Wednesday, June 30, 2010

ப்ரோட்டோகால்

இந்த மாதம் 26ம் தேதி நம்ம சிதம்பரம் ஐயாவும் மாலிக் ஐயாவும் இஸ்லாமாபாத் நகரில் சந்திச்சாங்களாம். அப்ப இந்தியக் கொடி தலைகீழா இருந்திச்சாம். சிதம்பரம் ஐயா என்ன இருந்தாலும் ஐ.பி. தலைவரில்லையா. டக்குன்னு கண்டுபிடிச்சி மாலிக் கிட்ட ‘என்ன்னாதிது’ன்னாராம். அவரு ‘ஹி ஹி..ச்ச்சாஆஆரி’ன்னு சரி செய்தாராம். இதெல்லாம் ஒரு மேட்டர்னு இடுகை தேத்துறியான்னு கேக்கறீங்களா! நாயந்தான். சிதம்பரம் ஐயாவே அப்புடித்தான் சொல்லி இருக்காரு. 

“I think its a minor mistake and I don’t think we should make much of it.’’

தமிழ் பேப்பரில் திரு சிதம்பரம், கொடி தலைகீழா இருந்ததை ஃபோட்டோ பிடித்தவர்கள் சரி செய்த பிறகும் படம் எடுக்க வேண்டாமா என்று கேட்டிருக்கிறார். நாயந்தானே!

இந்த கொடிகாத்த குமரன்னு ஒருத்தர சொல்லுவாய்ங்களே அவரு காங்கிரஸ்காரருங்ளாண்ணா? 

சரி சரி! நமக்கெதுக்கு வீண் விவகாரம். அவரே சின்ன்ன விஷயம் இதுன்னு சொன்னப்புறம் நாம ஊதி பெருசாக்குறது சரியில்லை. இப்ப மேட்டரு என்னன்னா படிச்சதும் படக்குன்னு தோணுனது,  அத கண்டு பிடிச்சி அவருகிட்ட நொணாவட்டம் சொல்லி அவருதான் மாத்தணுமா? என் தேசக் கொடி இப்புடி சிரசாசனம் பண்ணப் போச்சான்னு பதறிப் போய் இவரு மாத்தியிருக்க வேணாமாங்கிறது.

இந்த ப்ரோட்டோகால்னு வேற எங்க இருக்கோ இல்லையோ, அரசியல்லையும் அதிகார வர்க்கத்திலையும் இதில்லாம முடியாது. புரோட்டாகாலுன்னாவது சொல்லத் தெரிஞ்சிருக்கணும். இந்த ப்ரோட்டோகால் என்கிற நெறிமுறை காரணமாத்தான் நம்ம ஐயா, அவர மாத்த வச்சிருக்கணும்னு தோணுது. 

இந்த ப்ரோட்டோகால் படுத்தற பாடு இருக்கே. சிப்பு சிப்பாவும் வரும். துப்பலாம் போலவும் வரும். சாம்பிளுக்கு கொஞ்சம்:

  • காலையில அதிகாரி வரும்போது அவரு டவாலி அதான் ப்யூன் போர்ட்டிகோவில் காத்திருக்கணும். ஒரு வணக்கம் சொல்லி, கதவைத் திறந்துவிட்டு, அவரு பொட்டி, சாப்பாடு எல்லாம் எடுத்துகிட்டு அவருக்கு முன்ன ஓடி, அறைக் கதவைத் திறந்து பிடிக்கணும். திரும்ப சாயந்திரம் கிளம்பும் போதும் இதே கூத்து. ஒரு அதிகாரி சொன்னாராம் அவர் ப்யூனிடம்.தம்பி காலைல ஒரு முறை சாயந்திரம் ஒரு முறைன்னு இல்லை. நான் போக வர நீ வணக்கம் சொல்லணும்னு. 
  • போகுறப்ப கார்க்கதவ சாத்திட்டு, கிளம்பற வரைக்கும் பக்கத்துல நிக்கப் படாது. எதிர் பக்கமா சல்யூட் அடிச்சிட்டு நிக்கணும். அதிகாரி உடனே தலையாட்ட மாட்டாரு. கொஞ்ச நேரம் நிக்க வச்சிட்டு அப்புறம் சரிம்பாரு.
  • வெளியூர்ல இருந்து ஒரு அதிகாரியோ, மந்திரியோ வராருன்னா விமான நிலையத்துல போய் காத்திருந்து வரவேற்று, திரும்ப ஏத்தி விடுறது முறை. உள்ளூர் ஆளுங்களுக்கு என்ன? அதிகாரிக்கு 6 மணிக்கு விமானம்னா கீழதிகாரிங்க மூணுக்கும் நாலுக்கும் அலாரம் வச்சி, எங்க தூங்கிறுவமோன்னு ராவெல்லாம் விழிச்சி எழுந்து ஓடணும்.
  • இதுங்க உதவியாளருங்க பாடு இருக்கே பெரும்பாடு. இங்க இருக்கிற அதிகாரி சீனியரா இருப்பாரு. ஏதோ ஒரு காரணத்துல இவருக்கு அதிகாரி ஜுனியரா இருப்பாரு. இவரு உதவியாளரிடம் அவருக்கு கனக்‌ஷன் போடும்பாரு. உதவியாளர் ஃபோன் போட்டா அந்த அதிகாரியோட உதவியாளர், நீ உங்காள கூப்புடு எங்காளுதான் அதிகாரிம்பாரு. இங்க இருக்கிறவன், யோவ் எங்காளுதான் சீனியரும்பான். இதுல என்னாங்கறீங்களா? முதல்ல எடுக்கிறவரு மத்தவருக்காக காத்திருந்தா ப்ரோட்டோகால் என்னாவறது?
  • நம்ம நண்பர் ஒருத்தர் இருக்காரு. ப்ரோட்டோகால்ல கரை தேர்ந்தவரு. அவர் கைமறதியா பெல்லடிச்சிடுவாரு. ப்யூன் வந்து என்னாங்கன்னு நிப்பாரு. எதாவது காரணமா கூப்பிட்டிருந்தாதானே? சாரி சொல்லிட முடியுமா? ஒரு துண்டு பேப்பரை கிழிச்சி சுருட்டி, குப்பைக் கூடை பக்கத்துல எரிஞ்சிட்டு, அதை எடுத்து கூடையில போடுன்னு சொல்லிட்டு வேலையப் பார்ப்பாரு. 
  • இன்னொருத்தருக்கு ஒரு கிலோமீட்டரில் வீடு. மதியம் சாப்பிட வீட்டுக்குப் போவார். காலையில் வந்து இறங்கியதும் அவருடைய ப்யூன் இவரோட ப்ரீஃப் கேசை எடுத்துக்கிட்டு வரணும். திரும்ப சாயந்திரம் எடுத்துட்டு போகணும். உள்ள ஹிந்து பேப்பரும், ஆஃபீஸ் சாவியும் இருக்கும். இதச் சுமக்க முடியாதாங்கறீங்களா? ப்ரோட்டோகால் என்னாவறது?
வெளிய வந்து அவன் திட்டுறதிட்டு எந்த ப்ரோட்டோகால்லையும் அடங்காது. ச்ச்சேரி. இதுக்கே உங்களுக்கெல்லாம் பொரட்டிகிட்டு வரும். இதுக்கு மேலையும் சொல்லுறது ப்ரோட்டோகாலில்லை. வர்ட்ட்டா!... 

(டிஸ்கி: இதைப் படிச்சிட்டு அடப்பாவி மனுஷா! ஏடிஎம்ல பணம் எடுக்குறதில இருந்து எல்லாத்துக்கும் ஒரு ஆளைத்தேடுற ஒரு ப்யூனாதிக்கவாதி என்னமா எழுதுறான்னு இந்த ப்ரியா பொண்ணு நக்கலடிக்கும். அது ப்ரோடோகாலில்லை. அன்பு. அம்புட்டுதான். )


Sunday, June 27, 2010

கேரக்டர்-சுப்புப் பாட்டி.

அரக்காணி நிலத்துக்கு அண்ணந்தம்பிக்குள்ள வெட்டு குத்து நடக்குற யுத்த பூமி அது. விசுவாசம் பெருசுன்னு அண்ணி தாலிய அறுக்கிறதும், அண்ணன் தம்பி வம்சத்தை குடிசையோட கொளுத்தறதும் அடிக்கடி நடக்கும் பூமி. 

அட்சரம் படிக்க பள்ளிக்கூடம் போறதாவது பொட்டச்சிறுக்கின்னு ஒம்பது வயசுல கட்டிக் கொடுத்து முப்பத்தஞ்சு வயசுல போனதுக்கு கணக்கு தெரியாம, இருக்கிற ரெண்டு ஆம்பிளப் புள்ளையளையும், நாலு பொட்டப் புள்ளையளையும், அறுத்தவளா ஒத்தப் பொம்பளையா காடு கழனிய காப்பாத்தி, இதுங்களையும் கரை தேத்தி, ஊருக்கெல்லாம் நாயம் சொல்லுற மூத்த பையனை அவருடைய அறுபத்தைந்தாவது வயதில் 'ஒக்க பனி சரிக்கா செய்யடு. ஊரிகி ந்யாயம் செப்புதாடு, தொங்க சச்சினோடு’ (ஒரு வேலை ஒழுங்கா செய்யமாட்டான். ஊருக்கு நீதி சொல்லுவான், திருட்டு சாவுகிராக்கி) எனத் திட்டும் ஒருத்தியை காலம் எனக்குக் காட்டிக் கொடுத்தது. 

ஆச்சாரம் என்ற தன்னார்வச் சிறை, சிறை தாண்டிய மனிதம், கண்டிப்பு, பாசம் பாசம் என்று ரெக்கைக்குள் பொத்தி வளர்த்த தாய்ப்பறவை சுப்புப் பாட்டி. முதல் முறை பார்க்கப் போகிறேன். பெரியவர்களை பார்க்கப் போகையில் மாதுளம் பழம் கொண்டு போவது மரியாதை என்று எங்கோ படித்தது நினைவிருக்க, வழியில் சரியாக தள தளவென மாதுளம் பழம் விற்க இரண்டு பழம் கொண்டு போய் கையில் கொடுத்து நமஸ்கரித்தேன்.

ஒரு வார்த்தை கேட்டிருந்தால் தோப்பையே வாங்கிப் போடும் வசதியுள்ள மகன்களிடம்,  ‘சூடண்டரா! நாகு நா மனவடு தானிம பண்டு தெச்சினாடு. ஒக்க ரோஜு மீரு கொனிச்சினாருடா? சக்ககா உண்டு நாயனா’ (பாருங்கடா! எனக்கு என் பேரன் மாதுளம் பழம் வாங்கிக் கொண்டுவந்தான். ஒரு நாளாவது நீங்க வாங்கி கொடுத்தீங்களாடா? நன்றாயிரு அப்பா) என்று ஆசீர்வதித்தாள். 

ஐந்தடிக்குக் குள்ளமான உருவம், காவிக்கலர் முரட்டுத் துணியில் முக்காட்டுச் சீலை, வெறும் கையில் சோறு போட்டால் புள்ளைகளுக்காகாது என்ற சம்பிரதாயத்துக்கு காப்பு. பொக்கை வாய் நிறைய வாஞ்சையும் வசவும். நூத்திநாலு ஜூரமடித்தாலும், கருக்கலில் எழுந்து குளித்து அடுக்களை புகுபவள், மதிய உணவுண்டு மணையில் தலைசாய்க்கும் நேரம் மதியம் பன்னிரெண்டு.  பேரன் பெயர்த்திகளை ‘பப்பன்னம்’ (பருப்பு சாதம்) கொடுக்க ஆரம்பிக்கும் வரை தொட்டுக் கொஞ்சியவள், அதே வாஞ்சையுடன் எட்ட நின்று ( ‘மடுகு’-மடி) என்று ஒதுங்கி நின்று கொஞ்சும் மனசுக்காரி.

‘தேவுடு சல்லகா சூடனி’ (கடவுள் ஆதரவாயிருக்கட்டும்) என்ற சொல் தவிர வீட்டிலோ கோவிலென்றோ போய் பூஜை புனஸ்காரம் என்று பார்த்ததில்லை. கங்கேச யமுனேசைவ என்று கிணத்தடியில் நீரூற்றிக் கொள்கையில் முணு முணுக்கும் ஸ்லோகம் சமைக்கையில், ஒரேய்க்கும் ஒசேய்க்கும் (அடேய், அடியேய்) இடம் விட்டு விட்டு சாப்பிட உட்கார்ந்து கைகூப்பி முதலன்னம் ஒதுக்கும் வரை தொடரும்.

சின்ன மகன் வாங்கிய பழங்கால வீட்டை விரிவுபடுத்தும் பொறுப்பு கிழவி தலையில் விழுந்தபோதுதான் அவளை முதலில் பார்க்க நேர்ந்தது. பூமி பூஜைக்கும் கிரக ப்ரவேசத்துக்கும், நடுவில் ஒரு முறையுமான மூன்று நாட்களில் எத்தனை படித்தேன் அவளிடம். 

முதல் நாள் இரவு லாரியில் வந்திரங்கிய கொத்தாள் சித்தாளுக்கு முதல் வேலை, தெற்கு வடக்காய் ஒரு அளவான கூரையும், குறுக்காக ஒரு கனமான மூங்கில் கட்டையும் அமைப்பது. அது முடிந்தவுடன் தலமைக் கொத்தனாரிடம் சாப்பாட்டுக்கு பணம் கொடுத்து ‘எவரன்னா தாகி வச்சினாரோ சம்பி படேஸ்தான் ஜாக்ரதா!’ (யாராவது குடிச்சிட்டு வந்தீங்களோ கொன்னு போட்றுவேன் ஜாக்கிரதை) என்று அனுப்பியவளிடம் கேட்டேன், எதற்கு இந்தக் கூரை என்று. 

வேலை செய்ய வருபவர்கள் பாவம். கைக்குழந்தையோடு வருவார்கள். பாழப்போற ஊரில மரமில்லையேப்பா. வெய்யில்ல குழந்தைகள் அல்லாடுமே. அதுக்குதான் தெற்கு வடக்காக கூரை போட்டால், குழந்தையை தூளியில் வெயில் படாம விட்டு வேலை பார்க்க வசதியென்றாள். 

அடுத்த நாள் பூஜை. பாட்டியைக் காணோம். அடுக்களையில் ஒத்தை மனுஷியாய் விருந்து சமைக்கிறாள். பூஜைக்கு வரலையா என்றேன். அறுத்தவள் வரக்கூடாதுப்பா. எங்கே இருந்தால் என்ன? என் ஆசிகள் அவனுக்குத்தானே என்றவளிடம் வாதாட எனக்கு பயம். 

பூஜை ஒரு புறம் நடக்க, புறக்கடையில் ஒரு சித்தாள் பெண்ணை அழைத்து ஒரு அளவான அண்டா நிறைய கேப்பைக் கூழும், மோர் மிளகாய் ஒரு கூடையிலும் வைத்து ‘அந்தரு தீஸ்கோண்டி’ என்ற போது பெருமையாய் இருந்தது. ஒரு சில ரூபாய்த்தாள் கொடுத்து எங்கேயோ உண்ணச் சொல்லியிருக்கலாம். முப்பது பேருக்கு விருந்து சமைக்கும் வேளையில், வேலைக்கு வந்தவர்களுக்கு கூழ் காய்ச்சும் வேலை செய்யும் வயதில்லை அவளுக்கு.

பூஜை முடிந்து, விருந்து பரிமாற ஆரம்பித்ததும், அடுக்களை மூலையில் ஒரு தையல் இலையில் கைப்பிடி சாதம் உண்டதை பார்க்கையில் கண்கலங்கிப் போனது. சாப்பாடு முடிந்து மற்றவர்கள் தலை சாய்க்க, ஒரு தேர்ந்த சூபர்வைசராக கடைக்கால் தோண்டும் பணியை மேற்பார்வை பார்த்தபடி ஒரு சுற்று வந்தவள், சாப்பிட அழைத்தாள். 

பப்பன்னமும், பாயசமும் தாயாகச் சாப்பிடக் கொடுத்து சரியாக அரைமணியில்  ‘அன்னம் கடுப்புலோ படுதே ராஜுலைப் போதாரு தொங்க சச்சினோள்ளு! லேவண்ட்ரா! போள்ளந்த பனி பெட்டுகோனி நிதுர போய் சாவகண்டி’ ( சோறு வயத்தில விழுந்தா ராஜாவாயிடுவானுங்க திருடனுங்க. எழுந்திருங்கடா. எத்தனை வேலை இருக்க தூங்கி சாவாதீங்க) என்று வார்டனாய் மாறிய போது பிரமித்துப் போனேன். 

காலையில் நீராகாரமும், கேப்பைக் கூழும், களியும், நீர் மோரும் வேளா வேளைக்குத் தருவதும், எங்கோ நின்றபடி ‘ஒசேய் சொர்ணம்மா! நீ பிட்ட ஏடுபு மொதலு பெட்டமுந்து சமுதாய்ச்சுவே! கஃப்ஃபாலு கொட்டி சாவொத்து’(அடியே சொர்ணம்மா! உன் குழந்தை அழுமுன் பாலூட்டு! அரட்டை அடித்துக் கொண்டு சாவாதே) என்று அவள் தாய் பரிந்து சொல்லாத பாசத்துக்கு சொந்தக்காரி. 

தார் ட்ரம்முக்குள் ஒவ்வொரு செங்கலாய் முக்க வேண்டும், குமிழ் வருவது நிற்கும் வரை என்று பார்ப்பதும் (இல்லாட்டி சுவத்தில் விரிசல் விழும்), கலவை கணக்கு, பின்னொரு நாளில் மட்டப் பலகை பிடிக்கச் சொல்லி துடைப்பக் குச்சியை கேப்பில் சொருகி இழுத்து பூச்சு வேலைக்காரனுக்கு எச்சரிக்கை என்று ஒரு தேர்ந்த எஞ்சினியராக சுத்திச் சுத்தி வந்தாள். 

‘ஆதிவாரம் ஒக ரோஜு நேனு அன்னம் பெட்டனு நாயனா! டப்பு இச்சேஸ்தானு. எந்த மனம் பப்பன்னம் பெட்டினா, மாம்ஸம் தின்னேவாள்ளு. ஆ ஆச உண்டுந்தி காதா! ஹோட்டல்லோ ஏமன்ன திண்டாரு’ (ஞாயிறு ஒரு நாள் நான் சாப்பாடு போடமாட்டேனப்பா. காசு கொடுத்து விடுவேன். என்னதான் நாம பருப்பு சாதம் கொடுத்தாலும், மாமிசம் தின்பவர்களுக்கு அதன் மேல் ஆசையிருக்கும் இல்லையா? ஹோட்டலில் ஏதாவது சாப்பிடுவாங்க) என்றாள். 

கிரகப் ப்ரவேசம். பூஜைகள் முடிந்து, தலைமைக் கொத்தனாரை தம்பதி சகிதம் அழைத்து, வேட்டி புடவையுடன், ஒரு சின்னத் தங்கக் காசுடன் மரியாதை செய்து, இதையும் பிடுங்கிக் குடிக்காதே. பெண் வளர்ந்து வருகிறாள். சேர்த்து வைக்கப் பார் என்ற போது எங்களிடம் காட்டும் அதே வாஞ்சையும் கண்டிப்புமே தெரிந்தது. 

அவர்கள் கிளம்பிப் போக ஒவ்வொருவராய் ‘போயொஸ்தாமவ்வா’ கண்ணீருடன் சொன்னபோது சுருக்கம் விழுந்த முகத்தில் தன் சொந்தங்கள் பிரியும் இறுக்கம் மறைத்த புன்னகை. 

சில வருடங்கள் கழிய, சறுக்கி விழுந்து காலொடிந்த நிலையில் இறக்கையில் தன் ஊரில் தன் பெரிய மகன் வீட்டில் தான் சாவு என்ற பிடிவாதத்தில் அங்கு போனவள், சில நாட்களில் வைத்தியம் அனுபவித்தாள். 

அன்னமிட்டே பழகிய கை அன்னத்துக்கு நீளும் நிலை. ஒரு காலை வேளையில் ‘ ஒரேய் பில்லலக்கு, கடுப்பு தோ உன்ன வாள்ளக்கு அன்னம் பெட்டண்டரா’ (டேய், குழந்தைகளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு சாப்பாடு போட்டுவிடு) என்றவள், அவர்கள் சாப்பிடக் காத்திருந்தவள் போல் கண்மூடினாள். 

‘நுவ்வு தொரகா ஒக இல்லு சேஸ்கோ நான்னா. நேனு பக்கனுண்டி கட்டிபிஸ்தானு’ (நீயும் விரைவில் ஒரு வீடு கட்டிக்கோப்பா. நான் பக்கத்தில் இருந்து கட்டித் தருகிறேன்) என்றவளின் வரமேனோ எனக்குக் கிட்டாமலே போனது. 

நேசமும் நெருப்புமாய் இருந்தவளை நேசிக்க மட்டுமே முடிந்தது அந்த ரண பூமியிலும். ஆச்சாரங்கள் அவளுக்கு மட்டுமே சிறையாய் இருந்தன. அவள் மனிதத்துக்கல்ல. 


Thursday, June 24, 2010

சாதல்



போதையை முன்னிறுத்தி...

கூலி வாங்கினான்
தண்ணியடித்தான்

அடமானம் வைத்தான்
ஆஸ்தியை விற்றான்

கம்பெனி கொடுத்தவனிடமும்
கடன் வாங்கிக் குடித்தான்

பூசாரிக்கு எடுபிடியாகி
சரக்கு பிரித்து அடித்தான்

ஏறவில்லை என சபித்தான்
திருடனென்று தூற்றினான்

குவார்ட்டர் குவார்டராய் ஊற்றிக் கொண்டான்
குப்புறப் படுத்து உருண்டான்

வேண்டுதலுக்கு சேர்த்த
உண்டியல் உடைத்தும் குடித்தான்

கடைசியாக...

கூரை வீட்டின் முன்
கட்டிய பந்தலின் கீழ்
காலி போத்தல்கள் நடுவே
கட்டையாகக் கிடந்தான்.
***
எதிரெதிர் இங்கே..

Wednesday, June 23, 2010

கேரக்டர் - திருவேங்கடம்.

சில நேரங்களில் குயிலுக்குத் தோகை அமைந்தாற்போல் அமைந்து விடுகிறது சிலரது வாழ்க்கை. குயிலாகக் கூவவும் முடியாமல், மயிலாக இருக்கவும் முடியாமல் பேரிழப்பாய் அமைந்து விடுகிறது.

இல்லையென்றால், எக்மோர் யார்ட் அருகிலிருக்கும் ஒரு சேரிச் சிறுவனுக்கும் டென்னிசுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? இரவெல்லாம் குடியும், கஞ்சாவுமாய் இருந்து காலை 7 மணிக்கு எழும்பூர் டென்னிஸ் ஸ்டேடியத்தில் நகரத்துப் பெரிய ஆஃபீஸர்களுக்கு,  ‘..த்தா! இன்னா சார் ராக்கட் புடிக்கிற! பொண்மாட்டி கரண்டி புடிக்கிறா மாதிரி! இஸ்டடியா புடி சார்!’..   ‘யோவ் சார்! இந்த ஜென்மத்துல உனுக்கு பேக் ஹேண்ட் சாட் வராது’ என்று கோச்சிங் கொடுக்க முடியுமா?

ஒருத்தருக்காவது நான் எவ்வளவு பெரிய அதிகாரி, என்னை இந்தப் பொடியன் இப்படி அழைக்கிறானே என்று கோவமோ, வெறுப்போ இருக்காது. அவன் திறமை அப்படி.  நீ போய் விம்பிள்டன் ஆடப் போறதில்லனு தெரியும் சார். ஆனா காச கெடாசிட்டா இவன் சொல்லி தருவான்னு கனா கூட காணாத! இருப்பானுங்க எடுப்பு சோத்து பசங்க அதுக்குன்னு. அவனுங்கிட்ட போய்னே இரு! என்பவனை என்ன செய்ய முடியும்?

பள்ளி கண்டறியான்! சிறுவயது முதல் தகப்பனுடன் ஸ்டேடியத்தை சுத்தம் செய்வதும், கோடு போட்டு தயார் நிலையில் வைப்பதும், பந்து பொறுக்கிப் போடுவதும் வாழ்க்கையாகிப் போனது. அப்பனை விட பிரமாதமாய் ராக்கெட்டுக்கு கட்ஸ் இழுக்கக் கற்றுக் கொண்டான். 

பந்து பொறுக்கிப் போடுவது வேலையானாலும், கண்பார்வையில் நுட்பங்கள் அறிந்து கொண்டான். சுவர்தான் எதிராளி. ஒரு முறை பந்தை அடித்தால் மீண்டும் அது அவன் விடும்போதுதான் தரையைத் தொடும். டென்னிஸில் எத்தனை ஷாட்டுகள் உண்டோ அத்தனையும் சுவர் கொடுக்கும் அவனுக்கு.

இளம் கன்று பயமறியாதல்லவா?   ‘அடப் போ சார்! பேக்கேண்ட் சக்குனு ஒரு வெட்டு வெட்டணும்’ என்று கையை ராக்கெட்டாக்கி காட்டி ‘பால் மட்டும் ஆப்பனண்ட் ரிடர்ன் பண்ணா நானு இனிமே க்ரவுண்ட் பக்கம் வரமாட்டன் சார்’ என்னும் பொடியனை யாருக்குத்தான் பிடிக்காது?

பதின்ம வயதிலேயே தனக்குத் தெரிந்து கொஞ்சமாவது திறமை இருக்கும், ஆர்வம் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் எதிராட்டக்காரனாக, கோச்சாக இருப்பான். சிறுவன் என்பதால், சம்பளம் அப்பாவிடம் போய்விடும். மாலையில் இதர நண்பர்களுடன் மெதுவே போதை வந்தேறிக் கொண்டது.  அதற்குக் காசு?

எக்மோரில் சம்பாதிக்கவா வழியில்லை? அன்ரிசர்வ்ட் ரயில் பயணிகளை, யார்டில் கூட்டிக் கொண்டு போய் சீட் பிடித்துக் கொடுப்பது, ரயில் இல்லாத சமயங்களில், வா! திர்ச்சி திர்ச்சி, மதுரை, என்று ஆம்னி பஸ்ஸுக்கு ஆள் பிடிப்பது என்று எத்தனை வழிகள் இல்லை?

கஞ்சா போக, குடி போக, மிஞ்சியிருக்கும் காசை பேங்கிலா போட முடியும்? சொல்ல மறந்துவிட்டேனே! நம்ம ஹீரோ மங்காத்தா மன்னன்! சீட்டு வெட்டிய உடன், இன்னான்ற? நுப்பத்தி மூணாவது சீட்டு, உள்ளோ என்று மேல் பந்தயம் கட்டி, சொல்லி அடிப்பான். பட படவென்று உள்ளேயும் வெளியேயும் சீட்டைப் போட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தி, உள்ள கட்றதுன்னா கட்டுங்கப்பா என்று சில நிமிடம் காத்திருந்து அடுத்த சீட்டு உள்ளே அடித்துச் சிரிப்பான்.  அந்த ஆட்டத்திலும் நேர்மை! ஐந்து ரூபாய்த் தாளுக்குள் நூறு ரூபாய் பொதிந்து ‘மாஸ்’ பந்தயம் கேட்பவன் அன்றைக்கு வாங்கும் அடியில் பிறகு சீட்டைப் பார்க்கும்போதே ஜன்னி கண்டு போகும்.  

டென்னிஸ் ஆடக் கற்றுக் கொடுத்த அதிகாரியில், ஒரு மனிதருக்கு இந்த வைரத்தின் அழுக்கைத் தாண்டிய மதிப்பு தெரிய, ஆபீசுக்கு வந்து பாரு என்று சொல்லிட்டுப் போனார். இரண்டு மூன்று அழைப்புக்குப் பிறகு, வேண்டா வெறுப்பாக வந்தவனை, வலுக்கட்டாயமாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு சேர்த்தார்.

வாழ்க்கை வசந்தமாகிப் போனது. பரிமளித்தான் ஆட்டத்தில். மற்றைய ஜோன்களின் தாதாகிரி ஆட்டக்காரர்கள் கூட இந்தப் பிசாசை எங்கிருந்து பிடித்தார்கள் என்று வியந்து போனார்கள். வங்கிகளும், கம்பெனிகளும் வீசிய வலைக்கு ‘...ம்மால! அன்னிக்கு தெர்ல இல்லடா உங்களுக்கு. ஒரு மனுசன் கைதூக்கி விட்டு, கொஞ்சம் பேரு வந்து பேப்பர்ல வந்தாதான் கண்ணு தெரியுமா உங்களுக்கு? துட்டுக்கு பால் மார்ற பரதேசி நானில்லடா’ என்று திட்டிவிட்டுப் போவான்.

விதி விடுமா? யாரோ ஒரு அதிகாரியின் மகளைச் சேர்ப்பதற்காக, இவனை ஒரு நேஷனல் லெவல் டோர்னமெண்டில் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். போனான். ஏற ஏறக் குடித்தான். விர்ரென்று தெய்வமாக மதித்த அதிகாரியின் அறைக்கு வந்தான். தடுத்த ப்யூனுக்கு ஒரு அறை விட்டு உள் நுழைந்தான்! 

என்ன நடக்குமோ என்று ஸ்டெனோ, ப்யூன் என்று கூடி நிற்க, கண் கலங்க உதடு துடிக்க, ‘நீ அதிகாரியா இருந்து இது நடந்துச்சி பாரு! எங்கே! நீ சொல்லு சார்! டீம்ல இருக்கிறவங்கள விடவா நான் ஃபிட் இல்லை? நான் சேரிதான் சார்! கேக்க நாதியில்லாதவந்தான். ஆனா விசுவாசம் இருக்குசார்.

உனக்கு கெட்ட பேரு வரக்கூடாதுன்னு ஒன்னியும் பேசாம வந்தேன்! நல்லா இருங்க சார்! இனி என்னிக்குனா என் கையில டென்னிஸ் ராக்கட்டோ, பாலோ பார்த்த! ஒரு அப்பனுக்கு பிறந்தவனில்லை இந்த திருவேங்கடம்! இது விசயமா என்கிட்ட எதுவும் பேசாத சார்! உன்ன மரியாதையில்லாம திட்டிடுவனோன்னு பயமா இருக்கு சார்!’ என்று உதடு துடிக்கச் சொல்லிவிட்டு வெளியில் வந்து உடைந்து அழுதான். 

தாளாத சோகம். சாதிக்கும் நேரத்தில் இழுத்து விட்டார்களே என்ற வேதனை. அந்த நேரம் கூட தேடி வந்த வாய்ப்புக்களை உதறிய நேர்மை. மீண்டும் குடி பழக்கியது! நட்பாய் எது வேண்டுமானாலும் செய்வான். அதிகாரத்தை அவனிடம் காட்ட முடியாது! வேலை போய் விடும் என மிரட்டியவரை அப்படி ஒரு சிரி சிரித்து, யோவ்வ்வ்வ்வ்வ்வ்! வேலை போனா எக்மோர் டேஷன் சோறு போடும்யா! உன்ன நம்பியா பொறந்தேன்! ஆனதப் பார்த்துக்க என்று போனான். 

குடி, பால்வினை நோய், போறாத குறைக்கு ஆசை மகன் 2 வயதில் தாய் கவனிக்காத நேரத்தில் அடுப்பிலிருந்த ரசத்தை இழுத்து தேர்ட் டிக்ரீ பர்னில் இறந்ததும் காரணமாய்ப் போனது. ஒரு திறமை உடல் துறந்தது.

மண்ணாகிப்போன ஓரிரு தினங்களில், அவன் மனைவி சொன்னதாக ஒரு அலுவலக நண்பர், திருவேங்கடத்தைத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் சென்று கடன் வாங்கியிருக்கிறானா என்று கேட்டு எழுதிக் கொண்டு போனார். 

செட்டில்மெண்ட் தொகை வந்ததும் அவன் மனைவி ஒவ்வொருவராய்த் தேடி வந்து பணத்தைக் கொடுத்து நன்றி சொல்லி, யாருக்காவது கொடுக்க விட்டுப் போயிருந்தா சொல்லுங்கண்ணே. சாவரப்போ, திருவேங்கடம் ஏமாத்திட்டான்னு ஒருத்தன் சொல்லக் கூடாதுடி. எல்லார் காசும் கொடுத்துடுன்னு சொல்லியிருக்காருண்ணே என்றபோது கலங்காத கண்களில்லை.

திருவேங்கடம் மானஸ்தன் சார்! மனுஷன்!

(டிஸ்கி: சில சொற்கள் முகம் சுளிக்க வைத்திருக்கலாம். யாருக்காகவும் மாறாமல் அப்படி வாழ்ந்து மறைந்த திருவேங்கடத்தை மாற்ற நான் யார்?)

Monday, June 21, 2010

பிரபலங்கள்..

வாழ்க்கையின் மிக உயரத்தை எட்டியவர்கள் நன்றாக நிலைத்திருப்பது அவர்களின் வேர்கள் நிலத்தில் ஆழ ஊடுருவி நிலைத்திருப்பதால்தான். கொஞ்சம் வசதி வந்ததும் பேயாட்டம் போடுபவர்கள் மத்தியில் சாமானியனாக இருப்பது மிக அபூர்வம்.

நேற்றைய செய்தித் தாளில் அத்தகைய இருவரை அறியமுடிந்ததைப் பகிர்ந்து கொள்ள ஆவல்.

அவர் இந்தியாவிலே பெரிய பணக்காரர். அவர் மனைவி பிரபல சமூக சேவகி. இவர்களின் குழந்தைகள் ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகள் போல் வளர்க்கப்படுகிறார்கள். தனி விமானமிருந்தும் படிக்குமிடத்திலிருந்து வந்து போக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்தானாம். மகள் 20 பேருடன் குளியல் அறையைப் பகிர்ந்து கொள்கிறாராம். டார்மிட்டரியில் மற்ற குழந்தைகளுடன் ஒரு மேல்தட்டுப் படுக்கைதானாம்.

அந்தப் பணக்காரர் பிள்ளைகள் அவர்களுடன் தங்கிப் படிக்கையில் பாடம் சொல்லித்தருவாராம் தந்தை. பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிப்பாராம். மகன் கேட்டாராம். கால்குலேட்டர் இருக்கும்போது ஏன் வாய்ப்பாடு படிக்க வேண்டுமென.  தந்தை சொன்ன பதில், எல்லாவற்றுக்கும் மூளையைப் பயன்படுத்தப் பழகு என்பது. மனைவி சொல்கிறார், நான் மனதளவில் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்தான்  என்று.

திரு முகேஷ் அம்பானியும், அவர் மனைவி நீதா அம்பானியும்தான் இவர்கள்.

ஹூம்! இன்னைக்கு 7 மணி வரைக்கும் க்ளாஸ். ஆட்டோக்கு சட்டையில இருந்து 150 ரூபாய் எடுத்துகிட்டேன்னு சொல்ற மவள கூப்பிட்டு படின்னு சொல்லத் தோணுச்சி. வில்லங்கமா நீங்க அம்பானி ஆயிட்டு சொல்லுங்கன்னு சொன்னாலோ, இல்லன்னா நான் மட்டும் இண்டியன் ஏர்லைன்ஸ்ல போக மாட்டேன்னா சொல்றேன்னோ வில்லங்கமா பேசிட்டா என்ன பண்றதுன்னு மடிச்சி வச்சிட்டேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அப்பா மத்திய அமைச்சர். அண்ணன் மாநில முதல்வர். கணவர் எம்.பி. அம்மணி ஐ.நா.நிதியத்தில் நல்ல பொறுப்பில் இருந்தவர். ஜம்பத்துக்காக இன்றி எவர் உதவியும் பெறாமல் தன் முயற்சியில் லோரா பிரபு என்பவருடன் இணைந்து சமூகத்தில் மிகக் கீழ்மட்டத்தில் இருக்கும் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்துக்காக செக்யூன் என்ற அமைப்பை நடத்தி வருபவர் சாரா. 

மிகவும் கடினமான இந்த முயற்சியில் சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்துடன் பேசி, அவர்கள் சம்மதத்துடன் இந்தப் பெண்கள் சுயமாக சம்பாதிக்கவும், சேவை செய்யவும் ஏற்ற வகையில் தொழிற்பயிற்சி,  மருத்துவ முகாம்கள்,  விலை குறைந்த தானியங்களைக் கொண்டு சத்துணவு தயாரிக்கும் பயிற்சியோடு, பெண்களுக்காக பெண்களே செயல்படும் ‘மகளிர் பஞ்சாயத்து’ அமைப்புக்காக சட்டக் கல்வி முகாமும் நடத்தி வருகிறார்களாம்.

மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் மகளும், காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவின் தங்கையும், சச்சின் பைலட் எம்.பி.யின் மனையுமான திருமதி சாராதான் இவர்.

சங்கமத்துக்கு காஷ்மீரி மொழியில வார்த்தையில்லையோ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) உலகத் தமிழ்ச் செந்தமிழ் மாநாட்டோடு இணைந்து நடத்தும் தமிழ் இணைய மாநாடு 2010ல் வலைப்பதிவர்களுக்கான நிகழ்வில் வரும் 25/06/2010ல் பிற்பகல் 3:45  மணியிலிருந்து 4:15   மணிவரை முரசொலிமாறன் அரங்கத்தில் கவிஞர்.திலகபாமா,சிவகாசி அவர்கள் தலைமையில் நடைபெறும் அரங்கில் "வலைப்பூக்களால்நிகழ்ந்த சாதனை " என்ற தலைப்பில் உரைநிகழ்த்த‌ நண்பர் ஈரோடு கதிர் அழைக்கப்பட்டிருப்பது பெருமையளிக்கும்  விடயம்.

பாராட்டுகள் மாப்பு! அங்க போய் கஸ்ஸியப்படாது. காட்டாறு மாதிரி கலக்கிட்டு வாங்க. வாழ்த்துகள்.

சும்மாக் கிடைச்சா சித்தப்பாக்கு ரெண்டு. ஃப்ரீயா கிடைச்சா பினாயிலானாலும் குடிப்பான். இதெல்லாம் தமிழனுக்கேயான சொலவடையில்லையா? ஹி ஹி. ஒன்னரை லட்சம் தமிழ் எழுத்துருக்கள், மென்பொருட்கள் அடங்கிய சிடி கொடுக்குறாங்களாம். கொஞ்சம் வாங்கி அனுப்புங்க மாப்பு .

Friday, June 18, 2010

கதிருக்கு எதிரு

பொழுது ஏற ஏற
உழைத்த காசு
இருண்டதும் புட்டியாக!

*****

வாழ்க்கைப் பக்கங்களின்
எதிர்பாராதவை எஞ்சிப் போயின
காலி புட்டியாகவும் கோழி இறகாகவும்

*****
எந்த வடிவமும் நிலைப்பதில்லை
குடிமகன் புரண்ட
கடற்கரை மணலில்..

*****

மலை உச்சியில் புணர்ந்த
மேகம் தந்த குளிரை விரட்ட
மனம் தேடுகிறது சரக்கை.

*****
கவுஜ இங்கே...

Thursday, June 17, 2010

என்னத்தச் சொல்லி....

என்னதான் பத்திரிகைச் செய்தியை நம்புறதில்லைன்னு ஒரு தீர்மானத்துல இருந்தாலும்கூட காது குத்தி ஈர்க்குச்சி சொருகினா பரவாயில்லை. கடப்பாரையே சொருகுவேன்னு சொருகுறப்ப புடிச்சி சாத்தலாமான்னு வருதாயில்லையா?

ராமநாதபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் 15வயது சிறுமிக்கு பள்ளியில் பிரசவம் நடந்ததாம். பெண்ணின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்கிறாராம். கடந்த வெள்ளியன்று பள்ளியில் அடிக்கடி கழிப்பறைக்கு சென்று வந்த இவர், அதிகமான உதிரப் போக்கு இருந்ததாகக் கூறினாராம். ஆசிரியைகள், மாற்று உடைக்கு வழி செய்தார்களாம்(?). அப்படியும் ரத்தப் போக்கு நிற்காததால், பெண்ணின் தாயை அழைத்து அனுப்பி வைத்தார்களாம்.

சற்று நேரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு கழிப்பறைக்குச் சென்ற மாணவிகள்,அங்கு ஒரு பிறந்த குழந்தை இருப்பதாகச் சொன்னார்களாம். அப்போதுதான் ஆசிரியர்களுக்கு ரத்தப் போக்கு என்று கூறிய பெண்ணின் மீது சந்தேகம் வந்ததாம். அவளையும் அவள் தாயையும் அழைத்து விசாரித்த போது, திருவிழாவில் ஏற்பட்ட உறவின் மூலம் கருவுற்றதாகவும், வகுப்பு நடக்கையில், பிரசவம் நடந்ததாகவும், அங்கு கிடந்த கண்ணாடித் துண்டால் தொப்புள் கொடியை அறுத்து குழந்தையைப் போட்டுவிட்டு வகுப்புக்கு வந்ததாகவும் கூறினாராம். அவர்கள் விருப்பப் படி பெண்ணின் எதிர்காலம் கருதி, மாற்றுச் சீட்டு கொடுத்து அனுப்பி விட்டார்களாம்.

1. அந்த மாணவியின் தாய்க்கு தெரியாமலா இருக்கும் பெண் கர்ப்பமானது?
2. ஆசிரியைகளுக்குமா தெரியாது ஒரு நிறைமாத கர்ப்பமான மாணவியை?
3.நல்ல பிராயத்திலேயே பிரசவம் என்பது எத்தனை சுலபமானதாக இருந்தாலும் வலியற்று இருந்திருக்குமா என்ன? 15 வயது மாணவி, தானாக யார் உதவியும் இன்றி கழிப்பறைக்கு பலமுறை சென்று வந்து, பிரசவம் தானே பார்த்துக் கொண்டு, திரும்பவும் வகுப்பறைக்கு வரமுடியுமா என்ன?
4.தானே பிரசவம் பார்த்துக் கொள்ள ஒரு 15 வயது பெண்ணுக்கு தெரியுமா என்ன? அந்த அளவு தெளிவிருப்பவர், கருவுறுதல் குறித்தும், அபார்ஷன் குறித்தும் அறியாமலா இருப்பார்.
5.அதெப்படி குழந்தை பிறந்ததும் அழாமல், ஆசிரியர்கள் மாற்றுத் துணியெல்லாம் கொடுத்து, அதன் பிறகும் ரத்தப்போக்கு நிற்காமல், அவர் தாயை அழைத்து அனுப்பிய பிறகு அழும்?
6.குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
7.தாளாளர் வக்கீலாம். அவரு சொன்ன கதை இது. இவரை நம்பி கேசு கொடுக்கிறவன் கதிய நெனைச்சா அவ்வ்வ்வ்வ்:((

போய்யா கதை விடாதே என்பவர்கள் சுட்டிப் படிச்சுக்குங்கப்பா.












~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அதிரடி வேட்டைக்குச் சென்ற இராணுவத்தினரிடம் போராடி ஒரு பெண் தீவிரவாதி உயிர் இழந்தாராம். ஒரு என்கவுண்டருக்குப் போகும் இராணுவத்தினருடன் ஒரு ஆம்புலன்ஸ் கூடவா போகாது? அல்லது ஒரு ஸ்ட்ரெச்சர் கூடவா இருக்காது? அடிபட்ட பெண்ணை இறந்த மாடு, பன்றி ஆகியவற்றைப் போல் தூக்கிச் செல்லும் அவலம் இது. இறக்கும் வரை தீவிரவாதியோ, சமூக விரோதியோ என்னவானாலும், இறந்த ஒரு மனுஷியை இப்படியா தூக்கிச் செல்வார்கள்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அட நம்ம ஊருல என்னன்னாலும் நடக்கும்னு தட்டி விட்டுக்கிட்டு வேலயைப் பார்க்கலாம்தான். இந்த இங்கிலாந்துக்கு என்னா கேடு? எலிசபத் ராணியம்மா நடக்கறதே நாராயணான்னு இருக்கிறப்ப, காரை எடுத்துகிட்டு படு வேகமா பாதுகாப்பு பெல்ட் போடாம ஓட்டுச்சாம்.

ராணின்னா எப்படி வேணுமானாலும் ஓட்டலாமான்னா, கோர்ட்டே அவங்களுதாம். அவங்கள புடிச்சா, அவங்களே அவங்களுக்கு தண்டன குடுத்தா மாதிரி ஆயிடுமாம். அதனால ஒன்னும் பண்ணலயாம்.

ஹூம் இது தெரியாம, தேர்ச் சக்கரத்துல கன்னுகுட்டி மாட்டி செத்துப் போச்சுன்னு மம்மி மாடு பெல் அடிச்சா, தன் மகனுக்கு தண்டன குடுத்தாராம்ல டமிலர் மன்னர். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆமா! ஆங்கிலப் பாட டிவிடில பிட்டுப்படம் இருந்துச்சின்னு பரபரப்பா நியூஸ் வந்து, மதுரையிலதான் லேபில் மாத்தி ஒட்டிட்டாய்ங்கன்னு கப்புன்னு அடங்கிப் போச்சே ஏன்? அல்லோவ்! நீங்க பாட்டுக்கு மதுரை, டிவிடி, பிட்டுபடம், கப்புன்னு எதையோ ஊகிச்சிகிட்டு ஆட்டோவ அனுப்பிச்சிராதீய்ங்கப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Monday, June 14, 2010

கேரக்டர்-பஞ்சு

நான் வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாள் அந்த மனிதர் எனக்கு அறிமுகமானார். டே அம்பி! இஞ்ஜ வா என்றழைத்து என் பின்னணி முழுதும் விசாரித்து, சின்ன வயசு! சம்பளம் கைக்கு வரதுன்னு விரயம் பண்ணாத. பொறுப்பா இருக்கணும். ஆபீஸ் பரிட்சையெல்லாம் மடமடன்னு பாஸ் பண்ற வழியப்பாரு. யார்ட்டையும் சேரப்படாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும். நல்ல பேர் எடுக்கணும் தெரிஞ்சதா? நான் உன்னை வாட்ச் பண்ணிண்டே இருப்பேன் என்றார். அவர் என்னை கவனித்தாரோ இல்லையோ, நான் அவரை நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். 

ஐந்தடிக்கு கொஞ்சமே கொஞ்சம் உயரம் இருக்கலாம். மாநிறத்துக்கும் சற்றே குறைந்த நிறம். நெற்றியில் சின்னப் பிறையாய் சந்தனக் கீற்று. வழுக்கைத் தலை. குண்டான உடம்பு. வேட்டி சட்டை, பெரும்பாலும் செருப்பணிவதில்லை. சம்பள நாள், வேறு ஏதாவது அரியர்ஸ் தொகை வரும் நாட்கள், அது தொடர்ந்த ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டும் செருப்போடு பேண்டும் போட்டுக் கொண்டு வரும் மர்மம் உறுத்துமா இல்லையா?

நண்பனின் தந்தையும் இவரும் நண்பர்கள் என்பதால் அதிகம் சிரமப்படாமல் துப்பு துலங்கியது. பஞ்சு மாமா வட்டிக்கு பணம் கொடுப்பவர். வசூல் காலங்களில் பட்டாபட்டி ட்ரவுசரில் பணம் வைக்க, எடுக்க சிரமம் என்பதால் பேண்ட் போடுவார். அதிலும், பேண்ட் பாக்கட்டை நன்கு நீளமாக முட்டிவரை வைத்துத் தைத்திருப்பார். பணம் குனிந்து எடுக்கையில் முழங்கை வரை உள்ளே போகும். பஸ்ஸில் போகும் போது பிக்பாக்கட் அடிப்பவன் உட்கார்ந்துதான் ப்ளேட் போட வேண்டும். 

பஞ்சு மாமாவுக்கு அவசரத்துக்கு கடன் வாங்கி உடனே அடைப்பவர்களை அவ்வளவு பிடிக்காது. அப்படி வருபவரை, என்ன? இதுக்கென்ன அவசரம். வேற செலவு இருந்தா நிதானமா குடு. உன்கிட்ட பணமிருந்தா பேங்கில இருக்கா மாதிரி என்பார். பெரும்பாலும், ரொம்ப நன்றி சார் என்று சிக்கிக் கொள்பவர்கள் அதிகம்.

நிஜமோ பொய்யோ தெரியாது. முதல் வட்டியை வாங்கி உப்புக்குள் வைத்துவிடுவார் மாமா என்பது ஒரு பேச்சாக இருந்தது. அப்படி வைத்தால் கடன் அடையாமல் வட்டி கொழிக்கும் என்பது ஒரு ஐதீகமாம். பலரும் சலித்துக் கொள்ளக் கேள்விப் பட்டிருக்கிறேன். கொடுக்கலாம்னு தேடிட்டு போனேன்யா. அப்புறம் வாங்கிக்கறேன்னாரு. சரின்னு வந்து உட்கார வீட்டில் இருந்து ஃபோன். பையன் சைக்கிள்ள இருந்து விழுந்து ஃப்ராக்சர் ஆயிடிச்சாம். கொடுக்கப் போன பணத்துக்கு மேல இருநூறு கடன் வாங்கறதாப் போச்சு என்று புலம்புவார். 

மாமாவுக்கு ப்ரோகிதமும் உபதொழிலாயிருந்தது. விசேஷங்களில் வைத்துக் கொடுக்கும் வேஷ்டியையும் கடை விலைக்கு சற்றே குறைந்த விலையில் (இன்ஸ்டால்மெண்டில் கூட) விற்றுக் காசாக்கி விடுவார். பொதுவாக குதிரை ரேஸில் காசைத் தொலைப்பவர்கள்தான் அதிகம். 

பஞ்சு மாமா அங்கும் வட்டித் தொழிலில் சாதனை படைத்தவர். எங்கள் அலுவலகத்தில் பணி செய்துப் பின்னர் குதிரை பழக்குபவராகப் போனவர் இவருக்கு நண்பராம். ரேசுக்கு முன்னர் குதிரைகளை ரவுண்டுக்கு அழைத்து வருவார்களாம். எப்படியோ தகவல் பறிமாற்றத்தில் டிப்ஸ் கிடைக்கும் மாமாவுக்கு.

அப்போதெல்லாம் ரயிலில் சம்பாதித்து குதிரைக்குக் கொள்ளு வாங்க க் கொடுத்தவர்கள் அதிகம். மாமா முதல் ரேஸில் ஒரு குதிரையின் மேல் அதிகப் பணம் கட்டுவாராம். கேட்பவர்களுக்கும் சொல்லுவாராம். அந்தக் குதிரை ஜெயிக்குமாம்.

வந்தப் பணத்தை (நன்றாக கவனியுங்கள்) கட்டும் குதிரையின் மேல் நண்பர்கள்  சொந்தப் பணத்தைக் கட்டுவார்களாம். மாமா ஒரு தொத்தல் குதிரை மேல் சொந்தப் பணத்தைக் கட்டுவாராம் தொத்தல் குதிரை ஜெயிக்குமாம். மாமாவுக்கு வந்த பணம்தான் நஷ்டம். மற்றவர்களுக்கு வெறியாகிவிடும். 

அடுத்த ரேசுக்கு, மாமாவின் கருப்புப் பையிலிருந்து வெள்ளைக்காகிதக் கத்தை வெளிவரும். கடன் தொகை எழுதி கையெழுத்துப் போட்டு வாங்கிய காசை, மாமா கட்டும் குதிரைக்கு மாற்றுக் குதிரையில் கட்டித் தொலைப்பார்களாம். திங்கட்கிழமை வந்து மீள்பார்த்தலில் குற்றச்சாட்டும், மாமாவின் சமாளிப்பும் தமாஷாக இருக்கும். ரொம்பவும் எகிறுபவரை, ஏண்டா! என் காசு நான் எப்படி வேணா நாசம் பண்ணுவேன். நீ கடன் வாங்கி ஆடச் சொன்னேனாடா என்பார்.

ஒரே மகன். பிஸினஸ் செய்கிறேன் என முடிவு செய்ததும், கடன் கொடுப்பது குறைந்தாலும், பழைய கடன் வசூலும், வட்டிப் பணத்தில் ரொட்டேஷனுமாக ஓடியது. பையன் பிஸினெஸில் கொடிகட்டிப் பறக்கிறான். இனிமே எனக்கென்ன என்றாரே ஒழிய வட்டித் தொழில் மட்டும் நிற்கவேயில்லை. 

ஐந்நூறு ரூபாய் வாங்கி அடைக்க முடியாமல், ஐந்தாயிரம் வட்டிகட்டி ஒரு வழியாக கடன் திருப்புகையில் கூட வட்டி தள்ளுபடி செய்யமாட்டார். வட்டி கட்டாவிட்டால் வையும் வசவில் காதில் புகை வரும். ரிட்டையர் ஆன பிறகு வந்த செட்டில்மெண்ட் தொகையிலும் கணிசமாக வட்டிக்கு கொடுத்திருந்தார். 

கடன் மிஞ்சிப் போனவன் என்ன செய்வான். அதுவும் சிறு தொகைகள் அதிகம். பத்திரம் பவர் எதுவுமில்லை. கிறுக்கிய கையெழுத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். ஒன்றிரண்டு பேர் ஆனதைப் பார்த்துக்க. அசலுக்கு மேலேயே பத்து மடங்கு வட்டி அழுதாச்சி என்பது மெதுவே பரவ, ஆளாளுக்கு சந்தனப் பிறைக்கு பதில் நாமத்தைச் சாத்தினார்கள். 

ஒரு பக்கம் மகனுக்கும் பிஸினஸ் படுத்துவிட, இவரைப் பணம் கேட்டு பெரும் போராகிவிட்டது. ஒரு கட்டத்தில் பிஸினஸ் மேன், வேறு வேலைக்குப் போவதை விட அப்பாவின் பென்ஷனில் குடும்பத்தோடு சாப்பிடுவது கவுரவம் என பையன் முடிவெடுத்துவிட ரொம்பவே நொடித்துப் போனார். 

ஒரு முறை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்த்தேன். நீர்காவி வேட்டி, மேலும் கீழுமாய் பட்டன் போட்ட சட்டை. சட்டை பாக்கட்டில் கற்றைப் பேப்பர். கருத்துப் போய் வெறுங்காலுடன் பஞ்சடைந்த கண்களுடன் தடுமாறியபடி போய்க் கொண்டிருந்தார் பஞ்சு. 

Sunday, June 13, 2010

இரங்கல்

நேற்றைய காலை ஓர் அதிர்ச்சியுடன் தொடங்கியது. பின்னிரவில் சிரித்தபடி பேசி விடைபெற்ற சிங்கை பிரபாகரின் உடைந்த குரல் பதற வைத்தது. 

ஆம்! இரண்டு வாரங்களுக்கு முன் தொலைபேசியில் பேசியபோது முன்பின் அறிமுகமில்லாவிடினும், வாஞ்சை கலந்த மரியாதையோடு ‘அண்ணன் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்காங்கைய்யா, பேசியதில் மிக்க மகிழ்ச்சிங்கைய்யா’ என்று உரையாடிய, பிரபாகரின் இடுகை மூலம் நம் அனைவருக்கும் அறிமுகமான திவாகர் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என அறிந்தபோது நம்பவே முடியவில்லை.

மூளை ரத்தக் கசிவு, இரைப்பை செயலின்மை காரணங்களால் தம்பி திவாகர் பிரபாகரின் குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்றுவிட்டார். 


திவாகர்

பிரபாகருக்கு என்ன ஆறுதல் சொல்ல? தொலை பேசியில் பேசும்போதெல்லாம் ஒரு முறையாவது “தம்பி இருக்கான்யா! அவன் எல்லாம் பார்த்துக்குவான்யா” என்று தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற சொலவடையை வாழ்க்கையாய் வாழ்ந்தவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல? தந்தையை இழந்து வாடும் மூன்று சிறுமொட்டுக்களுக்கு என்ன ஆறுதல் சொல்லிவிட முடியும். 

ஆனாலும், இந்த நிலையில் இச்சிறுவயதில் இறைவனடி சேர்ந்த அந்த நல்லாத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் பிரபா அவர்களின் குடும்பத்துக்கு நம் ஆறுதலையும் சொல்லிக் கொள்வோம்.

 “இன்றைய இழப்பைத்தாண்டி எதையும் அறிவது கடினம்
  இனிய நினைவுகள் உன்னை அமைதிப் படுத்தும் நண்பா”

மீண்டு வா பிரபாகர்! திவாகர் உன் எழுத்துக்களில் உயிரோடுதான் இருக்கிறான். 

 உன் இழப்பின் வேதனையோடு
வலையுலக நண்பர்கள்.

Thursday, June 10, 2010

சொர்கத்தில் சோ. அசிங்கப்பன் -2

வடிவேலு: எச்சூஸ் மீ! அய்ய்ய் வாண்ட் தமில் சொர்க்கம்?

பாண்ட்:வாட்? தமில் சொர்க்கம்? தேர்ஸ் நோ டமில் சொர்க்கம் ஹியர்.

வடிவேலு: ஸ்டாப்! ஸ்டாப் தி நான்சென்ஸ் யூஊஊஊ ஃபூலாபனிடியட்டாபனேஸ். தமில் லிவ் ஆஃப்டர் டெத். தெரிஞ்சா சொல்லு. தெரியலன்ன தெரியலன்னு சொல்றா என் வென்ட்று. அதென்ன நோ தமில்னு சொல்றது. அந்தா அங்க பாரு! எங்கூரு அப்பத்தா ஒன்னு போகுது. அத்த்த்து தமில்.  ஏத்தா! ஆத்தோவ்! கொஞ்சம் நில்லுத்தா..ஸ்ஸப்பா..

ஆத்தா: மகனே! யார் நீ! ஏன் ஓடி வருகிறாய்! யார் வேண்டும் உனக்கு!

வடிவேலு: நிப்பாட்டு நிப்பாடு ஆத்தா! காலையில கேள்விய டிப்பனா சாப்டியா?. அந்தா போறாம்பாரு ஒரு எடுபட்டபய. அவன தமில் சொர்கம் எங்கடான்னு கேட்டேன். தெரிஞ்சா சொல்லணும் தெரியாட்டி தெரியலன்னு போய்க்கே இருக்கவேண்டியதுதானே. நோ தமில்னு சொல்றான் பக்கிப்பய. பன்னாடப்பய. திரும்ப சிக்கின உங்கத கந்தல்டியேய். ஆத்தா! உங்கள எங்கயோ பார்த்தாமாதிரி இருக்கே. 

அவ்வை: மகனே என்னைத் தெரியவில்லையா உனக்கு? நாந்தானாப்பா அவ்வை!

வடிவேலு: ஏத்தா! நீயுமா? என்னப் பார்க்கும்போதே கலாய்க்கலாம்னு தோணுமா? எனக்கு அவ்வையைத் தெரியாதா? அந்தாத்தா நல்லா குண்டாயிருக்கும். குரல் சும்மா குழாய்ஸ்பீக்கர் மாதிரி இருக்கும். எங்க! நீ பாடின நீபழம் நீயப்பா பாடு?

அவ்வை: அப்படி ஒரு பாடல் நான் பாடவேயில்லையே மகனே!

வடிவேலு: ஹெ ஹெ! நம்மளுக்கு தெரியும்ல. சின்னக் குழந்தையக் கேட்டாலும் சொல்லுந்த்தா சொல்லும். பழம் நீயப்பா பாடினது அவ்வைய்யாருன்னு. இந்தா இந்தா பேசிட்டிருக்கும் போதே தடிய ஓங்காத! பேச்சு பேச்சாத்தான் இருக்கணும். பின்ன நீ என்ன பாட்டு பாடின சொல்லு!

அவ்வை: முழுமுதற்கடவுளாம் என் அப்பன் விநாயகனுக்கு பாலும் தெளிதேனும் என்ற பாடலைப் படைத்தவள் நானப்பா.

வடிவேலு: ஆத்தா! அவ்வையாருக்கும் முருகனுக்கும்தான் டீலிங்கு. நீ விநாயகனுக்கு பாட்டைப் போட்டுட்டு அவ்வைங்கிற. எங்க சினிமால டூப்பு போடுவாங்கல்ல டூப்பு! அப்பிடியா?

(தண்டபாணித்தெய்வமேஏஏஏஏஏஏஏஎய் என்று பாடியபடி கே.பி.எஸ் வருகிறார்)
வடிவேலு: அவ்வையே! புல்லரிச்சிப் போச்சு அவ்வையே! நீங்க பாடி நேராக் கேப்பேன்னு கனவில கூட நினைச்சதில்லையே ஆத்தா! அந்த முருயன் கருணையே கருணை! அந்த கிழவி நாந்தான் அவ்வைன்னு ஏமாத்துதுதா?சொர்க்கத்துல கூடவா ப்ராடு?

கே.பி.எஸ்: அபசாரம் அபசாரம்! அவர்தானப்பா அவ்வையார். சிறு பிராயத்திலேயே அறம் செய விரும்பு என்று பிள்ளைகளுக்கு ஆத்திச்சூடி சொன்னவரப்பா. அவரைப்போய் இப்படிப் பேசலாமா?

வடிவேலு: ஆக்கா! ஏத்தா! அந்தப்பாட்ட எளுதினதுன்னு சொல்லிருக்கப்படாதா! ஏத்தா! சின்னப் பசங்க மேல உனக்கென்ன கோவம்? 

அவ்வை: குழந்தைகள் நன்றாக வளர வேண்டும் என்றல்லவா எழுதினேன். 

வடிவேலு: ஏன் பேசமாட்ட? ஆத்திச் சூடி சொல்றா சொல்றான்னு எங்க தமிழ் வாத்திக்கிட்ட அடி வாங்கினவன் நானு! நீ ரொம்ப சலம்பற. எங்க நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு. ஒம்பாட்டுக்கு ஈவது இகழ்ச்சின்னும் சொல்லிட்டு, ஐயம் இட்டு உண்ணுன்னும் எழுதிட்டு போய்ட்டிய. டேய் வாங்கிக்கடா பசிக்குதுன்னு ஒருத்தன் அழுறான். பிச்சை வாங்குனா கேவலம் போடான்னு ஒருத்தன் போய்க்கே இருக்கான். ஏன் இப்புடி மாத்தி மாத்தி பேசின . அந்தா அங்க உக்காந்து நிதானமா யோசிச்சி சொல்லு. எனக்கு கொள்ள வேல கெடக்கு.

திருவள்ளுவர்: அவ்வையே! யார் இவர்? எந்த மொழி பேசுகிறார். தமிழ் போலவும் இருக்கிறது?

வடிவேலு: ஏன்! ஏன் இந்தக் கொலவெறி! ஒரு கூட்டமாத்தான்யா திரியறாங்க.

கே.பி.எஸ். : மகனே இவர்தான் திருவள்ளுவர். வாழ்வியல் நூல் தந்த வள்ளல் வணங்கிக் கொள் மகனே!

வடிவேலு: வள்ளுவரா! வணங்குகிறேன் அய்யா! உங்களை ஒன்று கேட்கலாமா? முன்ன பின்ன உங்களுக்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகராரு இருந்திருக்கா? பின்ன எதுக்கு பல்லு உடையிறா மாதிரி துப்பார்க்கு துப்பாக்கின்னு எல்லாம் செய்யுல் எழுதி என்னைய மாதிரி சின்னப் பசங்கள அடி வாங்கி வச்சிய. அவ்வ்வ்வ்வ்வ்வ். தோ! அந்தாத்தாவாவது ஒரு வரி ஒரு வரி எளுதிச்சி. நீங்க இரண்டு வரி எழுதி இந்தக் கையில ஒன்னு அந்தக் கையில ஒன்னுன்னு எங்க வாத்தி பிச்சிப்புடுவாரு.

வள்ளுவர்: கல்லாதது உன் தவறல்லவா மகனே!

வடிவேலு: ஏன் பேசமாட்டீரு. இத்தன வருஷம் கால் மறத்துப் போனாலும் கெடக்கட்டும்னு உக்காந்தா மாதிரியே போசுல வச்சிருந்தாங்க உங்கள. எங்க தலைவர் இப்போ செந்தமில் விளாக்கு உங்கள நிக்க வச்சிட்டாருல்லா.  (ஆஆஆக்கா! வடிவேலு! ஒரு வேள அகுடியா ஒர்க்கவுட்டாவலன்னு வைய்யி, உக்காந்திருந்த வள்ளுவரை நிற்கவைத்த தலைவருக்கு ஒரு விளா எடுக்கச் சொல்லி கவுத்துறலாம்டா).

நாலடியார்: வள்ளுவரே! யார் இவர்? அமைதியான இங்கு வந்து ஏன் தகராறு செய்கிறார். நக்கீரரை அழைக்கவா?

வடிவேலு: தோ! பெருசு! ஏன் மெரட்ரீய பேசிக்கிருக்குபோதே? நீர் யார் அதைச் சொல்லும்.

நாலடியார்: நாந்தான் நாலடியார் மகனே.  “உணர உணரும் உணர்வுடையாரை..”

வடிவேலு: ஸ்டாப் ஸ்டாப். இதோட விட்ருவோம். திரும்ப பழசெல்லாம் கிண்ட வேண்டாம். ஹ்ம். ஏம் பெருசு! எங்க புண்ணுன்னு பார்த்தே அங்க மிளகாய்  தேய்க்கிறீங்களே. அந்தப் பாடலச் சொல்லச் சொல்லி சொல்லத் தெரியலன்னு புளிய மிளாருல எங்க தமிழ் வாத்தி டவுசர் கிழிய அடிச்சதும், அதோட பள்ளிக்கு ஒரு கும்புடு போட்டதும் உங்க புண்ணியம்தாம்யா உங்க புண்ணியந்தேன். உக்காரக் கூட முடியாம ஒரு வாரம் நின்ன வாக்குலயே தூங்குனம்னா பாத்துக்கிருங்க. என்னா அடி!

வாத்தி: டேய்! யார்ரா அது வடிவேலுவா! உருப்படாத பயலே! இப்பவாச்சும் அந்த பாட்டச் சொல்லு. நான் மூணாப்புல சேத்துக்கிர்றேன்.

வடிவேலு: போதும்யா! போதும்! அடி வாங்கி வாங்கியே பொழப்பு போயாச்சு. பாட்டை மட்டும் கேக்காதிய! எவ்வளவு வேணும்னாலும் அடிச்சிக்கிருங்க. இப்ப நான் சொல்றத கேளுங்க.

எங்கூருல தமிலுக்கு, செந்தமிலுக்கு ஒரு விளா எடுக்குறோம். அதுக்கு ஒரு வெளம்பரப்படம் எடுக்கணும். என்னையத்தான் பொறுப்பாக்கிட்டாய்ங்க. நீங்கள்ளாம் சேர்ந்து ஒரு பாட்டு எளுதி, ஆளுக்கு ஒரு வரி பாடி உதவணும்.

தமிழய்யா! நீங்களாவது சொல்லுங்கைய்யா

தமிழய்யா: மகனே! உனக்கோ ஞாபக மறதி. இங்கு பனை ஓலை, பேப்பர் பேனா எதுவும் கிடையாது. மேலும் இவர்களை பூலோகத்தில் அழைத்துப் போய் படப்பிடிப்பும் நடத்த முடியாது. என்ன செய்யப் போகிறாய்.

வடிவேலு: அய்யா! உங்க மாணவனுக்கு தமில் செய்யுல் தான்யா வராது. இப்புடி பல்ல புடுங்கறா மாதிரியில்லாம “ நானடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம்  தூங்க மாட்ட” மாதிரி சுளுவ்வா எழுதச் சொல்லுங்கைய்யா. வகுத்துக்குள்ள இருக்கிற புள்ள கூட பாடுதாம்யா. அப்புறம் இந்த ஓல, பேப்பரு, பேனா எளவெல்லாம் போயாச்சிய்யா.

இந்தா இருக்கு கம்பூட்டர் பொட்டி. பேசுறா மாதிரியே அமுக்கினா எழுத்து வரும்யா. இந்தா செந்தமில்.ப்ளாக்ஸ்பாட்.காம்னு ஒரு பதிவு ஆரம்பிச்சிருக்கம்யா. இந்தா இங்க சின்ன பொட்டியிருக்கே அதில அவுங்கவுங்க பேரப் போட்டு ஒரு ஒரு வரி ஒரு பாட்டு எளுத சொல்லுங்கைய்யா. அம்புட்டு தூரம் வந்தது கண்ண கட்டுது. நான் அப்புடி ஒரு ஓரமா படுக்கிறேன்.

(சிறிது நேரத்தில் ஒரே கலவரம். திடுக்கிட்டு எழுந்த வடிவேலு)


வடிவேலு: இருங்க இருங்க. அமைதி அமைதி! என்ன இது சின்னப் புள்ளத்தனமா? ஒரு பாட்டு எளுதச் சொன்னா ஆளாளுக்கு கத்திக்கிட்டு மனுசன தூங்க விடாம. என்ன நடந்துச்சி இப்ப?

தமிழையா: ஏன்யா! நாங்க பாட்டுக்கு அமைதியா தமிழ்க்கடலில் திளைத்திருந்தோம். பதிவப்போட்டு இதுல இழுத்து விட்டு அடிதடில கொண்டு வந்துட்டியே. அவ்வையார் கவுஜ அடச்சீ செய்யுளுக்கு எதிர் செய்யுள்னு கம்பர் எழுதுறாரு. எதிரெதிர் செய்யுள்னு திருவள்ளுவர் எழுதுறாரு. மாணிக்க வாசகர் முன் நவீனத்துவம்ங்குறாரு. காளமேகப் புலவர் பின் நவீனத்துவம்தான்னு பொலம்புறாரு. நக்கீரன் அவரு பாட்டுக்கு குற்றம் குற்றமேன்னு புலம்பிட்டு திரியிறாரு. உன்ன பள்ளிய விட்டு ஓட விட்டது பத்தாது. அடடா. புளிய மிளாரு இல்லாம போச்சே. அவ்வையாரே! அந்தத் தடியக் குடுங்க.

வடிவேலு: வேணாம்யா. அப்போ வாங்கினதே இன்னமும் உக்காந்தா வலிக்குது. இதுக்கு ஆட்டோல வந்து அடிச்சாலே எண்ணிக்குவேன். வர்ரம்யா. எம்பொட்டிய குடுக்கச் சொல்லுங்க.  நல்லாக் கெளப்பறாய்ங்கய்யா பீதிய! ஏரோப்ளேன் ஸ்டார்ட்! மீ த எஸ்கேப்பு..

(படுக்கையிலிருந்து விழுந்து எழுந்து)

ஆஹா! அம்புட்டும் கனவா! தப்பிச்சண்டா சாமி! ஆனாலும் பரவால்ல. தலைய வெச்சி, எல்லாரும் வாழ்த்துறா மாதிரி ஒரு டேன்ஸ் சீன் போட்டு, ஒரு செந்தமிலர் வால்த்து சாங் போட்டு ஒப்பேத்திருவோம். முடிவுல ஒரு விழா எடுக்கணும்னு கோரிக்கை போட்டு முடிச்சிருவோம். ஏ பெரவு! அய்யா பெரவு! ஒரு சாங் எளுதுய்யா!

பிரவு: சாங்தானே! அஞ்சே நிமிசம்ணே!
             ‘செந்தமிழ் சிங்கமே
              சேர்த்து வைத்த தங்கமே
              உன் தமிழில் உலகமே
              ஓடி ஒளியும் கலகமே’
வானம்பாடிகள்,கதிர்,ப்ரியா,பாலாசி மற்றும் 165 ஃபாலோயர்: என்னாஆஆஆஆஆஆஆஆஅது?

பிரவு: தற்காலிக விடுப்பில் செல்வதால் எல்லாம் ட்ராஃப்டில். அய்யா! ஒரு நிமிடம் அழைக்கவா! கதிர் பிசியா?

...........................................................................................................

வடிவேலு, பிரபா: ஓடிட்டாய்ங்களா? :))))))))) நாம யாரு! டெர்ரர்ல...:))))))
~~~~~~~~~~~~~~~~~~~~

பஞ்சரா ஹில்ஸ் ப்ரேமா..

(அல்லோ! அண்ணாச்சி! ச்ச்சும்மா எழுதறேன்னு சவுண்ட் விடுறதும், அப்புறம் எழுதிட்டேன்னு இடுகை போடாம இருக்கறதும் இல்ல. தட்டச்சினமா, இடுகை போட்டமாதான்..எப்புடீ)

சுந்தரி டாட்டா காட்டிட்டு போன பெறவு கைக்கான் குப்பம் நரகமாகி போனது. ஒரு சனிக்கிழமை காலை பதினோரு மணிக்கு எழுந்து, பல் விளக்கினதும் பசி எடுக்க ஆரம்பித்தது. கையில் சல்லி காசு இல்லாட்டியும், நண்பனை மதியம் பன்னிரண்டரை மணிக்கு நகராட்சி பூங்காவில் சந்திக்கிறதா சொல்லி இருந்தேன். இருந்ததில் நல்ல உடும்பா பார்த்து போட்டுகிட்டு நடையை கட்டினேன். 

வழியில் ஒரு கட்டிடத்துல கார் நிறுத்துற இடத்துல சாமியானா போட்டு இருந்தாங்க. ஆணும் பெண்ணுமா இளைஞர்கள் வரிசையில நின்னு இருந்தாங்க. மோர் பந்தல் வச்சி இருக்காங்க, ரெண்டு மோர் அடிச்சிட்டு போகலாம். வெட்டியா அலையாம, இங்க துண்டு போட்டாமாதிரியும் ஆச்சின்னு நானும் நின்னேன்.

அதுக்குள்ள ஒரு கலர் குடைய விரிச்சி, அதி கீழ ஒரு மேசைய போட்டு வாங்க வாங்கன்னு கைய காட்டினாங்க. நான் ஓடி போய் முதல் ஆளா நின்னேன். மோர் பானை இன்னும் வரலைன்னு பார்த்து கொண்டு இருக்க ஒரு கார் வந்து நின்றது. அதில இருந்து ஒரு வெள்ளைச்சாமி இறங்கினான். இறங்கினவன் கார் கதவை திறந்து ஏதோ பேச, ஒரு அழகான வெள்ளச்சி இறங்கினாங்க. அவங்க பேசிக்கிட்டே கார் கதவை விட அது மூடும் போது வெள்ளச்சியோட கவுன் சிக்கிக்கிட்டது.

காரை எடுத்தா வெள்ளச்சி உசிருக்கு ஆபத்துன்னு பதறினாலும், வரிசையை விட்டு போனா மோர் கிடைக்காது என்ற பயமும் இருந்தது. அப்போதான் மேசையில ஒரு ஆள் வந்து உக்காந்து ஆங்கிலத்தில என்னமோ கேட்டான். என் கவனமெல்லாம் எங்க வெள்ளச்சிக்கு அடி படுமோ என்று இருந்ததால நான் கவுனு என்றேன். அவன்  “மனவாடா”  என்றான். திரும்பவும் கவுனு என்றேன். அப்புறம் அவன் ஏதோ மொழியில கேட்க கேட்க நான் கவுனு என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

திடீரென காரோட்டி காரைக் கிளப்பவும் ஒரு அழகான பெண்ணுக்கு அடிபடுவதை தடுப்பதைவிட மோர் முக்கியமில்லை என்று ஒரே பாய்ச்சலில் போய் காரைத்தட்டி  ‘கவுனு’  என்று காட்டினேன். வெள்ளச்சாமி ‘ஓ மை காட்’ என்ரு இதான் சாக்கு என்று நொங்கு தின்ன பார்த்தான். அந்த பெண் என்னைக் காட்டி ஏதோ ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு அழகாக புன்னகைத்து விட்டு காரில் ஏறிவிட்டாள்.

பிறகுதான் தெரிந்தது அது ஒரு ஆந்திர சாஃப்ட்வேர் கம்பெனி என்பதும், அதற்கு ஆளெடுக்கிறார்கள் என்பதும், என்னை நேர்முகம் செய்தவன் கொல்டி என்பதும். நான் அவன் கேட்ட போதெல்லாம் கவுனு என்று சென்னதை அவன் அவுனு (ஆமாம்) என்று நினைத்து கொண்டு, கணினியில் எத்தனை மொழி உண்டோ எல்லாம் எனக்கு தெரியும் என்று நினைத்திருக்கிறான்.

வெள்ளைச்சாமி எனக்கு வேலை கொடுக்க முடியுமா என அவனை கூப்பிட்டு கேட்க அவன் இவனுக்கு எல்லா கணினி மொழியும் தெரியுமாம் என்று சொல்லி இருக்கிறான். எப்படியோ எனக்கு டேமேஜர் வேலை கொடுத்து ஐதராபாத் போக சொல்லிவிட்டார்கள். 

நண்பன் உனக்கு தமிழே வராது இதில கணினி மொழின்னு வேற சொல்லி இருக்க. எப்படி சமாளிக்க போகிறாய் என்றான். டேமேஜேர்தானே. மேய்க்கிற வேலை நமக்கு தெரியாதா என்று சொல்லிவிட்டு ஐதராபாத் வந்தேன். 

மின் தூக்கிக்காக காத்திருந்த போதுதான் அவளைப் பார்த்தேன். பக்கத்து மின் தூக்கி வரிசையில் அவள் நின்றிருந்தாள். மஞ்சள் நிற சூடிதார், ஊதா நிறா துப்பட்ட, பச்சை நிறத்தில் செருப்பு, ரோஸ் பவுடர் போட்டிருந்தாள். ஆரஞ்சு வண்ண நகப்பூச்சும், பஞ்சு மிட்டாய் உதட்டுச் சாயமும் போட்டு, ஒரு வெள்லை ரோஜா காதோரம் வைத்திருந்தாள். பார்த்ததும், ரயில் நிலைய வாசல் போஸ்டரில் பார்த்த தெலுங்கு பட கதாநாயகி கவனம் வந்தது. என் சட்டைப்பையில் இருந்த கைக்குட்டை, துண்டாய் மாறவா என்றது.

அதற்குள் பின்னால் இருந்தவன் “போரா” என்றான். நான் இல்லை இருக்கா என்றேன். திரும்பவும் “போரா” என்றான். எங்கே என் ஆளை இவன் துண்டு போடுவானோ என்று கண்டிக்க திரும்புகையில் அவள் மின் தூக்கியும் வர அவள் உள்ளே நுழைந்தாள். அப்போதுதான் தெரிந்தது. என் மின் தூக்கி வந்தும் நான் உள்ளே போகாததால் அவன் கோபத்தில் என்னை போரா(போடா) என்று தெலுங்கில் சொல்லியிருக்கிறான். 

ஆறாவது மாடியில் இறங்கி அவசரமாய் வெளியே வர அவளும் இறங்கியிருந்தாள். எப்படியோ என் அதிர்ஷ்டம் நான் டேமேஜராகவும், அவள் என் குழு தலைவியாகவும் அமைந்தது. மதியம் அகோரப் பசியுடன் அலுவலக கேண்டீனுக்குப் போனபோது அவளும் வந்திருந்தாள். சரியாக இரண்டே இருக்கைகள் எதிர் எதிரில் காலியாக இருந்தன. 

நான் கை காட்ட அவளும் நாணத்துடன் சிரித்துக் கொண்டே அங்கு அமர்ந்தாள். நான் எதிரில் அமர்ந்தேன். இருவரும் சூப்பும், சாப்பாடும் ஆர்டர் செய்ய பரிமாறுபவர் ஒரு கிண்ணத்தை என் முன் வைத்தார். எடுத்து சர்ரென்று உரிந்த பிறகுதான் தெரிந்தது அது சூப் இல்லை. படு காரமான ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்.

ஒரு புறம் ஒரு வருசத்து சைட் டிஷ்ஷை ஒரே மூச்சில் காலியாக்கிவிட்ட வருத்தமிருந்தாலும், ஆசிட் குடித்தாற்போல் வாயிலிருந்து வயிறு வரை எறிந்தாலும், காதலி என்ன நினைப்பாளோ என்று சிரித்தபடி பார்த்தேன். அவள் கண்ணில் பிரமிப்பு தெரிந்தது. எதுவும் பேசாமல் உணவு முடித்து வேலைக்குத் திரும்பினோம்.

நான் என் அறையிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டும், அவள் அவ்வப்போது என்னைப் பார்த்துக் கொண்டும் எங்கள் வேலையில் மும்முறமாக இருந்தோம். அலுவலகம் முடிந்து கிளம்புகையில் நான் அவளை ஏக்கமாக பார்க்க, அவள் நாணமாய் சிரித்துக் கொண்டே, தலை குனிந்து நின்றாள். கம்பெனி பஸ் வரவும், இருவரும் பக்கத்து பக்கது இருக்கையில் அமர்ந்தபடி எங்கள் தங்குமிடத்துக்கு வந்தோம். இறங்கிப் போகையில் என்னை பார்த்து ‘நல்லோடா’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

என் அறையில் என் சக ஊழியன் ஏபிசிடி(Akkumalla Bangaru Chinna Dorasami சுருக்கமாக) ரெட்டி நண்பனானான். அவன் ஏற்கனவே ஒரு பெண்ணைத் துண்டு போட்டிருந்தான். அவள் பெயர் அஸ்கா. என் ஆளும் அஸ்காவும் தோழிகள். பேருந்தில் வருகையில் நான் என் ஆளைப் பார்த்துக் கொண்டே வருவதைப் பார்த்து என் நண்பன் நீ அவளுக்குத் துண்டு போடுகிறாயா என்றான். நான் ஆம் என்று சொல்லி, அவன் ஆளிடம் சொல்லி என் துண்டை ஏற்றுக் கொள்ள உதவ வேண்டும் எனக் கேட்டேன். 

அவன் அவளும் உன் துண்டை ஏற்றுக் கொண்டாள் என்று எப்படி தெரியும் என்றான். அவள் என்னைப் பார்த்து சிரித்து ‘நல்லோடா’ என்று சொல்லிவிட்டு ஓடினாள் என்றேன். அவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து பிறகு சொன்னான். நல்லோடா என்றால் நான் நினைத்தாற்போல் நல்லவன் என்ற அர்த்தம் இல்லையாம். கருப்பா என அர்த்தமாம். அவள் செல்லமாய்த்தான் சொன்னாள் என்று சொல்லி சம்மதிக்க வைத்தேன். 

அன்றும் மதியம், உணவுக்குப் போகும் போது இரண்டே இருக்கைகள் காலியிருந்தன. எதிர் எதிரில் அமர்ந்து அவள் சோறு சாப்பிட்டாள். நான் அவளைக் கண்ணால் சாப்பிட்டபடி ஏதோ கொரித்தேன். அவள் வழக்கத்தை விட ரொம்பவும் அழகாக இருந்தாள். சாப்பிட்டு முடித்ததும், மெதுவாக கிசு கிசு குரலில் ப்ரேமா? என்றாள். அப்போது அந்த வார்த்தையின் விபரீதம் எனக்கு தெரியவில்லை. அவளை அப்படி செல்லமாக அழைக்கச் சொல்கிறாள் என நினைத்து நானும் கிசுகிசு குரலில் ப்ரேமா என்றேன். ச்ச்ச்சீ என்றபடி ரொம்பவும் வெட்கத்துடன் சிரித்தால்.

ரெட்டி? என்றாள். நானும் ரெடி என்று எழுந்துக் கொண்டேன். அவளும் என்னுடன் கிளம்பி வர ஜோடியாக நடக்கத் தொடங்கினோம். பாரதி ராஜா படத்தில் வருவது மாதிரி வெள்ளை உடைதேவதைகள் சுற்றி வருவது போல் எங்கள் இருக்கைக்குத் திரும்பினோம். பார்வையாலேயே எங்கள் காதல் வளர்ந்தது. நான் அவளுடன் பேசுவதற்காகவே மொக்கை தெலுங்கு படங்களெல்லாம் பார்த்து மொழி அறிவை வளர்த்துக் கொண்டதில் ப்ரேமா என்றால் காதல் என்று புரிந்து கொண்டிருந்தேன்.

இரண்டு மாதங்கள் சென்றதும், அஸ்கா மூலம் என் ஆளின் அப்பன் அதான் என் மாமா, அவளைப் பார்க்க வருவதாகவும், அப்போது அவரிடம் எங்கள் காதலை சொல்லி திருமணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தாள். நானும் அவர் வந்த உடன் போய் பார்த்தேன். ‘மீரு ரெட்டியா’ என்றார். அட எவ்வளவு நல்ல மாமா என்று சந்தோசத்தில், நானும் ‘அவுனு! ரெடி’ என்றேன். 

‘ப்ரேமிஸ்தாவா’ (காதலிக்கிறாயா) என்றார். நான் அவர் சம்மதிக்க மறுத்து அவர் மகளின் காதலைத் திரும்ப கேட்கிறார் என நினைத்து ‘இஷ்டம் லேது’ (விருப்பமில்லை) என்று சொன்னதும், அவர் என்னை வெளியே போகச் சொல்லி விரட்டினார். என் ஆள் அழுது கொண்டு ஓடி விட்டாள். ரெட்டியும் அஸ்காவும் என் மீது கோபமாகி பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். என் ஆளும் வேலைக்கு வரவில்லை.

பதினைந்து நாட்களில், என் ஆளின் திருமணம் அவள் மாமா பையனுடன் நடப்பதாக அறிந்தேன்.  உயிரே போனாலும் பரவாயில்லை. என் ஆளைக் கடத்தியாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவோடு, அதிகாலை மூன்று மணிக்கு சத்திரத்தில் நுழைந்து என் ஆளின் அறைக்குச் சென்றேன். அவள் கழுத்தில் புதுத் தாலியோடு படுத்திருந்தாள். 

அப்புறம்தான் தெரிந்தது, இரவு 12.11க்கு கலியாணம் முடிந்திருந்ததும் நான் லேட்டாக மூன்று மணிக்கு சென்றதும். அவள் கோபமாக ‘கருப்பா! என்ன திமிர் இருந்தால் காதலித்து விட்டு என் அப்பா காதலிக்கிறாயா என்றால் விருப்பமில்லை என்று சொல்வாய்’ என சீறினாள். காதலைத் திருப்பிக் கொடுக்க சொல்கிறார் என நினைத்து விருப்பமில்லை எனச் சொன்னதை சொல்ல முடியாமல் நொறுங்கிய இதயத்தை அவள் காலடியில் போட்டு விட்டு, வேறு இதயத்துடன் அமெரிக்கா வந்துவிட்டேன். 

(டிஸ்கி: எழுத்துப் பிழைகள் அண்ணாச்சியின் ஒரிஜினாலிட்டிக்காக:)))

இதையும் ஒருக்கா படிங்களேன்

Monday, June 7, 2010

சொர்க்கத்தில் சோ.அசிங்கப்பன் -1

வடிவேலு: அல்லோ! ஆரு பேசறது

குரல்: நீதான்யா பேசற டுபுக்கு!

வடிவேலு: (என்னைய பார்த்தா எகத்தாளமா போச்சுறா உங்களுக்கு. வச்சிக்கிர்றேன் உன்னைய) யோவ். இதெல்லாம் புளிச்சி போனது. புதுசா ஏதாச்சும் சொல்லு. என்ன விசயம்?

குரல்: மூன் ட்வார்ஃப் பிக்சர்ல இருந்து மேனேஜர் பேசறேன். ரெடியா இரு. ஆட்டோ வரும். உடனே வரணும். 

வடிவேலு:ஏன்யா ஏன்யா. ஆட்டோன்னு பீதிய கெளப்பற. நான் மாட்டன்னு சொன்னனாய்யா

குரல்: சாரி. காருண்ணே. ரெடியா இருங்க. தலைவரு வந்துருவாரு(க்ளிக்)

(எதுக்கு நம்மள கூப்டுறாய்ங்க. தலைவருன்னு வேற பிட்ட போடுறான். ச்ச்சேரி. ரெடியாய்க்கிருவோம்.)

வடிவேலு:போலாமாண்ணே. எம்புட்டு நேரமா வெயிட்டிங்கு. 
(மூன் ட்வார்ஃப் பிக்சர்ஸ்)

மேனேஜர்:ஹி ஹி. வணக்கம்ணே. வாங்க வாங்க.

வடிவேலு: நேர பார்த்தா வணக்கம். ஃபோன்லன்னா நக்கலு! வந்து வச்சிக்கிர்றேன் உன்னைய. 

மேனேஜர்:அண்ணே! போங்கண்ணே! நாங்களும் மருததான். இந்த பிளிமெல்லாம் வேணாம். நேர போய் லெப்ட்ல ரெண்டாவது ரூம்பு.

வடிவேலு: போறேன் போறேன். என்னா பில்டப்பு.ஹும்

வடிவேலு:அல்லோ. எச்சூஸ் மீ! மே அய் கமின்?

குரல்:யாரது? தம்பி வடிவேலுவா! வருக வருக!

வடிவேலு:தெய்வமேஏஏஏஏஏஏஏஏ! நீங்கன்னு தெரியாம பேசிட்டேன் தெய்வமே! ஒரு வார்த்த ஃபோன்ல சொல்லியிருந்தா மாட்டன்னா சொல்லப்போறன் தெய்வமே. நீங்க போய் இம்புட்டு தூரம் வந்து...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தல:தம்பி உதை..

வடிவேலு:அய்யா! தெய்வமே. நான் எதுவுமே சொல்லலையே தெய்வமே. ஏன் உதைன்னுகிட்டு

தல:பேச விடு தம்பி. தம்பி உதை..ச்செரி சொல்லலை. செந்தமிழ் மாநாட்டுக்கு திரைப்படத் துறை சார்பில் ஒரு குறும்படம் எடுக்க வேண்டும். முடியுமா?

வடிவேலு:அய்ய்யா! ஏன்யா இப்புடி. செய்ன்னு சொல்லக்கூட வேணாம்யா. செஞ்சிரலாம்யா. நீங்க கெளம்புங்க தெய்வமே. நான் தம்பிட்ட பேசிக்கிர்றன்.

வடிவேலு: நீங்க சொல்லுங்க தம்பி. என்னா ஸ்டோரி. யாரு டைரடக்கரு. ஈரோ யாரு? 

உதை: அண்ணே இப்போதைக்கு டைட்டில்தான் ரெடி. ‘சொர்க்க லோகத்தில் சோ.அசிங்கப்பன்’ மிச்சமெல்லாம் உங்க பொறுப்பு. 10 நாள் சூட்டிங்கு. 

வடிவேலு: (ஆஹா! ஏன்யா ஏன்! மொத்தமா ஒழிச்சிகட்டவா?) தம்பி..வந்து..பத்துநாள்ள..எப்புடி? படம் ஓடலைன்னா..

உதை: என்னாது. ப்ளூ ட்வார்ஃப் பேனர்ல ஓடாமலா. ஓட்டுவோம். ஒரு லட்சம் ப்ரிண்ட்னாலும் எடுத்து ஓட்டுவோம். நீங்க வேலையப் பாருங்கண்ணே. வெளிய ஆட்டோ நிக்குது. போங்க.

வடிவேலு: ஹ்ம். ஏந்தம்பி. ச்சும்மா ஆட்டோ ஆட்டோன்னுகிட்டு. வர்ட்டா
(போலிசுக்காரன விட கேவலமா இருக்காய்ங்களே. வரப்ப காரு. போறப்ப ஆட்டோவாடா. நடத்துங்க நடத்துங்க. இந்தக் கட்டதொரைக்கு கட்டம் சரியில்ல) ஏப்பா மேனசரூஊஊ மேனேசரு. ஆட்டோ கூப்புடுவியாம்யாய்யா.

மேனேஜர்: வாடி! என்னமோ திரும்பி போறப்ப வச்சிக்கிறன்னு சொன்ன!

வடிவேலு:யப்பா! ஆட்டோன்னு நானே நடுங்கிப்போய் வந்திருக்கேன். ஏன் இந்த கொலவெறி. 

மேனேஜர்:அந்த பயம் இருக்கட்டும். ஆட்டோ வெளிய ரெடியா இருக்கு. போங்கண்ணே போங்க!

வடிவேலு: ட்ரைவரண்ணே! கொஞ்சம் வீட்ல ட்ராப் பண்றிங்களா? 

ஆட்டோ: அண்ணே! நீங்களாண்ணே. ஏறி உக்காருங்கண்ணே. 

வடிவேலு: யப்பா! போற வழில டாஸ்மாக்குல கொஞ்சம் நிறுத்துப்பா. சரக்கு வாங்கிக்கிரணும். அப்புடியே நீயும் ஒரு க்வார்ட்டர் வாங்கிக்க. என்னைய எறக்கி விட்டுட்டு நீ ஏத்திக்க சாமி! நமக்கு நேரமே செரியில்ல..அவ்வ்வ்வ்வ்

வடிவேலு: நிப்பாட்டு நிப்பாட்டு. வீடு வந்திரிச்சி நிப்பாட்டுண்ணே. ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டேங்க்ஸ். 

(செந்தமிலப்பத்தி வெளம்பரப்படம் எடுக்க நாந்தானா கெடச்சேன். நம்ம இங்கிலீச வெச்சித்தானே பேமசானது. நாம பேசினா அப்புடி வார்த்த இருக்கான்னு வெள்ளக்காரனே கம்பீட்டர்ல தேடுவானே. என்னையப்போயி இதுக்கு கூப்புட்டு, எல்லாத்தையும் நீயே பார்த்துக்கடான்னா நான் என்ன பண்ணுவேன்! என்ன பண்ணுவேன்! ச்ச்சேரி. சரக்கப் போடுவோம். அகுடியா வந்தா அகுடியா. தூக்கம் வந்தா தூக்கம். என்ன நாஞ்சொல்றது..ஆஆஹா! பொலம்ப விட்டுட்டானுங்களெய்யா பொலம்ப விட்டுட்டானுங்களே..ஹ்ம்ம்ம். என்னா டைட்டிலு? சொர்க்க லோகத்தில்.. கொர்ர்ர்ர்)

(கனவில் சொர்க்க லோகத்தில் அசிங்கப்பன்)

வடிவேலு: என்னா இடம் இது? யாரயாச்சும் கேக்கலாம்னா ஒரு பயத்தையும் காணமே.. ம்ம்ம்.. அந்தா ஒரு வெள்ளக்காரன் வாரான்..அவன கேப்போம்..ஏஏஏஏய்ய்ய்.. எச்சூஸ் மி.. ஊ ஆர்ர்ர்ர்ர்ர்ர் யூஊஊஊ, கமான் டெல் டெல்

ஜேம்ஸ் பாண்ட்: வாட்? மீ? மை நேம் ஈஸ் பாண்ட்! ஜேம்ஸ் பாண்ட்

வடிவேலு:மை நாம் அப்பன்! அஸ்ஸ்ஸ்ஸிங்ங்ங்ங்ங்கப்பன்!

(இடைவேளை)
~~~~~~~~~~~~~~~~~

Saturday, June 5, 2010

சாலட் -1

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க ஆரம்பித்துவிட்டன. இன்றைய நாளிதழில் எழுத்து பூர்வமாக புகார் கொடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் வழமையான ஒரு அறிவிப்பும் வெளியாகிவிட்டது. அடுத்த தலைமுறையை வழிநடத்தும் பள்ளிகளின் கயவாளித்தனம் சற்றும் குறையாமல் நடந்தும் முடிந்துவிட்டது.

ஆம்! எனது ஆட்டோ ஓட்டுனர் நண்பரின் மகள் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்புத் தேர்வில் 9.2 புள்ளியெடுத்தும் ஒரு சுமாரான பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. அவளுக்கும் மிகக்கீழான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஏன் என்ற கேள்விக்கு வந்த பதில், குடித்துவிட்டு தகராறு செய்கிறாயா? போலீசைக் கூப்பிடவா என்பது. மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட லட்சணம் இது.

மற்றோர் பள்ளியில், பள்ளி குறித்த எந்த தகவலுமற்ற ஒரு தாள். விண்ணப்பம் என அவசரமாக அச்சடிக்கப்பட்டு ஈரம் காயுமுன்னே வினியோகப்பட்டது. ஏதோ ஒரு ரெகமண்டேஷன் பேரிலேயே கொடுக்கப்பட்டது. சீருடை, புத்தகம், நோட்டுப் புத்தகம் கட்டாயம் பள்ளியிலேயே என்ற கண்டிஷனுடன், கட்டணம் ரூ20000 எனப்பட்டு, ஒரு பள்ளி ஊழியரின் பரிந்துரையில் ரூ18,500 ஆக்கப்பட்டது. 

பரவாயில்லை எனத் தோன்றலாம். இதற்கு மட்டும்தான் ரசீது தரப்படுமாம். இது போக மாதம் 1500 கட்டப்பட வேண்டுமாம். அதற்கு ரசீது இல்லையாம். சம்மதம் கேட்டு கடிதம் வாங்கிய பின்னே அனுமதி கொடுக்கப்பட்டது.  அரசாங்கம் எல்லாப் பள்ளியிலும் அப்ளிகேசனை சரிபார்த்தாலே போதும். ஊழல் வெளிவந்துவிடும். எழுத்துமூலம் புகார் என்பது கூட்டுக்களவாணித்தனமே! சட்டத்தை அமல்படுத்துவதில் அக்கறையின்மையே!
-------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய இடுகையின் தொடர்ச்சியாக இரயில் பயணத்தில் முன்பதிவு குறித்த புகாரின் ஊழலின் இன்னொரு பரிமாணம் வெளிவந்திருக்கிறது. நண்பர்கள் சரவணக்குமார், காமராஜ் ஆகியோரின் கேள்விகளுக்கான விடை இது. காலை 5லிருந்து காத்திருந்து காலை 8 மணிக்கு கவுண்ட்டர் திறந்து 15 நிமிடத்தில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிடும் மர்மம் பிடிபட்டிருக்கிறது. 

ப்ரோக்கர்கள், தங்கள் ஆள் ஒருவரின் உண்மையான தகவலுடன், அடையாள அட்டைச் சான்றுகளுடன் புனைவாக 5 நபர்களின் பெயர், வயது விபரங்களை IRCTC பதிவு விண்ணப்பத்தில் நிரப்பிக் காத்திருப்பார். 8 மணிக்கு பதிவு தொடங்கியவுடன் ஒரே அழுத்தில் 6 டிக்கட் பதிவாகிவிடும். இது போல் ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு பதிவுகள். 

அதே நேரம், கவுண்டரில் இரயில்வே ஊழியர் பொது ஜனத்தின் ஒரு அப்ளிகேஷனைச் சரிபார்த்து தகவலைப் பதிந்து டிக்கட் ப்ரிண்ட் செய்ய ஆகும் நேரம் 25 நொடிகள். (நிச்சயம் இது ஒரு நிமிடம் தாண்டிவிடும் என்பது திண்ணம்) . இந்த நேரத்தில் எத்தனை டிக்கட்டுகள் மேற்படி முறையில் சட்டப்படி ப்ரோக்கர்களாலும், கணினி மூலம் டிக்கட் வாங்கும் பொது ஜனங்களாலும் பதியப்பட முடியும் என்பதை உணரமுடியும்.

ஊழல் என்னவெனில், இப்படிப் பதிந்த டிக்கட்டுகளில் உண்மையான தகவல் உள்ள ஆசாமியும் பயணப்படுவார். அவரின் அடையாளம் மட்டுமே பதிவு செய்யப்படும். மற்றவர்களுக்கு பேரும் வயதும் சொல்லப்படும். அதிக வித்யாசமிருப்பின் அவர் எழுந்து கழிப்பறைக்குச் சென்றுவிடுவார். இத்தகைய பயணிகளிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். 

இதற்குத் தீர்வுதான் என்ன? இரயில் நிலையங்களில் பதிவு தொடங்கி அரை மணி நேரம் கழித்து கணினிப்பதிவை அனுமதிக்கலாம் என்பது முன்வைக்கப்படுகிறது.  இது தீர்வாகாது. 

ஒன்று யார் பெயரில் டிக்கட் பதியப்படுகிறதோ மற்றவர்களின் அடையாளத்துக்கான அத்தாட்சியும் அவர் காட்டவேண்டும் என்பது கட்டாயமாக்கப் படவேண்டும். இல்லாத பட்சத்தில் அனைவரும் அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விடப்படவேண்டும். இதற்கு பொதுஜன எதிர்ப்பு எழத்தான் செய்யும். ஏமாற்றப் பட்டவர்கள் என அனுதாபம் தேட முயல்வார்கள். தளராமல் நடைமுறைப் படுத்தப்பட்டால் மட்டுமே நம் ஆட்கள் இதற்கு ஆதரவு தரமாட்டார்கள்.

IRCTC கணினி மூலம் பதிவதால், அளவுக் கதிகமாக யார் பேரில் டிக்கட் பதியப்படுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது சுலபம். இத்தகையோர் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டு அவர்களின் டிக்கட்டுகள் மட்டுமாவது மற்றவரின் அடையாளங்களுடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  (நடராஜன் சார்! உங்க அடையாள அட்டை ஐடியாக்கும் வச்சிட்டானுங்க ஆப்பு)
_____________________________________________________________________________

அனைவருக்கும் தீர்வளிக்கும் முயற்சிக்கு உண்மைத் தமிழனுக்கும், ஆணித்தரமான நியாயமான கேள்விகளோடு பாதிக்கப்பட்டும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சம்பந்தப்படாதவர்களுக்காக குரலெழுப்பிய அது சரிக்கும் நன்றி. 

Friday, June 4, 2010

ரூல்ஸ் முக்கியம் அமைச்சரே..

இந்த அரசாங்க ஊழியன் இருக்கானே. அவனுக்கு அம்மா அப்பா பேரு கூட மறந்தாலும் மறந்துடும். ரூல்ஸ மட்டும் மறக்கவே மாட்டான். இந்தியன்ல வர பாஸாதி மாதிரி எதுக்கெடுத்தாலும் ரூல்சுனு சொல்லுவாய்ங்க. வேலைய கட்டி வைக்க ரூல்சு. லஞ்சம் வாங்க ரூல்சு. மேலதிகாரி மொட்ட தலையில கட்டவிரல் முளைக்கணும். என்னா பண்ணுவியோ தெரியாதுன்னா, எங்கிட்டோ சந்து பொந்து தேடி அதுக்கும் ஒரு வழி சொல்லுவானுவ. 

ஆனாலும் அவனுவளுக்கே சிப்பு சிப்பா வர ரூல்சுங்க இருக்கு. ஒன்னு ரெண்ட பாப்பமா?

கெவருமெண்டு உத்தியோகஸ்தனோட பொழப்பு இருக்கே பொழப்பு. அதுக்கு அடிப்படை விதிகள்னு ஒரு சித்திரகுப்தன் கணக்கு ஒன்னு இருக்கு. அத புடிச்சிகிட்டுதான் தொங்கோணும். அதுல ஒன்னு இது. 

ஒரு அரசு ஊழியனுக்கு பதவி உயர்வு வந்தா அடுத்த ஒரு 21 நாளைக்கு கேஷுவல் லீவ், விடுமுறை நாட்கள் தவிர வேற விடுப்பு எடுக்கப்படாது. எடுத்தா, திரும்பவும் 21 நாளு விரதம் மாதிரி இருக்கணும். 22ம் நாளுக்கு அப்புறம்தான் பதவி உயர்வு எடுத்த நாளில இருந்து கூட சம்பளம் தருவாய்ங்க.

அது! அது! உங்கள மாதிரியே எனக்கும் சந்தேகம் வந்திச்சி. அது என்னடா 21 நாள் கணக்குன்னு. எனக்கு முன்னாடி 30 வருஷம் குப்பை கொட்டினவன், என் அதிகாரி அத்தன பேத்தையும் கேட்டேன். யோவ், அடிப்படைச் சட்டத்துல போட்டிருக்கான்லயா? அப்புறம் கேள்வி வேற கேக்குற கேள்வின்னே சொல்லி ஏச்சிப்புட்டானுவ.

ஆனாலும், இது ஒரு உறுத்தலாவே இருந்திச்சி. கிட்டத்தட்ட 25 வருஷம் கழிச்சி, நம்ம சர்வீஸ் பெரிய காலேஜ் இருக்கு வதோதரால. அங்க போய் படிச்சிட்டு வாடான்னாங்க. நாம பாட்டுக்கு ஒரு சந்தேகம் கேக்காம இங்கிலீஷ்ல சொன்னத புரிஞ்சிகிட்டு, இந்தில சொன்னத புரிஞ்சா மாதிரி நடிச்சிகிட்டு நாளக் கடத்தினா விதி விடமாட்டன்னுச்சு. வந்தான் ஒருத்தன் வாத்தி. எதுனா டவுட் கேட்டே ஆவணும்னு அடம் புடிச்சான்.

ங்கொய்யால. இந்த கேள்விக்கு சொல்றா பாப்பம்னு எடுத்து விட்டேன். கட்டிப் புடிக்காத குறையா, குட் கொஸ்சன்னு சொல்லிட்டு, ஏய் நீ சொல்லேன் ஏய் நீ சொல்லேன்னு கிட்டதட்ட 50 பேரை கேட்டான். ஒருத்தனுக்கும் தெரியல. அப்புறம் சொன்னான் பாருங்க விளக்கம், மயக்கம் வராத குறை.

வெள்ளக்காரன் காலத்துல அரசு ஊழியன (அட பங்கா இழுக்கிறவினில்லைங்க) வெள்ளைச்சாமிங்கள, இங்கிலாந்துல பதவி உயர்வு குடுத்து இந்தியா போ ராசான்னு அனுப்புவாய்ங்களாம். அவரு அங்க சரி, நான் பதவி ஏத்துக்கிட்டேன்னு எழுதி குடுத்துட்டு கப்பல் ஏறினா, இந்தியா வந்து அவரு ஆபீஸுல ரிப்போர்ட் குடுக்க 21 நாளாகுமாம்.

அத இன்னும் அப்புடியே பிடிச்சிகிட்டு தொங்கறமாம். ஒரு பயலும் ஏன்னு கேக்கல. எனக்கு மட்டும் என்ன வந்திச்சி. சரி போங்கடான்னு இருக்கேன்.

அடுத்ததா இந்த பென்சன் குடுக்கிறாய்ங்கள்ள அதுல ஒரு ரூலு. அப்பங்காரன் மண்டைய போட்டு, ஆத்தாக்காரி மண்டைய போட்டு, அடுத்ததா நிக்கிறது பையன்னா 25 வயசு, பொண்ணுன்னாலும் 25 வயசு அல்லது கண்ணாலம் கட்டிக்கிட்டு போற வரைக்கும் (25 வயசுக்குள்ளதான்) அவிங்களுக்கு பென்சன் உண்டுன்னான். இது எப்ப? அரசு ஊழியனாக அதிக பட்ச வயசு 25 இருந்தப்ப போட்டது. அதுக்கப்புறம் 28 வயசுன்னு ஆச்சே மாத்தணுமா வேணாமா? ஒரு பயலும் கேக்குறதா இல்லை. 

அது போகட்டும், பையனுக்கு வேலை கிடைக்கலைன்னு வைங்க, ஒரு 26, 27 வயசுல கண்பார்வை போயிடுது, அல்லது மண்டைல அடிபட்டு சித்த சுவாதீனமில்லாம போச்சுன்னு வைங்க. அவனுக்கு பென்சன் கிடையாது. ஹி ஹி 25 வயசுக்கு முன்னாடின்னா, அப்பங்காரன் வேலையில இருக்கிறப்பவே இப்படி ஆயிருந்தா உண்டு. இல்லைன்னா இல்லை போடாம்பாய்ங்க.

அவரு பொண்ணு இருக்குன்னு வைங்க. அது பில்கேட்ஸ் பேரன கட்டியிருந்துச்சுன்னு வைங்க. 70 வயசுல புருசங்காரன் செத்துபூட்டான்னு வைங்க. சொந்த விமானத்துல வந்து, எங்கப்பா ரயிலுக்கு பிகிலூதற வேலையில இருந்தாரு. எம்புருசன் போய் சேர்ந்துட்டாரு. எனக்கு சம்பாத்தியமில்ல. வேற கண்ணாலம் கட்டல. பென்சன குடுடான்னா. வாங்க மேடம். இதில கையெழுத்து போடுங்க மேடம். போங்க மேடம். சாவற வரைக்கும் பென்சன் உண்டுன்னு அனுப்புவாய்ங்க.

ஏன்னா சட்டம் அப்புடிச் சொல்லுது. மகள் விதவையாகி பிறந்தவீட்டுக்கு வரணும். அதான் ரூல்ஸ். மாமியா ஊட்டுல இருந்தா கிடையாது. நீங்க சொல்லுங்க. அப்பா போய், அம்மா போய், அதுக்கப்புறம் அம்மா ஊடுன்னு ஒன்னு எங்க இருந்து வரும் சொல்லுங்க? 

அத விட வங்கொடுமை ஒன்னு இருக்கு. இவரு சர்வீசில இருக்கும் போதே பையனோ பொண்ணோ ஊனமானாலோ, மனச்சிதைவு ஏற்பட்டாலோதான் பென்சனாம். கெளவன் ரிட்டையர் ஆயி, அப்புறம் ஒரு பொண்ண கட்டி, அவங்களுக்கு குழந்தை பிறந்தா, அந்த குழந்தைக்கு 25 வயசு வரைக்கும் பென்ஷன். அதுக்கு ஊனம்னா ஆயுள் வரைக்கும் பென்ஷன். 

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ. நல்லா சொல்லுறானுங்கைய்யா ரூல்ல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு.

நமக்கு ஏம்பா அக்கப்போரு. ரூல் சொல்லுது. கேட்டுட்டு நம்ம பொழப்ப பாக்கலாம். வர்ர்ர்ர்ட்ட்ட்டா...

Wednesday, June 2, 2010

வீர சுதந்திரம் வேண்டி..

நட்புகளே!

முதலிலேயே கை கூப்பிச் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் அனுதாபம் தேடியல்ல இந்த இடுகை. ஆணாதிக்கத்தை நொறுக்குகிறேன் என்ற பெயரில் ஒரு பெண்ணை தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள விட்டு சுத்தி நின்று அடித்த இந்த ஆதிக்கத்துக்கு பெயரென்னவென்றாவது கூறுங்கள் நண்பர்களே.

எத்தனை பெண் பதிவர்கள் இருக்கிறார்கள். எல்லாருமா நர்சிம்மை கண்டித்தார்கள். அல்லது அவர்கள் எவருமே ஏதோ ஒரு பொது விசயத்தைக் குறித்து இடுகை இடவில்லையா?

தோழி கலகலப்ரியாவை தனிமைப்படுத்தி அவரின் தன்னிலை விளக்கத்துக்கு பின்னூட்டமாக கேவலப் படுத்தியபோது நாம் யார் எதிர்த்தோம்? யார் பேசினார்கள்? யார் கண்டித்தார்கள். 

சந்தனமுல்லையின் மன உளைச்சலைப் பற்றி, அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் பற்றி உணராதவன் மனிதனில்லை. இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமும் இல்லை. ஆனால், அது பின்விளைவை எதிர் பார்க்காமல் ஏதோ ஒரு விதத்தில் அவரே தேடிக் கொண்டது என்பதும் மறுக்கவியலாதது. 

கலகலப்ரியா செய்தது என்ன? என்ன தெரியும் அவரைப் பற்றி உங்களுக்கு? இங்கு சுமஜ்லாவுக்கு எதிராக எழுதிவிட்டார் என இரண்டு பக்கமும் சொம்படித்த ஈனப்பிறவிகளும், புரிதலின்றி தாக்கிய பெரிய மனிதர்களுக்கும் தெரியுமா, அந்த நேரம் அவர்கள் இருக்கும் ஊரில் மசூதிக்கு பாங்கு கூவும் ஸ்தூபிகள் வைக்க விதிக்கப்பட்ட தடைக்கெதிராக அவர்கள் மத சுதந்திரத்தை ஆதரித்து வாக்களித்தவள். 

நணபர்கள் மாதவராஜ், செந்தழல் ரவி, காமராஜ், இன்னும் எத்தனையோ பேர் தோழி சந்தனமுல்லை குறித்த அவதூறுக்கு கண்டனம் தெரிவித்தது தவறென யாரேனும் கூறமுடியுமா? நர்சிம் எழுதிய அசிங்கத்தை கண்டிப்பதுதானே சரியெனப்பட்டது. அதைத்தானே கலகலப்ரியா செய்தார். பர்தா அணிந்தவர்கள் மட்டுமே நற்குடி என்ற வார்த்தையை எதிர்த்து தன் ஊரில் பர்தா அணியாத ஒரு தோழியும் தாழ்ந்தவளல்ல என்பது தானே அவரது கவிதை?

அதற்காக இப்போது ஏன் கண்டிக்கவில்லை எனக் கேட்பது தவறில்லை எனில், நான் கேட்கிறேன் ஏன் கலகலப்ரியா ஒரு பெண்ணில்லையா? ஆணாதிக்கத்துக்கு பாதிக்கப் படவில்லையா? எங்கே சொல்லுங்கள்? 

நேற்றைய இடுகையில் எத்தனை வார்த்தைகள் இருந்ததோ அவையெல்லாம் உங்களுக்கு திமிராகத் தோன்றலாம். அதன் பின்னான வலி எனக்குத் தெரியும். சந்தனமுல்லையின் வலியும் வாதையும் உங்களுக்கெல்லாம் எப்படித் தெரியுமோ அப்படி எனக்குத் தெரியும்.

ரவி சார். காயப்பட்டு நிற்கிறேன். உங்களால். பகுத்தறிவுடன், பட்ச பாதம் இல்லாமல் உங்கள் எழுத்தைக் காதலித்ததால் உங்களை மதித்ததால் காயப்பட்டு நிற்கிறேன். சந்தனமுல்லையின் வலியுணர்ந்த உங்களுக்கு கலகலப்ரியாவின் வலி ஏன் தெரியவில்லை. என்ன கேட்டீர்கள்? கள்ள மவுனமா? மாதவராஜைப் படியுங்கள். காமராஜைப் படியுங்கள்.  என்ன சொன்னீர்கள்? வானம்பாடி பாட ஆரம்பித்து விட்டதா. அகோரத்தின் மடியில் நிற்கிறதா? என்ன அர்த்தம் என் எழுத்துலக ஆதர்ஸமே? 

நர்சிம் என்னை அறிமுகப்படுத்திய விஷயம் ஏன் வந்ததோ தெரியவில்லை. நர்சிம்மின் பார்வையில் நான் படும்போது 150க்கும் மேல் என் இடுகைகள் அது மொக்கையோ குப்பையோ வெளியாகி இருந்தன. அவரின் அறிமுகத்திலும் நான் எப்படி தவறவிட்டேன் என்றே குறிப்பிட்டிருந்தார். ஒரு பெண்ணுக்கு நீதி கேட்ட உங்களுக்கு மறு பெண்ணுக்கு நீதி கேட்க தோன்ற வேண்டாம். சீண்டும் எண்ணம் எப்படி வந்தது. இது ஆணாதிக்கம் இல்லையா?

உணமைத்தமிழன் இடுகையில் நீங்கள் பின்னூட்டமிடும்போது கொச்சையாய், பெண்பெயரில் ஒரு பின்னூட்டம் வந்ததே? கண்டித்தீர்களா? சொல்லலாம். அங்கு கலகலப்ரியா ஒரு பெண்போல் பேசவில்லை என்று? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம். அதென்ன சார் பெண் போல் பேசுவது? பெண் என்று நினைத்திருந்தீர்களானால் வினவில் அவரின் பெயரை, மிஸஸ் டவுட்டின் பெயரை நீக்கச் சொல்லியிருக்கலாமே? யார் செய்தீர்கள்?

நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறேன். என் தோழிக்கு எவர் ஆதரவும் தேவையில்லை. எந்த ஆறுதலும் தேவையில்லை. ஒரு தோழனாக உங்கள் முன் கேட்கிறேன். நீங்கள் கண்டிக்க வேண்டாம். தண்டிக்க வேண்டாம். நாங்கள் உன் பக்கம் தோழி என நிற்க வேண்டாம். அதற்கான தகுதியும், மன வளர்ச்சியும் நமக்கில்லை. 

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. ஒரு நண்பனாக என் கடமை இது. அறச்சீற்றம், அநியாயத்தை எதிர்த்து இடுகை, Pleading, roughing up இன்னும் என்னல்லாம் உண்டோ அத்தனைக்கும் இடுகை இதையெல்லாம் செய்து கொண்டு அருமையாகச் சொன்னீர்களிலும், நச், போன்ற பின்னூட்டங்களிலும் புளகாங்கிதம் நாம் அடையும் நேரத்தில் என் தோழியெனும் தேவதையால் ஒரு தமிழின மன நோயாளிக்கு சரியான சிகிச்சை, ஒரு நோயாளிக்கு தன் நிலை குறித்த தெளிவு, ஒரு பெற்றோருக்கு தன் குழந்தையின் பிரச்சினை, ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல பெற்றோர், ஒரு புலம் பெயர்ந்தவருக்கு வாழ்வு, இன்னும் என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் நெறிப்படுத்திக் கொடுக்கும் வரம் அவளுக்கு கடவுள் கொடுத்தது. 

அதையும் மீறி எழுத வந்ததற்கு வலியும் அவமானமும் நாம் கொடுத்தது. வளர்க ஆணாதிக்க ஒழிப்பு. 

எனக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்யவும், எது சரியில்லை எனத் தோன்றுகிறதோ அதை எதிர்க்க மட்டுமல்ல நிராகரிக்கவும் உரிமை உண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. அதைத்தான் நான் செய்தேன். என்னைப் போல் பலரும் அப்படித்தான் இருந்தனர். அதனால் அப்படி இருப்பவர்கள் குற்றவாளிகளானால் இருந்துவிட்டுப் போகிறோம். 

மீண்டும் சொல்கிறேன். என் வார்த்தைகள் யாரையாவது காயப் படுத்தியிருப்பின் இதோ என்னை மன்னித்துவிடுங்கள்.

தயவு செய்து என் இந்த இடுகைக்காக எதுவும் செய்ய வேண்டாம். நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான். மன்னிப்பல்ல. கண்டனமல்ல. ஆதரவல்ல. அங்கீகாரமல்ல. அனுதாபம் சத்தியமாய் அல்ல. 

தயவு செய்து அவரை சுதந்திரமாய் விடுங்கள். அவராய் இருக்க விடுங்கள். அவரில்லாமலும் பதிவுலகத்தில் நியாயம் தேவையெனில் கிடைக்கும். அனியாயம் வெருட்டப்படும். ப்ளீஸ்.  
~~~~~~~

(மன்னியுங்கள் தோழர்களே! மட்டறுத்தல் செய்திருக்கிறேன். குறைந்தபட்சம் வேறு யாரும் காயமுறாமல் இருக்க என்னால் செய்யக்கூடியது அவ்வளவே)