Tuesday, November 20, 2012

இணையத் தமிழ்ச் சங்கம்

முருகன்: தந்தையே தமிழகத்தில் மீண்டும் தமிழுணர்வு தழைத்தோங்குகிறது தந்தையே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததொருகாலம். இப்போது டொட்காம் வைத்து வளர்க்கிறார்கள். தந்தையீர் உதவ வேண்டும்.

சிவன்: என்ன வேண்டும் கேள் மகனே.

முருகன்: புலவர்கள் அனைவருக்கும் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் கொடுத்து மீண்டும் தமிழகத்தில் பிறக்கச் செய்ய வேண்டும்.

சிவன்: ஆகட்டும். யாரங்கே! சித்திரகுப்தனிடம் புலவர்கள் அனைவருக்கும் ஒரு வாரம் க்ராஷ் கோர்ஸ் கொடுத்து ஜிமெயில் கணக்கு ஆரம்பித்து பூலோகத்துக்கு அனுப்பு.

முருகன்: நன்றி தந்தையே.

அவ்வையார்: ப்ளாகும் ப்ளஸ்ஸும்
                             ட்வீட்டும் முகநூலும் இவை
                             நான்கும் கலந்துனக்கு
                            ஸ்டேடஸ் உடுவேன்
                            துங்கக் கரிமுகத்துத் தூமணியே
                            நீ எனக்கு அன்லிமிடட் ப்ராட் பேண்ட் தா!
விநாயகர் : அவ்வையே! உன் அன்புக்கு மெச்சினோம்.

முருகன்: அவ்வையே! உனக்கு இண்டர்நெட் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்து தமிழ் வளர்க்க சொன்னது நான். நீயோ அண்ணனிடம் டீலிங் பேசுகிறாய். தமிழ்ப் பண்பாட்டைக் காட்டிவிட்டாயல்லவா! நீ விடும் ப்ளஸ்ஸெல்லாம் கைய புடிச்சி இழுத்தியா ஆகக் கடவது.

அவ்வை:முருகா! குமரா! என் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும்...

முருகா: அவ்வையே! போதும் உன் சமாதானம். நான் உன்னை ப்ளாக் செய்துவிட்டேன். நீ டேக் பண்ணாலும் எனக்கு மெசேஜ் வராது.

அவ்வையார்: இதுவும் கடந்து போகும்.

அவ்வையார்: வள்ளுவரே! ஏன் வாட்டமாய் இருக்கிறீர்?

திருவள்ளுவர்: என்னத்தைச் சொல்ல சகோ! என் நிலமை இப்படி ஆயிருக்க வேண்டாம். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என்று குறளெழுதினேனாம். பாலியல் குற்றத்தில் பிடிக்கப் போகிறார்கள் என்று திருமூலர் சொல்கிறார்.

அகநாழிகை: கவலை வேண்டாம் வள்ளுவரே. நீர் அறம் பொருள் மட்டும் அப்டேட் பண்ணும். அது ஆவின் பாலை விட மட்டமாக இருக்கும். காமத்துப்பால் காண்ட்ராக்ட் போகன் என்று கோத்து விடுவோம்.

வள்ளுவர்: நன்றி கவிஞரே.

அவ்வையார்: ஹி ஹி. திருவள்ளுவரே பழைய படிக்கும் பாதில உடைஞ்ச பென்சில் ஊக்கு மாதிரி செய்யுள் எழுதாதீரும். செய்யுளெல்லாம் சீந்துவார் இல்லை. கவிஞருக்குதான் மவுசு.

அகர முதல
எழுத்தெல்லாம்
ஆதி பகவன்
முதற்றே
உலகு

இப்புடி எழுதணும். சிரமம்தான். நான், நாலடியாரெல்லாம் அப்பவே இப்படி.

போகன்:: அவ்வையே கர்வம் வேண்டாம். அமுதம் கங்கையிடம் அப்ரசண்டியாகி கவிதை எழுதப் பாருங்கள். நீங்கள் ஒரு கவுஜ ப்ளஸ் விடுவதற்குள் 50 கவுஜ ஃப்ளீட்டே விடுவார்.

அவ்வையார்: ஆ! தொல்காப்பியரே! இதைக் கேட்பார் இல்லையா? இலக்கணம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா?

தொல்காப்பியர்: அட அப்டி ஓரமா குந்தும்மா! நானே கடுப்புல இருக்கேன். இலக்கணம் பிலாக்கணம்னு

அவ்வையார்: தொல்காப்பியரே! என்ன மொழி இது? தமிழ் போலிருக்கிறது. ஆனால் ஒன்றும் புரியவில்லை..

தொல்ஸ்: இப்ப புரியுதா? தமிள் இழமை வாய்ந்தது. தழ தழவெண்று செளித்தோங்குவது. பழ்ழம் கண்டு பாயும் நீர் போல் நம் மனதை நிரப்பி கழிப்பிக்கச் செய்வது...

அவ்வையார்: அய்யோ தொல்காப்பியரே. தமிழன்னை இந்த நிலையிலா இருக்கிறாள்?

தொல்ஸ்: இன்னாது? ஒரு கும்பலே வந்து மிரட்டிட்டு போயிருக்கிறார்கள். திருத்து அல்லது திருத்தப் படுவாய்னு. என் ஃபாலோயரைப் பார்த்தாயா? சித்தார்த் ஃபேமிலில மூணு பேர், ஹிட்டன் ஐடில ஜெ.மோ...அவ்வ்வ்ளோதான்

அவ்வையார்: பாவம் நீர். இதோ செம்புலப் பெயநீரார். ஏன் அழுது கொண்டு வருகிறார்?

செ.பெ: அன்னையே! நீரே சொல்லும். யாயும் ஞாயும் எழுதியது நாந்தானே

அவ்வையார்: யார் இல்லை என்றது?

செ.பெ: இதோ இந்தப் பெரியப்ஸ் டைனோஜி சொல்கிறார் எழுதியது வைரமுத்து. பாட்டு போட்டது ரகுமானு. நறுமுகையே நறுமுகையே அவர் எழுதியதை நான் சுட்டு நான் எழுதியது என்கிறேனாம்.

டைனோ: லிங்க் இதோ. நீங்கள் எழுதியதற்கு சுட்டி இருந்தால் கயுவி கயுவி ஊத்துங்கள்.

அவ்வையார்: தொல்காப்பியரே! கயுவி என்றால்

தொல்ஸ்: ஏ கிழவி! ஓடிப் போயிடு. கயுவி கியுவின்னா ப்ளாக் பண்ணிடுவேன்.

அவ்வையார்: நீர் என்ன ஓய் ப்ளாக் செய்வது. இப்போதுதான் தெரிகிறது ஏன் உமக்கு ஃபாலோயர் இல்லை என்று.

ரா சு: தொல்காப்பியரே! உங்கள் நிலை பரிதாபத்துக்கு உரியதுதான். எதற்கும் ஸ்ரீதர் நாராயணனை ஃபாலோ செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போதுக்குன்னு பஞ்சாமிருதத்துல பிரியாணி தயிர்பச்சடி லெக்பீசெல்லாம் கலந்தா மேரி சிலது எடுத்து வச்சிருக்கார். அதுலருந்து நாலு எடுத்து உட்டார்னா தெளிஞ்சாலும் தெளியும். இல்லைன்னா ஞை ஞைன்னு போவலாம்.

சீத்தலை: அய்யாங். ஞை ஞை நானு நானு. சைபர் போலீஸ் இவிங்கள புடிச்சி கேஸ் போடுங்கைய்யா.

இளங்கோவடிகள்: அய்யோ என்னை விட்டு விட்டு விடுங்கள். விட்டு விடுங்கள் (ஓடி வருகிறார்)

அவ்வை: இளங்கோவடிகளே நில்லும். ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள். உங்களைத் துரத்தும் இவர்கள் யார்? ஏன் துரத்துகிறார்கள்?

இளங்கோவடிகள்: அன்னையே! தமிழகத்தில் காவிரி வறண்டு விட்டதென்று தெரியாமல் கர்நாடகம் சென்று அங்கே காவிரியோரம் உட்கார்ந்து மணிமேகலையின் கொள்ளுப் பேத்தியை வைத்து ஒரு காவியம் படைக்க விழைந்தேன். ஒரே ஒரு பாட்டெழுதினேன். இதோ இந்த ஜீவ்ஸ் வெடுக்கென்று காபி பேஸ்ட் செய்து மச்சி இதப் பாரேன் என்று கேவியாருக்கு ஷேர் போட்டார். அந்த மனிதர் பிரித்து மேய்ந்து  ‘மச்சி! இதப் பாருடே’ என்று சுபைருக்கு டேக் செய்தார். மூவரும் சேர்ந்து தளை தட்டுகிறது, கிளை முட்டுகிறது என்று கலாய்க்கிறார்கள்.

சிலப்பதிகாரம் எழுதிய எனக்கா தளை தட்டுகிறது என்று அங்கே போய்க்கொண்டிருந்த ஜ்யோவ்ராம் என்ற ஒருவரிடம் காட்டி நீதி கேட்டேன்.

எப்படிங்க இப்படி மொக்கையா எழுதீட்டு இதைக் காப்பியம்னு வேற சொல்றீங்க என்று சொல்லிவிட்டார்.

அப்துல்லா: அண்ணே அழுவாதண்ணே. அக்கா சொல்லுக்கா. எல்லாம் நம்ம பயகதான். இப்ப என்னாகிப் போச்சு. ஆரம்பமே காப்பியம், ஓப்பியம்னா இங்கல்லாம் ஒத்துக்கிர மாட்டாங்க. அதும் இவிங்க வில்லங்கம் புடிச்சவங்க. மொதல்ல என்கிட்ட குழந்தை கவிதை எழுதப் பழகுங்க. அப்புறம் விதூஷக்காட்ட சேர்த்து விடுறேன். சிலப்பதிகாரத்துல ஒரு பாட்டை எடுத்து போட்டு டிங்கரிங் பண்ணி சயனைட் கவுஜன்னு டேக் பண்ணுங்க. பய புள்ளைங்க யம்மேன்னு தெறிச்சி ஓடுவாய்ங்க.

கம்பர்:மகனே ஜீவ்ஸ்! என்னை மாதிரி கவிஞன் உண்டா என்பாயே. நெட்டு புடுங்கிட்டான். சப்ஸ்க்ரிப்ஷன் கட்டுவாயா என் சடையப்ப வள்ளலே.

ஜீவ்ஸ்: கம்பு மாம்ஸ்! இப்படித்தான் ஒரு கதை சொல்லுவாய்ங்க. உம்பாட்ட படிச்சேன் எனக்கு சந்தோசமா இருந்துச்சு. என்னா எழுத்துடான்னு எழுதுனேன் உனக்கு சந்தோஷமாச்சு. அதோட முடிஞ்சது. நீங்க என்ன பண்றிங்க கேளுங்கள் கிடைக்கும்னு ஒரு க்ரூப்ல சேர்ந்து யார்னா ராஜாவ போய் கேளுங்க.

அவ்வை: சரி வாரும். அதியமான் எனக்காக நெல்லிக் கனி கொடுத்தவன். சப்ஸ்க்ரிப்ஷனா கட்டமாட்டான். மன்ன்ன்ன்ன்ன்ன்னா

அதியமான்: அவ்வையே! மன்னர் மரபெல்லாம் ஒழிந்து நானே மானியத்தில் உயிர் வாழ்கிறேன். உங்களுக்கு என்ன கொடுப்பது? இணையத்தில் அட்வைஸ் மட்டுமே எல்லாரும் தயக்கமின்றி கொடுப்பது பழக்கம். கூகிள் அட் சென்ஸ் விட்ஜட் போட்டு காசு தேத்தப் பாருங்கள். வர்ட்ட்ட்டா..

அவ்வையார்: முருகா! ஞான பண்டிதா. உன் கோபம் தணிந்ததா?

முருகன்: அவ்வையே! ஃபேக் ஐடியில் வந்து புலம்புகிறாயே இது உனக்கு அழகா? இனி என்ன எழுதினாலும் அம்பலவாயறும், ஜாக்கியும் பிழைதிருத்தினால்தான் டொட்காம் ஏற்கும்.

ஜாக்கி: உ.த அண்ணே. சொல்லி வைண்ணே. நாம்பாட்டுக்கு தாதாயிசம் போல...

உ.த: இருய்யா இருய்யா. ஆரம்பிக்காத. என்னாச்சி இப்ப

ஜாக்கி: உங்காளு அநாவசியமா என்ன சீண்ட்றான். ஓ...

உ.த: அய்யோ ஸ்டாப் ஸ்டாப். நான் பாத்துக்கறேன். அப்பனே முருகா இது ரத்த பூமி. நீயும் உங்கப்பனும் சேர்ந்து எதுனா பண்ணி வச்சா நீ ஏண்டா சொம்பு தூக்கிட்டு பஞ்சாயத்து பண்ணலன்னு என்ன கலாய்ப்பாங்க. அப்புடியே இதெல்லாம் எரேஸ் பண்ணிட்டு போ ராசா. ஸ்ஸ்ஸப்பா! நாம சொன்னா எவன் கேக்குறாய்ங்க. 66 ஏ வந்தாதான் அடங்குவானுங்க.

Tuesday, October 2, 2012

நறுக்னு நாலு வார்த்த V 6.1

ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: நாராயணசாமி வற்புறுத்தல்

நல்ல சாமிய பார்த்தா நாறசாமிக்கு பொறுக்காதே.
----------------------------------
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஈரோட்டில் உண்ணாவிரதம்

பத்தாயிரம் ரூவா கட்டினா டெய்லி ஒரு க்வார்ட்டரு பிறந்த நாளைக்கு ஒரு ஃபுல்லுன்னு எதுனா திட்டம் வருதா?
___________________________________
கொலையான வீட்டில் கொள்ளையடித்த போலீசார்!

அப்ப கொள்ளை போச்சுன்னு புகார் பண்ணா கொலையும் பண்ணுவாய்ங்களோ?
-----------------------------------
சபாநாயகர் பதவிக்கு தனபால் நிறுத்தப்படுவார் -ஜெ

உங்க கட்சில ஒரு ஆம்பிளையாவது நிக்குறாய்ங்களா. மொதல்ல நேரா நிக்கச் சொல்லுங்கம்மா.
-----------------------------------
நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கு! நகைச்சுவை நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்டு!

வில்லன காமெடி பீசாக்கின காமெடியன் வில்லன்.
------------------------------------
வி.ஏ.ஓ. கீ-ஆன்சர் வெளியீடு

பரிட்சை முடிஞ்சி வெளியிட்டதால என்னை மாதிரி விடை தெரியாதவங்க பாஸ் ஆக வாய்ப்பு பறிபோச்சுன்னு எவனாச்சும் கோர்ட்ல கேஸ் போடாம இருந்தாச் சரி.
-------------------------------------
திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு இல்லை: கலைஞர் பேட்டி

அதுக்கெல்லாம் சொரணைன்னு ஒன்னு வேணும்
-------------------------------------
மது மீது மோகம்! மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது!

மது யாரு அவர் காதலியா?
-------------------------------------
இறந்தவர்களின் உயிரை ஜெயலலிதாவால் திருப்பித்தரமுடியுமா? ராமதாஸ் கேள்வி

படிச்சு டாக்டரான உங்களாலயே முடியாது. பட்டத்துல டாக்டரான அவிங்க என்ன செய்வாங்க மருத்துவரைய்யா
-------------------------------------
அக்டோபர் 5ல் மனித சங்கிலி

தலைவர் போராட்ட லிஸ்ட்ல இதுக்கொரு எண்ட்ரியப் போடேய்.
--------------------------------------
மத்திய மந்திரி சபையில் தி.மு.க. சார்பில் புதிதாக யாரும் இடம் பெறமாட்டார்கள்: கலைஞர் அறிவிப்பு

என்னமோ இவர கெஞ்சினா மாதிரியும் இவரு முடியாதுன்னு சொல்லிட்டா மாதிரியும் என்னா பில்டப்பு?
--------------------------------------

Tuesday, August 14, 2012

வீடு

'வனக்கம் சார்! மெனையா பாக்கறீங்களா? ஊடு இர்ந்தா பரவால்லியா?’

‘வணக்கங்க. மனை இருந்தா நல்லது. இல்லைன்னா ரொம்ப பழைய வீடு இருந்தாலும் பரவால்ல’

‘இன்னா பஜ்ஜிட்ல பாக்குறீங்கோ?’ (கேட்கும்போதே குத்துமதிப்பா எவ்வளவுக்கு நான் ஒர்த் என்ற எக்ஸ்பர்ட் அனலிஸிஸ்)

‘இடம் பிடிச்சிருந்தா கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் பரவாயில்ல’ (ஒன்னைய மாதிரி எத்தன பேருட்ட நான் பதில் சொல்லிருப்பேன்)

‘அப்பார்மெண்டு வோணாவா?’ (உன்னப் பாத்தா தனியா மனை வாங்கி கட்டுற அளவுக்கு ஒர்த்தா தெரியலையே)

‘இல்லைங்க. அபார்ட்மெண்ட், டூப்லெக்ஸ் எல்லாம் வேணாம்.’

‘கொள்த்தூர் பிஜ்ஜு கிட்ட சூப்பரா ஒரு எடம் இருக்குது பாக்குறியா’ (ங்கொய்யால! உன் தம்புடி எப்புடின்னு கண்டு புடிக்கறேன் மவனே)

‘பெரியார் நகர், ஜவஹர் நகர், பெரம்பூர், அயனாவரம் இதுக்குள்ள சொல்லுங்க சாமி’

‘லோக்கோ டேசன் கிட்ட ஒரு வெடம் கீது. நாப்பத்தஞ்சிக்கு அம்பத்தஞ்சி. நல்ல ஏரியா. பேப்பர் க்ளீனா இருக்குது. மெனதான். ஒன்னு நாப்பது சொல்றாங்கோ. பார்ட்டி கிட்ட இட்டும்போறேன். உக்காந்து பேசிக்கிங்க. தோ! லோக்கோ பிஜ்ஜி கீய லெப்ட்ல திரும்புனாங்காட்டியும் நேர கார்னர் ப்ளாட்டுக்கு அடுத்த ப்ளாட்டு. ஊடு நல்லாருக்குது. சரிபட்டா பார்க்கலாம். இல்லன்னா இட்சி கட்டிக்கலாம். நாப்பதுக்கு முப்பது. தொர ஊடு. பேசனா மேண்டேன்ஸ் பண்ணிக்கிறாரு. உங்க இஸ்டம். ஒன்னு இரவத்தஞ்சு. ஒன்னு இரவது வரிக்கும் கேட்டாங்கோ குடுக்கல. நீங்க ஒக்காஞ்சு பேசுங்க. இன்னா நா சொல்றது’

போகும் வழியில் அவன் காட்டிய வீட்டைப் பார்க்கிறேன். 1964-65களில் அப்பாவின் விரல் பிடித்துக் கொண்டு லோகோவர்க்ஸ் ஸ்டேஷனின் தென்புறம் இறங்கி கண்டெம்ட் வேகன்களை கடையாக்கி சோடா ஃபேக்டரிகளில் ஒன்றில் பச்சை கலர் கோலி சோடா. குடிக்க முடியாமல் முக்கி முக்கி குடித்தும் பாதிக்கு மேல் அப்பாவுக்கு. பிறகு திரும்ப ப்ரிட்ஜ் ஏறி பட்மோடாக இருந்த தரிசு நிலத்தில் இருந்த கேம்பில் டெண்ட் ஆஃபீஸில் முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்து ஆஃபீஸில் மஞ்சள் பையிலிருந்து கட்டுக் கட்டாக காகிதங்கள், டிஸ்சார்ஜ் புக், ஜார்ஜ் படம் போட்ட வெள்ளிப் பதக்கம், ராணி படம் போட்ட செம்பு ஸ்டார் பதக்கம் எல்லாம் காட்டி சண்டை போடுவதும் வருவதுமாக இருந்தது. யாரு சண்டை போட்டா நமக்கென்ன போச்சு. நமக்கு பச்சை சோடா கிடைச்சா சரி.

மாசம் ரண்டு மூணு வாட்டி இதுக்கே அலைய முடியாதுன்னு அம்பத்தூரிலிருந்து அயனாவரத்துக்கு 65ல டேரா தூக்கியாச்சு. மாசம் நாலு பச்சை சோடா கேரண்டின்னு ஒரே சந்தோஷம். ஒன்னு ரண்டு மாசம் அப்படியும் நடந்தது. சபிக்கப்பட்ட ஒரு ஞாயிறு. அந்த ப்ரோக்கர் சொன்ன அதே வீதியில் கார்னர் ப்ளாட். ஒரு க்ரவுண்ட் என்று கவனம். அப்பாவுக்கு இடம் காட்டின ஆசாமி ஏதோ சொல்லி டெண்டுக்குள் அழைத்துப் போனான். கொஞ்ச நேரத்தில் அப்பாவின் இடி முழக்கக் குரல். இங்கயே இருக்கணும்னு நிறுத்திப் போன இடத்தில் இருந்து அசையும் அளவுக்கெல்லாம் நமக்கு தைரியமும் இல்லை.

கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்த கையோடு கையில் இருந்த பேப்பரெல்லாம் சுக்கு நூறாக கிழித்து வீசி டிஸ்சார்ஜ் சர்டிஃபிகேட்டை கிழிக்க முயன்றபோது அது காலிக்கோ பௌண்ட் என்பதால் முடியாமல், ‘அப்பா வேணாம்பாக்கும், சார்! என்ன இதுக்கும்’ அடங்கிப் போய் அதை மட்டும் பையில் போட்டுக் கொண்டு தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்.

வீட்டுக்குப் போய் 500ரூ லஞ்சம் கேக்கறான். கேட்டா நீ சிப்பாய் இல்லை. க்ளார்க்குங்கறான். நான் ஆஃபீஸ்ல உக்காந்தா கிழிச்சேன். பர்மா காட்டுலயும், பாகிஸ்தான்லயும் குண்டுக்கு நடுவில இருந்தாக்கும் வேலை பார்த்து அந்த மெடல் வாங்கினது. இப்படி ஒரு கேவலப்பட்டு காசு குடுத்து அந்த மனை வாங்கத் தேவையில்லை என்ற வீராப்பு (500ரூ அப்போ ஒரு ஆறேழு மாச சம்பளமா இருக்கும்)

சரிங்க பார்க்கலாம் என்று ப்ரோக்கரிடம் சொல்லிவிட்டு வந்து ஒரு குட்டித் தூக்கம். கனவில் அப்பா.

‘அப்பா! புருபுருன்னு கத்திண்டு பேப்பர கிழிச்சி போட்டு வந்தீங்களே. அந்த இடத்துல பாதி ஒன்னேகால் கோடி சொல்றாம்பா! ஒரு ஐந்நூறு அழுதிருக்கப்படாதா?’

‘ஒழச்ச ஒழப்புக்கு மரியாத இல்ல. க்ளார்க்குன்னு சொல்றான். சரி சொல்லிட்டு போ. அதுக்கு லஞ்சம் குடுத்தா மட்டும் சரியாயிடுமா. அப்படி மானத்த விட்டு மனை வாங்கி என்ன பொழப்புடா அது’

‘ம்க்கும். அதான் மானத்த பாத்துண்டிருக்கா மாதிரி ஆகிப் போச்சு பொழப்பு. ரண்டு கோடி போச்சேப்பா’

‘வெங்கட்ராமையர் காலனில 5 வீடு. மாசம் அம்பதுரூபா மேனிக்கு அம்பது மாசம் குடுத்து க்ரயம் பண்ணிக்கோ வாசுன்னு அந்த ப்ராம்மணன் எவ்வளவோ சொன்னார். இரவத்தஞ்சி ரூபா வாடகையோட இன்னும் இரவத்தஞ்சு கட்டிருக்க முடியாதா. பையன் வளந்தா காலேஜுக்கு எல்லாம் கஷ்டம். பட்டணம் போறேன்னு ஒரே பிடிவாதம்.’.இது அம்மாவோட குரல்.

‘வாய மூடுடி! எனக்கு நீ புத்தி சொல்ல வேணாம். விதிச்சிருந்தா வேண்டாம் வேண்டாம்னாலும் வந்தடையும்.’

அதிசயமாக அம்மாவுக்கு எதிரான அப்பாவின் குரல். அதைவிட அதிசயமாக அம்மாவிடம் சைலேன்ஸ்.

‘அசுர சந்தியாச்சு. எழுந்திருங்கோ. விளக்கேத்தணும்’ (எங்கூட்டம்மணி)

‘ம்! காஃபி குடு’ (அப்பாவுக்கேத்த தப்பாத ஒபீடியண்ட் புள்ள)

(ராத்திரி 12.30 மணி)

மீ: ஓய் இருக்கியா?

மொவன்: சொல்லு நைனா

மீ: லோக்கோல ஒரு இடம் பார்த்தேண்டா. ஒன்னேகால் சொல்றான்.

மொவன்: இதெல்லாம் ஆவறதில்ல நைனா. பேசாம பொள்ளாச்சி, ஈரோடுன்னு எங்கனா ஒரு அரை ஏக்கர் பாரு நைனா. ஒரு கொட்டாய் போட்டுக்கலாம். நீ ஜம்முன்னு புக்கு படிச்சிக்கினு நெட்டுல மொக்க போட்டுனு இரு. நான் ஒரு நாலு மாடு வச்சிக்கினு வெவசாயம் பண்றேன். ஜாலியா இருந்துக்கலாம்.

(என்ன பெத்ததும் சரியில்ல. நான் பெத்ததும் சரியில்ல.=)))))))

Friday, June 15, 2012

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா,

நல்லாருக்கியா! நான் நல்லாருக்கேன்! அப்படின்னு கடிதம் எழுதற பாவத்த பண்ணாம நீ போற வரைக்கும் கூட இருந்துட்டன்னு சந்தோஷப் படறதா? இல்ல, ஒரு வேளை அப்படி அமைஞ்சிருந்தா சேர்ந்து இருக்க வாய்ச்சிருக்கக் கூடிய நாள்ள இன்னும் க்ளோசா, சண்டையெல்லாம் இல்லாம இருந்திருப்பமான்னு புரியல.

எப்பவாவது அது எப்பவோ எப்பவாவதுதான் மடில புதைஞ்சிக்கிறப்ப ‘என்ன திடீர்னு அம்மா பாசம் பொங்கறது’ன்னு கை புடிச்சி தள்ளினாலும் மனசு இழுத்து புடிக்குமே அப்படி தோணிப்போச்சு இன்னைக்கு. இந்த நினைப்பு வந்தப்ப நீ பண்ற பருப்பு துகையலுக்கு மனசு ஏங்கித்து. இப்ப ரொம்ப நிஜம்மா நாக்குலயும் அந்த சுவை எப்படி வந்ததுன்னு தெரியல.

டி.யு.சி.எஸ்ல விடியக் கார்த்தால பாலுக்கு போகிறப்ப க்யூல செங்கல் வெச்சிட்டு வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு காஃபி குடிச்சிட்டு புக்கத் தூக்கிண்டு போய் க்யூல நின்னு பத்து பதினோரு மணிக்கா ரேஷன் அரிசி வாங்கி, வரும்போதே பாலிஷ் புடிச்சி அது நாத்த அரிசின்னா இன்னோரு பாலிஷ் அப்புறம் குடம் குடமா அலசி கெரசின் ரேஷனுக்கு போதாதுன்னு சாதம் மட்டும் வெங்கலப் பானையில கும்மட்டி அடுப்புல வைப்பியே. பிடிவாதமா நீ சமைக்கிற வரைக்கும் அப்பா திவசத்துக்கு கூட அதானே. அதெப்புடிம்மா குழையவும் குழையாம விரை விரையாவும் இல்லாம சாதம் வடிச்ச? அது ஒரு ரூபா ரேஷன் அரிசியோ இல்ல பின்னாள்ள கிலோ 12ரூபாயாம்னு சலிச்சிண்ட மூட்டை அரிசியோ அப்படி ஒரு ருசி.

இப்ப மூட்டை ரூ 1800ன்னு பளபளா குக்கர்ல இண்டக்‌ஷன் ஸ்டவ்லயோ கேஸ்லயோ ரண்டு விசில் கணக்குக்கு இறக்கிட்டு அத சாதம்னு சாப்டா சாதம் மாதிரி இல்லையே!

ரசம் பொங்காத ஒரு கண்ணு வச்சிக்கோன்னு சொல்லிட்டு போய் ஆழாக்கோ உழக்கோ துவரம்பருப்பு வாங்கிண்டு வந்து ரண்டு தேங்கா பத்தையோட சேர்த்து மொற மொறன்னு அம்மில ஒரு பருப்பு துகையல் அரைப்பியே. துகையல் சாதம் போக ரசத்துக்கும் மோருக்கும் அதையே தொண்டுட்டு கடைசியா அசடு வழிய ‘ம்ம்மா! கொஞ்சூண்ண்ண்டு துவையல்மா’ன்னு வழிச்சி நக்குவேனே.

டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ல ப்ரீமியம் பருப்பு வாங்கி நெய்ல வருத்து மிக்ஸில தாராளமா தேங்கா வச்சு அரைச்சாறது. பார்க்க அதே மாதிரிதான். அதே மொற மொறப்புதான். வாசனையும் ப்ரமாதம்தான். ப்ச்! என்னமோ அந்த டேஸ்ட் வரல!

நாலே நாலு சாம்பார் வெங்காயம், புளி கரைச்சுன்னா கரைச்சுதான் (அந்த வெளுத்துப் போன மிச்சத்த விளக்கு தேய்க்கன்னு எடுத்து வைப்பியே) அதுல என்னத்தச் சேர்ப்பியோ தேன் மாதிரி ஒரு வத்தக் குழம்பு, அந்த டேஸ்டுக்கு கொஞ்சம் கிட்டக்க வருதுன்னு இப்ப கொள்ள காசு குடுத்து க்ராண்ட் ஸ்வீட்ல வத்தக் குழம்பு பொடி வாங்கறேன்.

எப்பப்பாரு வாழைப்பூ உசிலியான்னு சண்டை போட்டிருக்கேனே! சாதத்துக்கும் இதே, ரசத்துக்கும் இதேவான்னு சண்டை போட்டு அப்புறம் மோருக்கும்  அதே போடுன்னு வெக்கமில்லாம கேட்டிருக்கேன். சில நாள் வாழைப்பூ கடலப் பருப்பு கூட்டு, சில நாள் அதோட பெலாக் கொட்டை இல்லன்னா கருவடாம்னு சேர்த்து போட்டு ஈன்னு இளிப்போட கலவை கலந்தா, வண்டிக்காரன்மாதிரி குழைக்காதன்னு பொட்டுன்னு துடையில அடி விழும்.

இப்பல்லாம் வாழைப்பூவ பார்த்தா சோகமா நழுவிடுவேன். அதென்னமோ உசிலல பருப்பு அதிகமா இல்லன்னா பூ சக்கையான்னு அமைஞ்சு சண்டைதான் வரும்.

லீவு நாள் வந்தா சாயந்திரம் நாலு மணிக்கு அநேக நாள் உன்ன நினைக்காம முடியலம்மா. வேலைக்குப் போற வயசில்ல. எப்பவும் அடி வயத்துல தீயா பசிக்கிற வயசு. போக வர எதாவது தின்னக் கிடைக்குமான்னு அலையற மனசு. ஒரு மணிக்கு ரெண்டாம் வேளை மோர்சாதம் குழைச்சா மாதிரியா பிசைஞ்சு கைல குடுத்து தூங்கினா 3 மணிக்கு காஃபி வாசனைக்குதானே எழுந்திருக்கேன்.

அந்தக் கிறக்கத்துலயே வாய் நம நமன்னு டிஃபனுக்கு ஏங்கும்! ரண்டு கை புழுங்கரிசி போட்டு வறுக்கறப்ப என்ன பண்ணப் போறயோன்னு ஒரு தவிப்பா இருக்கும். அப்புறம் ஒரு கை உளுந்து தனியா வறுத்து கல் இயந்திரத்துல கட்டைய அடிடான்னு ஆர்டர் போட்டு அதை அரைச்சு தனியா சம்புடத்துல எடுத்து வச்சிட்டு ஒம்பாட்டுக்கு வாசல்ல போய் உக்காந்துடுவ. பசின்னு கேக்கவும் தயக்கம். அப்புறமா எழுந்து வந்து வறுத்த புழுங்கல் அரிசில ஒரு ஸ்பூன் நெய்யும் ரண்டு ஸ்பூன் சக்கரையும் ஒரு கப்புல போட்டு இந்தான்னு குடுக்கறதோ இல்லன்னா உளுந்து மாவுல வெல்லத்தையும் சுக்கையும் பொடிச்சி போட்டு அளவா ஒரு ஸ்பூன் நெய் ஊத்தி உருண்டை பிடிச்சி ரண்டுதான்னு சொல்லிட்டு தப்பா மூணு குடுப்பியே. அதத் தின்னா அப்புறம் ரண்டு மூணு டம்ப்ளர் தண்ணி கேக்கும். வயறு திம்முன்னு ஆயிடும்.

ஏழேகால் ந்யூஸ் முடிஞ்சதும் ரண்டு தோசைக்கு மேல திங்க முடியாது. வெயில் காலம்னா 4 மணில இருந்து தண்ணி ஊத்தி குளுகுளுன்னு ஆக்கின வீட்டு வாசல் தரையில, குளிர் காலம்னா பனி இறங்காம பெட்ஷீட்ட நாலு மூலைல கட்டி அதுங்கீழன்னு ஒரு தூக்கம் வருமே. பெட் இருக்கு! ஏஸி இருக்கு. புழுங்கல் அரிசி உளுந்தும் இருக்கு. எழவு அந்த பசியும் இல்ல. நீ பண்ணின படிக்கே பண்ணாலும் அந்த ருசியும் இல்ல. அப்புடி தூங்கின தூக்கமும் இல்ல.

வேலைக்கெல்லாம் போய் கொஞ்சம் வசதி ஆனதும் நீ மோசமாயிட்டம்மா. உளுந்து அப்பளம், அரிசி அப்பளம்லாம் கடைல வாங்க ஆரம்பிச்சிட்ட. உளுந்து அப்பளம் பண்றப்போ, அரிசி அப்பளம் பண்றப்போ, வடாம் போடுறப்போன்னு அந்த மாவ ஆட்டைய போட்டு தின்றப்ப திட்டினாலும் அந்த வேளைக்கு சோத்து செலவு மிச்சம்தானே. அட செலவ விடு உளுந்து அப்பள மாவு மேல் அண்ணத்துல ஒட்டிக்க நாக்கால எடுக்க முடியாம விரல விட்டு வழிச்சி ‘கடா மாடு வயசாச்சு! எச்சை பண்ணுவியான்னு’ பளீர்னு முதுகுல விழுந்தாலும், லேசா அந்த விளக்கெண்ணெய் கசப்பும், சீரகமும் உப்புமா அந்த டேஸ்டும், வடாத்து மாவோட புளிப்பு காரமும் எத்தனை கொட்டிக் கொடுத்தாலும் க்ராண்ட் ஸ்வீட்ல கூட கிடைக்காதே!

தட்டைன்னு ஒன்னு பண்ணுவியே. வேஷ்டிய விரிச்சி போட்டு அதுல தட்டி பொரிச்சு எடுத்தா கடிக்கறப்பவே கரைஞ்சு போகுமே. அதுல வெடுக் வெடுக்குன்னு வேர்க்கடலையும் கடலப் பருப்புமா.  ம்ஹூம். அதென்னமோ பால்கவர் பின்னாடி தட்டின வரட்டியை தட்டைன்னு திங்க மனசு ஒப்பல.

அப்பா திவசத்தன்னைக்கு ராத்திரி பலகாரம்னு எப்பவாவது பண்ணி இருக்கியா? நீ பண்ண எள் உருண்டை, ரண்டு வடை, நாலு அதிரசம். ‘சனியனே! தின்னதும் வயத்த தடவாதன்னா கேக்கறியா’ன்னு அடி வாங்குவேனே. என்னமோ! நானும் காசு பாக்காம சமையல்காரிய வச்சுதான் பண்றேன். உன் திவசத்துக்கு எள் உருண்டை, அதிரசம்னு இலைல வைக்கிறப்ப என்ன அறியாம சாரிம்மான்னு சொல்லிப்பேன். அதிரசம் நான் திங்கறதே இல்லைம்மா இப்ப.

என்னன்னமோ சுக்காங்கீரை பருப்பு, புளியம் பிஞ்சு துவையல், புளியந்துளிர் பருப்பு, புளிச்சக் கீரை பருப்பு, பிரியாணி, வெஜிடபிள் ரைஸ், குஸ்கா, புலாவ், குருமான்னு அது ஒரு ருசியாத் தின்னாலும் இப்படி ஏங்க வைக்கிறதில்லை.

சின்ன வயசுல சில ஸ்பெஷலான மாசக் கடைசில கதம்ப சாதம்னு ஏமாத்தி குழம்பு சாதம், ரசம் சாதம், மோர்சாதம்னு கலந்து வச்சிண்டு இதுக்கு அது தொட்டுக்க அதுக்கு இது தோட்டுக்கன்னு மாத்தி மாத்தி காம்போ வச்சி கைல போட்டு தொட்டுக்க ஒன்னுமில்லையான்னு கேள்வியே வராதபடிக்கு போடுவியே. வேலைக்கு போன அப்புறம் தொட்டுக்க ஒன்னுமில்லையான்னு சண்டை போட தோணித்தே தவிர இப்படி போடுமான்னு கேக்க தோணலையே.

ரொம்ப வருஷம் கழிச்சி நீ போய் சேர்ந்து ஒரு வருஷத்துல ஒரு நாள் ப்ரியாம்மா இங்க வந்தப்ப சமைச்சு அப்படி சாப்பாடு குடுத்தா.குருடனுக்கு கண்ணு தெரிஞ்சி திரும்ப குருடானா மாதிரி இருக்கு.  அப்புறம் ரண்டு வாட்டி வந்தும் அந்த பக்கிக்கு இதுக்கு ஒழியல.

இந்த காசு, பணம், பதவி, பவுசு எல்லாம் என்னத்துக்கு? திரும்ப ஒருவாட்டி உனக்கு பிள்ளையா பிறந்து ஓட்டு வீட்டுல இப்படி ரேஷன் அரிசின்னாலும் பத்தியும் பத்தாம ருசியா சாப்டு அதே சந்தோஷத்துல போய் சேர்ந்துடணும்போல இருக்கு.

வித் லவ்

உம்புள்ள

Sunday, May 13, 2012

கேரக்டர்: கன்னீப்பா

சொல்வனத்தில் வெளிவந்த ரோமாக்கள் குறித்தான கட்டுரையைத் தொடர்ந்து தென்றல்’ஸ் ப்ளஸ்ஸில் ஜிப்சிக்கள் குறித்தான விவாதம் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டு ஜிப்சிகள் குறித்தும் பேசப்பட்டது. என் பள்ளி நாட்களில் ஏறக்குறைய 8 வருடம் அவர்களை அவதானித்திருக்கிறேன். விடுமுறையில் பெரியம்மா வீட்டிற்கோ மாமா வீட்டிற்கோ செல்லும்போதெல்லாம் அவர்கள் ஊரைத் தவிர ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே. வண்டி ப்ளாட்ஃபார்மில் நுழையுமுன்னே சிற்றெறும்புக் கூட்டங்களாகச் சிதறி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக ஓடிப் பதப்படுத்திய அணில் விற்கும் குறத்திகள். சின்னப் பலகையில் பாய்ந்தேரத் தயார் நிலையில் சற்றும் அழகு கெடாத அணிலின் குண்டுமணிக் கண்ணில் எப்படி உயிர் கொண்டுவரமுடியும்? ‘சாம்யோ! ரண்ட்ரூப்பா சாம்யோவில் ஆரம்பித்து வண்டி புறப்படும்போது கூடவே ஓடி வர்ருப்பா குடுசாம்யோவில்’ முடியும் பேரம். முன் தோள் ஒன்று புடைக்க ஒரு கால் முன்வைத்து, பின்னங்கால் இரண்டும் சற்றே மடிய இரை பிடிக்கும் பார்வையோடு பதுங்கி நிற்கும் பதப்படுத்திய நரியின் கோலிக் கண்ணில் அத்தனை கள்ளம் எப்படி வைத்தான் ‘பத்ருப்பா குடு சாமி! காலீல கண்ணு முய்ச்சா லச்சுமி சாமி என்றும், சத்யமா நம்பு சாமி! நரிக்கொம்பு சாமி! ராசி சாமி! அஞ்ச்ரூப்பா குடு சாமி’ என்று கெஞ்சும் அந்தக் குறவன்? அயனாவரம் ரயில்வேக்காலனி குறவர்கள் ஏன் அணில் விற்பதில்லை? கிளிக்குஞ்சும், மைனாக் குஞ்சும் மட்டும், சமைப்பதற்கு கொளுத்திய டயர் கம்பியில் அவர்களே பின்னி, அலுமினிய பெயிண்ட் அடைத்த கூடையில் வைத்து விற்பது ஏன்?

நாய் கடித்துக் குதறி குற்றுயிராய் குப்பைத்தொட்டியில் முடங்கிய நோஞ்சான் பூனைக்குட்டியை புதையல் மாதிரி அள்ளி எடுத்து தெருக்குழாயில் குளிப்பாட்டி, காயத்துக்கு தினத்தந்தி பேப்பர் கிழித்து ஒட்டி, டால்டா டப்பாவில் நேற்று இரவு முறை வைத்து வீதிகளில் ராப்பிச்சம்மா என்று வாங்கிய வெங்காய சாம்பார்,ரசம்,கறிக்குழம்பு,மீன் குழம்பு எல்லாம் ஒன்றாகக் கொட்டிக் கலந்து அதிலிருந்து ஒரு துண்டு மீனோ கறியோ பகிர்ந்து   கொழுகொழுவென்று வளர்த்த அந்தப் பூனையை மடியில் வைத்து ஒரு கையால் தடவிக் கொண்டே மறுகையால் கூராகச் சீவப்பட்ட மூங்கிலை அதன் ப்ருஷ்டத்தில் ஒரே சொருகாகச் சொருகி டயர் கொளுத்திய ரப்பரில் சுட்டு கும்பலாக உட்கார்ந்து பிய்த்துத் தின்ன எப்படி மனம் வரும்?

மருந்துக் கடையில் துவளத் துவள இடுப்பில் குறுக்காக தூளி மாதிரி கந்தல் துணியில் கிடக்கும் குழந்தையைக் காட்டி, எட்டணாவை நீட்டி ’புள்ளக்கி கண்ணு தொர்க்காத ஜொரம் சாமி! நோவால்ஜின் குடு சாமி என்றோ, பத்ருப்பா சில்ற குடுசாமி என்றோ கெஞ்சும் குறத்தியை பெரிய கழியோடு ஏன் கடைக்காரர் விரட்டுகிறார்?

எல்லாம் விட ஐம்பதுக்கும் குறையாத ஆணும், பெண்ணும், குழந்தையுமான கூட்டத்தில் ஆண்களெல்லாம் ‘கன்னீப்பாவாகவும்’ பெண்களெல்லாம் ‘கன்னீமா’வாகவும் இருக்க யாரோ ஒரு கன்னீப்பாவோ கன்னீமாவோ கூப்பிடும்போது எப்படி சரியான கன்னீமாவோ கன்னீப்பாவோ புரியாத பாஷையில் பதில் சொல்கிறார்கள்?

ஐந்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புவரை அயனாவரம் ஜாயிண்ட் ஆஃபீஸ் ஓரம், பள்ளிக்கூட மைதான நிழலில் என்று இவர்களை அவதானிப்பதே பெரிதும் படித்த படிப்பு எனலாம். ஏழாவது வகுப்பு படிக்கும்போது பதினொண்ணாம் வகுப்பு அண்ணன்மார் சொல்லிக் கொடுத்தபடி கும்பலாக போய் குறத்திகளின் எதிரில் மூக்கைச் சொரிந்தால் ‘போசடிகெ, மாதர்சோத்’ என்ற இன்ன பிறவு வசவுகளுக்கான காரணம் பதினொன்றாம் வகுப்புக்குப் சென்றபோது புரிந்து கோபம், பயம், வெட்கம், அருவெறுப்பு என்று கலவையான உணர்ச்சிகளுக்கு ஆளானது சரிதானா?

நாலணாவுக்கு தம்பிடி குறையாது என்று லோலோ என்று கத்தும் கன்னீமா, பிச்சைக்காரியின் குழந்தை கழுத்தில் கருகுமணி போட்டுவிட்டு கொஞ்சுவாள். பேறு வீடுகளில் பேரம் பேசாமல் குழந்தைக்கு கருப்பு வளவியும், கருப்பும் வெளுப்புமான மணிகோத்த கால் கயிரும் கொடுப்பாள். குடலேற்றம் கண்டு துடிக்கும் குழந்தையை இரண்டுகாலை விரலிடுக்கில் பிடித்து தூளி மாதிரி மூன்று வீச்சு வீசி சிரிக்கச் சிரிக்கத் திரும்பத் தருவாள். கையில் நிற்காமல் துடிக்கும் குழந்தையை பார்த்த மாத்திரம் எங்கோ சுளுக்கென்று முறத்தில் இட்டு புடைக்கும் மாயத்தில் அது ‘ஙே’ என்று இளிக்கும். கொஞ்சம் போல சோறோ, குழம்போ, இரண்டு வெற்றிலையோ, ஒரு இணுக்கு கட்டைப் புகையிலையோ கொடுத்தால் போதும். நரம்புச் சிலந்தி எடுத்துக் கொளுத்தி புதுத்துண்டும், கிழிந்த சட்டையும், கவுளி வெத்தலையில் வைத்துக் கொடுத்த 5ரூ தட்சணையோடு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து முடித்த சர்ஜனின் களைப்போடும் பெருமிதத்தோடும் ‘வ்ர்ரேஞ்சாமி’ என்று போகும் கன்னீப்பா கிழவன் அடுத்த அரைமணியில் ஏழாம் நம்பர் சாராயக் கடையில் ஏற்றிக் கொண்டு கன்னீமாவோடு கோவணம் அவிழ மல்லுக் கட்டுவான். கன்னீமாக்கு கொடுக்காமல் மொத்தமும் குடித்த குடிக்கு சண்டை.

தினமும் பார்த்துப் பார்த்து எந்தக் கன்னீமாவுக்கு எந்தக் கன்னிப்பா புருஷன், எந்தக் கன்னீமா மகள், எந்தக் கன்னிப்பா மகன், எந்தக் கன்னிமா அத்தை, சித்தி போன்ற உறவுகள் புரிந்தது. வாரம் ஒருமுறை செங்கல் அடுப்பில் அலுமினிய டேக்ஸா ஏறுகையில் இன்னைக்கு எந்தப் பூனைக்கு ஆயுசு முடியும் என்று பெட் கட்டும் அளவு புரிந்து வைத்திருந்தோம். கருக்கலில் பால் வாங்கிக் கொண்டு வருகையில் கன்னீப்பா கிழவன் காக்கா அடிக்கத் தயாரானால் அன்றைக்கு வீட்டில் திட்டுதான். பால் வண்டி லேட்டு என்று சொல்லிவிடலாம். அதற்காக ‘கன்னீப்பா கிழவன்’ காக்கா அடிக்கும் காட்சியை விட முடியுமா என்ன?

விரலளவு அடிக்கணுவில் ஆரம்பித்து சிறுத்துக் கொண்டே வந்து மெலிதாக முடியும் முனையில் சின்னக் கோலிக் குண்டு அளவு தார் உருட்டி வைத்திருப்பான். டால்டா டப்பாவிலிருந்து இரண்டுகை சோறு விசுறுவான். ‘க்ராவோவ்வ்வ்வ்வ்க்ரா’ என்று ஒரு குரலுக்கு இருபது முப்பது காக்கைகள் வந்திறங்கும். மறைவிலிருந்தபடியே அந்த மூங்கிலின் வீச்சுக்கு பத்து காகமாவது சுருண்டு விழும். பாய்ந்து அள்ளிப் பிடித்து றெக்கை முறுக்கி வலைக்கூடையில் வைக்க ஆரம்பிக்க வொர்க்‌ஷாப் ஆட்கள் எனக்கு உனக்கு என்று போட்டியிடுவார்கள். அந்த ஒரு வீச்சுதான். கிடைத்தவர்களுக்கு சந்தோஷம். கிடைக்காதவர்களுக்கு வருத்தம். ஏதேதோ வியாதிக்கு ரத்தம் கறி என்று மருத்துவப் பக்குவம் வேறு இலவசம்.

காலையில் எட்டரைக்கெல்லாம் தொழில் பார்க்கக் கிளம்பி விடுவார்கள். மைடப்பா, சாந்து புட்டி, பாசி மணி, ஊசி மணி, கருப்பு வளவி, திருஷ்டி மணி, ப்ளாஸ்டிக் மோதிரம், ப்ளாஸ்டிக் வாச், சீப்பு இதர சாமான்களோடு. ரிட்டையரான பெருசுகளும், அன்றைக்கு சமைக்கும் ஒன்றிரண்டு குடும்பங்களும் மட்டும் இருக்கும். எட்டாவது முழுப்பரிட்சை முடியும்போதுதான் அந்தக் கன்னிம்மா சிறுமி படுத்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. வலது கை முழுதும் ரத்தக் களறியாய்க் கொப்புளங்கள். ஓயாது அழுகை. என்னமோ எண்ணெய் போடுவாள் ஒரு கிழவி. முழுப்பரிட்சை முடிந்து திரும்பவும் பள்ளிக்குச் சென்றபோது பார்த்தால் பேரதிர்ச்சி. கையில் சதை என்பதே இல்லை. மஞ்சளும் சிவப்புமாய் எலும்பும், சதையுமாய் அரை மயக்க நிலையில் கிடப்பாள். எல்லாரும் போனதும் ‘கன்னீப்பா கிழவன்’ வீதியோர வெள்ளை கருப்பு கல்லைக் கழுவுவான். ஏதோ இலைகள், கொடிகள், மஞ்சள் கிழங்கு அதைத் தட்ட உடைந்து போன ஒரு குழவி. அதில் அரைத்து ஏதோ எண்ணெயில் வதக்கி ஆற வைத்து அவள் கையில் பற்றுப் போட்டு வலியில் அவள் கதற, அவளை அடக்க இவன் கத்த என்று ஒரு கூட்டம் சேர்ந்துவிடும்.

‘காக்கா கிழவன்’ என்று பேர்தானே தவிர நரைத்தாலும் தலை கொள்ளாத முடியும் குடுமியும் எங்கிருந்தோ வித்தியாசமான தேன் கலர் சருமமும், வழக்கமான தூசும், டயர்கரியுமற்ற உருவம். நல்ல உயரம். கையில் மார்பில் கிளி, கன்னமா (கன்னீம்மா) பெயர், ஒரு வாளைச் சுற்றிப் படர்ந்த இரண்டு பாம்புகள், நெற்றியில் மூன்று புள்ளிகள் என்று பச்சை குத்தியிருப்பான். கரண்டை கரண்டையாக காலும் கையும் ஒட்டிய வயிறும் கிண்ணென்றிருக்கும். கையில் வாட்ச் இல்லாத ஸ்ட்ராப் மட்டும். எல்லா விரலிலும் ஸ்டீல் அல்லது செம்பு மோதிரம். நரிப்பல் கோர்த்த பவளமணி. எம்.ஜி.ஆர் படம் வைத்த ரெக்ஸின் பர்ஸ். பல வண்ண ஒட்டுப் போட்ட ரெக்ஸின் பை. அதற்குள் ப்ளையர், மணிகள், மணி கோர்க்கும் அலுமினிய செம்பு கம்பிகள்.  எப்போதும் புதிதாக இருக்கும் சிவப்பு அரணாக் கயிற்றில் அழுக்குக் கோவணம். வெற்றிலை குதப்பிய வாய். கொச்சைத் தமிழில் எம்.ஜி.ஆர் படப்பாட்டு. சாயந்திரமானால் சாராயம், கன்னீமாவோடு பஞ்சாயத்து.

அந்தப் பெண்ணுக்கு வைத்தியம் என்பதாலோ அல்லது ஆஃபீஸ் வாசலிலே கடையும் போடுவதாலோ காக்காக் கிழவன் வேறெங்கும் போவதில்லை. நாளாக நாளாக அந்தப் பெண்ணின் புண் ஆறுவதாகவும் தெரியவில்லை. அந்தக் கிழவனின் வைத்தியமும் நிற்கவில்லை. ஒன்பதாவது பரீட்சை முடிந்தபோது அந்தச் சிறுமி பிழைக்காது என்ற நிலையில் கிடந்தாள். விடுமுறை முடிந்து வந்தபோது காயங்கள் முற்றிலும் ஆறி செம்புண்ணாக உரித்த கோழி நிறத்தில் இருந்தது கை. சிரிப்பும் சுளிப்புமாக கிழவனுக்கு ஒத்தாசை செய்து கொண்டு தூசும் அழுக்குமாக இருப்பாள். எப்படியோ பள்ளி முடிந்து போகும்போது கன்னீமா வளர்ந்துவிட்டிருந்தாள். அந்தக் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது. பின்பு படிப்பு முடிந்து வேலை என்றோடி அவர்களை அவதானிக்கும் வாய்ப்பே அற்றுப் போனது.

ஐந்தாறு வருட இடைவெளி இருக்கும். ஆஃபீஸ் முடிந்து கேரேஜ் ஸ்டேஷனில் இறங்கி ஜாயிண்ட் ஆஃபீஸ் வழியாக வரும்போது பழைய இடத்தில் ஒரு பெண்ணும் ஒரு கிழவனும். அந்த தேன் நிறம் சட்டென்று பார்க்க வைத்தது. மடிப்பு மடிப்பாக தடித்து கிடந்ததது தேகம். காது சுருங்கி, மூக்கிருந்த அடையாளமாக இரண்டு ஓட்டைகள், உதடற்ற பற்கள், விரலற்ற இரண்டு உள்ளங்கைகளில் அழுந்தப் பிடித்த அலுமினிய டம்ப்ளர். ஊதிக் கூட குடிக்க முடியாததால் சூடாக இருந்ததாலோ என்னவோ விரலற்ற கால்களுக்கிடையில் டம்ப்ளரை இறுக்கியபடி இரண்டு உள்ளங்கைககளாலும் ஆரஞ்சு சைசில் இருந்த ஒரு கல்லை எடுத்து அடுப்பில் கிளறிக் கொண்டிருந்தவளின் முதுகில் வீசினான். எழுந்து வந்து டம்ப்ளரில் இருந்ததை ஆற்றிக் கொடுத்துப் போனாள். சாப்பிட்ட பிறகு ஒரு கம்பியை வளைத்து பீடியை சொருகி, அடுப்புக் கங்கில் கொளுத்திக் கொடுத்தாள். இரண்டு உள்ளங்கையிலும் பிடித்து பல்லில் கடித்து கைகொண்டு பொத்தி எப்படியோ உறிஞ்சி புகைத்தபடி திரும்பியவன் நிமிர்ந்தான். இமைகளும் சுருங்கி பிதுங்கிய வெண்ணிறக் கோளமாக கண்கள். மெதுவே கை பிடித்து அழைத்துப் போய் கால்வாயோரம் போன கன்னீமாவின் கழுத்தில் கருகமணி.

திடீரென வந்தது போலவே திடீரென ஓரிரு மாதங்களில் காணாமல் போனார்கள். கும்பலிலிருந்து எப்படி இவர்கள் மட்டும் பிரிந்து வந்தார்கள்? ஒரு வேளை அந்தப் பெண்ணை மணந்ததால் ஒதுக்கி வைத்துவிட்டார்களா? புற்று வைத்த கையை இலை தழையால் குணமாக்கியவனுக்கு பெருநோய்க்கு மருந்தில்லையா? திடீரென எப்படிக் காணாமல் போனார்கள். ஒரு வேளை காக்கா கிழவன் இறந்திருக்கக் கூடுமோ? இதை எழுதும்போது கூட அன்றெழுந்த இந்தக் கேள்விகளுக்கு பதிலில்லை. அப்புறம் அவர்கள் எவரையும் பார்க்கவும் முடியவில்லை.

Monday, March 5, 2012

ஐ போன் இடுகை

இப்போது ஐ போனிலிருந்தே இடுகை பப்ளிஷ் பண்ணலாம். ஐ போன் ஸ்டோரில் பிளாக்கர் விட்ஜெட்டை தரவிறக்கி உங்கள் ஜி மெயில்கணக்கில் நுழைந்தால் உங்கள் கணக்கில் இருக்கும் எந்தப் பதிவிலும் இடுகை வெளியிடலாம். இது சோதனை இடுகை

Created by "Tamil for iPhone/iPad"

Tuesday, January 10, 2012

கேரக்டர் : வைத்தி மாமா

வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம் போலவே பொதுவான ஒரு தொழிலும் அவர்களுக்கு உண்டு. அந்தக்காலத்து பி.ஏ. லிட்ரேச்சர் ஆஃபீஸர்களுக்கு அந்தக் காலத்து சிக்ஸ்த் ஃபார்ம் (இந்தக்காலத்து எம்.ஏக்கு சமமாக்கும் என்ற அலட்டலுடன்) எனக்கு டிக்டேட் பண்ணக்கூடிய அளவுக்கு உனக்கு லேங்க்வேஜ் போதுமா என்ற திமிருடனும், நான் சொல்ற ஸ்பீடுக்கு எழுதீடுவியா என்ற கித்தாப்புடன் இருக்கும் அதிகாரிக்கு ஸ்டெனோவாக ஒரு லவ் ஹேட் ரிலேஷன்ஷிப்புடன் இருப்பவர்கள். தனிப்பட்ட ரீதியாக, டெரர் ஆஃபீஸர் வீட்டில் எலி என்ற ரகசியத்தை கான்ஃபிடன்ஷியலாகப் பரப்பும் தூதர்கள். தன்னைத் தவிர யாரும் நெருக்கமாகிவிடாமல் கீழ்மட்ட ஊழியர்களைப் போட்டுக் கொடுத்தே பேர்வாங்கும் புலவர்களும் இதில் உண்டு.

வெள்ளிக்கிழமை ரேசுக்கு நம்பர் கிடைக்காமல் அல்லாடும் அதிகாரியின் கடுப்பைப் புரிந்துக் கொண்டு யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பது, வெளியூர் டூர் போகும்போது தீர்த்தவாரி கொண்டாடும் ஆஃபீசர்களுக்குத் தோதான ப்யூனை செலக்ட் செய்து கொண்டு போவது, மதுரை டூட்டியானால் இருட்டுக் கடை அல்வாவும், சுங்கடிப் புடவையும் விற்கும் ஊழியரின் தகவல், திருச்சியானால் மாவடு, மாம்பழம், மடிக்கு வாழைமட்டை இத்யாதிகள் போன்ற பொது அறிவு மிக முக்கியம்.

பிட்மன் வேண்டுமானால் பென்ஸிலில் எழுதி இருக்கட்டும், நாங்கள் இங்க் பேனாவோ, பால்பென்னிலோ எழுதுவோம் என்ற தெனாவட்டும், ‘நீ திக்கித் திணறி குடுக்கற டிக்டேஷனுக்கு ஷார்ட் ஹேண்ட் ஒரு கேடா’ என்று சொல்லாமல் நக்கலடிக்கும் லாங் ஹேண்ட் நோட்ஸ் எழுதும் குசும்பும், இதற்காகவே எங்கேயோ ட்ரெயினிங் எடுத்தமாதிரி இருந்தவர்கள் இவர்கள். சக ஸ்டெனோ பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது கிழவியோ குமரியோ, ஆஃபீசரின் ‘அந்தரங்க’ என்பதை அழுத்தி காரியதரிசியாகப் பரப்புபவர்கள். இளம் வயதானால் டெரிலின் ஷர்ட்டும், கத்தி முனை டெரிகாட்டன் பளபளா பேண்டும், மினுக்கும் ஷூவுமாக பந்தாவும், நடுத்தர வயது தாண்டினால் தொளதொளா பேண்டு அல்லது வேட்டி, இஸ்திரி காணாத சட்டை (நடு முதுகில் கொடியில் உலர்த்திய கோடு அணில் மாதிரி தெரியும்), ஏரோப்ளேன் டயர் செருப்புமாக பரிணாம மாற்றம் அடைந்தவர்கள். எழுதுவது பேனாவில் என்றாலும், ஸ்டெனோ என்பதற்கு அடையாளமாக கூராக சீவிய பென்ஸிலும், காலிகோ அட்டைக்குள் செருகிய ஷார்ட் ஹேண்ட் நோட்டும் கவச குண்டலங்களாகக் கொண்டவர்கள்.

வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் இதற்குரிய சகல அடையாளங்களும் கொண்டவர். பெரும்பாலும் சந்தனக் கலர் டெரிலீன் ஷர்ட், காப்பி கலர் பேண்ட், நெற்றியில் பட்டையாக விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சிந்தூரம், ஐயப்பன் கோவில் கருப்பு மை என்று சகலமும் இருக்கும். சுமாரான உயரம், எச்சில் விழுங்கினால் தெரியும் பல்லி வெள்ளை நிறம், அலையலையான முடி, குறுகுறு கண்கள், கண்ணாடி, மழுங்கச் சிரைத்து படிகாரம் பாலிஷ் போட்ட முகம், தாமரைப் பூவிதழ் நிறத்தில் மெல்லிய உதடுகள், மெலிந்த கையில் ஃபேவ்ரி லூபா கடிகாரம், விரல் நுனிகளில் காலைப் பூஜையின் அட்சதை மஞ்சள், எப்போதும் சிரித்த முகம் என்று லைவ்லியாக இருப்பார். காலையில் வந்ததும் டைப்ரைட்டருக்கு மூடிய தகரக் கூட்டின் இரண்டு பக்கப் பூட்டுக்களை கழற்றி, டேபிள் அறையிலிருந்து டங்க்ரி துணியால், குளுப்பாட்டிய குழந்தை மாதிரி வாஞ்சையோடு துடைத்து, கவரைக் கழற்றி டைப்பிங் பேஸ்கட்டில் ப்ரஷ் செய்து திரும்பப் பூட்டி, பதக்க இரண்டு உள்ளங்கையும் ஊன்றி கண்ணில் ஒற்றிக் கொள்ளும்போது வாய் முணு முணுக்கும். ஒரு வேளை டைப்ரைட்டர் அகவலோ, அந்தாதியோ அவரே இயற்றி இருக்கக் கூடுமாவென சந்தேகம் பலருக்கும் உண்டு. பிறகு டேபிள் கண்ணாடியின் கீழ் இருக்கும் வெங்கடாசலபதி, லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார், குருவாயூரப்பன், அண்ணாமலையான், முருகன் இத்யாதியோடு பல சாமியார் படங்களுக்கும் முணுமுணுப்பும் கண்ணொற்றுதலும் நடக்கும்.

பிறகு மேல் சட்டைப் பாக்கட்டிலிருந்து புறப்படும் பாக்கட் டைரியின் உள் மடிப்புகளில் இருக்கும் சில்லறை தெய்வ வழிபாடு, ஷார்ட் ஹேண்ட் நோட்டுக்கு ஸ்பெஷலாக முகத்தோடு ஒற்றி ஒரு நமஸ்காரம், கால் இண்டிகேட்டர் பச்சையில் இருக்கிறதா என்ற செக்கப்புக்குப் பிறகு ப்யூனை அழைத்து ஆஃபீசரை வரவேற்று ப்ரீஃப்கேஸ், சாப்பாட்டுப் பை கொண்டு வர அனுப்பி, ஆஃபீஸர் ரூம் துடைத்திருக்கிறதா, ஃபைல் எல்லாம் நேராக இருக்கிறதா, அவுட் ட்ரே சுத்தமாக இருக்கிறதா, டெலிஃபோன், இண்டர்காம், காலிங் பெல் செக்கிங் எல்லாம் முடித்து அயற்சியோடு வந்து ஒரு வாய் தண்ணீர் குடித்து முடிக்க, சார்வாள் வந்திருப்பார்.

‘குட் மார்னிங் சாரோடு உள்ளே போய், அன்றைய கடைமைகளான மச்சினிக்கு டிக்கட், மாமனாருக்கு எமர்ஜன்ஸி கோட்டா தகவல், காசிச் செட்டித் தெருவில் வாங்க வேண்டிய பன்ஸி ரவைக்காக பிதுக்கி எண்ணிக் கொடுத்த சில்லரை ஆகியவற்றோடு வந்தால் அப்புறம் ஆரம்பிக்கும் வைத்தி மாமாவின் ராஜ்ஜியம். ஆர்டர் அதகளம் பறக்கும். சீனியர் ஸ்டெனோவாக இருந்தும், லேட்டஸ்டாக கோத்ரஜ் ஏ.பி., ரெமிங்டன் மெஷினெல்லாம் ஒத்து வராது. பழைய ஹால்டா மெஷின்தான். பக்கத்தில் குட்டியாக போர்ட்டபிள் ப்ரதர் டைப்ரைட்டரும் இருக்கும். வைத்தி டைப் அடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் ரசனை உள்ளவர்களுக்கு அது ஒரு கச்சேரி. சில நேரம் மணி அய்யரின் அவுட்வாண சங்கதியாக, சில நேரம் பாலக்காடு மணி அய்யரின் ஃப்ரண்களாக, சில நேரம் சிவமணியின் ட்ரம்ஸாக ரசிக்க முடியும். இன்றைக்கு வேர்ட் ஃபைலில் ஃபார்மட் செய்வதற்கே மூச்சுத் திணறிப் போகும் வேளையில், அந்த வேகத்தில் அடிக்கும் போதே கூடிய வரை வலது பக்க மார்ஜினும் ஒழுங்காக, மேல் கீழ் மார்ஜின் சீராக, கடைசிக் கார்பன் காப்பியிலும் எல்லா எழுத்தும் ஒரே தெளிவுடன் இருக்கும்படியான கலைஞன் வைத்தி. ஒரு எழுத்து விட்டுப் போனதோ, ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு கரக்டிங் ஃப்ளூயிட் போடுவதோ, எக்ஸ் அடிப்பதோ கிடையவே கிடையாது.

பொதுவாக ஸ்டெனோக்கள், அதுவும் உயர் அதிகாரியின் ஸ்டெனோக்கள் காசுக்காக எக்ஸ்ட்ரா வேலை பார்ப்பது அரிது. வைத்தி மாமாவுக்கு அதெல்லாம் பொருட்டில்லை. வைத்தி மாமா டைப்பிங் என்றால் ப்ரூஃப் பார்க்கத் தேவை இல்லை என்பதால், ஊழியர்களின் வீட்டுக் கடன் அடமானப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள், காண்ட்ராக்ட் ஒப்பந்தங்கள், அலுவலக விசாரணை மனுக்கள் என்று பல வேலைகள் தேடி வரும். அத்திப் பூத்தாற்போல் டிக்டேஷனும் உண்டு. களைத்த விரலைச் சொடுக்குவது, பெருமூச்சு, சலிப்பு ஒன்றும் காணமுடியாது. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் ஆஃபீஸ் அக்கப்போர்கள், கிசுகிசுக்கள், இதர ஆஃபீசர்களின் நிறை குறைகள் பற்றிய விமரிசனம் எல்லாவற்றிற்கும் எங்கிருந்து நேரம் ஒதுக்குகிறார் என்பது யாரும் அறியாத ஒன்று.

வைத்தி மாமா, சில நேரம் மாமா என்று அழைக்கப்படுவதற்குக் காரணமும் உண்டு. மனுஷனுக்கு ஒரு குணக்கேடு உண்டு. ஒரு ஊகமாக வேறு யாரும் செய்ய வாய்ப்பில்லை என்று ஏகோபித்த கருத்துடன் இருந்தாலும் நிரூபிக்கவும் முடியாமல், கையும் களவுமாக பிடிக்க முடியாமல் வைத்தி மாமா செய்யும் ஒரு வேலை கூலரில், கக்கூஸ் கதவுகளில், லிஃப்டில் என்று ஜோடி சேர்த்து எழுதுவது. எங்கெங்கு காணினும் கமலா (ஹார்ட்டின் ஏரோ) அனந்து, டெய்ஸி/சுந்தரம், மெஹர்/கார்த்தி என்று சீர்திருத்தக் காதல் உட்பட சகலமும் காணலாம். கொடுமை என்னவென்றால் இது குறித்து ஆஃபீசரிடம் முறையிட பெர்மிஷன் கேட்டு வரும்போது மாமா அவர்களுக்கு ஆதரவாகத் திட்டும் திட்டில் வேறு யாராவது எழுதி இருந்தால் தற்கொலையே செய்துக் கொள்ளக் கூடும். யாராவது பிடிக்காத ஆட்கள் என்றால் மொட்டைப் பெட்டிஷன் போடுவது உபரிப் பொழுது போக்கு.

மாமாவுக்கு மாதம் ஒரு முறை எப்படியாவது தீர்த்தவாரி ஆகிவிடும். காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சியோ, கல்யாணம் நிச்சயமான கொண்டாட்டமோ, அலுவலகப் பரிட்சை பாசோ, மகன்/மகளுக்கு வேலையோ ஏதோ ஒரு சாக்கில் நடக்கும் பார்ட்டியில் வைத்தி மாமா உற்சாகமாகக் கலந்து கொள்வார். மூடியைத் திறக்கும்போதே முழி சொருகும் அளவுக்குதான் தாங்கும் சக்தி என்றாலும், விடுகிற பந்தா முழு பாட்டிலை ராவாக அடிக்கிறவன் தோற்கும் அளவிற்கு இருக்கும். பார்ட்டி முடிந்து மாமாவை வீடு சேர்க்கும் பொறுப்பு இருப்பதால் ப்யூனுக்கும் ஆங்கே பொசியும். ஒரு விரற்கணு மதுவுக்கு அரையடி நீர் சேர்த்து, தலை குலுக்கி, ஊறுகாய் நக்கி, சிப்ஸ் கடித்து, வடையோ, மிக்ஸரோ ஸ்ருதி சேர்த்து பார்ட்டி முடியும் வரை பாதி தாண்டியிருக்க மாட்டார். புறப்படும் நேரம் பெரிய குடிகாரன் மாதிரி ஒரு கல்ப்பில் முடித்து, ஹாய்/பை சொல்லி ப்யூனுடன் புறப்படும் போதுதான் சிக்கல். எத்தனை சாமர்த்தியமாக கூட்டிக் கொண்டு போனாலும் ஏதோ ஒரு தெருவிளக்குக் கம்பம் கண்ணில் பட்டு/கவனத்தில் பட்டால் போதும்.

அது சாய்ந்து விழுந்துவிடுவது போல் தோன்றுமோ என்னமோ? கைப்பையை காலிடுக்கில் வைத்துக் கொண்டு விளக்குக் கம்பம் சரியாமல் பிடித்துக் கொள்வார். படைத்த ப்ரம்மனே வந்தாலும் அவரைப் பிரிக்க முடியாது. ஒரே ஒரு வார்த்தை வெளிவராது. மணிக்கணக்கில் பிடித்தபடி நிற்பார். ப்யூன் ‘சார்! உழாது வா சார்! லாஸ்ட் ட்ரெயின் போயிடும் சார் வா சார்! என்ற கெஞ்சலெல்லாம் காதில் ஏறும் என்ற நம்பிக்கை பொய்த்தபின், சோடா வாங்கி முகத்தில் அடித்து, கன்னத்தில் தட்டி என்று சண்டிமாடு கணக்காய் இடம் பெயர்த்தினால் தள்ளாட்டமின்றி போவார். ஆனாலும் எப்போதும் சள சளவென்று பேசுபவர் ஊமையாகி விடுவார்.

சவடால் வைத்தி உண்மையில் பெரும் கோழை என்பதை விதி ஒரு நாள் காட்டிக் கொடுத்துவிட்டது. ஒரு ரவுடி ஊழியனை பணி நீக்கம் செய்தபின் அப்பீலுக்காக ஆஃபீசரைப் பார்க்க வந்திருந்தான். வரும்போதே நல்ல போதை. ஆஃபீஸர் அறையில் இல்லை என்பதை விட அவருக்கு குடிகாரர்களைக் கண்டால் இருக்கும் பயம் தெரியுமாதலால் சவடாலாக ’அதெல்லாம் இப்ப பார்க்க முடியாதுய்யா! தெளிஞ்சிருக்கும் போது வா!’ என்று எகிறியபோது துணைக்கு ப்யூன் இல்லை என்பதை மறந்துவிட்டார். ‘அய்ரே! என்னப் பார்த்தா போதை பண்ணா மாதிரியா தெரியுது?’ என்று அடிக்கப் பாய்ந்தபோது, தப்புக் கணக்குப் போட்டு ஆஃபீசரின் அறைக்குள் பாய்ந்து விட்டார். அதே வேகத்தில் பாய்ந்து அந்த ஊழியன் விட்ட ஒரு அறையில் அங்கிருந்த சோஃபாவில் விழுந்து, அபயக் குரல் எழுப்புவதற்குள், கொலை வெறியோடு விழுந்த சில அறைகளில் காலரா வந்தவன் போல் கழிந்து விட்டது. அப்புறம் ப்யூன்கள் ஓடி வந்து விலக்கி விட்டு, வைத்திமாமாவை டாய்லட்டுக்கு அழைத்துப் போய், எல்லாம் செய்தாலும் விலை உயர்ந்த சோஃபா கழித்துக் கட்டப்பட்டது. ஆனாலும், ஆட்டோ பிடித்து உடை மாற்றி கடமையுணர்வுடன் திரும்பவும் டூட்டிக்கு வந்த வைத்திமாமாவின் கடமை உணர்ச்சியை என்னவென்று பாராட்ட?

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து என்பார்களே அப்படி ஏதோ ஒரு சபிக்கப் பட்ட நேரத்தில் நேர்மையான, போலீஸில் உயர்மட்ட தொடர்புள்ள ஒரு அதிகாரியைக் கடிக்கத் தோன்றியது வைத்தியின் குணக்கேடு. ரிட்டையர் ஆக மூன்றாண்டு இருந்த நிலையில், ப்ரமோஷனுக்காக போய் பார்த்தபோது இவரின் குணக்கேடும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும், எல்லாருக்கும் நல்லவரான அந்த அதிகாரி கடுமையாகப் பேசிவிட்டார். அந்தக் கடுப்பில், ரொம்பவும் புத்திசாலித்தனமாக அவர் அறையில் இருந்த ஒரு பழைய டைப்ரைட்டரில் பொய்க் கையெழுத்தோடு விஜிலன்சுக்கு ஒரு பெட்டிஷன் தட்டிவிட்டார் வைத்தி. உயர் அதிகாரி ஆனதால் போலீசுக்கு கேஸ் போய்விட்டது. சந்தேக லிஸ்டில் வைத்திமாமா இருந்தார். புலனாய்வில் தேய்ந்து போன ஒரிரு எழுத்துக்களை வைத்து இவர் அறையில் இருந்த ஹால்டா டைப்ரைட்டரில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாட்சியம் போதாதுதான் என்றாலும், ஓரிரு அறைக்கே கழிந்தவர், போலீஸ் விசாரணைக்கு என்று அழைத்ததும் கலங்கிப்போனார். ஒரு மிரட்டல், ஒரு அறையில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு வெளிறிப் போய் வந்த பிறகு சஸ்பென்ஷன், பணி நீக்கம் என்றாயிற்று.

திறமையான ஆள் என்றாலும் யாருக்கு எந்த நேர்த்தில் என்ன நேருமோ என்ற சந்தேகமும் சேர்ந்ததால் அப்பீல் எதுவும் ஏற்கப்படவில்லை. டிஸ்மிஸ் ஆனதால் பென்ஷன், க்ராச்சூவிடி, ரிடையர்மெண்ட் பாஸ் எதுவும் இல்லை. பின்பொரு நாள், ஹைகோர்ட் எதிர் சந்து ஒன்றில் நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் வாங்கச் சென்றபோது ஒரு கடை ஓரத்தில் ஒரு பழைய ஹால்டா மெஷின் எதிரில் வைத்தி மாமா அமர்ந்திருந்தார். நீர்க்காவி வேட்டியும், காலர் கிழிந்த சட்டையும், செருப்பற்ற காலும், பொலிவிழந்த முகமுமாக இருந்த போதும், டைப்ரைட்டரில் விரல் பாவியபோது மணி அய்யர்களோ, சிவமணியோ அவர் விரலை விட்டு நீங்கி விடவில்லை.