Wednesday, December 15, 2010

கேரக்டர் - ராஜன்...

உழைத்துக் கரம்பேறிய உலக்கைக் கைகளும், முரட்டு முகமும், சாராய வாடையுமாய் ஒருவன் அவரை நெருங்குகிறான். அவர், கிள்ளியெடுக்க சதையின்றி, கொஞ்சம் அதி வெளிச்சமான ஆர்க் லேம்ப் போட்டால் ஸ்கேனிங் இல்லாமலே உடலுறுப்புக்களைப் பார்க்கலாம் போன்ற செக்கச் சிவந்த ஒல்லியான தேகம். துறுத்தி நிற்கும் நெஞ்சுக்கூட்டில் ஒற்றை ருத்திராட்சம். தாடி என்றே குறிப்பிடும் அளவுக்கு அடையாளமான வெண் தாடி. தலைமுடியை இறுக்கி பின்னிழுத்துப் போட்ட ரப்பர் பேண்ட். ஆண்களில் அதிகம் காணமுடியாத செக்கச் சிவந்த உதடுகள். தீர்க்கமான நாசி. அதைவிட ஊடுருவித் துளைக்கும் பார்வை. நெற்றியில் காமாட்சி குங்குமம். பார்க்கும் யார்க்கும் கும்பிடத்தோன்றும் உருவம்.

‘சாமி! ஃபி எப் போட்டுக்குறேன் சாமி. ஐந்நூறு ரூபாய்தான். வந்துகினே கீது சாமி. கொய்ந்தைக்கி பீஸ் கட்டணும். ஆப் டே சி.எல். போட்டுக்கிறேன். மன்ஸு வை சாமி’ என்கிறான்.

நெற்றிக் குங்குமம் மாதிரியே சிவந்த முகத்துடன் “த்தா! ஏண்டா என் தாலியறுக்கறீங்க. மனுஷனா மாடா. வந்ததையெல்லாம் செக் போட்டு கொண்டு கொடுத்துட்டு இப்பதானே உக்கார்றேன். ஃபீஸ் கட்றானாம் குடிகார நாயி. ஒரு நிமிஷம் நின்னா பளார்னு அறைஞ்சிடுவேன்” என்ற பதிலுக்கு அந்தச் சண்டியனின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?

முகமெல்லாம் மலர, ‘டாய்ங்ஸ் சாமி! மச்சான் போலாம். வா! சாமி கெட்ட வார்த்தைல திட்டிடிச்சி. ஒரு டீ சாப்டு வந்தா துட்டு வாங்கிக்கலாம்’ என்று போவான். தலை எழுத்துடா என்று குழந்தை மாதிரி சிரித்தபடி மதிய உணவைப் புறம் தள்ளித் தேடிப்போவார். ‘ஒரு செகண்ட்ல திட்டிட்டேன். பாவம். நம்பிண்டு போறான். போட்டுக் கொடு’ என்று கேட்டு வாங்கி, செக் எழுதி, கேஷியரிடம் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்து சாப்பிடுவார். அவர்தான் ராஜன்.

நாலு முழக் கதர்வேட்டி, அண்ணன் மகன்கள் போதவில்லை என்று கொடுத்த சட்டை, தடியான இங்க் பேனா, பாக்கட் கொள்ளாக் காகிதங்கள், செக் எழுது்ம் நேரம் தவிர ஓய்வின்றி நடையும் உழைப்பும். செங்கல்பட்டில் வீடு. காலை முதல் பேசஞ்சரில் வந்துவிடுவார். இரவு  பாண்டியனில் திரும்பினால்  சீக்கிரம். அப்போதும் பை நிறைய பில்லும், செக்கும், ஸ்டேட்மெண்டுமாய் வேலை பார்த்தபடி போவார். ராஜனிடம் பில் போனால் செக் நிற்காது என்று நம்பிப் போவார்கள்.

இரவு ஏழரை மணிக்குக் கிளம்புவார். டேபிள் அடிகளில் ஏதாவது செக் தாள் பறந்திருக்கிறதா என்று பார்த்து, காந்தி படத்தின் முன் கை கூப்பி வணங்கி ‘ராமச்சந்திர மூர்த்தி! கிளம்பலாம்’ என்று கிளம்பி பறக்க பறக்க வண்டி பிடிக்க ஓடுவார். ராஜன் திட்டினார் என்று ஒரு முகம் சுணங்கியதில்லை. சாரி சொல்லிவிட்டுப் போவார்கள். சம்பளப் பட்டுவாடாவுக்கு  விரட்டி விரட்டி பில்லை பாஸ் செய்ய வைத்து இரண்டு நாள் முன்பாகவே செக்கை அனுப்பிவிட்டு, மலர்ந்த முகத்துடன் எல்லா செக்கும் அனுப்பியாச்சுப்பா. நம்பிண்டு போய் சம்பளம் வரலைன்னா கஷ்டம் என்று போவார்.

சில நேரங்களில் கடவுளையே நீ இருக்கிறாயா என்று கேட்கத் தோன்றும் தருணங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்க்கும். இவர் விஷயத்தில் ரொம்பவே அப்படியான தருணங்கள் அமைந்தது. வாய் ஓயாமல் ஸ்லோகம் சொல்லிக் கொண்டு, கீர்த்தனங்கள் பாடிக் கொண்டு, செய்யும் தொழிலில் நேர்மை, அன்பு, இடையறா உழைப்பு என்று இருக்கும் ஒருவனை விட வேறே மனிதனை எங்கே தேட? லக்ஷ்மணனைப் போல அண்ணன் மீது அவ்வளவு மரியாதை. பாசம். அவரின் குழந்தைகளைத் தன் பிள்ளைகளாக வளர்த்தார் என்றோ அவருக்கு பிள்ளை இல்லாமல் போகும்?

மனைவிக்கு மன நலம் அவ்வளவு சரியில்லை. சுயமாக ஒன்றும் செய்யத் தெரியாது. பயந்த நாட்களில் அறையை விட்டு வெளியே கூட வரமாட்டார். காலையில் எழுந்து, பூஜை புனஸ்காரங்களோடு சமையலும் செய்து, மனைவிக்குச் சாப்பிடக் கொடுத்து, மதியத்துக்கும் எடுத்து வைத்து, அக்கம் பக்கம் பார்த்துக் கொள்ளச் சொல்லி முதல் காஞ்சிவரம் பாஸஞ்சர் பிடித்து ஒன்பதரைக்கு ஆஃபீஸில் இருக்க முடியுமா? ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல 35 வருடம் இந்த நெறியில்தான் வாழ்க்கை என்றால் மனிதனுக்கு சலிப்பு தட்டாதா?


ரிடயராகி பத்து வருடமிருக்கும். இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்தேன். வெளியுருவில் சற்றும் மாற்றமில்லை. முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். கையைப் பிடித்துக் கொண்டு ‘எப்படி இருக்க பாலு’ என்ற நொடியில், ஒரு நல்ல சங்கீதத்தில், கோவில் ஹாரத்தியின் போது, அமைதியான ஒரு நொடியில் அலை அலையாய் உடலில் ஒரு சிலிர்ப்பு பரவுமே! உடலின்றி கனமின்றி பரப்பது போல், கனவா நனவா என்று ஒரு உணர்வு வருமே, அப்படி வந்தது. மனமெல்லாம் துடைத்துவிட்டது போல் இருந்தது. அதிகாலையில் குளிர்ந்த நீர் ஆற்றில் இறங்கி நிற்கையில் அடி வயிற்றில் சூடாக நெஞ்சு வெடிக்கும் போல் கனமாக இருக்குமே அப்படி ஓர் உணர்வு.

நீங்க எப்படி இருக்கீங்க சார் என்று கேட்கவே தொண்டையடைத்தது.  ‘ஆண்டவன் புண்ணியத்தில் நல்லாயிருக்கேண்டா. பூஜை கோயில்னு போயிடுறது பொழுது. இனி என்ன தேவையிருக்கப் போறது சொல்லு’ என்று ஆசி கூறிப் பிரிந்தார்.
 

எத்தனையோ உருப்படாத கேஸ்களுக்கு சற்றும் தகுதியில்லாவிடினும் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து உதவ முடிந்திருக்கிறது. உழைப்பைத் தவிர ஒன்றறியாத இந்த உத்தமருக்கு என்றைக்கோ சரியாக செய்த சம்பள நிர்ணயத்தை தப்பாக மாற்றி வந்த ஒரு ஆணைக்கு எதிராக போராட ஒரு நரசிம்மன் இல்லை.

செய்யக் கூடியவர்கள் ‘ப்ச்! ரூஊஊஊல் அப்படி இருக்கிறது என்பதற்கு மேல் செய்யத் தயாரில்லை. தீர்வாணையத்தில் ஒரே ஹியரிங்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு பெறக்கூடிய எளிய கேஸ். இத்தனைக்கு அவரின் உறவினர் அங்கே குமாஸ்தா. பல தேர்ந்த வழக்கறிஞர்களும் அனுமதி கட்டத்திலேயே தீர்ப்பாகிவிடும் என்று சொன்ன வழக்கு. ஒரு பகல் போதில் அரசு ஆணை! விசாரணைக்குத் தகுதியற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்ட போது அதிர்ந்து போனேன். உயர் நீதி மன்றத்துக்குப் போகலாம் சார் என்று எவ்வளவோ சொன்னேன்.
என் பெரிய தோல்வி இதிலிருக்கிறது.

தளர்ந்த மனதுடன்,  ‘இது எனக்கு இல்லை பாலு. நீ சொன்னாய். அத்தனை வக்கீல்மாரும் சொன்னார்கள். அப்படியும் இப்படி ஆகிறதென்றால் எனக்கு இது விதிக்கலைடா. எனக்குப் போராட தெம்பில்லைடா. என்ன ஒரு அம்பது ரூபா பென்ஷன்ல வருமா? உழைச்ச உழைப்பை இல்லைடான்னு பதினஞ்சாயிரம் என் வயித்தில அடிச்சானா? இதைப் போராடி வாங்கித்தான் என்ன பண்ணப் போறேன்? விடு, அதை விட அசிங்கம் ஒன்னுமில்லை’ என்று போனது இன்னும் கண்முன்னிருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

32 comments:

Unknown said...

Hello Sir

vasu balaji said...

@Sethu
hello:)

க ரா said...

Sir marupadiyum oru arumaiyana character a introduce panirukinga.. thanks sir...

க ரா said...

Sir sikiram intha character a sethu oru book konduvanga sir ...

vasu balaji said...

@இராமசாமி

நன்றிங்க இராமசாமி

Unknown said...

பெரிய மனிதர். வணக்கம் அவருக்கு.

எங்க அப்பா கிட்டேயும் PF லோன் க்கு வந்து நிற்பதைப் பார்த்திருக்கிறேன். எல்லாத்தையும் எடுத்து இப்பவே செலவு செய்யறாங்கன்னு குறை படுவார். நான் அவங்கப் பணம் தானேன்னு சொல்லுவேன். மரியாதை இல்லாமப் பேச மாட்டார்.

நம்மூர்ல ஏன் சார் எல்லோரையும் வாடாப் போடாப் போட்டு பேசறாங்க. எங்கப்பாவையும் அவர் கூட வேலை செய்யும் சிலர் வயதில் சிறியவர்கள் கூட அவரைப் அவன்/இவன் வாடா/போடாங்கு போதெல்லாம் செம எரிச்சலா இருக்கும். எங்கப்பா கிட்ட தான் குறை பட்டுக்க முடியும். அவர் கண்டுக்கமாட்டார். இதுக்காகவே ஒரு ஆளு என்னை சிகரட் வாங்கி வாணுதக்கு, முடியாது என்று சொல்லி விட்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அதிகாலையில் குளிர்ந்த நீர் ஆற்றில் இறங்கி நிற்கையில் அடி வயிற்றில் சூடாக நெஞ்சு வெடிக்கும் போல் கனமாக இருக்குமே அப்படி ஓர் உணர்வு. //
பாலா..எப்படி இப்படி..ம்..ம்..

Great

பழமைபேசி said...

மதியம் உண்டுட்டு சித்த நித்திரை கொண்ட்டு எந்திரிக்கிறேன்...இராஜன் வண்ட்டு போயிருக்குறாரு... சேது ஐயா முந்திகிட்டாரு...அவுருகூட இந்த பாலாண்ணன் விளையாடுறாரு... தாராவரத்து அண்ணன், வெடிஞ்சதும் வருவாரு...

காமராஜ் said...

அண்ணா வணக்கம்.ஒரு பூஞ்சை உடம்பை இத விட
சுருக்குண்ணு கண்முண்னே காட்டமுடியாது.கூடவே ஒரு நக்கலும்.படிக்கும்போது கலுக்குனு சிரிக்கவைக்க அண்ணாவால்தான் முடியும்.ராஜன் முதலிலேயே முடிவைச் சொல்லிவிடுகிறார். எந்த பரோபகாரியும் நிம்மதியாய் வீடு ப்போனதில்லை.அரசு எந்திரம் தான்.

vasu balaji said...

@காமராஜ்
வணக்கம் காமராஜ்:)

பிரபாகர் said...

எப்பவும் முதலா பின்னூட்டும் நான், இன்று பத்தோடு பதினொன்றாய்... ஒழிக என் தூக்கம்...

பிரபாகர்...

பிரபாகர் said...

இவரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் அய்யா, படிக்கையில் இன்னும் பிரமிப்பு...

கேரக்டரைப் பற்றிய வர்ணனையில் சம்மந்தப்பட்டவரை மனதில் உட்காரவைத்து உங்கள் எழுத்தோடு பயணிக்கச்செய்து, உங்களின் எண்ணங்களை எங்களுக்குள் மாற்றம் செய்யும் அந்த வித்தையை இந்த சிஷ்யன் என்றுதான் கற்றுக்கொள்வானோ?

சூ...............ப்பர். நெகிழ்வாய் இருக்கிறது.

பிரபாகர்...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

இராமசாமி எழுதிய மாதிரி விரிவினில் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன். எழுத்துத் திறமை பளிச்சிடுகிறது. ராஜனை விவரிக்கும் விதம் அருமை. இடுகை விவரிக்கும் அத்தனையும் பாலாவின் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த சொற்கள் - வரிகள். நலல மனிதர் - வாழ்க்கை இனிக்க வில்லை . பாவமே ! இறுதியில் வெறுப்புடன் நம்க்கு விதிக்கலன்னு போனது மனதைப் பிசைகிறது பாலா.

a said...

நல்ல மனிதர்............

//
இதைப் போராடி வாங்கித்தான் என்ன பண்ணப் போறேன்? விடு, அதை விட அசிங்கம் ஒன்னுமில்லை’ என்று போனது இன்னும் கண்முன்னிருக்கிறது.
//
இந்த வார்த்தையில் எல்லாமே..........

sriram said...

பாலாண்ணா
ரொம்ப நல்ல மனுஷர்ணா இவர். இவருக்கு இப்படி ஒரு இழப்பா? வேறொன்னும் எழுத முடியலை, நாளை போன் பண்றேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

suneel krishnan said...

நேர்மையாளர்களின் தோல்வி மனுஷனுக்கு நேர்மையின் உள்ள நம்பிக்கையே கேள்வி குறி ஆக்கிடுது ,வர்ணனை நல்லா இருக்கு

settaikkaran said...

கேரக்டர் பற்றி எழுதுவதற்கு உங்களைப்போல்...................போங்க ஐயா, ஒருவாட்டியாவது கொஞ்சம் வித்தியாசமா பின்னூட்டம் எழுத விடாம, ஒவ்வொருவாட்டியும் அப்படியே கண்முன்னாலே கொண்டு வந்து நிறுத்திப்புடுறீங்க...!

Chitra said...

உழைப்பைத் தவிர ஒன்றறியாத இந்த உத்தமருக்கு என்றைக்கோ சரியாக செய்த சம்பள நிர்ணயத்தை தப்பாக மாற்றி வந்த ஒரு ஆணைக்கு எதிராக போராட ஒரு நரசிம்மன் இல்லை.


......இப்படி எத்தனை பேர், வேதனையுடன் போராடி கொண்டு இருக்கிறார்களோ? பாவம், சார்.

"உழவன்" "Uzhavan" said...

மனிதர்களைக் கவனிக்க முடியா வாழ்க்கையில், உங்களின் கேரக்டர் மூலம் விதவிதமான மனிதர்களைச் சந்திக்க முடிகிறது.

VELU.G said...

மனதில் நின்ற கேரக்டர்

ஈரோடு கதிர் said...

அந்த மனிதரை அப்படியே கண் முன் நிறுத்துகிறது எழுத்து!

ரிஷபன் said...

என்னமாய் ஒரு மனிதர்.. சாப்பாட்டை புறந்தள்ளி செக் போட்டவருக்கு காலம் புறந்தள்ளி வேடிக்கை பார்க்கிறது.. இதை அவர் பெரிதுபடுத்தாது விட்டதில் அதிசயமில்லை.. இம்மாதிரி நிகழ்வுகளை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டு எதுவும் செய்ய இயலாமல் இருப்பதுதான் விதியின் குரூரம். ‘கேரக்டர்’ எழுதுவதில் உங்களை விஞ்ச இனி ஆள் இல்லை.

Unknown said...

ஏன் சார்! பிரபாகர் இப்பிடி புலம்பறார். வேண்டாம் சார் எனக்கு இந்தப் பொல்லாப்பு.

முதல்ல வந்தா வடை.
கடைசியில வந்தா சுண்டலா. அதுக்கும் யாராவது போட்டிக்கு இருக்காங்களோ!

சேட்டையாரக் கூட அவர் ஸ்டைலில் பின்னூட்டம் விடாமப் பண்ணிட்டீங்க. வெற்றி மேல் வெற்றி தான் உங்களுக்கு.

சிவகுமாரன் said...

நிறையை கேரக்டர் இப்படி இருக்காங்க சார். நிறைய பேருக்கு உதவி செய்திட்டு, கடசியில அவருக்கு ஒண்ணுன்னா உதவ ஆளில்லாம .

ரோஸ்விக் said...

//அதிகாலையில் குளிர்ந்த நீர் ஆற்றில் இறங்கி நிற்கையில் அடி வயிற்றில் சூடாக நெஞ்சு வெடிக்கும் போல் கனமாக இருக்குமே அப்படி ஓர் உணர்வு. //

இதை நானும் ரசிச்சேன். அருமை பாலா அண்ணா.

க.பாலாசி said...

க்ரேட்...எத்தனையோ கேரக்டெர படிச்சாலும் மனசுல இந்த உருவம் பச்சின்னு பதிஞ்சிடுச்சு. கடைசிவரைக்கும் இந்த மனுஷனோட வாழ்க்கை மலர்ந்த முகத்தோடவே இருக்கக்கூடாதான்னு ஏங்க வைக்கும் மனிதன்.

ஸ்ரீராம். said...

மனிதர்களின் பாசிடிவ் பக்கத்தையே பார்த்து எழுதுகிறீர்கள். அருமை.

கலகலப்ரியா said...

படிச்சிட்டேன்... மடல் அனுப்பறேன்...

vasu balaji said...

@Sethu
நன்றி சேது.

vasu balaji said...

@T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி சார்.

vasu balaji said...

@@நன்றி பழமை
@@நன்றி காமராஜ். ஆமாம்.:(
@@நன்றி பிரபா
@@நன்றிங்க சீனா சார்
@@நன்றிங்க யோகேஷ்
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க டாக்டர்
@@நன்றி சேட்டை
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி உழவன்
@@நன்றிங்க வேலு
@@நன்றி கதிர்
@@நன்றி ரிஷபன்
@@நன்றி சிவகுமாரன்
@@நன்றி ரோஸ்விக்
@@நன்றி பாலாசி
@@நன்றி ஸ்ரீராம்

vasu balaji said...

@கலகலப்ரியா

நன்றிம்மா. சரி.