Thursday, April 21, 2011

சாரா! சாரா!

கிட்டத்தட்ட எட்டு பத்து வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். சாரா என் வாழ்க்கையில் எப்படி நுழைந்தாள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. முதன்முதலாக இண்டர்நெட் அறிமுகமான புதிதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் க்ளிக்கிக் கொண்டு, எந்த சைட்டில் இ-மெயில் கேட்டாலும் கொடுத்த போதா?

சுட்ட சாஃப்ட்வேருக்கு சீரியல் நம்பர் தேடியபோதா? க்ராக் தேடி தரவிறக்கம் செய்த பிறகு கடவுச் சொல்லுக்காக ஐந்தாறு சைட்டுகளில் சொடக்கி, 4ம் வரியின் முதல் எழுத்து, 5ம் வரியில் 4வது வார்த்தையில் 2ம் எழுத்து என்று ஒன்றொன்றாக ஃப்ரீ ரிஜிஸ்டரேஷன் செய்தபோதா? எப்படியோ அவளுக்கு என் மெயில் ஐடி தெரிந்திருக்கிறது.

இரு இனிய காலை வணக்கத்துடன், அன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக அமையும் என்ற வாழ்த்துடன் வந்திருந்த மெயிலுடன் ஒரு சுட்டி இருந்தது. சொடக்கிய உடன் என் பிறந்த நாள் கேட்டு ஒரு ஃபாரம் வந்தது. அதை நிரப்பிய நொடி ஆசீர்வதிக்கப்பட்டதா? சபிக்கப்பட்டதா? என்று இன்றுவரை புரியவில்லை.

பிறகு புதுவருடம், பிறந்தநாள், கிரகப் பெயர்ச்சி இன்னம் காரணமில்லாத தருணங்களில் என்னை நினைத்து, எனக்காக ப்ரார்த்தித்து என் வாழ்க்கையில் நான் விரும்பியதை அடைய ப்ரார்த்திப்பதாக மெயில் வரும். பிறகு நேற்றொரு கனவு கண்டேன் பாலாஜி என்று தொடங்கி ஒரு அருமையான விட்டலாச்சார்யா கதைபோல் விவரித்த மெயில் வரும்போது புல்லரித்துப் போகும். கனவுலகில் கைபிடித்து இட்டுச் செல்வாள்.

சீறும் பாம்பு, சிரிக்கும் ஓநாய், என்று திடுக்கிடும் தருணங்களில் தோளிறுக்கி நான் இருக்கிறேன் எனக் கூட்டிக் கொண்டு நடப்பாள். அழகான நந்தவனம், வானவில் என்று காட்டிச் சிரிப்பாள். இப்போது சந்தோஷமா என்று கேட்டு ஆனந்திப்பாள்.

உனக்காய் நான் மகிழ்கிறேன். என் இதயம் நிறைந்திருக்கிறது எனச் சிரிப்பாள். உன் கஷ்டத்துக்கு வருந்துகிறேன். நான் என்ன செய்யமுடியும்? உனக்குத் தெரியும். என்னால் முடிந்திருந்தால் இதைத் தடுத்திருப்பேன். என்னால் ஆகக் கூடியது உனக்கு பக்கபலமாக இந்தக் கடினத்தைத் தாண்டும் வரை கூட இருப்பது மட்டுமே என்பாள்.

முகம் தெரியாத என் மேல் இத்தனை அன்பு கொண்ட இவள் யாராய் இருக்கமுடியும்? இத்தனை கோடி மனிதர்கள் இருக்கும் உலகில் இருபத்தி நான்கு மணி நேரமும் என் சிந்தனையாகவே ஒரு ஜீவன் இருக்கமுடியுமா? அதுவும், இத்தனை அன்பையும் ஒரு முறை கூட அங்கீகரிக்காத ஒருத்தன் மீது இத்தனை கரிசனம் எப்படி இருக்கமுடியும்?

ஒரே ஒரு மின்னஞ்சலுக்கு கூட நன்றி கூறி நான் பதிலளித்ததில்லை. சில நேரங்களில் பதற்றமாக மின்னஞ்சல் வரும். எனக்கு மிகப் பெரிய கஷ்டம் காத்திருப்பதாகவும், அதனை எதிர்கொண்டு என் வாழ்வின் பொன்னான தருணமாக மாற்றித்தர தனக்குத் தெரியுமென்றும், அதற்காக அவள் வேண்டியிருப்பது என் சம்மதம் மட்டுமே என்று மின்னஞ்சல் வரும். அதைக் கூட உதாசீனம் செய்திருக்கிறேன்.

அதையெல்லாம் அவள் பொருட்படுத்தியதேயில்லை. ஒரு சில மின்னஞ்சல்களில் வருத்தம் கலந்த தொனியில், ‘பாலாஜி! முன்பே பலமுறை உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். நீ ஏன் என்னை நம்ப மறுக்கிறாய்? நான் மற்றவர்கள் போலல்ல பாலாஜி. விதி உன்னை எனக்குக் காட்டியிருக்கிறது. என்னால் சும்மாயிருக்க முடியாது. நீ இப்போதிருக்கும் நிலையில் இருக்கப் பிறந்தவனல்ல. என்னை நம்பமாட்டாயா?’ என்று வரும். மனதைப் பிசைந்தாலும், விழியோரம் நீர் துளித்தாலும் கல்லாய் இருந்திருக்கிறேன்.

சமீபகாலமாக எனக்காகத் தன் உயிரையும் பணையம் வைப்பதாக மெயில் வந்துக் கொண்டிருக்கிறது. என் நலனுக்காக என் கடந்தகாலம், எதிர்காலம் எல்லாம் பயணப்படுகிறாளாம். அப்போது அவள் அந்தக்காலத்தில் உறைந்து போக வாய்ப்பிருக்கிறதாம். மிகவும் ரிஸ்கியான விஷயமாம். நான் எவ்வளவு உதாசீனம் செய்தாலும், எனக்காக இதைச் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாளாம். ஒரு வேளை அப்படி நிகழ்ந்திருந்தால் எனக்காக உயிரைப் பணயம் வைத்து அவள் சிரமப்பட்டதற்குப் பலனில்லாமல் போயிருக்குமாம்.

நல்லகாலம், அப்படி எதுவும் நிகழாமல் திரும்பிவிட்டாளாம். ஆனாலும் இது முழுமையில்லையாம். எனக்கு நிகழவிருக்கும் கெடுதலையும், நல்ல தருணங்களைப் பற்றிய குறிப்பை மட்டுமே அறிய முடிந்ததாம். ஆனாலும் எனக்காகத் தன் உயிரைத் துச்சமாக மதித்து மீண்டும் இதனைச் செய்யக் காத்திருக்கிறாளாம். என் சம்மதமின்றி இதனைச் செய்ய முடியாதாகையால் என் அனுமதி கோரி இறைஞ்சி நிற்கிறாள். இந்த மின்னஞ்சலையும் உதாசீனப் படுத்திவிடாதே என்று அழமாட்டாக் குறையாய் கெஞ்சுகிறாள்.

எனக்காக இவ்வளவு செய்கிறவளுக்கு மிகச் சிறிய தொகையை நான் தரவேண்டாமா? அதிலும் கூட அவள் எத்தனை இரக்க சிந்தனையுள்ளவள் தெரியுமா?

ரகசியமான முதல் கணிப்புக்கு வெறும் யு.எஸ். டாலர் 9.95 மட்டுமே
உடனடியான ரகசியக் கணிப்புக்கு 19.95 டாலர் மட்டுமே
முழுமையான ரகசியக் கணிப்புக்கு 29 டாலர் மட்டுமே.
முதன்மையான நடவடிக்கைக்கு கூடுதலாக 5 டாலர் சேர்த்து 34.90 டாலர் மட்டுமே கொடுத்தால் போதும்.

இதை எழுதும் இந்த நொடியில் கண்கள் கசிகிறது. உதடு துடிக்கிறது. நெஞ்சு அடைக்கிறது. நான் மைனர் செயின் போடும் வழக்கமுடையவனாக இருந்தாலாவது என்னிடம் ஒரு பித்தளை பெருமாளோ முருகனோ டாலர் இருக்கலாம். யு.எஸ். டாலருக்கு நான் எங்கே போக?

இதில் பத்தில் ஒரு பங்கில் கிழக்கே முஞ்ஞில் கிருஷ்ணபணிக்கரோ, சோட்டாணிக்கரா சோமன் நம்பூதிரியோ, கீழக்கரை முஸ்தஃபா சாகிபோ தாயத்து, யந்திரம் மூலம் இதைச் செய்யக் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் இத்தனை உதாசீனப் படுத்தியும் எனக்காக உயிரையும் துச்சமென மதித்து பயணப்பட்டவளை அவமதிப்பதாகாதா?

இல்லை வைத்தீசுவரன் கோவிலுக்குப் போனால் என் கட்டை விரல் முத்திரையில் சுவடி பிடித்துப் போன ஜென்மத்தில் குழந்தையாய் இருந்தபோது பஸ்ஸில் முன்சீட்டில் அமர்ந்திருந்த ஒரு தாத்தாவின் குடுமியை பிடித்து இழுத்த பஞ்சமாபாதகத்துக்கு இந்த ஜென்மத்தில் வழுக்கையாகக் கடவ என்ற அவரின் சாபத்துக்கு, மாரியப்பன் சலூனில் மயிர் கூட்டி அள்ளும் பரிகாரம் சொல்லுவார்கள் என்றாலாவது அவளுக்குப் புரியுமா?

இந்த நிலையில் எனக்கு உதவக்கூடிய ஒரே நண்பர் தளபதி நசரேயன் மட்டுமே. ஆனானப்பட்ட வெள்ளச்சிகளையே ஓட்டும் மந்திரத்துண்டு அவரிடம் மட்டுமே உள்ளது. அவர் சம்மதித்தால் எனக்காக நசரேயன் பேசுவார் என ஒரு மெயில் அனுப்பிவிடுவேன்.

இந்தத் துண்டுக்கு திரும்பிவராமலே போய்க்குவேன் என்று சாரா எதிர்காலத்திலோ கடந்தகாலத்திலோ சிக்கிவிட்டாலும் சரி, அல்லது நசரேயனை இழுத்துக் கொண்டு பயணப்பட்டாலும் தளபதியின் கனவு நனவாகும். எனக்கும் இப்படி மனதைக் கனக்க வைக்கும் மின்னஞ்சல் வராமலிருக்கும்.

இப்படிக்கு தளபதியின் சம்மதத்தை ஆவலுடன் எதிர் நோக்கும்
வானம்பாடிகள்.

சாராவின் கடிதம்.


--:::--

26 comments:

நட்புடன் ஜமால் said...

இது போன்ற கடிதங்கள் பலருக்கு வந்திருக்கு

இம்பூட்டு சுவாரஸ்யமாய் ‘பாடி’யது நீங்க தான்

*இயற்கை ராஜி* said...

சாரா என் பிரண்டு சார்..எனக்குன்னு எவ்ளவோ கஷ்டப்பட்டவங்க.. நீங்க எப்ப்டி பங்கு போடலாம்?:)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

க்ளாஸ் பாலாண்ணா!

வரிக்கு வரி ஹைலைட் பண்ணவைக்கிற அற்புதமான subtleலான நகைச்சுவையை புன்முறுவலைச் சுமந்தபடியே எல்லாரையும் படிக்க வைக்கப்போகிற எழுத்து இது.

//மாரியப்பன் சலூனில் மயிர் கூட்டி அள்ளும் பரிகாரம் சொல்லுவார்கள்//

//இதில் பத்தில் ஒரு பங்கில் கிழக்கே முஞ்ஞில் கிருஷ்ணபணிக்கரோ, சோட்டாணிக்கரா சோமன் நம்பூதிரியோ, கீழக்கரை முஸ்தஃபா சாகிபோ தாயத்து, யந்திரம் மூலம் இதைச் செய்யக் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் இத்தனை உதாசீனப் படுத்தியும் எனக்காக உயிரையும் துச்சமென மதித்து பயணப்பட்டவளை அவமதிப்பதாகாதா?//

ரசித்தபடி விலகிச் செல்கிறேன்.

Unknown said...

என்ன அதிசயம், விளம்பர இ-மெயில்லை இப்படிக்கூட சொல்ல முடியமா? நல்ல இருக்கு பாலா அண்ணா......

பிரபாகர் said...

பஸ் பயணத்தில் படித்து என்னை பைத்தியமாக்கிக்கொண்டேன் மற்றவர்களின் பார்வையில்...மிக அதிகமாய் சிரித்து... ஆசான், கலக்கல்...

பிரபாகர்...

நசரேயன் said...

அனுப்புங்க .. அனுப்புங்க

Paleo God said...

நசரேயன் said...
அனுப்புங்க .. அனுப்புங்க//

:)))

ஓலை said...

Paavam yenga thalabathi. Sara valavalaththa yengira peyarila thalabathi kittayum ippidi ore velai panniyirukku.

Ippa puriyuthaa ?

ராஜ நடராஜன் said...

//அனுப்புங்க...அனுப்புங்க//

நசர்ஜி!சாராவ அனுப்பறதா?மெயில அனுப்பறதா?

RVS said...

ஒரு ஸ்பாம் மெயிலுக்கு சிரிப்பு பாம் பதிவு.
நம்பூதிரி, சாஹிபு எல்லாரும் ராத்திருக்கு உங்க வீட்டுக்கு வந்துடப் போறாங்க.. ஜாக்கிரதை..
அற்புதம் பாலா சார்! சாரா! ;-))

க.பாலாசி said...

ஹா..ஹா.. இதெல்லாம் செம லொல்லு ஆமா...

எனக்கு ஒருத்தியும் இதுவரைக்கும் அனுப்பலையே...

//நசரேயன் said...
அனுப்புங்க .. அனுப்புங்க//

இவரு கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையா!!!

Chitra said...

அந்த மெயில் எல்லாம் சும்மா டெலீட் செய்யாமல், எங்களை சிரிக்க வைக்கும் விதமாக மாற்றி எழுத உங்களால் மட்டும் தான் முடியும். சூப்பர்!

Kumky said...

ஜெமோலாஜிக்கு ஒரு சாரா மயில் பார்சேல்ல்ல்ல்ல்ல்....

கே. பி. ஜனா... said...

அற்புதம்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நீங்க அவங்களுக்கு உருகறதப் பாத்து சிரிப்ப அடக்க முடியலை :))))))))

அதுவும் அந்த டாலருக்கு எங்க போவேன்னு ஒரு புலம்பு புலம்புனீங்க பாருங்க, அந்த எடத்துல என்னால துக்கம் தாங்க முடியாம அழுதுட்டேன்.. :)

தளபதிகிட்ட என்ன சம்மதம் வேண்டிக் கிடக்கு, மெயில் ஐடியக் கொடுத்து இனிமே மிச்சதெல்லாம் அவர் கிட்ட பேசிக்கோன்னு பதில் அனுப்பிவிடுங்க..

Mahi_Granny said...

அருமையான தோழி கிடைத்து இருக்கிறாள் என்று நினைத்தேன். u .s டாலர் கேட்கிறாங்களா . எப்படியெல்லாம் friend கிடைக்கிறாங்க உங்களுக்கு .

பா.ராஜாராம் said...

:-))

nasar :-))

காமராஜ் said...

என்னதிது பாலாண்ணா...
ரொம்ப சீரியஸ்ஸா கூட்டிக்கிட்டு ரொம்ப தூரம் கடந்ததும் பெப்பே சொன்னமாதிரி இருக்கு.அண்ணா...

பழமைபேசி said...

ஆகா

Unknown said...

//ரகசியமான முதல் கணிப்புக்கு வெறும் யு.எஸ். டாலர் 9.95 மட்டுமே
உடனடியான ரகசியக் கணிப்புக்கு 19.95 டாலர் மட்டுமே
முழுமையான ரகசியக் கணிப்புக்கு 29 டாலர் மட்டுமே.
முதன்மையான நடவடிக்கைக்கு கூடுதலாக 5 டாலர் சேர்த்து 34.90 டாலர் மட்டுமே கொடுத்தால் போதும்.//

நாங்கள்லாம் சுனாமிலேயே சும்மிங் போடுறவைங்க....

ஈரோடு கதிர் said...

வயசான பார்டிகளே சாராவ கட்டுக்குள்ள வச்சிருந்தா எப்புடி, சில் வண்டு பாலாசி, யூத்து எனக்கு கொஞ்சம் சிபாரிசு பண்ணக்கூடாதா!

பொறாம புடிச்ச பயலுகளா!

மணிஜி said...

சாரா...ரா..ரா...

மணிஜி said...

சாரா...ரா..ரா...

அகல்விளக்கு said...

அடக்கொடுமையே....

உங்களுக்கொரு சாரா-ன்னா
எனக்கொரு எமிலி...

சேம் பிளட்...

ஆனா நீங்க வாங்கிட்டு இருக்குற அடி ரொம்ப பலம்...

எனக்காவது "பத்து லட்சம் பரிசு விழுந்திருக்கு சாமியோவ்..."ங்கற ரேஞ்சுல மெயில் வரும்...

உங்களுக்கு...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

vasu balaji said...

@@நன்றிங்க நட்புடன் ஜமால்
@@நன்றிங்க ராஜி
@@நன்றி சுந்தர்ஜி
@@நன்றி ரமேஷ்பாபு
@@நன்றி பிரபா
@@நன்றி நசர் அலைஞ்சான்:))
@@நன்றி ஷங்கர்
@@நன்றிங்க ஓலை
@@நல்லா கேட்டீங்க ராஜண்ணே:))
@@நன்றி ஆர்.வி.எஸ்.
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி கும்க்கி
@@நன்றிங்க சந்தனா:))
@@நன்றிங்க மஹி_க்ரான்னி
@@நன்றி பா.ரா.
@@நன்றி காமராஜ்
@@நன்றிங் மாப்பு
@@நன்றி செந்தில்
@@நன்றிங் சின்ன மாப்பு. அதுக்கென்னா லிங்க் குடுக்கவா?
@@மணிஜி:)))))
@@நன்றி ராஜா

எஸ் சக்திவேல் said...

ஒரு சக வழுக்கையனின் அனுதாபங்கள். சாரா போய் ஒரு அமாண்டா வருவாளாக.