Monday, July 18, 2011

விடியலற்ற விடியல்

’அம்மா இவனப் பாரும்மாஆஆ!, போய்ட்டு வரேம்மா, எம்மா கீரம்மா’
எங்கோ தொலைதூரத்தில் கேட்பதாக 
மூளையின் எத்தனையோ மில்லியன் செல்களில் உணர்வும், யோக நிலைக்கீடான ஸ்வப்னாவஸ்தி நிலையில் ‘எட்டாச்சி எழுந்திருங்கோ’ என்ற இடிக்குரலோடு பூகம்பத்தை நிகர்த்த உலுக்கலில் உடலை விட்டு வாக்கிங் போன ஆவி அவசரகதியில் திரும்பி கால்மாடு தலைமாடாக விரவி திடுக்கிட்டெழுந்து, பனி முகடும், பசும்புல் வெளியும் தேடிய கண்களுக்கு கான்க்ரீட்டை விருந்தாக்கி, தவக்கோலக் கண்கள்போல் அரை மூடிய அரவிந்த நயனத்தோடு நழுவிய வேட்டியை இறுகக்கட்டி, போர்வை மடித்து, காலணியணிந்து கழிப்பறை நுழையுமுன் கணினிக்கு உயிரூட்டி, கட்டை ப்ரஷ்ஷில் கால் இன்ச் பேஸ்ட் பிதுக்கி வலப்புறம் நாலு இடப்புறம் நாலு உள்ளால் மீண்டும் என்று தேய்த்துறக்கம் கழுவி, கால் செம்பு தண்ணீரும், காப்பி என்ற பெயரில் சுடுநீரும் அருந்தி, தினத்தந்தி பிரித்த வினையில் கலங்கிய வயிறு மேற்புறமாகப் பொங்குமோ என்ற பயத்தில் கழிப்பறை ஓடி, ஷேவிங் வேண்டுமா வேண்டாமா என்ற பட்டிமன்றம் நடத்தி, வரட்டிழுப்பாவது இழுத்து,ஷவர் திருப்பி காக்காய் குளியல் போட்டு, மூன்று விரல் தொட்டு திறுநீரிழுத்து ஒரு நொடி கண்மூடி, உள்ளாடை மேலாடை கிடைத்ததை உருவியணிந்து, செல்லெடுத்து, கைக்குட்டை திணித்து, ஒபாமாவோ ஏன் மன்மோகனோ கூட நம்மிடம் ஆலோசனை கேட்டு மெயில் அனுப்பவில்லை என்று உறுதி செய்துகொண்டு சட்டென மூடி பட்டெனக் கிளம்புவதில் தொடங்குகிறது என் நாட்கள்.

13 comments:

settaikkaran said...

எஸ்.பி.பி.மூச்சு விடாம பாடினதைக் கேட்டிருக்கேன். இது மூச்சே விடாம எழுதின கவிதையா? :-))

நட்புடன் ஜமால் said...

மூச்சு முட்டுதுங்கோ ...

படிக்கையில்

ஸ்ரீராம். said...

தொடங்கும்போதே இவ்வளவுன்னா...

கே. பி. ஜனா... said...

ஷேவிங் வேண்டுமா வேண்டாமா என்ற
பட்டிமன்றம் நடத்தி, வரட்டிழுப்பாவது இழுத்து,//
அதானே, அட்டகாசம்!

ஓலை said...

சார்! இந்த விடியலோட சேர்த்து ஆபீஸ்லும் விடியப் போற நிகழ்வும் ஒரே மூச்சா சொன்னீங்கன்னா.... ம்ம்ம், ஒரே மூச்சுல படிக்கிறதுக்குள்ள எங்களுக்கு மூச்சுக்கு மேல மூச்சு வாங்குது.

'பரிவை' சே.குமார் said...

அட்டகாசம்!
அட்டகாசம்!
அட்டகாசம்!

சத்ரியன் said...

//‘எட்டாச்சி எழுந்திருங்கோ’ என்ற இடிக்குரலோடு ..//

மணமான புதிதில் ‘ தேன்மதுரக் குரலா’ இருந்துச்சி. இப்ப ’இடிகுரலா’யிடுச்சோ?!

சத்ரியன் said...

//ஷவர் திருப்பி காக்காய் குளியல் போட்டு..//

இனிமே இந்த காக்கா குருவி இதுகள இழுக்குற வேலை வெச்சிக்கிட்டீங்க... “ப்ளூக்ராஸ்’ - ல இருந்து 108 வரும்.ஆமா.

ஈரோடு கதிர் said...

||தேய்த்துறக்கம் கழுவி||
:)

கவிதை சூப்பர்ணே!

vasu balaji said...

நன்றி சேட்டை, ஜமால், ஸ்ரீராம், ஜனா, சேது, குமார், சத்திரியன் & கதிர் அண்ணா:))

Anonymous said...

beautiful

தாராபுரத்தான் said...

தினமும் இதே வேளையா போச்சு..

மாதேவி said...

"விடியலற்ற விடியல்" எல்லாவீட்டிலும் பூகம்பம் வந்தால்தான் அடுத்து வேலை நடக்கும்போலை :))