Wednesday, February 16, 2011

கேரக்டர் - அய்யர்.

அய்யரை நீங்கள் பார்த்திருக்கலாம். ஐந்தடி ரெண்டங்குலம் உயரம். கட்டையான சுமாரான பருமன். நல்ல நிறம். சிலர் நகம் வளர்ப்பார்கள். சிலர் மீசை வளர்ப்பார்கள். அய்யருக்கு மூக்கிலும், காதிலும் முடி வளர்ப்பதில் தனி ஈடுபாடு. காதில் உள்ளே வெளியே என்று பொசு பொசுவென்று காதை அடைத்துக் கொண்டு அப்படி ஒரு முடியென்றால் மூக்கில் ஷேவிங் ப்ரஷ்ஷை சொருகினார்போல் இருக்கும்.

பழைய ஐந்து பைசா போல் சதுரமுகம். இறுக்கி இறுக்கி தடித்த உதடுகள். மினுமினுக்கச் சிரிக்கும் கண்கள். மீசை வைத்தால் ஷேவிங் பிரஷ்ஷை மறைக்கும் ஷூ பாலிஷ் போடும் ப்ரஷ் போல் இருக்கும் என்பது போல் அகலமாக மூக்குக்கும் மேல் உதட்டுக்கும் இடைவெளி.

பொதுவாக சிலர் வெற்றிலை போடுவார்கள். சிலர் மூக்குப் பொடி போடுவார்கள். இதிலும் நம்ம அய்யர் தனி. ரெண்டும் உண்டு. அந்தக் காட்டுக்குள் மூச்சு போய் வருவதே கஷ்டம். இதில் பொடி வேறு எப்படி உள்ளே போகிறது என்ற சந்தேகத்துக்கே விடை தெரியாதபோது, வெற்றிலை குதப்பி இடுக்கிக் கொண்டு உம்ம்ம்ம்ம் மென்றிருக்கையில் வாயிலும் இல்லாமல் மூக்கிலும் இல்லாமல் மீன் போல் காதினாலும் இல்லாமல் எப்படித்தான் சுவாசிக்கிறார் என்ற கேள்விக்கு விடையேயில்லை.

பொதுவாக வெற்றிலை பாக்கு புகையிலை போடுபவர்கள் உம்மணா மூஞ்சிகளாக இருப்பது வழக்கம். புகையிலை எச்சில் ஊற ஊற கன்னம் கொள்ளாமல் பிதுக்கிக் கொண்டு, வாயோரம் கசியாமல் உதடு கூட்டிக் கொண்டு எழுதுவதும், ஏதாவது கேட்டால் அமாவாசை இரவில் ஊளையிடும் நரி போல் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு ‘அடெல்லாம் எழ்ழ கேட்டா டெரியாடு! அங்ஙடாழ் இழுக்கும் டேழு’ என்ற பதில் வரலாம். தானாக ஜோக் அடிப்பதோ அடிக்கப்படும் ஜோக்குக்கு சிரிப்பதோ இயலாத காரியம்.

ஆனால் அய்யர் அப்படியில்லை. ஒட்டகம் நீரைச் சேமிப்பதுபோல் புகையிலை நீரை சேர்த்து வைக்க தனி பை இருந்திருக்குமோவென்ற சந்தேகம் எப்போதும் உண்டு. காதைத் தீட்டிக் கொண்டு சுற்றிலும் நடப்பதைக் கேட்டுக் கொண்டு சிரிப்பு வந்தால் தேன் தடவிய குழந்தை போல் உதட்டைக் கூட்டிச் சுழித்து உப்பென்று நின்றால் கண்கள் கலகலவென சிரிக்கும்.

புகையிலை நீர்ப்பையில் பதுக்கினாற்போல் பெரும்பாலும் புகையிலை உருண்டை மட்டும் அடங்கி புடைத்த கன்னத்தோடு பளிச்சென வெடிச்சிரிப்பு கமெண்ட் அடித்து வாய் கூட்டிய மறு நொடி இரண்டு கன்னமும் உப்பிக் கொள்ளும்.

சாப்பிட்டுவிட்டு ஆஃபீஸ் வந்ததும் ஒரு முறை கொப்பளித்த கையோடு வெற்றிலை போட்டால் காஃபி வரும் வரை தாங்க முதல் கச்சேரி. வெற்றிலை போடுபவர்கள் சாதாரணமாக மேம்போக்காக காம்பு நீக்காமல், சீவல், பின்னால் ரெண்டு வெற்றிலை காம்பு கிள்ளி சுண்ணாம்பு அப்பி இடுக்கிக் கொண்டு, ஒரு உருண்டை பன்னீர் புகையிலை திணித்துக் கொள்வார்கள். அய்யருக்கு அது தவம்.

நெய் சீவல் இருந்தால் முகத்தில் தெரியும் வாஞ்சையே தனி. இல்லாவிட்டாலும் சீவலை விரலால் எடுக்கும்போதே அளவாய் வரும். ‘பாப்பான் நண்டு பிடிக்கிறார்போல்’ என்ற சொலவடை செல்லாது. சரியான அளவில் விரல் பிரிந்து சரியான அளவை அள்ளும். ஒரு முறை போட்டால் இன்னும் கொஞ்சம் என்ற பேச்சே இல்லை. அப்புறம் ரோஸ் சுண்ணாம்பை வழித்து ஆள்காட்டி விரல் முனையில் வைத்துக் கொண்டு துளிர் வெற்றிலையாக எடுத்து ஒரு உதறு. பிறகு ஒன்றொன்றாக முன்னும் பின்னும் பார்த்து சட்டையிலோ உட்கார்ந்திருந்தால் பேண்டிலோ துடைப்பார்.

துடைப்பது என்றால் அதற்கு அர்த்தமே வேறு. தங்க நகைக்கு நாய்த் தோலால் பாலீஷ் போடுவார்களே அப்படி. பின்பு கட்டை விரலால் வெற்றிலை நரம்பில் ஒரு நீவல். எடுத்த சுண்ணாம்பு சீராக எல்லா வெற்றிலையிலும் தடவி, முதுகுப் புறம் மடித்து, நுனி கிள்ளி, நடு நரம்பை இழுத்தால் சர்ஜன் மாதிரி காம்பு மட்டும் வரும்.

அந்த கேப்பில் விரலிடுக்கில் வெற்றிலையை வைத்துக் கொண்டு கட்டளைகள், விளக்கங்கள் சொல்லி ஒன்றொன்றாய் உள்ளே அனுப்புவதற்குள் சீவல் ஊறி பதமாய் இருக்கும். வெற்றிலை உள்ளே போனதும் புகையிலை உருட்டுவதெல்லாம் கிடையாது. அது ஒரு சீராக அரைபட்டு சீவலோடு கலந்தபிறகு, கண்ணாடித்தாள் பையிலிருந்து பன்னீர் புகையிலை அளவாக விரலிடுக்கில் சிக்கும். உள்ளேயே உருட்டி பந்தாக்கி வாய்க்குள் போட்டால் ஆலாபனை முடிந்த கச்சேரிபோல் முகத்தில் ஒரு எக்ஸ்டஸியோடு அமைதியும் சேரும்.

அந்த சுகத்தில் கொஞ்சம் திளைத்து விரல் சுண்ணாம்பைத் துடைத்து ஒரு சிட்டிகை பொடி எடுத்து திணித்த பிறகு மூலை மடித்த கர்ச்சீப்பால் மூக்கு ப்ரஷ்ஷுக்கு பாலிஷ். சன்னதம் வந்தவர் போல் ஆகிவிடுவார்.

அய்யர் குள்ளம் என்பதால் பெரும்பாலும் நின்றபடியேதான் வேலை செய்வார். நெடிய நோட் எழுத வேண்டும் என்றால் மட்டும் உட்காருவார். அரியர்ஸ் பில், மட்டமடித்ததால் சம்பளம் போடாத கேசுகளுக்குத் தெரியும். இந்த முயக்கத்தில் அய்யரிடம் போய் நின்றால் வரம்தான் என்று.

இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார் அல்லது தானே செய்வார். அப்படி ஆட்களையெல்லாம் நிறையச் சொல்லியாகிவிட்டது. அய்யரின் ஸ்பெஷாலிடி வேறு.

என்னதான் பேரை மாத்தி வச்சிக்கோ எனக்கென்ன போச்சு என்று இராயப்பேட்டையை கொலைகாரன் பேட்டை என்றுதான் சொல்லுவார். தன் பதின்ம வயதில் யாரோ யாரையோ வெட்டத் துரத்தி வந்ததற்குப் பயந்து தில்லகேணி வரை ஓடி திரும்பி வர வழி தெரியாமல் திகைத்த கதை எத்தனை கேட்டாலும் அலுக்காது. அலுவலக வேலையில் மூழ்கி லேட்டான காலங்களில் அடிவயிறு கலங்க வீடு திரும்புகையில் நம்ம அய்யருடா என்று ஆறுதல் அளிக்கும் குரல் பலத்தில் ஓடிப் போய் வீடு சேரும் காமெடியை புகையிலை எச்சையோடு மற்றவர் புரையேறச் சிரித்தாலும் கண்ணால் சிரித்தபடி சொல்லும் கலைஞர்.

இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்த வடக்கத்தியான் கோஷ்டியை  “உன் ஜர்தா என்ன பெரிய கொம்பா? இதைப் போடு” என்று பன்னீர்ப் புகையிலை பீடா கொடுத்து, கடைசி நாளில், வந்ததற்கு ரெண்டு பேராவாவது எழுதணுமே அய்யர் என்று கண்கள் கலங்க கெஞ்சி அவர் விருப்பத்துக்கு ரெண்டு ஜுஜூபி அப்ஜக்‌ஷன் எழுத வைத்தவர். 

சோதனைபோல் ப்ரமோஷனில் பெங்களூரு கண்டோன்மெண்டில் போட்டுவிட்டார்கள். சவம் பெங்களூர் மெயிலில் 365 நாளும் கூட்டம்தான். அதனால், சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு கிளம்பினால் ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் முன்னதாக வந்து மேலே படுத்துவிடலாம். ஜோலார்பேட்டில் இறங்கி ஒரு பால் சாப்பிட்டு முடிக்க ஐலேண்ட் எக்ஸ்ப்ரஸ் காலியாக வரும். தூக்கம் தொடரலாம். திரும்பும் போதும் இப்படியே. வெள்ளி இரவு கிளம்பி சென்னை வந்து ஞாயிறு இரவு கிளம்பி பெங்களூர் சேருவது வழக்கம்.

அப்படி ஒரு முறை திரும்பும்போது ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் பாய்ந்து இடம் போட்டு ஏறியும் வண்டி கிளம்பவில்லை. கக்கூசில் தண்ணியில்லை என்று செயினை இழுத்ததால் நீர் நிரப்பும் வேளையில், ஆயில் துடைத்த துணிப்பந்தத்தைக் கொளுத்தி கோச்சின் அடியில் ப்ரேக் கட்டையை சரி பார்ப்பதை எண்ணெய்ப் புகையும் நெருப்பு வெளிச்சமும் பீதியைக் கிளப்ப, ‘அய்யய்யோ, வண்டியில் நெருப்பு’ என்று முதலில் பாய்ந்தவர் நம்ம அய்யர்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் கோச்சில் இருந்தவர்கள் முழுதும் ப்ளாட்ஃபார்மில்.  அது நெருப்பில்லை, ப்ரேக் செக்கிங் எனத் தெரிந்து ஆசுவாசமாவதற்குள் விசில் ஊத அனைவரும் பாய்ந்தேறிய பிறகு பார்த்தால் நிற்க இடமில்லாமல் நின்றிருந்த அய்யர் லக்கேஜில் படுத்திருந்தார்.

படுத்திருந்தவர்கள் எல்லாம் நின்றபடியும், நிற்க இடமில்லாதவர்கள் வசதியாகவும் ஒரு நொடியில் மாற, ‘யார்யா சவுண்ட் விட்டது’ என்ற எரிச்சல் கேள்விகளுக்கு புகையிலை அடக்கியபடியே அய்யரால் மட்டும்தான் வெடிச்சிரிப்பு சிரிக்காமல் இருந்திருக்க முடியும்.

அய்யருக்கு இன்னோரு ஸ்பெஷாலிட்டியும் உண்டு. மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடித்துவிடும் என்றபயம். ஒரு நாளும் கையால் ஸ்விட்ச் போட்டதோ அணைத்ததோ இல்லை. இருப்பா! நானும் கிளம்பிட்டேன் லைட்டை அணைத்துவிடு என்று கிளம்புவார். வேறு வழியில்லை எனில் இதற்காகவே பதுக்கி வைத்திருக்கும் 4 அடி நீள கட்டையால் முதல் முறை பட்டாசு கொளுத்தும் குழந்தைபோல் பீதியோடு அணைக்கும் அழகே அழகு.

கொடுமை கொடுமை என்று அய்யரைப் பழிவாங்கவே அடிக்கடி ஜல்ப் என்னும் ஜலதோஷம் பிடித்து ஆட்டும். மூக்குப் பொடியும் போட முடியாமல், புகையிலை எச்சையும் அடக்க முடியாமல் தும்மிக் கொண்டே இருந்தால் மனுசனுக்கு வேறே நரகம் என்ன இருக்கிறது? அப்போதெல்லாம் மருந்துக் கடைகளில்தான் ப்ராந்தி கிடைக்கும். அதுவும் ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்க வேண்டும். அவுன்ஸ் க்ளாசில் ஊத்தி ராவாக கொடுப்பார்கள். அதை சிரப்பு என்று என்று நம்பிக் குடித்தவர் அய்யர்.

பெங்களூர் குளிருக்கு ஜல்பின் தொல்லை அதிகமாக ப்ரிஸ்க்ரிப்ஷனோடு மருந்துக் கடைக்குப் போனபோதுதான் அது சிரப்பில்லை ப்ராண்டி எனத் தெரிந்து கொண்டு, ஜல்பா ப்ராண்டியா என்று பட்டி மன்றம் நடத்தி ஒரு வாய் ஊற்றிக் கொண்டு மிச்சத்தை அப்படியே வைத்து விட்டு  வருவதை சொன்னதற்கு சிரிக்கவா? அல்லது  ‘அதுவரைக்கும் எனக்கு போதைன்னே தோணினதில்லை! ப்ராண்டிக் கடையில் குடித்தால் மட்டும் பறக்கறாமாதிரி கால் பின்னும்’ என்று குழந்தை மாதிரி சொல்வதற்கு சிரிக்கவா?

எட்டாம் நம்பர் சாராயக் கடையில் 50 மில்லி வாங்கி பன்னீர் சோடாவில் கலந்து மிளகு போட்டுக் கொண்டு வரச்சொல்லி அதை ஃபாரின் சிரப்பு என்று ஏமாற்றிக் கொடுத்து அய்யரின் அலம்பல் தாங்காமல் அவர் நண்பர் நொந்து போனது வேறு காவியம்.

இப்படிக் குழந்தையாகவே இருந்து ரிட்டையர் ஆகி கொஞ்ச வருடங்களுக்கு முன் இறந்து போனார் அய்யர்.
-:o:-

Post a Comment