Sunday, May 22, 2011

பொத்திக்கிட்டிருந்தா உத்தமம்..

மதிப்பிற்குரிய கலஞ்ஜர் அவர்களுக்கு,

    கலஞ்ஜர் என்பது உங்களைக் கிண்டல் செய்வதற்காகச் சொல்லப்பட்டதல்ல. கட்சி கட்சி என்று கஞ்சிக்கு வழியில்லாவிட்டாலும் உங்களைப் பாசமுடன் அழைக்கும் சாமானியத் தொண்டனால் அப்படித்தான் அழைக்கப்படுகிறீர்கள். வெள்ளிக்கிழமை உங்களை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது வருத்தத்தை விட கோபம் மேலோங்கியது. இன்று உங்கள் வழக்கமான பாணி சுய கேள்வி பதிலைப் படித்ததும் உங்களுக்கு வேண்டியதுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்த புகழ்பெற்ற பராசக்தி வசனத்திலிருந்தே இரு வரிகளைக் கடனாக எடுத்துக் கொள்கிறேன், இதற்கும் காசு எதிர்பார்க்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு.

    //உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். //

    ஓட்டுப் போடும் வயது வரும் முன்னரே ‘சூரியன் சின்னத்தப் பார்த்து போடுங்கம்மா ஓட்டு’ என்று நாலு தெரு சுத்தி, நடுமுதுகில் அடிவாங்கி ஒரு வேளை சோறு மறுக்கப்பட்டவன். உங்கள் ‘இதயத்தைத் தந்திடண்ணாவை’க் கேட்டுக் கேட்டு அழுதவன். திமுக படிப்பகத்தில் கலைந்து கிடக்கும் பத்திரிகைகளை அடுக்கி வைத்துக் காத்தவன். உங்கள் அரைநாள் உண்ணாவிரதம், மற்றும் காங்கிரசுக்கு கட்சியை தாரை வார்த்த கொடுமைகளைச் சகிக்காமல் கடந்த இரண்டு தேர்தல் தவிர திமுகவுக்கே ஓட்டளித்தவன். எல்லாவற்றையும் விட குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரை உள்ள தர்பைப் புல் சம்மந்தமுடைய பார்ப்பான்.

    நெஞ்சுக்கு நீதி ஐந்து பாகங்கள் எழுதிவிட்டேன். இது அடுத்த பாகத்துக்கான முன்னுரை அல்லது ‘மன ஓலம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏப்ரல் 27க்குப் பிறகு நீங்கள் எழுதவேண்டியதெல்லாம் ‘நெஞ்சுக்கு அநீதி’ என்பதை எப்போதாவது உணராமல் இருந்திருக்கமாட்டீர்கள். இந்த நிலையிலும் உங்கள் தோல்விக்கு வேறெதுவும் காரணமில்லை, தேர்தல் கமிஷன் எனும் பிரம்மராட்சச பூதமே என்பீர்களேயானால், உங்கள் நெஞ்சுக்கு மட்டுமல்ல, உங்களை நம்பி உழைத்த தொண்டனுக்குமே அநீதி செய்கிறீர்கள்.

    //பதினான்கு வயதில் ‘பனகல் அரசரைப் படித்து....வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான் தொடும் மாளிகைக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக் கொள்ள நினைத்ததும் இல்லை, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை.//

    இதை எழுதும்போது உதட்டை ஒரு ஓரமாக சுழித்து குறும்புத்தனமாக சிரிப்பீர்களே அது ஏனோ கவனத்துக்கு வந்து தொலைகிறது. இது அரசியல் வியாதியின் பாலபாடமல்லவா? டாஸ்மாக் சரக்கில் மட்டையான நிலையிலும் கூட உங்கள் விசுவாசத் தொண்டனாயினும் இதற்கு என்ன பதில் வரும் என்பதை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என நம்ப முடியவில்லை.

    //அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டுகாலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டுகாலம் ஆட்சிக்கு முதலமைச்சராக இருந்த கால கட்டங்களில் எதுவுமே சம்பாதிக்கவில்லையா என்ற கேள்விக்கு //

இப்படி ஒரு கேள்வி எழுப்பி புளுகத் துணிவில்லை; சம்பாதித்தேன் என்று சொல்லி அதற்காக திரைப்படங்களில் சம்பாதித்ததாக ஒரு கணக்குக் கொடுத்தீர்கள் பாருங்கள், அட அட!! இப்போது கூட உங்களுக்காக கூவி ஒடுங்கிப் போன வடிவேலுவின் ‘இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது’ என்ற வசனம் கவனம் வரவில்லையா?

பொருளாளராக இருப்பதற்கும், தலைவராக இருப்பதற்கும் கூடவா தனித்தனியாக கட்சியில் இருந்து சம்பளம் தருகிறார்கள்?

‘தாய் சேய் நலவிடுதி’ கட்டினீர்கள் சரி. பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்பு விழா நடத்தினீர்கள் சரி. இந்தத் தராசில் வைத்துப் பார்த்தால் இதைவிட பன்மடங்கு செலவிட்டு நூற்றுக் கணக்கில் தொழிற்கல்விக் கல்லூரிகள் கட்டியவர்கள் பெரிய தியாகிகள். அந்த முதலீடுகள் மக்களுக்காகவே.

அதென்ன தலைவரே 1940களில் வாங்கிய சம்பளத்துக்கு அப்புறம் 2004-2005க்கு போய்விட்டீர்கள்? சரி உங்கள் சம்பாத்தியம், உங்கள் கணக்கு. ஒரு பேச்சுக்கு 1940முதல் 2003 வரை உங்கள் வருமானமும், உங்களைச் சார்ந்தவர் வருமானமும் எவ்வளவு என்று சொல்ல முடியுமா? நிஜமாக சொல்லுங்கள், கடன் வாங்கிப் படம் எடுப்பவன் அல்ல சொந்தப் பணம் சுரண்டல் பணமேயானாலும், பெண் சிங்கத்துக்கும், இளைஞனுக்கும் கொடுக்கப் பட்டதாகச் சொல்லப்பட்ட பணம் தகுமா?

//கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள் உயிரினும் மேலான உடன் பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். //

அருமை அருமை தலைவரே. ஆம் ஆயிரம் ஆயிரம்தான். கூடவே கட்சிக்கு ஒரு துரும்பும் சம்பந்தமற்ற குடும்பம் கிள்ளியெடுத்த கோடிகளை ஒப்பிட முடியுமா?

//ஈழத் தமிழர் நிவாரணத்துக்காக நிதி திரட்டப்பட்டபோது சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை//

இதயம் இனிக்கிறது. கண்கள் பனிக்கிறது. கூடவே குமட்டிக் கொண்டும் வருகிறது.

இந்தக் காலகட்டங்களில் கதை எழுதியே இத்தனை சம்பாதித்தேன் என்றால், அதிலும் கொடுத்தது போக இவ்வளவு இருக்கிறதென்றால் ஆச்சி மனோரமா பாதி தமிழ்நாட்டை வாங்கியிருக்கலாம். குதிரையில் விட்டார். குடித்து அழித்தார் என்றெல்லாம் கூட சொல்ல முடியாது.

அந்தக் கணக்கை வடிவேலு மாதிரி அப்படியே திருப்பிச் சொல்லு என்றால் உங்களாலும் சொல்ல முடியாது எனத் தெரியும்.

//என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ள//

அதெப்புடிங்க எசமான் வருமானம்னு வரும்போது மட்டும் உங்கள் சம்பாத்தியமும், உங்கள் கொடைத்திறனும் மட்டும் சொல்வீர்கள். ஊழல் என்று வரும்போது, தோல்வி என்று வரும்போது மட்டும் குடும்பம் வந்து சேர்ந்து கொள்ளும். ஒன்று வஞ்சம் தீர்க்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் வருமானத்தையும் சேர்த்துச் சொல்லுங்கள். அல்லது ஒரு தனிமனிதனாக கட்சியை இழுக்காமல் அந்த ஊழலுக்கு சப்பை கட்டுவதோ எதிர்ப்பதோ செய்யுங்கள்.

நேற்று ஒரு தோழர் பட்டாசு வெடித்தவர்கள் சாதிவாரி கணக்கெடுத்தாற்போல் சொன்ன கருத்தை ஒரு நேர்மையான உடன் பிறப்புடன் வருத்தத்துடன் சுட்டியபோது தெரியவில்லை. இன்று உங்கள் ‘தர்பைப் புல்’ புலம்பலைப் பார்த்ததும் புரிந்தது. தலைவன் எவ்வழி? தொண்டன் அவ்வழி!!.

நீங்களே கேள்வி கேட்டு நீங்களே வசதிக்கு பதில் எழுதும் வித்தகர் நீங்கள். முடிந்தால் இந்தக் கேள்விகளையும் நீங்களே எழுதி பதில் சொல்லுங்களேன்.

1) எத்தனை வருடமாக மஞ்சள் துண்டு அணிகிறீர்கள்? ஏன்? அணியச் சொன்னவர் ‘தர்பையை’த் தொடாதவரா?
2. பிரார்த்தனை என்று உங்கள் குடும்பத்தார் ஏன் தர்பைக் கோவிலுக்கே போகிறார்கள்? ஒரு சொள்ள மாடனுக்கோ, அய்யனாருக்கோ பொங்கல் வைத்ததாகவோ, கெடா வெட்டோ பத்திரிகையில் வரவில்லையே?
3. இன்னும் என்ன தர்ப்பை எழவு. நீங்கள் தோற்கும்போதெல்லாம் அடிப்பதற்கு என்றே இருக்கிறதே பார்ப்பன இனம். அதன் பாலான உங்கள் காழ்ப்பு உங்கள் சொந்த வெறுப்பா கட்சியின் கொள்கையா? அப்படியானால் திமுகவில் பார்ப்பனர்களுக்கு அடிப்படை உறுப்பினராகக் கூட சேரும் உரிமையில்லை. இதுவரை கட்சிக்காக உழைத்த பார்ப்பனர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். தேர்தலில் பார்ப்பனர்களின் ஓட்டுத் தேவையில்லை எனச் சொல்ல என்ன கஷ்டம்?
4. சொந்தக் கருத்தே எனினும், உங்கள் வைத்தியத் தேவைக்கோ, வக்கீல் தேவைக்கோ, உங்கள் குடும்பத்தினரின் பிஸினஸ் தொடர்பு கூட பார்ப்பனர் அல்லாதவரோடு மட்டுமே என்று சொல்ல முடியுமா?
5. அட குறைந்தபட்சம் பார்ப்பனத் தலைவர் அல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டு என்றாவது சொல்லுவீர்களா?

ஒரு விதத்தில் ராஜபட்சே மேல். வெளிப்படையாக அவன் குடிமக்களில் ஒரு இனத்துக்கு எதிரி என்று தெரியும். தமிழனாயினும் ஒரு இனத்தினை இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் தான் ஆண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.

உண்மையாகவே நீங்கள் வேண்டிப் பெற்ற அண்ணாவின் இதயத்துக்கு மதிப்பிருந்தால், கோடானு கோடி தொண்டர்களை நினைத்தாவது கட்சித் தலைமையை ஸ்டாலினிடம் ஒப்படைத்து ஒதுங்கி இருங்கள். பேராசிரியர் போன்ற ஒரு சிலரின் வழிநடத்தலில் தி.மு.க. தழைக்கும். இல்லையேல் உங்களுக்கு நம்பிக்கையான ஒரு தர்ப்பையைப் பிடித்து யாருக்கும் தெரியாமல் கட்சிக்கு எள்ளும் தண்ணியும்  விடுங்கள்.


இப்படிக்கு
இத்தனை காலம் உங்களுக்கு வாக்களித்த ஒரு தர்ப்பை.

Monday, May 16, 2011

நசரேயனுக்கு கலைஞர் கடிதம்

நசரின் கடிதம் இங்கே

அன்பு உடன் கருப்பே சே சே பிறப்பே,

துண்டு போட நீ எழுதும் கடிதமெல்லாம் பட்டாணி மடிக்கப் போனாலும், நீ வீசிய துண்டெல்லாம் தீரும்பிவந்தாலும், சற்றும் மனம் தளராமல் துண்டு வீசியபடியே இருப்பது இந்தக் கடிதத்தை எழுதும் முழுத்தகுதியும் உனக்கு உண்டு என்பதை உலகறியச் செய்தாலும், உன் ஆறுதலில் என் துண்டு நனைந்து விட்டது.

/ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது./

இந்த வரிகள் என்னை மெய் சிலிர்க்கச் செய்துவிட்டன. இதைத்தானே உன் கவசமாய்க் கொண்டு உள்ளூர் வளவளத்தா முதல், வெளியூர் கருப்பு, சிவப்பு, ப்ரவுன், உறிச்ச கோழி, சோகை வெள்ளை என்று பாய்ந்து பாய்ந்து துண்டு வீசி மனமுடைந்த போதெல்லாம் கடந்திருப்பாய்.

‘காதல்’ மூன்றெழுத்து. ‘ஜொல்லு’ மூன்றெழுத்து. அதற்கு நீ வீசும் ‘துண்டு’ மூன்றெழுத்து. அதற்கு விழும் ’வசவு’ மூன்றெழுத்து. அப்போது உடையும் உன் ‘மூக்கு’ மூன்றெழுத்து. நீ தின்ன அலையும் ‘நொங்கு’ மூன்றெழுத்து. அதை வைத்து நீ போடும் ‘பதிவு’ அல்லது ‘இடுகை’ மூன்றெழுத்து. அதன் வகை ‘மொக்கை’ மூன்றெழுத்து. அதற்கு நீ வாங்கும் ‘ஓட்டு’ மூன்றெழுத்து. படிப்பவர்களிடம் நீ எடுக்கும் ‘உயிர்’ மூன்றெழுத்து. அதற்கு வாங்கும் ’திட்டு’ மூன்றெழுத்து.  அந்தப் பத்தியில் வேண்டுமென்றே அந்தக் கனியை, கனியை என்று இழுத்த உன் ‘லொல்லு’ மூன்றெழுத்து. நீ மட்டும் சிக்கினா நான் வைக்கப் போகும் ‘ஆப்பு’ம் மூன்றெழுத்து.

ஏனோ இதைப் படிக்கையில், நீ எழுதாமலே கடந்த ஆட்சியில் நான் கொண்ட ‘திமிர்’ மூன்றெழுத்து. கொடுத்துக் கொண்ட ‘விருது’ மூன்றெழுத்து. நானே கொடுத்துக் கொண்ட ‘பேட்டி’ மூன்றெழுத்து.  வந்து சேர்ந்த ‘குஷ்பு’ மூன்றெழுத்து. நம்பி மோசம் போன ‘அன்னை’யும் ‘சோனியா’வும் மூன்றெழுத்து. செய்த ‘ஊழல்’ மூன்றெழுத்து. ராசா போன ‘ஜெயில்’ ‘திஹார்’ கூட மூன்றெழுத்து. குடைச்சல் கொடுக்கும் ‘சி.பி.ஐ’ மூன்றெழுத்து. போன ‘ஆட்சி’ மூன்றெழுத்து. வந்து சேர்ந்த ‘சோகம்’ மூன்றெழுத்து. ‘காமெடி’ என்ற மூன்றெழுத்தால் ‘வெற்றி’ என்ற மூன்றெழுத்து கிட்டும் என்பதும் ‘கனவு’ என்ற மூன்றெழுத்தாயிற்றே என்றெல்லாம் நீ சொல்லாமலே சொன்னாற்போல் தோன்றுகிறது.

வாலிப வயதிலே காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப் போவதில்லைதான். அதற்காக கள்ளும் காஜாபீடியும் அடித்து அடுத்த துண்டு வீச்சுக்கு காத்திருக்கும் களமில்லை இது. ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். நீ இடுகை போடும்போது வரும் பிழை மாதிரி இல்லை இது. நொங்கு நொங்கு என்று நீ இந்த வயதில் பறப்பதைப் போல் இந்த வயதில் என்னை நோண்டி நொங்கெடுப்பார்களோ என்று பயந்து தொலைய வேண்டியிருக்கிறது.

கண்ணை மூடிக் கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம் என்ற உன் வரியில் பின்லேடனை விட பெரிய குண்டு வைத்திருப்பதை நான் அறிவேன். இதைப் பாராட்டி நான் எழுதப் போக காண்டிலிருக்கும் தங்கபாலு சொக்குவிடம் போட்டுக் கொடுத்து கூட்டணியை உடைக்க வழி செய்கிறாயா உடன் பிறப்பே? அழிவில்லா விதைகளா? விதை அழியாமல் செடி எப்படி முளைக்கும்? இதில் மரமாகி விண்ணை முட்டும் என்று உன் பதிவின் வரிகளைச் சேர்த்து விளம்பரம் வேறு தேடுகிறாய்.

கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும். பொறுத்திரு என்கிறாயே. குப்பை கூட்டி குளிர்காயச் சொல்லி நக்கலடிக்கிறாயா? ராத்தூங்கும் நம்மோடா? நான் தூங்கி எத்தனை நாளாயிற்று தெரியுமா? ஆனாலும் உடன் பிறப்பே இத்தனை வேலையிலும் ஆட்டையை போடலாம் என்ற ஆசையில் பொன்னர் சங்கர் படத்தை வெளியிட்டதை எள்ளல் செய்து நமக்காகக் காத்திருக்கிறது சரித்திரமும், சாதனையும் என்று நொந்த புண்ணில் நூடில்ஸ் வேக வைக்கிறாயே.

உன் கடிதம் மூலம் ஒன்று மட்டும் தெரிகிறது. என் கடிதம் என்று அழைப்பும் இல்லாமல் முடிவும் இல்லாமல் உன் பாணியில் துண்டு வீச எழுதும் உசார் மொட்டைக் கடிதப் பாணியில் எழுதியதிலிருந்தே உன் துண்டு ஏன் விலை போகவில்லை என்று தெரிகிறது. ‘பத்து பிள்ளை பெத்தவளுக்கு தலைச்சன் பிள்ளைக்காரி பத்தியம் சொன்னது போல்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதைப் போல் மூணு துண்டு வீசி வெற்றி பெற்ற எனக்கு ஒரு துண்டு கூட போணியாகாத உன் ஆறுதல் இந்தச் சோகத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது.

அன்புள்ள

மு.க. (முழுதும் கற்பனை)

(பொறுப்பி: மொக்கையாய் போட்டுத் தள்ளினாலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்று ஆதரவு தரும் நட்புக்களுக்கு இந்த என் 500வது இடுகை சமர்ப்பணம்.)

Friday, May 13, 2011

கேரக்டர் - சீனுமாமா

சீனு மாமா ஆயிரத்தில் ஒருத்தர். அதாவது நீங்கள் பார்த்திருக்கக் கூடியவர்களில் ஒருவர். அநேகமாக இதை வாசிக்கும்போது பரிச்சயமானவர்போல் தோன்றும் என்பது உறுதி. சீனு மாமாவுடனான என் அறிமுகமே தடாலடிதான். ஸஸ்பென்ஸ் அக்கவுண்ட்ஸ் போஸ்டிங் முடித்து ரெகன்ஸிலியேஷன் முடித்து அரையாண்டு நிலுவை ஸ்டேட்மெண்ட் அனுப்பியாக வேண்டும். என்கள் செக்‌ஷன் ஆஃபீசர் சிக் ஆகிவிட கட்டுமானப் பிரிவிலிருந்து வந்த ஹெட்க்ளார்க் சீனுமாமா தானே முடி சூடிக் கொண்டார். அது ஒரு வெட்டி வேலைதான் எனினும் கர்ம சிரத்தையாக வருஷவாரியாக பிரித்துப் போட்டுதான் பழக்கம். ‘இது ஒரு மயிரு வேலைன்னு கெடந்து சாகிறான். இங்க கொண்டுவாடா’ என்று பத்து நிமிஷத்தில் பழைய ஸ்டேட்மெண்டில் குத்துமதிப்பாக மாற்றி டேலி செய்து அனுப்பிவிட்டு அமர்த்தலாக ‘கெக்கெக்கே’ என்று சிரித்தார்.  

சீனுமாமா ஷோக் பேர்வழி. அரை இஞ்சுக்கு திட்டு திட்டானாலும் பரவாயில்லை என்று வேர்வையில் அப்பிய பவுடர். சமயத்தில் ரோஸ் பவுடர் கூட அடித்துக் கொண்டு வருவார். ஐந்தடி மூன்றங்குல உயரம். கட்டை குட்டையான கையும் காலும். விரலுக்கு முன்னோ குதிகாலுக்கு பின்னோ நீட்டிக் கொண்டிருக்கும் செருப்பு. அது அளவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஃபாரின் சரக்காக இருக்க வேண்டும். பவுடர் வாசனையை தூக்கியடிக்கும் செண்ட் வாடை. சமயத்தில் ஆஃப்டர் ஷேவ் ஸ்ப்ரேகூட அடித்துக் கொண்டு வருவார். முன் வழுக்கையும் சேர்த்துத் தந்த அகலமான நெற்றியில் லேசான பவுடர் தாண்டிய வீபூதியோடு பளிச்சென பேஸ் வைத்து வட்டமாக வைத்த குங்குமம். கழுத்தில் மைனர் செயின். அது தெரியவேண்டுமென்பதற்காக போடாமல் விட்ட பித்தான். வார்த்தைக்கு வார்த்தை ங்கோத்தாவும் சிவசிவாவும் வித்தியாசமின்றி வரும். வெற்றிலை போட்ட சிவந்த உதடுகள். போண்டா மூக்கும் முட்டைக் கண்களும் எப்போதும் தரித்திருக்கும் சிரிப்பும் ஒரு ஜாலியான பேர்வழி என்று காட்டிக் கொடுக்கும்.  

எனக்கு சக்லேஸ்பூருக்கும் அவருக்கு பெங்களூர் கண்டோன்மெண்டுக்கும் ஒரே நேரத்தில் ப்ரோமோஷன். ‘த்தா 25 வருஷம் ரயில்வேல குப்ப கொட்டின எனக்கும் ரயில்னா என்னன்னே தெரியாத 5 வருஷம் சர்வீஸ் ஆன உனக்கும் ஒரே நேரத்துல ப்ரமோஷனா? என்ன திருத்தினானுவளோ?’என்று சலித்தாலும் ப்ரொமோஷனில் சற்றும் மகிழ்ச்சியற்றிருந்தது நாங்கள் இருவர்தான் எனச் சொல்லலாம். ரிட்டயர் ஆகிற வயசில என்னைக் கொண்டு போய் வெளியூரில் போட்டாளே என்று அவர் புலம்பலோடு இருந்தால் அது நியாயம். சின்னப்பையன் உனக்கென்னடா கேடு என்று என்னையும் சீண்டுவார்.  

இந்த வயசுலயாவது பொண்டாட்டி புடுங்கல் இல்லாம போய்த் தொலையலாம்ல. என்னை மாதிரி பிஞ்சுங்கள வெளிய அனுப்பி கொல்றாளே என்று நான் பதில் கொடுப்பேன். இத்தனைக்கும் வெள்ளிக் கிழமை மதியம் பர்மிஷன் சொல்லிவிட்டு ப்ருந்தாவனில் வந்து வெள்ளி, சனி, ஞாயிறு இருந்து ஞாயிறு இரவு கிளம்பலாம் வாராவாரம். எனக்கோ மாதம் ஒரு முறை வருவதே 2 வேளை இருக்க முடியாத கடுப்பு. ஸ்டேஷன் அருகே ரெஸ்ட் ஹவுசில் படுக்கை. படுக்கையின் கீழ் சூட் கேசில் அந்த வாரத்துக்கான துணிமணி. டூட்டியில் நான் பெங்களூர் வரும் நாட்களில் அதே ரெஸ்ட் ஹவுசில் தங்கலாம். காலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் புலம்பல். நாலு மணிக்கெல்லாம் மணக்க மணக்க காஃபியோடதான் எழுப்புவா என் பொண்டாட்டி, என்னைப் போய் என்று வாயில் வராத வசவோடு எல்லாரையும் எழுப்பிவிடுவார். வாட்ச்மேனுக்கு 2ரூ கொடுத்து கிடைத்த டேக்ஸா வென்னீரில் குளிக்கும்போதும் வேலை செய்யாத கெய்சரையும், ஜாஃபர் ஷெரீஃப்(ரயில்வே அமைச்சரையும்) அர்ச்சனை செய்வார்.  

ஒரு வழியாக ஆறுமணிக்கு வரும் கேன் பால் காஃபியை வாந்தி எடுக்காத குறையாய்க் குடித்து முடித்து பேப்பர் பார்த்து வேகு வேகென்று கிளம்பி இந்தியா காஃபி ஹவுசில் இட்லியோ, காராபாத்தோ அடித்த பிறகே பழைய சீனு திரும்புவார். பெரிய மருமகன் ஏதோ எம்பஸியில் வேலை என்ற கித்தாய்ப்பு. பெரிய மகன் வேற்று இனத்துப் பெண்ணை திருமணம் செய்தான் என்று வீட்டு விலக்கம். சின்னப் பையன் கெட்டிக்காரன் என்ற பாசம். சின்ன மகள் காதலில் சிறு சிக்கல் என்று கவலையும் சந்தோஷமுமாய் ஒரு நேரத்தில் என் வாயில் சனி விளையாடியது.  

சக்லேஷ்பூர் அருகே புத்தூர் சுப்ரமணியா கோவிலில் மதிய பூசைக்கு நின்றால் பூசை முடிந்ததும் மனக்குறைக்கு பரிகாரம் என்று சொல்வார்கள் என்று சொல்லிவிட்டேன். மனைவி மகளோடு கிளம்பி வந்து இறங்கிவிட்டார். ராமன் நாயர் கடையில் மொத்தமே 25 அல்லது 30 தோசை வியாபாரம் ஆனால் போதும். அன்று வாடிக்கையாளர்களுக்கு தோசையில்லாமல் சப்பாத்தி போட வேண்டியதாகிவிட்டது. அதுவும் காணாமல் அரைக்கிலோ ரவை உப்புமாவும் திருப்தியாக சாப்பிட்டபின் சுப்பிரமணியா கிளம்பிப் போனார்கள். 

மாலை திரும்புகையில் வழியனுப்ப ஸ்டேஷனில் பார்த்தபோது ஒரு தந்தையாய் கண்கலங்கி, ஆச்சரியம்டா! ப்ரசாதம் குடுக்கும்போதே பொண்ணு கல்யாணம் நினைச்சாமாதிரி நடக்கும்னு சொல்லிட்டான், என்று கை பிடித்துக் கொண்டார். அதே மாதிரி திருமணம் தடைகடந்து நிச்சயமானவுடன் எனக்கு பெரிய பையன் இருந்தும் இல்லை. நீங்கள்ளாம்தான் வரணும் என்று அழைத்தபோதும் ஒரு வித்தியாசமான சீனுவானார்.  

திருமணமண்டபத்துக்குப் போனபோது ஒரு தோளில் பூசணியும், மறுகையில் புடலங்காயும் தூக்கிக் கொண்டு தளர்நடையோடு வந்தவரை, மகள் சம்மந்தி வீட்டில் அழைக்கவில்லை என்று கோவப் படுகிறார்கள் என்று எதிர் கொண்டாள். சாமி வந்துவிட்டது. ‘அவன் கெடக்காண்டி மயிரு. எம் பொண்ணுக்குதான் கலியாணமா? அவன் பிள்ளைக்கு இல்லையாமா? நான் அழைக்கலன்னா வரமாட்டானா? போடா மயிறுன்னு வேற யாருக்காவது கட்டிக் கொடுப்பேன்’ என்று எகிற மகள் அழத் தொடங்கினாள். கவுண்டர் பெட்ரோமேக்ஸேதான் வேணுமா என்று கேட்டதுபோல், ‘ஏண்டி அழுது தொலையற? அவனேதான் வேணுமா?’ இஞ்ச காய் வாங்க கூட ஆளில்லாம ஒத்தையா அலையறேன் இவனுக்கு அழைப்பு வேறே என்றவரை தள்ளிக் கொண்டு போய் ஃபோனில் சமாதானம் செய்ய வைத்தோம்.  

திருமணம் முடிந்த மாலை ரிசப்ஷனுக்கு முன் மதியம் காஃபி, மிக்ஸருக்கு எங்கள் எல்லாரையும் தள்ளிக் கொண்டு போனார். மாமா சம்பந்தியை கூப்பிடுய்யா. அப்புறம் அதுக்கும் பிரச்சினை என்றேன். நீ போடா மயிரு. தாலி கட்டியாச்சு, இனிமே அவன் தின்னா என்ன தின்னாட்டி என்ன என்று அலறியவருக்கு கண்ணை காண்பித்தேன். முன் வரிசை டேபிளில் சம்மந்தி ‘ஙே’ என்று விழித்தட்படி வாங்கோ என்று வழிந்தார்.  

வாராவாரம் பெங்களூர் போய் வருவதென்றால் முடியுமா. ஒரு பாஸை வைத்துக் கொண்டு டி.டி.இ.இடம் சலாம் போட்டு, காலி பர்த்தில் படுத்து மல்டிபிள் ஜர்னியில்தான் காலம் ஓடும். வழக்கமாக ஏர்காடில் போய் ஜோலார்பேட்டையில் ஐலண்ட் எக்ஸ்பிரஸில் போவது வசதி. ஒரு போதாத நாளில் என்னோடு வருகிறேன் என பெங்களூர் மெயிலில் ஏறி, சலாம் போட்டு பெர்த் வாங்கியாகிவிட்டது. டி.டி.இ. கையெழுத்து போடு என்றதும் கோவம் வந்துவிட்டது சாருக்கு. வழக்கம் போல ரிடயர் ஆகிற வயசில் என்று எகிற அவர் ‘நீ போடாட்டி நான் போடுவேன்’ என்று மிரட்டிவிட்டார்.  

வந்ததே கோவம் நம்மாளுக்கு. ‘போய்யாங். பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னரு. கையெழுத்து போடுவாராம்ல. உன் வண்டியே வேணாம் போய்யா’ என்று என்னையும் இழுத்துக் கொண்டு இறங்கி ஏற்காடு எக்ஸ்பிரசுக்கு நடையைக் கட்டினார். ‘ஏன் சார்! கையெழுத்து தானே போட சொன்னான். தேதியா போட சொன்னான்? பெரிய புடுங்கி மாதிரி எகிறிட்டீரு? இப்ப நான் போய் சேர நாளை சாயந்திரமாகிவிடும்’ என்றேன்.  ‘ஹி ஹி..ஆமாம்ல. கையெழுத்து போட்டு தொலைஞ்சிருக்கலாமே. சரி விடு’ என்று சொல்லி சொல்லி சிரிக்கிறவரை என்ன செய்ய?  

ஒரு வழியாக வனவாசம் முடிந்து இருவரும் சற்றேறத் தாழ ஒரே நேரம் ஒரே அலுவலகத்தில் சேர்ந்தோம். மனுசனுக்கு ஹைட்ராஸில் பிரச்சினை. எத்தனை மருத்துவ வசதி இருந்தும் காலை கிளப்பிக் கொண்டு நடக்கத் தயாரே ஒழிய ஆபரேஷன் செய்தால் பிழைக்க மாட்டோமென்று பயம். பந்தாவுக்கு சில்ட் பீர் அடிப்பதும், அடுத்த அரை மணியில் குளிர்க் காய்ச்சலில் ‘அய்யோ நான் போறேன்’ என்ற அனத்தலும் வேடிக்கை + வாடிக்கை.  

அலுவலக பரீட்சை முடிந்த சில மாதங்களில் டில்லியில் இருக்கும் மகளைப் பார்க்கப் போகிற சாக்கில், எனக்கு அவனைத் தெரியும் இவனைத் தெரியும் நான் பாஸ் போட வைக்கிறேன் என்று நம்பர் வாங்கிக் கொண்டு போவார். பாஸானவர்களெல்லாம் இவர் சொல்லி பாஸான கணக்கு. ஃபெயிலானவர்கள் ஒன்னுமே செய்ய முடியாத அளவுக்கு மோசமாக எழுதி இருப்பதாக அளப்பு.  ‘மாமா நிஜம்மா சொல்லு. உன்ன போர்ட் ஆஃபீஸ்ல உள்ள விடுவானா’ என்றால், ‘ப்ச்ச!  பூனைய மடியில கட்டினா மாதிரி நீ வந்து சேர்ந்தியா எனக்கு’ என்று சிரிப்பார்.  

சகட்டு மேனிக்கு பர்மிஷன், 12 மணிக்கு வந்து ட்ரெயின் லேட் என்றாலும் அட்டண்டன்ஸ், டார்கட் இருக்கும்போது லீவ் கேட்டாலும் மேக்கப் போட்ட ஸ்டேட்மெண்ட் என்று எல்லாருக்கும் நல்லாராயிருந்து ரிடயரான போது குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதது அந்த மைனர். நாங்களுமே. 
-:{}:-

Thursday, May 12, 2011

கேரக்டர் - சீனுமாமா.

சீனு மாமா ஆயிரத்தில் ஒருத்தர். அதாவது நீங்கள் பார்த்திருக்கக் கூடியவர்களில் ஒருவர். அநேகமாக இதை வாசிக்கும்போது பரிச்சயமானவர்போல் தோன்றும் என்பது உறுதி. சீனு மாமாவுடனான என் அறிமுகமே தடாலடிதான். ஸஸ்பென்ஸ் அக்கவுண்ட்ஸ் போஸ்டிங் முடித்து ரெகன்ஸிலியேஷன் முடித்து அரையாண்டு நிலுவை ஸ்டேட்மெண்ட் அனுப்பியாக வேண்டும். என்கள் செக்‌ஷன் ஆஃபீசர் சிக் ஆகிவிட கட்டுமானப் பிரிவிலிருந்து வந்த ஹெட்க்ளார்க் சீனுமாமா தானே முடி சூடிக் கொண்டார். அது ஒரு வெட்டி வேலைதான் எனினும் கர்ம சிரத்தையாக வருஷவாரியாக பிரித்துப் போட்டுதான் பழக்கம். ‘இது ஒரு மயிரு வேலைன்னு கெடந்து சாகிறான். இங்க கொண்டுவாடா’ என்று பத்து நிமிஷத்தில் பழைய ஸ்டேட்மெண்டில் குத்துமதிப்பாக மாற்றி டேலி செய்து அனுப்பிவிட்டு அமர்த்தலாக ‘கெக்கெக்கே’ என்று சிரித்தார்.

சீனுமாமா ஷோக் பேர்வழி. அரை இஞ்சுக்கு திட்டு திட்டானாலும் பரவாயில்லை என்று வேர்வையில் அப்பிய பவுடர். சமயத்தில் ரோஸ் பவுடர் கூட அடித்துக் கொண்டு வருவார். ஐந்தடி மூன்றங்குல உயரம். கட்டை குட்டையான கையும் காலும். விரலுக்கு முன்னோ குதிகாலுக்கு பின்னோ நீட்டிக் கொண்டிருக்கும் செருப்பு. அது அளவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஃபாரின் சரக்காக இருக்க வேண்டும். பவுடர் வாசனையை தூக்கியடிக்கும் செண்ட் வாடை. சமயத்தில் ஆஃப்டர் ஷேவ் ஸ்ப்ரேகூட அடித்துக் கொண்டு வருவார். முன் வழுக்கையும் சேர்த்துத் தந்த அகலமான நெற்றியில் லேசான பவுடர் தாண்டிய வீபூதியோடு பளிச்சென பேஸ் வைத்து வட்டமாக வைத்த குங்குமம். கழுத்தில் மைனர் செயின். அது தெரியவேண்டுமென்பதற்காக போடாமல் விட்ட பித்தான். வார்த்தைக்கு வார்த்தை ங்கோத்தாவும் சிவசிவாவும் வித்தியாசமின்றி வரும். வெற்றிலை போட்ட சிவந்த உதடுகள். போண்டா மூக்கும் முட்டைக் கண்களும் எப்போதும் தரித்திருக்கும் சிரிப்பும் ஒரு ஜாலியான பேர்வழி என்று காட்டிக் கொடுக்கும்.


எனக்கு சக்லேஸ்பூருக்கும் அவருக்கு பெங்களூர் கண்டோன்மெண்டுக்கும் ஒரே நேரத்தில் ப்ரோமோஷன். ‘த்தா 25 வருஷம் ரயில்வேல குப்ப கொட்டின எனக்கும் ரயில்னா என்னன்னே தெரியாத 5 வருஷம் சர்வீஸ் ஆன உனக்கும் ஒரே நேரத்துல ப்ரமோஷனா? என்ன திருத்தினானுவளோ?’என்று சலித்தாலும் ப்ரொமோஷனில் சற்றும் மகிழ்ச்சியற்றிருந்தது நாங்கள் இருவர்தான் எனச் சொல்லலாம். ரிட்டயர் ஆகிற வயசில என்னைக் கொண்டு போய் வெளியூரில் போட்டாளே என்று அவர் புலம்பலோடு இருந்தால் அது நியாயம். சின்னப்பையன் உனக்கென்னடா கேடு என்று என்னையும் சீண்டுவார்.


இந்த வயசுலயாவது பொண்டாட்டி புடுங்கல் இல்லாம போய்த் தொலையலாம்ல. என்னை மாதிரி பிஞ்சுங்கள வெளிய அனுப்பி கொல்றாளே என்று நான் பதில் கொடுப்பேன். இத்தனைக்கும் வெள்ளிக் கிழமை மதியம் பர்மிஷன் சொல்லிவிட்டு ப்ருந்தாவனில் வந்து வெள்ளி, சனி, ஞாயிறு இருந்து ஞாயிறு இரவு கிளம்பலாம் வாராவாரம். எனக்கோ மாதம் ஒரு முறை வருவதே 2 வேளை இருக்க முடியாத கடுப்பு. ஸ்டேஷன் அருகே ரெஸ்ட் ஹவுசில் படுக்கை. படுக்கையின் கீழ் சூட் கேசில் அந்த வாரத்துக்கான துணிமணி. டூட்டியில் நான் பெங்களூர் வரும் நாட்களில் அதே ரெஸ்ட் ஹவுசில் தங்கலாம். காலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் புலம்பல். நாலு மணிக்கெல்லாம் மணக்க மணக்க காஃபியோடதான் எழுப்புவா என் பொண்டாட்டி, என்னைப் போய் என்று வாயில் வராத வசவோடு எல்லாரையும் எழுப்பிவிடுவார். வாட்ச்மேனுக்கு 2ரூ கொடுத்து கிடைத்த டேக்ஸா வென்னீரில் குளிக்கும்போதும் வேலை செய்யாத கெய்சரையும், ஜாஃபர் ஷெரீஃப்(ரயில்வே அமைச்சரையும்) அர்ச்சனை செய்வார்.


ஒரு வழியாக ஆறுமணிக்கு வரும் கேன் பால் காஃபியை வாந்தி எடுக்காத குறையாய்க் குடித்து முடித்து பேப்பர் பார்த்து வேகு வேகென்று கிளம்பி இந்தியா காஃபி ஹவுசில் இட்லியோ, காராபாத்தோ அடித்த பிறகே பழைய சீனு திரும்புவார். பெரிய மருமகன் ஏதோ எம்பஸியில் வேலை என்ற கித்தாய்ப்பு. பெரிய மகன் வேற்று இனத்துப் பெண்ணை திருமணம் செய்தான் என்று வீட்டு விலக்கம். சின்னப் பையன் கெட்டிக்காரன் என்ற பாசம். சின்ன மகள் காதலில் சிறு சிக்கல் என்று கவலையும் சந்தோஷமுமாய் ஒரு நேரத்தில் என் வாயில் சனி விளையாடியது.


சக்லேஷ்பூர் அருகே புத்தூர் சுப்ரமணியா கோவிலில் மதிய பூசைக்கு நின்றால் பூசை முடிந்ததும் மனக்குறைக்கு பரிகாரம் என்று சொல்வார்கள் என்று சொல்லிவிட்டேன். மனைவி மகளோடு கிளம்பி வந்து இறங்கிவிட்டார். ராமன் நாயர் கடையில் மொத்தமே 25 அல்லது 30 தோசை வியாபாரம் ஆனால் போதும். அன்று வாடிக்கையாளர்களுக்கு தோசையில்லாமல் சப்பாத்தி போட வேண்டியதாகிவிட்டது. அதுவும் காணாமல் அரைக்கிலோ ரவை உப்புமாவும் திருப்தியாக சாப்பிட்டபின் சுப்பிரமணியா கிளம்பிப் போனார்கள்.


மாலை திரும்புகையில் வழியனுப்ப ஸ்டேஷனில் பார்த்தபோது ஒரு தந்தையாய் கண்கலங்கி, ஆச்சரியம்டா! ப்ரசாதம் குடுக்கும்போதே பொண்ணு கல்யாணம் நினைச்சாமாதிரி நடக்கும்னு சொல்லிட்டான், என்று கை பிடித்துக் கொண்டார். அதே மாதிரி திருமணம் தடைகடந்து நிச்சயமானவுடன் எனக்கு பெரிய பையன் இருந்தும் இல்லை. நீங்கள்ளாம்தான் வரணும் என்று அழைத்தபோதும் ஒரு வித்தியாசமான சீனுவானார்.


திருமணமண்டபத்துக்குப் போனபோது ஒரு தோளில் பூசணியும், மறுகையில் புடலங்காயும் தூக்கிக் கொண்டு தளர்நடையோடு வந்தவரை, மகள் சம்மந்தி வீட்டில் அழைக்கவில்லை என்று கோவப் படுகிறார்கள் என்று எதிர் கொண்டாள். சாமி வந்துவிட்டது. ‘அவன் கெடக்காண்டி மயிரு. எம் பொண்ணுக்குதான் கலியாணமா? அவன் பிள்ளைக்கு இல்லையாமா? நான் அழைக்கலன்னா வரமாட்டானா? போடா மயிறுன்னு வேற யாருக்காவது கட்டிக் கொடுப்பேன்’ என்று எகிற மகள் அழத் தொடங்கினாள். கவுண்டர் பெட்ரோமேக்ஸேதான் வேணுமா என்று கேட்டதுபோல், ‘ஏண்டி அழுது தொலையற? அவனேதான் வேணுமா?’ இஞ்ச காய் வாங்க கூட ஆளில்லாம ஒத்தையா அலையறேன் இவனுக்கு அழைப்பு வேறே என்றவரை தள்ளிக் கொண்டு போய் ஃபோனில் சமாதானம் செய்ய வைத்தோம்.


திருமணம் முடிந்த மாலை ரிசப்ஷனுக்கு முன் மதியம் காஃபி, மிக்ஸருக்கு எங்கள் எல்லாரையும் தள்ளிக் கொண்டு போனார். மாமா சம்பந்தியை கூப்பிடுய்யா. அப்புறம் அதுக்கும் பிரச்சினை என்றேன். நீ போடா மயிரு. தாலி கட்டியாச்சு, இனிமே அவன் தின்னா என்ன தின்னாட்டி என்ன என்று அலறியவருக்கு கண்ணை காண்பித்தேன். முன் வரிசை டேபிளில் சம்மந்தி ‘ஙே’ என்று விழித்தட்படி வாங்கோ என்று வழிந்தார்.


வாராவாரம் பெங்களூர் போய் வருவதென்றால் முடியுமா. ஒரு பாஸை வைத்துக் கொண்டு டி.டி.இ.இடம் சலாம் போட்டு, காலி பர்த்தில் படுத்து மல்டிபிள் ஜர்னியில்தான் காலம் ஓடும். வழக்கமாக ஏர்காடில் போய் ஜோலார்பேட்டையில் ஐலண்ட் எக்ஸ்பிரஸில் போவது வசதி. ஒரு போதாத நாளில் என்னோடு வருகிறேன் என பெங்களூர் மெயிலில் ஏறி, சலாம் போட்டு பெர்த் வாங்கியாகிவிட்டது. டி.டி.இ. கையெழுத்து போடு என்றதும் கோவம் வந்துவிட்டது சாருக்கு. வழக்கம் போல ரிடயர் ஆகிற வயசில் என்று எகிற அவர் ‘நீ போடாட்டி நான் போடுவேன்’ என்று மிரட்டிவிட்டார்.


வந்ததே கோவம் நம்மாளுக்கு. ‘போய்யாங். பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னரு. கையெழுத்து போடுவாராம்ல. உன் வண்டியே வேணாம் போய்யா’ என்று என்னையும் இழுத்துக் கொண்டு இறங்கி ஏற்காடு எக்ஸ்பிரசுக்கு நடையைக் கட்டினார். ‘ஏன் சார்! கையெழுத்து தானே போட சொன்னான். தேதியா போட சொன்னான்? பெரிய புடுங்கி மாதிரி எகிறிட்டீரு? இப்ப நான் போய் சேர நாளை சாயந்திரமாகிவிடும்’ என்றேன்.  ‘ஹி ஹி..ஆமாம்ல. கையெழுத்து போட்டு தொலைஞ்சிருக்கலாமே. சரி விடு’ என்று சொல்லி சொல்லி சிரிக்கிறவரை என்ன செய்ய?


ஒரு வழியாக வனவாசம் முடிந்து இருவரும் சற்றேறத் தாழ ஒரே நேரம் ஒரே அலுவலகத்தில் சேர்ந்தோம். மனுசனுக்கு ஹைட்ராஸில் பிரச்சினை. எத்தனை மருத்துவ வசதி இருந்தும் காலை கிளப்பிக் கொண்டு நடக்கத் தயாரே ஒழிய ஆபரேஷன் செய்தால் பிழைக்க மாட்டோமென்று பயம். பந்தாவுக்கு சில்ட் பீர் அடிப்பதும், அடுத்த அரை மணியில் குளிர்க் காய்ச்சலில் ‘அய்யோ நான் போறேன்’ என்ற அனத்தலும் வேடிக்கை + வாடிக்கை.


அலுவலக பரீட்சை முடிந்த சில மாதங்களில் டில்லியில் இருக்கும் மகளைப் பார்க்கப் போகிற சாக்கில், எனக்கு அவனைத் தெரியும் இவனைத் தெரியும் நான் பாஸ் போட வைக்கிறேன் என்று நம்பர் வாங்கிக் கொண்டு போவார். பாஸானவர்களெல்லாம் இவர் சொல்லி பாஸான கணக்கு. ஃபெயிலானவர்கள் ஒன்னுமே செய்ய முடியாத அளவுக்கு மோசமாக எழுதி இருப்பதாக அளப்பு.  ‘மாமா நிஜம்மா சொல்லு. உன்ன போர்ட் ஆஃபீஸ்ல உள்ள விடுவானா’ என்றால், ‘ப்ச்ச!  பூனைய மடியில கட்டினா மாதிரி நீ வந்து சேர்ந்தியா எனக்கு’ என்று சிரிப்பார்.


சகட்டு மேனிக்கு பர்மிஷன், 12 மணிக்கு வந்து ட்ரெயின் லேட் என்றாலும் அட்டண்டன்ஸ், டார்கட் இருக்கும்போது லீவ் கேட்டாலும் மேக்கப் போட்ட ஸ்டேட்மெண்ட் என்று எல்லாருக்கும் நல்லாராயிருந்து ரிடயரான போது குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதது அந்த மைனர். நாங்களுமே.
-:{}:-

Sunday, May 1, 2011

கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு - வாசிப்பனுபவம்.

கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ படித்த பின்பு அவரின் எழுத்தாளுமை ஆட்கொண்டது. அதன் தாக்கம் குறையவும், நாஞ்சில் நாடன் கதைகள், கருப்பு நிலாக் கதைகள் என்று வரிசைகட்டி நின்றவற்றை முடிக்கவுமான கால அவகாசம் தேவைப்பட்டது.  மீண்டும் கண்மணி குணசேகரனின் ‘வெள்ளெருக்கு’, மற்றும் ‘நெடுஞ்சாலை’ வரிசையில் முந்தியது.

வழக்கம் போல கண்மணி குணசேகரன் கட்டிப் போடத் தவரவில்லை. ‘அஞ்சலை’ ஒருத்தியின் போராட்டம் ஒரு வகை என்றால் ‘வெள்ளெருக்கு’ சிறுகதைத் தொகுப்பு அதன் பல பரிமாணங்களைக் காட்டுகிறது. வர்ணனையோ, வாதையோ அதனதன் இயல்பில் வெகு இயல்பாக வந்து விழுகிறது. மேம்போக்காக படித்துவிடமுடியுமா மனிதர்களையும், அவர்களின் வாழ்வின் போராட்டங்களையும்? ஒரு கதை முடித்ததும் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கும் போது, கண்மூடி அதில் ஆழ்ந்து அதற்குரிய மரியாதையைக் கொடுத்து, உன்னில் இதனைக் கற்றுக் கொண்டேன். இன்னும் கற்க இருக்கிறது என்று அடுத்த பாடத்துக்கு நகர்ந்தாக வேண்டும்.

‘கொடிபாதை’ ஒரு கிராமத்தின் வழியே செல்லும் பேருந்தில் நடக்கும் பிரசவம். அவ்வளவுதானா அது? ஒரு வீம்பு பிடித்தவளின் காதல், நிறைப் பிரசவ நேரத்திலும் உழைத்தால்தான் முடியும் என்ற ஏழ்மை, தவிக்கும் ஒரு பெண்ணுக்காய் பதறும் ஆணும் பெண்ணுமாய் மனிதக் கூட்டம், வண்டியின் குலுக்கலில் பிரசவித்து பின்னும் மருத்துவமனைக்குச் சென்றால் செலவு என்ற ஏழ்மையின் யதார்த்தம். எள்ளுக் காய்களை தகடையாக்கி விரையும் பேருந்தை கூட்டமாய் எதிர்க்கும் ‘மாப் சைக்காலஜி’ ஒரு பெண் பிரசவத்துக்காய் தவிக்கையில் ஆக்கபூர்வமாய் மாறும் விந்தையும் எடுத்துக்காட்டும் வெள்ளந்தி மனிதர்கள் நேசமுற வைப்பதோடு இந்த உணர்ச்சி வேகம்தானே நாசத்தையும் தருகிறது என்ற யதார்த்தத்தை சொல்லாமல் சொல்கிறது.

ஆணிகளின் கதை’ விதவிதமான மனிதர்களின் ஆவிகளின் மூலமாக அவர்களின் வாழ்க்கைக் கதையாக ஆலமரத்தில் ஆணியிறக்கப்பட்டு கட்டுப்படுகிறது. ஆவியான பின்னும் பெண்ணுக்கு அலையும் பேட்டையானுக்கு இரையாகும் சபிக்கப்பட்டவளின் ஆவி எத்தனை துரோகங்களைச் சொல்கிறது?

முதலிரவுக்குச் சென்றவளாயினும் உட்புகுந்து இழுத்துச் சென்று தாலிகட்டும் உரிமை கொண்ட தாய்மாமன்களைக் கேட்டதுண்டா? மனிதருக்குள்தான் எத்தனை நியதிகள்? பெண் என்பவளின் முறைமை மீதான உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு விருந்தும், பணமும் ஈடு. அதில் குறை கூறி பன்றியின் ஈரலுக்கும், ரத்தத்துக்கும், சாராயத்துக்கும், பணத்துக்கும் ஒரு பெண்ணின் முதலிரவை தடுத்து நிறுத்தும் தாய்மாமன். இரண்டாம் விருந்தும், காசும் வந்த பிறகு விடியலில் முதலிரவுக்கு போகச் சொல்கையில் சிட்டுவின் மனம்தான் எவ்வளவு குன்றிப் போயிருக்கும்? ‘சமாதானக் கறி’யில் ஊர் கூடி முதலிரவுக்கு சம்மதிக்கையில் சிட்டு தெளிக்கும் சாணி சமுதாயத்தின் முகத்தில்.

ஊர் ஊராய் ஒடுக்கெடுத்துப் பிழைக்கும் தங்களானும் கங்காயியும் என்னுமா ஒரு வயசி புள்ளையை வளர்க்கறது? இந்த ஒரு கதைக்கே குணசேகரனுக்கு தங்க மோதிரம் போடலாம். ‘புள்ளிப் பொட்டையின்’ முதல் நான்கு பத்திகளுக்கு ஈடாக எந்த ஒரு திரைப்படத்திலும் கற்பழிப்புக்காட்சி இருந்திருக்க முடியாது. புள்ளிப் பெட்டையின் பதைப்பும் நடுக்கமும், இயலாமையும், இறுதியாய் ஒரு முட்டையிட அது படும் பாடும், ஒரு பெட்டைக் கோழி கூட்டை விட்டு வந்தால் ஊர்ச்சேவல்களுக்குதான் எத்தனைக் கொண்டாட்டம் என்பதன் மூலம் ‘வயசி பிள்ளைக்கு’ இந்தச் சமுதாயத்தின் பாதுகாப்பற்ற தன்மையை எவ்வளவு நேர்த்தியாய் சொல்கிறார் குணசேகரன்.

கிக்குலிஞ்சானில்’ கௌதாரி பிடித்து பிழைப்பை நடத்தும் கூனன் வயதான காலத்தில் விரட்டப்பட்டு இறக்கும் அவலமும், ‘மழிப்பில்’ குடிக்கு அடிமையான ரத்னவேல் போதையில் தன்னைப் பராமரிக்காத ஊரைக் குதறியெடுக்கும் வலியும், ‘ஏவலில்’ பேங்கு ரெட்டி தன் அதிகாரத்துக்கு சக்கரைக்கு ரெண்டாம்தாரம் கட்டிக் கொள்ள ஏவி விட்டு சக்கரை படும் பாடும், ‘ராக்காலத்தில்’ பார்த்துப் பார்த்து வளர்த்த பயிரை மாடுகளைக் கட்டாமல் நாசமடித்து வம்பிழுக்கும் முந்திரிக் காட்டுக்காரர்களின் அடாவடியும், ‘வனாந்திரத்தில்’ ஒற்றைப் பிள்ளையைக் கடைத்தேத்த முந்திரி பயறு பொறுக்கி காசாக்கும் அம்மா ஒரு நாளாவது தின்னட்டும் என்று அடம் பிடித்து வறுக்கச் சொல்லும் பிள்ளையின் பாசமும், பிள்ளைக்காக காசு போனாலும் பரவாயில்லை எனக் கறியாக்கும் தாயின் பரிவும், பிழைக்க கரிக்கு வழியின்றி சிதைக் கரியை பொறுக்கி வந்து கத்தி பதப்படுத்தி ‘சீவனம்’ செய்யும் கொல்ல ஆசாரியும், ஆசியரின் குழந்தைக்கு அரைஞாண் கயிறு திரிக்க ‘வெள்ளெருக்கு’த் தேடிப் போகும் கிராமப்புற மாணவர்களின் அவலமும், ஓவியனாகத் துடிக்கும் இளைஞனுக்கு சுதைக் குதிரையின் கால் குளம்புக்கு கருப்பு வண்ணம் அடிப்பதிலிருந்து அதன் குறிக்கு சிவப்பு வண்ணம் அடிக்கக் கிடைக்கும் பதவி உயர்வுமாய் எத்தனை உணர்ச்சிப் போராட்டங்கள்?

இத்தனைக் கதைகளுக்கு மத்தியில் இதயத்தை இழுத்துப் பிடித்து கண்ணீர் துளிர்க்கவைக்கும் கதைகள் இரண்டு. சிவப்பாய் பிறந்த காரணத்தால் செல்லமாய் முன் கோபக்காரியாய் வளர்ந்த லட்சுமிக்கு தங்கையாய் பிறந்த பாவத்துக்கு சித்ராவுக்கு வாய்த்தது அவளின் பழந்துணிமணியும், பாடப்புத்தகமும் மட்டுமல்ல விதி விரித்த வலையில் அவள் குழந்தையும், புருஷனும் கூடத்தான்.

ஒரு குழந்தைக்கு வழியின்றி அண்ணன் மகன்களின் கேலிக்கு ஆளாகி, இருக்கும் கரட்டுக் காட்டையும் பிடுங்கிவிடுவார்களோ என்று ஏமாந்து போகும் வெங்கடாலம் ஆசையாய் வளர்த்த ஒற்றைப் பனையையும் கரட்டையும் விட்டு வாங்கு கத்தி எனக்கு இருக்கு என்று ‘ஆண் ’ மகனாய்ப் போகும்போது நம் உள்ளத்தையும் சேர்த்தெடுத்துப் போகிறான்.

எப்போதும் போல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தந்த கண்மணி குணசேகரனுக்கு வாழ்த்துச் சொல்வதும் இன்னும் சிறந்த படைப்புகளுக்காய்க் காத்திருத்தலும் தவிர வேறென்ன செய்ய இயலும். 
 
_/\_