Tuesday, September 28, 2010

கால விழுதுகள்...

புதிதாய் விரிந்தப் புறநகர்ப் பகுதியில் விஸ்தாரமான கோவில் அது. நகரின் ஆரவாரங்களிலிருந்து ஒதுங்கி, இன்னும் அதிகம் தாக்குதலுக்குள்ளாகாத வெளியிடம். மாலைப் பூஜை முடிந்து இருள் கவியத் தொடங்கி, இதமான காற்றுடன் பிரகாரம் நிறைந்திருக்கிறது. மேற்கு ஓரமிருந்த மேடையின் முன்பு குவிந்திருக்கிறது கூட்டம். ராமகிருஷ்ணபாகவதர் இன்றைக்கு என்ன கதை சொல்லப் போகிறார் என்பதிலிருந்து, சீரியல் வரை எல்லா விஷயமும் சளசளவென்று கோவிலின் அமைதியைக் கெடுத்த படி பரவிக் கொண்டிருக்கிறது. ‘வந்தாச்சு’ என்ற ஒற்றை அறிவிப்பில் சட்டென நிலவிய அமைதியும், கதை கேட்க ஆவலாய் சரியாய் உட்காரும் சலனங்களும் உணர்ந்தபடியே புன்சிரிப்புடன் கடந்து சென்று மேடையில் அமர்ந்தார் பாகவதர்.

சம்மணமிட்டு அமர்ந்திருந்தவர், இரண்டு கையும் முட்டிக்கு மேல் நீட்டி, ஆஜானுபாகுவாய் நிமிர்ந்தமர்ந்து, கண்மூடி கணீர் என்ற குரலில் தியானஸ்லோகம் சொல்லச் சொல்ல, அலை அலையாய் எழுந்த ஒலி நாதத்தில் ஓர் அமைதி குடி கொண்டது. கண் திறந்து ஒரு முறை எல்லாரையும் பார்த்தார். இந்தக் கோவில்ல அம்பாளோட நாமம் பார்வதி. உமான்னு அவளுக்கு ஒரு பேர் உண்டு. லோக மாதா அவள். நாமல்லாம் அம்மா அம்மான்னு சொல்ற போதெல்லாம் உமாவான அவளுக்குத்தான் அது சேரும்.

மனுஷாளாப் பொறக்கறது பெரிய பாக்கியம். ஏன்னா, பரமாத்மாவிடமிருந்து அதி சமீபத்தில இருக்கிற ஜன்மம் மனுஷ்ய ஜன்மம். பாவத்தக் கழிச்சி, பகவானையே த்யானம் பண்ணிண்டு திரும்ப பிறக்க வேண்டிய அவசியமில்லாம அவனுக்குள்ளையே அடங்கிப் போறதுக்கு வழியும், முயற்சியும் தெரிஞ்சிக்க முடியற ஜன்மா. அப்படியான ஜன்மாவை நமக்குக் கொடுத்து பகவானுக்கும், மனுஷனுக்கும் நடுவில ஒரு பாலமாய் இருப்பவள் தாயார். மனுஷ ஜென்மத்துலயும் அதி உன்னதமான பிறப்பு பெண். அவள் அம்மாவா ஆறதில்லை. அம்மாவா பிறக்கிறாள், அம்மாவா இருக்காள், அம்மாவாவே அம்மாட்ட சேருவாள். அம்மான்னா யாரு? சாக்ஷாத் உமா இல்லையோ. எல்லாரும் என் கொழந்தேன்னு அணைச்சிக்கறவள் இல்லையோ அவள். தப்புப் பண்ணா கண்டிக்கறதிலயும் ஒரு கருணை இருக்குமே அவளுக்கு. எந்தப் ப்ரயத்தனமும் இல்லாம, இந்த குணத்தை பகுமானமா கொடுத்துருக்கு பெண்ணுக்கு. அவள் மூலமா ஒரு ஜீவன் இந்த பூமிக்கு வரும்போது அதி உன்னதமானா தாயாராகிறாள் அவள். ரொம்ப ஸ்ரேஷ்டமான வார்த்தை தாயார். அதனாலதான் அம்பாளுக்கும் தாயார்னு பெயர்.

கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சிலிர்க்கிறது. முன்னெப்போதையும் விட அம்மாவின் மீதான வாஞ்சை அதிகரிக்கிறது. பெண்களின் முகத்தில் ஒரு பெருமையுடனான நிறைவு. கொஞ்சம் இடை வெளி விட்டு தொடர்கிறார்.

பகவானைப் பார்த்துட்டேன். இந்த நொடி நான் வான்னா வந்து நிப்பான். சத்தியத்தைத் தெரிஞ்சிண்டேன்னு எல்லாத்தையுமே துறந்த ஒரு மகோன்னதமான சந்நியாசியானாலும் துறக்கமுடியாதவள் தாயார். பரம சத்தியத்தைத் தெரிஞ்சிண்ட மஹானேயானாலும் தாயாரிடம் சாக்ஷ்டாங்கமாக விழுந்து சேவிக்க வேண்டும்னெல்லாம் சாஸ்த்ரம் சொல்றது. அப்படியோர் உன்னதப் பிறப்பு தாயார். எல்லாத்துக்கும் மேலானவள்.

ஒரு ஸ்லோகம் சொல்கிறார். சொல்லும்போதே குரல் உடைந்து இன்னும் குழைகிறது. ஒரு ஆழ்ந்த அமைதியில் கடக்கும் ஒரு நொடி இடைவெளி. இதுக்கு அர்த்தம் என்னன்னா, அம்மா! உனக்கு நமஸ்காரம். ஒரு அணுவா உன்னில் வந்த நொடியிலிருந்து எனக்கு உருவம் கொடுத்து, உயிர் கொடுத்து, உணர்வு கொடுத்து, உள்ளம் கொடுத்து ஜன்மா கொடுத்தியேம்மா. எந்த நொடியில் என்னைக் கருத்தரித்தாயோ நான் உனக்குக் கொடுத்ததெல்லாம் கஷ்டம்தானே?

பசிக்கும் உனக்கு. என்னால் ஒரு வாய் தண்ணி உள்ளிறங்காமல் வாந்தி வரும். சலிச்சிண்டதில்லை நீ. உன் ரத்தத்தை எனக்கு உடலாக்கி,உணவாக்கி வளர்த்தவள் நீ. எனக்கு ஆரோக்கியக் கேடு என்று ருசியைத் துறந்தவள் நீ. இது குழந்தைக்கு ஆகாதே என்று உனக்கு விருப்பமான பண்டங்களையெல்லாம் திரஸ்கரித்திருக்கிறாய். காந்தக் காந்த கஷாயம், ஔஷதின்னு எனக்காக என்னல்லாம் சாப்பிட்டிருக்கிறாய். நீ ஓய்ந்து போய் சாப்பிட அமர்வாய். நான் உள்ளுக்குள் புரண்டு உட்கார விடாமல் செய்வேன். களைத்துப் படுப்பாய். நான் செய்ததெல்லாம் உன் அடி வயிற்றில் உதைப்பேன். புரளுவேன். என் குழந்தைக்கு வசதியில்லை என்று எனக்குச் சுகமான விதத்தில் படுப்பாய். உன் உணவை உறிஞ்சி உறிஞ்சி நான் வளர்ந்தேனே அம்மா. அடி வயிறு கனக்க கனக்க அடி அடியாய் எடுத்து வைத்து நடப்பாயே! ஒரு சலிப்பு இருந்ததுண்டா?

எத்தனை வலி தந்து இந்த பூமியில் பிறந்தேன். உன் ரத்தத்தைப் பாலாக்கி எனக்கு போஷித்தாய். எத்தனை வலி தாங்கியிருக்கிறாய். ஒரு இரவாவது நீ நிம்மதியாய் தூங்கியிருக்கிறாயா? பாலுக்கு அழுவேன். இடையில் இயற்கை உபாதை தீர்ந்ததா என்று பார்க்க விழித்திருப்பாய் நீ. திடுக்கிட்டு எழுந்து எறும்பு போன்ற ஜந்துக்கள் இல்லையே எனப் பார்த்துக் கொள்வாய். சில நேரங்களில் என்னை மடியில் போட்டுக் கொண்டு சாப்பிடுவாய். சிறுநீர் கழித்திருப்பேன். அது பட்டிருந்தாலும், ஓரமாய் ஒதுக்கிவிட்டு உண்டிருக்கிறாய். எத்தனை குழந்தை பிறந்தாலும் எல்லாரிடமும் அதே வாஞ்சையைப் பகிர்பவள் நீ. எத்தனை வயதானாலும் எங்களுக்கான நலம் மட்டுமே விழைந்தவள் நீ. இன்னும் எத்தனை பிறவி எடுத்து உனக்கு இந்தக் கடனையெல்லாம் அடைக்கப் போகிறேன. என்னால் முடிந்ததெல்லாம் ஆத்மார்த்தமான இந்த நமஸ்காரம்.

இப்பேர்ப்பட்ட தாயாருக்கு வயசான காலத்துல அசுகம் ஏற்படறப்போ எந்த விதத்திலயும் அவள் குழந்தையைப் போஷித்த போஷனைக்கு கிஞ்சித்தும் சமமில்லாட்டாலும், அதுல கோடியில ஒரு பங்கு சிரத்தையா பார்த்துண்டா, அவளுக்கு சிசுருஷை பண்ணினா வேற எந்த பூஜை வேண்டாம், தவம் வேண்டாம். அந்த உமா என் குழந்தேன்னு கிட்ட இழுத்துப்பாள். வரம் இல்லையா அது. இதை விட மனுஷனாப் பொறந்தவனுக்கு ஒன்னு வாய்க்குமா?

குழைத்துக் குழைத்து வந்து விழுந்த வார்த்தைகள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் குழந்தையாக்கிவிட்டிருந்தது. உதடு துடிக்கத் துடிக்க விசும்பல் கேட்டது. கண்ணீரில் குற்ற உணர்ச்சிகள் அடித்துக் கொண்டு ஓடின. புராண இதிகாசங்களிலிருந்து சில பல உவமானங்களோடு காலட்சேபம் முடிந்தது. அமைதியாகக் கிளம்பிய கூட்டத்தில், கலந்திருந்தான் ரகு. ‘என்னமாச் சொல்றாருங்க. தெரிஞ்ச விஷயம்தான். ஆனா இப்படி கேக்கும்போது பிரமிப்பாயிடுதுங்க’ என்று சினேகமாய் பேசிக்கொண்டு வந்தவரை நோக்கினான் ரகு.

உங்களை எங்கயோ பார்த்திருக்கேங்க, எங்கே வீடு, வேலை என்ற விசாரிப்புக்களுக்குப் பிறகு, ரகு கண்டு பிடித்துவிட்டான். ‘அன்னை இல்லத்துல பார்த்திருக்கேன்னு நினைக்கிறேங்க, போன ஞாயித்துக் கிழமை’ என்றான். அட ஆமாங்க. எனக்கும் இப்ப கவனம் வருது. அங்க யாரு இருக்காங்க என்றார்.

‘எங்க அப்பாங்க. பிடிவாதக்கார மனுஷன். ரிடையர் ஆகி ரெண்டு வருஷத்துல அம்மா இறந்துட்டாங்க. ஓப்பனா பேசுவாருங்க. இங்க பாரு ரகு, இன்னும் கொஞ்ச வருஷம் என்னால உங்களுக்கு ஹெல்ப்ஃபுல்லா ஏதோ இருக்க முடியும். அப்புறம் பாரமாயிடும். எனக்கும் மனவருத்தம். உங்களுக்கும் சிரமம். பேசாம இந்த முதியோர் இல்லத்துல சேர்ந்துக்கறேன். பென்ஷன் சரியா இருக்கும். நல்ல வசதி. முடியறவங்க சமூக சேவை செய்ய அது இதுன்னு நிறைய வழியிருக்கு. நினைச்சப்போ வந்து ஒரு நாளோ ரெண்டு நாளோ உங்க கூட இருப்பேன். விசேஷம்னா வரலாம் போகலாம். உங்களுக்கு பார்க்க தோணிச்சின்னா எப்ப வேணும்னாலும் வரலாம்னு, அங்க போய் சேர்ந்துட்டாரு.’

‘முதல்ல கஷ்டமாத்தான் இருந்திச்சி. அப்புறம் யோசிச்சப்ப சரின்னுதான் பட்டுது. நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறோம். டென்ஷனான லைஃபுங்க. எரிச்சல்ல ஏதாவது வார்த்தை காயப்படுத்தலாம். பாகவதர் சொன்னா மாதிரி அவங்களுக்கு பிடிச்சத, அவங்க வசதியா நினைக்கிறத தடுக்கறதை விட இதுவும் ஒரு விதத்துல சேவைன்னுதான் படுது என்ன சொல்றீங்க?’ என்றான் ரகு.

‘சரியாதாங்க படுது. உங்க கதை பரவாயில்லீங்க. எங்கம்மா, எங்கண்ணன் கூட இருந்துச்சி. அண்ணி கூட சரி வரலை. இத்தனைக்கும் ஹவுஸ் வைஃப் அவங்க. சொம்மா இருக்காது எங்கம்மா. எதுனா சொல்லும். இழுத்து போட்டுக்குனு செய்யும். அப்பால, வயசான காலத்துல எல்லாம் நான் செய்யறதா இருக்குன்னு கத்தும். நம்ம ஊட்லயும் வேலைக்கு போறவங்க. நைட் டூட்டியெல்லாம் இருக்கும். சரி வராது. அதான் அண்ணனும் நானும் ஷேர் பண்ணி இங்க சேர்த்துருக்கோம். கொஞ்சம் காஸ்ட்லின்னாலும், எல்லா வசதியும் இருக்கு இல்லைங்களா. ஒடம்பு முடியாம போனா ஊட்ல வச்சிருந்தா நாம வர வரைக்கும் தவிச்சிகினு இருக்கும். இங்க டாக்டருங்க, உடற்பயிற்சின்னு ஆரோக்கியமா இருக்காங்க. பசங்களுக்கு லீவ் டைம்ல இட்டாந்து வச்சிக்குவோம். ஒரு வாரம் மேல தங்காதுங்க. அவங்களுக்கு அங்க புட்சிப்போச்சி. அத விட என்னாங்க வேணும். சரிங்க பார்க்கலாம்’ என்று பஸ்ஸ்டேண்ட் நோக்கி நடந்தார்.

Sunday, September 26, 2010

மத்தாப் பூ...


சாதனை:  

69 வயசு சா சா சூன் தென் கொரியாவைச் சேர்ந்த அம்மணி. இந்த வயசுல கார் ஓட்டணும்னு ஆசை வந்துடுச்சாம். 2005ல முதல் டெஸ்ட் எழுதுனாங்களாம். மூணு வருஷமா விடாம முயற்சி பண்ணி 959 தடவை எழுதி 960-வது தடவை பாஸ் பண்ணிட்டாங்களாம். லீவ் நாள் தவிர மத்த நாள் எல்லாம் எழுதியிருப்பாங்களோ? அத விட பரிட்சை எழுதின கையோட அடுத்த பரிட்சைக்கும் அப்ளை பண்ணிட்டு வீட்டுக்கு போவாய்ங்க போல. கொரியால ட்ரைவிங் லைசன்ஸ் எடுக்க பணம் கிடையாதா? எப்புடியோ! இதையும் ஒரு சாதனைன்னு ஒரு கார் கம்பேனிக்காரன் விளம்பரதுக்கு புடிச்சிட்டானாம். லைசன்ஸ் எடுக்க விட்ட காச விளம்பரத்துல புடிச்சிருவாய்ங்க.  

ஜம்பலக்கிடி பம்பா:  

இங்கிலாந்தில் க்ளஸ்டர்ஷேரில் இருக்கும் கே ரஸலுக்கு மைக்ரேன் இருந்துச்சாம். ஒரு நாள் ரொம்பத் தலைவலின்னு படுத்து எழுந்தாங்களாம். குரல் தெளிவில்லாம இருந்திச்சாம். கொஞ்ச நேரத்துல அது தெளிஞ்சதும் ஃப்ரென்ச் மொழியில பேசறாங்கன்னு தெரிஞ்சதாம். அந்தம்மணிக்கு முன்னாடி ஆங்கிலம் மட்டுமே தெரியுமாம்.  

வட போச்சே: 

திரும்பவும் உலகின் கோடீஸ்வரர்களில் முதல் இடத்தைப் பிடிச்சிட்டாராம் பில் கேட்ஸ். 2லட்சத்து 70ஆயிரம் கோடி ரூபாயாம். கொடுமை என்னன்னா அது அவரோட ரெண்டு பசங்களுக்கும் கொடுக்கறது நல்லதில்லைன்னு நினைக்கிறாராம். அது அவங்கள கெடுத்துடுமாம். சல்லிக் காசு பேறாது போல. ப்ச். பாவம். அந்த பசங்களுக்கு தமிழ் தெரிஞ்சாலாவது ‘வட போச்சே’ன்னு இடுகை போட்டு ஆத்திக்கலாம்.   

இந்த படை போதுமா:  

ரோம்ல ஒரு லிபியன் கலாச்சார மையத்துல அதிபர் கதாஃபி பேசுனாராம். அதுக்காக 500 பெண்கள் தலா ரூ 5000 கொடுத்து கூட்டிட்டு வந்தாங்களாம். பாரம்பரிய உடை உடுத்தி கூட்டிட்டு வந்தாங்களாம். கடாஃபி நெகிழ்ந்து போய் லிபியா நாட்டு பசங்கள கலியாணம் பண்றதுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னாராம். மாட்ரிமோனியல் ஏஜன்ஸி சைட்ல ஓட்டுறாரோ? எங்கள பாத்து கதாஃபியே காப்பி அடிக்கறாண்டான்னு நம்ம அரசியல் வாதிங்க மார் தட்டிக்கலாம்.  

கொடுமை:  

அமெரிக்காவில ஒரு அம்மணி தொல்லையில்லாம சீரியல் பார்க்கறதுக்காக தன்னோட 2 வயசு பொண்ணுக்கு போதை சிகரட் புடிக்க கத்து கொடுத்திருந்திச்சாம். அதுக்கு ஊக்கம் வேற குடுத்து அத செல்ஃபோன்ல படம் வேற புடிச்சி வச்சிருக்கு. அத யாருக்கோ தப்பா அனுப்பி, அவிய்ங்க போலீசுல சொல்லி அம்மணி இப்ப ஜெயில்ல. நம்மூர்ல அந்த பிரச்சனையே இல்லை. சீரியலே போதையாத்தானே கெடக்கு.   

மின்சாரக் கண்ணா:  

ஏழு வயதில் அம்மா இறந்த துக்கம் தாளாமல் இந்த சேட்டன் ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி வயரைப் பிடித்து தற்கொலை செய்ய முயன்றாராம். ஒன்னும் ஆகலையாம். இந்த வீடியோவில் பாருங்கள். சேட்டன் லைட் என்ன, மிக்ஸி என்ன  என்னன்னு உடம்புல மின்சாரம் பாய்ச்சிகிட்டு ஓட விடுறாரு. பக்கு பக்குன்னு பார்த்துட்டிருந்தா பய புள்ள ஆம்லட் போடுறான். இதுல அலங்காரம் வேற.    



 (டிஸ்கி: சிறுவர் சிறுமியர் எதிரில் பார்க்கவோ காண்பிக்கவோ வேண்டாம்)
(நன்றி: தினத்தந்தி, யூ ட்யூப்)
~~~~~~~~~~~~~~

Wednesday, September 22, 2010

பட்ட காலிலே....


ஒரு கைப்புள்ள சிங்கு கிட்ட சிக்கி சின்னாபின்னமானா உங்களுக்கெல்லாம் அவ்ளோ சிரிப்பா போச்சில்ல. ஒரு பின்னூட்டம் கூட த்சோ த்சோன்னு வரலை. பதான்கோட் போய்ச் சேர்ந்தாச்சு. தொல்லை விட்டதுன்னு நினைச்சா அதான் இல்லை. காலையில 6 மணிக்கே பத்து மணி மாதிரி வெயில் சுள்ளுன்னு அடிச்சிட்டிருந்தது. சூட்கேஸ் உள்ள பட்சணங்கள், வடாம், அப்பளம் இத்தியாதி, ஒரு ப்ளாஸ்டிக் பெரிய கூடை நிறைய ஆவக்காய், மாகாளிக்கிழங்கு வகையறாக்கள் சுமக்க முடியாம சுமந்து வர, டிக்கட் செக்கர் டிக்கட்னு கேட்டா நியாயம். அப்படிக் கேட்டாலுமே ஸ்டாஃப்னு சொல்லிட்டு போறது ஒரு கெத்து. ஆர்மிக்காரன் மெஷின்கன்னை நெஞ்சுக்கு நேர நீட்டி டிக்கட்னா எப்படி இருக்கும்?

ஸ்ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்டாஃப் ஸ்டாஃப்னு சொன்னா இன்னும் கடுமையா டிக்கட்னு ஒரு இஞ்ச் இன்னும் கிட்ட வருது துப்பாக்கி குழல். நின்ன நிலையில சூட்கேச கீழ விடலாம், கூடையை விட்டா ஊறுகா பாட்டில் போயிடுமே. அந்த சத்தத்துல அவன் ஏதோ குண்டுன்னு என்னை சுட்டுத் தொலைச்சான்னா என்ன பண்ண? பார்த்த ஜேம்ஸ்பாண்ட் படமெல்லாம் கவனம் வர, அவன் மூஞ்சிய பார்த்தபடியே வெயிட் வெயிட்னு கீழ பொம்மை மாதிரி வெச்சி, துழாவி டிக்கட்டையும் பாசையும் நீட்டினா, பயமுறுத்தினதுக்காவது வாங்கிப் பார்ப்போம்னு ஒரு மரியாதை வேணாம். என்னமோ நான் அவர் கிட்ட யாசகம் கேட்ட மாதிரி அது டிக்கட்தானான்னு கூட பாராம ‘சலோ சலோ’ன்னு வேற விரட்டினா மனுசனுக்கு கோவம் வருமா வராதா?

ஹே! நாம அடக்கிக்காத கோவமா? நீ சிங்கா இருக்கலாம். நான் சிங்கம்டான்னு சிரிச்சிக்கிட்டே தாங்க்ஸ்னு அத்தனை கோவத்தையும் கைக்கு க்ராஃபிக்ஸ் எஃபக்ட்ல மாத்தி, சூட்கேசையும் கூடையையும் எடுத்த வேகத்துல மிரண்டு போய், துப்பாக்கியை தொடையோட ஒட்டிப் பிடிச்சி, சுதந்திர தின விழால நிக்கிறா மாதிரி நின்னான்ல. கலவர பூமியாச்சே, கைப்புள்ளயை கவனமா கூட்டிப்போவோம்னு ஒரு பொறுப்பு வேணாம். கூடவந்தவனைக் காணோமேன்னு கூட பாராம 200 மீட்டர் போய் வேடிக்கை பார்க்கிறதாவது.

ங்கதான், பக்கத்துலதான், இதோ வந்தாச்சுன்னு சொல்லிச் சொல்லியே அரை மணி நடந்து ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தாச்சு. கடமை முக்கியம் இல்லையா? இந்தக் கலவரபூமிக்கு ஒரு குறிக்கோளோட இல்லையா வந்திருக்கோம்னு காஃபி கூட அப்புறம்னு காது மாட்டலை வாங்கி, பய புள்ளை காதுல, பால்பாயிண்ட் பேனாவால செண்டர் பார்த்து மார்க் பண்ணியாச்சு. சூட்கேசைத் திறந்து, யாஷிகா காமரா எடுத்து, அக்காவுக்கு ட்ரெயினிங் கொடுத்து ஃபோட்டோ எடுக்க தயார் பண்ணியாச்சு. மருமானை மடியில் இழுத்து வச்சி போக்கு காட்டி, ரெண்டுகாதும் குத்தி முடிச்சப்ப பய புள்ள சிணுங்க கூட இல்லை. தொழில் சுத்தம் அப்படி.

ஆனா நீட்டிட்டிருக்கிற கம்பியை மடக்க, கையோடு கொண்டு போயிருந்த முள்ளிடுக்கியை வச்சி அதை மடக்குறப்போ கத்து கத்துனு கத்துது பயபுள்ள. அப்போ தெரியல அது சாபம் விட்டிருக்கிறது. கண்ணாடி முன்னாடி போய் காட்டி, கொஞ்சி அழுகையை நிறுத்தி, காஃபி சாப்பிட்ட பிறகு, கடமையைச் செவ்வனே முடிச்ச திருப்தியில், முந்தின நாள் தொலைச்ச தூக்கம், சுழட்டிப் போட்டது. விழித்தபோது மணி பத்து தாண்டியிருந்தது. வெளியில் வெய்யிலோ உச்சி வெயில் மாதிரி பிளந்து கட்டியது. சமைத்துக் கொண்டிருந்த அக்காவிடம், டாய்லட் எங்கேன்னு விசாரிச்சா, கடல் மாதிரி இருந்த மாடியில் ஒரு மூலையில் இருப்பதாகச் சொன்னாள்.

பயபுள்ள சாபம் அங்க இருக்கிறது தெரியவில்லை எனக்கு. விவரணையா சொல்ல முடியாது. காலை 6 மணிக்கே பத்து மணி மாதிரி வெயில் அப்படின்னா, பத்து மணிக்கு மேல் பொளக்கிற வெயில்ல தண்ணீர் எப்படி இருந்திருக்கும். அந்த பிரக்ஞையே இல்லாததால பொரிஞ்சி போச்சு. வடிவேலு மாதிரி வேஷ்டி உரசாம கெந்தி கெந்தி நடந்து வீட்டுக்குள்ள போன அடுத்த நொடி, எங்கிருந்தோ ‘ஹே! லக்ஸ்மீ! கிதர் ஹை தும்’ அப்படின்னு ஒரு அலறல். பதறி அடிச்சி, வெளியே வந்த அக்காளிடம் என்னைக் காட்டிக் கத்துகிறாள். திரும்பி என்னைப் பார்த்து என்னடா பண்ணினாய் என்று கேட்கிறாள் அக்கா. பர்னரில் உட்கார்ந்த டாமுக்கு பின்பக்கம் சிவப்பாக காட்டுவானே அப்படி இருக்குமா என்ற சந்தேகத்துடன் இருந்த எனக்கு இந்த சஸ்பென்ஸ் வேறா? கத்தின கிழவிக்கு எழுவது வயதிருக்கும். கையப் புடிச்சி இழுத்தியான்னு கூட கேட்க முடியாதே, பின்னெதற்கு என்ன பண்ணினாய் என்ற கேள்வி?

எரிச்சலுடன், எழவு டாய்லட் போய்ட்டு வந்தேன். எதுக்கு கத்துறாள் கிழவி என்றேன். அப்புறம்தான் அக்காவுக்கு புரிந்து, மாஃப்கரோ மழை பெய்து, விளக்கம் சொன்னாள். கழிப்பறைக்குப் போய்விட்டு, கை, கால், முகமெல்லாம் சோப் போட்டு கழுவாமல் வீட்டுக்குள்ளே போய்விட்டேனாம். தீட்டு பட்டுடுச்சாம். மாட்டைக் கழுவுறா மாதிரி மனுசனையும் கழுவு, வீட்டையும் கழுவி விடு என்று மல்லுக்கு நிற்கிறாள் கிழவி. ஒரு வழியாய் குளித்து முடித்து, வீடு கழுவி, பயந்து பயந்து உட்கார்ந்து பார்த்தேன். அவ்வளவாக டேமேஜ் இல்லை.

மாலையில் குழந்தையை (என்னைச் சொன்னேன்) பார்க்குக்கு கூட்டிக் கொண்டு போய் விளையாட விட்டு, வரும்போது மார்க்கட் போய் சுற்றிவிட்டு வருவதாக முடிவானது. மருமானுக்கு ரெட்டை ஜடை மடித்து ரிப்பன் போட்டு கட்டி பொட்டும் வைத்தால், பெண் குழந்தை மாதிரியே இருந்தான். கொலைக்குத்தம் பண்ணவன் மாதிரி, பாய்ந்து அவன் சாந்துப் பொட்டை அழித்தாள் அக்கா. பார்க்குக்கு போய் மார்க்கட்டில் போகிற கடையிலெல்லாம், குழந்தையைக் காட்டி கடைக்காரன் ஏதோ சொல்வதும், என்னைக் காட்டி அக்கா ஏதோ சொல்வதும், தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடத்துக்கு அவன் பஞ்சாபியில் கத்துவதும், மன்னிப்பு கேட்கிற தோரணையில் இவள் ஏதோ சொல்வதும், பின்னாடி இருந்த எரிச்சலை இன்னும் அதிகமாக்கியது.

மூன்றாவது கடையில் பொறுக்க முடியாமல் கேட்டேவிட்டேன். சர்தார்ஜிக்கு ஆம்பிளைப் பையனுக்கு ரெட்டை ஜடை போட்டது பரவாயில்லையாம். காது குத்தினது மஹா கேவலமாம். குத்தின என்னைக் கொலைகாரன் ரேஞ்சுக்கு வைது தீர்த்திருக்கிறான்.  நம்ம ஊர் சாஸ்திரம் அது, ரெண்டு நாளில் கழத்தி விடுவோம் என்று மன்னிப்பு கேட்காத குறையாக விளக்கமளித்ததாவது பரவாயில்லை. இந்த ஊரில் யார் காது குத்தியது என்ற கேள்விக்குதான் என்னைக் கைகாட்டியிருக்கிறாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை விடுமுறையாதலால், சற்று தூரத்தில் உள்ள ரவி நதிக்கரையில் இருக்கும் பார்க்குக்கு போவதாய் ஏற்பாடு. அங்கே போய், நதியில் குளித்து, கலர் கலராய் கூழாங்கல் பொறுக்கி எடுத்து, கொண்டு போன சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் நீரில் அளைந்து ஒரு வழியாய் வெயில் தாழ பூந்தோட்டத்தைப் பார்க்கப் போனோம். அப்படி இப்படியென்று 30 ஃபோட்டோ எடுத்தாகிவிட்டது. ஒரு பூச்செடி அருகில், பூங்கொத்து நடுவில், இன்னொரு பூங்கொத்தாக குழந்தையின் முகத்தை, யாஆஆஆஷிகா காமெராவில் பாலுமகேந்திரா ரேஞ்சுக்கு எய்ம் பண்ணிக் கொண்டிருந்தேன்.

அழகாய்ச் சிரிக்கிறான் குழந்தை. இதோ க்ளிக்க வேண்டியதுதான். ஒரு கால் மடித்து ஆஞ்சனேயர் போசில் அமர்ந்திருந்தேன். விசுக்கென்று கையிலிருந்த கேமரா மாயமானது. அமர்ந்திருந்த நான், ஹாங்கரில் மாட்டிய சொக்காய் போல் அந்தரத்தில் மிதக்கிறேன். இடி முழக்கக் குரலில் ஒரு பஞ்சாபி ஆர்மிக்காரன், ஒரு கையில் கேமராவும் ஒரு கையில் என்னையும் பிடித்து தூக்கி என்னமோ கத்துகிறான். அக்கா, திரும்ப மாஃப்கரோஜி நடுவில் என்னமோ சொல்கிறாள். அவன் காட்டும் திசையில் அப்போதுதான் பார்க்கிறேன். போட்டோ எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதை பஞ்சாபியில் எழுதி, கேமரா படம் போட்டு க்ராஸ் பண்ணியிருப்பதை.

அத்திம்பேரும் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ் என்பதால், பாவி மனுஷா சொல்லுய்யா என்றால், அந்தாள் என் வேலை போய்விடும் போய்யா என்று நூறு மீட்டர் பின்னாடி போகிறார். மாஃப்கரோவுக்கு மசியாத மாபாவி, காலரோடு கொத்தாய்ப் பிடித்து இழுத்துக் கொண்டு போகிறான் என்னை. கால் பாவாமல்,கட்டை விரலால் தெய்ய தெய்யவென்று ஐந்து நிமிடம் நடப்பது கூட பெரிசில்லை. சுற்றிலும் வேடிக்கை பார்ப்பவர்களின் பார்வை தாங்க முடியவில்லை. கேம்ப் ஆஃபிஸில் கொண்டு போய் குப்பையாய்ப் போட்டான் என்னை.

அந்த அதிகாரியிடம், கேமராவைக் கொடுத்து என்னமோ சொன்னான். ’காண்ட்யூ ரீட் த நோட்டீஸ் போர்ட் மேன்? வயர் ஆர் யூ ஃபரம்’ என்று வந்து விழுந்த வார்த்தைகளைக் கேட்டதும், இறுக்கியணைச்சு ஒரு உம்மா தரணும் போலிருந்தது. சட்டையில், மதுசூதனன் நாயர் என்ற பெயர் பார்த்ததும் பொழைச்சேண்டா சாமி என்றிருந்தது. ‘சேட்டா! நங்களு கண்டிட்டில்லா சேட்டா. இன்னு குஞ்சிண்ட பர்த்டேயாணு. அம்மைக்கு காணான் வேண்டி கொறச்சு ஃபோட்டோ எடுத்தது. இவனும் ரயில்வேயில் ஒரு சூப்பிரண்டண்டாணு. மாப்பு சேட்டா. காமரா கொடுத்தேய்க்கு’ என்று சரளமாக அடித்துவிட, தொலைந்து போ என்று கேமராவைக் கொடுத்தான். ’காண்ட்யூ அண்டர்ஸ்ஸ்ஸ்டாண்ட் வீ ஆர் நியர் பாக்கிஸ்தான் பார்டர் அண்ட் இட் ஈஸ் ட்ரபுள்டு டைம்? காண்ட்யூ ரீட் இங்லீஷ்? சேச்சியினு பின்ன குட்டியிட பர்த் டேன்னாணு விடுன்னது. பொக்கோ’ என்று விரட்டினான்.

மனுசனுக்கு கட்டம் சரியில்லைன்னா அவமானம் நேரலாம். அதிலும் ஒரு தீவிரவாதியாக இந்த மூஞ்சையும் நினைச்சது கூட பிழையில்லை. ஆனால் நானூறு ரூபாய்க்கு பர்மா பஜாரில் வாங்கின யாஷிக்கா எய்ம் அண்ட் ஷூட் கேமராவில், அதுவும் பகல் பன்னிரண்டு மணிக்கே கொஞ்சம் இருட்டாகத் தெரியும் ப்ளாஸ்டிக் லென்ஸ் பவரில் ஒரு ஆர்மி போஸ்டை படம் எடுத்த உளவுக்காரன் என்பது எவ்வளவு பெரிய அவமானம்? ஒரு வழியாக கேமரைவையும் என்னையும் மீட்டெடுத்து குழந்தையுடன் சற்று தூரம் சென்ற பிறகு, ‘பலே! விட்டுட்டானா? கேமராவையும் புடுங்கலையா? ஆச்சரியமான்னா இருக்கு’ என்று வந்து சேர்ந்து கொண்ட அத்திம்பேர் மட்டும் அத்திம்பேராக இல்லாவிட்டால்.......  

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Tuesday, September 21, 2010

ரயில் பயணங்களில்..

1986. என்னால் மறக்க முடியாத வருடம். ஒரு கைப்புள்ளையை எதிரியின் கூடாரத்துக்குள் அனுப்பி வைத்து விதி வேடிக்கை பார்த்த வருடம். செந்தமிழோடு, கன்னடமும், கவின் மலையாளமும், சுந்தரத்தெலுங்குமே போதும். பன்னிக்குட்டி பால் குடிப்பது போல் எழுதப்படும் இந்திக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்ற இறுமாப்பில் இருந்த எனக்கு விழுந்தது அடி. இல்லையில்லை இடி.


அதுவும் அம்ரித்ஸர் எல்லாம் ரணபூமியாகி, எங்கு பார்த்தாலும் ஏகே 47ம் ஸ்னைபருமாய் ராணுவத்தினரின் ஃபோட்டோக்கள் பத்திரிகையில் கலங்கடித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு புறம், அப்பா அப்பா என்று எங்கு போனாலும் ஒட்டிக்கொளும் மகன். மறுபுறம், ஆண்டு நிறைவுக்கு மாமன் மடியில் காது குத்திக் கொள்ளக் காத்திருக்கும் மருமகன். பதான்கோட்டிற்குப் போயாக வேண்டும். பறந்து வரும் குண்டு பஞ்சாபி குண்டா, காஷ்மீரி குண்டா என்று பட்டிமன்றம் நடத்தவா முடியும்?


அவ்வளவு தூரம் வரமுடியாது. ஏதோ ஒரு நகை செய்பவரிடம் காது குத்திவிட்டு, கோவிலில் அர்ச்சனை செய்துவிடு. மொட்டையடிக்கும்போது ஆயுஷ் ஹோமமெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று, காதுக்கு மாட்டல் வாங்கி, தபாலில் அனுப்பிவிட்டு கடமை முடிந்தது என்று இருந்த நேரத்தில் வந்து சேர்ந்தது கடிதம். பதான் கோட்டில் காது குத்தக் கூட்டிப் போனால், ஆம்பிளைப் பிள்ளைக்கு காது குத்தச் சொல்லி ஒரு பஞ்சாபியிடம் கேட்கிற அளவுக்கு ஆகிவிட்டதா என்று கொலை வெறியோடு விரட்டி விட்டார்களாம். ஆம்பிளைப் பிள்ளைக்கு ஆண்டு நிறைவன்னிக்கு ஆயுஷ் ஹோமம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. காதுகுத்தாமல் இருப்பதா? பொறுத்தது போதும் மகனே. புறப்படு. மாற்றான் பூமியில், மருமகனுக்கு வெற்றிகரமாகக் காதுகுத்தி, மதராசி என்ற பெயரை நிலைநாட்டு என்று மங்கம்மா மாதிரி பொங்கிவிட்டாள் எங்கம்மா!


முதன் முதலாக ஆல் இந்தியா ரயில்வே டைம் டேபிளைப் பிரித்து, கை ரேகை பார்ப்பவன் போல் பூதக் கண்ணாடி பிடித்து, பதான்கோட் எங்கிருக்கிறது என்று தேடிப் பிடித்து, ஆஹா இங்கிருக்கிறது என்று மதராசைப் பார்த்தால் அது எங்கேயோ இருந்தது. பத்தே அடியில் பாகிஸ்தான் பார்டர் தெரிந்தது. ஏற்கனவே காஷ்மீரா, பஞ்சாபா என்றிருந்த புதிரோடு, இப்போது பாகிஸ்தானியுமா என்ற பயம் வேறு. குழந்தை என்னை விட்டு இருக்க மாட்டானேம்மா, உடம்புக்கு படுத்தும் என்று எஸ்ஸாகப் பார்த்தால், இவனுக்கு நாங்கள்ளாம் இருக்கோம். அந்தக் குழந்தை எங்கயோ பாஷை தெரியாத ஊரில் ... என்று கண்ணாம்பா மாதிரி ஆரம்பிக்கவும், இதுக்கு மூணு குண்டும் ஒரே நேரத்தில் தாங்குவேன் என்று புறப்பட முடிவு செய்தாகிவிட்டது.


சென்னையிலிருந்த்து புது தில்லிக்கு வீட்டிலிருந்தே மூன்று நாளைக்கு வேண்டிய சாப்பாடு கட்டிக் கொள்ளலாம். ஏசி கோச்சில் கெட்டுப் போகாது. ஆக மூன்று நாளைக்கு ஒரு பயலிடமும் ஒன்னும் பேசத் தேவையிருக்காது. தில்லி சேர்ந்ததும் ரிடையரிங் ரூமில் குளித்துவிட்டு, வி.ஆர்.ஆரில் தோசை, இட்லி இருக்குமாம். நமக்கோ பாஞ்ச் வரைக்கும் தெரியும். நல்லகாலம் இட்லிக்கும் தோசைக்கும் இந்தியிலும் அதே பேர்தான். 

அப்புறம் சாயந்திரம், அதே வி.ஆர்.ஆரில் சாப்பாடோ, இட்லியோ வாங்கிக் கொண்டு ஷாலிமார் எக்ஸ்பிரசில் செகண்ட்க்ளாஸில் (ஸ்டேஷன் வந்துட்டுதான்னு பார்க்கணுமே) ஏறிப் படுத்தால் ஸ்டேஷனில் அக்கா வந்து அழைத்துப் போவாள். போய் காது குத்திவிட்டு, 2 நாள் இருந்து திரும்ப கிளம்பி வரலாம். அங்கிருந்து கட்டி வந்த சாப்பாடு தீருவதற்குள், களிதெலுங்கு ஆந்திரா வந்துவிடும். அப்புறம் கவலையில்லை என்று ஒரு பக்கா ப்ளான் ரெடி செய்து கொண்டாகிவிட்டது.


அந்த நாளும் வந்தேவிட்டது. ஆழாக்கு சைசும் அழுக்கு சூட்கேசுமாய் ஒரு ரணபூமிக்கு பிள்ளை போகிறானே என்ற கவலை சற்றேனுமின்றி, எல்லாப் பேரனுக்கும் மாமன் மடியில் அமர்ந்து காது குத்திக் கொள்ள வாய்ப்பென்றால் என் பேரனுக்கு மாமனே மடியில் வைத்து காது குத்தும் பாக்கியமே பாக்கியம் என்று புத்தகக் கார்ட்டூன் படத்தில் கண்ணுக்கு அருகில் வட்ட வட்டமாகப் போட்டு அதற்குள் கனவுக்காட்சிப் படம் போடுவார்களே அப்படி இருந்தாள் அம்மா.


தில்லி வரைக்கும் ட்ரெயினில் வெறும் சாய், காஃபி மட்டுமே பேசி ஒரு சாதனையே நிகழ்த்திவிட்டேன். ஸ்டேஷனில் ஒரு புளித்த தோசையை பாதிக்கு மேல் தின்னமுடியாமல் ஒரு சாயுடன் முடித்துக் கொண்டு மணிபார்த்தால் ஒன்பது ஆகியிருந்தது. மாலை ஐந்து வரை என்ன செய்வது? ரிஸர்வேஷன் கவுண்டரில் போய் செகண்ட் க்ளாசை ஃபர்ஸ்ட் க்ளாசாக மாத்த முடியுமா என்று பார்க்கலாம் என்ற வேண்டாத எண்ணம் தலைதூக்கியது. பிடிவாதமாக, ஆங்கிலத்தில் கேட்டு எங்கேயோ இருந்த ரிசர்வேஷன் ஆஃபீசுக்குப் போய், இருந்ததிலேயே நல்லவனாய்த் தெரிந்த ஒரு சர்தார்ஜி கவுண்டரில் போய், ஆங்கிலத்தில் கேட்டேன்.


அண்ணாச்சி. செகண்ட் க்ளாஸில் கன்ஃபர்ம்ட் பெர்த் இருக்கிறது. தயவு செய்து முதல் வகுப்பில் இடமிருக்கிறதே மாற்றி கொடுப்பீர்களா என்று கேட்டேவிட்டேன். நான் பேச ஆரம்பிக்கும் போதே பென்ஸிலை தாடிக்குள் விட்டு அரைத்தூக்கத்தில் சிடுக்கெடுத்துக் கொண்டிருந்தவன், ப்ளீஸ் என்று நான் முடித்ததும், அர்ரே! ஹிந்தி மே போல் என்றான்! எனக்கு ஹிந்தி தெரியாதென்பதை ஆங்கிலத்தில் சொன்னால் இவனுக்கு புரியுமா என்ற குழப்பம் இருந்தாலும், வேறே வழியில்லை என்று, சார்! ஐ டோண்ட் நோ ஹிந்தி என்றேன்.

என் ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாசை கவுண்டருக்கு வெளியே நீட்டி முகத்தில் வீசினான். அதோடு விட்டானா, தங்கப்பதக்கம் சிவாஜி ஸ்டைலில் கன்னம் துடிக்க, ஹிந்தி தெரியாத உன் முகரைக்கு ரயில்வேயில் ஒரு வேலை. அதுக்கு வெட்டியா ஒரு ஃபர்ஸ்ட்க்ளாஸ் பாஸ். ஓடு என்று விரட்டி விட்டான். அதெப்படி ஹிந்தி தெரியாதவனுக்கு இவ்வளவு விவரணை என்று கேட்பவர்களுக்கு, ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தில் ரத்தத்தால் எழுதி, மாலை ரயிலில் ஏறி அமரும் வரை மனதுக்குள் பல்லாயிரம் தடவை சொல்லிப் பார்த்து குத்து மதிப்பாகப் புரிந்துகொண்டது இது.


ஷாலிமார் எக்ஸ்ப்ரஸில் சன்னலோர சீட். அப்பாடா, தூங்கலாம். சாய் சாய் சத்தம் வந்தால், மணி பார்த்து நம்ம ஊர் இல்லை என்று நிச்சயித்துக் கொள்ளலாம் என்ற நிம்மதியுடன், நன்றாக அரக்கிக் கொண்டு அமர்ந்தேன். வண்டி கிளம்ப பத்து நிமிடம் இருக்கையில், மலை மலையாய் பத்து பதினைந்து சர்தார்ஜிக்கள் ஏறினர். எழுவத்தி இரண்டு சீட்டில் நாந்தானா அகப்பட்டேன். நேராக என்னிடம் வந்து, ஊப்பர் சலோ என்றான். ‘அய்யாங்! இட்ஸ் மை சீட்’ என்றேன். ஒன்றும் பேசாமால் ஆறு பேர் சீட்டில் பத்து யானைகள் அமரவும், ஜன்னலோரம் பல்லி போல் ஒட்டிக் கொண்டேன்.


டிக்கட் பரிசோதகர் வரட்டும்டி. நான் யாருன்னு காட்டுறேன், என்று மனதுக்குள் தமிழில் சபதம் செய்து, ஒண்டிக் கொண்டிருக்க, ஆளாளுக்கு துழாவி அப்பளக் கட்டு போல் சப்பாத்தி எடுத்து உள்ளங்கையில் தட்டி, ஒரு சட்டியில் சப்ஜியில் முக்கி வாய்க்கு ஒரு சப்பாத்தியாக உள்ளே தள்ளினர். நாசமாப் போறவனுவளா. அஞ்சு மணிக்கெல்லாம் இருவது சப்பாத்தி தின்னுட்டு ராத்திரிக்கு என்னாடா பண்ணுவீங்க என்று சாபமிட்டது பஞ்சாபியில் எப்படி புரிந்ததோ தெரியவில்லை.


‘உட்டோ’ என்றான் ஒருத்தன். ‘வாட்’ என்றேன் நான். அடுத்த நொடி எப்படி என்ன நடந்தது என்று தெரியாமல் நான் சீட்டிலிருந்து வெளியேறி, சிங்கிள் சீட் அருகே நின்றுக் கொண்டிருந்தேன். சிங்கிள் சீட்டில் இருந்த ஒரு யானை பெரிசு, இதர் பைட்டோ பேட்டே என்று ஒன்னரை இஞ்சில் இடம் கொடுத்தது. வீம்புக்கு நின்றால் வெளியே கடாசி விடுவார்களோ என்ற பயத்தில், வாய்ப்பாடு எழுதாத பையனுக்கு வாத்தி, நாற்காலி பனிஷ்மெண்ட் கொடுத்தாற்போல் பிடிமானமில்லாமல் உட்கார்ந்தேன். கொண்டு வந்த பார்சலை இடையில் அடுக்கி, மேலே ஒரு ஷாலைப் போட்டு பக்காவாக ஒரு டேபிள் மாதிரி தயார் செய்தான் ஒரு சர்தார்.


ஒரு சர்தாரின் முறம் சைஸ் கைக்குள்ளிருந்து மூன்று சீட்டு கட்டுகள் தோன்றின. பிரித்துப் போட்டு ஆடத் துவங்கினார்கள். என் பக்கத்து யானை சீட்டு எடுக்க எம்பும் போதெல்லாம், எனக்கேயான இஞ்ச் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள நான் போராடிய போராட்டத்தை பகத்சிங் பார்த்திருந்தால் பங்க்ரா ஆடியிருப்பான். வாதம் வந்த மாட்டுக்கு ஒரு பின்னங்கால் விரைத்துக் கொள்ளுமே, அப்படி வலக்காலை நீட்டி எதிர் சீட்டில் ஊன்றி, உடும்பு மாதிரித்தான் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.


‘மில்கய்’ என்று ஒரு அலறலோடு பக்கத்து யானை பாய, அந்தக் குரலில் அலண்டு போய் அசந்த சந்தர்ப்பத்தில் கீழே விழுந்த சீட்டை எடுத்து அந்த ஆள் ரம்மி காட்ட, சரியாக அந்த நேரம் ரயில் ட்ராக் மாற, யானை போட்ட லத்திபோல் சொத்தென்று விழுந்தேன் நான். ஒரு மனிதப் பதர் விழுந்து கிடக்கும் பிரக்ஞை கூட இல்லாமல், நிதானமாக காசு வாங்கி ஜிப்பாவில் சொருகிக் கொண்டு, அடுத்த சீட் பஞ்சாபியிடம், தட்டுத் தடுமாறி எழுந்த என்னைப் பார்த்தபடி ஏதோ சொன்னான். எனக்கு கிலி பிடித்துக் கொண்டது. இருவரும் ஒரு சேர எழுந்திருக்கவும், இந்தியில் உயிர்ப்பிச்சை கொடு என்று எப்படிக்  கேட்பது என்று மண்டை குடைந்தது.


அடுத்த நொடியில், ஒரு 29 வயது வாலிபனுக்கு, ஒரு பிள்ளையின் தகப்பனுக்கு நடக்கக்கூடாத அவமானம் நடந்தேவிட்டது. ஆம். பக்கத்து சீட்டில் இருந்த ஆள், மேல் பர்த்தில் அடுக்கியிருந்த சாமான்களை ஒதுக்கி இடம் செய்ய, என்னோடு இருந்த யானை, என்னை ஒரு குழந்தையைப் போல் அக்குளில் கை கொடுத்து தூக்கி, ஒரு சூட்கேஸ் போல் அந்த இடுக்குக்குள் சொருகிவிட்டு, ‘ஆராம் சே பைட்டோ’ என்றுச் சொன்னான். அதிக நேரம் என்னைச் சோதிக்காமல், மதுரா வந்தவுடன் எல்லா யானையும் இறங்க, ஒரு யானை மேலிருந்த லக்கேஜோடு லக்கேஜாக என்னையும் இழுத்துக் கீழே விட்டது.


சனியன் ஒழிந்தது என்று மீண்டும் என் சீட்டில் அரக்கிக் கொண்டு அமர்ந்தேன். இரண்டு மிலிட்டரிகாரர்கள் வந்து எதிர் சீட்டில் அமரவும் வண்டி புறப்பட்டது. ஒரு மணி நேரம் சென்றிருக்கும், எதிர் சீட்டில் இருந்த ஒருத்தன் எழுந்து ‘ஊப்பர் சலோ’ என்றான். எழவெடுத்தவனே, திரும்பவுமாடா என்று தமிழில் நினைத்து, ஆங்கிலத்தில் ‘ஒய்? இட்ஸ் மை பெர்த் என்றேன்’. நடிகை சதா மாதிரி ஒரு கையை நீட்டி ‘ஊப்பர் சலோ ஜி, என்று சொல்லியதோடு, என் சூட்கேசையும் மேலே சொருகிவிட்டான். ஹே! இதுக்கு மேலையும் போகலைன்னா திரும்ப ஒருக்கா ஏத்திவுடுவ. மானஸ்தண்டா! நானே போய்க்குவேன் என்று ஏறிவிட்டேன்.


அவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு ஃபுல் பாட்டில் எடுத்து வைத்துக் கொண்டு அடிக்க ஆரம்பிக்கவும், கதிகலங்கிப் போயிற்று. இந்தியில் ஏதோ பேசுவதும், சிரிப்பதுமாய் அவர்களுக்கு சுதி ஏற ஏற, எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிக் கொண்டிருந்தது. ஏற்கனவே, தில்லியிலிருந்து பதான்கோட் வரை எந்தெந்த ஸ்டேஷன்கள் என்று மனப்பாடம் செய்திருந்தேன். வண்டி ஸ்டேஷனில் நிற்கும் போது மட்டுமின்றி, சிக்னலில் நிற்பதும் குழப்ப, இறங்கி இறங்கி எட்டிப் பார்க்க ஆரம்பித்தேன். என் சீட்டில் படுத்திருந்த ஆள் கடுப்பாகி, ‘க்யா ஓனாச் சாயியே (என்ன வேணும்?)’ என்றான்.


‘நோ சாய். ஐம் செக்கிங்க் விச் ஸ்டேஷன் இடீஸ்’ என்றேன். வீணாப் போனவன் அடுத்து கேட்டானே ஒரு கேள்வி! ‘நீ தமிழா? எந்த ஊருக்கு போற? என்றான். ஆஹா! மூன்று நாளைக்கப்புறம் தமிழ் மனசுக்கு வெளியேவும் கேட்கிறது என்ற சந்தோஷம் ஒரு புறம். இந்திக்காரன் அடிச்சான் பரவால்ல, நம்மாளே உப்பர் சலோ சொல்லிட்டியே என்ற துக்கம் ஒருபுறம். தொண்டைக்குள் ‘பதான்கோட்’ என்றேன். ஏறிப் படு. மணி 12தான் ஆவுது. ஆறு மணிக்குதான் போகும். ஒரு மணி நேரம் நிக்கும். நான் எழுப்பி விடுகிறேன் என்று கண்டிசனாய்ச் சொன்னான்.


தண்ணியில் சொல்கிறானா, மிரட்டுகிறானா என்றே தெரியாமல் மேலேறிப் படுத்து, எப்போது தூங்கினேனோ தெரியாது. தம்பி, எழுந்திரு! பதான் கோட்டு வந்திருச்சி என்று எழுப்பிவிட்டவனுக்கு நன்றி கூடச் சொல்லத் தோன்றாமல் சூட்கேசுடன் குதித்து வெளியே பாய்ந்தேன். காத்திருந்த அக்காவும் அத்திம்பேரும் வந்து அழைத்துக் கொண்டு போக, ‘ஜர்னி கம்ஃபர்டபிளா இருந்ததா’ என்ற அத்திம்பேர், அத்திம்பேராக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அந்தாளுக்கு சங்குதான் ஊதியிருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~

Sunday, September 19, 2010

ரங்கு

பசித்தது ரங்குவுக்கு. எட்டரைக்கெல்லாம் கொதிக்க கொதிக்க ஊதி ஊதி நுனிவிரலால் சாப்பிட்டுப் பழக்கம். அதிகாலையிலிருந்தே அலைச்சல். ஓட்டத்தின் நடுவே யாரோ காஃபி கொடுத்தார்கள். அம்மா போடும் காஃபி மாதிரி இல்லை. பசிக்கிறதென யாரிடம் சொல்வது? மெதுவே வாசலுக்கு வந்தான். மெதுவாக, ஒரு பூந்தளிர் கரம் கை பிடித்து இழுத்தது. ரங்கு மம்முடா என்றான் ரவி.

ரங்குவுக்கும் என்ன செய்யவென்று தெரியவில்லை. இது முதல் முறையில்லை. மணி ஒன்பதுக்கும் மேல் ஆகிவிட்டது. வந்துவிடுகிறேன் என்று சொன்ன பெரியப்பாவைக் காணோம். வாசலுக்கு ஓடி வந்துவிட்டாரா என்று பார்த்து பார்த்து கால் வேறு வலித்தது. அப்பாவைப் பார்த்தான்.

எப்போதும் விட அழகாய் இருந்தார். குழைத்து இட்டிருந்த விபூதியும், லேசான சிரிப்போடு கண்மூடிக் கிடந்ததுவும், மூக்கிலிருந்த பஞ்சும், தலைக்கட்டும் தாண்டியும் அழகாய் இருந்தார். வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா அவ்வப்போது வெடித்து அழுவதும் ஓய்வதுமாய் இருந்தாள். இவளிடம் எப்படிக் கேட்பது பசிக்கிறதென்று. மெதுவே அப்பாவிடம் போய் அமர்ந்தான். வெற்றிலைப் போட்டாற்போல் உப்பியிருந்த கன்னத்தைத் தடவினான். வாயோரம் நீர் வழிய, பஞ்சால் துடைத்தான்.

அம்மா இழுத்துக் கட்டிக் கொண்டு அழுதாள். அதைப்பார்த்து ரவியும் ஓடிவந்து மடியில் அமர்ந்து அழுதான். பிஞ்சுக் கரம் கொண்டு கண்ணீர் துடைத்து அம்மா அயாத! மம்மும்மா என்றான். இன்னும் அழுதாள். சற்று ஓய்ந்து தள்ளாடி எழுந்து, காசு எடுத்துக் கொடுத்தாள் ரங்குவிடம். போம்மா. ஹோட்டலில் ரெண்டு இட்டிலி வாங்கி ஊட்டி விடு. நீ சாப்பிடக்கூடாதும்மா. கொள்ளி போடணுமேடா என்று வெடித்து அழுதாள்.

கொஞ்சம் நடந்து கொஞ்சம் தூக்கி என்று கூட்டிக் கொண்டு போய் நான்கு வயது ரவிக்கு இட்டிலி ஊட்டி கூட்டிக் கொண்டு வந்தும் பெரியப்பாவைக் காணோம். இன்னோரு ஆண்டி காஃபி கொண்டு வந்து கொடுத்தார்கள். தயங்கித் தயங்கி, மாமி, புள்ளைங்களுக்கு எங்க வூட்டு இட்டிலி கொடுக்கலாங்களா என்றார். இல்லம்மா! சின்னவனுக்கு வாங்கிக் கொடுத்துட்டான். ரங்கு சாப்பிடக்கூடாது என்று அடுத்த பாட்டம் அழுதாள்.

காபின்னா குடிம்மா என்று கொடுத்த காஃபியும் குமட்டிக் கொண்டு வந்தது. ரெண்டு மணியிலிருந்து அலைச்சல். தூக்கமா, பசி மயக்கமா என்று தெரியாமல் களைப்பாய் இருந்தது ரங்குவுக்கு. அம்மாமேல் சாய்ந்துக் கொண்டு உறங்கிப் போனான். எப்போதோ பார்க்கவரும் அக்கம் பக்கத்தினரோடு சேர்ந்து வெடிக்கும் அழுகுரல் மீறி உறங்கிப் போனான்.

சற்று நேரத்தில் மெதுவே உலுக்கினாள் அம்மா. கண்ணா! அப்பா ஆஃபீஸ்ல போய் சுதர்சனம் மாமா, சுப்பாராவ் மாமாக்கெல்லாம் சொல்லிட்டு வந்துட்டும்மா. பார்த்துப் போ. பராக்குப் பார்க்காம சீக்கிரம் வரணும் என்று அழுதாள்.

வயிறு லேசாக வலிக்க ஆரம்பித்திருந்தது. பசியென்று சொல்லத் தோன்றவில்லை. கொள்ளி வைக்கிறதுன்னா என்ன என்று யோசனை வேறு வந்தது. தளர்வாய் நடந்து அலுவலகம்போய், சுதர்சனம மாமாவைப் பார்த்தான். எப்போதும் போல் சிரித்த முகத்துடன் ‘என்ன ராஜா! அப்பாக்கு உடம்பு முடியலையா?’ என்றார்.  ‘அப்பா காலையில செத்து போய்ட்டார் மாமா. சுப்பாராவ் மாமாக்கும் சொல்லிட்டு வீட்டுக்குப் போகணும்’ என்றான்.

விலுக்கென்று ஆஜானுபாகுவாய் எழுந்து இழுத்துக் கட்டிக்கொண்டார். கண்கள் கலங்க ‘நீ ஏன் ராஜா வந்த? எதாச்சும் சாப்பிட்டியா?’ என்றார்.  ‘கொள்ளி போடணுமாம் மாமா. சாப்பிடக்கூடாதாம்’ என்று அழாமல் சொன்னவனை விக்கித்துப் பார்த்தார். மெதுவே பிடித்து அமர்த்தி, யாரையோ கூப்பிட்டு ஒரு பழரசம் வாங்கிக் கொடுத்து,  ‘இது சாப்பிடலாம்டா. இந்த அண்ணன் கூட போ. நாங்க வரோம்’ என்று அனுப்பி வைத்தார்.

சைக்கிளில் கொண்டுவந்து விட்ட அந்த அண்ணனும், பார்த்து அழுதான். பெரியப்பாவைக் காணோம். மாமாக்கள், பெரியம்மா எல்லாம் வருவார்களா தெரியவில்லை. அக்கா வரமுடியாது என்று அம்மா சொன்னாள். சற்று நேரத்தில் சுதர்சனம் மாமா, சுப்பா ராவ்மாமா என்று அப்பாவின் நண்பர்கள் வந்தார்கள். கதறல் வெடித்தது. சுதர்சனம் மாமா மட்டும் மெதுவே ஒரு பேப்பரில் அம்மாவிடம் கையெழுத்து வாங்கினார்.

மெதுவே ரங்குவை இழுத்து,  ‘சொந்தக்காரங்களுக்கு தந்தி குடுக்கணும்பா. அட்ரஸ் வேணுமே. அக்கா முகம் பார்க்ககூட முடியாதுப்பா. உங்க பெரியப்பா இங்க இருக்காருன்னு அப்பா சொல்லுவாரே, எங்கே என்றார். வந்துடுவாங்க மாமா’ என்றான் ரங்கு. வந்தவர்கள் எல்லாரும் கிளம்பிப் போய்ச் சற்று நேரத்தில் வந்தார்கள் பெரியப்பாவும் பெரியம்மாவும்.

அழுகையெல்லாம் ஓய்ந்த பின், தந்தி, ஆஃபீஸ் நண்பர்கள், உங்க அண்ணா தம்பி என்று என்னமோ பேசிக் கொண்டிருக்க, மெதுவே மீண்டும் ரவி, ரங்கு மம்முடா என்றான். எழுந்து வந்த பெரியப்பா, பக்கத்துல வர வழியில ஹோட்டல் பார்த்தேன். ஒரு தயிர்சாதம் வாங்கிண்டு வா என்று ஐந்து ரூபாய் தந்தார். பெரியப்பா பசிக்குது என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது. கூட ஒரு ரூபாய் கொடுத்து நீ ஒரு காஃபிமட்டும் சாப்பிடலாம்டா. கொள்ளி போடணும். நிறைய வேலையிருக்கு சீக்கிரம் வா என்று அனுப்பினார்.

யாரோ ஊட்டிவிட, சாப்பிட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்தான் ரவி. பெரியப்பாவுடன், புரோகிதர் வீடு, ஆஃபீஸில் முன்பணம் என்று அலைந்து திரிந்து களைத்து, ஒரு வழியாய் ஈமக்கிரியை முடித்து வர, பசி இன்னும் காந்தியது. சலூனில் வேணாம் பெரியப்பா என்று அழ அழ, தலைமுடியை ஒட்ட வெட்டி, பின்புறம் ஒரு கொத்து முடி மட்டும் வெட்டாமல் விட்டு வீடு திரும்பினார்கள். வாசலிலேயே குளித்து உள்ளே நுழைய பெரியம்மா சமையல் முடித்திருந்தாள்.

அம்மா, பசிக்கறதும்மா என்று முதல் முறை ஈனமாய்ச் சொன்னபோது ஓவென்று கட்டிக் கொண்டு அழுதாள் அம்மா. சாதம் கலந்து பெரியம்மா முதல் உருண்டை கொடுக்கவும் தொண்டையை அடைத்தது. சுவரோரம் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் அம்மா. உன் பிள்ளையைப்பார் எவ்வளவு தைரியமாய் அழாம தானே ஓடி எல்லாம் பண்ணி ராஜா மாதிரி அனுப்பி வச்சான் அப்பாவை, மனச தேத்திண்டு ஒரு வாய் சாப்பிடு என்றார் மாமா.

ரங்குவுக்கு அப்போதுதான் உறைத்தது. ஆமாம் எனக்கு ஏன் அழுகை வரவில்லை? அப்பாவுக்கு நெருப்பு சுடாதா? நாளைக்கு காலையிலேயே போக வேண்டும் என்றார்களே. கொளுத்திய பிறகு அங்கு போய் என்ன செய்வது? அப்பா இல்லாமல் எப்படி? ஸ்கூல்? அய்யோ ஸ்கூலில் சொல்லவில்லையே. நாளைக்குப் போய் சொல்லணும். ஸ்கூல் திறந்து ஒரு வாரம்தான் ஆச்சு. புது வாத்தியார் மட்டம் போட்டதுக்கு அடிப்பாரோ? ம்ஹூம்! அழுகை வரவில்லை.

காலையில் பாலுக்குப் போய், சாம்பலாக் கிடக்காரேடா உங்கப்பா என்று மாமா கட்டிக்கொண்டு அழுதார். அப்போதும் அழுகை வரவில்லை. ஸ்கூலெல்லாம் பரவாயில்லை. கருமம் பண்ணவன் வெளியில் போகக்கூடாது. காயம் படக்கூடாது என்றபோதும் அழுகை வரவில்லை. பத்தாம் நாள் காரியத்தின்போது அழு என்றபோதும் அழுகை வரவில்லை. கதறிய அம்மாவைக் கட்டிக் கொண்டு அம்மா அயாதம்மா என்று ரவி கூட அழுது தீர்த்தான்.

சரியான கல்லுளிமங்கன்! ஒரு பொட்டு கண்ணீர் வரலையே என்று அத்தை சொன்னது புரியவில்லை. ஒரு வழியாகக் காரியம் முடிந்து சகஜ நிலையில் பள்ளிக்குப் போகலாம் என்றதும், ஜெயிலிலிருந்து விடுதலையானாற்போல் ஒரு பாரம் போனது.

வகுப்புக்குப் போனதும் எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். சற்று இடைவெளியில் கொல்லென்று சிரித்தார்கள். இங்க பாருடா சட்டியக் கவுத்து முடி வெட்டிருக்காருடா என்று சிரித்தான் ஒருவன். பெஞ்சில் அமைதியாக அமர்ந்தான் ரங்கு. பின்னாடி பெஞ்சில் இருந்தவன் இங்க பாருடா டும்மி என்று கொத்து முடியை இழுத்தான். பெரியப்பா மேல் கோபம் வந்தது. புது ஆசிரியர் வந்தார்.

‘வாங்க தொரை! சாருக்கு மூணுமாசம் லீவு போதலையோ? ஏன் ஒருவாரம் காணோம். இது என்னா முன்மண்டைய நாய் நக்கியிருக்கு?’ என்றதும் பின்னாலிருந்தவன் மீண்டும் கொத்து முடியை இழுத்து, ‘இங்க பாருங்க சார் டும்மி’ என்று கத்தினான். எழுந்த சிரிப்பலையில் வகுப்பே அதிர்ந்தது.

அடிவயிற்றிலிருந்து ஒரு பந்து எழும்பி, நெஞ்சையடைத்தது ரங்குவுக்கு. விழுங்க விழுங்க மேலெழும்பியது. உதடு தனிச்சையாய்த் துடித்தது. கண்ணில் மெதுவே முதல் சொட்டு நீரிறங்கியது.  ‘சிரிப்பிற்கு நடுவே லேசான புன்னகையுடன் நின்றிருந்த ஆசிரியரைப்பார்த்தான்.

‘சார்! எங்கப்பா செத்துட்டாங்க சார். கொள்ளி போட்டா இப்படித்தான் இருக்கணும்னு எங்க பெரியப்பா வெட்டச் சொன்னாங்க சார்’ என்று சொல்லி முடிக்க அடைத்துக் கொண்டிருந்த பந்து அப்பா அப்பா என்ற விசும்பலோடு வெடித்துக் கிளம்பியது. சட்டெனெ வெளிறிய முகத்தோடு தோளை அழுத்தி அமர வைத்த நொடி மயான அமைதி வகுப்பில். சேர்த்து வைத்த துக்கமெல்லாம் பொங்கிவர மேசையில் கவிழ்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதான் ரங்கு. திடீரென அப்பாவின் இழப்பை உணரத்துவங்கியிருந்தான்.

Thursday, September 16, 2010

நறுக்னு நாலு வார்த்த V 5.3


மீண்டும் முதல்வராவார் கருணாநிதி: ஸ்டாலின்

என்னைக்கும் நீங்க ஆக முடியாதுன்னு சொல்றாருண்ணேன்னு ஒரு அல்லக்கை போட்டு குடுக்கபோவுது அண்ணங்கிட்ட..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அண்ணா பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்: மு.க.அழகிரி

அண்ணன் வலி அண்ணனுக்குத்தான் தெரியும்..என்ன நாஞ்சொல்றது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குருவுக்கு பதிலாக என் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும்: ராமதாஸ்

ஏங்க? மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்குவீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கருணாநிதி சொன்னதுபோல் அவருக்கு பிறகு அதிமுகவும் மதிமுகவும்தான் இருக்கும்: வைகோ

ரைட்டு! பின்னாடி மதிமுகன்னு சொன்னது மகன்கள் திமுகன்னு சொல்லி இணைஞ்சிடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சத்துணவில் வாரத்திற்கு 5 முட்டைகள்:கலைஞர்

தலைவரே! பசங்க வில்லங்கம் புடிச்சவனுங்கோ. பரிட்சையில -------- முட்டை போடும்னு கேள்வி குடுத்தா உங்க பேர எழுதிடுவானுங்கோ. டீச்சருங்க பாடு திண்டாட்டமா போயிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்:தமிழக அரசு

அனைவருக்கும் முடிகயிறு, தாயத்து வழங்கும் திட்டம் வருதுங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தீர்ப்பைப் பற்றிக் கவலையில்லை. ராமர் கோவில் கட்டியே தீருவோம்: ராமகோபாலன்.

ஒரு பிள்ளையாரை எடுத்து வாய்ல அடைக்கணும் இந்தாளுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காங்கிரசார் மைக் பிடித்து மக்களுடன் நேரடியாகப் பேச வேண்டும்: கார்த்திக் சிதம்பரம்.

காலர்ல மாட்டிக்கிட்டு பேசினா கேக்காதுங்ளாக்கும். வேட்டிய உருவமாட்டாங்கன்னு கேரண்டியிருக்கா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காஷ்மீரின் நிறம் என்ன ப.சி.க்கு மோடி கேள்வி.

கண்டிப்பா காவியில்லைன்னு பதில் சொல்லப் போறாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காஷ்மீர் இளைஞர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்: ராகுல் 

குளிர்காலத்துல நீரோட்டம் உறைஞ்சிடுமே பரவால்லையா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்:டி.ஆர்.பாலு.

அண்ணோவ். பதினஞ்சு நாள்ள திரும்ப வருவோம்னு உங்க கூட டூர் வந்து யக்கா சொல்லிட்டு வந்திச்சே. அவங்க உணர்வுகள மறந்தாச்சாங்ணா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காஷ்மீரிலிருந்து குமரி வரை பாரத் தீர்த் ரயில்

எல்லா ஊரு சரக்கும் கெடைக்குங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரதமாரக இருந்தால் என்ன செய்வீர்கள்? ராகுலிடம் கேள்வி.

மம்மீ! பாருங் மம்மி! இதுக்கு முன்னாடி இருந்தவங்கள்ளாம் என்னமோ செஞ்சிட்டா மாதிரி என்னைய மட்டும் டீஸ் பண்றாங்க. அவ்வ்வ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜபக்ஸே நடத்திய நரவேட்டை: வைகோ.

இப்புடி பேசியே கொஞ்சம் தேத்தப்பார்ப்போம் வோட்டை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சாதனைகளுக்காக ஆடுவதில்லை: ஷேவாக்
 
ஊத்திக்கிறதுமில்லாம இது வேற ரோதனை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, September 13, 2010

தங்கமணி ராக்ஸ்..

சினிமாவில் ஒரு விரலசைப்பில் வில்லனை 7 மாடி உயரத்துக்கு உயர்த்தி எட்டு குட்டிக்கரணம் அடிக்க வைப்பார்களே, அதெல்லாம் தங்கமணியின் டேலண்டுக்கு முன் ஜுஜுபி. இணையத்தில் ROFL என்று உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு போடுவதை, நொடியில் நிஜமாக்குவதில் தங்கமணியை அடித்துக் கொள்ள முடியாது.

கொஞ்சமும் சிரிக்காமல், வெள்ளந்தியான முகபாவனையுடன் அஸால்டாக வீசும் குண்டுக்கு தரையில் படுத்து உருண்டு சிரிக்காமல் இருக்க எந்த கொம்பனாலேயும் முடியாது. அது போதாதென்று இதில் சிரிக்கவென்ன இருக்கு என்று நொடித்துக் கொண்டு போகையில் புரையேறி மூச்சடைத்துப் போய்விடும்.

தங்கமணியின் மாற்றமுடியாத ஒரு மேனரிசம் ஃபோன் செய்ததும் ‘ஹலோ! பாலாஜி சார் வீட்ல இருந்து பேசுறேன்’ என்பது. வாடிக்கையாக மினரல் வாட்டர் சப்ளையர், மருந்துக்கடை இவர்களுக்கு போன் செய்யும்போது பரவாயில்லை. கரண்ட் போனதும் எலக்ட்ரிசிடி போர்டுக்கு மல்லுக்கட்டி லைன் கிடைத்த கடுப்பில் தங்கமணி ஒரு முறை, எரிச்சலில் இருந்த இ.பி.ஆளிடம், வழக்கமான பாணியில் ‘நான் பாலாஜி சார் வீட்ல இருந்து பேசுறேன்’ என ஆரம்பித்திருக்கிறார்.

அந்த ஆள் ‘ஏங்க! எங்கருந்துன்னா பேசுங்க! என்ன வேணும் சொல்லுங்க எனப் பாய்ந்திருக்கிறார். வீதியில் அனைவர் வீட்டிலும் மின்சாரம் இருப்பதைச் சொல்லி, எங்கள் வீட்டில் மட்டும் இல்லை என்பதைச் சொல்லவும், அவர் போதாத காலம் பேரு அட்ரஸ் சொல்லுங்க என்று கேட்டுவிட்டார். இப்படி கேப்பிங்கன்னுதான் முதலிலேயே பேர் சொன்னேன். என்னமோ எங்கிருந்துன்னா பேசுங்கன்னு எரிஞ்சி விழுந்தீங்களே என்று ஒரு பாட்டம் லெக்சர் எடுத்திருக்கிறார். எங்கே நேரமானால் இன்னம் என்னமெல்லாம் வருமோ என்ற பயத்திலோ என்னமோ 15ம் நிமிடம் சர்வீஸ் வேன் வீட்டு வாசலில் வந்து நின்றது. 

ஒரு முறை, தங்கமணி ஹொகேனக்கல்லில் குளிக்கப் போய், சறுக்கி விழுந்து வலது கையில் ஃப்ராக்ச்சர் ஆக, அங்கிருந்து வந்து டாக்டரிடம் செல்வதற்குள் இரண்டு நாட்களாகிவிட்டது. டாக்டரிடம் நான் நடந்ததைச் சொல்லி, அவர் சர்ஜரி செய்ய வேண்டும் என்று அட்மிட் ஆகச் சொன்னதும், வார்டுக்கு அழைத்துச் சென்று ரூமில் விட்டுவிட்டு ஒரு நண்பனிடம், வீட்டுக்குப் போகச் சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென அறையிலிருந்து இடி விழுந்தாற்போல் சிரிப்பும், கேவலுமாய் வினோதமான சப்தத்துடன், என்னங்க? என்னாச்சுங்க என்ற தங்கமணியின் குரலும் கேட்டது. திகைத்துப் போய் அறைக்கு ஓட நர்ஸ் பாதி சுற்றிய பேண்டேஜ் ரோல் தரையில் உருண்டொட வயிற்றைப் பிடித்துக் கொண்டு மடங்கி சிரித்துக் கொண்டிருந்தார்.

நர்ஸால் விஷயம் சொல்வதற்கு இப்போதைக்கு முடியாது எனத் தெரிந்தபடியால், தங்ஸிடமே என்ன கேட்டார்கள்? நீ என்ன சொன்னாய் என்றேன். ரொம்ப சாதாரணமாக, ஒன்னுமில்லைங்க, ‘எப்படிம்மா விழுந்தீங்கன்னு கேட்டாங்க! நான் தொப்புன்னு விழுந்தேன்’னு சொன்னதும் இப்படி சிரிக்கிறாங்க’ என்று சொன்னதும் நர்ஸ் அடுத்த ரவுண்ட் சிரிப்புக்குப் போக, நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன்.

நேற்று அதிகாலையில் கேரக்டர் இடுகை போட்டுவிட்டு தூங்கப்போனேன். ஒன்பதரை மணியளவில் கண்விழித்து, பல் தேய்த்து, காஃபி சாப்பிட ஆரம்பிக்க, தங்கமணி ட்ரேட்மார்க் எக்ஸ்ட்ரா வெள்ளந்தி முகத்துடன், ரெண்டு ஃபோன் கால் வந்தது. யாருன்னு தெரியலை. பேர் சொல்லமாட்டேன்னுட்டாரு என்றதும், என்னது? என்றேன். முதல் கால் வந்ததும், யார் பேசுறீங்கன்னு கேட்டேன், பேர் சொல்ல மாட்டேன்னாரு. என்னடா இதுன்னு வெச்சிட்டேன்.

திரும்ப கால் வர எடுத்து யார் சார் பேசறதுன்னா திரும்பவும் பேர் சொல்ல மாட்டேன் அப்படின்னாரு. இப்படி சொன்னா எப்படி சார்னா, நான் ப்ளாக்ல இருக்கேன்னு சொல்லுங்கோன்னார். தூங்கறார்னு சொல்லி வச்சிட்டேன். போன் பண்ணிட்டு பேரு சொல்ல மாட்டேன்னா எப்படி? ரிஸீவ்ட் கால்ல பாருங்க என்று இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு சமையலறைக்குப் போய்விட்டார். 

அந்த நம்பரை அழுத்தி, கால் போய்க்கொண்டிருக்க குழப்பத்தோடு இருக்கையில், நண்பர் எடுத்து ‘சார்! நாந்தான் சார் ஃபோன் பண்ணேன். இந்த மாதிரி இடுகையெல்லாம் கார்த்தால போடாதங்கோ சார். படிக்கறப்பவே கலக்கமாப் போச்சு, என்று ஃபீலிங்க்ஸோடு பேச ஆரம்பித்தார். எனக்கு ஒரு புறம் சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தாலும், இவ்வளவு ஆதுரத்துடன் பேசும்போது எப்படிச் சிரிப்பது என்று அடக்கிக் கொண்டேன்.

பேசி முடித்ததும் தங்கமணியிடம், ஆமாம் பேரு என்ன சொன்னாரு என்றேன். அட! பேரு சொல்ல மாட்டேன்னாருன்னு திரும்ப திரும்ப சொல்றேன், பேரு என்ன சொன்னாருன்னு கேட்டா என்ன பண்ண என்று எகிறினார். பேர் சொல்ல மாட்டேன்னாரா, பெயர் சொல்ல விருப்பமில்லைன்னாரா என்றேன். சற்றும் அசராமல் எதானா என்ன? ரெண்டும் ஒன்னுதானே என்று குழம்புக்கு தாளிக்க ஆரம்பித்தார். அடக்கி வைத்த சிரிப்பெல்லாம் அடித்துக் கொண்டுவர ஒரு பாட்டம் சிரித்துத் தீர்த்துவிட்டு, அது அவர் ப்ளாகில் எழுதும் பெயர் என்று விளக்கி, நான் வானம்பாடிகள் என்ற பெயரில் எழுதுவதைச் சொன்னபோது பார்த்த பார்வையிருக்கிறதே! 
~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, September 12, 2010

கேரக்டர் - சங்கர்

வாழ்க்கையில் சில நட்பூக்கள் பூக்கின்றன ப்ரயத்தனமின்றி. ஆம்! இரவில் பார்த்தபடி கண்ணுறங்கிய பூந்தொட்டியில், காலையில் கண்விழிக்கையில் சின்னதாய் ஒரு அரும்பு, இலைகளுக்கிடையே எட்டிப் பார்த்து சிரிக்குமே அப்படி. பார்த்துக் கொண்டிருக்கையிலே, மெதுவே விரிந்து மலர்ந்து அறை முழுதும் வாசனை நிரப்புமே! அப்படி மனம் நிரப்பும் நட்பூக்கள் அபூர்வம்.

பள்ளியிலிருந்தும், கல்லூரியிலிருந்தும் பிடுங்கி நடப்பட்ட பயிர்களாக வயிற்றுப்பாட்டுக்கு வேலைக்குச் சேர்ந்த இளசுகளின் உலகம். அலுவலகம், அந்த கலாச்சாரம் எல்லாம் உடைத்தபடி, சிற்றெறும்பாய் ஓடி ஓடி நாள் முழுதுக்குமான வேலையை சில மணிகளில் முடித்து, அரட்டையும், கேலியுமாய் ஒரு புது உலகம் அது.

இந்த உலகத்தில், வெளுத்த தலையும், சலவை வேட்டியும், எம்.ஜி.ஆர் போல் சுருட்டி மடித்து முண்டாவுக்கு ஏற்றிய வெள்ளைச் சட்டையும், வெயிலில் உழைத்து உழைத்து மஞ்சளும் சிகப்புமாய் விழியும், பீடிக் கறையேறிய பற்களும், மூன்று பெண்களுக்குத் தகப்பனுமான, கன்னங்கரேலென்ற அந்த வெள்ளந்தி மனிதன் வாய் கொள்ளாச் சிரிப்புடன் என் வாழ்வில் பூத்தான்.

நீதான் பாலாசியா? ஒன்னட்ட ஒக்கார சொன்னாய அந்த சாரு, என்று அடுத்ததாக ஏதோ ஜனாதிபதி சந்திப்பு மாதிரி கைகுலுக்க நீட்டியதும் வலது கையில் கை பற்றி இடதுகையால் பொத்தியபோது, சுருக்கென்ற வலியோடு கண் அவரின் இடது கையில் கட்டைவிரல் காணோம் என்பதை உணர்ந்தது.

எம்பேரு சங்கரு. ஊரு மய்ரப்பக்கம் மேலூரு. பதினாலு வயசுல பொளுது சாய இருட்டுல ஆளு தெரியாம எங்கப்பய்ண்ட்டயே கங்கு கேட்டுபுட்டேன். ஊரு  புல்லா ஓட ஓட புளிய மிளாறுல வீசிப்புட்டான். தாளி, தூங்கையில இடுப்புச் சுருக்குல ஆட்டய போட்டு முப்பது ரூவாயோட திருட்டு ரயிலேறி மட்ராசு வந்துட்டேன். ஊர்ல சலவைத் தொளிலு. இங்கிட்டு வந்து ஒரு அண்ணன் டோபிகானால (வண்ணாந்துறை) சேர்த்து விட்டுச்சி.

நம்மூர்க்கார பாயி ஒலுத்தரு இங்கிட்டு பார்ஸல் ஆபீசுல கேசுவல் லேபரா இருந்தாரு. அவரு அங்கிட்டு சேர்த்து விட்டு, அப்புறம் பார்ஸல் ஆபிசில வேல பார்த்து, சண்டிங் அஸ்ஸண்டா இருக்கையில, கப்ளிங் மாட்டக்குள்ள பிகிலூதிட்டான். கட்டை விரல் போச்சி. மெடிக்கல் அன்பிட்ல இங்கிட்டு வேல குடுத்தாக. சாரு ஒன்னட்ட இருக்க சொன்னாரு என்று சில வரிகளில் நெஞ்சை நிறைத்தான்.

பள்ளிக்கூடம் போனதில்லை. அழுக்கெடுக்க, ஆற்றங்கரைக்குப் போக, வெள்ளாவிப்பானையில் துணிசுத்த, என்று படித்து, கஞ்சி போட்ட வேட்டி, புடவை,  முனையிழுத்து நாலாய் மடித்து ஒரு முறை, எட்டாய் மடித்து ஒரு முறை பெட்டி போட்டால் ஒரு சின்ன சுருக்கமின்றி விடைத்துக் கொள்ளும்படி இஸ்திரி போடும் திறனில் பட்டம் இருந்தால் இவனுக்குத்தான் என்று முன்னேறினான். ராயபுரத்தில் ஒரு சின்ன சலவைக்கடை இருந்தது. ரயில்வேயில் வேலைக்குப் போகும் நேரத்தில் வைப்பு கடையில் இருப்பாய்ங்க என்றவருக்கு, அதை வைஃப் என்று சொல்ல வைக்க நான் பட்ட பாடு இருக்கிறதே..ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. பி.எஃப் என்பதை ஃபி.எப் என்று சொல்ல முடிபவருக்கு வைஃப் என்று சொல்ல வராத மாயம் என்னவோ?

மூனும் பொட்டப் புள்ளையலாப் போயிருச்சி, என்று வருந்துவார். யோவ்! எல்லாம் போதும். இப்போதே கருத்தடை செய்தால் ஒரு இன்கிரிமெண்டாவது வரும்யா என்றால், மனுசனுக்கு காசா மிக்கியம், நம்ம பேரு சொல்ல ஒரு ஆம்பளபுள்ள வேணும்யா என்பார். அட சை! எழுதி வைக்க ரெண்டு கழுதக்குட்டி கூட சொந்தமில்ல, என்னமோ திருமலை நாயகர் மகாலுக்கு வாரிசு இல்லாத மாதிரி பேச்சப் பாருய்யா என்றால் கண்ணில் தண்ணீர்வர சிரிப்பார். எப்படியோ, சாமியாடியும், சைனீஸ் காலண்டரும், சைக்கிள் முறையும் கூட்டாய் அடுத்தது ஆணென்று சதி செய்து இன்னும் ரெண்டு பெண்களுக்குத் தகப்பனாக்கியது.

ஏபிசிடி தெரியாது. எழுதப் படிக்கத் தெரியாது. பார்சல் ஆஃபீஸில், ஊர் ஊராகச் செல்ல குவிந்திருக்கும் பார்சலை வகை வாரியாக பிரித்து, எழுத்தே தெரியாத ஒரு ஆள், ரயில் நிலைய சங்கேதத்தை ஒரு படம் போல் பார்த்து, இது மதுரை, இது திருச்சி, இது ஜான்ஸி, இது தில்லி என பிரித்து லோட் செய்ய முடியும் என்றால் நம்புவீர்களா? நம்ம சங்கர் அதில் கில்லாடி. ‘

சங்கர்’ எனக் கிறுக்கி தமிழில் கையெழுத்து போட்டவரை, படாதபாடுபட்டு, ஆங்கிலத்தில் ‘Sankar' என்று எழுதக் கத்துக் கொடுத்தால், கன சிரத்தையாக இம்போசிஷன் மாதிரி எழுதி எழுதிப் பழகி, ‘SAKNAR' என்று கையெழுத்துப் போட்டு, இது தப்புதானே! இது அங்கிட்டு, அது இங்கிட்டு வரணும்ல என்று சிரித்து ‘SANKAR' என்று பாராமல் எழுதியதை, மடித்து வைத்து வீட்டில் அத்தனை பேரிடமும் காட்டி அசத்திவிட்டான்.

வட்டம் போட்ட முத்திரைக்குள் தேதியிருந்து, நம்பர் இருந்தால் அது பாலிசி லெட்டர். மத்தபடி வேறே ஸ்டேம்ப் இருந்தால் அது கரெஸ்பாண்டென்ஸ். 23ம் நம்பர் இருந்தா, வீட்டு லோன், 483ல ஆரம்பிச்சா தொழிலாளர் விஷயம் என்று சரியான கோப்பு எடுக்கத் தெரிந்த மிகத் திறமையான  எழுத்தறிவில்லாத ரிக்கார்ட் சார்ட்டர் இவர்.

ஏகலைவனைக் கேனையாக்குவான் என் சங்கர். ஆம்! கட்டை விரல்  இல்லைதான். அதனாலென்ன? வேட்டி மடிப்பிலிருந்து கனேஷ் பீடி கட்டை எடுத்து, சுண்டுவிரலால் ஒற்றை பீடியை மேலெழுப்பி, பல்லால் கடித்து நாவால் ஓரம்தள்ளி, தீப்பெட்டியில் இடது கை ஆள்காட்டி,மற்றும் நடுவிரலில் பிடித்த பெட்டியில் உரசி, எந்தக் காற்றிலும் மறுகை துணையின்று நான்கு விரல் மறைப்பில் பீடி கொளுத்த முடியும்.

ஐந்தரை கிலோ எடை இஸ்திரி பெட்டியை, கங்கு உண்டாக்கி, கொக்கி போல் நான்கு விரலில் பிடித்து, தூளிபோல் ஆட்டி தணலாக்கி, நான்கு விரல் மடித்து உள்ளங்கையோடு இறுக்கி, ஓட்ட ஆரம்பித்தால், மூட்டைத் துணிகளை நீட்டாக மடித்து அடுக்குதல் அப்படி ஒரு வேகத்தில் நடக்கும். நம்மால் ஒரு அரைஅடி அந்தப் பெட்டியை நகர்த்தவியலாது.

சம்பாதிப்பது, சீட்டு கட்டி ஏமாறுவது, புறம்போக்கு நிலத்தை மடக்கப் போகிறேன், வெறும் அன்ச்ச்ச்சாயிரம் ரூவா குடுத்தா பீம நோட்டீசு. பாயி எல்லாம் பேசி முடிச்சிட்டாரு. நீயும் ஒரு மனைய மடக்கி கொட்டாய போட்டு வைக்கிறியா, நான் பார்த்துக்குறேன் என்று வருசா வருசம் மழைக்கு ஏமாறுவது ஒரு நேர்த்திக் கடன் மாதிரி.

எந்தம்பி எந்தம்பி என்று கொள்ளைப் பாசம். போதையில் யார் தம்பி என்பதில் எட்ஜாக்கும் சங்கருக்கும் சண்டை தவறாமல் வரும். நீ சொல்லு பாலு என்று மல்லுக்கு நின்று, ஒன்றும் சொல்லமாட்டாமல் இருக்க ஆளுக்கு ஒரு பக்கம் கன்னத்தில் இடித்து ஒன்னய போய் தம்பின்னு சொன்னம்பாரு என்று கோவித்துக் கொண்டு போவது வாடிக்கை. அடுத்த நாள் காலையில் எட்ஜா கையில் என் காதும் சங்கர் கையில் என் கையும் சிக்கித்தவிக்கும்.

ஒழுக ஒழுக எண்ணெய் தடவி உருண்டாலும் ஒட்டுற மணல்த்தான் ஒட்டும் என்ற சொலவடை பொய்யாகிவிடக் கூடாதே! சக்கைபோடு போட்டு வந்த எக்ஸ்போர்ட் துணி பிஸினஸ் படுத்துவிட, இஸ்திரித் தொழிலில் பெரிய வருமானமில்லாமல் போனது. எப்படியோ முட்டி மோதி இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து கடனில் குடும்பம் நடத்துவதே பெரும்பாடானது. போதாத குறைக்கு, ஒரு சண்டியன், கிட்டத்தட்ட பாதிக்கும் கம்மியான வயதில் இருந்த மூன்றாவது பெண்ணை பெண்கேட்டு, அதிர்ந்து போய் மறுக்க, என்னைக்குன்னாலும் தூக்கிறுவேன் என்ற சபதம் கடையை மூடி தெருவுக்கு அனுப்பியது.

கை வண்டி தயார் செய்ய வைத்து, எங்கள் ஏரியாவில் புதிதாக முளைத்த அடுக்கு வீடுகளில் வாடிக்கை பிடித்து கொடுத்து சனி ஞாயிறுகளில் மட்டும் ஓரளவு நல்ல வருமானம் வரத்தொடங்கியது. நெகிழ்ந்த தருணங்களில், தாளி என்னைக்குண்டாலும் சரி, ஒன்னய ஏ.சி.ரூம்புல பாக்காம சாவமாட்டம்பா. ங்காரு! வெளீய நிண்டு அய்யா இருக்காராண்டெல்லாம் கேட்டுருய்க்கமாட்டன். நீ மீட்டிங்லதான் இரு, ரெட் லைட் போட்டு வேணாலும் இரு. எந்த மசுரான் என்னய தடுப்பான் பார்க்கலாம் என்பார்.

கலங்கிய நேரங்களில், கை பிடித்து குழந்தை மாதிரி அழுதபடி, பாலாசி ஒனக்கே தெரியும்லப்பா. இருக்கையில புடுங்கிதிங்க வருவாய்ங்க ஒரவுன்னு. நாளபின்ன எனக்கு ஏதும் ஆச்சின்னா எனக்கு எந்தம்பியிருக்கான்னு கண்ண மூடுவேன். அது ஒரு பச்ச மண்ணு. ஒரு எளவும் தெரியாது. நீதான் பார்க்கணும் சொல்லிபுட்டேன் என்பார்.

எந்தம்பி எப்பவும் கர்ட்டா சொல்லுவாப்பல என்று நம்பிய அந்த ஜீவனை, அதெல்லாம் ஒன்னும் ஆவாது சங்கர். நீ ரிட்டயர் ஆகி பாஸ் வாங்க வரும்போது என்னை பார்க்கணும்னு வந்தாச் சரி என்று சொல்லிச் சிரிப்பதை பொய்யாக்க விதிக்கு என்ன வெறியோ.

ஒரு ஞாயிறு காலை விடியலில், மருமகன் வந்து மாமா போய்ட்டாங்க என்றபோது ஏதோ ஒரு அவயம் பிடுங்கப்பட்டது போன்றதொரு உணர்வு. சொன்னாற்போல் சாவு எடுக்கும் முன்னரே, அண்ணன் வகையறா, மைத்துனன் வகையறா என்று எத்தனை தேறும் என்ற விசாரிப்பில் ஓரம் கட்ட,  பெண்ணுக்குத்தான் வேலை என்றவர்களை போக்கு காட்டி, அவர் மனைவிக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு வேலைக்கு வழி செய்யத்தான் வாய்த்தது.

வாழ்ந்த நாளில் உழைத்தும் கடனே வரமாய் இருந்த குடும்பம்,  இறந்த பிறகு, வேலை, பென்ஷன் என்று வருமானம் நிலைப்பட, செட்டில்மெண்டில் கை வைக்காது மகள்களுக்குத் திருமணம் முடித்து எப்போதாவது தேடி வந்து உனக்கு பேரம் பொறந்துருக்கான் சார். சாந்தி ஊட்டுகாரரு கேட்டுட்டே இருப்பாரு மாமா ஏன் வரமாட்டங்குறாரு என்றெல்லாம் சொல்லும்போது, பட்டாப்பட்டி அண்டர்வேர் லேசாகத் தெரியும் மடிப்புக் கலையாத வேட்டியுடன், மடித்து விட்ட சட்டையும், உதட்டோரம் பல்லால் கடித்த பீடியுடன் வலக்கையில் என் கை பொத்தி இடக்கை நான்கு விரல்களில் என் தோள் இறுகப்பற்றி ‘எந்தம்பி’ என்று சிரிப்பானோ சங்கர்?

~~~~~~~~~~~~~~~~~

Thursday, September 9, 2010

கம்ப்யூட்டர் அல்லது சொ.கா.சூ...

(டிஸ்கி: கணினியா, கனிணியா, கணிணியா என்ற பல குழப்பங்கள் இருப்பதால் வாசகரின் வசதிக்காக கம்ப்யூட்டர் என்ற தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்)

கம்ப்யூட்டருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு 1975ம் ஆண்டு எதிர்பாராமல் நடை பெற்றது. அதுவும் இந்தியாவிலேயே முதல் முதல் பயன்பாட்டுக்கு வந்த IBM மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டர், என்பதெல்லாம் அடுத்தடுத்தான எமது சந்திப்புகளின் போது சேகரித்த தகவல். என் அலுவலகத்தில் ராபர்ட் கிளைவ் காலத்து சுவர்க்கடிகாரம் சாவி கொடுக்கப்படாததால், நின்று விட்டிருந்தது. வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாள் அது. அனெக்ஸ் பில்டிங் பக்கத்தால போனா ஒரு சந்து வரும். அது பக்கத்துல கடிகார மெகானிக் இருப்பார். போய் கம்ப்ளெயிண்ட் கொடு என்பது எனக்கிடப்பட்ட பணி.

கம்ப்யூட்டருக்கும் எனக்கும் விதி போட்டிருந்த முடிச்சு அப்போது இறுகி, முதல் சந்தில் நுழைந்தால் ஒரு கதவு இருந்தது. தள்ளித் திறந்தவுடன் நடுக்கும் குளிரில், ஒரு இயந்திரத்தில் ஒருவர் கட்டுக் கட்டாய் அட்டைகளை வைக்க, அது மாவுமில் சப்தத்துடன் பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தது. அடுத்து ஒரு கண்ணாடி அறையில் கதவில்லாத பீரோ மாதிரி சில, கண்ணாடிப் பெட்டியில் பெரிய நாடாக்கள் விர்ர்ர்ர்ரென சுழல்வதும், நிற்பதுமாய் கனவுலகாய் இழுத்தது. உள்ளிருந்த ஒருவர் செருப்பை அவிழ்த்துவிட்டு வர சைகை காட்ட, தூக்கத்தில் நடப்பவன்போல், கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன். 

என்ன வேண்டும் என்றவரிடம், குளிரில் பற்கள் தந்தியடிக்க, கடிகாரம் ஓடவில்லை சாவி கொடுக்க வேண்டும் என்று சொன்னதும்  அவர் திகைத்துப் போய் நிற்பதும், விர்ரென பறந்து கொண்டிருந்த நாடா சக்கென நிற்பதும் ஒரு சேர நடந்தது. செவ்வாய்கிரகத்து ஜீவராசியா, கீழ்ப்பாக்கத்து கேசா என்ற குழப்பத்துடனே நிதானமாகப் பார்த்து, சரியான வழிகாட்டிவிட்டு தன் வேலைக்கு திரும்பவும், கம்ப்யூட்டர் நாடா மீண்டும் சுழலவும் மீண்டும் ஒரு சேர நடந்தது. 

முதல் மாத சம்பளத்தில் பிராவிடண்ட் ஃபண்ட் நூறு ரூபாய் பிடித்துக் கொள்ள எழுதிக் கொடுத்து விட்டு காத்திருக்க சம்பளப் பட்டியலில் அது ஒரு ரூபாய் பிடித்திருந்தது. கணக்கரிடம் கேட்டபோது  ‘அது கம்ப்யூட்டர் மிஸ்டேக்’ அடுத்த மாதம் சரி செய்து விடலாம் என்றார். நூறை ஒன்றாக்குவதற்கு எதற்கு கம்ப்யூட்டர் என்ற குழப்பத்துடனே விசாரித்ததில், கணக்கர் பைசாவையும் சேர்த்து 10000 என்று கொடுப்பதற்கு பதில் 100 என்றே கொடுத்ததால் கடைசி இரண்டு இலக்கத்தை அது பைசாவாக்கிய துரோகம் புலப்பட்டது. 

சில காலம் கழித்து ரிசர்வேஷனிலும் கம்ப்யூட்டர் வந்து சேர்ந்தது. அதற்கு முன், தடி தடியான ரிஜிஸ்டரில் விண்ணப்பத்தைப் பார்த்து சீட் இருந்தால் சொல்லி, இல்லையெனில் தேதி மாற்றி என்பதோடு சுலபமாக முடியும். அதைவிட, இந்த இந்த ஊர்களுக்கு என்று அளவாக கவுண்டர் இருக்கும். வரிசையில் நின்று கொண்டிருக்க, திடீரென 5ம் எண் கவுண்டரில் இருப்பவர்கள் 32ம் எண் கவுண்டருக்கு வரிசை கலையாமல் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு முடியுமுன்னரே ஓடிப்போய், கடைசியில் இருந்த ஆள் முதல் நபராக பதிவது மரத்துப் போன காலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் ஒரு உற்சாகம் கிடைக்கும். 

அதை ஒழிப்பதற்காகவே கம்ப்யூட்டர் வந்து தொலைய, எந்த கவுண்டரில் வேண்டுமானாலும் பதியலாம் என்பது கேட்க நன்றாக இருந்தாலும், 15ம் தேதி ராக்ஃபோர்டில் இடமில்லையெனில் 14க்கோ 16க்கோ இருக்கிறதா என்பதோடு முடிந்த விஷயம், கம்ப்யூட்டர் வந்ததும், ராமேஸ்வரத்துல பாருங்க, பாண்டியன்ல பாருங்க என்று அதிக நேரம் எடுத்தது. சரியாக என் முறை வருகையில் ஒன்று ப்ரிண்டரோ, இல்லை நெட்வொர்க்கோ சதி செய்யும். 

ஆசுபத்திரியில் கம்ப்யூட்டர் பதிவு வந்து தொலைத்து புறப்பிணியாளர் சீட்டுக்கு அட்டையை நீட்டினால் வாசுதேவமூர்த்தி பாலாஜியை வாசுதேவமூ என்று அடித்துக் கொடுக்கும். அட்டண்டர் வாசுதேவமூ என்று அழைக்கையில் சாவலாம் போல் இருக்கும். எத்தனை பெரிய இலக்கமானாலும் கூட்டத்தெரிந்த கம்ப்யூட்டராய் இருந்தென்ன. பெயரை மட்டும் 15 எழுத்துக்கு மேல் படிக்கமாட்டேன் என்ற பிடிவாதம் என்னத்துக்கு?

ஒரு வேளை நான் அதன்பால் நாட்டம் கொள்ளவில்லை என்ற கோவமோ என்னவோ என்று சுயமாக டாஸ், ஃபாக்ஸ்ப்ரோ என்று பல மொழிகளில் பேசிப் பழகி, நல்ல புரிதலுடன் இருந்த காலத்தில், விடுமுறைக் கணக்குக்கு ஒரு ப்ரோக்ராம் எழுதி, ஒவ்வொரு ஜனவரி, ஜூலைக்கும் கணக்கிலிருக்கும் விடுப்போடு 15 நாள் கூட்ட வேண்டும். மொத்தக் கணக்கு 195 நாட்களுக்கு மிகாமல் பார்த்துக் கொண்டு 180க்குள் இருந்தால் அந்த எண்ணிக்கை, அதற்கு மேல் என்றால் 180+ வித்தியாசம், உச்சமாக 195 நாட்கள் இருப்பின் 180+15 என்று காட்டவேண்டும் என்று விபரமாக சொல்லிக் கொடுத்தேன். பல சோதனைகளுக்குப் பின், டெமோக்கு அதிகாரியிடம் காட்ட அந்தப் பாவி மனுஷன் 180 நாள் ஆரம்பக் கணக்காகக் கொடுத்துத் தொலைய கம்ப்யூட்டர் இருப்பை பூஜ்ஜியமாகக் காட்டி மானத்தை வாங்கியது.

அழமாட்டாக் குறையாக அதனோடு கெஞ்சி கொஞ்சி என்ன புரியவில்லை உனக்கு என்றால் பதில் சொன்னால்தானே? பிறகு ஒரு வழியாக, ஓ! 180க்கு கீழேயும், அதற்கு மேலேயும் இருந்தால் இப்படிச் செய் என்று சொல்லிவிட்டு 180ஆக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. சாரி! சாரி! என்று மன்னிப்புக் கேட்டுத் தொலைத்தேன். இது கூட புரியாத ஒரு கம்ப்யூட்டரை ஏன் எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்று இன்னும் புரியவில்லை.

அய்யா! ஒரு பத்திரம் பதிய வேண்டுமானால், பதிவாளர் அலுவலக மரத்தடியில் ட்ரங்க் பெட்டி வைத்துக் கொண்டு அல்லது மேசையில் டைப்ரைட்டர் வைத்துக் கொண்டிருப்பவரிடம் போனால், அளவான ஒரு தொகை பேசி முகூர்த்த நேரம் மாறாமல் பதிந்து, ஓரிரு நாளில் பத்திரம் வாங்க முடிந்தது. இப்போது பாருங்கள், அங்கேயும் சனியன் கம்ப்யூட்டர் வந்து தொலைத்துவிட்டது. பக்கத்துக்கு ஒரு ரூபாய் என்று ஜெராக்ஸ் எடுத்த பத்திரத்தை, ஐம்பது ரூபாய் கொடுத்தால், பதிவேற்றி இரண்டு நாளில் கொடுத்த காலம் போய், இருனூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தாலும் ஐந்து நாட்கள் கழித்துதான் தருகிறார்கள். கேட்டால், ஸ்கேனிங் செய்து கம்ப்யூட்டரில் நம்பர் கொடுக்க வேண்டுமாம். ஏசியா வச்சிக்கிறானுங்கோ? ரெண்டு டாக்குமெண்ட் ஸ்கேன் செஞ்சா 10 நிமிசம் கூலாவணும். என்ன இன்னா பண்ண சொல்ற என்ற பதிலுக்கு எரிச்சல் வராமல் என்ன செய்யும்? எவன் கேட்டான் இந்த கம்ப்யூட்டரை?

உழைத்து ஓடாய்த்தேய்ந்து ஒன்னேகாலணா வருமானத்துக்கு பைசா சுத்தமாக வருமான வரி பிடித்துத் தொலைக்கிறான். அமிதாப் பச்சன் 500 கோடி வரி பாக்கி, கும்பானி ஆயிரம்கோடி வரி பாக்கி என்று பாராளுமன்றத்தில் சொல்லிவிட்டு வாய் நிறைய புன்னகையும் நட்புமாய் கை குலுக்கும் நிதி மந்திரிக்கு என்னைப் பார்த்தால் மட்டும் என்ன இளக்காரம்?  ஆன்லைனில் வரி விபரங்களைப் பதியலாம் என்று விளம்பரம் படித்து, அப்பாடா, இந்த கம்ப்யூட்டர் இழவால் குறைந்தது அலைச்சலாவது மிச்சம் என்று கட்டம் கட்டமாக நிரப்பி சேமித்துக் கொள் என்ற பொத்தானை அழுத்தினால், பாழாப் போன கம்ப்யூட்டர் அதன் புத்தியைக் காட்டி பழி தீர்த்துச் சாவடித்தது.

ஆம்! ப்ரிண்டரை தயாராக வைத்துக் கொண்டு, ப்ரிண்ட் எடுத்து, அதை தபால் மூலமோ, நேரடியாகவோ கொண்டு வந்து ஒப்புச்சீட்டு பெற்றாலொழிய, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக ஒப்புக் கொள்ளப்படமாட்டாதாம். இந்த இழவுக்கு, கையால் நிரப்பி நேரில் கொண்டு போய் கொடுக்க மாட்டேனா?

கடவுச் சீட்டு வாங்க அடிபிடி சண்டை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் ஆன்லைனில் உங்களுக்குச் சவுகரியமான தேதியில் நேரத்தில் வரலாம் என்று ஆசை வார்த்தைக்கு மயங்கி, எல்லாத் தகவலும் கொடுத்து, தேதி, நேரம் முடிவு செய்து, எல்லா ஆவணத்துடனும் போய் நின்றால், அலசி ஆராய்ந்து அது நொட்டை, இது நொள்ளை, அதைக் கொண்டு வா, இதைக் கொண்டுவா என்று அலைக்கழிப்பதும், ஒன்னுமே இல்லாவிடினும், போலீசுக்கு வெரிஃபிகேஷன் என்ற பெயரில் மாசக் கணக்காவதும் மாறவேயில்லை.

40 கே.பி. இணைப்போடு ஒரு மின்னஞ்சல் செய்தால், இழு இழு என்று இழுத்து பிழை காட்டுகிறது. அனுப்பிவிட்டு தகவல் சொன்னால் எதிராளி வரலையே என்று அலறுகிறார். பஸ்ஸில், ட்விட்டரில் தகவல் போட்டால் கண்ணாமூச்சி ஆடுகிறது. 4 ஜி.பி டவுன்லோட் செய்து கொண்டிருக்க 3.99ல் கனெக்‌ஷன் போச்சு என்று மீண்டும் ஆரம்பத்திலிருந்து வந்து பில்லை ஏத்தி விடுகிறது. 

பேயைக் கட்டிக் கொண்டு புளியமரம் ஏற மறுக்க முடியுமா என்று அத்தனையும் சகித்து, இப்படி மொக்கைப் பதிவைப் போட்டு ஆற்றிக் கொள்ளலாம் என்று தமிழ்மணத்தில் இணைத்தால் சாணி மாதிரி அப்படியே  ‘அனுப்பு’ என்று நிற்கிறது. தமிழ்மணம் சரியாகச் சேர்த்தாயிற்று என்று அலறினாலும், பிடிவாதமாக அனுப்புவிலேயே நிற்கிறது. ஒரு வழியாக கட்டை விரல் தெரிந்தால், பட்டி மேலே இருந்தால் ஓட்டு போட விடமாட்டேன,  இண்டிலி கூட ஜோடியா இருந்தால் எடுப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது.

ஹூம். பார்க்கலாம். என்றைக்காவது கம்ப்யூட்டர் நாம் சொன்னதைக் கேட்காமலா போகும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~

Tuesday, September 7, 2010

மத்தாப் பூ..,

கருப்பன் கதை

கருப்பா கருப்பான்னு
கக்கத்துலயே சுமந்து
காடு கரடு மேயவிட்டு
காலோய விளையாடி
காணமுன்னு பதறித் தேடி
கட்டி கூட போடாம
கனவு மாதிரித்தான் வாழ்க்கை

கருப்பசாமி கோவிலில
கதம்ப மாலை போட்டு
கால் மாலை மேயக்குள்ள
கத்தி மினிமினுக்க
கருப்பனாய்ப் போனவன்
கறியாய் மாறிப் போனான்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிராமத்தை விட்டு நகரத்துக்கு வந்தவராம் அவர். பெற்றோரின் சொத்துக்கள் எல்லாம் விற்று பணமாக்கி வசதியான ஆளாய் இருந்தாராம். உறவுகள் எல்லாம் கிராமத்தில். கலியாணம் காது குத்துக்கு தன் தகுதிக்கேற்ப கால் சவரன் அரை சவரன் என்று பந்தாவாக மொய் எழுதுவாராம். 

காலம் பறக்க மகளுக்கு திருமணம் என்று கிராமத்துக்கு வந்தவர் இறுக்கமான முகத்துடன், பத்திரிகை வைத்துவிட்டு, உங்க வீட்டு விசேஷத்துக்கு நான் இத்தனை சவரன் போட்டிருக்கேன். இந்தாங்க லிஸ்டுன்னு அவங்கவங்களுக்கு அவர் எழுதின மொய் விவரங்களைக் கொடுத்து, தங்கம் விலை அதிகம்னு இருக்காதீங்க. நான் போட்டத திருப்பி போட்டு பொண்ணு கலியாணத்தை நடத்தி வைக்கணும்னு கராரா சொல்லிட்டு போயிட்டாராம்.

ஊர் கூடி பேசி, கலியாணத்தன்னைக்கு ஊர்ல இருந்து ஒரே ஆள் வந்து, ஊர் மொத்தத்துக்கும் அவர் போட்ட நகை கணக்கை கூட்டி, அதற்குச் சமமான எடையில் கொண்டு வந்த நகை பில்லோடு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் கூட போய் விட்டாராம்.

நல்ல மனுஷன். நீங்கல்லாம் வருவீங்கன்னு சாப்பாடு செஞ்ச காசு வீணாப் போச்சு. மருவாதியா அதையும் கொடுத்துட்டு போன்னு சொல்லாம விட்டாரே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

லண்டனில் ஒரு கர்ப்பிணிக்கு உடம்பு சுகமில்லை என்று, ஆம்புலன்ஸில் அழைத்து வர வழியிலியே குறைப் பிரசவமாம். 600 கிராம் எடையில் உள்ள குழந்தை, இங்குபேட்டர் வசதியில்லாமல் பிழைப்பது கடினம் என்பதாலும், மருத்துவ மனை செல்ல அரை மணி நேரத்துக்கும் மேல் என்பதாலும், தொப்புள் கொடியோடு, வண்டியில் இருந்த ப்ளாஸ்டிக் கவருக்குள் குழந்தையை வைத்து, இங்குபேட்டர் போல் பாதுகாத்து கொண்டு வந்திருக்கிறார் தாதி. அவரின் சமயோசிதத்தால் தாயும் குழந்தையும் சுகமாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எவ்வளவு பெருசா தேடி தேடி வீடு மாறினாலும், ரெண்டு நாளிலேயே முட்டி இடிபட்டு இன்னும் இன்னும்னு ஏங்கறதா இருக்கு. ங்கொய்யால மண்டைக்குள்ள இடமிருந்தா போரும்னு 330 சதுர அடியில என்னல்லாம் பண்ணி வச்சிருக்கு பயபுள்ள

Friday, September 3, 2010

கேரக்டர் - சீத்தாபதி.

சென்னை என்றாலே புறாக்கூண்டு வீடுகளும் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும். இந்தப் புறாக்கூண்டுக்கு சொந்தக்காரர்களான வீட்டுக்காரர்களில் பல பேருக்கு வாடகைதான் வருமானம் என்றாலும் குடித்தனக்காரர்களை அடிமையாகவே நடத்துவது இன்று வரை தொடரும் ஒரு கலாச்சாரம். பிடிக்கலைன்னா காலி பண்ணிட்டு போய்ட்டேயிரு என்ற ஒற்றை வார்த்தையில் எந்தக் குறையும் காணாமலே போய்விடும்.

வாசலிலிருந்தே இஞ்ச் கூட விடாமல் தொடங்கும் வரிசை வீடுகளைப் பார்த்து அயனாவரத்துக் குறுக்குச் சந்தொன்றில் கிட்டத்தட்ட மைதானம் போன்ற முன்புறமும் அதையடுத்த இரண்டு மாடி வீடுகளும் சுத்தமான சூழலும் ஏன் நாம இந்த வீட்டில் குடியில்லை என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதையும் விட, இனம் புரியாத ஒரு பிணைப்பாக அந்த வீட்டின் சொந்தக்காரரை பார்க்க நேரும்போது அவரின் ஸ்னேகமான, முகமெங்கும் விகசிக்கும் புன்னகையும், காலை வேளைகளில் அப்பாவின் விரல் பிடித்து பள்ளி செல்கையில் அவர்களுக்கிடையே பரிமாறும் ‘குட் மார்னிங்’குமே இந்த ஏக்கத்தை அப்பாவிடம் விண்ணப்பமாக்கத் துணிவைத் தந்தது.

பதினைந்து குடித்தனத்துக்கு மூன்று ட்ரை லெட்ரினும், மூன்று குளியலறையும் திடீரென ப்ரம்மாண்டமான குறைகளாகத் தெரிந்தன. எல்லாம் கூடி வந்த ஒரு நாளில், குட் மார்னிங் தாண்டி, வீடு காலியானா சொல்றீங்களா என்று அப்பா கேட்டதும், அடுத்த மாதம் ஒரு போர்ஷன் காலியாகுதுங்க. சின்ன இடம்தான். போதுமானால் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னதும், மாதத்துக்கு ஏன் முப்பது நாட்கள் என்று கோவம் வந்தது. 

காலியாகு முன்னரே கால நேரமின்றி வீடு பார்க்க ஆட்களை அழைத்து வருபவர்களிடையே ஒரு ஒழுக்கமாக காலியான பிறகே பார்க்கலாம், பிடித்திருந்தால் அட்வான்ஸ் இவ்வளவு, வாடகை இவ்வளவு, இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தாங்களே பத்து ரூபாய் வாடகை ஏற்றிக் கொடுக்க வேண்டும் போன்ற ஷரத்துகள் குடித்தனக்காரர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.

ஒல்லியான உடல்வாகு, கோதுமை நிறம், சுமாரான உயரம்,  வெள்ளையும் கருப்பும் கலந்த சுருள் சுருளான முடி, மிகச்சிறிய முகம், முகம் கொள்ளாச் சிரிப்பு,  ஒரு பெண்ணின் குரல் போன்ற மென்மையான குரலோடு நட்பாய், கண்டிப்பாய், பெண்களுக்கெல்லாம் கஸ்தூரி அப்பாவாக, ஆண்களுக்கு சாராக, எங்களுக்கெல்லாம் பெத்த நாநாவாக, கட்சித் தோழர்களுக்கு காம்ரேடாக இருந்தார்.  சீதாபதி என்ற அவர் பெயரை போஸ்ட்மேன் மட்டுமே சொல்லுவார்.

கரையற்ற நாலு முழவேட்டியும், வீட்டிலிருக்கையில் கை பனியனும், வெளியில் செல்வதானால் , வெள்ளை அரைக்கை மல் சட்டையும், தோளில் வெள்ளைக் கைத்துண்டும் எளிமையிலும் ஒரு தனி மரியாதை ஏற்படுத்தும். ஏனோ மிக உயரமான சைக்கிளில் சீட்டும் உயரமாகவே வைத்துக் கொண்டு, ஏரோப்ளேன் டயர் செருப்பு சைக்கிள் பெடல் ஆரம்பிக்கும் ஃப்ரேமில் வைத்து உந்தி உந்தி படக்கென ஒரு லாவகமாய் ஏறி அமர்ந்து வெகு நிதானமாக மிதிப்பார். பத்தடிக்கு ஒரு முறை வணக்கம் சொல்பவர்களுக்கு சலிக்காமல் வலது கையால் முழுமையான வணக்கம் சொல்லும் பாங்கே அழகு. 

காலை ஒரு முறை கட்சி ஆஃபீசுக்குப் போய் வந்து, குளித்து முடித்து, மனுக்கள், கட்சி சம்பந்தமான கடிதங்கள் என்று பரபரப்பாய்ப் போகும். அவருக்கேற்ற அமைதியான மனைவி. மதிய உணவு உண்டு, பத்திரிகைகள் படித்து, வெயில் தாழ தன் வாகனத்தில் கிளம்பி கட்சி ஆஃபிஸுக்குப் போனால் வர எட்டு மணியாகிவிடும். கட்சி மீட்டிங்குகளுக்கு கொடி ஒட்டுவது, போஸ்டர் அடித்துக் கொடுப்பது என்று எல்லாமும் செய்வார். 

ஊரில் மனைவியின் நிலத்திலிருந்து அரிசி, பருப்பு போன்றவை வந்துவிடும். அறுவடைக்கோ விதைப்புக்கோ தப்பித் தவறிக் கூட இவரை அனுப்ப மாட்டார்கள். சந்தையில் விற்காமல் அடிமாட்டு விலைக்கு கொடுப்பது, கூலி ஏற்றி விடுவது என்று அதகளம் பண்ணி விடுவார் என்ற பயம். 

தோழர்களின் சைக்கிள் ஊர்வலம் வெகு பிரசித்தி. இரயில்வேத் தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏதோ ஒரு கேட் மீட்டிங் நடந்தபடி இருக்கும். அதற்கான ஊர்வலங்கள் போராட்டங்களில், டக்கென ப்ரேக் பிடித்து கால் ஊன்ற முடியாத பேலன்சில், பெண்குரலில் லீடிங் வாய்சாக ஸ்லோகன் சொல்லிக் கொண்டு போகிறவர் பெத்தநாநா என்று சொல்லிக் கொள்வதில் அலாதி பெருமை எனக்கு. 

என் தந்தை இறந்து போன அதிகாலையில், அருகிலிருக்கும் ஒரே உறவான சித்தப்பாவின் வீட்டுக்கு ரிப்பேருக்கு இருந்த டாக்ஸியில் ஸ்டூல் போட்டு அவர் தம்பி ஓட்ட தரையில் மடியில் என்னைச் சாய்த்துக் கொண்டு கன்று குட்டிப் போல் தடவிக் கொடுத்தபடி கூட்டிச் சென்றது இப்போதும் நினைத்தால் சிலிர்க்கும். போஸ்ட் மாஸ்டர் என்பதால், உடனே வரவியலாது, ஆஃபீஸ் திறந்ததும் சாவி கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன் என்றவரை முறைத்தபடி, சற்றே வருத்தம் கலந்த சிரிப்போடு, வா நாயனா என்று தோள் பிடித்து அழைத்துக் கொண்டு, வருத்தத்தோடு இதர சொந்தங்களுக்கு தந்தி அடிக்க அழைத்துப் போனதும் அப்போது பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை.

வரும் பென்ஷனில் அந்த வாடகை மிக அதிகமென்ற நிலையில், காலி செய்வதாகச் சொன்னபோது, என் வீட்டில் இருந்து இப்படி ஒருத்தர் கஷ்டத்தோட காலி பண்ண மனசு இடம் கொடுக்கலைங்க. பாருங்க ஒரு முப்பது ரூபாய் கம்மி பண்ணி கொடுங்க. கொஞ்ச நாள் தானே. பையன் வேலைக்கு போன பிறகு, சேர்த்து வாங்கிட்டா போச்சு, என்னப்பா என்னும் ஒரு வீட்டுக்காரரை யாரும் கண்டிருக்க முடியாது. 

வேறு வழியின்றி, சின்ன இடமாகப் பார்த்துப் போய், வேலை கிடைத்து, திருமணமானபின், அவருடைய வருத்தம் போக்கவோ என்னவோ, கொஞ்சம் பெரிய வீடாக வேண்டும் என்று அவர் வீட்டிலேயே திரும்பவும் குடியிருக்க வாய்த்தது. பாழாய்ப் போன நாகரீக எழவு ஒட்டிக் கொண்டதோ என்னவோ, வாய் நிறைய பெத்த நாநாவென அழைக்கவிடாமல், சார் என்று அழைக்க நேர்ந்தது. 

அந்த வயதிலும், தொழிற்சங்க வேலைகள், கட்சி மீட்டிங்குகள் என்பதையும் தாண்டி, எந்தக் கட்சியானாலும் ஸ்னேகமாக மாற்றுக் கருத்துக்களைப் பேசுவதும், உட்குழு விவகாரத்தில் காம்ரேட் சொன்னால் கட்சித்தலையை மதிக்காதவர் கூட சுமுகமாகப் போவது கட்சி தாண்டி அவரின் செல்வாக்குக்கு சாட்சி.  நாட்கள் செல்ல, இன்னமும் பெரிய வீடு தேட வேண்டிய நிலையில் வருத்தத்துடனே போனாலும், வழியில் பார்க்கும் நேரமெல்லாம் ஃப்ரேமில் காலூன்றி குதித்து, வணங்கி விசாரிப்பார். 

இன்னமும் கட்சி, வேலைன்னு இருக்கீங்களா என்று ஒரு முறை கேட்டபோது, கண்ணு மூடுற வரைக்கும் அது இல்லாம போகுமாப்பா. போராட்டம் ஊர்வலம்னு போறதில்லை. நிதானமில்லாம போயிடுச்சி. மரியாதை போயிடுச்சி. விரோதிகளா பார்க்கறாங்க. பேசித் தீர்க்கக் கூடியதுக்கு கூட போராட்டம் ஆர்ப்பாட்டம்னு துடிக்கிறாங்க. எப்பவாவது ஒன்னு ரெண்டு மீட்டிங், மற்றபடி தேடி வரவங்களுக்கு உதவுறதுன்னு பொழுது போகுது என்றார். கட்சி ஆஃபீசுக்குப் போய் நண்பர்களைப் பார்த்து பேசிவிட்டு வந்து, சாப்பிட்டு அமர்ந்த கொஞ்ச நேரத்தில் ஹார்ட் அட்டாக்கில் போனவரை தேவதைகள் இருப்பின் ரெட் சல்யூட்டோடு தான் அழைத்துச் சென்றிருப்பார்களோ?
~~~~~~~~~~~~~~~