Sunday, October 17, 2010

ராஜி-2


பூக்களைச் சீராகக் கட்டிமுடித்த ராஜி, கோமதியை அழைத்தாள்.

‘மச மசன்னு நிக்காம எல்லாரையும் கிளம்பச் சொல்லுடி. வண்டி சொல்லியிருந்ததெல்லாம் வந்தாச்சோ? முருகன கூப்புடு. சாமானெல்லாம் ஏத்தி வைக்கச் சொல்லு. அசமஞ்சமாட்டம் அவன் பண்ணுவான்னு இருக்காம, ஒருத்தர் லிஸ்ட் எழுதுங்கோ’

உத்தரவுகள் உட்கார்ந்த இடத்திலிருந்து பறந்தன. பல முறை பார்த்ததுதான். ஆனாலும் விசுவுக்கு பிரமிப்பாகவும், புதுமையாகவும் இருந்தது. பண்டிகையோ, சாதாரண விருந்தாளியோ, கல்யாணமோ யாருக்கும் கவலையில்லை. ராஜி சொல்வதைச் செய்தால் போதும். கனகச்சிதமாக குறைவின்றி நிறைவேறும்.

ஒரு வழியாக அனைவரையும் அனுப்பிவிட்டு கிளம்பினார்கள். மண்டபத்துக்கு வந்து சேர்ந்ததும் சிரித்த முகத்துடன் சூழ்ந்து கொண்டனர் பெண்வீட்டார். பார்த்து இறங்குங்கோ பாட்டி என்று கார் கதவைத் திறக்க வந்தார் பெண்ணின் தாயார்.

‘ஏண்டிம்மா! கோலத்துக்கு செம்மண் பூச வேண்டாமோ? காண்ட்ராக்டுக்கு குடுத்தேளா?’ என்றாள் ராஜி.

‘மன்னிச்சிக்கோங்கோ பாட்டி. இதோ!’ என்று அடுத்த சில நொடிகளில் செம்மண் பூசியான பிறகு, ‘ஹாரத்தி எடுத்து அவாளையெல்லாம் அழைச்சிண்டு போடிம்மா!’ என்றாள் ராஜி.

கடைசியாக இறங்கி மண்டபத்தைச் சுற்றிவந்தாள். மேடையில் கோலம் சின்னது, அது இதுவென சிறு சிறு குறைகளைச் சுட்டியபடி சுற்றிவந்தாள். ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த விசுவுக்கு புதிதாய் இருந்தது. ஒரு ரவுண்டு அடித்து முடித்து

‘என்னடா பார்க்கிறாய்!’ என்றபடி அருகில் இருந்த நாற்காலியில் கூனோடு அமர்ந்தாள் ராஜி.

‘இல்லை ராஜி! சம்பந்தி ஜம்பம் பிரமாதமா பண்றியே! இதெல்லாம் நோக்கு எப்படி முடியறதுன்னு பார்க்கிறேன்’ என்றார் விசு.

‘பாட்டி! நானே காஃபி போட்டு கொண்டு வந்திருக்கேன் தனியா உங்களுக்காக. எடுத்துக்கணும்’ என்று பவ்யமாய் வந்து நின்ற பெண்ணின் தாயாரிடம் ஒன்றும் பேசாமல் காஃபியை வாங்கிக் குடித்தாள். என்ன வருமோ என்ற கலவரம் முகத்தில் தெரிந்தது பெண்ணின் அம்மாவுக்கு. ஒன்றும் சொல்லாமல் காஃபியைக் குடித்தபிறகு டம்ப்ளரைக் கொடுத்தவளிடம்

‘பாட்டி! ராத்திரிக்கு பலகாரமா? என்ன வேணும் சொல்லுங்கோ. ஆத்தில பண்ணி கொண்டு வந்துடறேன்’ என்றாள்.

‘ரண்டு வாழைப்பழம் போறும். நோக்கு தலைக்கு மேல வேலையிருக்கும். அவசரம், மறந்துபோச்சின்னு சொல்லாம குறையில்லாம பண்ணும்மா. போ!, என்றாள் ராஜி.

தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூமுக்குப் போய் ஒவ்வொன்றாய்ச் சரிபார்த்து, மெதுவாய் சமையற்கட்டுக்குப் போனாள். ராஜியைப் பார்த்ததும் ஓடிவந்தார் சமையல்காரர்.

‘பாட்டிக்கு ராத்திரிக்கு என்ன வேணும். பூவாட்டம் இட்லி, உப்புமா, கேசரி என்ன வேணுமோ சொல்லுங்கோ’ என்றார்.

‘ஒன்னும் வேணாண்டாப்பா. அது ஆச்சு கொள்ளைகாலம். ராத்திரி ரண்டு வாழைப்பழம்தான். சும்மா பார்க்கவந்தேன். சமையல் அருமையா இருக்கணும். பார்த்துக்கோ. மனசு வச்சி பண்ணா நன்னா வரும்’ என்று நகர்ந்தாள்.

‘நீங்கதான் மாப்பிள்ளையோட பாட்டியா?’ என்று கேட்டபடி வந்தாள் ஒரு பெண்மணி.

‘கொள்ளுப்பாட்டி. நீ யாரும்மா?’ என்றாள் ராஜி.

‘கல்யாண பொண்ணோட ஒன்னுவிட்ட அத்தை முறை மாமி! எங்கண்ணா கெட்டிக்காரன். நல்ல இடமாத்தான் பார்த்திருக்கான் பொண்ணுக்கு. அவனுக்கு ஒரு தங்கையிருக்கா. அவளுக்கு காயத்ரியை அவ பிள்ளைக்கு பண்ணிக்கணும்னு ஆசை.  என்னதான் தங்கைன்னாலும், முறைப்பையன்னு பொண்ணைத் தள்ளி விடமுடியாயிதில்லையா. சின்ன வயசுல இருந்தே அவனுக்குதான் அவள்னு பேசிண்டத வச்சிண்டு தன் பிள்ளைக்குத்தான் குடுக்கணும்னு சண்டையெல்லாம் போட்டா முடியுமா? அந்தப் பையனும் காயு காயுன்னு காயத்ரி மேல அன்பா இருப்பான். எங்க போனாலும் ஒன்னாத்தான் போயிண்டு வருவா. பசங்க ஆசைப்படறதுன்னு பண்ணிட முடியுமோ. பொண்ணைப் பெத்தவன்னு கடமையிருக்காயில்லையா. அவள் சண்டை போட்டுண்டு போய்ட்டா. கலியாணத்துக்கு கூட வரலை. ரெண்டு மூணு வரன் பார்த்து அப்புறம் அவாளுக்கு விஷயம் தெரிஞ்சி வேணாம்னுட்டா.’

‘என் பிள்ளை பேங்க்ல ஆஃபிசராயிருக்கான். கை நிறைய சம்பளம். ஜாதகம் நன்னா பொருந்தியிருந்தது. ஒறவுல வேணாங்கான்னு சொன்னா புரிஞ்சிக்கணுமா இல்லையா. பைத்தியம் மாதிரி ஒறவே வேண்டாம்னு போயும், அவளாலதான் கல்யாணம் தடையாறதுன்னு அண்ணாக்கு கோவம். என்னமோ, நீங்க நல்ல மனுஷாளா இருக்கக் கொண்டு கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கறது. காயு ரொம்ப அதிர்ஷ்டசாலி. அப்புறம் வந்து...வந்து..ஒங்களுக்கே தெரிஞ்சிருக்கும்னு சொல்லிட்டேன். யாருக்கும் இதெல்லாம் நான் சொன்னேன்னு தெரிய வேண்டாம். நான் வரேன் பாட்டி’ என்று போனாள்.

மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பிக்க சுரத்தில்லாமல் அமர்ந்திருந்த ராஜியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் விசு.

‘என்னக்கா? டல்லாருக்க. உடம்பு முடியலையா. ராத்திரி ஆத்துக்கு போய்க்கலாமா. கார்த்தால கிளம்பி வந்தாப் போச்சு’ என்றார்.

‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். கொஞ்சம் அசதி. அவ்வளவுதான். நீங்கள்ளாம் சாப்பிடப் போங்கோ. நான் ரூம்ல போய் கொஞ்சம் கட்டையைச் சாய்க்கிறேன்’ என்று போனாள்.

சாப்பாட்டுக் களேபரமெல்லாம் முடிந்து, அறையிலும் ஹாலிலுமாய் கிடைத்த இடத்தில் அவரவர் படுத்திருந்தனர். அரவமடங்கி மெதுவாக பெண்ணின் பெற்றோர் வந்தார்கள். புரண்டு புரண்டு படுத்தபடியிருந்த ராஜியிடம் மெதுவாக வந்து அமர்ந்தாள் பெண்ணின் தாயார்.

‘தூங்கலையா பாட்டி?’ என்றாள்

‘ம்ம்! புது இடம்னா தூக்கம் பிடிக்காதுடியம்மா. நீ தூங்கு போ’ என்றவளிடம் தயங்கித் தயங்கி ‘பாட்டி, ஒரு நிமிஷம் தனியா வரேளா. அவர் ஏதோ பேசணுமாம்’ என்றாள்.

சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் ராஜி.

‘வரச்சொல்லும்மா. தனியா என்ன? எதுவானாலும் தெளிவா பேசிட்டா கஷ்டமில்லை. விசு! க்ருஷ்ணாவை கூட்டிண்டு வா’ என்று கணீரென்று வந்த குரலுக்கு படுத்திருந்தவர்கள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தனர்.

பதறியபடி வந்த பெண்ணின் தந்தையிடம், காயத்ரியையும் கூப்பிடுங்கோ என்றாள் ராஜி.

காய்த்ரியும், க்ருஷ்ணாவும் வந்து சேர ‘ம். இப்போ சொல்லுங்கோ. என்ன சொல்லணும்?’ என்றாள்

பாவமாக தொண்டையடைக்க ‘மாமி. மறைக்கணும்னு இல்லை. என் தங்கைக்கு தன் பிள்ளைக்கு காயத்ரியைப் பண்ணிக்கணும்னு ஆசை. நான் வெளி சம்பந்தம் பார்க்கறது அவளுக்கு பிடிக்கலை. ரெண்டு மூணு இடம் பெண்ணைப் பார்த்துட்டு போய் என்னாச்சோ பதிலே சொல்லலை. எப்படியோ என் தங்கைதான் காரணம்னு தெரியவந்தது. தெய்வாதீனமா, இந்தச் சம்பந்தம் தடையில்லாம நடந்தது. அவளுக்குச் சொல்லலை. நான் முன்னாடியே உங்களுக்கும் சொல்லியிருக்கணும். தயவுபண்ணி, மாப்பிள்ளை அழைப்பெல்லாம் ஆற வரைக்கும் காத்துண்டிருந்து சொல்றான்னு நினைக்க வேண்டாம்....’

பேசவிடாமல் கை உயர்த்தி நிறுத்தினாள் ராஜி. ’

‘இதெல்லாம் சொல்ல வேண்டாம். வாழப்போறவள் அவள். அவள் விருப்பத்துக்கு மாறா உங்க அந்தஸ்து, இதர லௌகீகம்னு வேற மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணேளா? என்றாள்.

‘அவளுக்கே அதில் விருப்பமில்லை பாட்டி. நீங்களே அவளைக் கேட்டுக்கலாம்’ என்று சொல்வதற்குள் பொங்கிவந்தது அழுகை.

ராஜி, க்ருஷ்ணாவைப் பார்த்தாள்.

க்ருஷ்ணா ‘ராஜி! கார்த்தால ஆறுக்கு முகூர்த்தம். அந்தப் புகைல சும்மாவே கண்ணுல தண்ணியா கொட்டும். தூங்கலைன்னா இன்னும் கஷ்டம். நான் தூங்கப் போகட்டுமா?’ என்றான்.

ராஜி, காயத்ரியைப் பார்த்தாள். கடுகடுவென்று நின்றுக் கொண்டிருந்தவள் ‘இப்ப என்ன பாட்டி? எனக்கு உங்க பேரனைத்தான் பிடிச்சிருக்கு. எனக்கு வாழ்க்கை குடுங்கோன்னு நாங்கள்ளாம் உங்க கால்ல விழணுமா? அப்படி எதிர்பார்த்தா சாரி! எனக்கு அப்படி ஒரு கலியாணம் அவசியமில்லை..’

படபடவென பொறிந்து தள்ளியவளை ’காயத்ரி! என்னம்மா இது’ என்று பதறியபடி தடுக்கப் பாய்ந்தார் பெண்ணின் அப்பா.

ராஜி ‘நீ சும்மா இருப்பா. நான் பேசிக்கறேன் அவள் கிட்டே. இங்க பாரு காயத்ரி. ஒரு வேளை அப்படி கண்ணைக் கசக்கிண்டு அழுதிருந்தா என்ன ஆயிருக்குமோ தெரியாது. இப்போ நீ பேசின பாரு, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நான் எங்கப்பாட்ட பேசின மாதிரி இருக்கு. ப்ச்! என்ன! கொஞ்சம் அனாவசியமா வார்த்தையைக் கொட்டுற. என் பேரனைப் பார்த்தியோ! கார்த்தால ஆறு மணிக்கு முகூர்த்தம்னு எவ்ளோ தீர்மானமா சொன்னான். அவன் என் பேரன்!’ என்று சிரித்தாள்.

‘அப்போ நான் மட்டும் யாராம்?’ என்றாள் காயத்ரி

‘இப்படி பேசறவ எதுக்கு ஊரைக் கூட்டணும்னு அதுக்கும் கத்தாதே. இதை மறைச்சு வச்சு என்னாகப் போறது. சில நல்ல ஜென்மங்கள் இதை புரளி கிளப்பிண்டு, வந்திருக்கறவா வாய்க்கு அவல் கொடுத்துண்டிருக்கும் மெல்ல. இப்போ அதுக்கு வேலையில்லை பாரு. சம்மந்தி! சும்மா பொம்மனாட்டியாட்டம் அழாம போய் தூங்கும். கார்த்தால வேணப்பட்ட வேலையிருக்கு’ என்றாள் ராஜி.

‘ராஜி! நீ மடின்னு யாரையும் தொடவிடமாட்டியா? எனக்கு இப்போ உன்னை இறுக்கிக் கட்டிக்கணும்னு இருக்கே. சாரி! கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும். அப்புறம் நீ குளிச்சி திரும்ப மடியாகிப்பியாம் என்ன?’ என்று இறுகக் கட்டிக் கொண்டாள் காயத்ரி.

‘மட்டு மரியாதையில்லாத கழுதை. சொல்லச் சொல்லக் கட்டினுடுத்து. ஆத்துக்கு வாடி! அந்தக் கையை முறிக்கிறேன்’ என்று பதிலுக்கு இறுகக் கட்டிக் கொண்டு சிரித்த ராஜியில், பல வருஷங்களுக்கு முன் சிரிப்பும் துள்ளலுமாய் பாண்டியாடிய ராஜி தெரிந்தாள் விசுவுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

49 comments:

Chitra said...

‘மட்டு மரியாதையில்லாத கழுதை. சொல்லச் சொல்லக் கட்டினுடுத்து. ஆத்துக்கு வாடி! அந்தக் கையை முறிக்கிறேன்’ என்று பதிலுக்கு இறுகக் கட்டிக் கொண்டு சிரித்த ராஜியில், பல வருஷங்களுக்கு முன் சிரிப்பும் துள்ளலுமாய் பாண்டியாடிய ராஜி தெரிந்தாள் விசுவுக்கு.


......அழகு..... வாசிக்கும் போதே, முகத்திலும் மனதிலும் புன்னகை வருதே....

தெய்வசுகந்தி said...

அருமை!!!

Unknown said...

Nice. Where is Pazhama Sir?

vasu balaji said...

@Sethu
வீக் எண்ட்ல பதிவர் சந்திப்புன்னு இடுகையில சொன்ன கவனம்:)

அக் 15-17: மூத்த பிரபலம் சீமாச்சு தலைமையில அட்லாண்டா, stone mountain parkல கூட்டம்

Unknown said...

ஆமா சார். சொன்னார். தாங்க்ஸ்.

Unknown said...

நல்லா இருக்கு சார். சில சமயம் கல்யாணத்தில மட்டும் சில பெருசுங்க பண்ற அட்டகாசம் தாங்காது. எதுக்குத் தான் இப்பிடி பண்றாங்கன்னு புரியாது. நல்ல வேளை. நீங்க நல்லபடியா கொண்டு போயிருக்கீங்க. நல்லா இருக்கு சார்.

Unknown said...

இது கூட கேரக்டர் ராஜி-னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன். பின்னாடி எல்லாம் சேர்த்து ஒரு சிறுகதை தொகுப்பு புக் போடலாம் சார்.

vasu balaji said...

:) நன்றி.

sriram said...

பாலாண்ணா..
எழுத்துப் பிரவாகம் அபாரம்..

முதல் பாகம் ருசித்த அளவு ரெண்டாம் பாகம் ருசிக்கவில்லை (எனக்கு), இது மாதிரி நெறய் எழுதுங்க பாலாண்ணா

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

க ரா said...

வழக்கம் போல அருமையா போகுது சார் :)

கலகலப்ரியா said...

இன்னொரு வாட்டி படிச்சிட்டு சொல்றேன்...

பெசொவி said...

Super!

ஆனா, வரப்போற மாட்டுப் பொண்ணு மாமியார் பாட்டியை திடீர்னு நீ, வா, போன்னு பேசறது கொஞ்சம் இடிக்குது (எனக்கு!)

பவள சங்கரி said...

நல்லாயிருக்கு சார். சிறுகதை போல இருக்கிறது. நன்றி.

Unknown said...

சார் இந்த கதையிலே 2 விஷயம் கொஞ்சம் வித்தியாசமா வெளியிட்டு இருக்கிறது பிடிச்சிருக்கு.
1. கல்யாணம் ஆகிற பொண்ணு அத்தைப் பாட்டி முறையை, உடனேயே ஒருமையில் பேசுவது.
2. கல்யாணத்தில் விதவையா இருக்கிறவங்க ஒதுங்கி இருப்பாங்க, சிலர் வராமலும் இருப்பாங்க.
இதில் நல்லா மாறுபட்டு வந்திருக்கு. விதவை என்கிற வார்த்தையே மறைந்து போனா நல்லா இருக்கும்.

ஆரூரன் விசுவநாதன் said...

பெருங்கதையாக எதிர்பார்த்தேன். சீக்கிரம் முடிச்சிட்டீங்க போல....

ரொம்ப நல்ல இருக்குதுங்ணா

Unknown said...

நல்லாருந்தது சார். ரெண்டு பாகத்தையும் சேத்து வழக்கமா ஒரு கூகுள் டாக்ஸ் அனுப்புங்களேன்.. :))

Paleo God said...

கேரக்டர்னே போட்டிருந்தாலும் கச்சிதமாகவே இருந்திருக்கும் சார்.

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

பிரபாகர் said...

அய்யாவின் வழியாய் வெளிப்பட்ட ராஜியின் கேரக்டர் அருமை...

பிரபாகர்...

தாராபுரத்தான் said...

வாசிச்சு வாயே வலிக்குதுங்க..

மாதேவி said...

நன்றாக இருந்தது.

vinthaimanithan said...

காயத்ரிகளுக்காக ஏங்க வைக்கின்றீர்கள்!

Ahamed irshad said...

ந‌ல்லாயிருக்குங்க‌ பாலாண்ணே..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ராஜி பாட்டியின் கேரக்டர் அழகு.. நேரில் பார்த்தது போன்ற உணர்வை அளித்துள்ளீர்கள்.. கலக்கல்.

R. Jagannathan said...

முதல் கம்மென்ட் போட்ட ‘சித்ரா’ அவர்களின் எண்ணமே என்னுடையதும். இந்தமாதிரி மாட்டுப்பெண்ணும் புக்காத்துப் பாட்டியும் அமையக் கொடுத்து வைத்திருக்கணும்! தம்பதிகள் அன்யோன்யமாக வாழ வாழ்த்துக்கள். - ஜெ.

Unknown said...

கதையாடல் நிஜம்போல் இருக்கிறது .. நிஜமாகவும் இருக்கலாம் ...

Unknown said...

அருமையான கதையாடல்.

வல்லிசிம்ஹன் said...

மட்டு மரியாதை இல்லாத கழுதையும் அதை ஏத்த்துக்கற பாட்டிகளும் அபூர்வம்:)
ஆனாலும் ருசித்தது. நன்றி
பாலா சார்.

a said...

நல்லாயிருக்கு சார். நன்றி!!!!!!!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை..அருமையிலும் அருமை!!

Mahi_Granny said...

வாசித்து முடிக்கும் போது ஏதோ செய்கிறது. திருப்தியா சந்தோசமா தெரியவில்லை. பிறத்தியார் சந்தோசத்தை மட்டுமே பார்க்கும் ராஜி வித்தியாசமானவள் தான் . தொடருங்க

ஈரோடு கதிர் said...

ரொம்ப அருமை

இனிமே தொடரும் போடாம ஒன்னாவே எழுதுங்கண்ணே!

அப்புறம் கதை எழுதும் போது கேரக்டர் இல்லைன்னும் கூட வகை-ல போட்டுங்க

வை.கோபாலகிருஷ்ணன் said...

அத்தைப்பாட்டி [ராஜி] கறார் பேர்வழியாகத் தெரிந்தாலும் அன்பானவளாக, நாலும் தெரிந்தவளாக, காலத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்பவளுமான ஒரு சிறந்த கதாபாத்திரம்.

மறுநாள் விடிந்தால் கிருஷ்ணாவுக்கு மனைவியாக இருக்கும் புது மருமகள் காயத்ரிக்கு வாய்த் துடுக்கு ஜாஸ்தியாக உள்ளது.

// ப்ச்! என்ன! கொஞ்சம் அனாவசியமா வார்த்தையைக் கொட்டுற. //

என்று அந்த வயதானவளே சொல்லும்படியாக நடந்து கொண்டது, அதிகம்.

பெண்கள் தைர்யமாக தன்னம்பிக்கையுடன் சுயமாக முடிவெடுப்பது என்பது பாராட்டப்பட வெண்டியது தான்.

இருப்பினும் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து விடிந்ததும் கல்யாணம் என்ற சூழ்நிலையில், மாப்பிள்ளை வீட்டு முக்கிய நபரும், வயதானவளுமான அந்த அத்தைப்பாட்டி அவர்களிடம் இதுபோல பேசுவது அவ்வளவு சிறப்பானதாகத் தோன்றவில்லை.

இருப்பினும் மிகவும் Social type ஆக ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்வது, [கட்டிப்பிடி வைத்தியம் போல] சிறப்பான முடிவாக உள்ளது.

ஸ்ரீராம். said...

சார்...இன்னும் தொடராதா என்று (அப்படித்தான் நினைத்தேன்) நினைக்க வைத்தது. கல்யாண மண்டபத்தைச் சுற்றிப் பார்த்து டைரக்ஷன் சொன்னா பாட்டியின் பாங்கு கடைசியில் கண் கலங்க வைத்து விட்ட பாட்டியின் பெரிய மனமும் காயத்த்ரியின் துடுக்கான அன்பும்...அடடா...அழகு. சேமிப்பில்; வைத்துக் கொள்ளத் தூண்டிய கதை...அழகிய நடை. பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

காயத்ரி அந்தப் பையனை விரும்புவதாகச் சொல்லிருந்தால் பாட்டியின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன் .....

க.பாலாசி said...

ரொம்ப பிரமாதபடுத்தி எழுதியிருக்கீங்க சார்.. ரெண்டையும் ஒரே தரத்தியா படிச்சிட்டேன்.. முதல் பாகத்துலு ராஜீ அப்பாகிட்ட ‘எனக்கு யாரு கொல்லி வைப்பா’ன்னு கேட்கிற இடம் கலங்க வச்சது. இவ்வளவு சட்டுன்னு முடிச்சிருக்கவேண்டாம்னு தோணுது... இன்னும் ஒரு பாகம்கூட எழுதியிருக்கலாம்... குறிப்பா அந்த மணப்பெண் பற்றின கதையை... சரி ரைட்டு...

பழமைபேசி said...

அண்ணா,

வணக்கம்; மூன்று நாள் வலைவிரதத்துக்கு அப்புறம் உங்க இடுகைதான் முதல்!!

வரிசைப்படுத்தி, கதை வடிவத்துக்கு கொண்டு வரச் செய்துட்டிங்க... நன்றி!!

கதையப் பத்திதான் மத்தவங்க சொல்லிட்டாய்ங்களே....

ஓரிழையாவே போகுது.... sequential about Raji....தொடர்ல... அங்கங்க அங்கங்க வெளில போய்ட்டு வரணும்...

அதாவது, நெடுஞ்சாலையில போற GreyGound அப்பப்ப உள்ளுக்கு ஊருக்குள்ள போய் வர்ற மாதர....

GreyHound பத்தி அண்ணன் சேது அவர்கள் உரையாற்றுவார்... இஃகிஃகி!!

Radhakrishnan said...

மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா.

Unknown said...

"GreyHound பத்தி அண்ணன் சேது அவர்கள் உரையாற்றுவார்... இஃகிஃகி!!"

பாத்தீங்களா! பாத்தீங்களா!
எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியில் மாட்டிவுடப் பார்கிறார்.

Unknown said...

GreyHound is a single largest privately owned bus services in USA.

For rest of the world, its a breed of dog, a racer.

FYI.

vasu balaji said...

அவர் உரைன்னா இது துணுக்காவுல்ல இருக்கு:))

Unknown said...

இது போதும் சார்.
பாக்கி எல்லாம் பழமை சார் கவனிச்சிப்பார். தனி பதிவே போடுவார்.

கலகலப்ரியா said...

படிச்சேன் சார்... எழுத்து லாவகமா வருது சார் உங்களுக்கு...

ரொம்ப நல்லாருக்கு..

vasu balaji said...

@Chitra

நன்றிங்க சித்ரா

vasu balaji said...

@தெய்வசுகந்தி

நன்றிங்க

vasu balaji said...

@@நன்றி சேது
@@நன்றி ஸ்ரீராம்.
@@நன்றி இராமசாமி கண்ணன்
@@நன்றி பெ.சொ.வி. அப்ப இந்தகாலத்துப் பசங்களைத் தெரியல.
@@நன்றிங்க நித்திலம்.

vasu balaji said...

@@நன்றிங்க ஆரூரன்
@@நன்றி முகிலன்
@@நன்றி ஷங்கர்
@@நன்றிங்க டி.வி.ஆர்
@@நன்றி பிரபாகர்
@@நன்றி அண்ணா. சத்தம் போட்டு படிச்சீங்களா
@@நன்றிங்க மாதேவி
@@நன்றி ராஜாராமன்
@@நன்றி இர்ஷாத்
@@நன்றி செந்தில்
@@நன்றிங்க கேபிஜே:)
@@நன்றிங்க செந்தில்
@@நன்றிங்க நந்தா.
@@நன்றிங்க வல்லிசிம்ஹன்

vasu balaji said...

@@நன்றி யோகேஷ்
@@நன்றிங்க ஆர்.ஆர்.ஆர்.
@@நன்றிங்க மஹி_க்ரான்னி
@@நன்றிங்க கதிர்
@@நன்றி கோபாலகிருஷ்ணன் சார்.
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க பழமை. ஆலோசனைக்கு நன்றி.
@@நன்றிங்க ராதாகிருஷ்ணன்

vasu balaji said...

@கலகலப்ரியா

ஆஹா!ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. உன்னைப் பார்த்துக் கத்துக்கறேன்ல.அந்த மாதிரி பவர்ஃபுல்லா எழுதணும் ஒன்னாவது.