Tuesday, January 22, 2013

தினத் தந்தி - ஒரு வாசிப்பனுபவம்

பள்ளியில் படிப்பேறவில்லை என்று ஒன்னாப்புலேயே நிறுத்திக் கொண்டவர்களைக் கூட எழுத்துக் கூட்டி படிக்கவைத்த பெருமை வாய்ந்த பத்திரிகை என்பதோடு கடும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இசப்கோல் கூட தரவியலாத நிவாரணத்தை அளித்து தமிழரின் உணவோடும் உணர்வோடும் கலந்துவிட்ட பத்திரிகை என்றால் அது தினத்தந்திதான். எல்லாப் பத்திரிகைகளையும் போலன்று தினத்தந்தி வாசிப்பு. அது ஒரு நவரசானுபவம்.

இன்றைய தினத்தந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி கர்நாடகா மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட உத்தரவிட்ட முதலமைச்சரின் செய்தி. படிக்கும்போதே வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட்டு நஷ்ட ஈடு வாங்கி உண்மையான தமிழ்ப்புத்தாண்டுக்கு முன்பாக ஏழை விவசாயிகளுக்கு பங்கிடப்படும் என நம்பிக்கை தருவதோடு, இழுத்தடிப்பதற்கு இது ஒன்றும் சொத்துக் குவிப்பு வழக்கில்லை என்ற உண்மையும் தாயுள்ளத்தோடு செயல்படும் முதல்வரின் நடவடிக்கை மனதோடு மலத்தையும் இளக்குவதாக உள்ளது.

இதற்கெல்லாம் அசையமாட்டோம் என்று பிடிவாதக்கார மலச்சிக்கல் ஆசாமியா நீங்கள்? இதோ தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வும், ரெயில் கட்டண உயர்வு காரணமாக கூடுதல் கட்டணம் செலுத்த சிறப்பு கவுண்டர்கள் அமைத்துள்ள செய்தியும் எப்பேற்பட்ட பாறையையும் அசைத்துப் பார்க்கக் கூடியது.

அடுத்த பக்கத்தில் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டு பிடிபட்ட செய்தி ஒரு கையால் கலங்கும் வயிற்றைப் பிடித்துக் கொண்டே நம்மிடம் இந்த மாதக் கடைசியில் எங்காவது 500/1000ரூ நோட்டு இருந்து தொலைக்குமோ என்ற பீதியைக் கிளப்புகிறது..

கல்லூரிக்குப் போன மாணவி எரித்துக் கொலை, கலெக்‌ஷனுக்கு போன தனியார் நிறுவன ஊழியரை வெட்டிக் கொள்ளை, டெல்லி கற்பழிப்பு வழக்கில் விசாரணை ரகசியமாக நடைபெறும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் செய்தி, மாமனார் நடுரோட்டில் படுகொலை, மனைவி மாமியாரும் வெட்டிச் சாய்ப்பு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீர் தற்கொலை, மகளுடன் கிணற்றில் குதித்த தாய் சாவு, ரெயிலில் அடிபட்டு மாணவி உள்பட இரண்டு பேர் சாவு போன்ற இழவுச் சிறப்புச் செய்திகள்..பக்கத்துக்குப் பக்கம் விரவிக்கிடக்கும் இத்தகைய உற்சாகமூட்டும் செய்திகள் அதிகாலையில் கொடுக்கும் புத்துணர்ச்சி சொல்லத் தரமன்று.

இன்றைய பத்திரிகையின் சிறப்புச் செய்திகள் இரண்டு. 27ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் திருமணம் நடந்தால் தூக்கில் தொங்குவேன் என்று மாப்பிள்ளை மிரட்டும் காரணம் என்னவென்றே தெரியவில்லை என்று முதல் பத்தியில் கமிஷனரிடம் மனு கொடுக்கும் பெண் இரண்டாம் பத்தியில் மணமகனின் தாய் அந்தப் பெண் ஏற்கவே ஒருத்தரைக் காதலித்து வீட்டை விட்டு ஓடியதை வேறொருத்தியுடன் திருமணமான அவரின் முன்னாள் காதலனே மணமகனிடம் தெரிவித்ததாக கூறியதை நேர்மையோடு ஒப்புக் கொண்டு அவன் மீதும் போலீஸில் கேஸ் கொடுக்க இருப்பதாகவும், முருகனை என் கணவனாக கனவு கண்டுவிட்டேன், எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் அவரைக் கைப்பிடித்தே ஆவேன் என்று கண்ணீர் பொங்க ஆவேசப் பட்டதைப் படிக்கையில் நமது கண்ணிலும் கண்ணீர் வழிகிறது. சவாலில் ஜெயித்து முருகனை மணப்பாரா என்று (என்பதை வெள்ளித் திரையில் காண்க என்று பாட்டு புத்தக பாணியில் எழுதாத குறையாக) எழுதியிருக்கும் ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அடுத்ததாக கிளுகிளுவோடு நகைச்சுவையும் தளும்பும் வால்பாறை தலைமை ஆசிரியர் வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த காட்சி இணைய தளத்தில் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மூணாப்பு சிறுவர்களை வைத்து நடத்திய மறியல் செய்தி படத்துடன் வெளியிட்டது. சிறுவர்கள் முகத்தில் ததும்பும் சிரிப்பைப் பார்த்தால் செய்தியின் தாக்கம் புரிகிறது. இதற்கு முன் பாலியல் கல்வியால் சிறுவர்கள் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போகத்தான் முடியும் என்ற ஆசிரியரின் தலையங்கத்தை நினைவு கூர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

விளையாட்டுப் பகுதியில் டென்னிஸ் போட்டி புகைப்படங்கள் வாசகர்களின் மனதில் அதெப்படி டென்னிஸ் போட்டி கேமிராக்கள் பெண் ஆட்டக்காரர்களை மட்டும் டாப் அல்லது பாட்டம் ஆங்கிளில் மட்டுமே புகைப்படம் எடுக்கிறது என்ற புதிரைத் தோற்றுவிக்கும்.

இறுதியில் சினிமா விளம்பரங்கள் பகுதிக்கு வருகையில் காதல் வலி, கில்லி பசங்க, நேசம் நெசப்படுதே, ஆதி பகவன், பத்தாயிரம் கோடி போன்ற திரைக்காவியங்களுக்கு அண்ணன் உண்மைத்தமிழன் விமரிசனம் எழுதிவிட்டால் என்று நினைக்கும்போதே உபாதை நீங்கி உடல்பறப்பது போன்ற உணர்வு திண்ணம்.

வெறும் 400 காசில் இணையற்ற இந்த அனுபவங்களுக்குப் பின்னால் தினத்தந்தி அளிக்கும் சேவை சொல்லில் அடங்காது. ஒரு சில இங்கே:

*தினத்தந்தி இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு பயலும் பஜ்ஜி சாப்பிட முடியாது.

*சாப்பாடு கட்டிக் கொண்டு போய் பீச்சை குப்பை மேடாக்கியதில் பெரும்பங்கு தினத்தந்திக்கே.

*தினத்தந்தியை துண்டு துண்டாக கிழித்து பெட் பாட்டில், ஃப்ளாஸ்க் ஆகியவற்றில் போட்டு நீறூற்றி ஒரு இரவு ஊறவைத்து அடுத்த நாள் நன்றாகக் குலுக்கி கழுவிப் பாருங்கள். கறை என்பதே இருக்காது.

*துணிகளில் எண்ணெய்க் கறை இருப்பின் தினத்திந்தி பேப்பரை அதன் மேல் வைத்து அயர்ன் செய்தால் கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.