Tuesday, August 31, 2010

தனிமை




தனிமை
நரகமாகவும்
சொர்க்கமாகவும்

அழுகையாகவும்
சிரிப்பாகவும்

சாவாகவும்
வாழ்வாகவும்

வெயிலாகவும்
தண்ணிலவாகவும்

பிணியாகவும்
மருந்தாகவும்

சாபமாகவும்
வரமாகவும்

ஏதுமற்றதாயும்
எல்லாமுமாய்
இருக்கிறது

நானாக
நாமாக
இருக்கும்
தருணங்களில்...
~~~~~~~~~~~~~~~

Monday, August 30, 2010

மத்தாப் பூ...

இரயில்வேத்துறையில் அப்ரெண்டிஸ் சர்வீஸ் என்ற ஒன்றிருப்பதை பலரும் அறிவார்கள். அது தொழிற்பயிற்சி மட்டுமே, வேலை உத்தரவாதமில்லை என்பதும் அறிந்ததே. ஆனால் Special Class Railway Apprentices என்ற ஒரு பயிற்சி குறித்து பரவலாக அறிந்திருக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.

இது பி.யூ.சி/+2 படித்தவர்களுக்கான அனுமதித் தேர்வு. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஜமால்பூரிலுள்ள இந்திய இரயில்வே இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெகானிகல் அண்ட் எலக்ட்ரிகல் எஞ்சினீரிங் எனும் பயிற்சிக் கல்லூரியில் நான்காண்டு கடும் பயிற்சிக்குப் பிறகு Indian Railway Service of Mechanical Engineer பிரிவில் Class I அதிகாரியாக இரயில்வேயில் பணியில் சேரலாம். இந்தப் பயிற்சித் திட்டமானது பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ராஞ்சியின் செமஸ்டர் திட்டப்படி நடக்கும். 

பயிற்சிக்காலத்தில் கிட்டத்தட்ட மாதம் ரூ 12,000க்கும் அதிகமான ஸ்டைபண்ட், மருத்துவ உதவி, பாஸ் மற்றும் பி.டி.ஓ என்ற சலுகையும் பெறலாம். இதற்கான நுழைவுத் தேர்வு குறித்த தகவல் இங்கே 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


புறாக்கூண்டு போன்ற ஓர் ஒண்டுக் குடித்தனத்திலிருந்து, ஒரு நடுத்தர வர்க்கத்தினருக்கு ரெண்டு பெட்ரூம் அபார்ட்மெண்ட் என்பது கனவுலகம். கடனை உடனை வாங்கி, நகை நட்டை விற்றோ அடமானம் வைத்தோ ஓர் அளவான ஃப்ளாட் வாங்கலாம் என்று போனால், தங்க முலாம் பூசிய குழாய் (வருவது கடலிலிருந்து நேரடியான உப்புத் தண்ணீர்), க்ளோஸ்ட் லாஃப்ட், இன்ன பிற லக்சுரி அயிட்டங்களைச் சேர்த்து சதுர அடி ரூ 3000-4000 என்று ப்ளானில் பெரிய பங்களா மாதிரி தோற்றம் தரும் ஃப்ளாட்டை வாங்கி, குடியேறிய பின், ஒரு பெட்ரூம் ஸ்டோர் ரூம் ஆக மாற, பழையபடி புறாக்கூண்டு போலவே நெருக்கடியாய் அமைந்து விடும்.

சிலவோடு சிலவென்று இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி ஃபர்னிச்சர் என்று போனால், அசல் தேக்கு என்று ஏமாற்றி விற்கும் மரச் சாமான்களும், உரிந்து வரும் சீன ஃபர்னீச்சர்களும் ஏமாற்றக் காத்திருக்கும். இருக்கும் இடத்தை எவ்வளவு அழகாக, நேர்த்தியாக பயன்படுத்தி வித விதமான ஃபர்னிச்சர்களை உருவாக்கியிருக்கிறார்கள். நம்ம ஊரில் மட்டும் ஏன் இப்படி யோசிப்பதில்லை. அவ்வ்வ்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம்ம கவுண்டர் காந்தக் கண்ணழகி என்று அலப்பறை செய்யும் காட்சி கவனமிருக்கும்.லண்டனில் ஒரு அம்மணி நிஜமாகவே காந்தசக்தி கொண்ட உடல் வாகாம். சின்ன வயதிலிருந்து கடிகாரம் கூட ஓடாமல் கெட்டுப் போகுமாம். டி.வி., ம்யூசிக் ஸிஸ்டங்கள் கெட்டுப் போவது ஒரு புறம், கடை கண்ணிக்கு போனால், எடை போடும் எந்திரங்கள் ஆகியவை தாறுமாறாக அம்மணிக்கு எத்தனை சங்கடம். 45 நிமிடம் இந்த காந்த சக்தி இருக்குமாம். செம்பு, பித்தளை, இரும்பு எல்லாம் ஒட்டிக் கொள்ளுமாம். ஹூம். நமக்கு இந்த சக்தி இருந்தால் பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம். 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சினிமால ஹீரோவா வாரவங்க எல்லாம் நிஜத்தில அப்படி இருக்கணுமா என்ன? நாமளுந்தான் ப்ளாக் வெச்சிருக்கோம். எப்புடியெல்லாமோ பின்னூட்டம் வருது. வடிவேலு மாதிரி வந்தல்ல, அடிச்சியா போய்க்கேயிருன்னு நம்ம வேலைய பார்க்கிறோம்ல. இந்த அமிதாப்பு பதிவுல எவனோ டாஆஆர்ச்சர் பண்றான்னு சின்னப்புள்ளத்தனமா போலீசுக்கு போயிருக்காரு. ஹெ ஹேஹே..என்னதான்னாலும் நம்ம டமில் ப்ளாகர் மாதிரி வருமா..வீஈஈரய்ங்க நாம..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பேச்சே பாட்டுப் போலிருக்கும் மலையாள மொழியில் நான் ரசித்த நாடன் பாடல் எனும் நாட்டுப்புறப் பாடல். உழைத்துப் பிழைக்கும் ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்ய ஒருவன் வருவான் என ஆறுதலாக தோழியர் பாடி, காதில் கழுத்தில் கையில் காலில் நகையில்லாவிடினும், அழகில்லாவிடினும், உன் அழகான மனதை நாடி வருவான் என்று பாட, திருமணம் செய்ய வருபவனுக்கு காசு, பணம்தான் முக்கியம் என அந்தப் பெண் பாட மனதை ஏதோ செய்யும் பாடல். ஆடும் பெண்களின் உற்சாகம், பாடும் குரலின் அழகு..
அறிமுகப்படுத்திய மஹேசுக்கும் பகிர்ந்த ப்ரியாவுக்கும் நன்றி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி..
கடந்த வார நட்சத்திரப் பதிவராக வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவினருக்கும், பாராட்டி ஊக்குவித்த சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
__/\__

Saturday, August 28, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.2

இலங்கை அரசிற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் : மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாவார்

ஏம்பா! உங்கூர்ல இந்த நிரந்தர ஜனாதிபதின்னெல்லாம் சொல்லமாட்டிங்களா? அப்புடியாச்சும் ஊத்திக்கட்டுமே.
~~~~~~~~~~~~~~~~~~~~~
கிருஷ்ணன் தூது பயனுள்ளதா? : செண்பகத்தார் திறனாய்வுப் பார்வை

இந்த தூது கௌரவர் பக்கம். உசாரு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹக்கீம் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எமக்கு செய்யப்பட்ட துரோகம்: ரணில் ஆவேசம்

அட சை! சும்மாக் கிட! உங்கூர்ல இதுக்கு பேரு அரசியல்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சகோதர படுகொலைகள் காரணமாக புலிகளை தேசிய இயக்கமாக கருத முடியாது : டியூ குணசேகர

குடிமக்களை கொன்று குவித்தவர்களை அரசாங்கமாக கருதலாமோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வை முன்வைக்கவேண்டும்: டி.எம். சுவாமிநாதன்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! ராஜீவும் இல்லை ஜெயவர்த்தனாவும் இல்லை. தீர்வுக்கு எங்க்ய்யா போறது. பத்திரமா வெச்சிருக்க வேணாமா? ஒரு காப்பி கேளு குடுப்பாய்ங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரச்சினையை தீர்ப்பதை விட பிளவுகளை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தீவிரம்: சாடுகிறார் மனோ கணேசன்

அடக் கேனயே. நீங்க அடிச்சிகிட்டு செத்தா அவனுக்கு தீர்வுதானே. அது புரியாமத்தானே அடிச்சிட்டு சாவறீங்க. சாவடிக்கிறீங்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையில் தமிழர் மறுகுடியமர்வில் கவனம் செலுத்த வேண்டும்: டி.கே.ரங்கராஜன்

யாரோ பழைய பேப்பர கொடுத்துட்டாங்க. பார்க்காம படிச்சிட்டாரு. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது: எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தாளு கும்பகர்ணனா? அவன் கூட ஆறுமாசத்துல விழிப்பான். இவரு ஒன்னரை வருஷம் கழிச்சி சொல்றாரு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மீட்பு: இலங்கை ராணுவம்

அதெப்புடிடா ஆயுதம் மட்டும் கெடைக்குது. நீங்க கொன்னு போட்ட ஜனங்க எலும்பு கூட கிடைக்குதில்லை?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே இந்திய அரசின் கொள்கை: நாராயணசாமி

போனதெல்லாம் பொறந்து வரணுமோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் அல்ல: மத்திய அரசு

அப்ப எதுக்கு சம்பளம் குடுக்குறீய.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாமகவை காப்பாற்ற இளைஞர்களுக்கு ராமதாஸ் கோரிக்கை

டாக்டரே கைவிட்ட கேசை இளைஞர்கள் என்னாத்த மாத்துறது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னை கண்டு கலைஞருக்கு பயம்: நான் பெரிய குத்தூசி: விஜயகாந்த் பேச்சு

பின்ன! குரங்க தோள்ள ஏத்தினா பேன் பார்த்தாலும் பார்க்கும். காதுல மோண்டாலும் மோளும்னு சொலவடையிருக்கே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விஜயகாந்த்தின் வாக்கு வங்கி குறைகிறது: திருமாவளவன்

ஓ! இப்ப பேங்க் பேலன்ஸக்கூட ஓட்டா கன்வர்ட் பண்ணித்தான் பார்க்கறீங்களாய்யா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருப்பதி: வி.ஐ.பி. டிக்கெட்டுகளை குறைக்க முடிவு

அடப்பாவிகளா! வி.ஐ.பின்னு வந்தா போட்டு தள்ளிடப் போறீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கற்பழிப்பு சம்பவம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்: நீதிபதிகள் கருத்து

நடுக்காட்டில வச்சி நடந்துச்சு. சுத்திலும் 20 கி.மீக்கு ஜனங்களே கிடையாதுன்னு ஒரு வக்கீல் வாதாடினா விட்ற போறீங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோபாலபுரம் வீட்டில் விதிமீறல் எனக் கூறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கொடநாட்டுக்கு எதிர்வினையா? ப்ளாக்குகார பசங்கப்பா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆபரேஷன் சமோசா:2 தீவிரவாதிகள் கைது 

அடப்பாவிங்களா! டொமாடோ ஸாஸ் ஊத்தி சமோசா சாப்டா இப்புடி சொல்லீடுவாய்ங்களோ. சமோசா கேன்ஸேஏஏஏஏஏஏல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, August 26, 2010

கேடில் விழுச் செல்வம்..

எப்போதாவது சினிமா நோட்டீஸ் தரும் மாட்டு வண்டியும், ராலே சைக்கிள் வைத்திருந்த ரெண்டு பணக்கார மாமாக்கள் வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் மட்டுமே வண்டியோடிய சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டிலிருந்து, வாசல் படி தாண்டி கால் வைத்தாலே பத்திரம் எனப் பதறும் அளவுக்கு, சைக்கிளும், காரும், லாரியும் பறக்கும் வீதியொன்றுக்கு புலம் பெயர்ந்தபோது வயது எட்டு.  பீதியிலேயே நடந்து, வீதி கடந்து, பள்ளிக்குச் சென்று வந்து பழகி,  பராக்குப் பார்த்தபடி நடக்க ஆரம்பிக்க ஒரு வருடம் பிடித்ததெனக்கு.

அப்படிக் கடக்கையில் கண்டதுதான், கந்தன் டூஷன் நிலையம். 8க்கு 8 அடி ரூமில் நெருக்கியடித்தபடி உட்கார்ந்து, அறஞ்செய விரும்பு,அணில், ஆடு, இலை,எட்டோன் எட்டு, எண்ணிரண்டு பய்னாறு,நல்லார் ஒருவர் உளரேல்.... என்று கலந்தாங்கட்டியாகப் படித்துக் கொண்டிருப்பவர்களை ஒரு கண்ணாலும், வெளியில் போட்ட சேரில் அமர்ந்து வீதியை ஒரு கண்ணாலும் பார்த்துக் கொண்டு, நொச்சித் தழைக் குச்சியை எதிரில் இருந்த ஒன்னரைக்கு ரெண்டு டேபிளில் தட்டிக் கொண்டிருந்தார் புரேட் (Private) சார்.

அடுத்த நாள் பள்ளியில் நண்பனிடம் டூஷன் நிலையம் பற்றி கேட்டபோது தெரிந்து கொண்டதுதான் புரேட் சார் என்பது. அப்படி என்றால் என்ன என்று கேட்ட போது புரேட் தெரியாதாடா என்று கேட்ட த்வனியில் இருந்த எள்ளல் கூட புரியாத வெள்ளந்தியாய் இருந்தேன். புரேட் பற்றிய அறிவு அவன் மூலம் புரிந்தபோது, பள்ளி நேரம் தாண்டி அங்கு தனிப்பட்ட முறையில் பாடம் சொல்லித் தருவது புரிந்தது. கூடவே தானும் புரேட் படிப்பதாகவும், தன்னுடைய புரேட் மிகப் பிரசித்தமென்றும் சொன்னதோடு, காம்பஸ் விசிட்டுக்கும் அழைப்பு விடுத்தான்.

பள்ளி முடிந்து அவன் மீண்டும் என் வீதி முனையில் விட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன், 2 தெரு தள்ளி உள்ள அவன் புரேட் இஸ்கோலுக்கு போனபோது மணி வாத்தியார், வாசல் கூட்டி, நீர் தெளித்துக் கொண்டிருந்தார். நண்பன் வீட்டில் போய், பள்ளிப் பையை எறிந்து விட்டு, கை கால் கழுவி, துண்ணூறு வைத்துக் கொண்டு, தமிழ், கணக்கு புத்தகம், ட்யூஷன் நோட் புத்தகத்தோடு கிளம்பி புரேட்டுக்கு முன்னாடியே கழட்டிக் கொண்டு நேரா போய் சோத்தாங்கைக்கா திரும்பினா ரெண்டாத் தெருடா உன்னுது என்று ஓடிய போது திகைப்பாய் இருந்தது. 

ஆனாலும், கை கட்டிக் கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் ஆடிய படி, பாஞ்சோண் பாஞ்சு வாய்ப்பாடு சொல்லிக் கொண்டிருந்த அக்காவைத் தொடர்ந்து அத்தனை பேரும் பாஞ்சோண் பாஞ்சு சொல்வது ஒடிப்போய் உட்கார்ந்து பாஞ்சோண் பாஞ்சு சொல்லத் தோன்றியது. வீட்டுக்கு வந்து மெதுவே அம்மாவிடம், அம்மா நானும் புரேட்டுக்கு போறேன் என்றதும் திகைப்பூண்டை மிதித்தாற்போல் திகைத்து, அப்பாவிடம் போட்டுக் கொடுத்து, புரேட் என்பது முட்டாள்களுக்கானது என்று மனதில் விதைக்கப்பட்டது. 

கணக்கில் எண்பது வாங்கிய ஒரு டெஸ்டுக்காக, இவன் உருப்படமாட்டான், மானம் கெட்டு புரேட்டுக்கு போகட்டும் என்ற போது வேணாம் வேணாம் என்று கதறியது நன்றாய் நினைவிருக்கிறது. காலங்கள் உருண்டோட, என்ன ஐடியா? பையன ஐ.ஐ.டி கோச்சிங்ல போட்டிருக்கியா? இல்லைன்னா ப்ரைவேட் கோச்சிங்கா? மேத்ஸ் க்ரூப்னா அண்ணாநகர் வசதி. 10வது ஹால்ஃப் இயர்லி ப்ராக்ரஸ் வந்ததுமே போய் காண்பிச்சி பேர் பதிஞ்சிடு. 

மார்க்‌ஷீட் வந்ததும், நேர கொண்டுபோய் காட்டி, புக் பண்ணி விட வேண்டும். இல்லையெனில் வெயிட்டிங்லிஸ்ட், பரிந்துரை என அல்லாட வேண்டியிருக்கும் என்ற ட்யூஷனில்,  அவமானமாகக் கருதப்பட்ட ஒன்று கவுரவச் சின்னமாய் மாறி விட்டிருந்தது தெரிந்தது. பிற்பாடு இலங்கையில் ட்யூஷன் என்பது பள்ளி வகுப்புக்கு மாணவரை முன்பே தயாராக்கும் களம் என்பது தெரிந்தபோது வியப்பாய் மாறியது. பின்னுமொரு நாள் மணிக்கு 400ரூ முதல் எண்ணூறு ரூபாய் வரை வாரம் ஒரு முறை இரண்டரை மணி நேரம், வசதிப்பட்ட நேரத்துக்கு வந்து வகுப்பெடுக்கும் வசதியும் இருப்பது தெரிந்த போது வருத்தமாய் இருந்தது. 

சமீப காலமாக மதிப்பெண் குறைவு என ஆசிரியர் திட்டியதால், ஐந்தாம் வகுப்புப் பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறப்பதும், பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும் பெண் பள்ளிக் கழிவறையில் பிள்ளை பெற்று விட்டு விட்டுப் போனதும் அதிர்ச்சியாய் இருக்கிறது. 

பாஞ்சோண் பாஞ்சு காலத்திலிருந்து பள்ளியிறுதி மாணவி பிரசவம் பார்த்துக் கொள்ளுமளவு மாறிவிட்ட இக்காலத்திலும் மாறாத ஒன்று இருக்கிறதென்றால் அது மதிப்பெண் ஒன்று மட்டுமே. வேறு எதுவும் பொருட்டல்ல. அட! ஏம்பா அந்த ஸ்கூல்ல போட்ட? கொஞ்சம் காசு கூடன்னாலும் இந்த ஸ்கூல்ல நல்ல பெர்செண்டேஜ். எக்ஸ்ட்ரா கோச்சிங் எல்லாம் உண்டு, என்று குற்ற உணர்ச்சியைத் தூண்டித்தான் நமக்குப் பழக்கம். 

இவ்வளவுதானா? இவ்வளவுதானா ஒரு மாணவனின் உலகம்? அவன் எதிர்காலம்! அவனுக்கென்று ஒரு குறிக்கோள், அவனுக்கியைந்த ஒரு வாழ்வு, அவனுக்குப் பிடித்த ஒரு படிப்பு இவையெல்லாம் ஒன்றுமேயில்லையா? மதிப்பெண் மட்டுமேதானா?

இந்த வார விடுமுறையில் இன்னுமொரு பாடம் படிக்க முடிந்தது. ஆசியர் பயிற்சி, முதியோர் கல்வி ஆகியவற்றில் தேர்ந்த ஓர் ஆசிரியரின் உரையின் தொகுப்புக் கையேட்டைப் படிக்க வாய்த்தது. 

அவ்ர் கேட்டிருந்த கேள்விகளைப் படியுங்கள். இதற்கு முன் நமக்காய் நம் பெற்றோரோ, நம் பிள்ளைகளுக்காய் நாமோ இதைக் கேட்டிருக்கிறோமா?

உங்கள் குழந்தைகளின் திறமைகளைச் சரிவர அறிந்திருக்கிறீர்களா?
பள்ளியறிக்கை மட்டுமே ஒரு மாணவருக்குண்டான ஆற்றல் மற்றும் அவர் சாதிக்கக் கூடியதைக் கூறுமா?
பள்ளியில் வெற்றி பெறுவது சந்தோஷமான ஒரு வாழ்க்கைக்கான உத்தரவாதமாகுமா?
உணர்வார்ந்த அறிவு என்பதன் அர்த்தமென்ன ? குழந்தைகளின் தினசரி வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் என்ன?
இசையறிவின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும் எத்தகையது?
ஒரு மனிதன் என்ன திறமைகளைக் கொண்டுள்ளான் என்பதை விட அதை வைத்து அவனால் என்ன சாதிக்க முடியும் என்பதே முக்கியமானது.

ஒன்றுக்காவது நேர்மையாக நம்மால் பதில் சொல்ல முடியுமா? அம்மா மார்க் கொடுத்தார்கள் என்று நீட்டும் பேப்பரை வாங்கிப் பார்க்கு முன்னரே ராஜு எத்தனாவது ரேங்க், ரம்யா கணக்கில எவ்வளவு? இப்படித்தானே கேட்போம்? கேட்கப்பட்டோம்.பிள்ளை புத்திசாலிங்க அல்லது உருப்படாதுங்களுக்கு மேல் என்ன தெரியும் நமக்கு? 

புத்திசாலித்தனத்துக்கு பன்முகம் இருக்கிறதாம்.  மொழித்திறன், கணிதம்-தர்க்கம், பார்வை-பரிமாணம், இசை, சமூக அறிவு, தன்னை அறிதல், இயற்கை அறிவு, உடலசைவு என எண்முகமாம் அதற்கு. இவை யாவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றனவாம். மாணவர்கள் தங்கள் புத்தியின் அதி ஆற்றலைப் பயன்படுத்தும் பட்சத்தில் கற்றல் மிக உற்சாகமாக இருப்பதோடு, நோக்கங்கள் துரிதமாக நிறைவேறும்” என்கிறார்.

“ஒரு குழந்தையின் பலங்களை மேலும் பலப்படுத்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அது தன் பலவீனத்தைச் சரி செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்” என்கிறார் அவர்.  

இப்படியெல்லாம் செப்பனிட்டும் பெற்றோருக்குச் சொல்லிக் கொடுத்தும் கொடுக்கும் கல்வியல்லவா எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் சேர்த்துக் கொடுக்கும் சொத்து. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் தமிழர்தானே. இங்கிருந்தால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்குமோ தெரியாது. ஆனால் நிச்சயம் அவர் மகன் அவருக்குள் இருக்கும் திறமையான, அவருக்குப் பிடித்த செல்லோ இசைக்கலையைக் கொன்று புதைத்து ஒரு மருத்துவராகவோ, எஞ்சினியராகவோ, இரசாயனத்துறை விரிவாளராகவோ ஆகியிருக்கக் கூடும், . இங்கில்லாததால் தானோ அவரின் திறமையை மதித்து, அவரை செல்லோக் கலைஞராக வளரவிடும் மனப்பாங்கு அவர் பெற்றோர்களுக்கு இருக்கிறது?

இதை தட்டச்சும் நேரம், மனதில் ஒரு நனவோடை. சற்றேரக் குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில் ஷெல் சத்தங்களுக்கு நடுவே, மேச்சட்டையின்றி, விழும் குண்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்ற விரக்தியுடன்,  “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்ற நிருபரின் கேள்விக்கு அழுதபடி அந்தக் குழந்தை என்ன கேட்டிருக்கும் என ஊகிக்க முடியுமா உங்களால்? வீடு கேட்கவில்லை. உணவு கேட்கவில்லை. உடை கேட்கவில்லை.  “ஒன்பது ஊர் மாறி மாறி இங்க நிக்கிறம். எங்கயும் இருக்க விடுறாங்கள்ள. எல்லா இடத்திலும் செல்லடிக்கிறாங்கள். எனக்குப் படிக்கணும் அண்ணை என்று அழுதபோது உதடு விம்ம என் அழுகை அடங்க வெகு நேரமாகியது.

இந்த ஆர்வத்தை, இந்த உணர்வை, அதற்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதற்கென ஒரு திறமை இருக்கிறது, அதற்கு இருப்பதில் போதிய வாய்ப்புமிருக்கிறது என்ற உணர்வின்றி மதிப்பெண்ணிலும், ஓர் வேலையிலும், திருமணத்திலும் அடைக்கத்தான் போகிறோமா? தலைமுறை தலைமுறையாக இதைத்தான் செய்துக் கொண்டிருக்கிறோம். செய்வோம்.

காரணம், இருக்கும் சூழ்நிலை இப்படித்தான் கொடுக்கப்படுகிறது நம் கல்வியாளர்களால். நம் அரசால். நாமாவது கேட்போமே.

(டிஸ்கி:சாத்தான் ஓதும் வேதம் என உணர்ந்தே வெட்கத்துடன் எழுதினேன். என் பிள்ளைகள் படிக்கும் காலத்தில் நான் இதை உணர்ந்திருந்தாலும் இப்படி யோசித்திருப்பேன் என உறுதியாய்ச் சொல்லவியலாது. இது முற்றிலும் புதிய சிந்தனை. புதிய சூழல். என்றோ ஒரு நாள் வந்தே தீர வேண்டிய மாற்றம். என்னால் முடிந்தது, இப்படியும் பிள்ளைகளுக்குக் கல்வியை ஆராதிக்கிறார்கள் என்ற ஒரு புரிதலுக்காகவே)

தகவல் மற்றும் விளக்கத்துக்கு நன்றி ப்ரியா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கேரக்டர் - ராஜா மாமா...

ராஜா மாமாவை முதன் முதலில் சந்தித்தது செண்ட்ரல் ஸ்டேஷனில். பெங்களூர் எக்ஸ்ப்ரஸில் இடம் பிடிப்பதற்காக சீக்கிரம் வந்து அமர்ந்திருக்கையில் ஜன்னல் வழியாக அவர் பார்த்து விட்டார். எதிரில் சீட்டும் காலியிருந்ததால் அவரும் அதே பெட்டியில் பயணிக்க, ஏறி சீட்டுக்கு வருவதற்குள், அவர் என்ன கேட்டாலும் வேண்டாமென்று சொல்லி விடுங்கள் என்ற கட்டளை பிறந்தது தங்ஸிடமிருந்து.

கொஞ்சமாய்க் கூட்டம் சேர சல சலப்பில் ஏன் என்று விசாரித்ததற்கு அவர் வெளியே போனால் அதிகபட்சம் ஒரு இளநீர் மட்டும் சாப்பிடுவாராம். மற்றபடி, டீ, காஃபி, கோக் எதுவானாலும் சம்மதமில்லை. பிள்ளைகளை வேண்டுமா எனக் கேட்டு வேண்டுமென்றால் வாங்கியும் கொடுத்து வீட்டில் போய் லெக்சர் கொடுப்பாராம். உடலுக்குக் கெடுதி, காசுக்கு தண்டம் என்று.

நல்ல வெள்ளை நிறம். பஞ்சக்கச்ச மல் வேட்டி, கதர் சட்டைக்குள், காடா குதிரை வண்டிக்கார பனியன். ஒரு சின்ன சூட்கேசுடன் வந்திருந்தார். பேச்சில் அவ்வளவு நிதானம். அதிராத பேச்சு. சிரிப்பிலும் அளவான சிரிப்பு. அரக்கோணம் வரவும் முதல் டெஸ்ட் ஆரம்பித்தது. காஃபி வேண்டுமென்றால் சாப்பிடுங்கள். கூல்ட்ரிங்க் வேண்டுமென்றாலும் என்று.

சமர்த்தாக, இல்லை கொண்டு வந்த தண்ணீர் இருக்கிறது என்று சொன்னாலும், பங்காருப்பேட்டை மசால்வடை குறித்த கவலை அரித்தது. வழக்கம் போல் புத்தகத்தை வைத்துக் கொண்டு தொடர்ந்தது பயணம். வீடு போய் சேர்ந்து அவரும் ஊருக்குக் கிளம்பிய மறுநாள், அவரிடம் இருந்து ‘மஞ்சி பில்லகாய’ (நல்ல பையன்) சர்டிஃபிகேட் வாங்கிய முதல் ஆளாகிப் போனேன்.

அடுத்த சில மாதங்களில் ஒரு அதிர்ச்சித் தகவல் வந்து அவர்கள் ஊருக்குச் செல்லும் போது மனதில் விசுவரூபமாய் ஆகிப்போனார். ஒரு ரிட்டையர்ட் பஞ்சாயத்து ஆஃபீசரைக் கத்தியால் குத்துமளவுக்கு அவர் என்ன வில்லனா என்ற கேள்விக் குறி மனதை அரித்தது. ரணபூமியது. வெட்டும் குத்தும்  வெடிகுண்டும் சகஜமென்றாலும் எங்களுக்குப் புதிது.

மாலை சாய வந்தவர்கள், ஏதோ மனுவைப் படித்துப் பார்க்கச் சொல்லி, அவர் வெளிச்சத்துக்கு கையை உயர்த்திப் பிடித்துப் படிக்க, குத்தி இழுத்து விட்டார்கள். சரிந்த குடலை, உள்ளே தள்ளி, தானே துண்டால் வயிற்றை இருகக்கட்டி, அரசு மருத்துவ மனையில் போய் சேர்ந்ததும், போலீஸ் எவ்வளவு கேட்டும் குத்தியது யார் எனத் தெரியாது என்று சொன்னபோது குழப்பமாய்த்தான் இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்து வீடு வந்தபோது கேட்டதற்கு அவரிடமிருந்து வந்த பதில் அவர் மீதான மரியாதையைப் பன்மடங்கு உயர்த்தியது.

ஆம்! தெரியுமென்றால் அடையாளம் காட்டச் சொல்லுவார்கள். குத்தியவன் யாரோ சொல்லி, கூலிக்கு வந்து குத்தியவன். காட்டிக் கொடுத்தால் குடும்பமே அழியும் எனத் தெரியும். ஏவியன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்பார்கள். பாவம் அந்த ஏழைக் கூலிக்காரன் குடும்பம் வீதிக்கு வரும். அவ்வளவுதானே. இப்போது எனக்கென்ன ஆகி விட்டது என்பவரை வியக்காமல் என்ன செய்ய?

அந்த ஆந்திர வெயிலில் ஃபேன் போடாமல் வியர்க்க வியர்க்க இருப்பார். சொல்லும் காரணம் அலாதியாக இருக்கும். இயற்கை தந்த வரம் வியர்வை. உடலுக்கு ஏர் கண்டிஷன். அதனுடன் உடல் கழிவும் வெளியேறுவதை, ஃபேனோ, ஏசியோ போட்டு வெளியேறாமல் செய்வதை விட இரண்டு மூன்று முறை குளிப்பது ஆரோக்கியம் என்பார்.

இரண்டு மூன்று கம்பெனிகளின் பங்குதாரர், ஒரு கோலமாவுச் சுரங்கத்தின் சொந்தக்காரர், அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘மனமேமி சவுக்காருலமா செப்பு நாயனா’ (நாம என்ன பணக்காரர்களா? சொல்லுப்பா). காசைச் செலவு செய்யலாம். வீணடிக்கக் கூடாது என்பதன் முழு உதாரணம் அவர்.

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. பிள்ளைகள் பொது அறிவுக்கு என்று பிட் போட்டதும், 2ரூ ஹிந்து பேப்பர் வாங்கினால், நாள் முழுதும் படித்தாலும் படிக்க முடியாது. சினிமாப் பாட்டு பார்க்கிறதுக்கு இது சாக்கா என்று அறவே மறுத்தவர். பயணத்துக்கு ஒரு ஜீப் உண்டு. பெயரளவில் கட்டை சீட்களும், தார்ப்பாலினும் மட்டும். எஞ்சின் மட்டும் பக்காவாக இருக்கும்.

வெயிலில் கட்டி வந்தாலும், காலை அகட்டி அகட்டியாவது வேலை வேலையென்று போவார். வீட்டில் இருந்தால் வலி இருக்காதா என்ன என்று எதிர் கேள்வி வரும்.

அடுத்த ஓரிரு வருடங்களில் வந்த செய்தி இன்னும் கதி கலங்க வைத்தது. ஒரு கேஸ் விஷயமாக, அந்த மானிலத் தலைநகரின் பிரசித்தி பெற்ற ஹோட்டலில் தங்கியிருந்து, சாப்பாட்டுக்கு பிறகு, ஹாலில் பேப்பர் படிக்க என்று போனவரை, சினிமாவில் வருவது போல் ஆட்டோவில் வந்து வட்டம் கட்டி, எஞ்சினை உயர்த்தி சப்தம் கேட்காமல், ஹாக்கி மட்டை, கம்பி என்று அடித்துப் போட்டுவிட்டு போய் விட்டார்களாம்.

மயங்கிக் கிடந்தவரை நிர்வாகம், நகரின் பெரிய ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து, வீட்டுக்கு தகவலனுப்பி, உறவினர் போய் சேர, மனுஷன் சொன்ன முதல் வார்த்தை எல்லாரும் கையில் மிளகாய்ப் பொடி வைத்திருங்கள் என்பது. கை, கால், விலா எலும்புகள் நொறுங்கிக் கிடக்க, மல்டிபிள் சர்ஜரி செய்ய வேண்டும் என்ற டாக்டரிடம், புத்தூர் கட்டில் சரியாகிவிடும் என்று டரியலாக்கி சொந்த ரிஸ்கில், இரண்டாம் வகுப்பில் சென்னை வந்தவரை என்ன சொல்ல?

ஒரு பெட்ஷீட்டில் மெதுவே நகர்த்தி மூலைக்கு ஒருவராய்ப் பிடித்து, அவர் தம்பி வீட்டுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்குள், பயந்தது நாங்கள்தான். என்ன ஆயிற்று என்று கேட்டபோது, விஷயம் சொல்லி, பைத்தியக் காரர்கள், அவர்கள் தேடி வந்த பத்திரம் என் பனியனுக்குள். நான் குப்புறப் படுத்துவிட்டேன். இந்தக் கையில் இத்தனை அடி, முதுகில் இத்தனை, காலில் இத்தனை என்று சொல்லும்போது அவர் வயது அறுபதுக்கும் மேல்.

பயம் வந்தால் வலி தெரியும், வலி தாளாமல் மயங்கவோ, பணியவோ கூடும் என நினைவை திசை மாற்ற அடியை எண்ண ஆரம்பித்தாராம். ப்ராணன் போனால் வருமா? பொருள் போனால் சம்பாதிக்கலாம் என்ற மகனுக்கு சொன்ன பதில் இது. நகை கேட்டால் கொடுத்து விடுவாய். வீட்டுப் பெண்களைக் கெடுத்துக் கொன்றால் வேறு பெண் கட்டலாம் என்பாயா?

ஒரு விஷயம் நியாயம் என்றால் உயிர் என்ன உயிர் என்று அத்தனை வலியிலும் பேசுபவரை என்ன சொல்ல? இத்தனை அடியும், இறந்து போன ஒரு எம்.எல்.ஏ நண்பன் இவரை ட்ரஸ்டியாகப் போட்டு ஏழைச் சிறுவர்களுக்கான ஒரு அமைப்பையும், திருமணமின்றி சேர்ந்து 40 வருடம் வாழ்ந்த பெண்ணுக்கு கொடுத்த சொத்துக்கு ஆட்டையைப் போடவும் உறவினர் செய்த சதி.

மூன்றே மாதத்தில் புத்தூர்கட்டு வைத்தியத்தில் தானே நடக்க ஆரம்பித்தது வைத்தியத்தினால் அல்ல. மன உறுதியும், இயற்கையாய் வாழ்ந்த ஆரோக்கியமும் மட்டுமே.

எண்பது வயதுக்கு சற்றேறக் குறைய இருக்கும். மகன்கள் இருவரும் மிக உயர்ந்த பதவிகளில். ஜீப்புக்கு ஸ்பேர்ஸ் கிடைப்பதில்லை என்பதால், மகன்களின் வற்புறுத்தலில் க்வாலிசுக்கு மாறினாலும், அடிப்படை வசதிகள் மட்டுமே.

இன்னமும் இரண்டாம் வகுப்பில் பயணமும்(முதல் வகுப்பில் போனாலும் அதே நேரத்துக்குதானே போகும்?) ‘மனமேமி சவுகாருலமாவும்’ மாறவே இல்லை.

சொல்ல மறந்துவிட்டேனே. சுப்புப் பாட்டியின் பெரிய மகன் இவர்.
~~~~~~~~

Tuesday, August 24, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.1

புலிகள்- தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு: குமரன் பத்மநாதன் விளக்கமளிக்க வேண்டும்: கருணாநிதி

ம்கும். அவரு அரிச்சந்திரரு. அப்புடியே உண்மை உண்மையா வாந்தி எடுக்குறாரு. லிஸ்டக் குடுத்தா அப்புடியே சொல்லப்போறாரு. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் மாயம்?

அது கையெழுத்து போட்ட அன்னைக்கே காணோம்னு கரடியாக் கத்தினாலும் அதுதான் எல்லாத்துக்கும் தீர்வுன்னு கத்துனது ச்ச்சும்ம்வா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை

ஏன்? சாமியையும் வலையத்துக்குள்ள வச்சிட்டானுவளா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கைச் செல்லும் தூதுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை: கலைஞர்.

அதாஞ்சரி. தேர்தல் நேரத்துல யார நம்புறது. ஏன்? இதுக்கு ஒரு கடுதாசு போடலாமே?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைப்புலி சிக்கியது

இதெல்லாம் புடிங்கடா! திருட்டுப் பூனைங்கதான் சிக்காது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமானி இல்லாமல் குண்டு வீசும் விமானம்

ரொம்ப வசதிடா! கோளாறாயி குண்டப் போட்டுடிச்சி. குருவி சுட அனுப்புனா குழந்தைங்கள போட்டு தள்ளிறுச்சின்னு சொல்லிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் வெற்றிக்கு பின்னால் எனது மனைவி இருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

தோல்வியான அரசியல்வாதி ஊட்டுங்கள்ள தகராருதான். பத்த வெச்சிட்டியே பரட்ட...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. ராமதாஸ்

யாருங்கைய்யா விளைக்கிறாங்க. அதான் வளைக்கிறாய்ங்களே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழர் இறையாண்மை மாநாடு: திருமா

இறைவன் இருக்குறானோ இல்லையோ. தமிழனுக்கு இறையாண்மை இல்லைன்னு தெரிஞ்சப்புறமும் மாநாடு வேறயா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போதை பொருள் விவகாரம்: என் பெயரை பயன்படுத்தினால் வழக்கு தொடருவேன்: திரிஷா

அடப்பாவிகளா! சுருட்டு, பீடி, பனியன் விளம்பரம் மாதிரி இதுக்கும் பயன்படுத்துறாங்களா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊழலைப் பற்றி பேச விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை: கலைஞர்

அதான தல! ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு யாரு?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிரீன்பீல்டு விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் உள்நோக்கம்: கலைஞர் குற்றச்சாட்டு

ஆமாங்க தலைவரே! பச்சை அவங்க ராசி கலராச்சே. ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல. யெல்லோஃபீல்டுன்னு மாத்திடுங்க தலைவா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈ.வி.கே.எஸ்.க்கு காங். மேலிடம் கண்டிப்பு

சொல்லவேண்டியதெல்லாம் சொன்னப்புறம் இது கண்டிப்பா? கண் துடைப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செஸ் ஆனந்திடம் இந்திய குடியுரிமை இல்லை!

அப்ப சாம்பியன்னு நாம அலட்டிக்க முடியாதா? அவ்வ்வ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..

ஞாயிறு தினத்தந்தியில் ஒரு செய்தி. சென்னையின் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் 100 சதம் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக, கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியும், அவர்கள் எதிர்பார்த்த அளவு மாற்றம் ஏற்படவில்லையாம். இதன் காரணம் என்ன எனக் கண்டறிய விரும்பிய நிர்வாகம் 40 கேள்விகள் அடங்கிய ஒரு சர்வே எடுத்ததாம். அதில் 10 கேள்விகள் அப்பா, அம்மா, வீடு, வீட்டுச் சூழல் குறித்ததாம். ஆசிரியர்கள் கூட படிக்க அனுமதி கிடையாது அதனால் உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும். பதில் வீட்டுக்கும் தெரியப் படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவ மாணவிகள் அளித்த பதிலைத் தொகுத்த நிர்வாகம் ஆடிப்போய்விட்டதாம். 

மாணவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவை
  • தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை உண்டாக்குவதால் படிப்பில் நாட்டம் குறைவது
  • படிக்கும் நேரத்தில் தாய்மார்கள் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து வந்து வீட்டில் அரட்டையடிப்பது (அதிக எண்ணிக்கை மாணவர்களின் குறை)
  • எவ்வளவு முக்கியமான பரிட்சை என்றாலும் சத்தமாக சீரியல் பார்ப்பது
  • தாயார் முதலில் தூங்கப் போய் தாமதமாக எழுவது.

இதை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் கூறியதாக செய்தி கூறுவது

“முன்பெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கி வைப்பார்கள், அல்லது தியாகம் செய்வார்கள்.” இப்போது அப்படியல்ல. தாங்கள் வாழும் காலம் வரை தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதையும் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். மொத்தத்தில் பெற்றோர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதைத்தான் இந்த சர்வே காட்டுகிறதாம். 

இது முழுதும் பெற்றோரைக் குற்றம் சொல்லும் செயலேயன்றி வேறெதுவுமில்லை. இதே போல் பெற்றோரும் தனித்தனியாக கண்டிப்பாக இதே சர்வேக்கு பதில் சொல்லவேண்டும் என்று பதிலைப் பெற்று ஒப்பு நோக்கி ஒரு தேர்ந்த மனநல மருத்துவரின் உதவியுடன் காரணிகளைக் கண்டு பிடித்திருந்தால் பெருமளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

பிள்ளைகள் தங்கள் நாளின் பெரும்பகுதியை படிப்பு என்ற சூழலில் செலவிடும் இடம் பள்ளி. மேற்கூறிய காரணங்கள் இருப்பினும், கவனச்சிதறல் என்பது கண்டுகொள்ளக் கூடிய ஒன்று. அத்தகைய மாணவர்களை தனிப்பட்ட கவனம் செலுத்தி, அல்லது அவர்களோடு உரையாடி காரணம் அறிந்து பெற்றோர்கள் காரணமெனின் அவர்களுக்கு அறிவுறுத்துவதும் பள்ளியின் கடமை அல்லவா?

மற்ற மாணவர்களுடன் இருக்கையில் அவர்கள் உலகம் தனியல்லவா? கவலைகள் மறையாவிடினும் மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் இடமாயிற்றே. அப்படியிருந்தும் தேர்ச்சி அடைய முடியாமல் என்ன தடை? அவர்களின் ஆர்வமின்மை குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் சொல்லவில்லை. எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.

அவர்களையும் முழுதாய்க் குற்றம் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை அம்முயற்சியில் ஈடுபட்டாலும், என் பிள்ளை பைத்தியமா? எப்படி மனநோய் மருத்துவரிடம் காட்டலாம் என்று சண்டைக்கு வரும் பெற்றோர்கள் அதிகம். 

“Kinder Garten" என்பதை அப்படியேவோ அல்லது “Children's Garden" என்று மொழிமாற்றம் செய்தோ போடாமல் “Kinder Garden" என்று போடும் கான்மெண்ட் இஸ்கூலில் சேர்ப்பது நம் கவுரவமல்லவா? அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.
~~~~~

Monday, August 23, 2010

நல்லாக் கேக்குறான்யா டீட்ட்ட்ட்டேய்லு...

இந்த வாரம் நட்சத்திரப் பதிவராக வாய்ப்பளித்த தமிழ் மணத்துக்கு நன்றி!
 ~~~
ஏன்னு எனக்குள்ளயே கேட்டு பதில் கிடைக்காத கேள்விகள் இவை. பதில் சொல்லிட்டு சிரிங்கப்பு.

1.போற வழியில கோவில் தென்பட்டா, தாண்டி போக மனசில்லாம, செருப்ப அவிழ்த்துட்டு, கண்ணு மூடி வேண்ட்ற நேரத்துல ஆட்டய போட்றுவானுவன்னு சாமிய அதுக்கு கூட நம்பாம கட்டை விரல்ல செருப்பு முனைய அழுத்திக்கிட்டு, சாமி எனக்கு அதக்குடு, இதப்பண்ணு, உன்னயத்தான் நம்ம்ம்ம்ம்ம்ம்பி இருக்கேன்னு உருகி வேண்டுனா மட்டும் இவன நம்பறதுக்கு சாமி என்ன கேனையா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2.கண்ணு தெரியமாட்டிங்குதுன்னு டாக்டர் கண்ணாடி எழுதி குடுத்தா, ஸ்டைலு போயிரும்னு கண்ணுக்குள்ள ஒட்டுற கண்ணாடி ஒட்டிக்கிறவைங்க 50ரூ கூலிங்க்ளாஸ் மட்டும் ராவுல கூட போட்டுகிட்டு ஸ்டைல் காட்டுறாங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3.ரெண்டாயிரத்து ஐநூறு குடுத்து காது கேக்குற மிசினு வெச்சிக்கிட்டா அவமானம்னு காதுக்குள்ள தெரியாம வைக்கிற மிசினு இரவத்தி அஞ்சாயிரம்னாலும் வாங்குறவைங்க, காதுல பனை வண்டு (அதாங்க ப்ளூடூத்) அத்த சொருவிட்டு அலையிறாங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4.ஒரு இடுகை முழுசும் சினிமா விமரிசனத்துல அது நொட்டை இது நொள்ளை, லாஜிக் இல்லைன்னு திட்டிட்டு, ஒரு பாட்டுல ஒரு வரிக்கு நாலு நாட்டுல எட்டு உடை மாற்றின்னு அபத்தமா வந்தாலும் அந்தப் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அபாரம்னு எழுதுறாய்ங்களே, எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5.டூ வீலர்ல போறவங்க ஹெல்மெட் போட்டா நல்லது. அதுவும் பின்னாடி உக்கார்ந்து போறவங்க போட்டே ஆகணும்னு கரடியா கத்தினாலும், போலீசுக்கு மாமூல் குடுக்கணுமேன்னு பயந்து பின்னாடி உட்கார்ந்து போற மனைவி அத சுமந்துகிட்டு, பேச்சு குடுத்துட்டே போறாய்ங்களே தவிர, போடுங்கன்னோ இல்ல போட்டுக்கிட்டோ போக மாட்டங்குறாய்ங்களே ஏன்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6.கிட்டத்தட்ட கால்வாசி சினிமா எடுக்குற காசுல விளம்பரப் படமெல்லாம் எடுக்குறாய்ங்களே. வியாவாரம் நல்லா போகுறதால இப்புடி செலவு பண்ணி எடுக்குறாய்ங்களா இல்ல இப்புடி எடுத்து விளம்பரம் பண்றதால வியாவரம் பிச்சிக்கிட்டு போகுதா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
7.காசு வெட்டாம இங்க லைசன்ஸ் வாங்க முடியாதுன்னு தெரிஞ்சும், தானும் அப்படித்தான் காசு வெட்டி லைசன்ஸ் வாங்கிட்டும் யாராவது மேல இடிச்சிட்டாலோ, இடிக்கிறா மாதிரி வந்தாலோ ‘உனக்கெல்லாம் எப்புடி லைசன்ஸ் குடுத்தாய்ங்கன்னு’ கூசாம திட்டுறாய்ங்களே! எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
8.ஏதோ நோவுன்னு டாக்டர்கிட்ட போனா அவரு ஸ்கேன், எம்.ஆர்.ஐன்னு பாதி சொத்துக்கு வேட்டு வெச்சிட்டு உனக்கு ஒன்னும் இல்லப்பான்னு மெடாசின் குடுத்தா இத்தோட போச்சேன்னு சந்தோசப்படாம, ரூ 50000 அனியாயமா போச்சுன்னு புலம்புறாய்ங்களே ஏன்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
9.ரேஷன் கார்ட் வாங்க போனா வூட்டு அட்ரசுக்கு ப்ரூஃப் கேக்குறானுவ. பேங்குக்கு போனா ரேஷன் அட்டை ப்ரூஃப் கேக்குறானுவ. PAN கார்ட் வாங்கப் போனா இன்கம்டாக்ஸ் காரன் பேங்க் விவரம் கேக்குறான். பாஸ்போர்ட் வாங்கப் போனா PAN கார்ட் விவரம் கேக்குறான். அப்புறமெதுக்கு போலீஸ் வெரிஃபிகேஷன்னு ஊட்ட தேடி போலீச அனுப்பி மாசக்கணக்கா இழுத்தடிக்கிறானுவ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
10.ஒரு சர்ஜரி பண்ணனும்னு டாக்டர் சொன்னா நம்பாம செகண்ட் ஒபினியன் தேர்ட் ஒபினியன் வாங்கறது சரி. மெஜாரிடி பார்த்து வேற வழியில்லைன்னு ஆனதுக்கப்புறம், முதல் டாக்டர்கிட்டயே சர்ஜரிக்கு போறாய்ங்களே. ஏங்க நீங்களும் வந்து  சரியா பண்றாரான்னு பார்த்துக்குங்கன்னு மத்த டாக்டருங்கள கேக்காம இப்ப மட்டும் அந்த டாக்டர நம்புறாய்ங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Saturday, August 21, 2010

எந்திரனும் ஏழையும் உச்சாணிக் கொம்புக் கிழபோல்டும்...


ஐயா! கூவிக்கூவிச் சொல்லியாகிவிட்டது. நான் புர்ச்சி எழுத்தாளனில்லை. மொக்கைப் பதிவர். பல வல்லுனர்களும் கூட சர்டிஃபிகேட் கொடுத்தாகிவிட்டது. கூகிளோ தமிழ்மணமோ நீ கிழபோல்டு. அதனால் பதிவு போடக்கூடாது எனச் சொல்லவும் இல்லை. அப்படிச் சொல்வதால் எனக்கு எந்த நட்டமும் இல்லை. பின் ஏன் இதை எழுதுகிறேன்? பொதுப் பிரச்சனைக்கு புர்ச்சி செய்யாதவன், காலை மிதித்தால் ஒதுங்கிப் போகலாம். தேடி வந்து மிதித்தால் ஏன் என்று கேட்கலாம். முகமூடியை விட்டு மிதித்தால் புர்ச்சி செய்யாமல் இருக்க முடியாது.

ஒரு கடையில் பிரியாணி சாப்பிடுகிறார் ஒருவர். (அதென்ன ஒருவர் என்கிறீர்களா? ஆள் மாறாட்டத்தில் காலை மிதித்த எழவை வேறெப்படி சொல்வது? அல்லது ஆத்திரம் அறிவை மறைத்ததோ தெரியவில்லை) பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. காசு கொடுக்காமல் போய்விட முடியுமா? கொடுத்துவிட்டு போனார். உப்புசமாக இருக்கிறதே என்று ஒரு டீக்கடையில் டீக்குடித்தார். நன்றாக இருந்தது. நல்லாயிருக்கு என்று சொல்வது தப்பா? சொல்லிவிட்டு காசு பார்த்தால் எட்டணா கம்மி. இருந்த காசைக் கொடுத்துவிட்டு வருவது தப்பா? 

கொடுமை என்னவென்றால் பிரியாணிக் கடைக்காரர் அதே டீக்கடையில் பஜ்ஜியும் டீயும் சாப்பிட்டு காசும் கொடுத்துவிட்டு, நன்றாயில்லை என்றும் திட்டிவிட்டு, என் கடையில் பிரியாணியும் சாப்பிட்டு, காசும் கொடுத்த நீ அவன் கடையிலும் டீ குடித்துவிட்டு, காசும் கொடுத்துவிட்டு நன்றாயிருக்கிறது என்று சொல்கிறாயே, இது என்ன புத்தி என்று கேட்டிருந்தால் உன் கடையில் பிரியாணி இருக்க இங்கு வந்து பஜ்ஜி தின்று, டீ குடித்து, திட்டிவிட்டும் வருகிறாயே! அதைவிட நல்ல புத்திதான் என்று சொல்லி இருக்கலாம். பிரியாணி சாப்பிட்டால் டீ குடிக்கக் கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா ஐயா?

இன்று முகமூடி மூலமாக கிழபோல்டு மொக்கைச்சாமியை இடித்துத் தள்ளிவிட்டு மகுடத்தைப் பிடிப்பேன் என்று பின்னூட்டம் விடுகிறார். மகுடம் போய்விட்டால் அடுத்த வேளைச் சோற்றுக்கு என்ன செய்வேன். அடையாறில் வாங்கிய பங்களாவுக்குத் தவணை எப்படிக் கட்டுவேன். இதற்கா பாடுபட்டு சுயமாக மொக்கை எழுதுகிறேன்? புர்ச்சிக் கையேடு வேறு படித்துத் தொலைத்துவிட்டேன். எந்திரனுக்கும் ரஜனிக்கும் ஆதரவாக எழுதியதைப் படித்தும் ஆகிவிட்டது. ஆக எந்திரனையும் சன் பிக்சர்சையும் எதிர்க்கிறார்கள் ஆதரிக்கிறார்களே தவிர ஏழைக்காக யாரும் புர்ச்சி செய்வதாய்க் காணோம்.

மொக்கை எழுத்தாளன் என்ற அவச்சொல் நீங்கவும், புர்ச்சி எழுத்தாளன் என்று பெயர் வாங்கவும் பீட்ரூட் போடாமலே புர்ச்சி செய்யப் போகிறேன். என் புர்ச்சி கோஷங்களுக்கு பதில் சொல்லட்டும். இப்போது ஏழையைப் பற்றி எழுதாவிட்டால், நாளை எழுத்தாளர் ஆகிவிட்டால் மேட்டுக் குடி எழுத்தாளர் என்று முத்திரை குத்திவிடலாம். இப்போதே என்னை முகிலன் நடுத்தர வர்க்கத்து சிந்தனையாளன் என்று சொல்லிவிட்டார்.

எந்திரன் ரிலீஸ் ஆன பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து யாரும் சிந்திப்பதாய்த் தெரியவில்லை. ஏழை ரசிகன் பாலபிஷேகம் செய்வான், அதனால் பசி போய் விடுமா என்றெல்லாம் கேட்கிறார்கள். இது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய சினிமாக் கலாச்சாரம். சிவாஜிக்கு, எம்.ஜி.ஆருக்கு ஏன் டி. ஆர். ராமசாமிக்குக் கூட இதெல்லாம் நடந்திருக்கிறது. கலாச்சாரத்தை கட்டிக் காப்பது தமிழன் கடமையல்லவா? அதன் பிறகு இத்தனை நடிகர்கள் வந்தும் எல்லாருக்கும் பாலாபிஷேகம் செய்ததால் ஏழை பசியில் அடியோடு அழிந்தா போய்விட்டான்?

இருந்த புர்ச்சியாளர்கள் மீண்டும் பிறந்தாலும் சரி, அல்லது புது புர்ச்சியாளர் தோன்றினாலும் சரி, ஏழைத் தொண்டன் 24ம் வட்டத்தின் சார்பாக துண்டு போடாமல் இருப்பானா? புர்ச்சிக்கு சந்தாவோ, நிதியோ தராமல் இருப்பானா? நீ ஏழை! துண்டு போட்டால், நிதி கொடுத்தால் உன் ஏழ்மை போய்விடுமா என்று கேட்பார்களா? இது சரி எனும்போது பாலபிஷேகம் செய்வது அவன் விருப்பமல்லவா? அதை எதிர்க்க நாம் யார்?

எந்திரனால் ஏழைக்கு என்ன பயன் என்று கேட்கிறார்கள். படம் பிடித்திருந்தால் அந்த இரண்டரை மணி நேரம் அவன் கவலை மறந்து இருக்கிறான். தண்டமானால் இதை விட என் கவலை எவ்வளவோ தேவலை என்று மன அமைதி அடைந்துவிட்டுப் போகிறான். அவன் கவலையோடே இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் ஆசைப் படுகிறார்கள்.

படம் ஹிட் ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும்? ரஜனி இன்னும் பெரிய சக்தி என்பது நிரூபணமாகிவிடும். தேர்தல் வேறு வரப்போகிறது. தனிக்கட்சி தொடங்க வேண்டும் தலைவா என்று ஏழை ரசிகன் டீக்குடிப்பான். கலைஞர் அழைத்து இது வரை மேடையில் ஜல்லியடித்தது போதும். இப்போது சொல். குஷ்புவுக்கு ஜோடியாக சை, சினிமா புத்தி போகமாட்டேன் என்கிறது. குஷ்பு போல் கட்சியில் இணைந்துவிடு. ஸ்டாலினுக்கு ஈடாக, அழகிரிக்குக் கூட தராத இணை முதல் அமைச்சர் பதவி தருகிறேன் என்பார். ரஜனிக்கு எவ்வளவு பெரிய சங்கடம்? ஏழை ரசிகர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஜெ. கர்நாடக ஆணிவேரைச் சுட்டிக் காட்டி, நீவு நாவு ஒப்பரே என்று அழைப்பு விடலாம். கேஸ் முடிந்தவுடன் நீங்கள்தான் தலைவர். இங்கு வாரிசுச் சண்டையில்லை என ஆசை காட்டலாம். மருத்துவர் ஐயா எந்த யோசனையும் இன்றி ரஜனிக்கு ஆதரவு என்று சொல்லிவிடுவார். அன்புமணிக்கு துணைப் பிரதமர் போஸ்ட் கொடுத்தால் போதும். சில்லரைக் கட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ரஜனி என்ற சுனாமியை எதிர்த்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என்று தெரியும்.

இவற்றில் எது நடந்தாலும் பாதிக்கப் படப்போவது ஏழை ரசிகன் மட்டுமே. இனி எப்படி அவனால் ரஜனி படம் பார்க்க முடியும். பாலபிஷேகம் செய்ய எங்கே போவான். ஒரு கலாச்சாரத்தையே அடியோடு தொலைக்கும் அவலம் அல்லவா நடந்துவிடும். ஒரு வேளை ரஜனி அரசியல் வேண்டாம் என்று முடிவு செய்வாரேயானாலும் பாதிப்பு ஏழைத் தமிழனுக்கே. அதன் பிறகு எந்தப் படத்திலும் ரஜனி நடிக்க முடியாது. காரணம் சன் பிக்சர்ஸ் மட்டுமே தமிழ்த் திரைப்படம் தயாரிக்க முடியும் என்ற சூழலில் கட்சியில் சேர மறுத்த ரஜனி போன்ற பெரிய நடிகர்களுக்கு வாய்ப்பு ஏது?

இந்தத் தொல்லையே வேண்டாம் என்று இமயமலைக்கு ஓய்வெடுக்கச் செல்லலாம் என்றால், குளிர்காலம் வந்துவிடும். அவர் நினைத்தால் ஸ்விட்ஜர்லாந்து போய் அனுபவிக்க முடியாதா? இமய மலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலா இருக்கிறது? இல்லை குகைக்குள் ஹெலிகாப்டரில் போய் இறங்குகிறாரா? உங்களிடம் 10 ரூபாய் இருந்தால் எனக்கு ஐந்து ரூபாய் என்று பங்கு போட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு டீ குடிக்க காசு இல்லை என்றால், என்னிடம் குவார்ட்டர் அடிக்க காசிருந்தாலும், நானும் கம்மென்றிருப்பது கஷ்டத்தைப் பங்கு போடுவது இல்லையா?

ரஜனி ஏழைக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்குத் தெரியாதா? படம் தோல்வியடைந்தால் வினியோகஸ்தர்கள் ஏழையாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு பணம் திருப்பித் தரவில்லையா? ஏழை டெய்லர் என்ன செய்தான்? அவன் பிழைப்புக்கு வழி என்ன? ஏழைக்குக் கவலைப்படும் யாராவது இதை யோசித்தார்களா? 

ரூ 500க்கு குறையாத ரெடிமேட் சட்டையும், அமெரிக்க கம்பெனி ஜீன்சும் போட்டுக் கொண்டு ஏழை, அமெரிக்க அடிவருடி என்றெல்லாம் அமெரிக்க கூகிள் பிச்சை போட்ட வலைப்பூவில் இடுகை எழுதி ஏழை என்ன செய்வான் என்று கத்தினால் புர்ச்சியா?

அட 15ரூபாய்க்கு செல்ஃபோனில் எந்திரன் பாட்டு ரிகார்ட் செய்து கொண்டு (நல்ல காலம் ஏழை எதற்கு செல்ஃபோன் வைத்திருக்க வேண்டும் என்று இன்னும் கவலைப் படவில்லை) ராவுக்கு சோறோ சரக்கோ இல்லை என கவலைப்படாமல், பாட்டுகேட்டுக் கொண்டே தூங்கக் கூடாதா?

ஒன்று மட்டும் நிச்சயம். அது 150 கோடி தயாரிப்பு படமோ, ரஜனியோ, சூர மொக்கை எழுதி பரிந்துரையும், மகுடமும், பின்னூட்டமும் பெறும் கிழபோல்ட் பதிவனோ எனக்குக் கட்ட கோவணமில்லை உனக்கு சட்டை என்னடா கேடு என்று மறைமுகமாகவாவது அடுத்தவனைச் சீண்டுவதற்குப் பெயர் சமுதாயச் சிந்தனைப் புர்ச்சி.

இனிமேல் யாரும் என்னை மொக்கை எழுத்தாளன் என்று சொல்ல முடியாது. பாவம்! எனக்குத் தெரிந்த அளவில் ஏழைக்கு ஆதரவாய் புர்ச்சி இடுகை எழுதிவிட்டேன். ஏற்கனவே பரிந்துரையையும் தாண்டி மகுடம் என்று திட்டிவிட்டதால் அதற்காக இந்தப் புர்ச்சி இடுகை என்றும் சொல்ல முடியாது. இந்த இடுகை மகுடத்துக்குப் போனால் கிடைக்கும் லாபத்தை ரஜனிக்கு பாலாபிஷேகம் செய்ய விரும்பும் ஏழைக்குக் கொடுப்பதாய் உத்தேசம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, August 20, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.0

பிரபாகரனைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகளுக்கு நெடியவன் ஒத்துழைப்பு வழங்கவில்ல: குமரன் பத்மநாதன்

குடுத்த காசுக்கு மேல கூவுறாண்டாங்கொய்யாலே! இத அப்பவே கூவியிருக்கலாம்ல. தமிழனோட விஸ்வாசம் இருக்கே! அடடடா த்த்த்த்தூஊஊ 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கே.பி.யை கைது செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன: கெஹலிய


அந்தாளு சொல்றதெல்லாம் வச்சிப் பார்த்தா செட்டப்பு மாதிரித்தான்யா தெரியுது. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பு தொடர்பில் சர்வதேச மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்படும்: ஐ.தே.க


ங்கொய்யால இந்தாளு யூனிஃபார்ம்ல இருந்தப்ப இந்த ஆணையகம் சொன்னதுக்கு என்னா மதிப்பிருந்திச்சி. இப்ப மட்டும் மனித உரிமையோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க உள்ளனர்

அது சரி. சொன்னத சொல்லிட்டு போறதுக்கு சலம்பலெதுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறுபாடுகளிருந்தாலும் ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார்: பஷில் ராஜபக்ஷ

நேற்று இல்லாத மாற்றம் என்னது? காசு என்னல்லாமோ பண்ணுது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதலாவது யுத்த நீதிமன்றின் தீர்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது! இலங்கையில் எனக்கு நீதி கிடைக்காது!: சரத் பொன்சேகா

உனக்கே கிடைக்காதுன்னா தமிழனுக்கு எங்க கிடைக்கும். எதுக்கும் ராஜீவ்-ஜெயவர்த்தன உடன்படிக்கையில இதுக்கு தீர்வு இருக்கும். நல்லா தேடு பாரு ராசா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜீவ் காந்தி படுகொலையை எப்படி மன்னிக்க முடியும்? கார்த்தி சிதம்பரம்
  
அதெப்டி மறக்கறது. இதச் சொல்லியேதானே கொள்ளுப்பேரன் வரைக்கும் ஓட்டு பதவி எல்லாம் வாங்கியாவணும். ராகுல் மன்னித்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்னு சொல்லியிருக்கணும் கண்ணு.
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவில் முதலீட்டை குறைக்க மாட்டோம்: அமெரிக்கா

முன்னாடியே கோர்ட்ல குத்துமதிப்பா ஃபைன் கட்டிடுங்கப்பா. சும்மா முப்பது வருஷம் கேஸ் இழுத்து  கோடிக்கணக்குல செலவு பண்ணி தம்பிடி ஃபைன் போடுவாய்ங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமானத்தை கடத்தினால் மரண தண்டனை

மந்திரிங்க சொந்தகாரங்க யாரும் அந்த விமானத்தில் இல்லாவிடில்...... 
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எம்பிக்கள் சம்பளம் அதிகரிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

கொள்ளு வேணாங்கிற குதிரை உண்டா? மந்திரிப் பதவி போனா என்ன பண்றது?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியா அளித்த நிதியை பாகிஸ்தான் ஏற்றது 

அய்ங்! அப்ப ஆயுதமா குடுத்தாதான் வாங்குவேன்னு அடம் புடிச்சானோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மருத்துவ படிப்புக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ் 

நம்ம மருத்துவக் கல்லூரி வருதாங்ணா? டீல் ஓக்கேவா?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் உணவுப் பூங்கா: மத்திய அரசு ஒப்புதல்

சூரியனில்லாமல் உணவு ஏது?  Food Giantனு பேரு வச்சிடலாம். ரைமிங்கா வரும்.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும்: அன்புமணி கவலை

அப்பத்தானே குடியரசுங்கற வார்த்தைக்கு மருவாதி. ஏன் எதிர்க்கிறாரு?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திராவிட கொள்கைகளை பாதுகாக்க வேண்டும்: கலைஞர்


தலைவரே! திராவிடக் கொள்கைகள் யாதுன்னு ஒரு பரிட்சை வைங்களேன். வீரமணி கூட ஃபெயில்தான். ஆமா! காங்கிரஸ் திராவிட கட்சியா தல!
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(இது 150வது நறுக். )

Thursday, August 19, 2010

நறுக்னு நாலு வார்த்த V 4.9

அரசின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உளவாளியாக கருணாவைப் பயன்படுத்த புலிகள் முயற்சித்தனர்

அடங்கப்பா! அகில மகா புளுகுடா சாமி. போயும் போயும் இவரு குடுக்குற தகவலை நம்புற அளவுக்கா இருந்தாங்க? கேக்கறவன்......போங்கடா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்கள் கைது

ஒன்னுத்தையும் முழுசா செய்யமாட்டிங்களாடா? அப்புடியே காத்தடிச்சவன், மெக்கானிக்கு எல்லாரையும் புடிக்க வேண்டியதுதானே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் தெற்கின் அரசியல் பக்குவமின்மையே! மங்கள முனசிங்க சாட்சியம்

அது சரிடா சாமி!. உங்கூர்ல பக்குவம்னா போட்டு தள்றதுதானே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சந்தேகமே போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்விக்கு காரணம்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

பசிச்சவந்தான் பழங்கணக்கு பார்ப்பான்னு சொலவடை. போட்டுதள்ளிட்டு உக்காந்து பழசுக்கு காரணம் கண்டு பிடிக்கிறானுவ பரதேசிங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிளி.மாவட்ட மீளக்குடியமர்ந்த மக்களுக்கு ரூபா 5000 நிதி உதவி: சிறிதரன் பா.உ. வழங்கி வைத்தார்

இத வச்சு ரெண்டு நாளைக்கு கஞ்சி குடிக்க காணுமா? அடிச்ச கோடி அத்தனையில சிந்தின அளவு கூட இருக்காதேடா பாவிங்களே! இதனாச்சும் குடுத்தீங்களா? போட்டோ புடிச்சப்புறம் புடுங்கிட்டீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் குற்றம் செய்யவில்லை; எனக்கு சனி மாற்றம் ஏற்பட்டுள்ளது : மேவின் சில்வா

சனி மாற்றமா ஏமாற்றமா? ராஜபிச்சை மாதிரி ஒரு நடை திருநள்ளாறு வந்துட்டு போயிருக்கலாம்ல? ஹய்யோ ஹய்யோ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: முக்கிய முடிவு எடுக்கப்படும்: இலங்கை மீனவர்கள் குழு

முக்காமலே எடுத்தாலும் கெடாச போறதுக்கு எதுக்குடா சீனு? ஒரே முடிவுதான் தமிழனுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா பதிலடி

சரியா குடுங்கப்பா. சிங்களத்தான்னு நினைச்சானுவளோ கண்டுக்காம விடுறதுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கள்ள மார்க்கெட்டில் திருப்பதி தரிசன டிக்கெட்: நாயுடு

ங்கொய்யால டிக்கட்டே விக்காம விட்டு பாரு. அவனவன் பார்த்துட்டு போய்ட்டே இருப்பான். தடுத்து தடுத்து, மந்திரி, மசுராண்டிக்கெல்லாம் தரிசனம் காட்டுறேன்னு காக்க வச்சிட்டு பேசுறானுவ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு புகழும்: ஜெ

அப்புறம் ஏங்க கலர்டிவி, கேஸ் ஸ்டவ்வு, ஓட்டுக்கு காசெல்லாம் குடுத்தா திட்றீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திமுக அரசை வீழ்த்துவோம்: மதிமுக தீர்மானம்

ஒரு அரச மரத்துல திமுகன்னு எழுதி கூட உங்களால வீழ்த்த முடியாது. மருத்துவர் ஐயா சண்டைக்கு வருவாரு. அது எங்க உரிமைன்னு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரையில் நவீன நிழற்குடை: மு.க.அழகிரி

கொடைக்குள்ள டிவி வச்சி டிவிடி காட்டுவீங்ளாண்ணா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மக்கள்தொகை கணக்கெடுப்பில் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் வேலை செய்யாதவர்கள்.

என்னேரமும் சீரியல் பாக்காதீங்கன்னா கேக்குதுங்களா? சென்ஸஸ் எடுக்க வரும்போதாவது நிறுத்தி இருக்கலாம்ல. இப்ப பாருங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, August 18, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.8

மனிதாபிமான படை நடவடிக்கையின் போது 6000 படையினர் கொல்லப் பட்டனர். 30,000 படையினர் காயமடைந்தனர்: கோத்தபாய

அடங்கொன்னியா! ஒன்னுக்கு பத்துன்னு கணக்கு வெச்சாக் கூட நீ போட்டுத்தள்ளுனது ஒரே நாள்ள எத்தனை. அந்த கணக்கச் சொல்ல மாட்டானே.
-------------------------------------------------------------------------------------------------------
இலங்கை விவகாரம்: கருணாநிதியை சந்திக்கிறார் நிருபமா ராவ்.

சரி சரி! அங்க எல்லாருக்கும் மறுவாழ்வு வழங்கப்படும். மீனவர் பிரச்சனை குறித்து உறுதி மொழி வாங்கியாச்சு.  மேடம் யேப்பி. தலீவர் யேப்பி. ஊதுங்கப்பா பீப்பீ!
-------------------------------------------------------------------------------------------------------
ஜீஎஸ்பி வரிச்சலுகையை இழப்பதற்கு ரணில், மங்கள மற்றும் புலி ஆதரவாளர்களுமே காரணம்: டலஸ்

இவங்களால இவ்வளவு பண்ணமுடியுது. உங்க அத்தனை பேரு, உங்க அல்லக்கைங்களால இதத் தடுக்க முடியலைன்னா, இவங்க கிட்ட குடுத்துட்டு வாத்து மேய்க்க போலாமே வெண்ணைகளா!
-------------------------------------------------------------------------------------------------------
பிரபாகரன், மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி கொடுமை: ரணில்

யா யா! புண்சேகா மசிரு கொட்டிப் போறத விடவா தமிழன் உசுரு போறது பெருசு?
-------------------------------------------------------------------------------------------------------
நல்லிணக்க ஆணைக்குழு முன் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்: செய்தி

என்ன கைய புடிச்சி இளுத்தியா மாதிரி எது கேட்டாலும், இஃப் யூ கொஸ்சன் ட குட் காஸ் யூ ஹாவ் ப்லட் இன் யுவ்ர் ஹாண்ட்ஸ்னு வெறிபுடிச்சா மாதிரி கத்தி  இருப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------
சரத் பொன்சேகாவை ஜெனரல் என அழைக்கக் கூடாது : இராணுவப் பேச்சாளர்

பின்ன? அவரு பெசலில்லையா?
-------------------------------------------------------------------------------------------------------
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை: இலங்கை மீனவர் சொல்கிறார்

அய்ங்! அப்ப மீன் புடிக்கப் போய் கடல்ல கனவு கண்டுட்டு சொல்றாய்ங்களா? முதல்ல இவரு மீனவரா அரசியல் அல்லக்கையா செக் பண்ணுங்கப்பா செக் பண்ணுங்கப்பா.
-------------------------------------------------------------------------------------------------------
எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு.

நியாயாம்தானே! நாள பின்ன வருமானத்துக்கு அதிகமான சொத்துன்னு வந்தா கணக்கு காட்ட வேணாமா?
-------------------------------------------------------------------------------------------------------
111 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா முடிவு

அய்ய! ஏற்கனவே கோவிந்தா! ஒன்னு கூட குறைய வாங்குங்கப்பா. இந்த நம்பர் சரியில்லை.
 -------------------------------------------------------------------------------------------------------
திரைப்படத்தொழிலில் இறங்கும் முகேஷ் அம்பானி

ஏம்பா? வம்பா நீ?. எங்க ஒரு தமிழ் படம் எடு பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------
புதிய விமான நிலையத்துக்கு குறுக்கே நிற்பது நியாயமா? கலைஞர்

தில்லிருந்தா விமானத்துக்கு குறுக்கே நிற்கட்டும். அதென்னா சின்னப்புள்ளத்தனமா விமான நிலையத்துக்கு குறுக்க நிக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------
ஊதிய உயர்வு போதாது: டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு

போதை கூடத்தான் போதலைன்னு கத்துறாங்க. நீங்க கலக்காமலா விடுறீங்க?
-------------------------------------------------------------------------------------------------------
டாஸ்மார்க் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஆமா! டாஸ்மார்க் ஊழியருக்கு ஆதரவா பேசினா ஏழைகளுக்கு எதிரில்லையோ?
-------------------------------------------------------------------------------------------------------
அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்

அவரு டாக்டருங்கையா! மத்தவங்களை வாய் திறக்கச் சொல்லிதான் பழக்கம்.
-------------------------------------------------------------------------------------------------------
சமூக நீதியைப்பற்றி பேச யார் தகுதி படைத்தவர்கள்: ராமதாசுக்கு கலைஞர் கேள்வி

சன் அண்ட் சன்ஸ்தான். நீங்க ஏன்யா கேள்வி கேட்டுகிட்டு. ஒரு பய இல்லைன்னு சொல்லட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
புதிய தமிழகம் கட்சியினர் கோஷ்டி மோதல்

இதுல கோஷ்டி சேர்க்குற அளவுக்கா இருக்காய்ங்க?
-------------------------------------------------------------------------------------------------------
கோவையில் மாபெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும்: காங்கிரசாருக்கு தங்கபாலு வேண்டுகோள்.

ஒரு 25000 பேரு வந்தா போறாது? அதுக்கு மேலல்லாம் எதிர்பார்த்தா நெம்ப ஓவருல்ல?
-------------------------------------------------------------------------------------------------------
அசின் படத்தை வாங்க சக்தி சிதம்பரம் முடிவு

பேரு குடுக்குற சக்திதான்.
-------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் நிலை: கண்கலங்கிய ரஜினி

ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.
-------------------------------------------------------------------------------------------------------

Sunday, August 15, 2010

கேரக்டர் - மணிக்கோனார்...

காமாச்சியப்பத்தி சொல்லிட்டு மணிக்கோனாரை சொல்லாம ரொம்பநாள் கடத்திட்டேன். மனுசன் சண்டியர். ஆளென்னமோ ஒல்லியாத்தான் இருப்பாரு. தொண்டை மட்டும் எட்டூருக்கு கேக்கும். அதுவும் எப்பொழுதாவது ஒரு சாவுக்குப் போய் சரக்கடித்து விட்டு,  அவிழும் லுங்கியை ஒரு கையில் சுருட்டி, அரை நிஜார் தெரிய, அங்கங்கே ப்ரேக் போட்டு, காசித்துண்டை மறுகையில் சுழட்டி ‘ஏய்! வர்சொல்லு அவன! தில்லிருந்தா இங்க, இதோ இங்க’ என்று உட்காரப்பார்த்து விழுந்தாலும் சமாளித்து தரையைத் தட்டி சவால் விடும்போது, எதிரில் வருபவர்கள் மிரள்வது சகஜம்தானே!

அத்தனை போதையிலும் அடையாளம் மட்டும் தெரியும். ‘நீ ஏன் அய்ரம்மா பயந்துகினு போற! அந்த பேமானிய திட்றேன். நீ போம்மா’ என்று கை காட்டுவார். தெருவோரம் பயந்து ஒண்டிக்கொண்டு போகின்றவரை, ‘அய்ய! மொய்லியாரம்மா என்னா சடாய்க்கும். பயந்துனு ஓடுது பார்! என்று சிரிப்பார். எல்லாம் காமாச்சி வரும்வரைதான்.

காமாச்சி வந்து, வெற்றிலை குதப்பிய எச்சிலை ‘த்தூ’ என்று கால்வாயில் உமிழ்ந்து, ‘இன்னான்றேன்’ என்று ஒரு வார்த்தைதான் சொல்லுவாள். ‘வந்துட்டியாம்மே! என்ன இன்னா கேட்டாந்தெரிமாமே அவன்’ என்று ஆரம்பிக்கும்போதே வேறு பேச்சின்றி வீட்டின் பக்கம் கைகாட்டுவாள். பெட்டிப்பாம்பாய் ஒரு சத்தமின்றி தள்ளாடியபடி போய், வீட்டுத் திண்ணையில் விழுவார்.

பால் கறக்க காலையில் வரும் அழகே அழகு. பசுவுக்கு பித்தளை அடுக்கு. எருமைக்கு அலுமினியம். அதிலும் எருமையின் அடுக்கை அதன் கொம்பிலேயே மாட்டி விடுவார். இரண்டு பசுக்களுக்கு நடுவே ஏதோ பேசிக்கொண்டு தயங்கி வரும் எருமைகளுக்கு மிரட்டல் விட்டுக் கொண்டு ஒரு வீடு தள்ளியிருக்கும் எங்கள் வீட்டு வாயில்தான் முதல் ஸ்டாப்.  ‘மா! பாலு’க்கு பாத்திரம் எடுத்துக் கொண்டு ஓடுவேன்.

பசுக்கள் இரண்டும் ஒரு மின்விளக்குக் கம்பத்தின் கீழ் தானே போய் நின்று கட்டிக் கொள் என்று சொல்லாமல் நிற்கும். எருமைகளை மட்டும் தட்டி குத்தி ஓரம் கட்டுவார். பித்தளை அடுக்கை கவிழ்த்து வேகமாய் சுற்றி ’பார்த்துக்கம்மா’ எனும் போதே, ’மணி! சுத்தாத என்பாள் அம்மா. அடுக்கில் தண்ணீர் இருந்தால், வேகமாக சுத்தி சிந்து முன்னரே டபக்கென நிமிர்த்தி தண்ணீர் இல்லை என ஏமாற்றும் டெக்னிக் புரிந்தது அப்போது.

குத்துக்கால் போட்டு உட்கார்ந்து, பசுவின் மடி அளைந்து, சுரப்பெடுக்கும் போதே ஏதோ ஒரு எம்.ஜி.ஆர் பாட்டு தவழும் உதட்டில். கால் இடுக்கில் அடுக்கை சரிவாக வைக்கும் போதே முதல் பீச்சு அடுக்கின் அடியில் விழவேண்டும் என்ற குவாலிட்டி கண்ட்ரோல் அமலாகும். அந்த சத்தத்திலேயே ‘மணி! பாத்திர ஓரம் கரக்காதே’ என்ற அடுத்த வார்னிங் வரும்.

படிக்காத அம்மாவுக்கு, சுற்றுவதைப் போலவே, படக்கென கவிழ்த்து நிமிர்த்தினாலும் பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும் என்ற அறிவியல் அறிவு அதிகம். அப்படி வைத்துக் கொண்டு வெறும் பாத்திரத்தில் விழுவது போல் ஏமாற்ற பாத்திரத்தின் ஓரத்தில் கறப்பார்களாம்.  ‘அய்ரம்மா நம்பவே நம்பாதே’ என்று சிரித்தபடியே கறந்தாலும், வேடிக்கை பார்க்கிற சாக்கில் எனக்கு இன்ஸ்பெக்‌ஷன் டூட்டி தப்பாது.

சர சர வென்று கறக்க கறக்க நுரையில் பால் பீய்ச்சி வரும் இசை கேட்டு எவ்வளவு வருஷமாகி விட்டது. கறந்து எழுந்து நுரை வழித்து மாட்டு வாசனையோடு மீசை போடுவார். உதட்டால் நக்குவதை ரசித்துச் சிரித்தபடி பால் ஊற்றுவார். குழந்தையிருக்கும் வீடுகளுக்கு மட்டும் கறந்தபால். அப்புறம் எருமை கொம்பு அடுக்கிலிருந்து தண்ணீர் டபக்கென கலக்கும்.

பாலைக் கொண்டு வீட்டில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்க ஓடி வந்து விடுவேன். பசுக்களை அவிழ்த்துவிட்டு போங்க போங்க என்றால் போதும் தானே போய்விடும் வீட்டுக்கு. எருமைகளுக்கு பிடிக்கும் சனி. முட்டி மடக்கி குத்துவதில் என்ன ஆனந்தமோ. ‘தே! ட்ரு’க்கு சண்டி பிடித்து இன்னும் ரெண்டு குத்து வாங்கித்தான் போய் நிற்கும்.

அதில் ஒரு மாட்டுக்கு மட்டும் லுங்கியை தூக்கி ட்ரவுசர் உள்ளே கை விட்டு ஒரு பெரிய வயால் மருந்து எடுப்பார். அடுக்கின் அடியில் தட்டி முனை உடைப்பார். அடுக்குக்குள்ளிருந்து ஊசியெடுத்து, மருந்து உறிஞ்சி பெரிய டாக்டர் மாதிரி கொஞ்சம் மருந்து பீய்ச்சியெடுத்து, உள்ளங்கையில் பிடித்து அடி மடி அருகே ஒரு குத்து குத்தும்போது என்னையறியாமல் ‘ஸ்ஸ்ஸ்’ வரும். கட்டை விரலால் மருந்தேற்றி, தள்ளி விட்டு, மற்ற மாட்டு அருகே உட்கார்ந்து கறக்க ஆரம்பிப்பார்.

அதற்குள், காமாச்சி அடுக்குகளுடன் வர எல்லா மாட்டுக்கும் கறந்து முடித்து, கைக்கு ரெண்டு அடுக்கும் ஆழாக்கும் சொருகியபடி அம்மா பால் என்று விடும் சவுண்டில் மூன்றாவது வீட்டு ஆட்கள் வந்து விடுவார்கள். ஐந்தரை மணிக்குள் வாடகை வீட்டுப் பால் கடமை முடிந்து, சைக்கிளில் டீக்கடைக்கு எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்தால் ஒன்பது மணிக்கு பல் விளக்கி நாஷ்டா சாப்பிடும் வரை தூக்கம்.

பிறகு நீர் இறைத்து, மாட்டைக் கழுவி தவிடு, புண்ணாக்கு, வைக்கோல், பசுவுக்கு மட்டும் புல் என்று பிரித்துப் போடுவார். அதற்குள் தொழுவத்தை காமாட்சி சுத்தமாக கழுவி விட்டிருப்பாள். பிறகு சைக்கிள் எடுத்துக் கொண்டு போய் தீவனம் வாங்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டு, குளித்து முடித்து வர பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளுடன் சாப்பிடக் காத்திருப்பார்.

ஒரு தூக்கத்துக்குப் பிறகு மாலை மீண்டும் பால் வேலை. ஆறு மணியளவில் குளித்துவிட்டு கிளம்பும் போதே காமாச்சி குரல் கொடுக்கும் ‘ஒய்ங்கா வர்ணும் தெர்தா’ என்று. ஏழரை மணி வாக்கில் பெரும்பாலும் ஒழுங்காகவே வந்து சாப்பிட்டு ஒரு பீடி குடித்து விட்டு, திண்ணையில் பாய் விரித்து கட்டையை நீட்டுவார்.

அக்கம் பக்கம் சண்டைகளில் சொம்பில்லாத நாட்டாமையாக குரலை மட்டுமே வைத்து சமாதானம் செய்வதில் சமர்த்தர். கட்சித் தொண்டர் வேலை வேறு. அந்தச் சமயங்களில் காமாச்சியிடம் பெருமிதம் கலந்த திட்டு வாங்கும் போது வாய் கொள்ளாச் சிரிப்போடு சமாளிப்பார்.

அவர் மகனும் என் வகுப்பில் படித்தாலும் முரடன், என்னை விட பெரியவன் என்பதால் நெருக்கமில்லை. ஒரு முறை தவிட்டுக்கு கொடுத்த காசை ஆட்டையப் போட்டு விட்டு, பள்ளிக்கு வந்துவிட பாதி வகுப்பில் ஜன்னல் வழியாக மணிக்கோனார் குதித்து வீசிய அணைக்கயிற்றடிக்கு அவன் தாவிவிட, தடுக்க வந்த ஆசிரியரின் முழுக்கை சட்டை கிழிந்துபோகும் அளவுக்கு விழுந்தது அடி. ஒத்து சார் என்று கத்தியபடி வீசிய அடுத்த வீச்சில் மகனின் சட்டையும் முதுகும் சேர்ந்து பிய்ந்தது.

குத்து வாங்கும் எருமை போலவே சட்டை செய்யாமல் நின்றவனின் மேல் அடி விழாமல் மத்த வாத்திகள் மணிக்கோனாரை அழுத்தி தவிட்டுக்காசை மீட்டுக் கொடுத்தார்கள். இருவருக்கும் எப்போதும் ஆகாது. பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆகி படிக்கமாட்டேன் என்று அடி வாங்கி, சரி மாடுதான் இவனுக்கும் என்றானதில் கோனாருக்குக் கொள்ளை வருத்தம்.

இரண்டு மூன்று வருடங்கள், அஸிஸ்டண்டாக வந்து கோனார் மேற்பார்வையில் பால் கறந்து, வீடு கடைகளுக்கு ஊற்றினாலும், காசு விஷயம் மட்டும் கோனார்தான் பார்த்துக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக கோனார் ரிடையர்மெண்ட் எடுத்து, வீட்டோடு இருந்த ஒரு நாளில் பெரிய சண்டை அவர் வீட்டில். வீதிக்கு வீதி போய் பால் ஊற்ற அவசியமில்லை. பால் டிப்போவில் மொத்தமாகக் கறக்கலாம் என்பது பையன் வாதம்.

துட்டு பெரிசில்லடா! மனுசாள் முக்கியம்! எத்தினி வர்சம் தெரியுமா? தாயா புள்ளையா செய்ற தொழிலு. என் கை பால் குடிச்சி வளந்த பசங்க கொய்ந்தைங்களுக்கு கூட என் கை பால்தான். தொரைக்கு அவமானமா இருக்கா என்று கை ஓங்கியவரை நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டான்.

‘என்னையாடா? என் நெஞ்சுலயாடா கை வச்சிட்ட?’ என்று டாக்டரின் ஸ்டெத்தைப் போல் எப்பொழுதும் கழுத்தைச் சுற்றியிருக்கும் அணைக் கயிற்றை கீழே வீசியதோடு ஒதுங்கிப் போனார். அன்று மாலை குடித்துவிட்டு கத்தியபோது மட்டும் காமாச்சி ‘இன்னான்ற’ சொல்லவேயில்லை. பிறகு எப்போதாவது செல்லப் பசுக்களுக்கு பொட்டு, புண்ணாக்கு தண்ணீர் கலக்கி ஊட்டுவதோடு சரி.

கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி, திண்ணையோடு ஒடுங்கியே போனவருக்கு காமாச்சி மட்டுமே எப்போதாவது பேச்சுத் துணை. காமாச்சியின் பிள்ளை குளிப்பாட்டல் சம்பளமும், குடலேற்ற வைத்தியம், கோமயம் வித்த காசும் இவர்கள் செலவுக்கு என்றானது. குடிப்பதும் தினசரியென்றாகிப் போனாலும், அமைதியாக வந்து திண்ணையில் விழுவார். 

குடித்துப் புண்ணான வயிற்றில் டைஃபாய்டும் சேர்ந்து வந்து கிடப்பாய் கிடத்தி கொண்டே போனது. போனது மணிக்கோனார் மட்டுமல்ல. முன்பு சொன்னபடி, காமாச்சியின் மனசையும் கொண்டே போனார். கோனாருக்கு பதில் வீட்டோடு முடங்கிப் போனாள் காமாச்சி. 

Friday, August 13, 2010

இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா?

பொறுப்பி:

1.இந்த இடுகையிலிருக்கும் தகவல்கள் மேம்போக்காக எழுதப்பட்டவை அல்ல. என் முப்பத்து ஐந்து வருட சர்வீஸில் முப்பது வருடங்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான விதிமுறைகளுடன் கழிந்துள்ளதன் அடிப்படையில் எழுதியது.

2.ஒரு புறம் இதன் பயனை அடைவோர்களின் மேலான என் பெருங்கோபத்தைச் சரிவர புரியவைக்க இயலுமா என்ற பயமிருந்த போதிலும் வேறெந்த வழியிலும் இந்த உண்மை தெரியவரப் போவதில்லை என்பதே எழுதியாக வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.

3. எடுத்தோம் எழுதினோம் என்று எழுதியதில்லை இது. திரு காமராஜ் இடுகையில் அனேகமாக மூன்று மாதங்களுக்கு முன் இட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சி இது.

4.தகவலில் சந்தேகமிருப்பின் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் எந்த அரசு அலுவலகத்திலும் இதில் சொல்லப்படும் தகவலை உறுதி செய்துக் கொள்ள இயலும்.
______

சாதிவாரிக் கணப்பெடுப்புக்கு கோரிக்கை வைத்திருக்கும் நேரமிது. அதன் பின்னான அரசியல் குறித்த விடயம் நமக்கு அக்கறையில்லை. இப்போதிருக்கும் சட்டத்தின் படி இட ஒதுக்கீடு என்பது முற்று முழுதாக அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒன்று. 

இதனைப் பெற எத்தனைப் போராட்டங்கள்? எத்தனை உயிர்த் தியாகங்கள்? அப்படிப் போராடிப் பெற்ற ஒரு சலுகை எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்தக் குறிக்கோளை அடைந்திருக்கிறதா? இல்லையெனில் காரணம் யார்?

இது குறித்தான அலசலுக்கு முன் இரண்டு நாட்களுக்கு முன்பான செய்தி இது. ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்.

New Delhi, Aug 11 (IANS) A total of 54,637 posts for Scheduled Caste, Scheduled Tribe and Other Backward Classes are vacant in central government ministries and departments.

Minister of State in the Prime Minister's Office Prithviraj Chavan told parliament Wednesday that the number of vacancies in the three categories were 26,565, 25,649 and 21,143 respectively.

Of these, 12,045, 2,799 and 3,876 posts had been filled, Chavan said in the Lok Sabha in reply to a question from P.L. Punia.

The minister said a special recruitment drive was launched Nov 19, 2008 to fill up the backlog of reserved vacancies

படித்தவுடன் மனதில் எழும் கேள்வி, இத்தனை காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக் காரணமென்ன? அரசா என்பது.

ஸ்பெஷல் ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் எனும் சொல் இது அரசின் தவறல்ல. வழக்கம்போல் நடைபெற்ற தேர்வுகளில் நிரப்பப்படாமல் சேர்ந்து போன இடங்கள் என்பதாலேயே, மீண்டும் இவர்களுக்கு மட்டுமே ஒரு சிறப்புத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதைச் சுட்டுகிறது.

அப்படியெனில், நாட்டில் வேலையின்மை என்பதே இல்லையா? அரசுத் துறையை புறந்தள்ளி தனியார்த் துறையில் சலுகைகளும் சம்பளமும் அதிகமாகவா இருக்கிறது? பின்னெப்படி இத்தனை காலியிடங்கள் சேர்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழும்புகிறதா இல்லையா?

மாநில வாரியாகப் பார்த்தோமானால், கேரளாவில் ஒரு இடம் கூட இப்படி காலியிருக்காது. தமிழகத்தில் மிக அதிகமாயிருக்கும் என்பது என் கணிப்பு. இதற்கு முன்பே ஒரு இடுகையில் கூறியிருந்தபடி ரயில்வே ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் நடத்தும் இத்தகைய ஸ்பெஷல் ட்ரைவ்களில் பங்கேற்போர் பெரும்பாலும் பீகார் மாநிலத்திலிருந்தும் இதர வட மானிலங்களிலிருந்து வந்தவர்களுமே. அப்படியும் பங்கேற்போர் சதவீதம் வெகு குறைவே.

இது பனிப்பாறையின் ஒரு விளிம்பே. ஆரம்பக்கட்ட வேலை வாய்ப்பில் நிரப்பப் படாத காலியிடங்களின் எண்ணிக்கை மட்டுமென்றே கொள்ளவேண்டி யிருக்கிறது.

இதையும் தாண்டி இச் சலுகையின் பின்னான முக்கியத்தை உணராமல் அரசு இயந்திரத்தை முடக்கிப் போடுபவர்கள் யார்? தன்னலம் என்று கூட சொல்லமாட்டேன் தன்சுகம் கருதி, தன்னையொத்தவன் வயிற்றில் மண்ணள்ளிப் போடுவது யார்? இட ஒதுக்கீட்டின் பயன் அனுபவிப்பவர்களே என்பது அதிர்ச்சியளிக்கக் கூடும்.

அரசுப் பணியானது வர்ணாஸ்ரமத்தைப் போன்றே நான்கு. க்ரூப் ‘A’, ‘B', 'c', மற்றும் ‘D' எனப்படும் கடை நிலை ஊழியர்கள். இதில் க்ரூப் 'A' என்பது ஐ.ஏ.எஸ் போன்ற நேரடி வேலை வாய்ப்பு. அதிலும் பின் தங்கல் இருக்கிறதென்றாலும் அது குறித்த விவாதமில்லை இது. B,C, மற்றும் D குறித்தான நிலைப்பாடு இது. 

க்ருப் ‘D' மற்றும் க்ருப் ‘c' பிரிவுகளில் பணி உயர்வுக்கு வாய்ப்பாக பல்வேறு நிலைகளில் பதவிகள் இருக்கும். ஒவ்வொரு பதவியிலும் மொத்த எண்ணிக்கையில் 15 சதம் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் 7.5 சதவீதம் மலைச் சாதியினருக்குமான ஒதுக்கீடாகும்.

பதவி உயர்வு பெரும்பாலும் மூப்பு மற்றும் தகுதி என்ற அடிப்படையிலும், பல பதவிகளுக்கு தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலும் அமைந்துள்ளது. இந்தத் தேர்விலும் பொதுஜன பாதுகாப்பு தவிர இதரப் பதவிகளுக்கு குறைந்த மதிப்பெண்கள் போதுமானது. 

ஆனால் உண்மையில் நடப்பதென்ன? மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும் வரை இவர்களுக்குப் பிரச்சனையில்லை. தேர்வு என்ற கட்டம் வரும்போது பெரும்பாலோர் பங்கேற்க முன்வருவதில்லை. காரணம் பொறுப்பை ஏற்கத் தயக்கமும், எதற்கு தேவையற்ற ரிஸ்க் என்ற மனோபாவமும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

சரி இதனால் என்ன பாதிப்பு? அது அவர்கள் உரிமையல்லவா என்று கேட்கலாம். நிச்சயமாக அவர்கள் உரிமைதான். ஆனால் அவர்கள் உரிமைக்கு பலிகடா ஆவது யார் தெரியுமா? அவர்களேதான். காரணம், அவர்கள் தேர்வுக்கு தயாரில்லை எனும் பட்சத்தில் அவர்களுக்கு மேலான பதவிகளுக்கான காலியிடம் அப்படியே இருக்கும். வேறு எந்த விதமாகவும் அதை நிரப்ப முடியாது.

அதே போல் இவர்களுக்கு கீழ் பதவியில் இருப்பவர்களின் பதவி உயர்வையும் இவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் பாதிப்பாகும். இதற்குக் காரணமென்ன? சலுகையளிக்கிறோம் என்ற பெயரில் அரசும் ஒரு வகையில் காரணம்.

ஒரு பதவியில் குறித்த காலம் பணியாற்றி அனுபவம் பெறு முன்னரே அதற்கும் உயரிய பதவியில் காலியிடமிருக்கிறது என்ற காரணத்துக்காக, மடமடவென பதவி உயர்வளித்து ஒரு நிர்வாகப் பொறுப்புக்கு உரித்தாna பதவியில் அவர்களை அமர்த்துகையில் அப்பணி குறித்தான அனுபவ அறிவோ, தகவலறிவுக்கோ வழியின்மை அவர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக்குகிறது. 

இப்படித் தேங்கிப் போன பதவி உயர்வுகளுக்கான காலியிடங்களை நிரப்பவே முடியாது என்ற நிலையில், அடிப்படைப் பதவியிலும் சேர ஆட்களே இல்லாமல் பதவிகள் தேங்கியும் கிடக்கிறதென்றால் தவறு எங்கே?

பெரும்பாலான நிர்வாகப் பதவிகள், காலியிடங்களாகவே இருக்கும் பட்சத்தில் அரசு நிர்வாகம் எப்படி சீராக நடக்கும். அரசுக்கு இதனால் நஷ்டமா என்ன? துண்டு போட்டு வைத்திருக்கிறது, குந்த ஆட்கள் இல்லையெனச் சொல்லிவிட்டு சும்மாயிருக்கும். 

இஞ்சினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரி, பட்டப்படிப்புகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது அல்லவா. அவற்றிலும் காலியிடங்கள் இருந்தாலும் அது மிகக் குறைவே. அப்படிப் படித்து தேறி வருபவர்கள் அரசுத் தேர்வு எழுத மறுப்பது ஏன்? இரயில்வே போன்ற தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஏன் இஞ்சினியர்கள் பங்கெடுப்பதில்லை. 

எஞ்சினியரிங் படித்துவிட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு தேர்வாகி அட்டெஸ்டேஷன் என்று வருபவர்களிடம் ஏன் இப்படி என்றால் வரும் பதில் என்ன தெரியுமா? ஏதோ ஒரு வேலை வேணும்சார். இதுன்னா ரிஸ்க் இல்லையாம். ஒரு பட்டப் படிப்பு படித்து இந்த வேலைக்கு காத்திருப்பவன் வாயில் மண்ணள்ளிப் போடுவதில்லையா இது? 

இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். காண்ட்ராக்ட் மருத்துவர்களாக வரத்தயாராய் இருப்பவர்கள் ஏன் UPSC பரீட்சை எழுதி அரசு டாக்டராக வர மறுக்கிறார்கள்?

இப்போது சொல்லுங்கள். இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா இல்லையா?
~~~~~