Friday, April 22, 2011

கேரக்டர் - ராவணதாஸ்

1975. எப்போதடா ஜூன் வரும், 18 வயது நிறையும், கருணை அடிப்படையில் வேலைக்கு மனு செய்யலாம் என்று காத்திருந்த காலம். அம்புட்டு சீக்கிரமாவா உன்னோடான என் விளையாட்டு முடிஞ்சிடும் என்று விதி சதி செய்தது. எமர்ஜன்சி அறிவிக்கப்பட்டது. வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தடை என்ற இடி வந்து விழுந்தது. கலங்கிப் போய் அப்பாவின் அலுவலகத்தில் போய் அவர் நண்பர்களிடம் வழி கேட்டபோது பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, தலைமை அதிகாரியைப் போய்ப் பார். கலாசியோ, ப்யூனோ, ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் ஊற்றுகிற வேலையோ, ஏதோ ஒன்றுக்கு வழியிருக்கும் என்ற ஆலோசனை கிடைத்தது. 

தயங்கித் தயங்கி அந்தப் பெரிய அறையில், யாரோ சொல்ல கலாசி வேலையாவது தரும்படி மனுவை எடுத்துக் கொண்டு கால்கள் தொய்ய ஒரு ஒல்லியான குள்ள உருவம் கலாசி வேலைக்கு மனுவை நீட்டினால் அந்த அதிகாரிதான் என்ன செய்வார்? நமட்டுச் சிரிப்போடு 7 அடிக்கு 5 அடி டேபிளை அறை மூலைக்கு இழுத்துப் போடமுடியுமா என்று கேட்டபோது நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.  ‘சரி, நீ போப்பா கடிதம் வரும்’ என்றபோது ஆவலோடு காத்திருக்கும் அம்மாவுக்கு என்ன சொல்லப் போகிறேன் என்ற எண்ணமே நிறைந்திருந்தது. அதிகம் காக்க விடாமல் அக்டோபரில் என் பிறந்தநாள் அன்று(ஷ்ஷ்ஷ் அக்டோபரில் எப்படி என்று எல்லாம் கேக்கப்படாது) பரிசாக கேஷியருக்கு பணப்பெட்டி தூக்கும் ப்யூனாக உத்தியோக நியமனம் வந்தது.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு போய் வேலையில் சேரப் போய் எல்லாம் முடிந்து வேலையில் சேர்ந்தபோது பெட்டி தூக்க வேண்டாம், தபால் வாங்கும் பிரிவில் வேலை பார் என்று சொன்னார்கள். என்னைப் போன்றே நிறையப் பேர்கள் இருந்தாலும், அநேகம் பேரின் முகத்தில் ஒரு அசூயையும், எங்கு திரும்பினாலும் என்ன படித்திருக்கிறாய் என்ற கேள்வியுமாகவே இருந்தது. இரண்டாவது நாளே அதற்கான காரணமும் புரிந்தது. 


பி.எஸ்.ஸி ஜூலாஜியும், பி.ஏ. எகனாமிக்சும், பி.எஸ்.ஸி ஸ்டாடிஸ்டிக்சும் யாரோ ஒரு அதிகாரிக்கு ப்யூனாய், ஃப்ளாஸ்கில் டீ வாங்கிக் கொண்டும், டீ கப்பும், சாப்பிட்ட தட்டு கழுவும் வேலையிலும், ஆஃப்டர் ஆல் ஒரு பி.யூ.சி. தபால் பிரிவில் இருப்பதும் அவமானமாக உணரப்பட்டது. எதிர்ப்பதற்கு சுலபமாக ஒரு காரணமும் கிடைத்தது. போஸ்டிங் போடுபவரும், நானும் பார்ப்பனர் என்ற காரணம் கிடைத்தது. எதிர்ப்பதற்கு ஜாதி ஒன்று போதாதா என்ன?

இருப்பதிலேயே சீனியர், தைரியமாக இதையே காரணம் சொல்லிக் கேட்டவுடன் ஆடித்தான் போய்விட்டார் அதிகாரி. உடனடியாக அவர் இடத்தில் என்னை வேலைப் பார்க்கச் சொல்லி உத்தரவாயிற்று. ரொம்பவும் பெருமையாக ‘தைரியமாக கேட்டாதான் நியாயம் கிடைக்கும்’ என்று என்னை அழைத்துக் கொண்டு போய் அந்த அதிகாரியிடம் இன்றிலிருந்து இவந்தான் உங்களுக்கு ப்யூன். நான் எல்லாம் சொல்லிக் கொடுத்துவிடுகிறேன் என்று அறிமுகம் செய்து வைத்தான்.

கனிவான முகம். ஐந்தரை அடிக்கு மேல் உயரம். அகன்ற மார்பு. திரண்ட தோள்கள். மீசையின்றி நட்பாய்ப் புன்னகைக்கும் உதடுகள். பசுவைப் போல் கருணை ததும்பும்  கண்கள். காதை மூடிய, நடுவில் வகிடு தெரியாமல் பிரித்த தலை முடி ஸ்டைல். நட்பாய்ப் புன்னகைத்து, பெயர் கேட்டுவிட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டார். 


என் சீனியருக்கோ வாய் கொள்ளாச் சிரிப்பு. கப் எங்கே கழுவ வேண்டும், சாப்பாடு எங்கே இருந்து கொண்டு வர வேண்டும். மிகுந்திருக்கும் சாப்பாட்டை கேரியரில் போட்டு சாப்பாடு கொண்டு வரும் பெண்மணியிடம் எப்போது கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்ற எல்லா இன்ஸ்ட்ரக்‌ஷனும் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.

தான் சாப்பிடப் போகுமுன், என்னை விசாரித்து, சாப்பிட்டுவிட்டு வரச் சொல்லி ராவணதாஸ் சாப்பிடப் போனார். அள்ளி அடைத்துக் கொண்டு, அவர் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தேன். பெல் அடித்து, ’சாப்பிட்டாயிற்று, எல்லாம் சுத்தம் செய்துவிட்டு கேரியரைக் கொடுத்துவிடலாம்’ என்றார். அவர் சாப்பிடும் மறைவுக்குப் போய் பார்த்தபோது குழப்பம் வந்து உட்கார்ந்து கொண்டது. அங்கிருந்தவற்றில் முட்டைமட்டுமே எனக்கு அடையாளம் தெரியும். மீனிலும், கறியிலும் எது எறிய வேண்டியது? எதை திரும்ப டிஃபன் கேரியரில் வைக்க வேண்டியது என்பது ஒன்றும் பிடிபடவில்லை.

திரும்பவும் சீனியரிடம் ஓடி, ‘சாமி எனக்கு எது என்னாண்ணு தெரியல. கொஞ்சம் வந்து சொல்லிக் கொடு’ என்று நின்றேன். அவனுக்கோ படு குஷி. என்னையும் அழைத்துக் கொண்டு, உள் நுழைந்து, ‘அய்யரு பையன். எது என்னான்னு தெரியலை. சொல்லிக் கொடுக்கிறேன்’ என்றவனை பதறித் தடுத்தார். இன்னைக்கு நீயே எல்லாம் க்ளீன் பண்ணி கொடுத்துவிடு என்றவர் ‘சாரி! தம்பி. சைவம்னு சொல்லியிருக்கலாமே? நீங்க போங்க’ என்றவர் சீனியரிடம் என் அதிகாரியைக் கூப்பிடச் சொன்னதும் அடி வயிறு கலங்கியது.

சீனியருக்கோ ‘சிக்கினாண்டா சின்ராசு’ என்ற களிப்பு. என் அதிகாரியிடம் போய் ’ஐயா கூப்டுறாரு. இவன ப்ளேட் எடுக்கச் சொன்னா என்னைக் கூப்பிட்டான். ஒன்னும் தெரியலை’ என்று மொட்டையாக ஒரு பிட்டைப் போட்டு பெருமையாய் என்னைப் பார்த்தான். பயத்தில் கலங்கிப் போய் தின்ன சோறு வெளியே வந்துவிடுவேன் என்று பயம்காட்ட, ‘என்னடா பண்ணித் தொலஞ்ச?’ என்ற அதிகாரியின் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் நின்றேன்.  வெற்றி வீரனாய் சீனியரும், பூசாரியாக அதிகாரியும், பலியாடாக இன்னமும் குறுகி நடுங்கி நானும் போய் நின்றோம்.

மிகவும் சாந்தமாக ‘அந்தப் பையன் சைவம்னு உங்களுக்கு தெரியுமா?’ என்றார்.

’தெரியும் சார். ப்ராமின் பாய். வேலைக்குன்னு வந்தப்புறம் அதெல்லாம் பார்த்தா முடியுமா? புதுசு சார். பழகிக்கணும்’ என்று சொன்னவரை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்தார்.

‘சாரிங்க பத்மநாபன். நாம எல்லாரும் இந்த வயத்துக்காகதான் வேலை பார்க்கிறோம். அவருக்குப் பழக்கமில்லாத ஒன்னை அவர் செய்ய நேரிடும்னா அது பழகும்னாலும் மனசு வருத்தம் இருக்கும். எனக்கு அப்படி யாரையும் வருத்தி சாப்பிட அவசியமில்லை. என் கூட உட்கார்ந்து உங்களால இயல்பா சாப்பிட முடியுமா? அவரு அடிமை இல்லைங்க என்றவர், என்ன தம்பி படிச்சிருக்கீங்க’ என்றார். 

அழமாட்டாக் குறையாக, ‘சார்! எனக்கு எது என்னாண்ணு தெரியாம கேட்டுட்டேன் சார். தப்புன்னா மன்னிச்சிருங்க சார். பழகிக்குவேன் சார்’ என்று சொல்லும்போதே இதோ அழுதுவிடுவேன் போல் ஆகிவிட்டேன். சட்டென்று எழுந்தவர், தோளை அழுத்தி, ’என்ன படிச்சிருக்கீங்க தம்பி’ என்றார்.

‘பி.யூ.சி. சார். மூனு டிஸ்டிங்க்‌ஷன் சார்’ என்று சொல்லி வாய் மூடுமுன், அந்த சாந்தமான முகத்தில் ஒரு சிடு சிடுப்பு. ’யூஸ் ஹிம் ப்ராபர்லி ஐ சே. க்ளெரிகல் போஸ்டுக்குதான் ஆளில்லாம இருக்குல்ல. இந்த மாதிரி பசங்களுக்கு சின்ன சின்ன வேலை கொடுத்து பழக்கலாம். டெஸ்பாட்ச்ல போடுங்க, என்றவர்  சீனியரைப் பார்த்து ‘இன்னைக்கு ஒரு நாள் க்ளீன் பண்ணிடுங்க. உங்களுக்கு விருப்பமில்லைன்னு தெரியுது. அதனால நீங்க இருக்கணும்னு சொல்லமாட்டேன். வேற யாராவது கிடைச்சா போடுங்க. இல்லாட்டி நானே பார்த்துக்கறேன்’ என்றார்.

இப்போது சீனியருக்கு நடுக்கம் தொற்றிக் கொண்டது. ’இல்லை சார். நானே இருக்கிறேன் சார்’ என்றவரை இடை மறித்து ‘எனக்கு கோவம் இல்லைங்க பாபு. விருப்பமில்லைன்னு தெரியும்போது நான் கட்டாயப் படுத்த விரும்பலை’, என்று அமர்ந்தார். ‘சாரிங்க தம்பி என்று மீண்டும் என் தோள் பிடித்தழுத்தி, ஆல் தி பெஸ்ட்’ என்று அனுப்பி வைத்தவர்தான் ராவணதாஸ்.

எளிமையென்றால் அப்படி ஒரு எளிமை. நேரம் தவறாமை. நேர்மை. அவரின் ஆங்கிலத்துக்காகவும், பண்புக்காகவுமே அந்தகாலத்து ஆட்கள் வெள்ளக்காரனுக்கப்புறம் இப்படி ஒரு மனுசன பார்த்ததில்லை என்று பெருமைபடச் சொல்லுவார்கள். பந்தாவாக ஆங்கிலத்தில் ஆரம்பித்த சக அதிகாரிகள் கூட ஆங்கிலத்தில் அவர் அளிக்கும் முதல் பதிலில் அப்பீட்டாகி தமிழுக்கோ இந்திக்கோ தாவி விடுவார்கள். நடையா அது? நிதானமாக ஆனால் ஒரு சிங்கத்தின் நடைபோல் அப்படி ஒரு கம்பீரம்.

பாரிச வாயு வந்த தகப்பனார். தன் வீட்டில் பணி செய்ய ஒரு ப்யூன் இருந்தபோதும், காலையில் எழுப்பி குளிப்பாட்டுவது முதல், பத்திரிகை படித்து செய்தி சொல்லி, உணவூட்டி, மாலை பங்களா லானில் வீல் சேரில் சுற்றி வந்து, திரும்பவும் குளிப்பதோ உடல் துடைப்பதோ கைப்படச் செய்து, இரவு உணவு கொடுத்து, டி.வி. முன்னால் அமர்த்தி, தான் டென்னிஸ் உடையணிந்து கிளம்பும்போது மாலை மணி 7 என்று கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளலாம்.

அவருக்கு மாற்றல் வந்தபோது ‘நல்லது. அப்பா இருந்திருந்தா கஷ்டம்’ என்றாரே தவிர அதை மாற்றிக் கொள்ள முயற்சித்ததே இல்லை. அது அப்படி ஒன்றும் பெரிய காரியமும் இல்லை. காரணம் கடைசி வரியில். பல வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அதற்கடுத்த பதவியில் அதே அலுவலகத்துக்கு வந்தபோது அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி.

ஒரு சக ஊழியர் பாவப்பட்டவர். ஒரு கிட்னி பழுதாகி மாற்றுக் கிட்னி பொருத்தப்பட்டவர். போதாததற்கு இடுப்பெலும்பு நொறுங்கும் நிலையில் இருந்ததால் ஏதோ ஒரு தொண்டார்வ நிறுவனத்தின் மூலம் ஸ்விட்ஜர்லாந்தில் செயற்கை இடுப்பு பொருத்தப்பட்டது. திரும்ப வந்தவருக்கு பொருத்தப்பட்ட கிட்னியும் செயலிழந்து போக ஒரு கிட்னிக்கே உன்னைப் பிடி என்னைப் பிடி என்றிருக்கும் நிலையில் ஒரு சகோதரன் கிட்னி தானம் அளித்தார். ஒவ்வாமை நீக்க மருந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கான பணம் கூட வரவு செலவு திட்டத்தில் இருக்கும்.

அது ஒரு திரவ மருந்து. இளம் சூடான வென்னீரில் கலந்து அருந்த வேண்டும். அப்போது சிறுநீரக மாற்றுக்கு சி.எம்.சி தான் போக வேண்டும். அப்போது புதிதாக இந்த மருந்துக்கு பதில் மாத்திரை வந்திருந்ததாகக் கேள்விப்பட்டு, மனைவியுடன் வந்து பார்த்தார். அந்த மருந்துக்கு பதில், மாத்திரையாக வேண்டும் என்று கேட்கச் சொல்லி இருந்தார் மனைவியை. மிகவும் பொறுமையாக, ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதையும், மாத்திரையை விட மருந்து உடனடியாக உதவும் என்று சொன்னபோது, அந்தம்மிணி, அடிக்கடி கை தவறி உடைந்து விடுவதாக ஒரு காரணம் சொன்னார்.

முதன் முறையாக ராவணதாசிடம் கோவத்தைப் பார்க்க முடிந்தது. ’அது மருந்தில்லீங்க. ஒரு மனுசனோட உசிருன்னு கவனமிருந்தா அதெப்படிங்க கை தவறும்? மூணு மாசத்துக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்தாதான் நேரத்துக்கு மருந்து வந்து சேரும். என்ன பேசறீங்க’ என்றவுடன் ஓவென அழத்தொடங்கிவிட்டது அந்தம்மணி.

5 நிமிடம் அமைதியாக இருந்தார். மருத்துவ அதிகாரிக்கு ஃபோன் செய்தார். ஆர்டரைக் கேன்ஸல் செய்ய முடியுமா என்று உறுதி செய்து கொண்டார். அவரிடமே சி.எம்.சி. டாக்டர்களிடம் பேசி மாத்திரைக்கும் வழி செய்தார். அந்தம்மணி காலில் விழப்போனபோது தானும் சக மனிதந்தான் என்றும் காலில் விழவேண்டிய அவசியமென்னவென்றும் கோவப்பட்டார். அடுத்த நொடி சாந்தமாகி, உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் வரலாம் என்று சொன்னபோது அவருக்கேயான சாந்தமும் அமைதியும் நிறைந்திருந்தது.

பல கோடி ரூபாய் திட்டங்களையும், செயலாக்கத்தையும் கண்காணித்தவர். திறமையான அதிகாரி. எல்லாவற்றையும் விட உன்னதமான மனிதர். விதிக்கு இதைவிட விளையாட வேறு ஆள் கிடைப்பார்களா என்ன? ரிட்டையர் ஆன பிறகு, அந்த காலத்தில் மிகவும் பிரசித்தமாக இருந்த, தேக்கு, சந்தனம், எலுமிச்சை வகையறா முதலீட்டில் தானும் பார்ட்னராகி, கூட்டாளி ஓடிவிட கையிலிருந்து அனைவருக்கும் கொடுத்து முடித்தார். ஒருவருக்கும் குறைவில்லை.

ஏதோ ஒரு நாள் அவர் இறந்துபோன தகவல் வந்தது. கடைசி வரியில் காரணம் சொல்கிறேன் என்றேனே. திரு ராவணதாசின் மாமியார் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமாயிருந்த திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள்.

16 comments:

க ரா said...

இன்னொரு சிறந்த மனிதரை பற்றிய அறிமுகத்துக்கு நன்றி பாலா சார் ...

ராஜ நடராஜன் said...

அப்படியும் இராமசாமி முந்திகிட்டாரு!

நசரேயன் said...

ராமசாமி, நடாஜி முந்திட்டாங்க

ராஜ நடராஜன் said...

கடைசி வரிகள் நச் சுன்னு சொல்லவா த்ரில்ன்னு சொல்லவா?

ராஜ நடராஜன் said...

நசர்ஜி!பதிவு போட்டா ஹேப்பி ஈஸ்டர் சொல்வேன்.நீங்க இங்கே சுத்தறதாலே இங்கேயே வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.

ஓலை said...

Nice character

Mahi_Granny said...

உங்களுக்காகவே ராமராக வந்திருப்பாரோ. நல்ல மனிதர்கள் கிடைத்து இருக்கிறார்கள் .அருமை . பி.யு.சி.யில் நானும் மூணு distinction . அதினால் இன்னும் மகிழ்ச்சி

Unknown said...

ஒரு எளிய மனிதராக கடைசிவரை வாழ்ந்த ஐயா ராவணதாஸ் அவர்களுக்கு என் சல்யூட்...

middleclassmadhavi said...

First time I am visiting here. arumai!

ஸ்ரீராம். said...

மறுபடியும் ஒரு அருமையான கேரக்டர் பதிவு.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நேர்மையும் எளிமையும் உண்மையும் போட்டிபோடுகின்றன உங்கள் எழுத்தில் பாலாண்ணா.

உங்களின் அனுபவங்களும் பிறரை எப்படி அணுகவேண்டும் என்கிற ஐயா ராவணதாஸின் அணுகுமுறையும் என்றைக்கும் நினைவிலிருக்கும்.

காமராஜ் said...

அண்ணா உங்களின் கேரக்டர் எல்லாமே மனிதாபிமானிகள். அருகிருந்து பார்க்க கொடுத்துவைக்கணும்.

sriram said...

அருமை பாலாண்ணா..
பாஸிடிவ் கேரக்டர் எழுதினதுக்கு ஸ்பெசல் நன்றி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Kumky said...

ஓ....

இப்படியான மனிதர்கள் இருந்தார்கள்..

ஈரோடு கதிர் said...

எப்படி உங்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஆட்களாய் வாழ்க்கையில் இருந்திருக்காங்க!!!

க.பாலாசி said...

சேம் டவுட் கதிர் சார்...

மனிதனை படிக்க இங்குதான் வரவேண்டும்..