Sunday, August 6, 2017

கேரக்டர் - யாரோ

ஸ்ரீ ரங்கம் மடப்பள்ளி ரெஸ்டாரண்ட். காலியாயிருந்த ஒரு டேபிளின் 3 சேர்களில் உட்கார்ந்த போது எதிர் சேரில் 30-35 வயது வாலிபர். சீரியசான மிஸ்லீடிங் பார்வை. செல்லை சீரியசாக நோண்டிக் கொண்டிருந்தார். எதிர் சீட்டுகளில் உட்கார்வது கூட டிஸ்ட்ராக்ட் செய்யாத ஆனால் அறிந்திருக்கிற முகபாவம்.

பச்சைக்கலர் காட்டனில் மாடர்ன் காலர்லெஸ் சட்டை. வலது கையில் பல கலர் கயிறுகளின் மேல் புத்தம் புதிய வெள்ளி கடா எனப்படும் கங்கணம். வலது கையில் ஸ்போர்ட்ஸ் வாட்ச். வேஷ்டியோ அல்லது ஜீன்ஸோ இருக்கவேண்டும் என்ற முன்முடிவு கள்ளப் பார்வையை ஏமாற்றிய காட்டன் முக்கால் ட்ராக் பேண்ட். கழுத்தைச் சுற்றி இறுக்கிய துளசி மணி. ஹரே ராமா கோஷ்டியாய் இருக்கவேண்டும் என்ற அடுத்த குறுகுறுப்பு தேடிய U அடையாளத்தை ஏமாற்றும் நெற்றி. ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும் குளிக்கவில்லை என்பது தெரிந்த ஒரு ஆச்சரியம்.

அதே சீரியஸ் முகபாவத்தோடு அரைக்கண் மூடிய நிலையில் யாருக்கோ ஃபோன்.
எத்தனை மணிக்கு ஆரம்பிக்கறது? ம்ம்? பத்தா?
டிஃபன்லாம் வந்தாச்சா?
குழந்தைகள் சாப்டாச்சா?
சரி நான் பத்துக்கு அங்க இருப்பேன்.
என்ன?
இல்லப்பா ஒரு சின்ன வேலை. ஒரு ப்ரொஃபைல் ஆடிட். முடிச்சுட்டு வந்துடுவேன். ஓக்கே
அணைத்து அஸால்டாக எறிந்த மொபைலின் கேஸிலும் ஸ்ரீ க்ருஷ்ண.

பக்கத்து டேபிளில் வந்தமர்ந்த எங்கள் ட்ரைவரை எதிரில் அமரச் சொன்னபோது வந்தமர்ந்து நோக்கிய விழிகளில் அவ்வளவு மகிழ்ச்சி.
வணக்கம் சார்! நல்லாருக்கீங்களா சார்? கவனிக்கல சாரி சார்.
வணக்கம்பா..நல்லாருக்கேன்..உட்காரு..வைஃப் எப்படி இருக்கா? பையன் என்ன பண்றான்..பேசறானா? இன்னைக்கு எங்க டூட்டி..நட்பாக அழுத்தி அமர வைக்கும் கரங்கள். ட்ரைவரின் கண்களில் பரவசம்.

நல்லாருக்காங்க சார். அப்பா, அம்மால்லாம் சொல்றான் சார்.

குட். நாளைக்கு சாயந்திரம் டூட்டியா?

இப்பதைக்கு புக்கிங் இல்ல சார்.

சரி ஃப்ரீயா இருந்தா சாயந்திரம் ஃபேமிலிய கூட்டிண்டு **** ஸ்கூல் க்ரவுண்டுக்கு வா. ஹெல்ப் தேவைப் படும். 150 பசங்களுக்கு யூனிஃபார்ம், புக்ஸ், சாப்பாடு..வேலை இருக்கும்.

வந்துடறேன் சார்!

புக்கிங் இருந்தா விட்டுண்டு வர வேண்டாம். ஃப்ரீயா இருந்தா வா.

சார் ஆதார் வந்துடுச்சு சார்.

குட். பேன் கார்ட் அப்ளை பண்ணு. ஒரு மாசம் ஆகும்னு சொல்லுவான். அக்னாலட்ஜ்மண்ட் இருந்தா போதும். நம்பர் இருக்கும். ஸ்டேட்பேங்க், கேவிபில்லாம் வேணாம். எல்விபி போ. அத வச்சு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்கோ. அக்கா இங்க வாங்க. தம்பிக்கு என்ன வேணுமோ குடுங்க. பில் என் கணக்கு.

(ஐ வில் டேக் கேர் சொல்ல வந்த அகந்தையை அடக்கி, இந்த பக்கியும் வாய் தொறக்கலையே என்ற குறுகுறுப்பை அழுத்தி வந்த சர்வர் அக்காவிடம் எங்களுக்கு சொல்லி நீங்க என்ன வேணுமோ சொல்லிக்கோங்க என்ற போதும் திரும்பிக் கூட பார்க்காத தி(ஜ)டம்). பை தி வே மடப்பள்ளி ஹோட்டல் மற்றும் அவுட்லெட்டுகளில் கிச்சன் தவிர பெண்கள் மட்டுமே. பெண்களுக்கே ஆன பரிவு மட்டுமல்ல யார் முகத்திலும் சலிப்பே அற்ற உற்சாகமான கான்ஃபிடன்ஸான முகங்கள்)

இட்லி பரிமாறியவரிடம் அக்கா உன் சைக்கிள் வந்துடுச்சு. மணச்சநல்லூர்ல இருக்கு. எப்டி கொண்டு வரதுன்னுதான் தெரியல. குட்டியானைல போட்டு கொண்டு வரணும். உனக்கும் வந்தாச்சு அந்தக்காக்கும்.

xxxட சொல்லலாம்ல தம்பி.

ப்ச். வண்டி வந்து சேராதுக்கா..அவரத் தேடி அலையணும். என்னவெல்லாம் பண்ணியாச்சு. இந்த வயசுல தெரிஞ்சே குடிச்சி குடும்பத்த நாசமாக்கறார். விடுக்கா பாத்துக்கலாம்.

நோண்டிக் கொண்டிருந்த செல்லிலிருந்து கண்ணெடுக்காமலே பின்னாடி கடந்த அக்காவிடம் அக்கா ஒரு காஃபி. வரதராஜன இன்னும் காணோம்.

கொண்டு வந்த அக்கா ஆத்திக் கொடுத்த பரிவு. சத்தியமா வயத்தெரிச்சல். அடேய், நீ யார்ரான்னு பொங்கி வந்தது. கொஞ்சம் கூட சூடா இருக்குமோ என்ற சந்தேகமே இல்லாமல் வாயில் வைத்து உறியும் அவர்மேல் பொறாமையும் கூட. அதற்குள் வரதராஜன் வந்து விட ‘நீ வரலன்னுதான் காஃபி சொன்னேன்..இத எடுத்துக்கோ’. டபரா காஃபி வரதனுக்கு.

கேஷியரண்ணா! (கணக்குக்கு காற்றில் கிறுக்கல்)

அலைச்சலில் மறந்து விட்டாலும், ராத்திரி சங்கீதாவில் டிஃபன் சாப்பிடும்போது

காலைல ஹோட்டல்ல பார்த்தமே ஒரு பச்ச சட்ட! என்ன பண்றார்?

டிசிபி ஆஃபீஸ்ல வொர்க் பண்றார் சார். எங்க போறதுன்னாலும் என் வண்டிலதான் போவார். முன்னாடியே சொல்லீடுவார். எனக்கு புக்கிங்னா மாத்தி வச்சுக்குவார்.

நிறைய சோஷியல் சர்வீஸ் பண்ணுவாரா?

ஹோட்டல்ல பாத்தீங்கல்ல சார், அந்த குண்டு அக்கா, அப்புறம் காஃபி குடுத்தாங்களே அந்த ஒல்லி அக்கா. ரெண்டு பேருக்கும் சொந்த காசுல நகையெல்லாம் போட்டு கலியாணம் செஞ்சு குடுத்தார் சார். வேத பாட சாலைல கொஞ்சம் பசங்களுக்கு பீசு துணிமணி, இஸ்கூல் ஃபீசெல்லாம் இவருதான். அப்பப்ப எதுனா நிகழ்ச்சி வச்சி நல்ல சாப்பாடா போடுவார் சார். யார்கிட்டயும் வாங்கமாட்டாரு. சொந்தக் காசுதான்.

குடும்பம்?

ஆன்மீகத்துல நாட்டம் சார். கலியாணம் கட்டல. யார் போய் உதவின்னு நின்னாலும் ஹெல்ப் பண்ணுவார் சார். நல்ல மனுஷன் சார்.

*இத விட ஆன்மீகம் என்னத்த பெருசா கொண்டு தரப் போகுது?*