட் வீதியும் நெட்ட முத்தியால் கான் வீதியும் சந்திக்கும் முனையில் இடது ஓரம் ராஜத்தை இன்றும் பார்க்கலாம். இந்த ராஜத்தை நான் தவிர்த்துவருகிறேன். ஓரிருமுறை கடக்க நேர்கையில் அவசரமாகப் பாராதது போல் கடக்கப் போய் அத்தனை கும்பலிலும் அடையாளம் கண்டு ‘டேய் அய்யிரே’ என்று அழைத்து பாசமாய்க் கேட்ட கேள்வியில் உடையாமல் பதில் சொல்வது என்பது முடியாத காரியமாகிப் போய்விட்டது. என் மனதில் இருக்கும் ராஜம் இவரல்ல.

என்.எம்.கே.ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் நெட்ட முத்தியால் கான் தெருவில் முதல் பிரிவில் வலது பக்கம் இருப்பது திருப்பாச்சூரான்  தெரு எனப்படும் திருப்பச்சீஸ்வரர் தெரு. இதன் முனையில் இருந்தது ‘அறிஞர் அண்ணா வாடகை மிதிவண்டி நிலையம் உரிமையாளர்: கா.ஆறுமுகம்’.

எண்ணெய் தடவி பின் தூக்கி வாரிய கிராப்பு, பென்சிலால் வரைந்தாற்போல் ஜெமினி கணேசன் மீசை, கவிழ்த்துப் போட்ட ஆங்கில எழுத்து ‘வி’ போல முட்டி தட்டும் கால்கள், நிரந்தரமான வாயோர மைனாப் புண், அதிர்ந்து பேசாமலே எதிராளியின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஒரு பார்வை, ஐந்தரை அடிக்கும் சற்றே குள்ளமான உருவம் கொண்ட ஆறுமுகத்துக்கும்

ஆறடிக்கு சற்றேறக்குறைய உயரம், உயரத்துகேற்ற உடல்வாகு, உடல்வாகுக்கேற்ற உயர்ந்த குரல், இரண்டு நத்தைகளைத் தொங்க விட்டாற்போல் மூக்குத்தி, அகலமான தோடு, நெற்றில் சிக்னல் போல் ஒரு ரூபாய் அளவு குங்குமம், எண்ணெய் காணாத செம்பட்டைத் தலை, எப்போவாவது விசேஷகாலங்களில் லேசாகத் தலைகாட்டும் ஒரு இணுக்குப் பூவோடு பூக்கடை வைத்திருக்கும் ராஜத்திற்கும் என்ன பொருத்தம் இருந்திருக்கிறது?

காலையில் ஐந்துக்கெல்லாம் எழுந்து முதல் பஸ் பிடித்து பூக்கடை போய் பூவாங்கி வந்து, இரவு மிகுந்த பூக்களை எடுத்துக் கொண்டு போய் கடை போடுவாள் ராஜம்.

ஏழு மணிக்கு குளித்து மைனர் போல் இஸ்திரி செய்த மல்வேட்டியுடன் பளபளா வெள்ளைச் சட்டையும், எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் சுருட்டலான முழுக்கைச் சட்டைச் சுருட்டலும், சன்னல் பனியனின் மேல் அண்ணா படம் போட்ட இரட்டைப் புலி நக செயினும், வலது கையில் அண்ணா பரிசளித்ததாகச் சொல்லப்படும் உதய சூரியன் படம் போட்ட மோதிரத்துடன், பளபள புது சைக்கிளில் ஏறி, 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்குப் போவார் ஆறுமுகம்.

பத்து மணியளவில் பூக்கடையை ஏறக்கட்டி வரும்போது குழம்பு செலவுக்கு காசுக்கு மல்லுக்கு நிற்பாள் ராஜம். பெரும்பாலும் மறுவார்த்தையின்றி ஒரு பத்தோ இருபதோ கொடுத்துவிடுவார் ஆறுமுகம். இல்லை எனச் சொல்லப்படும் நாட்களில் அசந்த நேரத்தில் டவுசர் பாக்கட்டில் கைவிட்டு ராஜம் மொத்தமாக லவட்டப் பார்ப்பதும், டவுசரின் மேல் கையை இறுகப் பிடித்து ‘உடுமே உடுமே’ என்று சல்லாபிப்பதும் கடந்து செல்பவர்களின் கடைவாயோரப் புன்னகையை வரவழைப்பவை.

பத்துமணிக்கும் இரண்டுமணிக்கும் உண்டான இடைவெளியில் எப்போது சமைக்கிறாள், எப்போது காலை வாங்கி வந்த பூவைக் கட்டி வைக்கிறாள், மீண்டும் மாலை உதிரிப் பூ வாங்கப் போய் வருகிறாள், நான்கு மணிக்கு தவறாமல் எப்படி கடை போடுகிறாள், இரவு ஒன்பதரை அளவில் வந்து எப்போது சாப்பிட்டு, எப்போது பேசி, எப்போது தூங்கப் போகிறாள் என்பதை யாரும் கணிக்க முடியாது.

தி.மு.க.வில் முக்கியப் புள்ளியான ஆறுமுகத்துக்கு கட்சி தாண்டிய மதிப்பு கண்கூடு. வீதியில் சண்டை போடுபவன், பெண்டாட்டியை நடு வீதியில் போதையில் கும்முகிறவன், கட்சி மீட்டிங்கில் பிகிலடித்து கலாட்டா செய்ய நினைக்கும் புதிய இளைஞன், கள்ள ஓட்டு போட வந்து, போ என்று சொன்ன பிறகும் நிற்பவன் யாராயிருந்தாலும் ‘ஏய்! போ!!’  என்ற ஒற்றைச் சொல்லில் போகாவிட்டால் விழும் ஒற்றை அறையில் ஒன்று தரையில் இருப்பார்கள் அல்லது தள்ளாடி நடப்பார்கள்.

மற்றவரைப் போல் கூவி அழைத்துக் கூட பூ விற்கமாட்டாள் ராஜம். அவள் கடையில் யாரும் பேரம் பேசுவது கிடையாது. பாத்திமாவோ, ரெஜினாவோ, மங்களமோ, ராணியோ கர்ப்பிணிப் பெண்கள் யாரும் தலையில் ஒரு விறக்கடை பூவில்லாமல் தாண்டிப் போக முடியாது. கூடவே புருஷனும் இருந்தால் ஜென்மத்துக்கு சாப்பிட மறந்தாலும் மறப்பான், பெண்டாட்டியை பூவில்லாமல் ராஜத்தின் கடை தாண்ட அனுமதிக்கமாட்டான். பெண்டாட்டிக்கு வைத்து விட்டாளே என்று கடனே என்று யாரும் உடனே ஒரு முழம் பூ வாங்கிக் கொடுக்க முடியாது. அவள் வைத்து விட்டதுதான்.
 
மார்க்கட்டில் பெண்களை இடிப்பவர், குடித்துவிட்டு மிரளவைப்பவர், மீன் வெட்டும் கத்தியை உயர்த்திப் பிடித்தபடி சண்டைபோட்டு கலங்கடிப்பவர்களுக்கு, ஒற்றை இழுப்பில் சுருண்டு விழுந்து ராஜத்தின் காலால் இடுப்பில் மிதிபட்ட வலியா அல்லது மூன்று நான்கு தலைமுறையை சேர்த்து இழுத்து வைத்து திட்டும் திட்டில் நாளை எப்படி இந்த வீதியில் நடப்போம் என்ற வலியா எது பெரிது என்று புரியாது. குறைந்தது அரைமணி நேரம் ஓயமாட்டாள்.

ஏதோ ஒரு விசேஷ நாளில், தலை குளித்து தலையாற்றி, லேசாக எண்ணெய் பூசி ஒரு விறக்கடை மல்லிப்பூ சுத்திவிட்டால், ஆறுமுகம் மாலை ஆறுக்கெல்லாம் கடையடைத்துவிட்டு பத்தாம் நம்பர் சாராயக் கடைக்குப் போய்விடுவார். இரண்டு மகள்களும் இரு மகன்களும் அத்தகைய ஒரு நாளில் வந்து பிறந்திருக்க வேண்டும்.


மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து, அதே மார்க்கட்டில் பூக்கடை வைக்க இடம் பிடித்துக் கொடுத்து ஒரு வழியாக ஒப்பேற்றினாலும், மூத்த மகன் சண்டியனாகவும் இளைய மகன் சுமாராகப் படிப்பவனாகவும் அமைந்து போனான். வசதி கருதி பெரம்பூருக்கு நான் குடி பெயர்ந்தபின்னும் வீட்டு விசேஷம் என்றால் மூன்று கிலோமீட்டருக்கு ஆட்டோவாகிலும் வைத்துக் கொண்டு போய் ராஜம் கடைப் பூதான் வாங்குவது.

அப்படிப் போன ஒரு நாளில் அவளின் மூத்தமகனின் படம் தாங்கிய போஸ்டரைக் காண நேர்ந்தது. என்ன கேட்கவென்றே தெரியாமல் தடுமாற, ஒரு வார்த்தை பேசமுடியாமல் விழியோரம் முந்தானையால் துடைத்துக் கொண்டு கைவந்த போக்கில் கொடுத்த பூவை வாங்கிக் கொண்டு வந்தேன். அடுத்த முறை போனபோது இன்னொரு மகனின் போஸ்டரின் முன்னால் முகம் கொள்ளாச் சிரிப்போடு அமர்ந்திருந்தாள் ராஜம்.

பட்டப்படிப்பை முடித்து, எம்.ஏ.வில் சேர்ந்ததைப் பாராட்டி நண்பர் குழாம் அடித்த போஸ்டர் அது. மறக்காமல் போஸ்டர் உபயம் கா.ஆறுமுகம் என்பதைச் சேர்த்திருந்தார்கள். பெரும்பாலும் கடை கண்ணிக்குப் போவது என் தம்பியாதலால், சில வருட இடைவெளிக்குப் பிறகு ராஜத்தின் கடை முன் நின்று தேடினேன்.

வாடி வதங்கி, முற்றிலும் பொலிவிழந்து, மூக்குத்தியும் தோடும் மட்டுமே அடையாளம் காட்ட ‘வா அய்யரே’ என்றவள் நொறுங்கிப் போனாள். ‘அப்பா போய்ட்டாருய்யா. ராஜம் தண்ணி எட்தாமேன்னாரு. ரண்டு நிமிட்டு இல்ல அய்யரே. தல தொங்கிடிச்சி. பாவி மனுசன், என்ன விட்டு எப்புடி போனாரு தெரியல அய்யரே. ஒரு திட்டு, ஒரு அடி நினைச்சி கோவப்படக்கூட ஒன்னுமில்லாம போய்ட்டாருப்பா அப்பா’ என்று கதறியவள் ஒரு மூக்குச் சீந்தலில் சாதாரணமாகிப் போனாள்.

சரசு அக்கா, லட்சுமி, காந்தி எல்லாம் எப்படி இருக்காங்கம்மா என்றேன். லச்சுமிக்கு 2 சவரன் கூட போட்டேன்னு சரசு பேசறதில்ல, லச்சுமி மச்சினிச்சிய காந்திக்கு கட்டலைன்னு அவளும் பேசறதில்ல. படிச்சவரு, லவ் பண்ணிக்கினு கண்ணாலம் கட்டிக்கினாரு. பூக்காரியவும், சைக்கிள் கடைக்காரனையும் அம்மா அப்பான்னு சொல்லிக்க முடியுமா? அவரும் பிச்சிக்கினாரு.

எனக்கு விதிச்சது, இதோ பூவும், நானுமா ஓடுது பொயப்பு. அம்மா திதியா? மல்லிப்பூ எடுத்தும்போ. மவராசி, உங்கப்பா இருக்க சொல்ல மல்லியில்லாம இருக்கமாட்டா. என்னாதான் நான் இறுக்கமா கட்டினாலும் அவ கட்டி வச்சிகிட்டாதான் அதுக்கு சந்தோசம் என்று ஏதோ கணக்கில்லாமல் கொடுத்தாள். எவ்வளவென்றே கேட்காமல் ஏதோ காசு கொடுத்தேன். அன்றிலிருந்து அவள் கடையைத் தவிர்த்தே வருகிறேன். அவரவர் பிழைப்பு அவரவர்க்கு என்று இருந்தவர்களிடையே இத்தனை காதலா? அந்த ஒரு மனிதனின் இழப்பா இப்படி ஒரு மலையைச் சாய்த்துவிட்டது என்ற பிரமிப்பு மட்டும் இன்றும் இருக்கிறது.

-:o:-

Monday, April 4, 2011

”கருப்பு நிலாக் கதைகள்” ஒரு வாசிப்பனுபவம்.

‘கருப்பு நிலாக் கதைகள்”. கவிதைத் தலைப்புக்கேற்ற கவித்துவமான புகைப்படம். புத்தகத் திருவிழாவிற்கு நாளை போகலாம் என்றிருந்தபோது தோழர் காமராஜின் பதிவில் அதற்காகக் காத்திருப்பதாக படித்ததும், நான் உங்களுக்கு முன் வாங்கிவிடுவேன் என்று அலட்டிக் கொண்டு போய் வாங்கிப் படிக்கவும் ஆரம்பித்தாயிற்று. இடையே திருச்செங்கோடு பயணமிருந்ததால் மாதொருபாகனை அங்கு போவதற்குள் படித்தாக வேண்டும் என்ற முனைப்பில் இது தள்ளிப் போயிற்று.

வாசிப்பனுபவம் என்று ஒன்றிரண்டு எழுதினாலும், இந்தப் புத்தகம் தந்த அனுபவத்தை எழுதச் சற்றே தயக்கம் தட்டியதற்குக் காரணம் உண்டு.  இது வாழ்விலிருந்து நினைவில் புடம் போட்டு வந்த அனுபவ எழுத்து. மண்ணுக்குரிய சாமானியனின் எழுத்து. கதையின் காலக் கட்டத்துக்கு நம்மை உருமாற்றி, அவர்களோடு நம்மையும் ஒருவராய் உணர்த்திக் கதை சொல்லும் எழுத்து.

அமைதியாக அசைபோடும் பசுவின் முதுகில் ஒரு ஈ அமர்ந்தால் ஒரு சிலிர்க்குமே, ஒரு புழுக்கமான மாலையில் எதிர்பாராது முகத்தில் விழும் மழைத்துளி, கோவில் மணி டங் டங் என்றே முழங்கினாலும் அதில் ஏதோ ஒரு டங் ஒலி உள்ளுக்குள் பாய்ந்து ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வைத்தருமே அப்படி ஒரு இடத்தில் உலுக்கும் திறன் காமராஜுக்கு கைவந்த கலை.

இது என்னைப் போல சாமானியனுக்காக ஒரு சாமானியன் எழுதிய கதைகளின் வாசிப்பனுபவம். ஏதோ ஒரு ஸ்வரத்தில் என் கண் கசிந்தால் அது எனக்குப் போதும். இது கல்யாணியா, காம்போஜியா என்ற விசாரம் எனக்கில்லை. மேலாண்மை பொன்னுச்சாமியின் விமரிசனத்தை விடவா சொல்லிவிட முடியும்? ஆனாலும் என் அனுபவத்தைப் பகிராமல் முடியுமா என்ன? அதுவும் கரிசல் மண்ணின் மணத்தோடான பேச்சு வழக்கில் சொல்லப்படும் கதைகள் வாசிப்பு மட்டுமல்ல வாழும் அனுபவமுமாயிற்றே!

"கருப்பு நிலாக்களின் கதைகள் " சமூகமென்கிற ஒரு அக்கப்போர் கூட்டம் சபிக்கப்பட்ட ஒருவளின் வாழ்க்கையில் எவ்வளவு சோகத்தைக் கொண்டு வந்துவிடுகிறது? கோனார்க் கோவில் அருகில் இளநீர் விற்கும் பெண்ணாக, ஒவ்வொரு பவுர்ணமியிலும் ஓங்கிச் சிரிக்கும் சாந்தியாக மாறிய அவளுக்கு கண்ணகியென்று எத்தனை பொருத்தமாகப் பெயர். சபாஷ் காமராஜ். கண்ணகி சாந்தியான கோலம்தான் கதை.

"மருளாடியின் மேலிறங்கியவர்கள்"  இதேபோல் சபிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. பிறப்பாலிழிந்தவளென்று ஒதுக்கி,  பெண்டாள மட்டும் அதை மறந்தவர்கள் நிறைந்த இச் சமூகத்தின் முகத்திரையை அவள் ஒரு சாமியார் என்று கொண்டாடும்படியாக கிழித்தெறியும் பாங்கு அற்புதம். போலியின்றி வார்த்தைகள் கிழித்துக் குதறுவது சரஸ்வதி என்கிற சச்சியை மட்டுமா? நம் மனத்தையும்தான்.

"சிறு பிள்ளைகள் என்னருகே வரத் தடை செய்யாதிருங்கள்", குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் கூறும் கதை. போலியாய் ஒரு சட்டம். அதை செயல்படுத்தாத அரசுகள் என்று அத்தனையும் ஒரு சொல்லின்றி நம் மனதில் கொண்டுவந்து சேர்க்கும் கதை.

"பெரியார் பேரனுக்குப் பிடித்த பேய்" ஒரு அருமையான கதை. ஒரு பாழ்மண்டபத்தின் இருட்டில் தெய்வமான ஒரு பகுத்தறிவு வாதியின் கதை எனச் சொல்லலாமா காமராஜ்?

"முளைப்பாரிகள் மீண்டும் வயலில், பாட்டுக்காரி தங்கலச்சுமி, குழந்தையாக்குபவள் " மூன்றும் அனுபவப் பகிர்வுக் கதைகள். குழந்தையாக்குபவளின் நாயகி போன்றோ தங்கலச்சுமி போன்றோ வெள்ளந்தியாகவே இருந்துவிட முடியாதா என்று ஏங்க வைக்கும் கதைகள்.

"சம்பாரி மேளத்தின் உச்சமும் சில இழப்புக்களின் மிச்சமும்
" தோழர்களுக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு நேர்மையான தொழிற்சங்கத் தோழரின் தனிப்பட்ட இழப்பையும் சாதனையும் சொல்லும் கதை. “ஆனால் ஒரே ஒரு பார்வையில், தோளில் சாய்கையில் தலை கோதுவதில்” ஏனைய தகப்பன் பிள்ளைகள் பெறும் சந்தோஷ உலக இழப்பை மீட்டெடுக்கும் சம்பத்தும் மகள் வெண்மணியும் நம்மையறியாமல் ஒரு ரெட் சல்யூட் வைக்கச் சொல்லும் பாத்திரங்கள்.

பதினான்கு முத்தான கதைகள். அழகான அட்டை, அச்சு எல்லாம் இருந்தாலும் ப்ரூஃப் ரீடிங்கில் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை. வம்சி மட்டுமல்ல இன்னும் சில பதிப்பகங்களின் புத்தகங்களும் இப்படித்தான் இருக்கின்றன. படைப்பாளிக்குச் செய்யும் அவமரியாதை இது. அடுத்த முறை இது நிகழக் கூடாது. உதவ நாங்கள் இருக்கிறோம் காமராஜ்.

ஒரு அருமையான வாசிப்பனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி.
-:o:-

Friday, April 1, 2011

பிலிமு காட்டிய பிலிமு.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, கிட்டத்தட்ட ஒன்னர வருஷத்துக்கு அப்புறம் தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்னு ஒரு முடிவெடுத்தேன். அட நெட்ல புக் பண்ணலாமேன்னு தேடுனேன். அபிராமி தியேட்டர்ல 120ரூ டிக்கட்னு க்ளிக் பண்ணா, ஆடுற சேர், அதுக்கு 60ரூ தனியான்னு இருந்துச்சு. அட குடுக்கறத குடுக்கறோம் ஆடிட்டேதான் பார்ப்போமேன்னு இருந்தா ஆட்டி விடுற கூலி 120ரூ டிக்கட்டுக்குன்னு இருந்துச்சு. போடாங்கொய்யாலன்னு மூடிட்டேன். அதோடவா? காப்பி வேணுமா, ஸ்னாக்ஸ் வேணுமான்னு எல்லாம் ஆப்ஷன்.

காலம்தான் எவ்வளவு மாறிப் போச்சு. படிக்கிறப்ப சினிமாவும் புத்தகமும்தான் பொழுது போக்கு. விளையாட்டு வேடிக்கை பார்க்க மட்டும்தான். சினிமாவும் எப்பவும் இல்லைன்னாலும் அனேகமா எல்லா சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாம்பார்,முத்துராமன் படங்களும், சில ஜெய்சங்கர் படங்களும் (பத்தாம்பு படிக்கிறப்ப ஜாக்பாட் ஜாங்கோ பார்த்தா கெட்டு போயிடுவேன்னு காசு குடுக்கமாட்டன்னு திட்டுச்சு ஆத்தா).

படம் பார்க்கிறது ஒரு அனுபவம்னா நாம படம் பார்த்ததே அனுபவங்கள்தான். சயானி (ஒன்னரை கி.மீ), வீனஸ் (3 கி.மீ) நாதமுனி (4 கி.மீ), ராயல் (மூனரை) சரஸ்வதி/லக்ஷ்மி (4கி.மீ) மேகலா (3கி.மீ), புவனேஸ்வரி(4 கி.மீ), சரவணா/பாலாஜி (ரெண்டரை கி.மீ), உமா (3 கி.மீ). எல்லாம் நடைப் பயணம்தான். அப்போல்லாம் காலைக் காட்சி அபூர்வம். மேடினிதான். 3 மணிக்கு படம்னா 2 மணிக்கு டிக்கட் குடுப்பாங்க. நாம காலைல சாப்பிட்டு அம்மா கூட 10 மணிக்கு கிளம்பினா பதினொன்னு பதினொன்னரைக்கு அங்க கதவு திறக்க முன்ன க்யூல நிப்போம்.

கதவு திறந்ததும் குடுகுடுன்னு ஓடி முதல் இரண்டாவதா போய்ட்டு, யம்மா வரான்னு சொல்லி இடம் வைக்கணும். அப்பதான் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கும். கையில ஒரு புத்தகம் வச்சிக்கிட்டா (பெரும்பாலும் தினமணிகதிர், ராணி) விசிறிக்க வாகு. டிக்கட்டு 42 பைசால இருந்து 52 பைசா வரைக்கும் வித்தியாசப்படும். யம்மா டப்பால தயிர்சாதம் கொண்டு வந்திருக்கும். டிக்கட் குடுத்ததும் வாங்கி  ஒரு டிக்கட்டை புடுங்கிட்டு தபதபன்னு ஓடி இருக்கறதுலயே பின்னாடி சீட்ல ஓர சீட்டுக்கும் மூணாவது சீட்டுக்கும் நடுவில உக்காந்து ரெண்டு கையும் விரிச்சி யம்மா வரா, தம்பி வாரான்னு சொல்லிட்டிருக்கணும். 

அப்புறம் சமத்தா தச்சி மம்மு சாப்பிட்டு டப்பாவை கழுவிட்டு வந்து உக்காந்தா ‘ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய். லைஃப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே’ல ஆரம்பிச்சி, வார் பிக்சர் (ஹி ஹி. நியூஸ்தான்)ல தொடர்ந்து சிவாஜி கூட அழுது, நாகேஷ் கூட சிரிச்சி, எம்.ஜி.ஆர்.க்கு வாஜ்யாரே, பின்னாடி ஒளிஞ்சிருக்கான் வாஜ்யாரேன்னு எல்ப் பண்ணி, ஜனகனமணக்கு நின்னா யம்மா தொலைஞ்சி போயிடுமுன்னு சாரி சொல்லிட்டு கூடவே ஓடி ‘டொங்கட்டான் டொங்கட்டான்னு’ பராக் பார்த்துட்டே நடந்து வந்த சொர்க்கம் பதினொன்னாம்புல போயே போச்சு.

பத்தாம்பு முழு பரிட்சை லீவுல பொம்பள டிக்கட்டுல அனுமதிச்ச பாவி, பதினொன்னாம்பு கால் பரிட்சையில கண்டு புடிச்சிட்டான் நான் ஆம்பிள்ளை சிங்கம்னு. யண்ணா யண்ணா இந்த ஒரு தாட்டி உடுண்ணா. அடுத்தவாட்டி ஆம்பிளை ஆயிக்கறண்ணான்னு கெஞ்சி பார்த்த படம் மூன்று தெய்வங்கள்னு நினைக்கிறேன். அப்புறம் ஆம்பிளைங்க க்யூன்னு ஆகிப் போனதும்தான் 52 பைசா டிக்கட்டின் கோர முகம் தெரிஞ்சது.

கிட்டத்தட்ட ஒரு மிருகமாதான் மதிச்சிருக்கானுவ நம்மள. அப்ப புரியல. சயானில ஒரு ஒன்னரை அடி கதவு திறக்குமான்னு மூத்திர சந்துல க்யூல நிக்கணும். உசுரப் புடிச்சிட்டு ஓடிப்போய் முதல்ல நிப்பேன். நம்ம உருவத்துக்கு அம்புட்டு மதிப்பு. சின்னப் பசங்க ஏண்டா இந்த க்யூவுல வரீங்க ஒத்துன்னு ஒன்னு, படிக்கிற வயசுல சினிமா இன்னாடான்னு அட்வைஸ்லயே ஒன்னு, பேச்சு குடுத்துக்கிட்டே ஒன்னுன்னு நம்மள ரிவர்ஸ் அடிக்க வச்சுறுவானுவ. வெவரம் தெரியாம அழுவாச்சியா வரும். இங்க கூடுதல் கொடுமை என்னன்னா, புழுக்கத்தோட, சாராய நெடியில பொரட்டிகிட்டு வேற வரும்.

கவுண்டர் திறக்கற நேரம் பார்த்து வருவானுங்க கடைசியில இருந்து. தலைக்கு மேலதான் வருவானுங்க. கையில கீரக்கட்டு மாதிரி பூனக்காஞ்சான் செடி. யோவ் யாருய்யான்னு குரல் கிரல் விட்டா போச்சு. மூஞ்சில ஒரு தேய் தேச்சிட்டு போயிடுவானுவோ (நமக்கு அந்த பயமில்ல. அவன் தலை கீழா தொங்குனாதான் நம்மள ட்ட்டச் பண்ண முடியும். நேர கவுண்டர் கிட்ட போய் தலைமேலயே குதிப்பானுவ. நாம 5 வதா இருந்த ஆளு பத்தாவதா போனாலும் நம்மள தள்ளிட்டு போன அஞ்சு பேர தள்ளிட்டு குதிக்கவும் ஒரு அஞ்சு பேரு இருக்கானுவல்லன்னு ஒரு சந்தோஷம்.

மேகலா, சரவணா, வீனஸ் எல்லாம் ரிஸ்க். அவன் மேல கம்பி வலை வேற அடிச்சிருப்பான். பன்னாடைங்க நாலுகால் ஜந்து மாதிரி குனிஞ்சிக்கிட்டே வருவானுவ. தலைய குனிஞ்சிட்டு தரையோட உக்காந்துடணும். எவனாச்சும் சவுண்ட் விட்டா பூனை மாதிரி புசுக்கு புசுக்குன்னு ஒன்னுக்கு அடிப்பானுவ.

எப்புடியோ டிக்கட்ட வாங்கி தல தெறிக்க ஓடி நாம புடிக்கிற இடம் முதல் வரிசை, இல்லாட்டி அடுத்த வரிசையில ஓரமா ரண்டு சீட்டு. டிக்கட்டு கிழிக்கிறவன் லூசான்னு ஒரு பார்வை பார்ப்பான். அவனுக்கென்ன தெரியும்? என்னதான் ஓடி கடைசி வரிசைல புடிச்சாலும், பூனைய புடிக்கிறா மாதிரி என்னை காலர புடிச்சி தூக்கி முன்ன போய் உக்காருன்னு எனக்குன்னே ஒரு வில்லன் வருவான்னு. நீ சொல்லி நான் என்னடா போறதுன்னு நாமளே போயிடுவோம்ல. அப்பவும் பக்கத்து சீட்டை புடிச்சி வச்சிக்கிறது. அல்லாடுற ஒரு ஜீவன இங்க உக்கார்ணான்னு இடம் குடுத்தா, கொஞ்சம் சீட் பார்த்துக்கண்ணா ஒன்னுக்கு உட்டுட்டு வரேன்னு இன்சூர் பண்ற டெக்கினிக்கு அது. பெருங் கொடுமை தச்சி மம்மு கட். காய காய உக்காந்து படம் பார்க்கணும்.

பி.யூ.சி. படிக்கிறப்ப, மொத மொத இங்க்லீஸ் படம் பார்த்தமுல்ல. ஒன்னார்ரூவா டிக்கட்டு. இங்லீஸ் படம்னா கெட்ட நெனைப்புல்லாம் வேணாம். ஆப்ரிகன் சஃபாரி. அதுக்கு போஸ்டர காட்டி, பாரும்மா புலி, சிங்கம் படம்மான்னு கெஞ்சி கெஞ்சி பர்மிஷன் வாங்க பட்ட பாடு இருக்கே. காலம் அப்புடி. வேலைக்கு வந்து கொஞ்ச நாள் வரைக்கும் ‘தோ ரஹா’ அப்படின்னா ஹிந்தில கற்பழிப்புன்னு தினத்தந்தி தப்பு தப்பா சொன்னத நம்ம்ம்ம்பி வாழ்ந்த காலம். எல்லாப் பத்திரிகையும் கற்பழிக்கறதுன்னு போட்டா பத்திரிகையோட கற்பு போயிடும்னு ‘தோ ரஹா பண்ணிட்டான் வில்லன்’னு போடுற காலம். எப்புடியோ முத முதல்ல 5ரூ கூட சினிமா போன மிதப்பு. பொட்டிக் கடையில ஒரு பன்னீர் சோடா குடிச்சா என்னன்னு ஒரு அரிப்பு.

நம்ம போறாத காலம் நமக்கு முன்னாடி ஒருத்தன் கமர்கட்டுன்னு 3ரூபாய நீட்டி ஒரு கமர்கட்டு வாங்கி வாய்ல இடுக்கிட்டு போனா வயசு பையனுக்கு பத்து பைசா கமர்கட்டு இருக்கும்போது 3ரூக்கு கமர்கட்டு வாங்குறானேன்னு தோணுமா தோணாதா? எனக்கு ஒரு கமர்கட்டுன்னா பொளிச்சுன்னு மண்டைல போட்டு ஓடுன்னு விரட்டிட்டான். அப்புறம் பெரிய பசங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டது அந்த்த்த கமர்கட்டுன்னா அபின்னு.

எம்.ஜி.ஆரை வெரட்டி விட்ட பிறகு வந்த முதல் படம் நேற்று இன்று நாளை. படத்த ஓட விடமாட்டோம்னு இவனுவ. நிறுத்துடா பாக்கலாம்னு அவனுவ. கலவர பூமியாப் போச்சு. எப்படியோ ஒரு நிலைக்கு வந்தப்புறம் சயானி மூத்திர சந்துல நின்னு க்யூல நின்னாச்சு. நமக்கு முன்னாடி ஒரு எம்.ஜி.ஆர். ரசிகரு. தலை தொங்க தொங்க தண்ணி. ‘டாய்!னு சவுண்ட் விட்டு கருணாநிதியை திட்டிட்டு தலை தொங்கிடுவாரு’. டிக்கட் குடுக்க ஆரம்பிக்கவும் தள்ளாடி தள்ளாடி போய், கவுண்டர் கிட்ட லுங்கிய தூக்கி டவுசர்ல விட்ட கை வெளிய வர மாட்டிங்குது.

பின்னாடி இருக்கிறவன் யோவ் போங்கய்யான்னு தள்ளுறான். நாமதான் ரெடியா சில்லர வச்சிருக்கமேன்னு கவுண்டர்ல நீட்டிட்டேன். தப்பாய்யா? டபார்னு ஷட்டர அடிச்சான். துட்டு உள்ள மாட்டிக்கிச்சி. அப்புறம் போனா போவுதுன்னு டிக்கட்ட குடுத்தானேன்னு வாங்கிட்டு உள்ள வந்தா, ப்ளாக்ல விக்க வாங்கினவன உட்ட போலீசு, அவ்ளோ அவசரம் என்னான்னு பொளேர்னு கன்னத்துல குடுத்துட்டான். அப்புடி என்ன மானம் கெட்டு சினிமா பாக்குறதுன்னு டிக்கட்ட கிழிச்சி போட்டு வெளிய வந்துட்டேன்.

அப்புறம் எட்டு வருஷம் தியேட்டர் பக்கம் போனதில்லை. ஐ.சி.எஃப். இன்ஸ்டிட்யூட்ல 25 பைசாவுக்கு சனி, ஞாயிறுல பழைய படம் போடுவாங்க. அது மட்டும் கொஞ்ச நாள் ஓடுச்சு. அப்புறம் ஆரம்பிச்சது ஆங்கிலப் பட மோகம். ஒரே நாள்ள 4 படம், மொத நாள் மொத ஷோன்னு போனது. அப்பவும் 3ரூ டிக்கட்டுக்கு 11 மணிக்கு க்யூதான் பெரும்பாலும்.

அப்புறம் கலியாணம் ஆகி அம்மிணி ஆசை பட்டுச்சுன்னு வேட்டகாடு சினிமாக்கு போனது. என்.டி.ஆர். ஸ்ரீ தேவிய வெரட்டி வெரட்டி பாடின டூயட்டுல அரண்டு போய் மண்டை இடி வந்துடுச்சி. நாம சங்கராபரணம் மாதிரி சாஃப்ட் படம் பாக்குற ஆளு. அப்புறம் நம்ம விருப்பத்துக்கு ஹிஸ்டரி ஆஃப்த வர்ல்ட் பார்ட் 3 க்கு கூட்டிட்டு போனா ஒரு காமெடி சீனுக்கு விளக்கம் கேட்டுச்சு அம்மணி. சொன்னதும் ஒரே அழுகை. இந்த மாதிரி எழவு படத்துக்கெல்லாமா கூட்டிட்டு வருவீங்கன்னு.

சரி இனிமே சினிமாவே வேணாம்னு ஒரு டீலு. டி.வில படம் பார்க்கலாம்னா பக்கத்துல உக்காந்து காமெடி சீன் வந்தா யானை முட்டுனா மாதிரி விலாவில முழங்கையால ஒரு இடி, அப்புறம் சிரிப்பு, இல்லைன்னா டப்பாக் கட்டு கட்டிக்கிட்டு உக்காந்திருந்தா வெறும் தொடையில படார்னு ஒரு அடி, அப்புறம் சிரிப்புன்னு ஒரு ரெண்டு படம் ஓடிச்சி. அப்புறம், மொக்கை காமெடிக்கெல்லாம் இந்த டார்ச்சர் தொடரவும், ரைட்ட்டு, இத சாக்கா வச்சி வெளுத்து வாங்குறான்னு புரிஞ்சி போச்சு.

அது என்ன படம் இருக்கட்டுமே, நாம அமைதியா ஒரு புக்கை வச்சிக்கிட்டு செட்டில் ஆயிடுவோம். அப்பப்ப தியேட்டர்னு முனகல் வரும். அதுக்கு அரை நாள் லீவ் போட்டு டிக்கட் ரிஸர்வ். அப்புறம் படம் பார்க்க லீவுன்னு எகிறி எஸ்ஸாயிடுவோம்ல. இந்த முப்பது வருசத்துல ஒரு ஆறேழு படம் தியேட்டர்ல பார்த்திருந்தா அதிகம்.

நல்லகாலம் இப்ப மாதிரி உக்காந்த இடத்துல டிக்கட்டு, வேண்டிய சீட்டு, தின்னுற தீனி எல்லாத்துக்கும் வழின்னு அப்போ இருந்திருந்தா? இடி வாங்கி அடி வாங்கி, நம்ம உசரத்துக்கும் உருவத்துக்கும் நசுங்கின சொம்பு உருண்டு வராமாதிரியே இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


டிஸ்கி: இம்புட்டு நீளமா? ஸ்ஸ்ஸப்பான்னு அலுத்துக்கிறவங்களுக்கு. அந்த காலத்துல படம் வந்ததும் எத்தன ரீலுன்னு கேக்கணும். 18/20ன்னா அப்பாடான்னு ஒரு திருப்தி. 16 ரீலுன்னா சின்ன படம்பான்னு ஒரு சலிப்பு. இதும் அப்படித்தான்.
-:o:-