Wednesday, December 15, 2010

கேரக்டர் - ராஜன்...

உழைத்துக் கரம்பேறிய உலக்கைக் கைகளும், முரட்டு முகமும், சாராய வாடையுமாய் ஒருவன் அவரை நெருங்குகிறான். அவர், கிள்ளியெடுக்க சதையின்றி, கொஞ்சம் அதி வெளிச்சமான ஆர்க் லேம்ப் போட்டால் ஸ்கேனிங் இல்லாமலே உடலுறுப்புக்களைப் பார்க்கலாம் போன்ற செக்கச் சிவந்த ஒல்லியான தேகம். துறுத்தி நிற்கும் நெஞ்சுக்கூட்டில் ஒற்றை ருத்திராட்சம். தாடி என்றே குறிப்பிடும் அளவுக்கு அடையாளமான வெண் தாடி. தலைமுடியை இறுக்கி பின்னிழுத்துப் போட்ட ரப்பர் பேண்ட். ஆண்களில் அதிகம் காணமுடியாத செக்கச் சிவந்த உதடுகள். தீர்க்கமான நாசி. அதைவிட ஊடுருவித் துளைக்கும் பார்வை. நெற்றியில் காமாட்சி குங்குமம். பார்க்கும் யார்க்கும் கும்பிடத்தோன்றும் உருவம்.

‘சாமி! ஃபி எப் போட்டுக்குறேன் சாமி. ஐந்நூறு ரூபாய்தான். வந்துகினே கீது சாமி. கொய்ந்தைக்கி பீஸ் கட்டணும். ஆப் டே சி.எல். போட்டுக்கிறேன். மன்ஸு வை சாமி’ என்கிறான்.

நெற்றிக் குங்குமம் மாதிரியே சிவந்த முகத்துடன் “த்தா! ஏண்டா என் தாலியறுக்கறீங்க. மனுஷனா மாடா. வந்ததையெல்லாம் செக் போட்டு கொண்டு கொடுத்துட்டு இப்பதானே உக்கார்றேன். ஃபீஸ் கட்றானாம் குடிகார நாயி. ஒரு நிமிஷம் நின்னா பளார்னு அறைஞ்சிடுவேன்” என்ற பதிலுக்கு அந்தச் சண்டியனின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?

முகமெல்லாம் மலர, ‘டாய்ங்ஸ் சாமி! மச்சான் போலாம். வா! சாமி கெட்ட வார்த்தைல திட்டிடிச்சி. ஒரு டீ சாப்டு வந்தா துட்டு வாங்கிக்கலாம்’ என்று போவான். தலை எழுத்துடா என்று குழந்தை மாதிரி சிரித்தபடி மதிய உணவைப் புறம் தள்ளித் தேடிப்போவார். ‘ஒரு செகண்ட்ல திட்டிட்டேன். பாவம். நம்பிண்டு போறான். போட்டுக் கொடு’ என்று கேட்டு வாங்கி, செக் எழுதி, கேஷியரிடம் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்து சாப்பிடுவார். அவர்தான் ராஜன்.

நாலு முழக் கதர்வேட்டி, அண்ணன் மகன்கள் போதவில்லை என்று கொடுத்த சட்டை, தடியான இங்க் பேனா, பாக்கட் கொள்ளாக் காகிதங்கள், செக் எழுது்ம் நேரம் தவிர ஓய்வின்றி நடையும் உழைப்பும். செங்கல்பட்டில் வீடு. காலை முதல் பேசஞ்சரில் வந்துவிடுவார். இரவு  பாண்டியனில் திரும்பினால்  சீக்கிரம். அப்போதும் பை நிறைய பில்லும், செக்கும், ஸ்டேட்மெண்டுமாய் வேலை பார்த்தபடி போவார். ராஜனிடம் பில் போனால் செக் நிற்காது என்று நம்பிப் போவார்கள்.

இரவு ஏழரை மணிக்குக் கிளம்புவார். டேபிள் அடிகளில் ஏதாவது செக் தாள் பறந்திருக்கிறதா என்று பார்த்து, காந்தி படத்தின் முன் கை கூப்பி வணங்கி ‘ராமச்சந்திர மூர்த்தி! கிளம்பலாம்’ என்று கிளம்பி பறக்க பறக்க வண்டி பிடிக்க ஓடுவார். ராஜன் திட்டினார் என்று ஒரு முகம் சுணங்கியதில்லை. சாரி சொல்லிவிட்டுப் போவார்கள். சம்பளப் பட்டுவாடாவுக்கு  விரட்டி விரட்டி பில்லை பாஸ் செய்ய வைத்து இரண்டு நாள் முன்பாகவே செக்கை அனுப்பிவிட்டு, மலர்ந்த முகத்துடன் எல்லா செக்கும் அனுப்பியாச்சுப்பா. நம்பிண்டு போய் சம்பளம் வரலைன்னா கஷ்டம் என்று போவார்.

சில நேரங்களில் கடவுளையே நீ இருக்கிறாயா என்று கேட்கத் தோன்றும் தருணங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்க்கும். இவர் விஷயத்தில் ரொம்பவே அப்படியான தருணங்கள் அமைந்தது. வாய் ஓயாமல் ஸ்லோகம் சொல்லிக் கொண்டு, கீர்த்தனங்கள் பாடிக் கொண்டு, செய்யும் தொழிலில் நேர்மை, அன்பு, இடையறா உழைப்பு என்று இருக்கும் ஒருவனை விட வேறே மனிதனை எங்கே தேட? லக்ஷ்மணனைப் போல அண்ணன் மீது அவ்வளவு மரியாதை. பாசம். அவரின் குழந்தைகளைத் தன் பிள்ளைகளாக வளர்த்தார் என்றோ அவருக்கு பிள்ளை இல்லாமல் போகும்?

மனைவிக்கு மன நலம் அவ்வளவு சரியில்லை. சுயமாக ஒன்றும் செய்யத் தெரியாது. பயந்த நாட்களில் அறையை விட்டு வெளியே கூட வரமாட்டார். காலையில் எழுந்து, பூஜை புனஸ்காரங்களோடு சமையலும் செய்து, மனைவிக்குச் சாப்பிடக் கொடுத்து, மதியத்துக்கும் எடுத்து வைத்து, அக்கம் பக்கம் பார்த்துக் கொள்ளச் சொல்லி முதல் காஞ்சிவரம் பாஸஞ்சர் பிடித்து ஒன்பதரைக்கு ஆஃபீஸில் இருக்க முடியுமா? ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல 35 வருடம் இந்த நெறியில்தான் வாழ்க்கை என்றால் மனிதனுக்கு சலிப்பு தட்டாதா?


ரிடயராகி பத்து வருடமிருக்கும். இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்தேன். வெளியுருவில் சற்றும் மாற்றமில்லை. முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். கையைப் பிடித்துக் கொண்டு ‘எப்படி இருக்க பாலு’ என்ற நொடியில், ஒரு நல்ல சங்கீதத்தில், கோவில் ஹாரத்தியின் போது, அமைதியான ஒரு நொடியில் அலை அலையாய் உடலில் ஒரு சிலிர்ப்பு பரவுமே! உடலின்றி கனமின்றி பரப்பது போல், கனவா நனவா என்று ஒரு உணர்வு வருமே, அப்படி வந்தது. மனமெல்லாம் துடைத்துவிட்டது போல் இருந்தது. அதிகாலையில் குளிர்ந்த நீர் ஆற்றில் இறங்கி நிற்கையில் அடி வயிற்றில் சூடாக நெஞ்சு வெடிக்கும் போல் கனமாக இருக்குமே அப்படி ஓர் உணர்வு.

நீங்க எப்படி இருக்கீங்க சார் என்று கேட்கவே தொண்டையடைத்தது.  ‘ஆண்டவன் புண்ணியத்தில் நல்லாயிருக்கேண்டா. பூஜை கோயில்னு போயிடுறது பொழுது. இனி என்ன தேவையிருக்கப் போறது சொல்லு’ என்று ஆசி கூறிப் பிரிந்தார்.
 

எத்தனையோ உருப்படாத கேஸ்களுக்கு சற்றும் தகுதியில்லாவிடினும் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து உதவ முடிந்திருக்கிறது. உழைப்பைத் தவிர ஒன்றறியாத இந்த உத்தமருக்கு என்றைக்கோ சரியாக செய்த சம்பள நிர்ணயத்தை தப்பாக மாற்றி வந்த ஒரு ஆணைக்கு எதிராக போராட ஒரு நரசிம்மன் இல்லை.

செய்யக் கூடியவர்கள் ‘ப்ச்! ரூஊஊஊல் அப்படி இருக்கிறது என்பதற்கு மேல் செய்யத் தயாரில்லை. தீர்வாணையத்தில் ஒரே ஹியரிங்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு பெறக்கூடிய எளிய கேஸ். இத்தனைக்கு அவரின் உறவினர் அங்கே குமாஸ்தா. பல தேர்ந்த வழக்கறிஞர்களும் அனுமதி கட்டத்திலேயே தீர்ப்பாகிவிடும் என்று சொன்ன வழக்கு. ஒரு பகல் போதில் அரசு ஆணை! விசாரணைக்குத் தகுதியற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்ட போது அதிர்ந்து போனேன். உயர் நீதி மன்றத்துக்குப் போகலாம் சார் என்று எவ்வளவோ சொன்னேன்.
என் பெரிய தோல்வி இதிலிருக்கிறது.

தளர்ந்த மனதுடன்,  ‘இது எனக்கு இல்லை பாலு. நீ சொன்னாய். அத்தனை வக்கீல்மாரும் சொன்னார்கள். அப்படியும் இப்படி ஆகிறதென்றால் எனக்கு இது விதிக்கலைடா. எனக்குப் போராட தெம்பில்லைடா. என்ன ஒரு அம்பது ரூபா பென்ஷன்ல வருமா? உழைச்ச உழைப்பை இல்லைடான்னு பதினஞ்சாயிரம் என் வயித்தில அடிச்சானா? இதைப் போராடி வாங்கித்தான் என்ன பண்ணப் போறேன்? விடு, அதை விட அசிங்கம் ஒன்னுமில்லை’ என்று போனது இன்னும் கண்முன்னிருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Post a Comment