Saturday, May 29, 2010

கதிர் வினைக்கு எதிர் வினை.

1. நானும் பதிவு எழுதறேன், வலைப்பூவில எழுதறேன்னு சம்பளப் பணத்துல நெட் கனெக்சனும், லோன் போட்டு புதுசா லேப்டாப்பும் வாங்கினையே, முதல்ல அது பிடிக்கலை.

ங்கொய்யால. மத்தபேரெல்லாம் கொள்ளையடிச்சி நெட் கனெக்சன் வாங்கினாமாதிரி என்னா அலம்பலு? இந்த அல்டாப் பிடிக்கலை

2. வலைப்பூ முகப்புல போடறதுக்கு கோயமுத்தூர் போயி 3500 ரூபா செலவு பண்ணி 18 விதமான கெட்டப்ல போட்டோ எடுத்துட்டு வந்தியே அது பிடிக்கலை.

கவுத்து வெச்ச சட்டிய சுத்தி சுத்தி வந்து எடுத்தாலும் ஒரே மாதிரித்தானே இருக்கும். இதுக்கு க்க்க்க்கோஓஓஓஓஓஓஓஓயம்பத்தூர் வேற. இந்த ஓவர் சீனு பிடிக்கலை.

3. நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.

அடங்கொன்னியா! ராத்திரி 11 மணிக்கு மேல ஓசில பேசற பூஸ்டர் பேக்குக்கு கஞ்சத்தனம் பண்ணிக்கிட்டு இப்புடி காசக்கரியாக்கினது சுத்தமா புடிக்கலை.

4. நீயே ஒரு ஹிட் கவுண்டர் செட் பண்ணிட்டு தினமும் குறைஞ்சது 200லிருந்து 300 வாட்டி பிரவுசரை Refresh பண்ணிறியே அது பிடிக்கலை.

அல்பம் அல்பம். விடியக்காத்தால ஒரு 2 மணிக்கு அலாரம் வெச்சிக்கிட்டு ஃபீட்ஜிட்ல பார்த்து யாரும் இல்லைன்னா நேரா கவுண்டர்ல போய் ஸ்டார்ட்டிங் நம்பர் மாத்திக்குடுத்தா எவ்ளோ பேண்ட்வித் மிச்சம். இது கூட தெரியாம..இந்த மடத்தனம் சுத்தமா பிடிக்கலை.

5. யாருமே பின்னூட்டம் போடறதில்லைனு கொஞ்சம் கூட வருத்தப்படாம, நியூமராலஜி புஸ்தகம் வாங்கி, உன்னோட ராசிக்கு பொருந்தற மாதிரி வித்தியாசமா 20 ஆண்கள், 25 பெண்கள் பெயர்களை செலக்ட் பண்ணி அப்பப்ப நீயே பின்னூட்டம் போட்டுக்கிறியே அது பிடிக்கலை.

அடக் கருமமே! அத்தன பின்னூட்டத்துக்கும் பதில் பின்னூட்டமும் இல்லீன்னா நன்றின்னு வேற போட்டுக்கணுமே. அந்தக் கொடுமையும் பிடிக்கலை.

6. போன வாரம் நடந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில “வலைப்பூ புகழ்”னு லேப்டாப் முன்னாலே நீ உட்காந்திருக்கிற மாதிரி போட்டோ போட்டு பிளக்ஸ் பேனர் வைச்சிருந்தியே அது பிடிக்கலை.

இப்போ நடந்த குடுமுழுக்குல “வலைப்புகழ்” பக்கத்துல பக்கித்தனமா “பி.ப”னு வேற போட்டு அதே ப்ளக்ஸ் பேனர சர்ஃப் போட்டு கழுவி கட்டியிருந்தது கேவலமா பிடிக்கலை.

7. “சிறந்த வலைப்பதிவு சிங்கம்”னு எம்ராய்டரிங் பண்ணின பிட்டுத் துணிய தினமும் சட்டைப்பையில் குண்டூசி வைச்சு குத்திட்டு, நெஞ்ச நிமிர்த்திட்டு போயி ரோட்ல கிடந்த கல்லுல கால் நகத்தை பேத்துக்கிட்டியே அது பிடிக்கலை.

அது நடந்து ஆறுமாசமாகியும் புதுசா யாராவது பார்க்கறப்ப வேணும்னே நொண்டிகிட்டு இத சரியாக் குத்தப்போய் கல்லுல அடி பட்றுச்சின்னு அனுதாப ஃபாலோயர் புடிச்சது சுத்தமா பிடிக்கல.

8. வேலை செய்ற கம்பெனியில உன் பேரு போட்டு கொடுத்த விசிட்டிங் கார்டுல வலைப்பூ முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குத்திட்டு, மார்கெட்டிங் போற இடத்திலெல்லாம் வலைப்பூ பத்தியே பேசுறியே அது பிடிக்கலை.

ம்கும். அதுல மாறுதல்.ப்ளாக்ஸ்பாட்.காம்னு இருந்தத படிச்சிட்டு அட ஆமாம்லனு அத்தன வாடிக்கையாளரும் மாறிபோய் ஆப்பு வெச்சத இப்பவும் சொல்லாம விட்டது பிடிக்கவேயில்லை.

9. பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.

பதிலுக்கு வந்த ஜாதகத்துல “வலைப்பூ சிங்கி”ன்னு போட்டு டமுக்கடிப்பான் டியாலோன்னு கையெழுத்து போட்டு வந்தத சொல்லாம விட்டதும் கூட பிடிக்கலை.

10. சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.

படிக்க நெம்ப ஓக்கியமா தெரிஞ்சாலும் அந்த முட்டாள் தனம்னு சொன்னது வருத்தப்பட்டத இல்ல இப்புடி வெட்டி சபதம் போட்டதத்தான் உள்குத்தா சொன்னேன்னு இப்பக்கூட ஒத்துக்காத கிருத்துருமம் புடிக்கவேயில்ல

11.பத்து பாயிண்டுனு சொல்லிட்டு, யார் என்ன கேட்டுடப்போறாங்கனு, 13 பாயிண்ட் எழுதிறியே, இந்த கட்டுப்பாடில்லாத புத்தி பிடிக்கலை.

அப்பவே எவனும் கண்டுக்கல. இப்பமட்டும் திருந்திருவாய்ங்களான்னு 12-13 ஆக்கிட்டு சில மாற்றங்களுடன்னு போடாம மீள்பதிவுன்னே போடுற திமிரு பிடிக்கல.

12. கடைசியா, இத்தனை நாளா கஷ்டப்பட்டு, ஒரு மொக்கை கூட எழுதத் கையலாகாம, இந்தப் பதிவுக்குப்போய் லேபிள்ல “மொக்கை”னு போடப்போறியே அது சுத்தமா பிடிக்கலை.

அட்றா சக்க அட்றா சக்க. என்ன குப்ப எழுதினாலும் அதுல மொக்கன்னு ஒரு வார்த்த வராமாதிரி போட்டு லேபிளும் போடுறத இப்புடிக் குத்திக்காட்டுரது புடிக்கவேயில்லையே ராசா

13. கடை ஆரம்பிச்ச புதுசுல, விலை போகாத சரக்க மீள் இடுகைன்னு போட்டு யாவாரம் பண்றியே அது இன்னும் பிடிக்கல

கருவாடு வித்த காசு நாறுமா! மீள் இடுகைக்கு வந்த பின்னூட்டம் கசக்குமா! இஃகி இஃகின்னு சிரிக்கிறது பிடிக்கல

14. அப்போ வந்த புதுசு சரி. இப்போ பி.ப. ஆனபிறகும், ரொம்ப ஓக்கியம் மாதிரி 12 இருந்தத 13னு ஆக்கிட்டு தலைப்புல அதே பத்த அப்புடியே காபி பேஸ்ட் போட்டு கண்டு பிடிங்கடாபாப்பம்னு அந்த தெனாவட்டு சுத்தமா பிடிக்கல. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூலவர் இங்கே 

(டிஸ்கி: இப்பவே சொல்லிடுறேன். சூதானமா பாருங்க. அப்புறம் வருத்தப்படக் கூடாது. சாரி நாட் அக்ஸப்டட்)

Friday, May 28, 2010

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...டென்ஷன்

க்ருஷ்ணா! பரம ஏழையான குசேலன் கிழிஞ்ச துணி மூட்டையில தயங்கித் தயங்கி மறைச்சு வச்சி தவிச்சாராமே! நீ எனக்காக கொண்டு  வந்த அவலைத் தராம என்ன பண்ற குசேலான்னு பிடுங்கி ஆசையா ஒரு வாய் சாப்பிட்டியாமே! வரவாள்ளாம் எனக்கு அது குடு இது குடுன்னு கேக்கறவாதான். இங்க பாருங்கோ. என் நண்பன். எனக்கே எனக்காக அவல் கொண்டு வந்திருக்கான்னு சிலாகிச்சி, அவன கட்டிண்டியாமே. இது நிஜமான்னாளாம். குருவாயூரப்பன் ஆமான்னாளாம்!

அனந்ததராம தீட்சிதர் நாராயணீய உபன்யாசம் நடக்கிறது. உருக உருக இப்படிச் சொல்லும்போதே விசும்புகிறார். கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் முழுதும் கண்ணீர் வழிய அமர்ந்திருக்கிறது.

‘பதிகளைவரித்தரேனு சதிய பங்க ஹொதகலில்லா. நீனே அநாத பந்தோ!’ க்ருஷ்ணா! அஞ்சு பேர் புருஷா இருந்தும் மனைவியோட மானத்த காப்பாத்த உதவ முடியல்ல. இப்படி அநாதையா இருக்கறவாளுக்கு நீதானே ரட்சிக்கிறவன்னு புரந்ததாசர் பாடறார். இன்னொரு நாள் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் உபன்யாசத்தில் சொல்லும்போதே அழுகிறார். மொத்தக் கூட்டமும் சேர்ந்து அழுகிறது.

அயனாவரம் குஹாலயத்தில் அரசமரத்தடி பிள்ளையார் கோவிலில் காலட்சேபங்கள் நடக்கும். குளிரக் குளிர மணல் கொட்டியிருப்பார்கள். ஆறுமணியிலிருந்து கூட்டம் கூடும். வக்கீலாத்து மாமி, ரத்தினநாடார் சம்சாரம், பூக்காரி ராஜம், குப்பை வாரும் லச்சி பெண்கள் புறமென்றால் வெங்கடேச தீட்சிதர், ஆடிட் ஆஃபீஸர் அனந்து, ரிக்‌ஷாக்கார முனியன் எல்லாம் ஆண்கள்புறம் அமர்ந்திருப்பார்கள். இவர்களின் குஞ்சு குளுவான்கள் காலட்சேபத்தில் காதும் விளையாட்டில் கருத்துமாக ஓடுவார்கள்.

பாதிக் காலட்சேபத்தில் தீபாராதனை நடந்து தட்சிணைத் தட்டு வரும். (முடியும் தருணத்தில் தீபாராதனை செய்தால் பாதிப்பேர் தாண்டுவதற்குள் மீதிப்பேர் போய்விடுவார்கள்). காலட்சேபம் முடிய, என்னமா கதை சொல்றார். பகவான் சோதிச்சாலும் கைவிடறதில்லை என்பாள் வக்கீலாத்து மாமி. அட போ மாமி! என்னான்னாலும் வீட்டுக்கு தூரமா இருக்கிற பொம்பளைய சீலைய உருவற வரைக்கும் அந்த சாமி ஏன் விடணும் என கோவமாகக் கேட்பாள் ராஜம்.

அது அப்படியில்லையடி, என்னதான் ஸ்வாமிக்கு நெருக்கமானாலும் கஷ்டம்னு ஒன்னு படவேண்டியிருந்தா பட்டுத்தானாகணும். அத தாங்கற சக்தியும், அதில இருந்து காப்பாத்தறதும் அவந்தான் பண்ணுவான்னு புரியணும்டி நமக்கு என்பாள் மாமி.

மூட நம்பிக்கை? இதனால் அவரவர் கடவுள் பார்த்துப்பார் என்று அவர்கள் வேலையை செய்யாமல் விட்டார்களா என்ன? கோவிலே கதியென்று இருந்து விட்டார்களா என்ன? மனது லேசாகி, உணவுண்டு, நன்றாகத் தூங்கினார்கள். அக்கம் பக்கத்தவருடன் பேசினார்கள். கஷ்டங்களைப் பகிர்ந்துக் கொண்டார்கள். மன இறுக்கம் என்பது மிக அரிதான காலமது.

காலட்சேபம் இல்லாத நாட்களில் ஆறு மணிக்குள் ஏதோ இரவு உணவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு பெண்கள் கூடிப் பேசுவார்கள். ஆண்கள் மாடியிலோ தெருஓரமோ, அரசியல் பேசுவார்கள். அக்கப் போர்தான். பொரணி பேசுவார்கள்தான். 

இந்த பார்வதி பாரு மாமி, அன்னைக்கு விருந்தாளிங்க வந்தாங்கன்னு ஒரு லோட்டால சக்கர கேட்டுச்சு. குப்பாச்சியா அளந்து கீழ சிந்தும்னு ஒரு பேப்பர்ல வெச்சி குடுத்தேன். இன்னைக்கு தலை தட்டி குடுக்குது. என்ன ஒரு ரெண்டு ஸ்பூன் சக்கரை மிச்சம் புடிப்பியா? அத வச்சி மாளிகை கட்டுவியா? அது என்ன புத்தி மாமி என்று கேட்பாள் ஒருத்தி. 

அடுத்த நாள் பார்வதி வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்கும். அதெப்படி மாமிகிட்ட சொல்லுவ? என்ன கேட்டிருக்கலாமில்ல? நீ போன முறை வாங்கினப்ப எப்படி குடுத்தன்னு நான் சொல்லிக்காட்ட மாட்டனா என்பாள்.

அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நின்றுவிடும். ஆனால், ஏதோ ஒரு நாள் பார்வதி இல்லாத நேரம் பள்ளி விட்டு அவள் பிள்ளை உணவுக்கு வந்தால், உங்கம்மா எங்க போச்சோ. நீ வாடா சாப்புட்டு இஸ்கோலுக்கு போ என்று தாயினும் பரிந்தூட்டுவார்கள். புள்ள என்னாச்சோ என்று பதறிவரும் பார்வதிக்கு வழியில் தென்படும் பிள்ளை அத்தை சாப்பாடு குடுத்துச்சு. மீன் குழம்பு சோறு என்று சொல்லிவிட்டு குஷியாகப் போகும்.

உடனே போய் நன்றி சொன்னதுமில்லை. எதிர்பார்த்ததுமில்லை. இரண்டு ஸ்பூன் சக்கரைக்கு சண்டை போட்டவளுக்கு இது பெரிய விஷயமேயில்லை. சிறிய ஊடலுக்குப் பின் நட்பாகி விடுவார்கள். பேசாமலே இருந்தாலும், ஒரு கடன்காரன் வந்து வாயில் வந்தபடி பேசிவிட முடியாது. 

கையிலிருந்தால் காசு தேத்தி கொடுப்பதோ, இல்லையேல் யோவ்! இருக்கறதுன்னா இரு. இல்லாட்டி ஒரு மணி நேரத்துல வா. உந்துட்ட வாங்கிட்டு போய்ட்டே இரு. ஆம்பிளங்க இல்லாதப்ப வந்து கலாட்டா பண்ற வேல வெச்சிக்காத என்று மிரட்டி, தோடோ, மூக்குத்தியோ சேட்டு கடையில் வைத்து பணம் வாங்கிக் கொடுத்து உதவுவார்கள்.

ஒரு விசேஷமோ, சாவோ வீதி கூடி, அல்லது குறைந்தபட்சம் அக்கம் பக்கத்தவர் கூடி உறவு எது, நட்பு எது எனப்பிரிக்க முடியாமல் பங்கேற்ற காலமது. கஷ்டங்கள் இருந்தன. வருத்தங்கள் இருந்தன. பகிர்ந்து கொண்டார்கள். மன இறுக்கம் மிகவும் அரிதான காலமது.

தங்கச்சி கலியாணம்டா, சீட்டு கேக்காதேன்னு சொல்லியும் ஏலம் கேட்டு ஆயிரம் ரூபாய் ஏத்திவிட்டான்யா ராகவன் என்று சண்டைபோடுவார் குமார். குமார் ஊரிலில்லாதபோது அவன் தந்தைக்கு மார்வலியென்று கொண்டு போய் காப்பாற்றுவார் ராகவன். மன்னிப்புகள் பெரிய மனதுடன் ஏற்கப்பட்ட காலம் அது. 

இப்போது அதே ஆறுமணி. அலுவலகத்தில் மூட்டை கட்டிக் கொண்ட வசவு, ரயிலில் பஸ்ஸில் இடம் கிடைக்காமல் வந்த அவதி, வீட்டில் வரும்போதே அலறும் சுட்டி டீவி, ஷூ ஒரு புறம், பள்ளிப் பை ஒரு புறம், மதிய சாப்பாடு பாதிக்கு மேல் சாப்பிடாமல் டிஃபன்பாக்ஸ் ஒரு புறம். வைதபடியே ஹோம் வொர்க் செய்ய விரட்டி, அடுக்களையில் ஒரு கண்ணும் சீரியலில் ஒரு கண்ணும் வைத்தபடி சமையல். ஒரு நிமிஷம் ஸ்கோர் பார்க்க சானல் மாற்றும் பையனுடன் சண்டை.

அதே அழுத்தத்தில் வரும் கணவன் வாங்கி வர மறந்துவிட்ட டீத்தூளுக்கும், மாகிக்கும் சண்டை. தீடீரென ஸ்ட்ரைக்கால் பஸ்ஸோ, ரயிலோ தாமதமாகி வந்தால் பெல் அடித்தும் திறக்காமல் தூங்கிவிடும் பிள்ளைகள். டென்ஷனோடு கத்தி, கதவு திறந்த பிறகு நாலு சாத்து சாத்தினால் அழுது கொண்டே ஸ்னேக்ஸ் தீர்ந்து போய் பசியுடன் தூங்கிவிடும் குழந்தைகள். குற்ற உணர்வை மீறிய எரிச்சல், ஒப்பீடு, வாக்குவாதம். மன இறுக்கம் மிக எளிதான காலம் இது. முரண் படுதலே வாழ்வாகிப் போய்விட்டது.

மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்பதையெல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டு நகர வாழ்க்கை நரக வாழ்வாகிவிட்டது. கிராமப் புரங்களில் இந்த வேஷங்களில்லாததால் தானோ மனுசத்தனம் மிஞ்சியிருக்கிறது? அதனால் தானோ மனதும் அவர்கள் வசமிருக்கிறது?

Thursday, May 27, 2010

சிக்கு புக்கு இரயிலே..

நேற்றைய பின்னூட்டங்களின் விளக்கமாகவும், இரயில்வேத்துறை குறித்த மேலதிக விளக்கமாகவும் இந்த விவாதம் தொடர்கிறது. 

இதுவரை வந்த பின்னூட்டங்களோ, கேள்விகளோ சுட்டுவது இரயில்வே என்பது பயணிகள் போக்குவரத்து சம்பந்தப்பட்டது என்பது போலவே அமைந்துள்ளது. சரக்குப் போக்குவரத்து என்ற ஒன்று இருப்பதை யாரும் கண்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ப்ரூனோ கூட அதிகபட்ச புரிதலுடன் பின்னூட்டமிட்டிருந்தாலும் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லும் பார்சல் சிலவு குறித்து வினா எழுப்பியிருந்தார்.

இந்த விளக்கம் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். ஒரு பார்சல் வேனில் ப்ரூனோவின் மோட்டர் பைக், கருவேப்பிலை, மீன், ஊர்மாற்றிப் போகும் ஒருவரின் பொருட்கள், டெக்ஸ்டைல் மூட்டைகள் எல்லாம் அடுக்கப்படுகின்றன என வைத்துக் கொள்வோம். அந்த பார்சல் வேனை கோவையிலிருந்து சென்னைக்கு இயக்குவதற்கான செலவுகள் அனைத்தையும் கணக்கில் கொண்டு லாபமே இல்லாமல் எல்லாப் பொருட்களுக்கும் பகிர்வதாக வைத்துக் கொள்வோம்.

கிலோவுக்கு இவ்வளவு என்று சமமாகப் பகிர முடியுமா? அப்படிச் செய்தால் கருவேப்பிலை, மீன், தக்காளி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை என்னவாகும்? எனவேதான் உணவுப் பொருளுக்கு மிகக் குறைந்த கட்டணம், பைக்குக்கு கூடுதல் கட்டணம் வரும். ஆனால் எந்தக் காலத்திலும் இரயில் மூலம் கொண்டுவரும் கட்டணமானது லாரிக் கட்டணத்தை விடக் குறைவாகவே இருக்கும். 

முதலில் பின்னூட்டங்களுக்கான விளக்கங்கள்:

பிள்ளையாண்டான்
/50 சதவிகித அல்லது அதற்க்கும் மேற்பட்டமுன்பதிவு செய்யக் கூடிய இடங்களை, "தட்கல்" முறைக்கு ஒதுக்குவதால்தான்//

எந்தக் காலத்திலும் 50 சதம் ஒதுக்கப் படவில்லை. தத்கல் சரவணக்குமார் சொன்ன மாதிரி திடீர் பயணம் செய்ய நேர்பவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் பெரிய லாபம் ஒன்றும் ஈட்டித்தருவதல்ல. எல்லா வண்டிகளிலும் தத்கல் எல்லாக் காலங்களிலும் நிரம்பி விடுவதில்லை. டாக்டர் ப்ரூனோ கூட தன் இடுகையில் ஒரு கணக்கு கொடுத்திருந்தார். தினசரி அந்தமாதிரி அனைத்து வண்டிகளும் ஓடுவதில்லை சார். ஒரு சில மிகக் குறைந்த அளவு (5) இரயில்கள் ஈட்டும் லாபமே இதர இரயில்களில் உண்டாகும் நஷ்டத்தை ஈடுகட்டுகிறது. 

//"தட்கல்" முறையில் (ஒரு டிக்கெட்டுக்கு) ரூ.150 கூடுதலாக‌ மற்றும் முழு பயண டிக்கெட் கட்டணம் வாங்கப் படுகிறது.//

குறைந்தபட்சம் 75ரூ அதிகபட்சம் 150ரூ என்பதே சரி. டிக்கட் தொகையில் 30% தத்கல் கட்டணம். 

//இதில் வந்த வருமானத்தைத் தான் லாலு பிரசாத் யாதவ், ரயில்வேத் துறை லாப நோக்கில் செயல்படுகிறது என்று கூறி பணியாளர்களுக்கு போனஸாக வாரி வழங்கினார்.//

என்ன சொல்ல? ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இரயில்வேத் தொழிலாளியின் போனஸ் லாபத்தைக் கொண்டல்ல. உற்பத்தித் திறனைப் பொறுத்து. ஒரு கடைனிலை ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ10000. 90 நாட்கள் போனஸ் என்றால் ரூ 30000 போனஸ் என்று அர்த்தமில்லை. போனசுக்காக கணக்கில் எடுக்கப்படும் சம்பளம், ரூ 3500 மட்டுமே. 30000 அடிப்படைச் சம்பளம் உள்ள ஒரு சூப்பர்வைசருக்கும் அவ்வளவே. 

ஆமாம். இரயில்வேயாவது ஏதோ சம்பாதிக்கிறது. கணக்குத் தணிக்கைத் துறைக்கு எந்த தத்கல் லாபத்தை வைத்துக் கொடுப்பது? தபால் துறைக்கு ஸ்பீட்போஸ்ட் லாபத்திலிருந்தா தரப்படுகிறது:))?

//லாபம் கொழிக்கும் ரயில்வேத் துறையை, ஏன் தனியார் மயமாக்க வேண்டும்?//

ரயில்வேத்துறை ஒருபோதும் தனியார் மயமாகாது. காரணம் தனியாரின் நோக்கம் லாபம் மட்டுமே. உருளைக்கிழங்குத் தட்டுப்பாட்டுக்கு ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் நாம். ஆனால் லாபம் மட்டுமே கணக்கில் கொண்டால் தென்னக இரயில்வேயில் சரக்குப் போக்குவரத்தை மூடிவிட்டு, 5 பயணிகள் ரயில் மட்டுமே ஓட்டலாம். எப்படி வசதி?:))


//புதிய பாதைகள் உருவாக்குவது மற்றும் அகலப் பாதை மாற்றும் கடைநிலை பணிகளை செய்யும் வேலைகளை, அரசியில் உள்ளீடுகளால், சில பல குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்குவதால் ஏற்படும் ரயில்வே துறைக்கு ஏற்படும் இழப்புகள் ஏராளம். //

முழுவதும் சரியல்ல. நீங்கள் கூறுவது தாமதத்துக்கான காரணமென்றால் முழுதும் தவறு. காரணம், ஒரு அகலப்பாதை அமைக்க 45 கோடி செல்வாகும் என்றால் ஒரு வருட பட்ஜெட்டில் அதற்கான முழுத்தொகையும் கொடுக்கப்படுவதில்லை. இந்த வருடம் 3 கோடி அளிக்கப்பட்டால் அந்த அளவுக்குத்தான் வேலை முடியும். விலைவாசி உயர்வால் 45கோடியில் திட்டமிடப்பட்டது 10 வருடத்தில் 60கோடியில் முடியும் அவலம் மறுக்கமுடியாதது. பணமில்லை சார். என்ன பண்ண?

கதிர்:

//ஏன் ஒரே ஒரு ரயில் கூட இந்த 150 கி.மீ. அதுவும் நாலு மாநகராட்சி இருக்கிற ரூட்ல வரலைனு தெரியல....//

இந்த ஆண்டு கோயமுத்தூர் ஈரோட்டுக்கு இடையே ஒரு MEMU விடுவாய்ங்களே! இன்னும் விடலையா?

அரைகிறுக்கன்:

//தட்காளில் நாற்பது சதம்வரை ஆன பின்பும் பொதுவான முன்பதிவுகளில் காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கையை குறைக்காமல் அப்படியே பழைய எண்ணிக்கையில் வைத்திருப்பது//

இரண்டும் வேறு வேறு. தத்காலில் சார்ட் ரெடியாகுமுன் காலியிருப்பின் பொது வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்களுக்கு இடம் கிடைக்கும்.

//எரியாத விளக்குகள் ஓடாத விசிறிகள்
மட்டமான நாற்றமெடுக்கும் கழிவறைகள்
அதிலும் குறிப்பாகதொலைதூர வண்டிகளில் காலை எழுந்து பார்த்தால் அதிலும் தண்ணீர் இருப்பதில்லை//

வண்டிகள் பற்றாக்குறை. தண்ணீர் வாங்கப் படுகிறது. சப்ளை வரவில்லையெனில் இப்படி நிகழலாம்.

புருனோ:

// IRCTCயில் தனி நபர்கள் பெறக்கூடிய இ-டிக்கட்,//
இதை தவறு என்று கூறுகிறீர்களா. என்ன கொடுமை சார்
நீங்களும் இதில் முன்பதிவு செய்ய வேண்டியது தானே//

இல்லையே சார். கவுண்ட்டர் திறக்குமுன்பே இந்த வகையிலும் ரிசர்வேஷன் செய்யப்படுவதால், முந்தின நாள் காத்துக் கிடந்தாலும் ஸ்டேஷனில் இடம் இருக்க வாய்ப்பில்லை என்றேன்.

மற்ற விளக்கங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரயில்வேயைப் பொறுத்தவரை அதன் வரவு செலவுகளுக்கு அத்துறையே பொறுப்பு. ஆனால் லாப நோக்கு கருதி செயல்பட முடியாது. ஆட்சியாளர்களின் கொள்கைக்கேற்ப நாட்டு நலன் கருதி லாபமில்லாவிடினும் இரயில் இயக்கியாக வேண்டும். செல்ஃபோனிலும், பெட்ரோலியத்திலும் விருப்பம் காட்டும் டாட்டாக்களும், அம்பானிகளும் இரயில்வேத்துறையில் முதலீட்டுக்கு விரும்பமாட்டார்கள். காரணம் முதலீட்டுக்கேற்ற லாபம் வராது. இரயில்வேயின் சம்பாத்தியத்துக்குள் வண்டியியக்குதலும் போக முதலீடும் செய்யவேண்டும்.

தென்னக இரயில்வேயைப் பொறுத்த வரை 2008-09ம் ஆண்டில் 100ரூ வருமானத்துக்கு 126ரூ செலவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த நிலைதான் பெரும்பாலான இரயில்வேக்களுக்கு. இதுதான் நிதர்சனம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரயில்வே அமைச்சரின் பட்ஜெட் பேச்சிலிருந்து சில பகுதிகள்:

Madam, I would like to bring the attention of the august House to theinformation that the route-kilometres of the Railways was 53,596 kms in 1950.

After a span of 58 years, we have now reached only 64,015 kms, adding just 10,419 kms, an annual average of only 180 kms. 

The time has come for the business community to come and join hands to build partnerships with the Railways.

At this point i would like to assure my Railway family that we are not going for privatisation of the Railways. It will remain a government organisation.

இந்தச் சுட்டி முழுமையான புரிதலுக்கு உதவும். 
~~~~~~

Wednesday, May 26, 2010

இரயிலே இரயிலே..

பல பதிவர்களின் இடுகைகளில் இரயில் பயணம், முன்பதிவு, இரயில்கள் இல்லாமை குறித்த அதிருப்தியைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக சரவணக்குமார், சங்கர் ஆகியோரின் இடுகைகள் அவர்களின் அனுபவத்தை கண்முன் நிறுத்தின. நேற்று திரு காமராஜின் இடுகையில் சில வினாக்களை எழுப்பியிருந்தார். பின்னூட்டங்களைக் கண்டதும் இரயில்வேத்துறை குறித்து முழுமையான புரிதலின்மை புலப்பட்டது.

இதற்கான விளக்கம் எந்த விதத்திலும் பிரச்சனைக்கு முழுதாக உதவப்போவதில்லை எனினும் புரிதல் ஓரளவுக்கு இது இப்படித்தான் எனக் கடந்து போகவாவது உதவலாம் என்பதே இவ்விடுகையின் நோக்கம்.

முதலில் திரு காமராஜ் எழுப்பியிருந்த வினாக்கள்:

/காலை எட்டுமணிக்கு திறக்கும் முன்பதிவு அறையின் முன்னால் இரவு எட்டுமணிக்கே வந்து காத்துக் கிடந்தால் மட்டுமே சாமான்யர்கள் ரயிலில் பயணம் செய்யமுடியும் என்கிற நிலைமை பொதுவாகிவிட்டது.//

அப்படிக் காத்துக் கிடந்தாலும் இடம் கிடைக்கும் என்ற உறுதியில்லை. காரணம் அனுமதி பெற்ற தனியார் கணினி முன்பதிவு, IRCTCயில் தனி நபர்கள் பெறக்கூடிய இ-டிக்கட்,மற்றும் பெரிய நகரங்களில் தரகர்கள் சட்டவிரோதமாக பதிவு செய்து அதிக விலைக்கு விற்கும் டிக்கட்டுகள்.

/முன்னமெல்லாம் சென்னைக்கோ வேறிடங்களுக்கோபோக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னால் முன்பதிவு செய்தால் கிடைக்குமென்கிற நிலை இருந்தது. இப்போது தொன்னூறு நாட்களுக்கு முன்னாலே எல்லா ஊருக்குமான இருக்கைகள் விற்றுத்தீர்ந்துவிடுகின்றன.///

ஆம். பெரும்பாலும் திட்டமிட்ட பயணம் என்பது பழகிப்போன ஒன்றாயிடினும் இதற்குக் காரணம் சமூகவிரோத கும்பலின் மொத்தக் கொள்முதல். டிக்கட் கிடைக்காததால் இவர்களிடம் போகிறோம் என பொது ஜனமும், இவர்கள் வாங்குவதால் டிக்கட் கிடைக்கவில்லை என நிர்வாகமும் பதில் சொல்லிக் கொள்ளலாம்.

//பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்க கூடுதல் வசதிகளையும் பணியாளர்களையும் நியமிப்பதற்குப் பதிலாக அதை ஏலத்திற்கு விடுவதுதான் சிறந்த தீர்வென நம்புகிறது அரசும்,அதன் திட்டமும்.//

இரயிலைப் பொறுத்தவரை அரசையோ இரயில்வேயையோ குறை சொல்லமுடியாது காமராஜ் சார். கட்டமைப்பு அப்படி. பல நுணுக்கமான பிரச்சனைகள் உள்ளடக்கிய விடயம் இது. ஒரு பணியாளரை நியமிப்பதால் பிரச்சினை தீருமாவெனில் இல்லை. உதாரணமாக ஒரு ஊரில் 3 கவுண்டர்கள் இருக்கின்றன. நாளைக்கு 1000 டிக்கட்டுகள் விற்கப் படுகின்றன என வைத்துக் கொள்ளுவோம். கூடுதலாக ஒரு பணியாளரைச் சேர்ப்பதால் அதே ஆயிரம் டிக்கட்டுகள் குறைந்த நேரத்தில் விற்கப் படலாம். ஆனால் ஒரு அரசு ஊழியரின் சம்பளம், இதர படிகள், பென்ஷன், போன்ற மறுக்க முடியாத சுமை தாண்டி இதனால் கிடைக்கும் நேரச் சேமிப்பு உண்மையில் 4 ஊழியரின் நேர விரயமாக முடியும்.

//அரசு அலுவலகத்தில் வேலை செய்வதற்கும்,தனியார் நிறுவணத்தில் வேலை பார்ப்பதற்கும் தனித்தனிப் பிரஜைகளை இந்தியா உருவாக்க வில்லை.ஒரு அரசு நிறுவண ஊழியன் வாங்குகிற காசுக்கு வேலைபார்த்தாலே போதும் //

மிகச்சரியான கருத்து. ஆனால் எந்த ஸ்டேஷனிலாவது எங்கள் வேலை முடிந்துவிட்டது நாளை வாருங்கள் என்று கவுண்டர் மூடியிருக்கிறார்களா சார்.

//எழுபதுகளில் தென்பகுதியிலிருந்து சென்னைக்கு இரண்டு வண்டிகள் இயங்கிக்கொண்டிருந்தது. நாற்பது வருடம் கழித்து ஐந்து வண்டிகளாக உயர்ந்திருக்கிறது. ஜனத்தொகை அடிப்படையிலும் பணப் புழக்கத்தின் அடிப்படியிலும் பார்த்தால் இது யனைப்பசிக்கு சோளப்பொறி.//

இது சரிதான். அதிகப்படியான பயணச்சுமைக்கான காரணங்கள் என்ன தெரியுமா?
1. கணினித்துறை வளர்ச்சி காரணமாக வேலை வாய்ப்புக்கள் பெருகியமை
2. கிராமங்களை விட்டு நகர்ப்புறம் பெயர்ந்தமை
3. ஆன்மீக பயணிகள் அதிகரிப்பு (மேல்மருவத்தூர், சபரிமலை)
4. பொதுவாக சுற்றுலாவில் ஆர்வம்.
5. தொழில்நுட்பக் கல்லூரிகளின் வளர்ச்சி

இரண்டிலிருந்து ஐந்து வண்டி எப்படி ஓட்டப் படுகிறது தெரியுமா? புதியதாக பெட்டியோ இஞ்சினோ வாங்கப்படுவதில்லை. அதற்கு வசதியில்லை. மைசூரிலிருந்து மதியம் கிளம்பி அடுத்த நாள் காலை திருப்பதி சேரும் இரயில் அங்கிருந்து திரும்பவும் கிளம்பி கருடாத்திரியாக சென்னை வரும். மாலையில் கிளம்பி திருப்பதி போய் சற்று நேரத்தில் மைசூர் எக்ஸ்பிரசாகப் போகும்.

திருப்பத்தூரிலிருந்து அதிகாலை புறப்படும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் சற்று நேரத்தில் பெங்களூர் எக்ஸ்பிரசாக கிளம்பும். பெங்களூரில் காலை கிளம்பி மதியம் வரும் பெங்களூர் எக்ஸ்பிரஸ் மாலையில் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரசாக திருப்பத்தூர் செல்லும்.

//நூத்திப் பத்துக் கோடிக்கு மேலிருக்கும் ஜனத் தொகையிலிருந்து பயணச்சீட்டுக் கொடுக்க போதிய பணியாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா? //

முன்பே சொன்னதுபோல் இது நிரந்தரச் செலவு என்பது ஒருபுறமிருந்தாலும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் விடயம். ஒதுக்கீட்டுக்கான பணியிடங்களுக்கு தேர்வு நடந்தும் பங்கேற்பவர்கள் இன்றி, மற்ற மாநிலத்தவர் வந்து எழுதிப் போகிறார்கள். இந்த காலியிடங்களை வேறெப்படியும் நிரப்ப முடியாது என்பது விதி.

//ரயில்வே போக்குவரத்துக்கு போதுமான தண்டவாளப் பாதைகளை உருவாக்க முடியாமல் போனதன் சூட்சுமம் என்ன?. இன்னும் லட்சக் கணக்கான மோட்டார் வாகனங்களை தனியார் நிறுவணங்கள் உற்பத்தி செய்வதற்கு அமைக்கிற ராஜபாட்டை அது என்பதை புரிந்துகொள்ளலாம்.//

உண்மையில் இரயில்வேயின் எதிரி மோட்டார் வாகனங்கள். இருப்புப் பாதை அமைக்கவோ, புதிய ரயில்கள் விடவோ இரயில்வேயிடம் பணமில்லை. இரயில்வேயின் சம்பாத்தியத்தில் பாதிக்கு மேல் நிர்வாகச் செலவுக்குப் போகிறது.


ஏர் இந்தியாவுக்கு ஒரு விமானம் கொள்முதல் செய்யப்படுமானால் மத்திய அரசு முதலீடு செய்து கொடுக்கும். அதற்குண்டான கட்டணத்தை ஏர் இந்தியா முடிவு செய்யும். நட்டம் ஏற்படின் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ஒரு இருப்புப் பாதை அமைக்கவோ, புதிய ரயில் கொள்முதல் செய்யவோ மத்திய அரசு உதவுமானால் அது கடனாகக் கருதப்படும். இரயில்வேத்துறை அதற்கு டிவிடண்ட் கொடுக்க வேண்டும். கட்டணம் அரசின் முடிவின் பேரில் நிர்ணயிக்கப்படும். நட்டம் ஏற்படின் மத்திய அரசின் உதவி கிடையாது.

//பல பொதுத்துறை நிறுவணங்களை கள்ள விலைக்கு விற்று விட்ட மாதிரியே ரயில்சேவையை தனியாருக்கு விற்றுவிடத் துடிக்கிறது இப்போதிருக்கும் இந்திய ஜனநாயக அமைப்பு.//

தவறு. இரயில்வேத்துறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தனியார்த் துறையாகத்தான் இருந்தது. தனியார் முதலீட்டின் பேரில் இரயில்வேக்கள் தொடங்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. நிர்வாக நிர்பந்தங்களினால் இரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது. 1942ல் அரசு முழுதாக ஏற்றுக்கொண்ட பிறகும் இதே கட்டமைப்பு தொடர்கிறது. இரயில்வேக்கான வரவு செலவு இரயில்வே வாரியத்தின் பொறுப்பாகும். அதனால்தான் தனியாக இரயில்வே பட்ஜட் சமர்ப்பிக்கப்படுகிறது.  

நிர்வாகச் செலவு அதிகரித்துப் போகும் அதே நேரம், குறைந்த கட்டணம், லாபமற்ற செயல்பாடு, நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்ட விரிவாக்கம் ஆகியன தனியார் மயமாக்கலை திணிக்கின்றன.

ஒரு உதாரணம் எடுத்துக் கொண்டால் இரயில்வேக்குத் தேவையான ஒரு ‘நட்’ தயாரிக்க இரயில்வேத்துறையிலேயே இயந்திரங்களும், கட்டமைப்பும், ஊழியரும் இருக்கின்றனர். மூலப் பொருள் மட்டுமே தேவை. அதன் விலை மிகக்குறைவு. ஆனால் அப்படித் தயாரிக்கும் பட்சத்தில் அதன் விலை ரூ ஆறு ஆகலாம். அதே ‘நட்’ மார்க்கட்டில் 40பைசாவுக்கு கிடைக்கும். இப்போது சொல்லுங்கள் இத்தகைய வேலையை தனியார்வசம் விடாமல் என்ன செய்ய?

கே: பத்து நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப் போனாலும் டிக்கட் கிடைப்பதில்லையே ஏன்?

ப:எல்லாத் துறையும் போல் இரயிலும் ஒரு முனையிலிருந்து மறு முனைவரை முழுப்பயணம் செய்பவரை விரும்புகிறது. திருநெல்வேலியிலிருந்து ஒரு இரயில் புறப்படுமானால் சென்னைவரை அதன் கொள்ளளவு முழுதும் பயணிகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனாலும், சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், இன்ன பிற ஊர்களில் இருந்தும் பயணிகள் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்காக குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு இருக்கும். அதற்கு மேல் கிடைக்காது.

எனவே அம்பாசமுத்திரத்திலிருந்து சென்னைக்கு டிக்கட் என்றால் இடமில்லை என்றோ, வெயிட்டிங் லிஸ்ட் என்றோ வரும். அதே நெல்லையிலிருந்து சென்னைக்கு அம்பா சமுத்திரத்தில் ஏறிக் கொள்கிறேன் எனக்கேட்டால் இடம் கிடைக்கும்.

அதே போல் உங்களுக்கு சங்கரன் கோவில் போகவேண்டும் சென்னையில் சங்கரன் கோவிலுக்கு டிக்கட் கேட்டால் வெயிட்டிங்லிஸ்ட் வரலாம். திருனெல்வேலி கேட்டால் கிடைக்கும். கூடுதல் கட்டணம்தான். ஆனாலும் அல்லாடாமல் போகலாம் அல்லவா?

இரயில்வேத்துறை கூடுமான அளவில் மக்கள் சேவைக்கு பாடு படுகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு டிக்கட் எடுத்தீர்களானால் pwql என்று ஒரு வெயிட்லிஸ்ட் நம்பர் இருக்கும். சார்ட் தயாரிக்கும் வரை உங்களுக்கு தெரியாது. சார்ட்டில் பார்த்தால், சென்னையிலிருந்து காட்பாடி, வாணியம்பாடி, ஆம்பூர் வரையிலான கோட்டா டிக்கட்டுகள் விற்பனையாகமல் இருப்பின் உங்கள் பயணச்சீட்டு அந்த இடத்தில் நிரப்பப்படும்.

ராம்ஜியாஹூ பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

//பேருந்து, வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் நிறுவன பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு அரசுகள் கொடுக்கும் கையூட்டு, நெருக்கடி போன்றவை தானே ரயில்வே துறையை முன்னேற செல்ல முடியாமல் தடுக்கிறது.,//

மிகத்தவறான கருத்து. எண்ணெய் நிறுவனங்கள் இரயில்வேக்கு விற்கும் எரிபொருளுக்கு கன்ஸெஷன் கூடத் தருவதில்லை. பெட்ரோலியம் மினிஸ்ட்ரியும் மத்திய அரசின் துறைதான். தரைவழி போக்குவரத்துத் துறை மிகச்சிறப்பான நெடுஞ்சாலைகளை அமைத்து வாகனப் போக்குவரத்தை ஊக்குவிக்கிறது. அதனால் இரயில்வேக்கு வரவேண்டிய சரக்கும் பயணிகளும் அவர்களுக்கு போகிறார்கள். இதில் கையூட்டு எப்படி?

இரயில்வேயின் கட்டமைப்பு குறித்தான விளக்கம் இன்னும் நீண்டுவிடும் என்பதால் பின்னொரு சமயம் பார்ப்போம்.

(கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். விளக்க முயல்கிறேன்)

Sunday, May 23, 2010

இப்படியும்தான்..

என்றோ வரும் மழை ஏமாற்றாதிருக்க
தினமும் குடையுடன்
வேலைக்குச் செல்லும் பெண்



*




நெருப்பாய் முதலாளி
சிரித்தபடி நம்ம கடைக்கு
அழைக்கும் சிப்பந்திகள்




 **



கலப்படக்காரன் மாளிகைக்கு
கலவை போடும் சித்தாள் மேல்
சந்தேகக் கவலை.



***



முதிர்வு காட்டும் முகத்தில்
எருமை மேய்ந்த புல் தரைபோல்
அங்குமிங்கும் சிலவும்...


****

அசல் இங்கே.

Thursday, May 20, 2010

பி.ப. பிரபா பேட்டி எடுக்கிறார்..

பிரபல பதிவர் பிரபாகர் பத்து நாள் ஆணி புடுங்கும் வேலையில்லாததால் மன்னார் பத்திரிகையில் ஃப்ரீலான்ஸ் நிருபராகிறார். அவரின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்: (அதெப்புடி உன்கிட்டன்னு கேக்காதீங்க. நித்தியானந்தா விசாரணை வீடியோவே லீக்காவுது. ஜுஜுபி ஸ்னேக் பிரபா எம்மாத்திரம்?)

ட்ரீங்ங்ங் ட்ரீங்ங்ங்

கதிர்
: அல்லோ

பிரவு: வணக்கம் கதிர்

கதிர்:(அவ்வ்வ்வ். ஃபோன்ல ஏன் இன்வி மோட் இல்ல?) வணக்கம் பிரபா. எங்க இருக்கீங்க? என்ன மேட்டர் இவ்வளவு காலீல ஃபோன்?

பிரவு
:(எட்டுமணிக்கு மேல போன் பண்ணா பிஸி ஆன் த அதர்ஃபோன்னு டயல்டோன் வரும்னு தெரியும்டி). ஷ்ஷ்ஷ். நான் நிருபர். நாந்தான் கேள்வி கேப்பேன் நீங்க பதில் மட்டும்தான் சொல்லணும். சரியா?

கதிர்: கேளுங்க

பிரவு: ஆமா ஊர் நாயத்தயெல்லாம் இழுத்து விட்டு பக்கம் பக்கமா இடுகை எழுதிட்டு மௌனமாக கடந்து போகிறேன்னு போட்டா எப்புடி?

கதிர்:(அடங்கொன்னியா! பயபுள்ள மொத பாலே பவுன்ஸரா போட்டுட்டானே) வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க பிரபா. இந்த அக்குரும்பெல்லாம் பார்க்கிறப்ப மனதில் அடர் இருள் சூழ்கிறது.

பிரவு: அது அது! அப்பப்ப இந்த ட்ரேட் மார்க் அடர் இருள் சூழ்கிறது, கனத்த மனதுடன், கஸ்ஸ்ஸியும் இதெல்லாம் எங்க இருந்து புடிச்சீங்க. பெரியாருக்கு வெங்காயம் மாதிரி உங்களுக்கு இதா?

கதிர்:(பய புள்ள ஒரு மார்க்கமாத்தான் வந்திருக்கான்! கதிரு! வேற வழியில்லை! உன் டெக்கினிக்க யூஸ் பண்ணி எஸ்ஸாயிரு.) அல்லோ பிரபா. ஒரு நிமிஷம். செந்தில் லைன்ல வராபடி. கான்ஃபரன்ஸ் போட்டு விட்றேன், சரியா?

பிரவு: ஓக்கே கதிர். வணக்கம் செந்தில்

செந்தில்: வணக்கம் பிரபா. நல்லாருக்கீங்களா?

பிரவு: நன்றாயிருக்கிறேன் நண்பா. நான் இப்போது ஒரு நிருபராக உங்களுடன் பேசுகிறேன். குஷ்புவை கட்சியில் கலைஞர் சேர்த்துக் கொண்டது பற்றி உங்கள் கருத்தென்ன?

செந்தில்:(அடியே! என்கிட்டயேவா?நான் இந்த வில்லங்கம் புடிச்சதெல்லாம் எழுதமாட்டேன்னு தெரிஞ்சுமா கேக்குறீரு கேள்வி?) அது வந்து நண்பா! கலைஞருக்கு வயதாகிவிட்டது. குஷ்பூ இட்டிலியில் சோடா மாவு சேர்ப்பதாக அறிகிறேன். இந்த வயதான காலத்தில் அது உடல் நலத்துக்கு நல்லதல்ல..

பிரவு: (யப்பா! கழுவுற மீன்ல நழுவுற மீனுன்னு கேள்வி பட்டிருக்கேன். இவரு அதையும் மிஞ்சிட்டாரு போலயே.) அதில்லை நண்பா..

செந்தில்
: இருங்க பிரபா. பழமையண்ணன் கூப்புடுறாங்க. ஒரு நிமிஷம்...(பாலாண்ணே. அன்னைக்கு கதிரோட வண்டவாளத்த போட்டு குடுத்ததுக்கு நன்றிண்ணே..ஹி ஹி..)

பிரவு:
(கைமாத்துற டெக்கினிக்க கண்டு புடிச்சதே நம்மூரு ஆளுங்கன்னா பய புள்ளைங்க அதுல டாக்டர் பட்டமே வாங்குவாங்க போலயே..அல்லோ..வணக்கங்க பழமை..ம்ம்ம்ம். எவ்வளவு நாளாச்சி பேசி..

பழமை: சொல்லுங் பிரபா. நல்லாருக்கீங்களா? எதிர்பாராம உங்க கூட பேச முடிஞ்சது நெம்ப நல்ல விஷயம். மகிழ்ச்சி.

செந்தில்: (இஃகி இஃகி..மகிழ்ச்சியாம்ல. அண்ணன் நிருபர்னு தெரியாம வாய குடுத்து மாட்டிக்கிட்டாரு..செந்திலு..கம்முன்னு மூச்சு உடாம என்சாய்..)

பிரபா: எனக்கும் மிக்க மகிழ்ச்சிங்க பழமை. நான் ஃப்ரீலான்ஸ் நிருபரா செந்தில்கிட்ட கேட்டுட்டிருந்தேன். நீங்க வந்ததும் உங்க கிட்ட பேச முடிஞ்சது.

பழமை: அதுக்கென்ன பிரபா. கேளுங்க

கதிர்:(மாப்பு! அதெப்புடி இம்புட்டு தகிரியமா பதில் சொல்றாமாதிரியே போசு?)

பிரவு: எனக்கு ஒரு டவுட்டுங்க நண்பா! இப்பல்லாம் அப்புச்சிகூட பேசறதே இல்லையே! பணிச்சுமையினால் தூக்கமின்மையா அல்லது தூங்க விடாம பெருசு டார்ச்சர் பண்ணுதுன்னு முதியோர் இல்லத்துல சேர்த்துவுட்டீங்களா?

பழமை: சரிங்க பிரபா. நான் அட்லாண்டா விமான நிலையத்துல இருந்து பேசினேன். விமானத்தில் ஏற அழைப்பு வந்துவிட்டது. போய் இறங்கிட்டு கூப்பிடுறேன். ஆ ஆ.

பிரபா: சரிங்க நண்பா. அல்லோ அல்லோ. என்னாது அமெரிக்கா ஃபோன்ல கூட க்ராஸ்டாக் வருது? அல்லோ யாருங்க

பெண்குரல்: அல்லோ. நீங்க அல்லோன்னு  யாருங்கன்னு கேட்டா எப்புடி? கண்ட நம்பருக்கு அடிச்சிட்டு யாரு பேசறதுன்னு க்ரைண்டர் சுத்தற வேலை வேணாம். ஒழுங்கு மரியாதையா யாருன்னு சொல்லுங்க. இல்லன்னா திருப்பாச்சி பேசும்.

பிரவு: அடியாத்தீ. க்ரைண்டர். திருப்பாச்சி. சகோ! வளவளத்தா சாரி சித்ரா சகோதானே! ஆஹா! என்ன ஒரு அதிர்ஷ்டம். நாந்தாங்க ஸ்னேக் பிரபா! பழமைகிட்ட பேசிட்டிருந்தனா. க்ராஸ் டாக்குல நீங்க வந்தீங்க. நான் நிருபரா பேட்டி எடுத்திட்டிருக்கேன். உங்க கிட்டயும் ஒரு கேள்வி கேக்கலாமா?

சித்ரா
: ஹா ஹா ஹா. கேளுங்க கேளுங்க! கேட்டுக்கிட்டேயிருங்க. நாங்க வெட்டிப் பேச்சும் பேசுவோம்! வெட்டிப் போட்டும் பேசுவோம்ல. ஸ்டார்ட் மீஜிக்

பிரவு: இல்லைங்க சகோ! பின்னூட்டம் போடுறதில உங்களுக்கு சீனியர் நானு. கட் அண்ட் பேஸ்ட் பின்னூட்டத்தில பதிவுலகுக்கே முன்னோடி நம்ம இளவல் பாலாசி. நீங்க ஒரே போடா ராண்டமா செலெக்ட் பண்ணி பேஸ்ட் பண்ணி  ha ha haa. hilarious,funnyனே போட்டு பின்றிங்களே எப்புடி?

சித்ரா: அதுவா. கொஞ்சம் இருங்க. சாலமனுக்கு சாக்லேட் கலந்து கொடுத்துட்டு வரேன்.

பிரவு
: ஏங்க! கார்ட்ல பண்றேன். அப்படியே நம்ம தினேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடுங்க ப்ளீஸ். இல்லைன்னா கான்ஃபரன்ஸ் போட்டாவது எஸ்ஸாயிக்கிங்க அவ்வ்வ்...

தினேஷ்
: அல்லோ. தினேஷ் ஹியர்! என்னங்க சித்ரா?

சித்ரா:(ம்கும்! பதில் சொல்ல நான் லூசா! )

பிரவு: அல்லோ அல்லோ. நாந்தான் சகா!

தினேஷ்: ஹை! சகா! இன்னைக்கு யாரு காலி?

பிரவு:ஹா ஹா ஹா (பிரவு! எப்புடிய்யா எப்புடி?) இல்ல சகா! நான் இப்போ ஃப்ரீலான்ஸ் ரிபோர்டரா உங்க கிட்ட பேசறேன். ஒரு பேட்டி. நம்ம கலைஞர் இருக்காரே..

தினேஷ்:(ஆஹா! நாம ஊருக்கு வரோம்னு தெரிஞ்சும் இப்புடி போட்டு குடுக்க பாக்கறாரே இந்தாளு) அது வந்து சகா, முகிலனுக்கு மூச்சா வருதாம். நான் ஊருக்கு வரும் போது சிங்கை வந்து காதுக்குள்ள சொல்றேன் சரியா..மீ த எஸ்கேப்பு..

பிரவு:(பிரவு! இந்த ஒத்த கேள்விய வெச்சே எத்தன பேர சாச்சுப்புட்ட. வுடாத ஸேம் ப்ளட்ட புடி..ட்ரிங் ட்ரிங்)

ஷங்கர்: ஹல்லோ!

பிரவு: நாந்தான் சேம் ப்ளட்.

ஷங்கர்: கண்மூடி கால் சம்மணமிட்டு நாவல் மரத்தடியில் அமர்ந்து புருவம் நோக்கி கண்குவித்து சிந்தை ஒருமித்து அஸ்தராய பட்..ipod, விண்கலம், வெங்கலம். வெண்ணெய்..

பிரவு: போச்சிடா! சாமி வந்திருச்சி. இப்போதைக்கு பேசாது. செல்லும் செல்லாததுக்கு செட்டியார கேளுன்னு பழமொழி இருக்கே. மணி ஒன்னாவுது. இன்னேரம் ஆந்தை மாதிரி ஆசாந்தான் சிக்குவாரு. போட்டு தள்ளிறலாமா? ஆசான் வணக்கம்.

வானம்பாடிகள்: வணக்கம் பிரபா.

பிரவு: ஒரு நிமிடம் அழைக்கலாமா?

வானம்பாடிகள்: ப்ரியாட்ட பேசிட்டிருக்கேன் பிரபா.

பிரவு: அட தங்கச்சி இன்வியா. பஸ்ஸுங்களாய்யா.

வானம்பாடிகள்: ஆமாம்.

பிரவு: (ஒரே கல்லுல ரெண்டு தல சை மாங்கா) தோ வந்துட்டேன். வணக்கம் ஆசான். வணக்கம் சகோ.

கலகலப்ரியா: வாங்கண்ணா!

பிரவு
: ஒரே ஆணி சகோ! இப்போ அண்ணன் ஃப்ரீலான்ஸ் ரிபோர்டர் சகோ!

கலகலா
: அப்படின்னா ஓசில வேல பாக்குறதாண்ணா?

பிரவு: தங்கச்சிக்கு எல்லாம் ஜோக்குதான். உங்க ரெண்டு பேருக்கும் ஒரே கேள்வி. பதில் சொல்லுங்க. இந்த கலைஞர் கட்சில குஷ்பு சேர்ந்தத பத்தி என்ன நினைக்கிறீங்க?

கலகலா: (புதியபறவை சரோஜாதேவி மாதிரி விவேக் பேசினா மாதிரி படிங்க மக்கா) அய்யோ அண்ணா! என்னைப் பார்த்தா இந்த கேள்வி கேட்டீர்கள் அண்ணா? ஏன் அண்ணா ஏன்? குஷ்புவே கலைஞர்தானேயண்ணா? அல்லது கலைஞரே குஷ்புவா? எனக்கு குஷ்புவைத் தெரியாதே அண்ணா? கூடையிலே என்ன பூ என்றாலே சொல்லத் தெரியாதே அண்ணா சொல்லத் தெரியாதே!

பிரவு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..த்த்த்த்தங்க்ச்சீ! தப்புதான் தங்கச்சி தப்புதான்.

வானம்பாடி: அடச்சை! நிறுத்துறிங்களா என்னா? என்ன சேட்டை இது?

பிரவு: ஆ! சேட்டை! என் உயிர் நண்பா! உன்னை எப்படி மறந்து போனேன். அய்யகோ! அய்யா ஒரே நிமிசங்கையா. அவசரமா ஒரு ஆணி அய்யா.

வானம்பாடி
: இப்போ யாரு மீ த எஸ்கேப்பு சொன்னது? ஏம்மா நீயா? வானம்பாடி நீயா? பிரவு நீயா?

சேட்டை: அல்லோ! சொல்லுங்க நண்பா! என்ன விஷயம்?

பிரவு: இல்ல சேட்டை! ஒரு கேள்விக்கு விடை வேணும். உடனே உங்க கவனம்தான் வந்திச்சி. கேள்வியும் நானே பதிலும் நானேக்கு உங்கள விட்டா வேறயாரு நண்பா?

இந்த கலைஞர் எப்படி நண்பா குஷ்புவ கட்சில சேர்த்தாரு?

சேட்டை: அது நண்பா! கலைஞர் கில்லாடி நண்பா. உலகத்துலயே முகம் மறந்து போனாலும் முதுக வெச்சே கண்டுபிடிக்க முடியர ஒரே ஆள் நம்ம குஷ்புதான். கட்சிக்கு வாக்கு சேர்க்க மேடையில பேசமுடியாம இருக்கலாம். ஆனா அந்த முதுகுல உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கேன்னு எட்டு மைல் தூரத்துல இருந்தும் பார்த்தா தெரியரா மாதிரி எழுத முடியும்.

தேர்தல் அன்னைக்கு சூரியன் ஜன்னல் வெச்சி ஜாக்கட் போட்டுகிட்டு கேக்காமலே ஓட்டு கேக்க முடியும். கலைஞரா கொக்கா! சரிதானே நண்பா?

பிரவு: இடுக்கண் வருங்கால் சை உடுக்கை இழந்தவன்..என்பது மிக்க சரி நண்பா! இந்த ஒரு கேள்வி கேட்டா அது அதுங்க என்னமோ வேதாளம் விக்கிரமாதித்தன கேட்ட கேள்வி மாதிரி கான்ஃபரன்ஸ் போட்டு எஸ்ஸாரதும்..காபி போட போறேன்னு எஸ்ஸாரதும்..மிக்க நன்றி நண்பா! இத வெச்சி இடுகை சை பேட்டி தேத்திடுவேன். வர்ட்டா.
~~~~~~~~~~~~~~~~~~~~

Tuesday, May 18, 2010

அஞ்சலி..

ஆண்டொன்று ஓடிவிட்டது! பருவங்கள் மட்டுமே மாறின

பதவி, பவிசு, பட்டம், விழா, கொண்டாட்டம், இலவசம், பொய்,  துரோகம், பணம், மறதி, பழிவாங்கலில் எதுவுமே மாறவில்லை.

மானுடம் மறந்ததற்கான ஆண்டுவிழா இன்று.

பச்சைத்துரோகத்தின் பரிசாய் புதையுண்ட பல லட்சம் உயிர்களை மறந்துபோகவும் தலைப்பட்டோம். யார் சரி யார் தவறுக்கு அப்பாற்பட்டு அப்பாவியாய் அத்தனை உயிர்கள் போனது நிஜம். பச்சிளம் குழந்தைகள், முதியோர் என மொத்தமாய் செத்தவர்க்கு ஓர் அஞ்சலி சொல்லக்கூட மனமில்லை நம்மவர்க்கு.

பத்திரிகைகள் மறக்காமல் சத்தீஷ்கர் நிகழ்வுக்கு யாரையோ நினைவு கூறுகின்றன.

ஒரு புறம் நினைத்தால் அவமானமாய் உணர்கிறேன். மறுபுறம் நான் மட்டுமே இப்படியிருக்கிறேன். என் உறவுகள் தமிழுக்காய் இன்னும் தலை நிமிர்ந்தேயிருக்கிறார்கள் என்ற பெருமிதம் சற்றே ஆறுதலாயிருக்கிறது.

நிர்க்கதியாய் நிற்பவனை ஆயுதம் ஏந்தி ஒரு கூட்டம் மிரட்டுகிறதென்றால் உண்மையில் ஆயுதம் இருப்பது யாரிடம்? பயந்தவன் தானே மிரட்டுவான். ஏதிலி யார்? வலையம் வலையம் என்று முதலைக் கண்ணீர் விட்டோம். அவர்கள் சுதந்திரமாய் இருக்கிறார்கள். அல்லது சுதந்திரமாய் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

சுதந்திரமாய் இருப்பதாய் மாயை கொண்டு கண்ணுக்குத் தெரியா இலவச, செய்தி இருட்டடிப்பு, போதையில் ஆழ்த்தும் தொலைக்காட்சிகள், மிரட்டல் என பல வலயங்களுக்குள் அகப்பட்டு உணராமல் இருக்கிறோமே! ஏதிலி யார்?

சென்ற வருடம் இருந்த பதட்டம், இயலாமை, எல்லாம் முடிந்த துக்கம் நெஞ்சை நிறைக்கிறது. நாகரீக உலகம் என்று மார்தட்டி நிற்கும் உலகலில், மறைந்தவனின் சமாதி கூட இடித்தொழிக்கப்படும் அவலம். க்ளோபல் வில்லேஜ் என்று பெருமை பொங்கும் உலகில் ஒரு மூதாட்டிக்கு அனுமதி மறுக்கும் மனிதநேயம்.

அதை வைத்து அரசியல் வியாபாரமாக்கும் அவலங்கள். இடது கையால் நீர் கொடுத்தமையால் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவனின் பெருமையை எழுதிக் காசாக்கி உதவிக்கரம் நீட்டும் பொய்முகம்.

அடிமையாய் இருக்கும் நமக்கு அவர்களுக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லை. அவர்களுக்கு அது தேவையும் இல்லை. தமிழ் மாறினாலும், தமிழர் புத்தாண்டு மாறினாலும், தலைஎழுத்தே மாறினாலும் எறியப்படும் எலும்புத்துண்டுக்கு அடிமையாகிவிட்டோம்.

எனக்கொரு வலைமனை இருக்கிறது. என்னால் இடுகையிட முடியும். இதற்கு மீறி ஏதும் செய்ய வழியற்ற, துணிச்சலற்ற ஒர் அடிமையாய் நானும் அதைத்தான் செய்கிறேன்.

மானத்துக்காய் உயிர்நீத்த அந்த தியாக உள்ளங்களுக்கு மானமற்ற ஒரு ஜீவனின் கண்ணீர் அஞ்சலி. மன்னித்துவிடுங்கள் மனிதர்களே.

Monday, May 17, 2010

மயிர் நீப்பின் வாழா..

மனுசனாப் பொறந்தவன் ஒவ்வொருத்தனுக்கும் குறைந்தது ஒரு வயசில இருந்து கட்டையில போற வரைக்கும் தொடர்ந்து இருக்கிற உறவுன்னா அது சவரக்கடைதான். முடிஞ்சா நாமளே போறது முடியலீன்னா அவிங்க வாரதுன்னு ஒரு உன்னதமான ஏற்பாடு அது.

மசிரு பொறாத விஷயம்னு நக்கலா பேசிடுறதும் திட்டுறதும்னு இருக்கிறவங்களுக்கு அதோட மதிப்பு தெரியறதில்லை. ஆனானப்பட்ட வள்ளுவரே ‘மயிர் நீப்பின்’ அப்படின்னு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கார். (டி.வி.ஆர். சார் ஒரு வாரம் லீவு. வள்ளுவர் ஏங்கிறப்படாதுன்னு நான் சொல்லிட்டேன். எப்புடீ). அந்த உன்னதமான உறவுக்கு உலைவைக்கும் சதி நடக்கும்போது ஒரு மனுசம்மனசு என்ன பாடுபடும்?

எனக்கு மட்டும் ஏன் சார் இப்புடியெல்லாம் நடக்குது?

சின்ன வயசில தவறாம இழுத்துட்டு போய், மண்டை தெரிய வெட்டி விடுங்கன்னு சொன்னப்போ பலியாடு மாதிரி போவேன். அஞ்சாம்பு படிக்கிற சம்முவம் ஜம்முன்னு சேர்ல உக்காந்து வெட்டிக்கும்போது நம்ம உசரத்த காரணம் காட்டி ஏழாம்பு படிச்ச என்னை கைப்பிடி மேல கட்டைய போட்டு உக்கார வெச்சி வெட்டினப்பவும் ஒரு வார்த்த ஏன்னு கேட்டிருப்பேன்?

கொஞ்சம் முடி வளர்த்துகிட்டு ஒரு தலை ராகம் சங்கர் மாதிரி ஸ்டெப் கட்டிங் வெட்டுங்கன்னு கேட்டேன். முகவாய புடிச்சி திருப்பி பாவமா ஒரு பார்வை பார்த்து இந்த முடிக்கு ஸ்டெப் கட்டிங் வராது தம்பின்னாங்க. இன்னும் கொஞ்சம் வளந்த பிறகு வரவான்னு பணிவா கேட்டேன். பளிச்சின்னு மூஞ்சில அடிச்சா மாதிரி கோர முடிக்கு ஸ்டெப்கட்டிங் நல்லாருக்காதுன்னு சொன்னப்பவும் பழயபடி மண்ட தெரிய கட்டிங்குக்கு ஒத்துக்கிட்டேன்.

பதினொண்ணாம்பு போயும், கிளாசுல இருந்த சுகுணாவுக்கு இருந்த பூனை முடி கூட மீசை இல்லைன்னு கிண்டல் பண்ணப்ப ஒம்பதாம்புல இருந்து ஷேவிங் பண்ற சுந்தரமூர்த்திய கேட்டு எதிர் போடுறதுன்னா என்னான்னு தெரிஞ்சிகிட்டு வரட்டு வரட்டுன்னு இல்லாத மீசையும் தாடியையும் எரிய எரிய ஷேவ் பண்ணேனே எதுக்கு?

அந்த நல்லெண்ணம் புரியாம, முதல் முறையா தாடியும் மீசையுமா முடிவெட்டிக்க போனா ஷேவ் பண்றப்ப என்னமோ கொலக்குத்தம் பண்ணவன் மாதிரி எதிர் போட்டியான்னு கேட்டாலும் பரவால்ல. தம்பி எதிர் போட்டாலும் பரவால்ல, கண்டமேனிக்கு இழுத்தியான்னு நக்கலா கேட்டப்போவும் மனசுக்குள்ளயே அழுதேன்.

இவ்வளவு கொடுமை அவமானமெல்லாம் தாங்கிக்கிட்டேனே ஏன்? எந்தக் கெட்ட வார்த்தை திட்டுக்கும் பொங்காத ஒரு சுரணை கெட்ட மனுசன் கூட ‘ஒம் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க’ என்ற வசவுக்கு கொலை செய்யற அளவுக்கு போவான். பிச்சைக்காரனா இருந்தாலும் சரி, பிரதமரானாலும் சரி இவிய்ங்க பீச்சக்கை மூஞ்சில வெக்காம முடிவெட்டணும்னு சொல்ல முடியுமா?

அதுவும், ஷேவிங் பண்றப்ப அந்த நாத்தம் புடிச்ச சோப்ப குழைச்சு தடவி வழிச்சி உள்ளங்கையில கத்தில இருந்து ட்ரான்ஸ்வர் பண்ணி, மூக்கு மேல படாம மூஞ்சில பீச்சாங்கைய வச்சி வசதிக்கு திருப்பி திருப்பி சவரம் பண்ணப்போ எந்தப் பயபுள்ளையாவது கொதிக்க வேணாம். ஏம்ப்பான்னு ஒரு வார்த்த கேட்டிருப்பான்?

இதெல்லாம் விடுங்க. ஒரு மனுசனுக்கு ஆயிரம் துக்கம், கவலை, வியாதி எது வேணா இருக்கட்டும். சவரக்கடையில போய் உக்காந்து கிச்சு கிச்சுன்னு கத்தரி சத்தத்தில அஞ்சாவது நிமிஷம் கண்ணு சொக்காத மனுசன் உண்டுமாய்யா? தூக்கமா அது? அப்புடி ஒரு தூக்கம் தூக்கமாத்திரையோ, டாஸ்மாக் சரக்கோ கூட கொடுக்க முடியாதே. இதுக்கெல்லாம் மதிப்பு குடுத்துதானே.

எனக்கு மட்டும் ஏன் சார் இப்படியெல்லாம் நடக்குது.

நம்ம வெண்ணெய் இருக்கானே, அவன் எல்லாத்துலயும் கொடுத்து வச்சவன். அழகா முன் மண்டையில ஆரம்பிச்சி 30 வயசுக்கெல்லாம் நயாகரா மாதிரி அப்படியே பரவி, காதோரத்தில இருந்து கழுத்துக்கு கொஞ்சம் மேல் வரைக்கு ஒரு ஒன்னரை இஞ்சு பிறை மாதிரி வழிச்சிட்டு போயிடுச்சி. அவனும் ப்ளேட் போடுற சீப்பு வெச்சி குளிக்கும்போது ரெண்டு வாரு வாரிட்டு ‘யப்பா! அம்பது ரூபா மிச்சம்பான்னு’ அப்பா படம் முன்னாடி இருக்கிற உண்டில காசு சேக்குறான்.

ஆனா எனக்கு? ஒரு நேந்திரங்கா சிப்சு சைசில பின்மண்டையில ஆரம்பிச்சி சேப்பாக்கம் ஸ்டேடியம் மாதிரி வளர்ந்துச்சி. அட முடியில்லைங்க! சொட்டை. கொஞ்ச நாள் வலப்பக்கம் அதிகமாக, அய்யோ கடவுளே! ஏன் இப்புடி? இடப்பக்கம் மட்டும் முடிய நீளமா வளர்த்தி, மண்டையில கொஞ்சமா விளக்கெண்ணெய் போட்டு, இந்த முடிய மத்த காது வரைக்கும் பரத்தி விட்டு செட்டப் பண்ண வச்சிறாதன்னு வேண்டாத கடவுள் இல்லை.

ச்சேரி போடான்னு இடப்பக்கமும் வளர ஆரம்பிச்சதும் அப்பாடான்னு சொட்டைக்கு சந்தோஷப்பட்ட பிறவி நானாத்தானிருக்கும். விட்றுவானா? முன் மண்டையில இருந்து அப்ரோச் ரோடு மாதிரி ரெண்டு பக்கமும் அத்து மீறல் தொடர்ந்தது.

அப்படி இப்படி வருசத்துக்கு ரெண்டு வாட்டிதான் முடிவெட்டுற நிலமை வந்தது கூட பெரிசில்ல. நவம்பர் மாசம்னு நினைக்கிறேன். மனசு சுக்கு நூறாகுற சம்பவம் நடந்துச்சி.

முடிவெட்டன்னு போனேன். ஒரு நாள் தாடி கூட இல்லாத என்னப் பார்த்து ஷேவிங்கான்னு கேட்டாங்க. மார்ல நடுவில சுருக்குன்னு ஒரு வலி. சகிச்சிக்கிட்டு கட்டிங்னேன். இருந்த நாலு சேர்ல ஒரு சேர் காலியாயிருக்க உக்காருன்னாங்க.

உக்காரப் போகும் போது ஒரு ஆள் வந்து ‘ஓ! ஃபுல்லான்னாரு’. எனக்கு வெட்டுற ஆள் ஓனர் கூட இல்லை. ஆனாலும் பளிச்சின்னு உக்காருங்க அஞ்சு நிமிசம், முடிஞ்சிரும்னாரு. அப்படியே கூசிப் போச்சு உடம்பு. பொறுத்துகிட்டேன்.

காலர இளக்கி விட்டாரு. நான் கண்ணாடிய கழத்தி வெச்சிட்டு கம்பீரமா உக்காந்தேன். பசங்களுக்கு போத்துர அரைத்துண்டு கூட இல்ல. ஷேவிங் பண்ற டர்க்கி டவல காலருக்கு பின்னாடி சொருவினதும் கண்ணு தளும்பிருச்சி. அதையும் விழுங்கிகிட்டு ஷார்ட்டா வெட்டுங்கன்னேன். பார்க்காட்டியும் களுக்குன்னு சிரிச்ச மாதிரி இருந்திச்சி.

ரெண்டு நிமிசம்தான் கர்ர்ர்ர்ர்ர்ர்ரக்சிக் கர்ர்ர்ர்ர்ர்ரக்சிக்குன்னு கேட்டுச்சி. அப்புறம் வெறும் சிக் சிக்னுதான் சத்தம். ஓரக்கண்ணால பார்த்தேன். சீப்பால ஒரு கையில வாரிய படி ரெண்டு இஞ்சு தள்ளி வெறும் கத்திரிய வெட்டிக்கிட்டிருந்தாரு.

அப்புறம் ஷேவிங்? அப்படின்னாரு. ஆடிப்போயிட்டேன். ஆனாலும் வேணாங்கன்னேன். அப்புறம் கத்திய வெச்சி காதோரம், புருவம், மூக்கு மேலன்னு இழுத்துட்டு, கத்திரிய மூக்குள்ள விட்டு கிச் கிச் பண்ணி, இதுக்கும் மேல என்னதான் செய்யன்னு ஒரு பார்வை பார்த்தாரு.

ஏக்கமா, பின்னாடி ‘ப’ எடுக்கலையேன்னு கேட்டேன். இந்த வாட்டி குபுக்குன்னு சிரிச்சிட்டு பரிதாபமா அங்க முடியில்லைங்களேன்னாரு. அப்புறம் துண்ட உதறினாரு சரி. நான் கேட்டனா? பின்பக்கமா ஒரு கை கண்ணாடிய வாகா புடிச்சி திருப்தியான்னு ஏன் கேக்கணும்? அதயும் விட, இறங்கினதும் சீப்ப நீட்டினா என்னா நக்கலு அது?

சரியா அந்த நேரம்தான் பக்கத்து ஆளுக்கும் முடிய இறங்கி 50ரூ நீட்டினாரு. கீழ பார்த்தா கூடை முடி. நான் எவ்ளோன்னேன். அசராம அம்பது ரூபான்னு சொன்னாரு. ஓரக்கண்ணால பார்த்தேன். ஒரு கைப்பிடி தேராது. ஆனாலும் ஒரு பேச்சு பேசாம அம்பது ரூபா கொடுத்துட்டு டிப்ஸா அஞ்சு ரூபா கொடுத்தேன்.

இல்லைங்க பரவால்ல வேணாம்னு சொன்னா விம்மி விம்மி அழத் தோணுமா தோணாதா? தினத்தந்தி பிரிச்சா லேசர் டெக்னாலஜில வீவிங் பண்றோம்னு சிகிச்சைக்கு முன் பின் படமெல்லாம் போட்டிருந்தத பார்த்ததும் கொஞ்சம் சபலம்தான்.

ஆனாலும், மண்டைக்குள்ள களிமண் இருந்தாலும், மணல் இருந்தாலும் பரவால்லைங்க, மொட்டப் பாறையில பயிர் விளைஞ்சாலும் மயிர் விளையாதுன்னு சொல்லிட்டா தாங்கற சக்தி எனக்கில்லை.

இதோ! இப்போ இருக்கிற முடி வளர்ந்துடிச்சி. காத்தில பறந்து மூஞ்சில அடிக்குது. ஆனாலும் இந்த வாட்டி போனா நின்ன வாக்குலயே ரெண்டு கிச் கிச் பண்ணி முடிஞ்சி போச்சி போங்கன்னு சொல்லிருவாங்களோன்னு அந்த பீலிங் தாங்க முடியல.

ஆனாலும் பதிவுலகம் பலருக்கு பல விதத்துல ஆறுதல். எனக்கு மட்டும் இல்லாம போகுமா? ஒருத்தர பார்த்து முப்பத்தஞ்சு வயசுலயே இப்புடி, இன்னும் என் வயசுல...இஃகிக்கீன்னு சிரிச்சுக்குவேன். இன்னொருத்தரு அட ஏங்க பாலாண்ணே! நானெல்லாம் இந்த கொடுமைக்கு அப்பாயின்மெண்ட் வெச்சி, போய்ட்டு அஞ்சு மடங்கு டிப்ஸ் குடுக்கறேன்னு ஆறுதலா சொல்றா மாதிரி இருக்கும். நெம்ப நன்றி மாப்பூஸ்.

Saturday, May 15, 2010

பள்ளித் தலமனைத்தும் ...

பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்று பாரதியார் சொன்னாலும் சொன்னார், கோவில் மாதிரியே பள்ளியும் காசுள்ளவனக்கென்றாகிப் போச்சு.

கடந்த சில நாட்களாக பள்ளிக் கட்டண நிர்ணயிப்பு சரிதான் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னரும், சண்டைக்கோழிகளாக மண்டையாட்டிக் கொண்டு பள்ளி நிர்வாகம் ஒரு புறம், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்று தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் அரசு ஒரு புறம், புள்ள படிப்பு என்னாகுமோ என்ற அர்த்தமற்ற கவலையுடன் ஃபீஸ் கட்டாத பெற்றோர், ஃபீஸ் கட்டிய இறுமாப்பில் பள்ளிக்கு ஆதரவாக ஒரு சில பெற்றோர் என படிப்பு மார்கட் பரபரவென்றாகிவிட்டது.

பிள்ளைகளை ஃபெயிலாக்கி விடுவார்கள் என்ற பயத்தில் பெற்றோர் வாய் திறக்கமாட்டார்கள் என்ற திமிர் ஒரு புறம், வேலை போய் விடுமோ என்ற பயத்தில் எட்டாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருபதாயிரத்துக்கு கையெழுத்து போடும் ஆசிரியர்களும் என்ன கிழித்துவிட முடியும் என்ற இறுமாப்பு ஒருபுறம், உச்சநீதி மன்றத் தீர்ப்பை எள்ளும் நரித்தனம் ஒரு புறம் என்று சகல முஸ்தீபுகளுடன் பள்ளி நிர்வாகிகள் விடும் அறிக்கை இவர்களா எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது.

அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் தங்கள் ஆட்சேபணைகளை அல்லது கருத்துக்களை குழுவிடம் சமர்ப்பிக்க  மறுத்து, அரசு திடமான நடவடிக்கை எடுப்பது தெரிந்தவுடன் நீதி முன்றிலுக்கு ஓடி, பாதகமான தீர்ப்பு வந்ததும், பள்ளியைத் திறக்க மாட்டார்களாம். பெற்றோருக்கு அச்சுறுத்தலாக இந்த அறிக்கை. நீதிமன்ற வழிகாட்டலில், தங்கள் தரப்பு நியாயத்தை பரிசீலனைக்கு அனுப்புவதில் காட்டிய நரித்தனம் இருக்கிறதே. அரசியல்வாதிகள் இவர்களிடம் படிக்கப் போகலாம்.

இவர்களுக்கென்று ஒரு அமைப்பாக நீதிமன்றத்தை நாடுவார்களாம். நீதி மன்றம், 15 நாட்களில் உங்கள் தரப்பு நியாயத்தை குழுவிடம் சமர்ப்பியுங்கள் என்றவுடன், தனித்தனியாக கொடுப்பார்களாம். அத்தனைப் பள்ளிகளின் எதிர்ப்பை குழு பரிசீலிக்க கண்டிப்பாய் இந்த வருடம் ஆகிவிடும். தாமதத்தைக் காரணம் காட்டி, மீண்டும் நீதிமன்றத்திடம் அரசாணையை முடக்கும் அப்பீல், பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என்ற முதலைக் கண்ணீருடன் மறைமுகமான அச்சுறுத்தலுக்கான குள்ள நரித்தனம் இது.

இந்த அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, அரசு தாமதியாமல் நீதிமன்றத்தை அணுகி, தனிப்பட்ட கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறவர்கள் தனித்தனியாக 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுந்த காரணமின்றி ஒரே மாதிரியான ஆட்சேபணைகள் கொண்ட மனுக்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்ற எச்சரிக்கையோடு மேலதிக வழிகாட்டலைப் பெறும் சாத்தியக் கூற்றை பரிசீலிக்க வேண்டும்.

மெட்ரிகுலேஷன் பள்ளி பிழைக்குமா என்ற நிலையில் இருந்த காலம் போய் விட்ட அறிக்கை இருக்கிறதே! அபாரம். பள்ளிக்கட்டணங்கள் வசூலித்து விட்ட நிலையில் மாறுபட்ட கட்டணத்தை நடைமுறப் படுத்த முடியாதாம்.

மாதா மாதம் சம்பளத்துக்கு ஏங்கி உழைக்கும் வர்க்கம், இவர்கள் இழவெடுக்க சேர்த்து வைத்து இரண்டு பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட 25ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியிலிருந்து உருவினால் எச்சூஸ் மீ. வரி கட்டுங்க ப்ளீஸ் என்று வரும் வருமான வரித்துறை ஒரே ஒரு பிரபல பள்ளியையாவது ரெய்ட் செய்திருக்கிறதா? குறைந்த பட்சம் அவர்கள் சமர்ப்பிக்கும் கணக்கையாவது ஒன்னும் ஒன்னும் ரெண்டு சரியா இருக்கு எனப் பாராமல் கூர்ந்து ஆராய்ந்திருக்கிறதா?

ஹி ஹி. அவங்களுக்கு பிள்ளைகள் இல்லையா என்ன. ஆனால் மூக்கால் அழுது பணம் கட்டுவதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும். இதிலும் சிஸ்டம் வந்துவிட்டது. கேட்கிற டொனேஷன் கொடுத்து சீட் வாங்கி ஆள் அம்பு பிடித்து வருமான வரித்துரை (அல்லோ நசரேயன் பிழையில்லை. அதிகாரியை துரைன்னு சொன்னேன்:))) ரெகமெண்டேஷன் பிடித்தால் கொடுத்த காசில் கொஞ்சம் திரும்பும். மற்றபடி மந்திரியானாலும் பெப்பேதான்.

இந்தக் கல்வி முறையைப் பாருங்கள் சாமிகளா:

ஐந்து அல்லது ஆறு வருடத்துவக்கம் பாலர் பள்ளி. சத்தியமாக ஹேண்ட்ரைட்டிங், ட்ராயிங்,அரிச்சுவடி, வாய்ப்பாடு டார்ச்சர் எல்லாம் இல்லை. அமைதியாக உட்கார்ந்திருத்தல், ஆசிரியர் சொல்வதைக் கேட்டல், தன் வேலையைப் பார்த்துக் கொள்ள பயிற்சி, மற்ற பிள்ளைகளுடன் பழகுதல், பகிர்தல், அவசர காலத்தில் தற்காப்பு வழிகள், காவலர், மருத்துவ உதவி கோரல் போன்ற பயிற்சிகள் மட்டுமே.

ஏழு வயது தொடக்கம் அடிப்படைப் பள்ளிக் கல்வி. அது பெரும்பாலும் அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கவேண்டும். ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை அடிப்படைக் கல்வி. ஆறாம் வகுப்பில் பொதுத் தேர்வின் மூலம்  திறமையுள்ள மாணவர்கள் ஆறரை வருடம் மேனிலைக் கல்விச் சாலையில் சேரலாம். அல்லது 7லிருந்து 9ம் வகுப்புவரை  நடுனிலைக் கல்வி கற்றபின் நான்கரை வருட மேனிலைக் கல்வி அல்லது தொழிற்பயிற்சியுடன் கூடிய கல்வி படிக்கலாம். இந்தத் தொழிற்பயிற்சிக் கல்வியின் போது நிறுவனங்களின் கூட்டோடு அவர்கள் நிறுவனங்களில் செயல் முறைப் பயிற்சியோடு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே பள்ளியில் படித்தல் அவசியமாகிறது.

இதனை முடித்த பின்னர், மேனிலைப் பள்ளி முடித்தவர் பட்டப் படிப்புக்கும், தொழிற்கல்வி படித்தவர் மாலைக் கல்லூரி, தொழிற்பயிற்சிக் கல்லூரி அல்லது மேனிலைப் பள்ளிக்குச் சமமான பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியும்.

ஆக ஒன்பது வருடக் கட்டாயப் படிப்பில், உதவாத கேஸ் என்று படிப்பை நிறுத்தும் வாய்ப்பே இல்லை. ஏட்டுச் சுரைக்காய் வரவில்லையா ஏதோ ஒரு தொழில் கற்றுக் கொள். உன் சாமர்த்தியம் பின்னாளில் உணர்ந்து படிக்கிறாயா படித்துக் கொள் என்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இவையெல்லாம் விட தனியாக பரிட்சை என்ற ஒரு முறையின்றி ஆண்டு முழுதும் நிரவிய தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள், வகுப்பில் நடவடிக்கை, மற்றவர்களுடனான பரிமாற்றம் ஆகிய அனைத்தும் கருத்தில் கொண்டு மாணவரைத் தரப்படுத்தல். படிக்கச் சிரமப்படும் மாணவர்களுக்கு ஏற்ற நீடித்தக் கல்வி முறை, ஒரு கட்டத்தில் ஆர்வம் கொண்டு சிறப்பாகப் படித்தால் மற்ற திறம்பட்ட மாணவர் பள்ளிக்குத் திரும்ப வாய்ப்பு.

இப்படியல்லவா இருக்க வேண்டும் ஒரு கல்வி அமைப்பு. பாடத்திட்டங்கள் பார்த்தாலோ ஏங்கிப் போகும் மனது. பிள்ளைகளுக்கு அழுத்தமின்றி படிப்புடன் அவர்கள் விரும்பிய கூடுதல் படிப்பு இசையோ, நடனமோ, கைவினையோ அத்தனைக்கும் வழிவகை செய்யும் ஒரு கட்டமைப்பு.

எப்படி முடிகிறது இது? மக்களால், மக்களுக்கு மக்களே என்ற முழுமையான அர்த்தம் புரிந்த, அதற்கு மதிப்பளிக்கும் ஸ்விட்சர்லாந்தில் இது சாத்தியம். கேள்வியா கேட்கிறாய்? உன் பிள்ளை எப்படி பாஸாகிறான் பார்க்கிறேன் என்று மிரட்டாமல், குறையிருக்கிறதா வந்து பேசுங்களேன் என்று நட்புடன் அழைக்கும் பள்ளிகள், எம்புள்ள தங்கம் என்ற கனவில் இருக்கும் பெற்றோருக்கு அழைத்து குறைச் சுட்டி அதைத் தங்கமாக ஆக்கும் பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்காம், எதுக்குன்னு நமக்கா தெரியாது? ரூ 10000 கொடுங்கள். பள்ளி முடித்துத் திரும்பும்போது திருப்பித் தருவோம் என்று திரட்டி, காசு திருப்பிக் கேட்டால் காண்டக்ட் சர்டிஃபிகேட்டில் சுமார் என்று தரப்படுத்துவேன் என மிரட்டுவார்கள் என்ற எண்ணமற்ற பெற்றோர்களும் பள்ளிகளும் எப்படிச் சாத்தியமாகின்றன?

மோசடியிலிருந்து தீவிரவாதி வரை அப்பீலிலேயே தள்ளிப் போடலாம் என்ற அமைப்பு தரும் உத்திரவாதம் இந்தத் திமிர். அரசும், நீதிமன்றமும் ஒரு சரியான திசையில் அடியெடுத்து வைத்திருக்கின்றன. உண்மையான கோரிக்கைகளை கூடிய வரை ஏற்று, முறையற்ற பேராசைக் கோரிக்கைகளை முற்றாய் எதிர்த்து, மேல் முறையீடு என்ற பேச்சுக்கே வழியின்றி முழுமையாய் ஒரு முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

நோக்கம் மாணவர்களுக்கு முழுமையான முடியக்கூடிய கல்வி என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

~~

Wednesday, May 12, 2010

மனம் விரும்புதே..

ஈயம் போன பித்தளைத் தூக்கில்
கசந்த மோர் சாதம் மாவடு

விரலில் மாட்ட வாகாய் மூலையில்
உடைத்த கல்லு சிலேட்டு

காலிகாட் பல்பொடி டப்பாவில்
சேர்த்து வைத்த பலப்ப சொத்து

வெட்டும்புலி, குயிலென
விதவிதமாய் மேச்சஸ் லேபில்

ஒருபுறம் தலை சாய்த்து, நாக்கு துருத்தி
ஒரு மூக்கொழுக வீட்டுப்பாடமெழுதியபடி வரும் நண்பன்

இழைப்புளியில் தேய்த்த ஐஸ் தூளில்
கலர் சர்பத் தெளித்த சிறுகிண்ணம்

கொடுக்காப்புளி, புளியம்பழம்,
மரவள்ளி, பனம்பழம், கிழங்கு

சேமியா பாலைஸ், பஞ்சுமிட்டாய்
கமருகட்டு, கல்ல உருண்டை

வாச்சு, பிளேனுக்கு வழியின்றி
இரண்டு காசுக்கு மோதிரமேனும் சவ்வு மிட்டாயில்

தள்ளுவண்டிப் பொட்டியில் ரெண்டு வரி
எம்ஜியார் பாட்டு முடிய தேம்பியழும் சிவாஜி படம்

மீதியை வெள்ளித்திரையில் காணச் சொல்லும்
கலர் நோட்டீஸ் வீசும் மாட்டுவண்டியின் பின் ஓட்டம்

ஐஸ்பாய், ஏழாங்கல், முதுகு பஞ்சர்
பச்சக் குதிரை, கில்லி, பாண்டியாட்டம்

பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்
மணியொலிக்க வரும் சோன்பப்டி

மணலும் வயரும் வலை ஏரியலும்
கொண்டு செய்த டெலிஃபோன் இயர்பீஸ் ரேடியோ

முழுப் பௌர்ணமி இரவு மொட்டைமாடியில்
மூணு வீட்டு குழம்பு கலந்த மொத்தைச் சோறு

காவிட்ட நண்பனுடன் பிகு செய்து சாடை பேசி
பழம் விட்டுச் சிரித்த தருணங்கள்

கஞ்சி மொட மொடப்பில் கரிப்பொட்டி வாசனையுடன்
காக்கி வெள்ளை டவுசரும் சட்டையும்

வெள்ளை மணல் பரத்தி வாகாய் மேடு செய்து
பின்னங்கை கோர்த்து படுத்தபடி டூரிங் கொட்டாயில் படம்

ங்கொய்யால ஒரு நாள் முழுசும் இப்புடி அனுபவிச்சி
தரையில படுக்கப்போய் சுவத்தில தொங்கிடணும்!

பலப்பம்=ஸ்லேட்டுக் குச்சி, ஐஸ்பாய்= ஐ ஸ்பை மேச்சஸ் லேபில்=வத்திப் பெட்டி மேல் ஒட்டும் படம்.
~~~~~~~~~~~~


Monday, May 10, 2010

கேரக்டர்..மணியண்ணா..

"அகஜானன பத்மார்க்கம்
 கஜானனமஹர்நிசம்
 அனேகதந்தம் பக்தானாம்
 ஏகதந்தமுபாஸ்மஹே”

பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூரம் ஏற்றி பூஜை முடித்து பிள்ளையாரப்பா, அய்யப்பா நீங்க நடத்திக் குடுங்கோ! அம்மா இங்க வாங்கோ! சாரெங்கே! ஹாரத்தி எடுத்துக்கோங்கோ! டேய் ரமணி வெந்நீர் அண்டாவ ஏத்து! ஏத்து பரபரன்னு!

முன்னமே மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு இணுக்கு மல்லி வைத்து தயாராய் இருந்த அடுப்பில் விறகுகளுக்கு இடையே ஹாரத்தி கர்ப்பூரத்தை விரலால் எடுத்து வைத்து கும்பிட்ட கையோடு..

இனிமே நீங்க போய்க்கலாம். அப்புறம் முக்கியமான மேட்டர். பொறுப்பா ஆம்பளைல ஒன்னு, பொம்மனாட்டில ஒரு அம்மாவ டிசைட் பண்ணி எனக்கு காணிச்சி கொடுங்கோ. ஆராருக்கு ஏது வேணுன்னாலும் அவாதான் வந்து கேக்கணும். அதும் எங்கிட்டயோ, நான் சொல்ற ஆளுட்டையோதான் கேக்கணும். ஆளாளுக்கு வந்துண்டு ஆராரையோ கேட்டுண்டு மாட்டேந்நுட்டான், முடியாது போந்நுட்டான்னு தகராரு வரப்படாது. மநசிலாச்சா?

அப்பறம் ப்ரொவிஷன், காகறி எல்லாம் எங்கேன்னு காட்டிக் குடுங்கோ! எடோ ரமணி! சாரோட போய் எல்லாம் எங்கன்னு பார்த்து எடுத்துண்டு வா. முந்திரி, திராட்சை, ஏலக்கா காட்டி எடுத்துண்டு வந்து பொறுப்பில வச்சிக்கோ. பறக்காவட்டிகள் வந்துண்டு பாதாம் பால் கேக்கும். கோச்சிக்காதீங்கோ சார். பல இடத்துல அப்படித்தான் அடிபட்டாய்டுத்து. முக்கியமா தேங்கா சமையலுக்கு தனியா கொடுத்துடுங்கோ. அப்புறம் முஹூர்த்தத்துக்கு தேங்கா இல்லைன்னாலும் முடியர வரைக்கும் நாந்தரமாட்டேன்.

டேய் வழுக்கை! அவன கூப்புடுடா சொறிஞ்சிண்டு நிக்கறான் பாரு சம்பந்தியாத்து மாமா மாதிரி! போய் வெங்காயம் உறி போடா!

ஏதோ ஒரு விசேஷம். அது கலியாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ மணியண்ணா சமையல் வித்தியாசமின்றி இப்படித்தான் துவங்கும்.

பச்சை சிவப்பு கரை மயில்கண் நீர்க்காவி வேஷ்டி, தோளில் சிவப்பு காசித்துண்டு, வாயோரம் இடுக்கிய கும்பகோணம் வெற்றிலை பன்னீர்ப்புகையிலை , கருவளையம் விழுந்த கண், அடுப்பில் வெந்தே புடம்போட்ட தங்க நிறதேகம், அழுக்குப் பூணூல், ஸ்படிகமாலை, அய்யப்பன் டாலர் கோர்த்த துளசி மாலை, U வடிவ சந்தனக் கீற்றுக்குள் குங்குமப் பொட்டு, கீழே ஹோமச்சாந்து, அலை அலையாய் அமைந்த கிராப் தலை. ‘அகஜானன பத்மார்க்கம் ஆரம்பித்த நொடி முதல், எல்லாம் முடிந்த பிறகு வீட்டுப் பெரியவர்கள் கையால் தாம்பூலத்தில் சம்பளம் வாங்கி, திருப்தியா பண்ணியிருந்தா பகவானுக்கு! குறையிருந்தா சொல்லுங்கோ. அது எனக்கு திருத்திக்க என்று விடை பெறும்வரை மணியண்ணாவுக்கு சொந்தம், பந்தம், நட்பு, அதிகாரி என்ற ஒரு வேறுபாடும் கிடையாது.
 
ஆறு மணிக்கு டிஃபன் என்றால் தோ! பத்து நிமிஷம் இலை போட சொல்லியிருக்கேன் என்றோ பதினொன்றறைக்கு சாப்பாடு என்றால் வாழையிலை போறாது என்ற பேச்சோ இருக்காது. மணியண்ணா சுத்தம் என்றால் பரம சுத்தம். சாப்பாட்டில் முடி, உப்பு அதிகம், சாம்பாரை விளாவி ரசம், இழுத்து இழுத்து பரிமாறல் என்ற ஒரு குறையும் இருக்காது.
 
மணியண்ணாவுக்கு கோவம் வரும் ஒரு விஷயம் உண்டென்றால், சமையல்காரன்னா வாய்க்கு வந்தது லிஸ்ட் போடுவான் என்று குறைத்து வாங்குவதோ, ஒற்றனைப் போட்டு சாமான் கடத்திப் போய் விற்கிறானா என்று உளவு பார்ப்பதோ மட்டுமே. 

ரயில்வேயில் கணக்கர் வேலை. சக பணியாளர்கள் குழுவில். காசுக்கு வேலை செய்யும் சமையல்காரனல்ல மணியண்ணா. தெரிந்தவர், தெரியாதவர் யாரானாலும் சரி, அண்ணா! ஒரு விசேஷம் என்று வந்தவரிடம், என்ன விசேஷம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டதும் அடுத்த கேள்வி ஆத்துல ஆரானா பெரியவா இருக்காளா என்பது. இருக்கிறார்கள் என்றால் சரி, நான் அவாட்ட பேசிக்கறேன் என்பார். இல்லையெனில் எந்த ஊர் நீங்க என்று அந்த ஊர் முறைக்கு சீர் பட்சணம் என்ன, சாப்பாட்டு வகையறாக்கள் என்ன என்று லிஸ்ட் தருவார். 
 
கலியாணமோ, சீமந்தமோ பந்தா பண்ணிக் கொண்டு சீருக்கு எகிரும் சம்பந்தி வகையறாக்களை, ரொம்பவும் உரிமையாக ஓரம் கட்டிக் கொண்டு போய் இதுக்காகவெல்லாம் டென்ஷன் ஆலாமா? நான் பார்த்துக்கறேன் ஒரு குறையும் இருக்காது. 51 ஜாங்கிரி, 51 முறுக்கு அவ்வளவுதானே நானாச்சு என்று நட்பாக்குவார். பெண்வீட்டாரிடம், இதுக்கு போய் சண்டையா, சைசைக் குறைச்சா போச்சு போங்கோண்ணா என்று சிரிக்க வைப்பார். 
 
ஒரு முறை உறவினரின் திருமணத்தில் முஹூர்த்தத்துக்கு முதல் நாள் 200 பேருக்கு சாப்பாடு என ஏற்பாடு. கடைசிப் பந்தி முடியும் தருணத்தில் இஞ்சினியரான மாப்பிள்ளையின் கம்பெனி தொழிலாளர்கள் 50 பேர் வந்திறங்க மாப்பிள்ளை வீட்டார் பந்தாவாக சாப்பாடு இருக்கில்லையா என்று கேட்டுப் போய் விட்டனர். பெண்ணின் அப்பாவுக்கு மயக்கம் வராத குறை. 
 
மணியண்ணா வந்தார், மாப்பிள்ளையிடம் போனார். சிரித்தபடி ஃப்ரெண்ட்ஸா? சரக்கெல்லாம் வாங்கி வெச்சாச்சா? ஒரு ரவுண்டு முடியட்டும், காரமா உருளைக்கிழங்கு கறியும், வத்தக் குழம்பும், சாம்பாரும் ரெடியாயிருக்கும் என்று ஆப்பு வைத்துவிட்டு போய்விட்டார்.

சாப்பிட வரலாம் என்று மணியண்ணா குரல் கொடுக்கும்போது ஒரு ரவுண்டு முடிந்திருக்கவில்லை. அத்தனை போதையிலும் அய்யரே! கல்யாண விருந்து இப்படி சாப்பிட்டதேயில்லை அய்யரே என்று அத்தனை பேரும் சொல்லிவிட்டு போனபோது பெண்ணின் தகப்பனார் விக்கி விக்கி அழுதார். 

இரவு விருந்து முடிந்ததும், பைக்குள்ளிருந்து குவார்ட்டர் வெளியே எடுப்பார். மறைவாய் அடித்துவிட்டு வெற்றிலை பாக்கு புகையிலை இடுக்கி, ஒரு சிகரெட்டும் இழுத்துவிட்டு துண்டால் உதறி கை மடித்துப் படுப்பார். ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ தூக்கம். திரும்ப காய் நறுக்க, வெந்நீர் போடவென உத்தரவு பறக்கும். 

என் அக்காவுக்கு சீமந்தம். மணியண்ணா சமையல். மொட்டை மாடியில் கேஸ் வைத்து சமைப்பது என்று முடிவாகிவிட்டது. முதல் நாள் மாலை பூஜை ஆரம்பித்தது. எந்த அறிகுறியுமின்றி கருமேகம் திரண்டது. பிள்ளையாருக்கு என்ன கோவமோ! மணியண்ணா பார்த்தார். கணேசா! கொஞ்சமாவா படுத்தறாய் நீ. உனக்காச்சு எனக்காச்சு. மழைதானே! பார்த்துக்கறேண்டா என்று பேசியபடி தாம்பாளத்தை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டாயிற்று. ஜாங்கிரிக்கு உளுந்து அரைத்தபடி ரெடியாயிருக்க மழையென்றால் அப்படி ஒரு மழை. 

பாலா! எண்ணெய்க்கு குடை பிடி. பெரிய குடையா பிடி என்றவாறு ஜாங்கிரி பிழிய ஆரம்பித்தார். அசைவில் தூரலில் என்று வெடித்துச் சிதறியது எண்ணெய். சளைக்கவில்லை மனுஷன். சரியாக அரைமணியில் ஜாங்கிரி முடிய துடைத்து விட்டாற்போல் வானம். மழையில் சற்றே கரைந்த மஞ்சள் பிள்ளையாரிடம் குறும்பாக சோதிக்கறயா நீ! நீயிருக்கிறப்ப எனக்கென்ன கவலை. ம்ம். என்ன சொல்றாய் என்றபடி வேலை தொடர்ந்தது.
 
ஒன்பது மணியளவில் அம்மா, மணி இங்க வாடா என்றாள். என்ன மாமி என்று வந்தார் மணியண்ணா. உன் கூட வந்தவா சாப்பிட்டா பார்த்தேன். நீ சாப்பிடலையேடா. கை அலம்பிண்டு வா என்று அழைத்தாள். சாதமும் சாம்பாரும் எப்போது சமைத்தாளோ தெரியாது. . பிசைந்து கையில் உருட்டிக் கொடுத்தாள். 
 
ஒன்றும் பேசாமல் உண்டவர், கை கழுவி அம்மா! எத்தனை விசேஷத்துக்கு சமைச்சிருக்கேன். ஒரு நாளோ ரெண்டு நாளோ சாப்பிடமாட்டேன். காஃபில ஓடிடும். ஆத்துல போய்தான் சாப்பாடு.  இத்தன வருஷத்தில சமையல்காரன் சாப்பிட்டானான்னு கேட்டதும் நீங்கதான். தனியா சமைச்சு சாப்பிட கொடுத்ததும் நீங்கதான் என்றபோது இருவருக்கும் கண்ணில் ஆறாய்க் கண்ணீர்.

நிஜம்தான். நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா நம்மில் பெரும்பாலோருக்கு?

சில மாதங்களுக்கு முன் வாலண்டரி ரிடையர்மெண்ட் கொடுத்துவிட்டு கண் கலங்கியபடி ஒன்னும் கேக்காத பாலா! எத்தனை வந்தாலும் சமையல்காரனுக்கு கரண்டிதான் கடைசி வரைக்கும் என்று போனார். விக்கித்து நின்றேன்.