Monday, November 30, 2009

காதல் சொல்லி வந்தாய்.



 

ஒதுக்கப்பட்டவன்

கை கோர்த்து கண் கலங்கி
அழுதபடி என்னை அழாதே என்றவள் நீ!
இன்று அழுகை மட்டுமே
எனக்கு வரமாய் தரும் தேவதையானாய்..

காலை வந்தனம் சொல்லி
உன் பாதம் சமர்ப்பித்த
என் இதயப் பூக்கள்
உன்னால் ஏற்றுக்கொள்ளப்படாமலே
வாடிப்போகின்றன!

உன்னிடமிருந்து
கடிதம் வந்தது
கனவு போலிருக்கும்
சாபம் எனக்கார் தந்தது?

எத்தனை நாள்
எப்படி இருக்கிறாய்
எனக்கேட்க மாட்டாயா
என ஏங்கிச் செத்திருக்கிறேன்?

காத்திருந்து கண்டவுடன்
கட்டியணைக்க கை விரிக்கும்
என்னைக் கடந்து போகும்
கல்மனது உனக்கெப்படி வந்தது?

ஆற்றாமையில்
அடிமனம் கதறும்
ஆண்டவா எனக்கேன்
ஆக்கினை செய்தாய் இப்படியென..

ஆயினும் அதிலுமோர்
ஆறுதல் எனக்கு..
உன்  கோபத்துக்கெல்லாம்
சொந்தக் காரன் நான் மட்டும்தானே!

*********
விடியல் ராகம்


ஓர் இனிய‌காலையில்
முழ‌ங்கால் க‌ட்டி
முக‌ம் புதைத்து
ஏதோ சிந்த‌னையில்
சாள‌ர‌ம் வ‌ழியே
பார்த்துக் கொண்டிருக்கும்
உன்னைப் பார்த்த‌ப‌டி நான்..
உன் க‌ணிணியில் மெலிதாய் க‌சிகிற‌து பாட‌ல்
புல்லாய்ப் பிற‌வி த‌ர‌ வேண்டுமென‌
என்ம‌ன‌து வேண்டிய‌து
உன் ப‌ல்லாய்ப் பிற‌வித‌ர‌வேண்டுமென‌..
ஆம்..எத்த‌னை வித‌மாய்
உன் அனுமதியின்றி
உன் இதழ் சுவைக்கிற‌து அது.

*********


நல்ல காலம்!


அந்தக் காலம் போல்
கல்லைத் தூக்கவேண்டும்
காளையை அடக்க வேண்டுமென
எனக்கு விதித்திருந்தால்
நீ எனக்குக் கிடைக்காமலே போயிருப்பாய்!
ஒற்றைப் பார்வையில் விழுத்தி என்னை
உனக்குள் அடக்கியவளே!
உனக்கெப்படி நன்றி சொல்வேன்?


********


தாலாட்டு!


தூக்க‌ம் பிடிக்காத‌ ஓர் இர‌வில்
பாட்டாவ‌து கேட்ட‌ப‌டி
தூங்க‌லாம் என‌ முய‌ற்சிக்கையில்..
மெலிதாய்க் கசிந்தது பாடல்..
க‌ண்ணோ க‌ம‌ல‌ப்பூவென...
உன் அம்மா இப்ப‌டித்தான்
உன்னைத் தாலாட்டி இருப்பாள்
என்ற உன் நினைவில்
முற்றாய்த் தூக்கம் தொலைந்து போனது!


*****

Sunday, November 29, 2009

கால நேரம் !

நெருப்பில்லாம புகையாது! ரொம்பக்காலமா ஜனங்க கிருத்திரமமா பொரணி பேச்சுக்கு வலுவூட்ட சொல்லிட்டிருந்த பழமொழி பொய்னு ஆகிப்போச்சு போல. ஆமாங்க, மின்காந்த அடுப்பு (Induction Stove) வந்துடுச்சாம். நெருப்பே இல்லாம சமைக்குமாம்.


எனக்கு சிப்பு சிப்பா வருது. பின்ன என்னங்க? ஊருக்கு போய் இருக்கும்போது பார்த்திருக்கேன். ஒல்லிக்குச்சிக்  கிழவி, அதான் எங்க பாட்டி ஒத்த ஆள கிட்ட சேர்க்காது. தனியா, விறகு, சுள்ளி என்னமோ வெச்சி ஒரு 25 பேருக்கு கிட்ட சமைக்கும்.  அம்மில ஓட்டி ஓட்டி அரைக்கிற அழகிருக்கே. சும்மா வலயப்பட்டி தவில் கணக்கா தேங்கா நசுக்கற சத்தமும், அரைச்சு முடிச்சி நட்டுகுத்தா குழவிய சுத்தி, ஒரு விரல மடக்கி மேல இருந்து வழிக்கிற அழகும் இருக்கே. அரைச்ச தடமே இருக்காது.

சமையலோட வாசனை மெது மெதுவா நாசிய நெருடி சமையலறை பக்கமா இழுக்கும். அடுப்ப‌டியில‌ கெட‌ந்து சாவுறேன்னு முன‌கின‌தும் இல்லை. தீஞ்சி போன‌து, பொங்கி வ‌ழிஞ்ச‌துங்கற வ‌ர‌லாறும் இல்லை. விசுக்கு விசுக்குன்னு போய்ட்டு வந்து, விரட்டி, நடுவில ரெண்டு வாண்டுக்கு குளிப்பாட்டின்னு ஏதோ பண்ணிகிட்டு, சாப்பிட வாங்க பசங்களான்னு குரல் விடுறப்போ வயத்துல பசி ரெடியா இருக்கும்.

வந்தவங்க வழிச்சி நக்கிட்டாங்கன்னு, கொஞ்சம் இருங்க சாதம் 2 நிமிஷத்துல ஆயிடும்னோ, பொரியல் தீந்து போச்சின்னோ, குழம்பு ரசமெல்லாம் விளாத்துற வேலையோ கிடையாது. உப்பு தூக்கல், புளி அதிகம்னு ரிப்பேர் வேலையே கிடையாது.

பொழ‌ப்புன்னு ப‌ட்டிண‌ம் வ‌ந்தும், விற‌கு அடுப்பு கூடாதுன்னு க‌ண்டிஷ‌ன்ல‌தான் வீடுகிடைக்கும்னு ஆன‌ பொழுது கூட‌ கும‌ட்டி அடுப்பில் க‌ரி போட்டு ச‌மைய‌ல் நடக்கும். அப்ப‌வும் அம்மிதான். உர‌ல்தான். ச‌மைய‌ல் என்ன‌மோ அதே நேர‌ம்தான் எடுக்கும்.  ஒரு நாள் காட்டு க‌ரியை விட‌ லீக்கோ க‌ரி ரொம்ப‌ சூடு, கொஞ்ச‌மா ஆகும், விலை க‌ம்மி, சேமிப்புன்னு க‌தை விட்டான். சாம்ப‌ல் இல்லைன்னு அள‌ந்தான். அப்ப‌வும் சமையலுக்கு அதே நேர‌ம்தான்.

அப்புற‌ம் கெர‌சின் வ‌ந்திச்சி. வ‌த்தி ஸ்ட‌வ்வுன்னாங்க‌. ஜ‌ன‌ங்க‌ல்லாம் பாய்ஞ்சிகிட்டு அந்த‌ ப‌க்க‌ம் போன‌து. அந்த‌ வாச‌னை புடிக்க‌ல‌ன்னு முன‌கிக்கிட்டே அதுல‌ தான் ச‌மையல்னு மாறினாங்க‌. பாத்திர‌மெல்லாம் க‌ரி புடிச்ச‌து. செங்க‌ல் பொடி, புளின்னு தேயோ தேய்னு தேய்ச்சி கூடுத‌ல் வேலையாச்சி. ச‌மைய‌ல் என்ன‌மோ அதே நேர‌ம்தான்.

அப்புற‌ம் ப‌ம்ப் ஸ்ட‌வ் வ‌ந்துடிச்சி. க‌ரிபுடிக்காதுன்னு விள‌ம்ப‌ர‌ம். அதுக்கு பின்னு, ப‌க்க‌த்துல‌யே ஆளு இருக்க‌ணும். இல்லைன்னா தீய்ஞ்சிடும், பொங்கிடும். மேல‌ கொதிக்கிற‌ப்ப‌ ப‌ம்ப் ப‌ண்ணி அது சிந்திக் காய‌ம். இப்ப‌டி ப‌ல‌ பிர‌ச்சினைக‌ள் வ‌ந்தும் ச‌மைய‌ல் அதே நேர‌ம். இதனால கொஞ்ச மருமகள்கள் உயிர் போனதும் கூடுதல் பலன்.

பிற‌கு இண்டியன் ஆயில் நிறுவனம் ஒரு வ‌த்தி ஸ்ட‌வ் கொண்டு வந்து, அதுக்கு டில்லிக்கு போற‌வ‌ங்க‌ கிட்ட‌ சொல்லி, காத்திருந்து காசு மேல‌ குடுத்து வாங்கின‌து. ஒரு மாறுத‌லும் இல்லை. பிற‌கு, கேஸ், அதுக்கு காத்திருத்த‌ல், ப்ர‌ஷ‌ர் குக்க‌ர், மிக்ஸி, க்ரைண்ட‌ர், 2 பர்ன‌ர் போதாதுன்னு 4 ப‌ர்ன‌ர் ஸ்டவ்வு, குக்கிங் ரேஞ்ச், எலெக்ட்ரிக் ஸ்ட‌வ், எலெக்ட்ரிக் குக்க‌ர், மைக்ரோ வேவ்னு வந்துச்சி.

புகை போக்க என்னமோ மிசினு வேற எலக்ட்ரிக் சிம்னின்னு வந்துடுச்சி காசு புடுங்க போதாம‌ இப்போ இன்ட‌க்ஷ‌ன் ஸ்ட‌வ்வாம். அதுக்கு த‌னியா பாத்திர‌ங்க‌ள் வாங்கணுமாம். விளம்பரம் பார்த்தா சமைக்கப் போறேன்னு சொல்ற நேரத்துல சமைச்சிடலாமாம். தீச்சுட்ட காயம் இருக்காதாம்.

விளம்பரத்துல சொல்லாம விட்டது என்ன தெரியுமா. இதய நோய்க்கு பேஸ்மேக்கர் கருவி, டெஃபிப்ரிலேடர் கருவி இது இருக்கிறவங்க இந்த அடுப்புகிட்ட போனா அது தாறுமாறாயிடுமாம். கையில போட்டிருக்கிற மோதிரம், இப்பதான் நீளமா செயின் போடுறாங்கள்ள அதெல்லாம் சூடாயிடுமாம். ஈர பெயிண்டுன்னாலே தொடாம நம்பமாட்டான் நம்மாளு. இது என்னாதுன்னு தடவி பார்த்து கை பொரிஞ்சி போகும்.

நிஜ‌ம்மா சொல்லுங்க‌! அன்னைக்கு அடுப்ப‌டில‌ செல‌வுப‌ண்ண‌ நேர‌த்துல‌ இதெல்லாம் வ‌ந்து ஏதாவ‌து ப‌ல‌ன் இருக்குன்னா எப்ப‌டி ஃபாஸ்ட் ஃபுட், இன்ஸ்ட‌ன்ட் ஃபுட் எல்லாம் பிச்சிகிட்டு ஓடுமா? அப்போ விறகுல சமைச்சவங்கள விடுங்க. கிரசின் அடுப்பில இருந்து கேஸ் வாங்கினவங்க எவ்வளவு மிச்சம் புடிச்சாங்க. கேஸ்ல இருந்து மைக்ரோவேவ் வரைக்கும் படிப்படியா மாறினவங்க சேமிச்சது என்ன?

இன்னும் கிராம‌த்தில‌ வேர் இருக்கிற‌வ‌ங்க‌ ம‌ண்பானைத் த‌ண்ணி, ம‌ண் ச‌ட்டில‌ செய்த‌ சாப்பாடு, க‌ல்ச‌ட்டிக் குழ‌ம்புன்னு ஏங்காம‌ இருக்கோமா?சமைக்கிற உணவிலதான் ருசியும் ஆரோக்கியமும் இல்லையா? இல்ல முறையில இல்லையா? மிஞ்சி மிஞ்சிப் போனா சமைக்கிறதுக்கு ஒரு மணிநேரம் ஆகுமா? இதையும் சுருக்கி அந்த நேரத்துல இன்னோரு சீரியல் பார்க்கலாமா?

இதுக்கு ஒரு பட்டி மன்றம் வைக்கிற அளவுக்கு விஷயம் இருக்கு. அதெல்லாத்தையும் மீறி அவிய்ங்க வீட்டில இருக்கு. நம்ம வீட்டில இல்லைன்னா கௌரவக் குறைச்சலுங்கிற காரணம் தேவையோ தேவையில்லையோ, இதெல்லாம் வந்துகிட்டேதான் இருக்கும்.

Friday, November 27, 2009

தொழுது நிற்கிறோம்!



அகண்ட தீக்குளித்து
அன்றலர்ந்த அல்லியாய் வந்தபோது
தெளிந்தது சீதையின் கற்பல்ல
இராவணனின் சீலம்!

கையறு நிலையிலும்
கற்பை ஆயுதமாய்
கனவிலும் நினையாத
அவன் கண்ணியம்!

பின்னொரு நாள்
இனம் காப்பதாய்ச் சென்ற
இராமர்கள் கற்றுக் கொடுத்தது
கற்பழிப்பென்னும் ஆயுதம்!

மற்றுமொரு முறை
மறைந்தழித்துதவும்
மகோன்னத காதை
மனிதமழித்தது!

புத்தன் பூமியில்
புத்த பூமிகள் சேர்ந்து நடத்திய
யுத்த வேள்வியில் புத்தனுக்கு
ரத்த அபிஷேகம்!

பூஜைக்குப் பறிக்கப் பட்டவை
பூக்களல்ல எம் பிஞ்சுகள்
எரிந்தவை சந்தனமும் சவ்வாதுமல்ல
எம் மக்களின் உடல்கள்!

அபிமன்யுவையிழந்த
அர்ச்சுனனின் வீரமா களம் வென்றது?
கட்டை விரலழுத்திய
கண்ணனின் கள்ளம் தானே?

விதைக்கப்பட்ட எம் வீரர்களே
விளைந்து வாருங்கள்!
சலித்த எம் மனதிற்கு
சக்தி தாருங்கள்!

தொப்புள் கொடியுறவென்றழைத்து
தோள் கொடுக்காது
தொங்கிய தலையுடன்
தொழுது நிற்கிறோம்!
___/\___

Thursday, November 26, 2009

ஹீரோ!





என் பேரு. அது எதுக்கு உங்களுக்கு? நான் ரொம்ப மென்மையானவன்.  பார்க்கத்தான் கொஞ்சம் கரடு முரடா தெரிவேன். ஆனா ரொம்ப சாஃப்ட் நானு. எங்க போனாலும் ஒரு ஓரமா நான் பாட்டுக்கு ஒழுங்கா இருப்பேன். வெள்ளையா வேற இருப்பேன்.

இந்தப் பொண்ணுங்க‌ இருக்காங்களே! எம்பாட்டுக்கு இருக்க விடமாட்டாளுங்க. என்ன பார்த்துட்டா போறும். பாய்ஞ்சி ஓடி வந்து தூக்கி கொஞ்சம் கூட வெக்கமில்லாம உதடு அழுந்த முத்தம் குடுப்பாங்க. சில பேரு சாப்ட வாய் கூட துடைக்காம முத்தம் குடுப்பாங்க. எனக்கு எப்புடி எரியும் தெரியுமா?

சில பேருக்கு அப்புடி என்னா வெறி வருமோ அப்புடியே மூஞ்சி,கன்னம்னு பொரட்டி எடுப்பாங்க.ச்சீ தூ.வியர்வை நாத்தம் வாந்திவரும். எல்லாம் என்னோட தப்பு. இவ்வளவு வெறுப்பிருந்தாலும், யாராசும் அழுதா என்னால தாங்க முடியாது. முதல்ல போய் கண்ணு துடைப்பேன். அதெல்லாம் யாருங்க நினைச்சி பார்க்குறாங்க.

நேத்து வ‌ரைக்கும் மூக்கு ஒழுகிக்கினு இருந்த‌ மீனா, மைனா வாய் ம‌கி பொண்ணு அதான் மொச்சு மொச்சுன்னு அசைபோட்டு போட்டு வாயோர‌ம் புண்ணு வ‌ந்திருக்குமே மைனா வாய் மாதிரி அந்த‌ ம‌கி பொண்ணு இவ‌ளுங்க‌ ச‌க‌வாச‌மே இல்லாம‌ நான் பாட்டுக்கு இருந்தேன். காலேஜுல‌ சேர்ந்துட்டாங்க‌ளாம். இவ‌ங்க‌ளுக்கும் என்ன‌ப் பார்த்தா இப்போ லவ்ஸூ. என்னா? எம் பொழப்ப பார்த்தா பொறாமையா இருக்கா?

இவ‌ங்க‌ளாவ‌து ப‌ர‌வால்ல‌. ஆம்பிளைங்களுக்கென்ன? உவ்வ்வே. வெக்க‌மில்லாம‌ அவ‌ங்க பொண்டாட்டிகிட்ட சொல்லி என்ன‌ க‌ட‌த்தி கொண்டு வ‌ந்து மீசை குத்த‌ குத்த‌ அழுத்தி முத்த‌ம் குடுப்பானுங்க‌ பாரு. ப‌த்திக்கிட்டு வரும்.

ஆம்பளையோ பொம்பளையோ எல்லாம் ஒரே மாதிரிதான். இத்தினி பாசமும் கொஞ்ச நேரம்தான். அப்புறம் கெடாசிட்டு போயிட்டே இருப்பாங்க. ஒரு ஆறுதல் என்னன்னா அது எந்த விசேஷமா இருக்கட்டும். எவ்ளோ பெரிய வி.ஐ.பியா இருந்தாலும் முதல்ல நான் இருக்கனான்னு தேடுவாங்க.

என்னைக் காணலைன்னா திட்டுவாங்க. சிலரு சண்டை கூட போடுவாங்க, இவ்ளோ செஞ்சி என்ன? இவன கூப்புடலையான்னு. யாருடா இந்த ஹீரோன்னு தானே பார்க்கரீங்க. நாந்தாங்க டிஷ்யூ பேப்பர். சரிங்களா. பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க. பிடிக்காட்டி பிடிக்கலன்னு சொல்லுங்க. எதுனாலும் பின்னூட்டத்தில சொல்லிட்டு போங்க. எனக்கு பின்னாடி போய் பேசுனா பிடிக்காது. சரியா?

டிஸ்கி 1: இது வசந்த் மாதிரி எழுதியிருக்கேன். சரியா இருக்கான்னு பின்னூட்டத்தில சொல்லுங்க. மெஜாரிடி முடிவை ஏற்றே ஆக வேண்டும். அதனால போட்டு குடுக்க வேணாம். சரின்னா மட்டும் வசந்த் மாதிரின்னு சொல்லுங்க.

டிஸ்கி 2: இந்த மாதிரி அவர் எழுத வேண்டிய எழுத்து கதிர், பாலாசி, இது போக அவருக்கு விருப்பமான முடியுமென்று தோன்றக் கூடிய வேறு யாருடைய எழுத்தாகிலும்.

Wednesday, November 25, 2009

2012 நம்ம ஸ்டைலு!

2012 படம் வந்தாலும் வந்தது இருக்கிற 2 வருஷத்தையும் பயந்தே கழிச்சிடுவாங்க போல ஜனங்க. பதிவுலகத்தில இது ஒரு பெரிய பிரச்சனை. எந்த செய்தியானாலும் யாரோ ஒருத்தர் ஒரு இடுகையை போட்டு இருக்கிறவன டரியலாக்கிடுறாங்க. ஈழப் பிரச்சினையில இருந்து இருபது பன்னெண்டு வரைக்கும் பதிவுலகத்தில உறவு வெச்சிருக்கிறவங்க மாதிரி பொது ஜனம் கவலைப் படுறானா?

இன்னா அனியாயம் பண்றாம்பா இந்த ராஜபக்சே. இவனுங்கள ஒருத்தனும் கேக்க மாட்றானே, மாஸ்டர் ஸ்ட்ராங்கா ஒரு டீ என்றோ 2012 பார்த்துவிட்டு இங்லீஷ் விட்டலாச்சார்யா படம் சோக்கா கீதுபா, இன்னாமா சுத்துறானுங்கடா, ஒரு கட்டிங் ஊர்கா பாகிடி ஒன்னு என்றோ அடுத்த வேலை பார்க்க போய்விடுகிறான்.

இந்திய சோதிட (அடிக்க வருவாய்ங்கப்பா) வானவியல் சாத்திரப்படி (இதுவாவது சரியா?) கலியுகத்தின் 4 லட்சத்து 32 ஆயிரம் வருடத்தில் 5011 வருடங்கள் தான் முடிந்திருக்கிறது. அதனால் 2012 உலகம் அழியாது என்று அடித்து சொல்லலாம் என்றால் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் தத்துவம் மேலோங்கி நிற்கிறது.

உலகம்தான் அழியப் போகிறதே, இனிமே யாருக்கு சம்பாதிக்கணும் என்றோ, ஒபினியன் சொல்லி என்னாகப் போகிறதென்ற விரக்தியிலோ இருந்துடப் போறாங்களா? அவங்க அப்படியே இருந்தாலும் நாம விட்டுடப் போறமா? கம்பேனி நிர்வாகம் பொறுப்பில்லை என்று ஒரு டிஸ்கி போட்டா என்ன வேணா சொல்லி இடுகை தேத்திடலாம்ல.

சு.சுவாமி: இப்போதான் நாசா சயண்டிஸ்ட் கிட்டேருந்து சி.ஐ.ஏக்கு ரிபோர்ட் வந்த்ருக்கு. அவா க்ளீனா சொல்லீட்டா. ஜன்தா கட்சியாலதான் உல்கத்த காப்பாத் முடியும்னு. கூட்ய சீக்ரம் ஒபாமா மெம்பர்ஷிப்கு அப்ளை பண்றேன்னு சொல்லி இருக்கார். சமயம் வரும்போது நான் கோர்ட்ல ட்ரெஸ்பாஸ் கேஸ் போட்டு லோகம் அழியாம காப்பாத்திடுவேன். மிச்ச டீடெய்ல்ஸ் சந்த்ரலேகா சொல்வாள்.

வீரமணி:ஆரியக்கூட்டம் 2012க்கு மேல் எண்ணத் தெரியாமல் கட்டவிழ்த்திருக்கும் புரட்டு இது. பெரியார் பள்ளியில் படித்த எங்களுக்கு மாயன், மாயா எல்லாம் சிலபஸிலேயே இல்லை என்பதையும் எப்பேர்ப்பட்ட இடர் வரினும் ஆளும் கட்சியுடன் ஜால்ரா அடித்த படியே எதிர்கட்சியுடனும் கை குலுக்கவும் தெரிந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு தேவர்களின் சதியை முறியடிக்க போராட்டம் பார்க்டவுன் போஸ்டாபீஸ் எதிரில் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர்: அன்பு உடன் பிறப்பே உபயோகமத்த உலுத்தர்கள் உளறுவதைக் கேட்காதே. பொன்னர் சங்கர் வெற்றி விழாவும், உன் அன்பு அண்ணனின் கலைவிழாவும் சேர்ந்து அன்றைய தினம் நேரு விளையாட்டரங்கில் சிறப்பு குத்தாட்டத்தைக் கண்டு களிக்க அலைகடலெனத் திரண்டு வா என அழைக்கத் தோன்றிடினும் துக்கம் தொண்டையை அடைப்பதால் இலவசத் தொலைக்காட்சியில் கண்டு களிப்பாய் என நம்புகிறேன்.

ஜெ:உலகம் முழுதும் 2012ஐ எதிர் நோக்கியிருப்பினும் நடைபெறவிருக்கும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க பெரும்பான்மை இடத்தைப் பெறவிடாமல் கருணாநிதி சதி செய்து பொறுப்பற்ற விதத்தில் நடந்தும் பேசியும் வருவதை கவனத்தில் கொண்டு தனி கொடநாடு அடைந்தே தீருவோம் என்று உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

ராம்தாஸ்: நாங்கள் கேட்கிற உத்தரவாதம் தந்தாலே ஒழிய பா.ம.க. 2012ம் ஆண்டு நாட்காட்டியை வாங்குவதில்லை என்று தொண்டர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

நம்புங்கள் நாராயணன்:இப்போ சொல்றேன் குறித்துக் கொள்ளுங்கள். கடலோரம் இருக்கிற நாடுகள், மலை இருக்கிற நாடுகள், மரம் இருக்கிற நாடுகள், மணல் இருக்கிற நாடுகள், ஏரி குளம் இருக்கிற நாடுகளுக்கு பாதிப்பு இருக்கும். கிரகம் மோதும் போது அதுக்கு நேர் கீழ பூமியில் தலைகீழாக இருக்கும் நாடுகளில் பாதிப்பு அதிகமிருக்கலாம்.

புளியம்பழம் கொட்றா மாதிரி கொட்டிப் போகுமே தவிர, பூகோள அமைப்புப் படி கல்லுதடுக்கி சுண்டுவிரல்ல காயமாவது படும். 30 வயசுல இந்திராகாந்திக்கு இளநரை விழும்னு சொன்னேன். அப்படியே நடந்தது. இட்ஸ் ப்யூர் சயன்ஸ். வேணும்னா 22.12.2012 ல உசிரோட இருந்தா ஒரு ப்ரோக்ராம் வைங்கோ. நான் வரேன். நடந்ததா இல்லையான்னு புள்ளி விவரத்தோட தரேன்.

வல்லாரை வைத்தியர்: எதிர்ப்பு சக்தியில்லாததாலதான் எங்க இருக்கிற கிருமியோ கிரகமோ மனுசன தாக்குது. சாப்பிடுற சாப்பாட்டில கெமிகல், மருந்து மாத்திரைன்னு சாப்பிட்டு யாருக்கும் உடம்புல எதிர்ப்பு சக்தியே இல்லை. நம்ம தோட்டத்துல இயற்கை உரமா யானை, ஒட்டகம், மாட்டுசாணம் எல்லாம் போட்டு உற்பத்தியான வல்லாரை, நல்லாரை, கொல்லாரை மூலிகை கேப்சூல் 48 நாள் சாப்பிட்டா உங்க தலை மேல கிரகம் வந்து விழுந்தாலும் ஃபுட்பால் மாதிரி வந்த இடத்துக்கே திரும்பிடும். மிகக் குறைந்த விலையில் 48 நாள் கேப்சூல் 48 லட்ச ரூபாய். குடும்பமா வாங்கினா நேரில் டீல் முடிக்கலாம்.

ரியல் எஸ்டேட்: அரக்கோணத்துக்கும் மோசூருக்கும் நடுவில் பூமி உண்டான நாளிலிருந்து ஒரே ஒரு மழைத்துளி கூட விழாத இடத்தில் 350 ஏக்கராவில் அமைந்துள்ள 2012 நகரில் அப்ரூவ்டு ப்ளாட் விற்பனைக்கு உள்ளது. அருகிலேயே கருடா விமான தளம், 21/12 முடிந்ததும் ஊருக்கு திருட்டு ரயிலில் திரும்ப வசதியாக திருவாலங்காடு ஸ்டேஷன். ஒருவருக்கு அரை சதுர அடி மட்டுமே விற்கப்படும். விலை 45லட்சம். ரிஜிஸ்ட்ரேஷன் இலவசம். முதலில் பதிவு செய்யும் 30 பேருக்கு முட்டை பரோட்டா இலவசம்.

திருவிதாங்கூர் வைத்தியர்: த்ரேதாயுகத்தில் இப்படி நடந்த பொழுது டுபாக்குர் மகரிஷி ஓலைச்சுவடியில் எழுதி வைத்த வைத்தியக் குறிப்பு எங்கள் பரம்பரை வைத்திய முறையில் கடைப்பிடிக்கப் பட்ட களிம்பு. தடவிக் கொண்டால் கதிர் வீச்சு ஒன்றும் செய்யாது. நான்கே வாரம் தடவி வந்தால் செத்தால் போதும் என்ற நிலமைக்கு ஆளாகிவிடுவதால் கிரகம் குறித்த கவலையே இருக்காது.

டி.ஆர்: எம்மவன் சிம்பு. எனக்கேண்டா வம்பு. ஆனாலும் சொல்றேன் நம்பு. 18ம்தேதி உலகத்த என் கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணு. சரியா 20.12.2012 நள்ளிரவு 12.00 மணிக்கு ஆரம்பிச்சி 21.12.2012 வரைக்கும் உலகத்துல எல்லாரும் என்ன மாதிரி வேஷம் போட்டுகிட்டு ஹே டண்டணக்கா டணுக்குனக்கான்னு தெருவில இறங்கி ஆடிப்பாரு. எந்த கிரகமாவது வருமா கூறு. சொல்றது டியாரு.

வடிவேலு: ஏண்ணே. இந்த பாரின்ல சூட்டிங்னு போனா நேரத்த முன்ன பின்ன வைக்கறாங்களா இல்லையா. அப்புடி 2012 கேலண்டருல 21ம் தேதிய விட்டு அடிச்சிட்டு. 20ம்தேதி எந்த ஊர்ல முதல்ல முடியுதோ அங்கயிருந்து ஆரம்பிச்சி வரிசையா 22ம்தேதின்னு அறிவிச்சிட்டா சரியா போச்சா இல்லையா?

பொதுஜனம்.ங்கொய்யால.21ம் தேதி வெள்ளிக்கிழம வரதால உலகம் அழியப்போவுதுன்னு 20ம் தேதியே கூலி வாங்கிட்டு புல்லா சரக்கு வாங்கி ஸ்டாக் பண்ணா ஒரு வேள ஒன்னியும் நடக்கலன்னா சனி ஞாயிறு மப்பாயிடலாம். டாஸ்மாக் கட தொறக்க மாட்டானுங்கோ.

(டிஸ்கி:விஜயகாந்த் கருத்தைச் சொல்லவில்லை என்று யாரும் கேட்க மாட்டார்கள். அவரு மட்டையாய்டுவாருன்னு தெரியும்ல)


Tuesday, November 24, 2009

வாக்மேன் வாங்கப் போனேன்!

’70களில் டிரான்ஸிஸ்டர் ரேடியோக்கள் சாமானிய மக்களுக்கு சாத்தியமான காலம். வி.ஜி.பி.சகோதரர்கள் தவணை முறையை அறிமுகப் படுத்திய காலம். ஞாயிற்றுக் கிழமை பாப்பா மலருக்கும், ஒலிச்சித்திரத்துக்கும்,  ஹமீதின் கட்டிவைக்கும் குரலுக்கு டிக்டிக் கடிகார சத்தத்தோடு  இதயம் துடிக்க போர்ன்விடா க்விஸ்ஸூக்கு காத்திருந்த காலம், ஹார்லிக்ஸ் சுசித்ராவின் குடும்பத்துக்கும் காத்திருந்த காலம். காலை 7.15 செய்தி முடிந்ததும் 15 நிமிடம் ஒலிக்கும் ரஸிகரஞ்சனிக்கும் இரவு வர்த்தக ஒலிபரப்பில் தேன்கிண்ணத்துக்கும் ஏங்கிய காலம்.

எல்லா ஏக்கமும் யார் வீட்டிலாவது கேட்காதா என்று ஏங்கி மாடிப் படியில், அவர்கள் வீட்டு அண்மையில் என்று காத்திருந்து கேட்டுத் தீர்த்த காலம். முதலில் படிப்பு கெட்டுவிடும் என்ற சாக்கு, பிறகு வாங்க முடியாத நிலமை என்று ஏதோ காரணங்களால் ட்ரான்ஸிஸ்டர் என் வாழ்க்கையில் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது.

பிறகு தொலைக்காட்சி பரவலாகிவிட 82ல் டிவி வந்து புகுந்து கொண்டது. அதற்குப் பிறகு மார்கட்டில் கேஸட் ப்ளேயர், ஸ்டீரியோ ரெகார்டர் என்றெல்லாம் வர, மெதுவாக வாக்மென் தனியிடம் பிடித்தது. தூர்தர்ஷன் உபயத்தால், சினிமாப் பாடல், கர்நாடக இசை என்று ஆரம்பித்து ஹிந்துஸ்தானி இசை, எந்த மொழியானாலும் நாட்டுப் புறப் பாடல்கள், கவ்வாலி, சூஃபி என்று என் இசை வேட்கை திக்கு திசை தெரியாமல் பரந்து விரிந்தது.

ஸ்டீரியோ சக்திக்கு மீறியதாகவும், இருந்த ஒரே சோனி வாக்மேன் விலை அதிகமாகவும் பட்டதால் அவ்வப்போது அடக்கி அடக்கி முடியாமல், பர்மா பஜாரில் காசுக்கேத்த பணியாரம் மாதிரி நம்ம பட்ஜட்டுக்குள் கிடைப்பதாக அறிந்ததும் அடங்க மாட்டேன் என்று மனது படுத்திய பாட்டில் வாக்மேன் வாங்கியே தீருவது என்று முடிவுக்கு வந்தாயிற்று.

ஃபேன் வாங்கவே பி.எச்.டி. ரேஞ்சுக்கு தயாரானவன், பர்மா பஜாரின் பம்மாத்து வேலைகளுக்கு ஏமாறுவேனா என்ன? அடித்துப் பிடித்து ஏதோ ஒரு அரியர்ஸ் தொகை 400ரூ கைக்கு வர அதை வாக்மேனாக மாற்றும் வசந்த நாள் ஒன்றைக் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.

Enter the Dragon, 36th chamber of shaolin எல்லாம் பார்த்த சூட்டில் கராத்தே வகுப்புக்கு போய் மணிக்கட்டில் காப்பு காய்த்த, என்னை விட ஓங்குதாங்கான ஒரு நண்பனையும் சேர்த்துக் கொண்டு பாரீஸ் கார்னருக்கு பயணப் பட்டோம்.

மேல் சட்டையில் ரூ 250, டிக்கட் பாக்கட்டில் ஒரு 50, ஹிப் பாக்கட்டில் ஒரு 50 நண்பனிடம் மீதி 50 என்று பதுக்கி பர்மா பஜார் பரிச்சயமுள்ளவர்களிடம் விசாரித்து அட்டு, அசி என்ற இரண்டு முக்கியமான மந்திர உச்சாடனம் கற்று, வாங்குவதாக முடிவு செய்தாலே ஒழிய பொருளைக் கையில் வாங்கக் கூடாது என்ற கீதோபதேசமும் பெற்று களமிறங்கினோம். நண்பன் தொலைவாகவும் இல்லாமல், ஒன்றாகவும் இல்லாமல் வர வேண்டியது. இக்கட்டு நிலையில் காப்பாற்ற வேண்டும் என்ற முஸ்தீபோடு பீதியும் ஆசையுமாய் நுழைந்தோம்.

கும்பலில் ஒரு குரல், டெக்கு பாக்குறீங்களா சார் (ம்கும். வாக்மேனுக்கே நாக்கு தள்ளுது டெக்கு வேறயா?) என்றதை சட்டை செய்யாமல், ஒரு கண் கடை அலமாரிகளில், ஒரு கண் கடைக்காரரில் என்று நம்ம ரேஞ்சுக்கு நல்லவராக ஒரு கடையில் நிதானித்தோம். வாங்க தம்பி என்ன வேணும், வாக்மேன் பாக்கறீங்களா? (வானம்பாடி! எப்புடீடா நீ எங்க போனாலும் வசதியா கேக்குறாங்க?) என்றார்.

ம்ம். என்னா ப்ராண்ட் இருக்கு? (யப்பா! என்னா பந்தா? 250ரூபாய்க்கு ஏதாவது கிடைக்குமான்னு கேட்டா இவரு ராஜபரம்பரை அந்தஸ்து போய்டும். தூ!). உங்களுக்கு எது வேணும் தம்பி, சோனி,JVC(இப்புடி ஒன்னு இருக்கா), சான்யோ(சோனியோட டூப்ளிகேட்டோ),ப்ளிப்ஸு, நேஷனல்(பானாசோனிக் இல்லையோ) என்றார். (படுபாவி சிக்க வச்சிட்டாண்டா லுக்கில் மனசைப் படிச்ச மனுஷன்) உங்களுக்கு என்னா விலையில பாக்கறீங்க என்றார். விலை பத்தி இல்ல(அடி செருப்பால!) நல்லாருக்கணும்.

நம்ம கடையில பொருளு சுத்தமா இருக்கும் தம்பி, ரிகார்டர், ரேடியோவோட வேணுமா, ரிகார்டர் மட்டும் போதுமா, ப்ளேயர் மட்டும் போதுமா? (அய்யோ! இப்படியெல்லாம் வேற இருக்கும்னு தெரியாம வந்துட்டனே!) என்றவரிடம் சோனி எவ்வளவு? என்றேன்.

ரூ750 ஆகும், ரேடியோ, மைக்கி, ரிகார்டிங்கி, ஷ்டீரியோ, வைடு எல்லாம் இருக்கும். சூப்பர் பீசு, குடுத்துடலாமா? என்றார். டப்பு லேதுன்னு சொல்லிடுவமா? அவ்வளவெல்லாம் வேணாங்க டேப் கேக்கறா மாதிரி போதும், ஸ்டீரியோ வேணும் அவ்வளவுதான் என்று சொல்லித் தயங்க பானாசோனிக் ரூ 350ல் தருவதாக சொன்னார்.

ரைட்டு! காசு போதும். பிடிச்சிருந்தா வாங்கிடலாம். விலை கேட்டு பார்த்துட்டு போவியா என்று அறை விழாது என்று தைரியம் வர பேரம் தொடங்கியது. 250ரூன்னா காட்டுங்க என்றேன். நீங்க பொருள பாருங்க தம்பி (தோடா! கைல வாங்கிட்டா வேணாம் என் கிட்ட காசில்லைன்னா என்ன பண்ணுவன்னு தெரியாது எங்களுக்கு?)என்றவரை இல்லைங்க நீங்க சொல்லுங்க என்று பிடிவாதம் பிடித்து, பிடித்திருந்தால் 300ரூக்கு பைசா குறையாது என்று டீல் போட்டு என் கனவு வாக்மேன் கைக்கு வந்தது.

டீல்னு ஆனப்புறம் பழகிட்டம்ல. தைரியமா அஸி பீசுங்களா (சத்தியமா தினம் வியாபாரம் பண்றவன் கூட அவ்வளவு சரளமா அஸி சொல்லி இருக்கமாட்டான்) என்று கேட்டே விட்டேன். சொன்ன கையோடு பின்புறம் பார்க்க Made as Japan என்றிருந்தது.

அதற்குள் அவர் என்னமோ பானாசோனிக் டீலர் மாதிரி பக்கா அஸிங்க என்றதும் சிக்கிட்டியேடான்னு மனசு நொந்து போனது. ஏங்க  Made in போடாம Made asனு இருக்கு. எப்டிங்க அசிங்கறிங்க என்றேன். தம்பி, கம்பேனி பீஸ்னா டாக்ஸ், டூட்டி எல்லாம் வரும்னு இப்புடி போடுவாங்க என்று விட்ட கதையை நம்பத் தயாரில்லை என்றாலும் அடுத்த கட்டமான டெஸ்டிங்கில் இறங்கினேன்.

இத்துப்போன பேட்டரியில், தேய்ந்து போன டேப்பில் ஐம் எ டிஸ்கோ டேன்ஸர் கோரமாக கேட்டது. என்னாங்க இப்புடி என்றால், புது  பேட்டரி போடுப்பா இல்லன்னா அடாப்டர் வாங்கிக்கறியா 50ரூ என்று கொசுறு வியாபாரம் தொடங்கி, ஒரு வழியாக அடாப்டருடன் சேர்த்து 350ரூ கொடுத்து வாக்மேனுக்கு சொந்தமாகிக் கொண்டேன்..

நல்லாருக்குமாங்க என்று ஏங்கி ஏங்கி கேட்டு 10 மீட்டர் வந்தும் ஏதோ ஒரு உறுத்தல் எதையோ மறந்தாற்போல. சட்டென்று கவனம் வர, திரும்ப கடைக்கு போய் ஏங்க கண்டிப்பா அட்டு பீஸ் இல்ல தானுங்களே(அப்பாடா அட்டு கூட நமக்கு தெரியும்னு காண்பிச்சிட்டோம்ல) எனக்கேட்க, அடிக்காத குறையாக யோவ் சொல்லிட்டே இருக்கேன் பக்கா பீசுன்னு சும்மா கேட்டுகிட்டு நடைய கட்டு என்றதும் சிட்டாக விட்டாச்சு ஜூட்டு.


வரும் வழியில் நடைபாதை கேசட் கடையில் கண் பட்டதும் பாய்ந்தோடி மீதமிருக்கும் 50ரூபாயில் எம்.எஸ்ஸின் அன்னாமாச்சார்யா கீர்த்தனைகள் (டூப்ளிகேட் 12ரூ, மஸ்த்கலந்தரில் மனதைத் திருடிய நஸ்ரத் ஃபடே அலி ஃகான் ஒரிஜினல் ரூ 35) வாங்கிக் கொண்டு வந்த போது உலகம் என் கையில்.


Monday, November 23, 2009

ஆங்கிலம் படுத்தும் பாடு.

மத்திய அரசு அலுவலகங்களில் இந்த ஆங்கிலம் படுத்தும் பாடு இருக்கிறதே. வெள்ளைக்காரன் போகும்போது விட்டுச் சென்றது ஆங்கிலமும் பந்தாவும். வெள்ளைக்காரனுக்கு பந்தா இருக்கிறதோ இல்லையோ. நம்மாளுங்க அத வெச்சிக்கிட்டு படுத்துற பாடு இருக்கே. பெரும்பாலும் வி.எஸ். ராகவன் மாதிரி தமிழ்ல சொல்லி திரும்ப இங்கிலீஷ்ல தப்பா சொல்லின்னு அது பெரிய கூத்து.

ஒரு முறை நம்ம ஆய்பீசர் கூப்பிட்டு யாருக்கோ கடன் பிடித்தம் செய்து அனுப்பிய 27 காசோலைகள் குறித்த தகவல் கேட்டு வந்த கடிதத்தைக் கொடுத்து, உடனடியாக பதில் அனுப்பச் சொன்னார். தேடிப் பார்த்ததில் 3 காசோலைகள் மாற்றப்பட்டிருந்தது.

மிகுதியான 24 காசோலைகள் விபரம் போதவில்லை எனத் திரும்பி விட்டிருந்தன. அதற்கானத் தொகைக்கு ஒரு காசோலை எழுதி, விபரங்கள் கொடுத்து இதனுடன் 24 காசோலைக்கான தொகை இணைக்கப் பட்டுள்ளது என்று ஒரு கடிதம் தயார் செய்து கொண்டு போனேன்.

இந்த எழவு எழுத ஆக்ஸ்ஃபோர்டிலா படித்திருக்க வேண்டும்? வாங்கிப் படித்தவர் துடித்துப் போனார். அய்யோஓஓஒ என்றலறி யாருப்பா எழுதினா என்றார். நாந்தான் என்றேன். க்ராமரே காணோமே என்றார். அவனுக்கு க்ராமர் தேவையில்லை சார், காசோலைதான் தேவை. அது புரியும் என்றேன்.

ஹாரிபிள் ஐ சே. ஈஸ் இட் இங்கிலீஷ்? என்றார். தெரியல சார். தமிழ் இல்லை. அது தெரியும். ஏன்னா நான் 11ம் வகுப்பு வரைக்கும் தமிழ்ல தான் படிச்சேன். இந்த எழுத்தெல்லாம் இங்க வந்து ஃபைல்ல பார்த்து எழுதினது தான். இப்படியே 25 வருஷம் தள்ளிட்டேன். இனிமே எங்க போய் நான் இங்கிலீஷ் படிக்க என்றேன்.

ட்ரொயிங் என்று பெல்லடித்து ஸ்டெனோவைக் கூப்பிட்டு டிக்டேஷன் கொடுத்தார். அவனும் டைப் செய்து கொண்டுவந்தான். கையெழுத்து கிறுக்கி, இப்போ பாரு. இப்படி எழுதணும் என்றார். வாங்கிப் படித்தேன். எப்புடி இருக்கு என்றார் பெருமையாக. சார். எனக்குதான் இங்கிலீஷ் தெரியாதே. க்ராமர் இருக்கா இல்லையா தெரியலை. ஆனா தகவல் தப்பு. நான் 3 காசோலை மாத்தியாச்சு, 24 காசோலைக்கான தொகை இணைத்திருக்குன்னு எழுதுனேன். இதில 23 காசோலை மாத்தியாச்சி 3 காசோலைக்கான தொகை இணைத்திருக்குன்னு இருக்குன்னேன்.

தட் இடியட் ஸ்டெனோ என்று திட்டியபடி, திரும்ப டிக்டேஷன் கொடுத்து, திரும்ப கையெழுத்து கிறுக்கி, நீட்டி இப்பொழுது பார் என்றார். நம்ப மாட்டீர்கள். ஒரு வார்த்தை மாறாமல் நான் முதலில் எழுதியதுதான். விதியேடா என்று நகர்ந்தேன். என்னய்யா ஒண்ணும் சொல்லாம போற என்றார். நான் ஆஃபீஸ் காபியை ஒரு ஜெராக்ஸ் எடுத்து, என் கடிதத்துடன் சேர்த்து ஏன் சார், நான் எழுதி கொண்டு வந்ததை திரும்ப டிக்டேஷன் கொடுத்தா க்ராமர் வந்துடுமா? என்ற படி வெளியே வந்தேன்.

இதில் டிக்டேஷன் கொடுக்கிற அழகிருக்கே. இதப் பாருங்க புரியும்:

ம்ம். டிக்டேஷன் எடுத்துக்கப்பா. ஆஃபீஸ் அட்ரஸ் போட்டுக்க. (ஸ்டெனோக்கு தெரியாது பாரு)

ஃபைல் நம்பர் இது போட்டுக்க (அவரு சட்டையே பண்ண மாட்டாரு)

டி.ஓ.ப்பா. (சரி. சார்)

அவுங்க பேரு வந்து வந்து வந்து (5 நிமிஷம் யோசித்து) ஆர்த்தி சக்சேனா. மிசசு அவுங்க. மை டியர் போடுறதா, டியர் ஸ்ரீமதி போடுறதா.ம்ம்ம்....ம்ம்ம்ம்... சரி டியர் ஆர்த்தி போடு...இரு இரு.....அவுங்க எனக்கு சீனியரு...டியர் மிசஸ் ஆர்த்தி போடலாமா ஆர்த்தி சக்சேனா போடலாமா?ம்ம்ம்....இன்னாய்யா ஸ்டெனோ நீ. எல்லாம் நான் சொல்லணுமா?

சரி..டியர் மிசஸ் ஆர்த்தி சக்சேனா போடு (சார். மிஸஸ் சக்சேனா போட்டா போதும் சார், போன முறை அப்படித்தான் போட சொன்னீங்க)

சரி போடு... போட்டியா.. இன்னா எழுதுன படி ( எழுதினதே டியர் மிஸச் சக்சேனா தான். இதுக்கு 30 நிமிஷமாகியிருக்கும்)

போட்டியா. சரி சப்ஜெக்ட் இதுல இருக்கிறதே போட்டுக்க. ரெப்ரென்ஸ் இந்த லெட்டர் போட்டுக்க.

இப்போ மேட்டர். கைண்ட்லி ரெஃபர் டு தி லெட்டர்..இல்ல வேணாம் ப்ளீஸ் கனெக்ட் தி லெட்டர் சைடட்..சரியா வரல போலயே. எங்க படி...

இதுக்கும் மேல அப்புடியே சொன்னா P.C.ய உடைச்சிட்டு அடிக்க வருவீங்க. நிப்பாட்டிக்கிறேன்.கிட்டத் தட்ட ஒரு இரண்டு மணி நேரமாகி இருக்கும். சீக்கிரம் ட்ராஃப்ட் அடிச்சி எட்தாப்பா. (சார். லஞ்ச் டைம் வந்துடிச்சி. சாப்புடுங்க. நானும் சாப்பிட்டு கொண்டுவரேன்)

மூன்று மணி வாக்கில் ட்ராஃப்ட் வரும். கடைசி பெல் அடித்த பிறகும் விடை எழுதும் மாணவன் போல் அப்ரூவ் செய்து, சீக்கிரம் ஃபேர் காபி கொண்டு வா என்பார்.

(ஒரு மணி நேரம் கழித்து வரும் ஸ்டெனோவிடம்) ஒரு ஃபேர்காபி எடுத்துனு வர இவ்ளோ நேரமா?

எங்க சார். யூபிஎஸ் இல்ல. இங்க அப்ரூவல் வாங்க கொண்டு வரதுக்குள்ள கரண்ட் போச்சி. வந்ததும் எல்லாம் திரும்ப டைப் பண்ணி கொண்டு வந்தேன்.

எதுனா ஒண்ணு சொல்லுவ. உடனே ப்யூன் கிட்ட குடுத்து ஸ்பீட் போஸ்ட்ல அனுப்ப சொல்லு.

(அரை மணி கழித்து) ஏம்பா அனுப்பிட்டியா? கான்ஃபிடென்ஷியல்னு போட்டியா?

அய்யய்யோ இல்லை சார். இருங்க இன்னோரு காபி கொண்டு வரேன். அதுல சைன் பண்ணுங்க. அதுக்குள்ள ப்யூன் செல்லுக்கு ஃபோன் பண்ணி போஸ்ட்ல குடுக்க வேணாம், நான் வரேன்னு சொல்லிடுங்க என்று ஏக குளறுபடிகளுக்கப்புறம் போகும் அந்த லெட்டர் இப்படி இருக்கும்:

Kindly refer to the letter cited above. In this connection your attention is invited to detailed instructions already funished in this office letters of xx/xx/xxxx and xx/xx/xxxx. Since the matter is delayed for more than 15 months, and the information is required to be submitted long back , immediate reply is requested.

                                                                                                   yours sincerely

ஏங்க. இத போஸ்டர் அடிச்சி ஒட்டினா கூட யாருக்காவது புரியும்? இதில கான்ஃபிடென்ஷியல் வேற.

(டிஸ்கி: ஓஹோ. இவன் அடிச்ச கூத்த யாரோ அடிச்சா மாதிரி சொல்றான் பாருன்னு வடிவேலு சீன் மாதிரி சொல்ல வேணாம். இடுகை போடுறவன் இதுக்கா ஸ்டெனோ தேட போறேன்? இஃகி இஃகி)
-------------

Sunday, November 22, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V.3.4


என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா

அது நிஜமோ பொய்யோ. இந்த கிலி சாவர வரைக்கும் விடாது. புலி அடிக்காம போனத கிலி முடிக்கும் பன்னாட நாயே.
______________________________________________________________________________________________________
முகாம் மக்களை விடுவிப்பதாக அறிவித்திருப்பது ராஜபக்சேவின் அரசியல் சித்து விளையாட்டு!

இப்புடி உசுப்பேத்தி இன்னும் உள்ளயே வைக்கவா. பொத்திக்கிட்டு கிடங்க பரதேசிங்களா.
______________________________________________________________________________________________________
ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்

ஆமாம். 56லிருந்து ஏப்ரல் 2009 வரைக்கும் 2000 படுகொலைகள்தானாம். இது ஆவண நூலா கோவண நூலா?
______________________________________________________________________________________________________
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இலவச கல்வி: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்

உங்க காலுக்கு ஆயிரம் கும்பிடு துணைவேந்தர் ஐயா. உதவின்னா இதுதான்.
______________________________________________________________________________________________________
அகதிகள் பிரச்சனை குறித்து நான் தான் முதலில் குரல் கொடுத்தேன்: ராமதாஸ்

நீங்க ராமதாஸா இருக்கலாம். ஆனா நாங்கல்லாம் ஊக்கதாசு இல்லை. வேலையப் பாருங்க.
______________________________________________________________________________________________________
விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் என்றுமே ஆதரவாக இருந்ததில்லை: ராமதாஸ்

சரி. அவரு ஒருத்தருதானே இல்லை. மிச்ச பரதேசிங்க இத்தன பேரு நீங்கல்லாம் ஆதரவா இருந்து என்ன கிழிச்சிட்டீங்க?
______________________________________________________________________________________________________
முகாம்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும்: பசில் ராஜபக்சே

இப்பவும் கூரையின்றி திறந்தபடிதானே இருக்கு. ஆக முகாம்கள் நிரந்தரம்.
______________________________________________________________________________________________________
பொன்சேகாவைக் கொல்ல முயற்சியா ? இலங்கை மறுப்பு

ஆமாம்னாடா சொல்லப் போறீங்க.
______________________________________________________________________________________________________
வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கும் பொன்சேகா

முன்னையிட்ட தீ முப்புறத்திலே நாயே. எத்தனை குடியழித்தாய்.
______________________________________________________________________________________________________
பிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி: வைகோ

ஓஓஓஓ. இது எப்ப தெரிஞ்சது உங்களுக்கு?
______________________________________________________________________________________________________
மாவீரர் திலகம் பிரபாகரனை கருணாநிதி கொச்சைப்படுத்தி விட முடியாது:வைகோ

ஆமாங்க. மத்தபேரெல்லாமும் சேர்ந்துதான் முடியும்.
______________________________________________________________________________________________________
சிங்கள அட்டூழியம்: இரவு முழுவதும் தமிழர்களை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமை

தமிழனுக்கு மட்டும் எந்த ஆண்மையும் கிடையாதுன்னு தெரியும். ஊருக்குள்ள வந்து பண்ணாலும் அவன் இறையாண்மைதான் முக்கியம் நமக்கு.
______________________________________________________________________________________________________
பாதுகாப்புத் தேடி கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்களை அரவணைத்த அரசை அவர்கள் மறக்கக் கூடாது என்கிறார் பசில்

அட படுபாவி. மனசாட்சின்னு ஒன்னு இல்லவே இல்லையா? நீங்க பண்ணது பண்ணிட்டிருக்கிறதுக்கு பேரு அரவணைப்பா? மறக்க முடியுமா அதை.
______________________________________________________________________________________________________
நாங்கள் கேட்கும் உத்தரவாதத்தை கலைஞர் அளித்தால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்: ராமதாஸ்

என்ன அது. நீங்க தோத்தாலும் ஜெயிச்சாலும் அன்பு மணிக்கு பதவியா?
______________________________________________________________________________________________________
எந்த தேர்தலை முதலில் நடத்துவது: இந்திய ஜோதிடர்களின் பதிலுக்காக காத்திருக்கும் ராஜபக்சே

இந்த உதவி வேறயா. ரைட்டு. ராஜ் டிவி ஜோசியர்கள கூப்புடுங்கப்பா. அவனுக்கு அதாஞ்சரி.
______________________________________________________________________________________________________

Saturday, November 21, 2009

மதச் சுதந்திரம் சுற்றுச் சூழலின் எதிரியா?



தசரா பண்டிகை விழாவின்போது சாமி சிலைகளை ஆறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கரைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதாகவும், எனவே இதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் கோரி டெல்லியைச் சேர்ந்த சலேக் சந்த் ஜெயின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்  கே.ஜி. பாலகிருஷ்ணன், ஜே.எம். பஞ்சால் அகியோர் அடங்கிய பெஞ்ச் அரசியல் சட்டத்தின் 25வது பிரிவுக்கு எதிரானது என்ற அடிப்படையில், தடை விதிக்க தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மனுதாரர் இந்த பிரச்சனையை சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து விட்டதாக இன்றைய செய்தி கூறுகிறது.

தீர்ப்பை விமரிசிப்பது நமது நோக்கமல்ல. அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவு சொல்வதென்ன?

பிரிவு 25(1)ன்படி ஓவ்வொருவரும் சிந்தனைச் சுதந்திரத்துடன், சட்ட ஒழுங்கு, சுய கட்டுப்பாடு,மக்கள் நலன் மற்றும் இந்தப் பிரிவின் இதர பகுதிகளுக்குட்பட்டு தங்கள் மதக் கோட்பாடுகளை பரப்பவோ, அதன் படி நடக்கவோ, விளக்கவோ உரிமையுண்டு

பிரிவு 25(2)ன்படி இந்தப் பிரிவில் கண்டுள்ள விதிகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்ட விதிகளைப் பின்பற்றவோ அல்லது அரசு புதியதாய்

(அ)பொருளாதாரம் , நிதி, அரசியல்,  மற்றும் ஒற்றுமை குறித்த மத சம்பந்தமான நடைமுறைகளை நெறிப்படுத்தல் அல்லது மட்டுப் படுத்தல்;

(ஆ)சமுதாய நலன் மற்றும் சமுதாயச் சீரமைப்பை உருவாக்குதல் அல்லது பொது மக்கள் சம்பந்தமான இந்து மத அமைப்புக்களில் எல்லாத் தரப்பு இந்துக்களுக்கும் அனுமதியளித்தல்

ஆகியவை குறித்த சட்டங்களையோ, நெறி முறைகளையோ உருவாக்குவதைத் தடுக்காது.

இன்றைய காலக் கட்டத்தில் உலகம் முழுதும் சுற்றுப்புறச் சூழல் கேடு குறித்த விழிப்புணர்ச்சியும் அதை மீட்டெடுக்க நடக்கும் பகீரதப் பிரயத்தனமும் முக்கியமே ஒழிய, மதத்தின் எந்தக் கோட்பாடும் பின்பற்றப் படாத ஒரு நடைமுறையை அனுமதித்தல் சரியா என என்ற கேள்வி சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட ஓவ்வருவருள்ளும் எழுவது இயல்பே.

அரசுக்கு இது குறித்த முழு அதிகாரமும் இருப்பினும், வாக்கும், அரசியலுமே பிரதானமாக இருக்கும் பட்சத்தில் எந்த அரசும் இதற்கான சட்ட ஒழுங்கைக் கொண்டு வரும் சாத்தியம் இல்லை.

பணம் சம்பாதிக்கவும், பொது மக்களுக்கு இடைஞ்சலாகவும், பாதுகாப்புக்கு மிக முக்கியம் வாய்ந்த இந்த வேளையில் காவலர்களின் சேவை இதற்கு விரயமாவதும், சில பல நேரங்களில் சமூகக் கலவரத்துக்கு வழிகோலுவதாகவும் அமையும் இந்தக் காலக் கட்டத்தில் இந்தத் தீர்ப்பு அரசின் கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டாமா?

சுற்றுப்புற மாசை ஏற்படுத்தும் இரசாயனப் பொருட்கள், வண்ணங்களைப் பயன் படுத்த எந்த மதக்கோட்பாடு அனுமதிக்கிறது?

விநாயகர் சிலை என்ற பெயரில், கிரிக்கட் வீரராகவும், ஜீன்ஸ் பிள்ளையார் என்று வித விதமாக மதத்துக்கு அப்பாற்பட்ட வகைகளில் வைக்கப்படும் பிரம்மாண்டமான சிலைகள் காசு சம்பாதிப்பதற்கேயன்றி, அரசியலுக்கேயன்றி சட்டப் பிரிவு 25ன் கீழா வருகிறது?


இந்தக் கூத்தெல்லாம் சமீபத்தில்தானே பெரிய அளவில் நடக்கிறது? குறைந்த பட்சம் அரசுக்கு இதற்கான நடைமுறைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து சமுதாயத்துக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பேற்படாத வகையில் ஒரு மறு சீரமைப்புச் சட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் விவாதம் மற்றும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்ற உத்தரவாவது ஓரளவுக்கு பலன் தந்திருக்காதா?

சுப்ரீம் கோர்டின் ஃபுல் பெஞ்ச் சமுதாய நலனை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யுமா? அல்லது அரசாவது சுயமாக எதிர் சந்ததியினரின் நலன் கருதி ஏதாவது செய்யுமா?

குறைந்த பட்சம் சிலைகளின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலித்து அவற்றை சுற்றுச் சூழலுக்கு மாசில்லா வண்ணம் கரைப்பதற்கும், சுற்றுப்புறச்சூழலைக் கெடுக்கும் பொருட்களைத் தடை செய்வதற்கும் அரசு வழி செய்தாலே இந்தக் கேடு பெரிய அளவில் மட்டுப்படும்.


Friday, November 20, 2009

காதலடி நீயெனக்கு..

வானவில் தேவதை!

புகையாய்ப் ப‌னி க‌விந்த‌
ஓர் காலைப் பொழுதில்
தெளிவ‌ற்ற‌ தேவ‌தையாய்
வெண்ணிற‌ச் சூடியில்
ப‌ன்னிற‌ துப்ப‌ட்டாவுட‌ன்
நீ தூர‌த்து வான‌வில்லாய்!

அருகில் வ‌ர
க‌ருமேக‌மாய் கூந்த‌லுக்குள்
செம்ம‌தியாய் உன் முக‌மும்
அசையாத‌ கோவில் தீப‌மாய்
புருவ‌ ம‌த்தியில் தில‌க‌மும்

க‌ருவ‌ண்டுக் க‌ண்ணும்
ரோஜா நிற‌க் காது ம‌ட‌லும்
சிவ‌ந்த‌ உத‌ட்டுக்குள்
வெண்ம‌ணி முத்துக்க‌ளும்

தேன் நிற‌ச் ச‌ரும‌மும்
தாம‌ரைப்பூ நிற‌க்
கையுள்ளும்

வான‌வில்லே
வான‌வில்லேந்தி
வ‌ந்த‌தைக் க‌ண்டு
க‌ட‌க்கும் த‌ருண‌த்தில்

க‌ண்ணுயர்த்தி வின‌வினேன்
தேவ‌தையா நீயென‌
க‌ண்தாழ்த்தி
முறுவ‌லில் சொன்னாய்
உன் காத‌லியென‌!
~~~~~~~~~~~~~~~~
மையெழுத்து!

எல்லோரும் கண்ணுக்கு
மைதான் எழுதுகிறார்கள்
நீ மட்டும் எப்படி
மையல் எழுதுகிறாய்?
மையலெழுதிய கண்ணில் ஏனோ
பொய்யுமெழுதிப் போகிறாயடி
என்னைக் காணாதது போல்!
~~~~~~~~
குழந்தையானோம்!

உன் மடியில் நானும்
என் மடியில் நீயும்
உறங்கும் கணங்களில்
குழந்தையாகி
குழந்தையாக்கும்
விந்தையெங்கு கற்றாயடி செல்லம்?
~~~~~~~~~~~
உயிர்-மெய்!

உன் பெயரில் எல்லாம்
உயிரெழுத்துக்கள்
அதை உச்சரித்தே உயிர் வாழ்கிறேன்
என் பெயரில் எல்லாம்
மெய்யெழுத்துக்கள்
சொல்லிப் பாரென் காதலைச் சொல்லும்
இலக்கணம் பேசாதே என்னவளே
காதல் என்று இலக்கணத்துக்கு கட்டுப்பட்டது?
~~~~~~~~~~~~~~~
தவம்!

மோட்சம் வேண்டி
மோனத் தவமிருந்த
முனிவனைக் கடந்து போனாயா நீ?
உன் வாசம் தந்த தெளிவில்
காதலே மோட்சத்துக்கு வழியென
கதறித் தவிக்கிறான் பார்!
~~~~~~~~~~~~~~~~
என்னவள்!

யுக யுகமாய்
உன்னைக் காதலித்திருக்கிறேன் போலும்..
அதனால்தான் உன்னைக் கண்ட நொடியில்
யாரிவள் எனக்கேட்காமல்
உன்னவள் என்றதென் மனது!

-:-:-:-{}-:-:-:-

Thursday, November 19, 2009

குடிசை (ஏ)மாற்று வாரியம்!




இன்றைய செய்தி இது. சேத்துப்பட்டில் ஆக்கிரமிப்பை காலி செய்து  பறக்கும் விரைவுச் சாலை அமைக்க வழி செய்திருக்கிறார்கள். இவர்கள் குடியிருக்க மாற்றாக துரைப்பாக்கத்தில் 1300 வீடுகள் கொடுக்கப் பட்டிருப்பதாக அதிகாரி தெரிவித்தாராம். இந்த இடத்தில் ஒரு டாஸ்மாக் கடையும், பொதுக் கழிப்பிடமும் இருந்திருக்கிறது.

சரி! என்ன நடக்கும்? இவர்கள் எல்லாம் துரைப்பாக்கம் போய்விடுவார்களா? மாட்டார்கள். காரணம் இருப்பிடம் மட்டுமல்ல பிரச்சினை. இவர்கள் பிழைப்பும் இங்குதான் ஒன்றியிருக்கிறது. துரைப்பாக்கத்தில் இருக்கும் வீட்டைப் பெற்றுக் கொண்டு வாடைகைக்கு விடுவார்கள். சிலருக்கு மூன்று அல்லது அதற்கு மேலும் குடிசை மாற்று வாரிய வீடுகள் இருப்பது நிஜம்.

ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டும் மாநகராட்சி, டாஸ்மாக் கடைக்கு லைசன்ஸ் தரப்பட்டமை சுட்டிக் காட்டுவது எதை? கூவம் கரையோரம் குடியிருப்பு நிலமா இருந்திருக்கப் போகிறது? பின்னெப்படி, இவையெல்லாம் சாத்தியம்? இங்கிருந்த வீடுகளுக்கு முதலில் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவார்கள். பின்பு ஏதோ ஒரு வகையில் நிலவரி, ரேஷன் கார்டு, வீட்டு முகவரி என்று அனைத்தும் பெற்று விடுவார்கள். அவற்றைக் கொண்டு மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பும் கூடப் பெறுவார்கள்.

இந்த மாதிரி, அரசுக்குத் தேவை எனும் பட்சத்தில் மாத்திரமே நிலமீட்பு நடைபெறும். மற்ற இடங்களில் 40 வருடங்களாக இருக்கிறோம் என்று நீதிமன்றம் செல்லுவதும் நடை பெறுகிறது.

பெரும்பாலும், தூர்ந்து போன ஏரிகள், தாழ்வான பகுதிகளில் இவர்கள் ஆக்கிரமிப்புச் செய்வதும், பெருமழையில் நீர் நிரம்பிடில், கரையை உடைத்து ஊருக்குள் விடுவதும் இவர்கள் செய்யும் அட்டூழியம். சென்ற வருட மழையில் அரும்பாக்கம் MMDA காலனி என்ற மேல்தரக் குடிப்பகுதி பாதிக்கப்படும் வரை, அரசும் இவர்களைக் கண்டுக் கொள்ளவில்லை.

மாநகராட்சியின் மூக்கின் கீழ், சென்னைப் பொது மருத்துவமனையின் பின்புறம் பாலத்திலிருந்து தொடங்கி கடற்கரை சாலை வரையில் உள்ள குடிசை, இரண்டடுக்கு மூன்றடுக்கு கட்டிடங்கள் உள்ளனவே. எப்படி முடிந்தது இவர்களால்?

முளையிலேயே கிள்ளி எறியாமல், மக்கள் பணத்தை வீணடிக்கத் தயாராகும் அரசு இவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பார்ப்பது தான் காரணம்.  




Wednesday, November 18, 2009

அழுவாச்சி காவியம்



யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் சுட்டப்பட்டது


ஏங்க நான் மௌனமா அழுறது உங்களுக்கு கேக்குதாங்க. ம்கும். கேட்டுட்டாலும். ரஜனிக்கும் கமலுக்கும் விருது குடுக்கற வேலையெல்லாம் இருக்கு. டி.வில பார்த்தாவணும். உங்களுக்கு இருக்கிற வேலையில என் அழுகைய வேற தேடி கேக்கப் போறீங்களாகும். நானே சொல்லிடுறேங்க. முடிஞ்சா சேர்ந்து அழுங்க. இல்லாட்டி மா.ஆட..பாருங்க, யூ டியூப்பில.

பேப்பர் படிக்காதடா வானம்பாடின்னு பட்சி சொல்லிச்சி. கேட்டாதானே. எழவெடுத்த பேப்பர படிச்சாதான் காலைல ஒழுங்கா போவுது. மனசுக்குள்ள என்னால்லாம் வில்லங்கமா கேள்விங்க வருது?

  1. எங்க தலீவரு எவ்வளவு நிதானமா எல்லாம் யோசிச்சி வருத்தப் பட்டு அழுதா, ந்ங்கொய்யால பரதேசி மனசு கேக்குது, தலீவர கேட்டு சொல்லவாம். சகோதரன் கணக்கு கேட்டா வெளிய தள்ளுனதாலதான அவரு கட்சி ஆரம்பிச்சி, ஆதரவு குடுத்து இத்தினி வருஷம் போராடினாங்க. சமாதானமா போய் இருந்தா, தலீவரே சி.எம். ஆ இருந்திருப்பாரு. வேற வழி இல்லாம பிரபாகரன் இவரு சொல்றத கேட்டு போடுங்கம்மா ஓட்டுன்னு போராடி இருப்பர்லடா வானம்பாடி. கேளுங்குது நான் யார போய் கேக்க?
  2. மாத்தையா மேட்டரு நியாயம்தானடா மனசாட்சிங்குறேன், போடா வெண்ண, போனவாரம் தினத்தந்தில ஈழ வரலாறில வந்திச்சேடா. கிட்டு கத என்னான்னு கேள்றாங்குது.
  3. ரனில் சொன்னததானடா தலீவரு சொல்றாருங்கரேன். அவன் இருந்தப்ப என்னாடா கிழிச்சிட்டான் கேள்றா புறம்போக்குன்னு திட்டுதுங்க.
  4. சரிடா. போனது போவட்டும், எதிராளி பலம் துல்லியமா தெரிய வேணாமான்னு கேட்டது நியாயம்தானடான்னா, ஏண்டா பேமானி, ஆளுங்க போனது, ராடார் குடுத்தது, ஆயுதம் குடுத்தது உண்மைதான்னு பேப்பர்ல வருது இதெல்லாம் உங்க தலைவருக்கு தெரியுமா தெரியாதான்னு கேள்றாங்குது. 
  5. ரனில் தோத்ததால செத்தாங்களா, ராஜஎச்சைக்கு பிச்ச போட்டு இடுப்பு புடிச்சதால செத்தாங்களா கேள்றா மாங்கொட்ட மண்டையாங்குது.
  6. அட சீ! மனசாட்சியாடா நீ. கொஞ்சமாவது ஈரம் இருக்கா. இப்புடி பேசுறியேன்னா, வாணாம்பா, எனக்கு ஈரம் இல்லன்னே வெச்சிக்க. அரைநாள் உண்ணாவிரதத்துக்கு அப்புறம் எத்தினி குழந்தைங்க, பொண்ணுங்க, கிழடுங்க செத்துச்சே எல்லாமே போராடிதான் செத்துச்சா. சகோதர கட்சி கூட இணக்கமாதானே இருந்தாங்க. இப்புடி எல்லாரையும் போட்டு தள்ளாதீங்க. அதுங்கள வர விடுங்கன்னு எதுனா சொன்ன கவனம் இருக்கான்னு துப்புது.

    அதெல்லாமாவது பரவால்லைங்க. கடசியா கேட்டுது பாருங்க கேள்வி. ஏண்டா வட்டப்பாற மண்டையா, அத்தினி பேரு செத்தது தெரியல, விழாம போன ஓட்டு கணக்குதானடா தெரியுது. அதனாச்சும் கேள்றாங்குது.

    அதனால, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி நான்பாட்டுக்கு விருது நிகழ்ச்சில கேட்வாக் பார்த்து அவரை (அட மனசாட்சிங்க) தேத்திக்கிறேன். வர்ட்டா


    Tuesday, November 17, 2009

    பொட்டித் தட்டப் போன கதை -2.

    ஆக ஒரு வழியாக நெட் ஒர்க் அமைத்து, Foxpro ப்ரோக்ராம் இன்ஸ்டால் செய்து தற்குறி (அட செல்ஃப் டெவெலப்டுங்க)ப்ரோக்ராம்மர் வந்து, Master Data போட கத்து குடுத்தாரு. அதுக்கு இண்டர்ஃபேஸ் வைக்காம நேரா Foxpro  போய் Append போட்டு போட சொல்லி சொன்னதுதான் தப்பாப் போச்சி.

    Data போட்டு முடிச்சதும் மெயின் ப்ரோக்ராம் போக முடியாத படி பண்ணிட்டான். அப்புறம் அவனுக்கு அப்பப்போ ஆப்பு வெச்சி, அவன் சொன்னதுக்கு நேர்மாறா பண்ணி, நம்ம வழிக்கு அவன கொண்டு வந்த கதையெல்லாம் சொன்னா அடி விழும், வேணாம்.

    திடீர்னு ஒரு நாள், Aptech ட்ரெயினிங்குன்னு லெட்டர் வந்தது. DOS, Foxpro, Lotus அப்புறம் Word ல ட்ரெயினிங்னாங்க. பூமில கால் படாம நடக்க ஆரம்பிச்சிட்டம்ல. அதுங்க பாவம், சின்ன பசங்கள மேச்சிகிட்டிருந்ததுங்க. ஒரு கும்பலா அங்கிளுங்க ஆண்டிங்க வந்ததும் மெர்ச்சலாயிடுச்சுங்க. ஒரு மாதிரி சமாளிச்சிகிட்டு பி.சி. ஆன் பண்ண சொன்னாங்க. ஆரம்பிச்சது தலவலி.

    எல்லாருக்கும் ஆன் ஆயிடுச்சிங்களா. இப்போ நீங்க பண்ணதுக்கு பேரு பூட்டிங்னு ஆரம்பிக்கவும், ஒரு ஆண்டி எச்சூஸ்மி, சம்திங் ராங்னு பீட்டர் விட்டுச்சி. அந்த பையன் பதறி போய், ரொம்ப பவ்யமா வந்து, அவன் பீட்டர்ல என்னாச்சுன்னு கேட்டான். பூட் பண்ணா F:\> இல்லையோ வரணும். இதுல T:\> வருதேன்னிச்சே பார்க்கணும். ஒருமாதிரியா சமாளிச்சிகிட்டு, வி வில் கம் டு தட் லேடர் மேம். நவ் யூ ஹேவ் பூடட் சக்ஸஸ்ஃபுல்லின்னான்.

    பக்கத்து அங்கிள்கிட்ட கமெண்டு விட்டாங்க (நானில்ல நானில்ல). அரையும் குறையுமா படிச்சிட்டு வந்துடுறாங்கன்னு. ஆண்டி பேசிடிச்சிங்கற சந்தோசத்துல அந்தாளு எதுக்கு சொல்றாங்கன்னே புரியாம அஞ்சே நிமிசத்தில இன்ஸ்ட்ரக்டர கண்டெம் பண்ணிட்டாரு.

    எப்புடியோ அடிச்சி புடிச்சி, அவன் குடுத்த புக்கை வாங்கி படிக்க பார்த்து புது பாஷையா இருக்கேன்னு திணறி சும்மா போய்ட்டு வருவோம். வெயில் காலத்துல குளிர குளிர ஏஸி, மதியம் ஓசில கேக், பிஸ்கட்(ஹெ ஹெ கார்பரேட் ட்ரெயினின்னு பேரு எங்களுக்கு)னு 3 வாரம் ஓட நாலாவது வாரம் டெஸ்டுன்னுட்டாங்க.

    ஆண்டிமாரும், அங்கிள்மாருமா பொங்கிட்டாங்க. வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்? எல்லாம் படிச்சாச்சி படிச்சாச்சி. நாங்க என்ன வெளிய போய் வேல தேட போறமா? நீ நல்லா கத்துகுடுத்தன்னு நாங்க சொல்லிக்கறோம். நாங்க நல்லா படிச்சிட்டோம்னு நீ சர்டிஃபிகேட் குடுன்னு டீல் போட்டுட்டாங்க.

    நமக்கு குடைச்சல் ஆரம்பிச்சிடுத்து, என்னடா இது/ கம்பீட்டர் இருக்கு புத்தகம் இருக்கு, தெரிஞ்சிக்காம பொழப்பிருக்காது போலயேன்னு. என்னை மாதிரி புத்தி கெட்டு போனவன் ஒருத்தன் கூட சேர்ந்து என்ன பண்ணலாம்னு இருக்க, இன்னொரு டிபார்ட்மெண்ட்ல க்ளாஸ் எடுக்குறாங்க, ஆனா அது க்ளிப்பர்னுடாங்க. அது எதுன்னா என்ன போச்சின்னு லஞ்ச் டைம்ல கர்ம ச்ரத்தையா அட்டண்ட் பண்ணி, அந்தாள கேள்வி கேட்டு, ஒரு வழியா கத்துகிட்டது. அப்புறம் ஸ்டாண்ட் அலோன் விஷயம் மறந்து போச்சேன்னு அதுக்கு சண்ட போட்டு வாங்கியாச்சி எல்லாம் இன்ஸ்டால் பண்ணிட்டேன்.


    இந்தக் கூத்தில பூன விளையாட்டு மறந்தே போச்சு. திடீர்னு ஒரு நாள் அதிகாரி கூட ரெண்டு பரிவாரத்தோட வந்து இன்கம்டாக்ஸ் ரெய்ட் வந்தா மாதிரி செக் பண்ணுய்யான்னு கர்ஜ்ஜனை. கருப்பு பைக்காரன்( ஹி ஹி சர்வீஸ் இஞ்ஜினியருக்கு பேரு)எந்திரிலேன்னு எழுப்பி, செக்பண்ணான்.

    நாம ஒழுங்கா, ட்ரெயினிங்னு டைரக்டரி ஓபன் பண்ணி அதுக்குள்ளதான் கண்ட குப்பையும் (புக்குல அப்புடிதான் பண்ண சொல்லி இருந்திச்சி). நகத்த கடிச்சிகிட்டு நின்னுகிட்டிருக்க, சீதைன்னு சர்டிஃபிகேட் குடுத்துட்டான். அலப்பறை தீ மிதிக்கிறவன் மாதிரி தைய தையன்னு நின்னுகிட்டிருக்க அவனோட ராமன், சார் இதுலதான் சார் நிறைய கேம்ஸ், வைரஸ்னுட்டான். அப்பதான் தெரியும் சர்வருக்கு உடம்பு சரியில்லைன்னு.

    அது ஒன்னும் வேலைக்காவாம, அடுத்த நாள் வேற பி.சி.ய சர்வராக்கிட்டு (இதெல்லாம் சின்சியரா கூடவே நின்னு வேடிக்கை பார்த்தேன்) இன்னைல இருந்து நீதான் சிஸ்டம் அட்மின்னாரு. அய்யோன்னு அலறி, சார் எனக்கு ஒன்னுமே தெரியாது சார்னேன். அதனாலதான் உன்ன டேமேஜரா இருக்க சொல்றேன்.

    எல்லாம் தெரிஞ்சவன் அவனே பார்த்துக்குவான். உன்ன மாதிரி மக்குன்னா அய்யோ போச்சேன்னு ஓடி வருவ. இந்த அலப்பறை மாதிரி அரைகுறையாலதான் கஷ்டம்னு சொல்லிட்டு சர்வர் எப்புடி ஆன் பண்ணணும், ஆஃப் பண்ணனும், பேக் அப் எடுக்க பேட்ச் ஃபைல் எப்படி ஓட்டணும்னு சொல்லி குடுக்க சொல்லிட்டாரு.

    பாருங்க. மக்கா இருக்கிறதும் ஒரு க்வாலிஃபிகேஷன் கவருமெண்டுல. ஒரு ஆறு மாசம் போக சனி, ஞாயிறு எல்லாம் ஆஃபீஸ், தினசரி ராத்திரி 9, 10ன்னு Foxoro, Clipper, DBase, C ன்னு நமக்கு நாமே ப்ரோக்ராமராயிட்டம். ஒரு நாள் புயல்ல மழை பிச்சிகிட்டு ஊத்த பயம் வந்துடிச்சி. UPS ஆஃப் பண்ணாம வந்துட்டமே, லீக் ஆயி பத்திகிட்டா வம்பாச்சே. முதல் நாள் நாந்தான் பூட்டி சாவி செக்யூரிட்டிக்கு குடுத்ததுன்னு பயந்து போய், நீந்தி வந்து ட்ரெய்ன் சர்வீஸ்மட்டும் இருக்க ஆஃபீஸ் வந்தா, கணுக்கால் அளவு தண்ணி.நான் மட்டும்தான் ஆஃபீஸ்ல.

    சரி வந்துட்டம். ட்ரெய்ன் வேற கேன்ஸல். எழுதிட்டிருக்கிற ப்ரோக்ராம்ல ப்ரிண்ட் ப்ரோக்ராம் முடிச்சிடலாம்னு பண்ணிட்டிருக்க, நம்ம அதிகாரி ரவுண்ட்ஸ் வந்தாரு. யாருமே இல்லாத கடைக்கு யாருக்குடா டீ போடுறான் இவன்னு குரல் விட்டிருக்காரு. நாம திரும்பாம இருக்க, கிட்ட வந்து பின்னாடி நின்னதும் கவனிக்கல. இது வேற‌ ஒரு க்வாலிஃபிகேஷ‌னா போச்சு ந‌ம‌க்கு.

    ரெண்டு வார‌ம் போக‌, Bitech Oracle ட்ரெயினிங் 3 மாச‌ம் போய்ட்டு வாடான்னாரு. அப்புறம் ஒரு சாஃப்ட்வேர் டெஸ்டிங் கோர்ஸ்னு ஓசில‌ அதும் போய், ஒரு ச‌ர்டிஃபிகேட் தேத்தி, அடுத்த‌ வெர்ஷ‌ன் Oracleலன்னு டீம் செட்ப‌ண்ற‌ நேர‌த்துல‌ அய்யாக்கு இட‌மாற்ற‌ம். அவ‌ருக்கு ப‌தில் வ‌ந்த‌வ‌ங்க‌ளுக்கும் இவ‌ருக்கும் ஆக‌வே ஆகாது. ஆனா, இவ‌ங்க‌ளுக்கு செக் வைக்கிற‌ இட‌த்துல‌ அவ‌ரு.

    விட்றுவாய்ங்க‌ளா? நம்மாளுங்க பண்ணா சரிவராது. ப்ரொஃப‌ஷ‌ன‌லா ப‌ண்ண‌ணும்னு முடிவெடுத்து கான்ட்ராக்ட்ல‌ ப‌ண்ணாங்க‌. அவ‌ன் வேஷ்டி வேணும்டான்னா ஜீன்ஸ் கொண்டுவ‌ந்து குடுத்து இதுக்குதான் காசு வாங்கின‌து. ஆல்ட‌ரேஷ‌ன் வேணும்னா ப‌ண்ண‌லாம். வேலைய‌ப்பாருன்னு அல‌ம்ப‌ல். இன்னைக்கும் அந்த அறைகுறை தான் ஓடிட்டிருக்கு.  ந‌ம‌க்கு வேணாம்டா சாமின்னு ப‌ழைய‌ ப‌டி, கோப்பு, கோட் புக்குன்னு நாக்கு துறுத்திகிட்டு பேனா புடிச்சிட்டேன்.

    ச‌ரி ச‌ரி. த‌மாஷா இருக்கும்னு ப‌டிக்க‌ வ‌ந்துட்டு என்னா எழ‌வுடான்னு ச‌லிக்காதீங்க‌. ந‌ம்ம‌ காமெடி பீசு அதாங்க‌ த‌ங்க‌ம‌ணி இப்போ ஒரு யூச‌ர். வீட்டில வந்தா அந்தம்முணி நெட்வர்க், கனெக்ஷன், மல்டிபிள் இன்ஸ்டன்ஸ்னு எல்லாம் பீலா விடும். ந‌ம்ம‌ புள்ளாண்டான் பிசி வாங்கி, க‌னெக்ஷ‌ன் வாங்கி, ய‌ம்மா எங்க‌ உங்க‌ ப்ரோக்ராம் ஓப‌ன் ப‌ண்ணி காட்டும்மா பார்க்க‌றேன்னு பிட்டு போட்டான்.

    என்ன‌மோ இனாகுரேஷ‌ன் செரிம‌னிக்கு த‌ல‌மை தாங்குறா மாதிரி வெயிட் வ‌ரேன்னு, க‌ண்ணாடி மாட்டிகிட்டு ப‌ந்தாவா வ‌ந்து உக்காந்து ஒரு பார்வை பார்த்து, என்ன‌ பார்த்தா எப்புடீ தெரியுது? நான் என்ன‌ லூசான்னிச்சி. ஜூனிய‌ர் ரொம்ப‌ பெருமையா என்ன‌ ஒரு லுக்கு விட்டான். அவுங்க‌ம்மா எக்ஸ்ப‌ர்ட்டாம். அடுத்த‌ நிமிஷ‌ம் போட்டிச்சி குண்டு. இங்க‌ ஆல‌ம‌ர‌ம் ப‌ட‌ம் இல்லையேம்மா க‌ண்ணு. அப்புற‌ம் எப்புடி வ‌ரும்னு.(ஹி ஹி. ப்ரோக்ராம் ஷார்ட்க‌ட்கு இகான்)

    என‌க்கு சிரிப்பு தாங்க‌ல‌. அதான‌ன்னு ஒரு நோட்பேட்ல‌ டெக்ஸ்ட் ஃபைல் சேவ் ப‌ண்ணி, ஆல‌ம‌ர‌ம் இகான் போட்டு ப்ரோக்ராம் நேம் போட்டுவிட்டேன். தோ ஆல‌ம‌ர‌ம். இப்போ ஓப‌ன் ப‌ண்ணுன்னு சொன்னேன். க்ளிக் ப‌ண்ணா நோட்பேட் ஓப‌ன் ஆகுது. 2 நிமிஷ‌ம்தான். குழ‌ப்ப‌மா பார்த்த‌ ஃபேஸ்ல‌ 1000 வாட்ஸ் ப‌ல்பு.

    அப்ப‌னும் புள்ளையும் சேர்ந்து காமெடியா ப‌ண்றிங்க‌ என்ன‌ வெச்சின்னிச்சி? திரும்ப‌ அவ‌ரு பெருமையா என்ன‌ லுக்க‌, நான் நிஜ‌ம்மாவே இதுக்கு இன்ட்ரா நெட்டுக்கும் இன்ட‌ர்னெட்டுக்கும் வித்யாச‌ம் தெரிஞ்சிடுச்சா. க‌வுத்துப்புட்டாளேன்னு இருக்க‌, ஆஃபீஸ்ல‌ ச‌ர்வ‌ர் ட‌வுன் ப‌ண்ணிட்டிருப்பான்ல‌ அப்புற‌ம் எப்புடி வ‌ருமாம்னு கேட்டு, போங்க‌டா லூசுப் ப‌ச‌ங்க‌ளான்னு  போச்சே பார்க்கணும். ப‌ய‌ புள்ள‌ ஃப்ளாட்டு.

    Monday, November 16, 2009

    பொட்டித் தட்டப் போன கதை -1.

     (டிஸ்கி:ஒரு கவர்ன்மெட் ஆஃபீஸ்ல கணினிமயமாக்குறது எவ்வளவு கொடுமைன்னு புரிய வைக்கும் முயற்சி. பிடிக்கலைன்னா பேசித் தீத்துக்கலாம். சரியா!)

    அழுக்கடைந்த கோப்புக்களும், தொட்டால் உடையும் பக்கங்களுடனான சட்டப் புத்தகங்களும், நாக்குத் துருத்திக் கொண்டு தலை நிமிராமல் பக்கம் பக்கமாய் எழுதும் குறிப்புக்களும் உலகமென்றிருந்த ஒரு நாள் எல்லாம் மாறிப் போனது.

    துப்பறியும் சாம்பு படித்திருக்கிறீர்களா? அந்த அப்புராணி மனுஷன் தும்மினதெல்லாம் துப்பு, இருமினதெல்லாம் இன்ஃபர்மேஷன் என்று இன்ஸ்பெக்டர் கோபாலன் செயலாற்றித் துப்புத் துலக்கி சாம்புவை மெச்சிக்கொள்ளும் போது அந்த மனுஷன்...அட வாங்கி படிச்சி பாருங்க சார்.

    இப்பொ நான் சொல்ல வந்தது எம்பொழப்ப. எப்புடி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்னு புலம்ப வைக்கும் மாற்றம். நானும் பொட்டி தட்டியா சொந்தச் செலவில சூனியம் வச்சுகிட்ட மாற்றம். எங்க? ஜூனியர் பொட்டி தட்டிங்கல்லாம் ஜோரா ஒரு வாட்டி கை தட்டுங்கோ!ம்ம்ம்ம்ம். அது!

    ஒரு திங்க‌ட்கிழ‌மை என் அதிகாரி அறையில் க‌ருப்பாய் கேபிள் டிவி வ‌ய‌ர் தொங்கிக் கொண்டிருக்க‌, என்ன‌ இது என்றேன். தெரிய‌ல‌ங்க‌ என்று அவ‌ர் வேலையில் மூழ்கிவிட்டார். நாம‌ அப்ப‌டி பொறுப்பில்லாம‌ இருந்துட‌ முடியுமா? எங்க‌யோ விசாரிச்சி க‌ண்டு பிடிச்சி, இரைக்க‌ இரைக்க‌ ஓடி வ‌ந்து, கால‌ரா வ‌ந்துட்டுதாம்னு அந்த‌ கால‌த்துல‌ அல‌றுவாங்க‌ளே, அப்புடி வ‌ந்து சாஆஆஆஆர், க‌ம்ப்யூட்ட‌ர் வ‌ருதாம் சார்னு க‌ல‌ங்கிப் போய் சொல்றேன். அட‌ வ‌ர‌ட்டுங்க‌. க‌ம்ப்யூட்ட‌ர் இன்னா க‌ட‌வுளா? கைல‌ எழுத‌ற‌துக்கு ப‌தில் க‌ம்ப்யூட்ட‌ர் இவ்ளோதானேன்னு சொன்னாரு.

    ஓரிரு நாட்க‌ள்ள‌ ஒரு டிவி பொட்டி, ஒரு ப்ரீஃப்கேஸ் பொட்டி, அப்புற‌ம் ஒண்ணு வ‌ந்திச்சி. அந்த‌ அப்புற‌ம் ஒண்ணு எங்க‌ளுக்கு வ‌ர‌லை. திடீர்னு பார்த்தா ப‌க்க‌த்து செக்ஷ‌ன் ஜூனிய‌ர் ப‌ய‌ அல‌ப்ப‌றை ப‌ண்றான். அவ‌ரு க‌ம்பீட‌ர் க‌னெக்ஷ‌ன் குடுத்து,ஆன் ப‌ண்ணா என்ன‌மோ எழுத்தெல்லாம் வ‌ந்து C:\>னு வ‌ந்து நிக்க‌ அவ‌ன் என்ன‌மோ டைப் ப‌ண்றான். அதுல‌ என்ன‌மோ வ‌ருது.

    ச‌ரி ந‌ம‌க்கு நாமே திட்ட‌த்தில‌ ஆர‌ம்பிச்சிருவோம்னு எல்லாத்தையும் பொட்டியில‌ இருந்து எடுத்து வெச்சா, அந்த‌ ஒண்ண‌ காணோம்.அதெப்புடி ந‌ம்ம‌ ஜூனிய‌ர்கிட்ட‌ போய் அந்த‌ ஒண்ணு ஏன் த‌ர‌லைன்னு கேக்க‌ற‌து. அப்புடியே நோட்ட‌ம் விட்டா UPSனு இருக்க‌ நேர‌ போய் ந‌ம்ம‌ மூத்த‌ அதிகாரி கிட்ட‌ சார் எங்க‌ளுக்கு அப்ஸ் குடுக்க‌ல‌ சார்னேன்.

    ம‌னுஷ‌ன் ஆடிப் போய், என்னாய்யா கேக்க‌ற‌ன்னு ப‌ரிதாப‌மா கேக்க‌, ப‌க்க‌த்து செக்ஷ‌ன்ல‌ அப்ஸ் குடுத்திருக்கீங்க‌. அவ‌ன் அத‌ ப‌வ‌ர்ல‌ க‌னெக்ட் ப‌ண்ணி க‌ம்பீட‌ர‌ அதுல‌ சொருகிட்டு C:\> காட்டுறான். நான் காட்ட‌ வேணாமா? என‌க்கு அப்ஸ் வேணும்னேன்.ய‌ப்பா சாமி, நீ போடா நான் த‌ரேன்னு அனுப்பி விட்டு பின்னாடியே அப்ஸ் அனுப்பி விட்டாரு. அப்புற‌ம் பார்த்தா அது பேரு U.P.S. பாருங்க‌ ட‌க்னு எப்புடி புடிச்சிகிட்டேன்.

    அப்புற‌ம் ப‌ரிட்சையில‌ ப‌டிக்காத‌ போய்ட்டு ப‌க்க‌த்து ஆளு என்னா எழுத‌றான்னு ஒரு க‌ண்ணு அலையுமே. அப்புடிதான் நான் ப‌க்க‌த்து அல‌ப்ப‌றைய‌ பார்க்குற‌து. ம‌றுநாள் ஒரு அட்டைய‌ சொருவினான், கொஞ்ச‌ நேர‌த்துல‌ கியா கியானு ச‌வுன்ட் வ‌ர‌ பூன‌ விளையாட்டு விளையாடுறான். என்னாதுடான்னு அந்த‌ க‌வ‌ரை எடுத்தா, தொடாத‌, அப்புற‌ம் ஃப்ளாப்பி ப‌டிக்காதுன்னான்.

    ங்கொய்யாலே இவ்வ‌ள‌வுதானான்னு, நேர‌ ரிச்சி ஸ்ட்ரீட் போய்ட்டு ப‌ந்தாவா, ஒரு ஃப்ளாப்பின்னேன். கேவ‌ல‌மா பார்த்துட்டு, ஒண்ணெல்லாம் அந்த‌ பொட்டி க‌டையில‌ போய் கேளுன்னான். என‌க்கு தேவை ஃப்ளாப்பி. அது பொட்டி க‌டைன்னா என்ன‌ போச்சுன்னு போய் அங்க‌யும் ஒரு ஃப்ளாப்பின்னேன்.

    அவ‌ன் 3.5" ஆ 5.25"(பிழை சுட்டியமைக்கு நன்றி சீனா சார்) ஆன்னான். அட‌ எஞ்சாமி, இதுல‌ இப்புடி வேற‌ ஒரு உள்குத்து இருக்கோ?ன்னு திகைச்சி, ம்ம்ம்..வ‌ந்து வ‌ந்து ரெண்டும் காமி , நான் பார்க்குறேன்னு பார்த்தா ஒன்னு பெருசு, இன்னொன்னு சின்ன‌து. காசு குடுத்து வாங்க‌றோம், பெருசாவே வாங்கிக்க‌லாமேன்னு இது எவ்வ‌ள‌வுன்னா 12 ரூன்னான். சின்ன‌து 20ரூன்னான்.

    என்னா எழ‌வுடா, பெருசுன்னு அத‌ கேட்டா விலை க‌ம்மி, சின்ன‌துன்னு பார்த்தா விலை ஜாஸ்தி. ச‌ரி அதில‌ ஒன்னு இதில‌ ஒன்னுன்னு வாங்கிட்டா, நாம‌ கேனையாகாம‌ இருக்க‌லாம்ல‌ன்னு வாங்கிட்டு வ‌ந்து, ஃபளாப்பிய‌ சுத்தி முத்தி பார்த்தா ஒன்னும் காணோம். ந‌ல்ல‌ கால‌ம் ச‌ரியா போட்டாதான் உள்ள‌ போறா மாதிரி வெச்சிருந்த‌தால‌, நாலு ப‌க்க‌மும் ட்ரை ப‌ண்ண‌தில‌ ஒரு ப‌க்க‌ம் ச‌ரியா போச்சி. ஆனா C:\> வ‌ராம‌ அப்புடியே மினுக் மினுக்னு நிக்குது.

    வேற‌ விதி. அவன் கிட்ட‌யே கேட்டேன். ஏன்யா உன் மிசின்ல‌ ஃப்ளாப்பி போட்டா பூன‌ வ‌ருது. எம்மிசின்ல‌ வ‌ர‌லையேன்னு. அதுக்கு, என்னொட‌து ஸ்டேன்ட் அலோன், உன்னோட‌து நோடுன்னுட்ட்டு போய்ட்டான். க‌டுப்பாயிடிச்சி. அதெப்புடி அவ‌னுக்கு ஒன்னு எங்களுக்கு ஒரு மாதிரின்னு கேவ‌ல‌மா போச்சி. நேரா பொறுப்பான‌ அதிகாரி கிட்ட‌ போனேன்.

    சார், அதென்னா சார் அவ‌னுக்கு ஒரு மாதிரி மிசினு, எங்க‌ளுக்கு ஒரு மாதிரி மிசினுன்னு கேட்டேன். அவ‌ரு எல்லாம் ஒரே மாதிரிதான். இதில‌ என்னா வேற‌ வேற‌ன்னாரு. முன்ன‌ பின்ன‌ செத்தா சுடுகாடு தெரியும்பாங்க‌. ப‌ய‌ புள்ள‌ சொன்ன‌ ஸ்டேன்ட் அலோனுங்க‌ற‌து ம‌ற‌ந்து போச்சி. புகார‌ குடுத்துட்டு ஜ‌கா வாங்க‌ முடியுமா? ட‌க்குன்னு சொன்னேன், அவ‌ன் ஆன் ப‌ண்ணா மானிட‌ர்ல‌ முத‌ல்ல‌ ஒரு ஸ்டார் வ‌ருது. என‌க்கு வ‌ருதில்ல‌. அப்புற‌ம் அவ‌னோட‌ மிசின்ல‌ டூஸ் 6.22னு வ‌ந்து C:\> வ‌ருது. என‌க்கு அப்புடியே நிக்குதுன்னேன்.

    அடிச்சாரு பெல்லு. கூப்புடுய்யா அவ‌ன‌ன்னு கூப்பிட்டு, சின்ன‌ பொறுப்ப‌திகாரிய‌ கூப்புட்டு, என்னாய்யா பார்க்க‌ரீங்க‌. இவ‌ன் ஒரு த‌ற்குறி (அப்புடி போடுன்னு யாருய்யா க‌த்துற‌து. அப்புடி சொல்ல‌ல‌. ஹி ஈஸ் ந்யூ டு க‌ம்ப்யூட்ட‌ர்) ஆனாலும் ஹி குட் ஃபைன்ட் அவுட். டென்ட‌ர்ல‌ என‌ர்ஜி ஸ்டார் க‌ம்ப்ளைய‌ன்ட்னு போட்டு வாங்கின‌தாச்சே. அவ‌ன் சில‌து அப்ப‌டி இல்லாம‌ ப‌ண்ணி இருக்கான் பாருன்னாங்க‌.

    அதே மூச்சுல அலப்பறகிட்ட‌, ஏன்யா? உன‌க்கெப்ப‌டி ஸ்டேன்ட‌லோன் பி.சி.(ஆங் அதான் சார் அதான் சார்னு ம‌ன‌சுக்குள்ள‌ நான்) அன்ட் நாம‌ டாஸ் 6.0 (ஓஓஓ. அது டாஸோ. இது தெரியாம‌ நான் டூஸ்னு சொல்லிட்ட‌னே. சை)வாங்கினோம். உன‌க்கெப்ப‌டி 6.22. ஒரு டிஸ்க் காபி (இதென்னாடா எழ‌வு) அடிச்சி குடுன்னுட்டாரு.

    சின்னவரு, என்ன‌ த‌னியா ஓர‌ம் க‌ட்டி கூட்டிகிட்டு போய், எதாவ‌து இருந்தா இனிமே என் கிட்ட‌ சொல்லு. அவ‌ர்கிட்ட‌ போய் சொல்லி வாங்கி க‌ட்ட‌ விடாத‌ன்னு சொல்லிட்டு பார்த்தா, 12 PCல 8க்கு என‌ர்ஜி ஸ்டார் இல்ல‌. கேக்க‌ணுமா, ஹி ஹேஸ் டன் எ மார்வலஸ் ஜாப்னு மெச்சிகிட்டாங்க. அந்த ஜோர்லயே எனக்கும் என்னா எழவுக்குன்னே தெரியாம ஒரு ஸ்டேன்டலோன் குடுத்தாவணும்னேன். பின்ன பூன விளையாட்டு விளையடுறது எப்படி?

    ம்ம்ம். அது ஒரு க‌னாக்கால‌ம். இப்போ மாதிரியா. ஆன் ப‌ண்ணி விட்டா இட்லி க்ரைன்ட‌ர் மாதிரி ஊஊஊஊம்னு அரைச்சி த‌ள்ளி 10 நிமிஷ‌ம் க‌ழிச்சி விண்டோஸ்னு வ‌ந்து அப்புற‌ம் 5 நிமிஷ‌ம் க‌ழிச்சி பாஸ்வேர்ட் கேட்டு அப்புற‌ம் 5 நிமிஷ‌ம் க‌ழிச்சி அது லோடாவ‌ல‌, இது டெர்மினேட‌ட்னு வேல‌ வாங்கி டெஸ்க்டாப் வ‌ர‌துக்குள்ள‌ க‌ண்ண‌ க‌ட்டுதே. போட்ட‌மா? உசுக்குன்னு வ‌ந்து C:\>னு நிக்கும்.

    அடுத்த நாள் அந்த கருப்பு வயர கனெக்ஷன் குடுத்து, ஆன் பண்ணா F:\>னு வந்திச்சி. சர்வர்(ஹோட்டல்ல தானடா இருப்பாங்க),மெமரி (மிசினுக்கு கூடவா),ஃபார்மட்டிங், கனெக்டிவிடி, பூட்னு அவங்களுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டிக்கிறத பார்த்து மலைச்சி போய் மெது மெதுவா தெரிஞ்சிகிட்டது பெரிய ராமாயணம்.

    ஆனாலும் F:\> வந்தாலும் ஃப்ளாப்பி போட்டா பூன விளையாட்டு வரலை. நெஞ்சு பொறுக்குதில்லையேன்னு அலப்பறைகிட்ட போய், இங்க பாரு புது ஃப்ளாப்பி. எனக்கு பூன விளையாட்டு வரமாட்டங்குது. ஒன்னு வர வை, இல்லன்னா உன் ஃப்ளாப்பி குடு இத வச்சிக்கோன்னு மிரட்டுனேன்.

    விதிய‌டான்னு கேம்ஸ் காபி ப‌ண்ணி குடுத்து எப்புடி A:\> கு போய் என்னா த‌ட்டினா கேம் வ‌ரும்னு சொல்லி குடுத்தான். 2 நாள்ள‌ ப்ரோக்ராமர் வ‌ந்து, ப்ரொக்ராம்ல எப்புடி வர்க் பண்றதுன்னு சொல்லி குடுத்தாரு. அப்புறம் ஒரு மாதிரியா ஃப்ளாப்பி படிக்க மாட்றான், பூட் ஆக மாட்றான், ஃப்ளாப்பில இருந்து பூட் பண்றதுன்னு எல்லா கெட்ட வார்த்தையும் கத்துகிட்டேன்.

    குட்டி பசங்கல்லாம் தண்ணி ரெடியா வெச்சிக்கிங்கப்பா. நம்ம நெட்வர்க் கன்ஃபிகரேஷன் கேட்டு மயங்கிட போறீங்க. சர்வருக்கு நாவல் நெட்வேர் 4.0. ஹார்ட் டிஸ்க் 10 எம்.பி. (அப்புறம் 20 ஆக்கினது 2 டிஸ்க் போட்டு) மெமரி 4 எம்பி (அப்புறம் 8 ஆக்கினது) ஸ்டேன்டலோன்ல 1 எம் பி மெமரி, 5 எம் பி ஹார்ட் டிஸ்க். நெட் வர்க் ஹேங்க் ஆனா வயர ஆட்டி விட்டா போதும்.

    ங்கொய்யால. அமெரிக்காகாரன் எதுனா தப்பு பண்ணிட்டு ஊப்ஸ்னு ஒரு சவுண்டு குடுப்பான் பாரு. அத வச்சிட்டான் பேரு. தப்பு தப்பா ப்ரோக்ராம் பண்றதுக்கு பேரு ஊப்ஸ் ப்ரோக்ராமிங்னு. எல்லாம் குட்டிச் செவுரா போச்சி.

    Sunday, November 15, 2009

    மனுஷி!

    கிராமமுமின்றி நகரமுமின்றி டவுன் என்றழைக்கத்தகுந்த ஊர் அது. பிரதானமாக ஒரு கோவில். ஓரளவு கூட்டம் வரும். அந்த ஊரின் பெரும்பாலான திருமணங்கள் அங்கு நடைபெறும். நுழைவாயில் ஓரம் இரு புறமும் பிச்சைக்காரகள். எப்பொழுதும் முதலில் அமர்ந்திருக்கும் பூவாயிக் கிழவி.

    இனி சுருக்கம் விழ இடமில்லை எனும்படி கச்சலான தேகம். வெள்ளிக் கம்பி முடியை திருத்தமாகக் கட்டியிருப்பாள். வெடுக் வெடுகென ஆடிய தலையும், சற்றே கூன் விழுந்த உடலும், பூவிழுந்த கண்ணும் பாவமாய் இருக்கும். தருமம் பண்ணுங்க என்று கேட்க மாட்டாள். எதிரில் ஒரு நசுங்கிய அலுமினிய தட்டு. அதில் சில்லறையும் கொஞ்சம் இருக்கும்.

    கோவிலின் காவலாளி சரவணன். ஆட்கள் வரும்போது, ஓரமா உக்காரு, வழியடைக்காத என்று குரல் விடுவதும், வரிசையில போங்க என்று அதட்டுவதுமாயிருப்பான்.

    அன்றைக்கு ஒரு கலியாணம். பூவாயிக் கிழவி மேள சத்தம் கேட்டு, ஏம்பா சரவணா! யாரு கண்ணாலம் இன்னைக்கு என்றாள்.பொட்டிக் கட மாணிக்கம் பொண்ணுக்கு ஆத்தா. அவன் அக்கா பையனுக்கு குடுக்குறான் என்றான். யாருடா செல்வி பொண்ணா? எனக்கு சொல்லலப்பா அவன். நல்ல பொண்ணுப்பா அது. கோவிலுக்கு வரசொல்ல எல்லாம், என் கிட்ட பேசாம, நாலணா குடுக்காம போவாது என்றாள்.

    ம்கும். துட்டு குடுக்கிற பார்ட்டி மட்டும் கவனமிருக்கும் உனக்கு. உங்கூட பேச நேரமில்ல நீ கெட என்றபடி, ஓரமா உக்காரு, வழிய அடைக்காத, வரிசையா போங்க என்று தன் வேலையைத் தொடர்ந்தான். திடீரென மேள சப்தம் நிற்க கச முசவென்று ஆரம்பித்து அழுகையும், வசவுமாய் கேட்கத் தொடங்கியது.

    இன்னாடி நடக்குது. சண்டையா என்றபடி, ஏப்பா சரவணா என்னா பாருப்பா என்றாள் கிழவி. பதிலில்லாமல் போகவே பேசாமலிருந்தாள். சிறிது நேரத்தில் திரும்பவும் ஓரமா உட்காரு என்று குரல் வர, சரவணா, என்னாவாம் என்றாள். போ கிழவி, மாணிக்கம் கெடந்து அழுவுறான். கடன உடன வாங்கி கலியாணம் பண்றான். தங்கம் விலை எங்கயோ போயிடிச்சி. 2 சவரன் குறையுதாம். அவன் மாமன் கலியாணத்த நிறுத்திட்டு காசு வந்தப்புறம் வெய்யின்னு பேசுறான் புறம்போக்கு.

    யாரு சொல்றதும் கேக்க மாட்டங்குறான். மாமா அக்காவ குடுத்துருக்கேன். பொண்ணையும் உன் வீட்டுக்குதான் அனுப்புறேன். கொஞ்சம் பொறுத்துக்க மாமா. ஊருக்குள்ள மானம் போய்டும்னு அழுறான். அவன் கேக்கமாட்டன்னு அடம் புடிக்கிறான். மனுசனா இவன்லாம் என்றபடி ஓரம், வரிசை என தன் வேலையைப் பார்த்தான்.

    தட்டுத் தடுமாறி எழுந்தாள் கிழவி. காலடியில் கிடக்கும் அழுக்குப் பையைத் தூக்கிக் கொண்டாள். சரவணா என்ன இட்டுனு போ அவனாண்ட என்றாள். தோ! கம்னு கெட. ஊரு பெருசுங்க சொன்னாலே கேக்க மாட்றான்! நீ போயி என்னா பண்ணப் போற? என்றான். அப்பிடி சொல்லாதப்பா, கண்ணு தெரிலன்னு தானே கேக்குறேன், இட்டுனு போப்பா என்றாள்.

    மணியக்கார் பார்த்தா என் வேலைக்கு ஓலை கிழவி. கிட்ட கொண்டு போய் விட்டுட்டு வந்துடுவேன். அங்க போய் பிச்ச கேட்டு எனக்கு வேட்டு வெச்சிடாத என்றபடி பம்மி பம்மி கொண்டு போய் விட்டான். என்னாப்பாஅங்க கூச்சலு, எங்க மாணிக்கம் என்றபடி வந்த கிழவியை ஏளனமாக பார்த்தது கும்பல்.

    மாணிக்கம் பேச முடியாமல் விம்மி வெடித்து அழுதான். மாணிக்கம் அழுவாத. எங்க உம்மாமன்? கூப்பிடு என்றது கிழவி. ஏ கிழவி. பிச்சைக்காரி சொல்லி கேக்குற அளவுக்கு இங்க யாருமில்ல. உன் லிமிட்ல ஒழுங்கா போயிடு. இது எங்கூட்டு பிரச்சினை என்றான் மாமன்காரன்.

    கோவப்படாதப்பா. மாணிக்கம் ஏமாத்தமாட்டான். சிறுசுங்களைப் பிரிக்காத என்றபடி இருக்க, கும்பலில் ஒரு இளவட்டம், ஏன் நீ குடுப்பியா? அவருக்கா கேக்குறாரு. நாளைக்கு நாலு இடம் போக வர ஒரு மருவாதி வேணாம். ஒரு செயினுக்கு கதியில்லைன்னா கலியாணம் பண்ண ஏமாளிங்களா நாங்க என்றான்.

    எங்கிருந்துதான் வ‌ந்ததோ கிழவிக்கு ஆவேச‌ம். நிறுத்துடா நாயே. ப‌த்து ச‌வ‌ர‌ன் போட்டுனு வ‌ரேன். என்ன‌ க‌ட்டிக்கிறியாடா. பேமானி. வ‌ய‌த்துக்கு இல்லாம‌ இருட்டில‌ நின்னு உட‌ம்ப‌ விக்கிற‌வ‌ளுக்கு பேரு விப‌ச்சாரி.அவ பண்றது விபச்சாரம்.  பட்ட பகல்ல ஊரைக்கூட்டி உன் புள்ள‌ சுக‌த்துக்கு ஒருத்திய‌ க‌ட்ற‌துக்கு அவ‌ ந‌கை கொண்டு வ‌ர‌து போற‌லைன்னு க‌லியாண‌த்த‌ நிறுத்துன்றியே, நீ ப‌ண்ற‌துக்கு பேரு என்ன‌டா?

    இந்தாடா இதைப் பிடி என்று ந‌சுங்கிய‌ த‌ட்டை நீட்டினாள். மிர‌ண்டு போய் வாங்கிய‌வ‌னின் த‌ட்டில் அழுக்குப் பையிலிருந்து நூறும் ஐந்நூறுமாய் நோட்டுக்க‌ளைக் கொட்டினாள். எடுத்துக்கடா! எதுக்குன்னே தெரியாம சேர்த்து வச்சது. பிச்சை எடுத்த‌ காசுன்னு பொன்னு குடுக்காம‌ போயிட‌ மாட்டான். எவ்வ‌ள‌வு வ‌ருதோ வாங்கிக்க‌. மிச்ச‌ம் மீதி இருந்தா என் செல்விக்கு மொய்யின்னு எழுதிக்க‌.

    முகூர்த்த‌ம் தாண்ட‌ முன்ன‌ க‌லியாண‌த்த‌ ந‌ட‌க்க‌ விடு. மாணிக்க‌ம்! என்ன‌ வாச‌ல் வ‌ரைக்கும் கொண்டு போய் விடுப்பா. ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ணிகினு இருந்தா ம‌த்யான‌ம் பூவாவுக்கு நீ என்னா க‌லியாண‌ சாப்பாடா குடுக்க‌ போற‌ என்ற‌வ‌ளின் காலைக் க‌ட்டிக்கொண்டு க‌த‌றினான் மாணிக்க‌ம்.

    Saturday, November 14, 2009

    நறுக்குன்னு நாலு வார்த்த V 3.3

    பிரணாப் முகர்ஜி தீடீர் கொழும்பு பயணம்

    கலக்க ஆரம்பிச்சிடுச்சி டோய்!
    ________________________________________________________________________________________________
    தமிழ்க்கைதிகளை தாக்கிய சிங்கள கைதிகள்

    ஆக சிங்களக் கைதிகள் கூட‌ சுதந்திரமாத்தான்யா இருக்காய்ங்க.

    ________________________________________________________________________________________________
    ராஜபக்சே அதிரடி:பொன்சேகாவின் உறவினர்கள் பணிநீக்கம்

    ஆர்மில கூட சட்டம், முறைன்னெல்லாம் கிடையாதாடா?

    ________________________________________________________________________________________________
    நாட்டுக்கு நான் செய்த பங்களிப்பை மறந்து அரசுத் தரப்பு எனக்கு சூட்டிய பட்டம் "துரோகி" : சரத் பொன்சேகா

    ஒரு பாதி வெளிய வந்துடுச்சி. மீதிய நீ சொல்லுடி!

    ________________________________________________________________________________________________
    அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மியன்மார் ஜனாதிபதி பாராட்டியுள்ளாராம்

    ரொம்ப பெருமை பட்டுக்க வேண்டியதுதான். உங்களுக்கு மூத்தவனாச்சே.

    ________________________________________________________________________________________________
    எம்மவர்களின் கூற்றுக்கள் காரணமாகவே அமெரிக்க போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துகிறது – கோதபாய

    கூத்தடிச்சிட்டு கூறுனது தப்புன்னா எப்புடி?
    ________________________________________________________________________________________________
    இலங்கை வருகிறார் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர்

    வந்து? நூறாவது தடவையா கோரிக்கை விட்டு போவாரு. இவன் புளுவறான்னுவான்.

    ________________________________________________________________________________________________
    இலங்கை அகதிகளுக்கு படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை: ஸ்டாலின்

    இது சொல்லவே இவ்வளவு வருஷம். பேரன் பேத்திங்களுக்கு கிடைச்சிடுமா?

    ________________________________________________________________________________________________
    கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவிக்கு விமானப்படைத் தளபதியின் பெயர் பரிந்துரை

    அடுத்த‌ ப‌லிக‌டாவா? இல்ல‌ செக் மேட்டா?
    ________________________________________________________________________________________________
    சரத் பொன்சேகாவுக்கு இன்னும் உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லையாம்

    ம்கும். இனிமே உத்தியோக‌மே இல்லையாம். இதுதான் குறையோ?
    ________________________________________________________________________________________________
    எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குகின்றது: அரசாங்கம்

    என்னா ஏத்தம் பாரு. எங்கூரு மார்வாடிங்களே தேவலையேடா? இப்பவாச்சும் உறைக்குமா?
    ________________________________________________________________________________________________
    இலங்கை செல்லும் வழியில் சென்னை வந்த பிரணாப் முகர்ஜி: பொன்முடியுடன் சந்திப்பு

    ஏன்? த‌லைவ‌ர‌ பார்க்க‌ முடிய‌லையோ?
    ________________________________________________________________________________________________
    காங்கிரஸில் கறுப்பு ஆடுகள்:EVKS ஆவேசம்

    எல்லாம் செம்மறியாடா இருந்துட்டா வ‌ச‌தி. இல்ல‌?
    ________________________________________________________________________________________________
    பிரபாகரனுடன் 27 நாட்கள் தங்கி இருந்தேன்: வைகோ

    இத‌யே சொல்லிட்டிருந்து ஆக‌ப் போற‌தென்ன‌?
    ________________________________________________________________________________________________
    இலங்கையில் மீண்டும் அரசுக்கு எதிரான இயக்கங்கள் தோன்றும்:பொன்சேகா

    இதுல‌ இருந்தே தெரிய‌ல‌. நீ ட‌ம்மி பீசு. ந‌ட‌த்துற‌துக்கு ஆளிருக்காங்க‌ அவ‌னுக்கு.
    ________________________________________________________________________________________________
    கரீனாகபூர் வீட்டுக்கு சேலையுடன் குவிந்த சிவசேனா தொண்டர்கள்

    குப்பத்துல மாத்து துணியில்லாம இருக்குறவங்களுக்கு குடுக்க மாட்டானுங்க.
    ________________________________________________________________________________________________
    மதுகோடா தலைமறைவு:அதிகாரிகள் அதிர்ச்சி
      
    விட்டுப் பாரு என்னா பண்றேன்னு வடிவேலு மாதிரி சொல்லிட்டு ஓடிட்டானா?
    ________________________________________________________________________________________________
    ராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடும் என்று பயப்படுகிறார் ராஜபக்சே: பொன்சேகா

    சான்ஸே இல்ல புண்ணு. பாதி பேரு பயத்துக்கும் மீதி பேரு காசுக்கும் வேலை செய்யுறதுக்கு பேரு ராணுவமில்லை. இதுல‌ புர்ச்சி வேற‌.
    ________________________________________________________________________________________________
    மாணவிகளை ஈவ்டீசிங் செய்த போலீஸ் கைது

    மாக் ட்ரில்னு சொல்லிடுவானுங்கோ

    ________________________________________________________________________________________________
    தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்து விடாமல் இருக்க யாரிடம் நாம் முறையிடுவது என்றே தெரியவில்லை’’என்று கலைஞர் கூறியுள்ளார்.

    காப்பாத்துங்கய்யானு எல்லாரும் கெஞ்சினப்ப சொக்கு பேசிட்டா, சிதம்பரம் பேசிட்டான்னு சொன்னபோது பழமொழி மறந்துடுச்சோ?
    ________________________________________________________________________________________________
    இடைத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம் என்று முடிவெடுத்தால் நாங்கள் போட்டியிடுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    ங்கொய்யாலே. ம‌த்த‌ தேர்த‌லுக்கு இப்புடி சொல்லுவாரா இவ‌ரு.
    ________________________________________________________________________________________________
    நாளை டாக்டர் பட்டம் பெறுகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

    ப‌ட‌ம் அறுவைன்னு யாரும் குறை சொல்ல‌ முடியாது இனிமே!
    ________________________________________________________________________________________________
    இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: வெங்கையா நாயுடு

    அப்புடி போடு. எல்லாருக்கு சொறிய‌ற‌துக்கு இது ஒன்னு கிடைச்ச‌துடா. ப‌ர‌தேசிங்க‌ளா!
    ________________________________________________________________________________________________

    Friday, November 13, 2009

    பூவும் தலையும்!!!






    உன் மடி சாய்ந்து
    விரல் கோர்த்து
    நீ மௌனமாய் இருக்கையில்
    ஓராயிரம் அர்த்தம் தெரிகிறது!
    ஊடலுடன் மௌனமாயிருக்கையிலோ
    ஒன்றுமே புரியாமல் தவிக்கிறேன்!

    *
    முந்தானை முடிச்சு!
    உன்னுடன் நடந்த ஓர் நாள்
    சரிந்த முந்தானையை
    சட்டெனச் சரி செய்ய‌
    என் முகமுரசிப் போனதில்
    என் மூச்செடுத்து
    உன் வாசம் நிரப்பிப் போனது
    உன் முந்தானை..
    சீராய்த் துடித்த என் இதயம்
    அது முதல் நீயாய்த் துடித்தது!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    தலை:
     
    ஒரு வழியாய் லாக் ஆஃப் செய்து மணி பார்த்தாள் திவ்யா. அதிகாலை இரண்டு ஆகிவிட்டிருந்தது. ஆன் சைட் ப்ரோஜெக்ட் ஹெட்டைத் திட்டிக் கொண்டே ரிசப்ஷனுக்கு ஃபோன் செய்து கார் வந்துவிட்டதா என உறுதி செய்து கொண்டாள். மதியமே மழை பின்னி எடுத்தது கவனம் வர கலவரமாய் போர்டிகோ சேர எப்பொழுதும் வரும் டிரைவர் வரவில்லை. புதிதாய் யாரோ ஒருவன். பார்த்த மாத்திரத்தில் மனதில் நெருடல்.

    வேறு வழியில்லை, போயாக வேண்டும். அட்ரஸ் தெரியுமா? அவர் வரலைங்களா என்றபடி ஏறி அமர்ந்தாள். அவருக்கு உடம்பு சரியில்லைங்க. மெயின்ரோடு வந்த பிறகு வழி சொல்லுங்க என்றவாறு காரை ஸ்டார்ட் செய்தான். மழை மிகவும் அதிகமாக இருந்தது. வீதிகளில் அங்கங்கே வெள்ளக் காடு. பயந்தபடியே அமர்ந்திருக்க அவர்கள் அவென்யூவிற்கு செல்லும் பிரதான வீதி வந்தது. அடுத்த‌ லெஃப்டில‌ போங்க‌ என்றாள்.

    திடீரென‌ ப‌க் ப‌க் என‌த் திண‌றிய‌ கார் தானே நின்ற‌தா, ட்ரைவ‌ர் நிறுத்திவிட்டானா என்ற‌ ச‌ந்தேக‌த்துடன் இருக்க, அம்மா வண்டி போகாதும்மா. பக்கங்களா? நான் துணைக்கு வந்து விட்டு வருகிறேன். நடந்துதான்  போக வேண்டும் என்றபோது திட்டமிட்டே செய்திருக்கிறான் என்ற பயம் உறுதியானது. ஒன்றும் வேண்டாம், நானே போகிறேன் என்றவள், ஒரு முறை கணவனுக்கு ஃபோன் செய்தாள். எடுத்த பாடில்லை.

    இறங்கி கடவுளை வேண்டிய படி கனத்த மழையில் நடக்கத் தொடங்கினாள். சிறிது தூரம் சென்ற பிறகு யாரோ தொடர்ந்து வருவதைப் போல் உணர்ந்து திரும்பிப் பார்க்க, ஒருவன் ரெயின் கோட்டுடன் தொடர்வது தெரிய வேகமாக நடக்கத் தொடங்கினாள். அவனும் வேகமாகத் துரத்தத் தொடங்கினான்.

    பயத்தில், மழையிலும் கூட வியர்ப்பதும், பட படப்பாவதும் உணர்ந்து ஓடத் தொடங்கினாள். அவனும் துரத்துவது தண்ணீரில் எழும்பும் கால்தட ஒலியில் தெரிய, வேகத்தை அதிகரித்தாள். கத்தினால் கூட கேட்காத படி மழை அடித்துப் பெய்தது. இன்னும் இரண்டு வீதி கடந்தால் அவர்கள் அவெனியூ. வாழ்க்கையில் முன்னெப்பொழுதும் ஓடாத வேகத்தில் ஓடியவள், வீதி முனைக்கு வர திகைத்துப் போனாள்.

    வீதியில் ஒரு விளக்கும் இல்லை. அந்த அதிர்ச்சி தந்த சோர்வில், துரத்தி வந்தவன் நெருங்கியே விட்டான். ஒரே பாய்ச்சலில் மீண்டும் ஓடத் தொடங்கினாள் திவ்யா. ஆறாவது வீடு, வாட்ச்மேன் கதவை வேறு லாக் செய்திருப்பான். மழையில் தூங்குகிறானோ என்னவோ என மனம் தறிகெட்டோட தன் தோள் மீது துரத்தியவன் கை விழுவதை உணர்ந்தாள்.

    அடுத்த கணம் மற்றொருகை அவள் வாயைப் பொத்த, திகைத்த சில நொடியில் ஒரே தாவலில் திமிற, மழையில் அவன் பிடி வழுக்க , காப்பாத்துங்க என்று அலறியபடி ஒரே தாவாக தன் வீட்டுக் கதவருகே வந்து விட்டாள். அம்மா என்ற அலறலுடன் துரத்தி வந்தவன் விழவும், வீதியில் விளக்கு எரியவும், வாட்ச்மேன் கதவைத் திறந்து என்னாம்மா என்று ஓடி வரவும் ஒரு சேர நிகழ்ந்தது.

    வெளிச்சத்தில் பார்த்த போது துரத்தி வந்தவன் ஒரு குழியில் காலை வைத்துவிட்டான் போலும். கால் நொடித்து விழுந்ததில் பாதம் ட்விஸ்ட் ஆகி ஏறக்குறைய முதுகு பக்கம் திரும்பி இருந்தது. நீங்க போங்கம்மா, நாங்க இவனைப் பார்த்துக்கிறோம் என்ற வாச்மேனுக்கு நன்றி சொல்லி தளர்வாய் நடந்தாள் திவ்யா.

    நச் போட்டிக்கு தான் எழுதிய கதையை ஒரு முறை படித்தபின் தன் வலைப்பூவில் வெளியிட்டான் ரகு

    (பொறுப்பி: இத விட ஜெனூயினா ட்விஸ்ட்டும் திருப்பமா எப்புடி கத எழுதுறது)

    Thursday, November 12, 2009

    பரம்பரை..

    ஏய் ரமா! இங்க வா என உறுமியதில் நடுங்கிப் போய் தந்தையிடம் வந்தாள் ரமா.

    கொஞ்ச நாளா உன் போக்கு சரியில்லை. நீ மெதுவா வேலியோரம் போய் நிக்குறதும், பக்கத்து வீட்டு ராஜா திருட்டுத் தனமா வேலியோரம் வந்து நிக்குறதும் முனகி முனகி பேசிக்கறதும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்ன நடக்குது அங்க என்றார்.

    மெதுவாக, எனக்கு அவனப் பிடிச்சிருக்கு என்றாள் ரமா.

    என்னது?  என்று அடித்தொண்டையிலிருந்து உறுமி, அடியே இங்க பாரு உம்பொண்ணு பேசுறத என்றதில் அவள் தாய் ஓடி வந்து, என்னடி என்றாள். தயங்காமல் மீண்டும் சொன்னதையே சொன்னாள் ரமா. பிடித்தது சனி, தாயும் தந்தையும் மாறி மாறி கத்தினாலும் சலனமின்றி இருந்த ரமா எனக்கு அவந்தான் வேண்டும் என்றாள்.

    நம்ம ஜாதி என்ன, அவன் ஜாதி என்ன. ஏண்டி புத்தி இப்புடி போகுது உனக்கு. உனக்கு மூத்தவ இருக்கா. தலை நிமிர்ந்து பார்க்குறாளா. கொழுப்பெடுத்து திரியுது இது என்றவர், அடியே எனக்கு பொறந்தது இவளுக்கு முன்னாடி 7 பேரு. ஆம்பள புள்ள கூட இப்படி பொறுக்கியா இருக்கலை.

    இவள் மட்டும் ஏண்டி இப்படி இருக்கா என்று கூறி முடிக்கும் முன்னரே ரமாவின் அம்மா மேலே பாய்ந்து தரையில் விழுத்தி மார்பின் மேல் அமர்ந்து, என்ன பத்தி தப்பா பேசின குரவளைய கடிச்சிடுவேன் ஜாக்கிரதை என்று உறுமினாள்.

    மெதுவே எழுந்து, ராட்சசி, இப்போ என்னாடி கேட்டுட்டேன் என்று முனகி, திரும்ப ரமாவிடம், இங்க பாரு என் கண் எதிரில் என் பெண்ணை சாவக் குடுக்க ஒத்துக்க மாட்டேன். நம்ம ஜாதில எவ்வளவு நல்ல பசங்க இருக்காங்க.

    அவங்கள்ள உனக்கு யாரை பிடிச்சிருக்கோ சொல்லு, நாங்க மறுபேச்சு பேசாம ஒத்துக்குவோம். அத விட்டு அவந்தான்னு பேசி நம்ம ஜாதிக்கு கெட்ட பேரு கொண்டு வராத. உன்னால நம்ம ஜாதிக்காரங்க அத்தனை பேருக்குமே கெட்ட பேரு என்றார்.

    ரமா கோபமாக, ஜாதி என்னப்பா பெரிய ஜாதி. நம்ம ஜாதி அடையாளம் அவங்களுக்கு இல்லைன்னா அவங்க வேற ஜாதியா? நிஜமா சொல்லுங்க. அவன் கருப்புன்னு தானே உங்களுக்கு பிடிக்கலை. மினு மினுன்னு ஓங்கு தாங்கா இருக்கான்னு உங்களுக்கு அவன் மேல பொறாமை கூட இருக்கலாம். இவ்வளவு ஏன். அவங்கப்பா கூட உங்க ஃப்ரெண்ட்தானேப்பா? வாக்கிங் போறப்போ உராய்ஞ்சுகிட்டு போறப்போல்லாம் இல்லாத ஜாதி, எனக்கு பிடிச்சதால மட்டும் தெரியுதோ?

    உங்களுக்கு தெரியுமா? சீதா, ராதா எல்லாம் எவ்வளவோ ட்ரை பண்ணியும் அவன் என்னதான் லவ் பண்றான். ஏம்பா புரிஞ்சிக்க மாட்டிங்க. ஜாதி ஜாதின்னு சாவறீங்க என்று எகிறினாள் ரமா?

    நிறுத்துடி! ஜாதின்னு நான் சாவலைன்னா நீங்க ரெண்டு பேரும் செத்துடுவிங்க. உனக்கே தெரியும். என் எட்டு பசங்கள்ள உன் மேல எனக்கு தனி பாசம். இன்னும் 2 வருஷத்தில நான் போய் சேர்ந்துடுவேன். இப்போவே என்னால முடியல. முளைச்சி மூணு இலை விடலை, ஜாதி பத்தி பேசுறியா நீ. ஆமாம். ஜாதிதான் முக்கியம் இங்க.

    நண்பனா இருக்கிறது வேற. அதுக்காக அவன் பையன் கூட உன்னைச் சேர்த்து வைக்க முடியாது. சும்மா இல்லைடி, வேளா வேளைக்கு கறியும் சோறும் ஆக்கி போட, தடுப்பூசி போட, சீக்கானா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகன்னு செய்யுறது. எங்க தலை எழுத்து, முதல்ல பொறந்த ஆறும் பொறந்த கொஞ்ச நாள்ளயே போய் சேர்ந்துட்டுதுங்க. நீயாவது இருக்கியேன்னு ஆறுதலா இருந்தா, இப்படி பண்ணி சாவைத் தேடுறியே.

    இங்க பாரு, நாம எல்லாம் ஒரே ஜாதியாத்தான் இருந்தோம். நம்மளுக்குள்ள ஜாதியை உண்டாக்கி, எப்போ நம்மள வித்து பொழைக்கிறதுன்னு மனுசன் முடிவெடுத்தானோ, அன்னைக்கு ஜாதிதான் முக்கியம்னு ஆகிப்போச்சு. எங்க தாத்தன 75 ஆயிரம் குடுத்து வாங்கினான்னு சொல்லுவாரு எங்கப்பா. நீ ஆசைப் படுறியே அவங்கப்பன எனக்கு தெரிஞ்சி 1.25 லட்சத்துக்கு வாங்கினான் முதலாளி.

    எங்க‌க்கா, அவ‌ங்க‌ ஜாதிக்கார‌ன‌ ல‌வ் ப‌ண்ண‌து பார்த்துட்டு, மான‌மே போச்சேன்னு சுட்டு கொன்னுட்டாம்மா முத‌லாளி. அந்த‌ கொடுமைய‌ என‌க்கு கொடுத்துடாத‌. வேலி தாண்டி போய் நீ வாழ்ந்த‌ நேர‌மிருக்காது. அவ‌ன் கொன்னுடுவான்டா.

    வாங்க‌ வ‌ற‌வ‌ன் கிட்ட‌ ஜாதி பேரு சொல்லி, அப்பா பேரு அம்மா பேரு சொல்லி சொல்லி விப்பானுங்க‌டா. பேர‌ம் பேசினா குடுக்க‌மாட்டான்டா முத‌லாளி. பெடிகிரீன்னா என்னான்னே தெரியாத‌ புற‌ம்போக்குக்கு என் கென்ன‌ல்ல‌ இருந்து சீக்கு புடிச்ச‌ நாய‌ கூட‌ த‌ர‌மாட்டேன்னு விர‌ட்டி விட்டுடுவான்டா  என் செல்ல‌ம்.

    வ‌ய‌சான‌ கால‌த்துல‌ எங்க‌ளுக்கு இந்த‌ துக்க‌த்த‌ குடுத்துடாத‌ம்மா என்று முன‌கி அழும் தாயோடும் த‌ந்தையோடும் சேர்ந்து முன‌கி அழும் அல்சேஷ‌ன் ர‌மாவை ஏக்க‌த்தோடு பார்த்தான் ப‌க்க‌த்து வ‌லைக்குள் இருந்த‌ டாபர்மேன் ராஜா.

    (பொறுப்பி : வசந்த், பின்னோக்கியின் இடுகைகளைப் பார்த்ததில் எனக்கும் இப்படி எழுத வருமா என சோதித்த வினை. நன்றி நண்பர்களே!)


    Wednesday, November 11, 2009

    நீ வேண்டும் என்னுடன்!

    வாழ்ந்த நேரம் மட்டும்
    வயதுக் கணக்கானால்
    நான் இன்னும் கைக்குழந்தைதான்

    அப்படி இருக்க முடிந்தால்
    எவ்வளவு நன்றாக இருக்கும்
    ஆசையாய் தூக்குவாய்
    அள்ளி அணைப்பாய்

    எப்பொழுதும் உன் மடியில்
    இருத்திக் கொள்வாய்
    கொஞ்சுவாய்
    செல்லமாய் கிள்ளுவாய்

    ஏக்கமாய்த்தான் இருக்கிறது
    ஆயினும் வேண்டாம்.
    மெதுவாய் வந்தென்
    மார்பில் சாய்ந்து
    மடியில் படுத்து
    என் கை பிரித்து
    கன்னத்தில் வைத்துக் கொள்வாயே!

    அதிகாலை வேளை
    கண் பிரிக்காமல்
    கை பிரித்து வந்து
    கட்டிக் கொள்வாயே!

    காலர் பிடித்திழுத்து
    மார்பில் புதைந்து
    மூச்சிழுத்து
    ப்தூ விடு என்பாயே!

    காத்திருந்தாலும்
    இது வேண்டுமெனக்கு
    எப்போதும்
    உன்னுடன்.

    ******

    பூக்க‌டையில் ஓர் நாள்
    புதிய‌ பூ ஒன்று பார்த்தேன்.
    ம‌னோர‌ஞ்சித‌மாம்
    நினைத்த‌ வாச‌னை
    வ‌ருமென்றாள் பூக்காரி
    மெல்ல‌ச் சிரித்த‌ப‌டி
    ந‌க‌ர்ந்தேன்
    உன் வாச‌னை
    வேறெந்த‌ ம‌ல‌ர் த‌ர‌முடியும்.

    ____/\____                                                                                                                                              

    Tuesday, November 10, 2009

    விதியை எள்ளும் விதி!

    வணக்கம்பா! நல்லாருக்கியா. என்ன தெரியுதா என்றபடி வந்தார் ரிடையரான என் சீனியர். வாங்க‌ சார். உட்காருங்க‌ என்று அம‌ரச் செய்து ஏதாவ‌து உத‌வ‌ முடியுமா என்றேன். பெரிய‌ உத‌வி ப‌ண்ண‌ணும்பா. ரொம்ப‌ புண்ணிய‌மா போகும் என்றார். அதுக்கென்ன சார் பண்ணா போச்சு என்று வாய் விட்டு விட்டேன், வேதாளம் கேட்கும் கேள்வி வருமெனெத் தெரியாமல்.

    கிருஷ்ணன்* தெரியுமில்லையாப்பா. அவர் இறந்து 6 மாசமாச்சிப்பா. அவங்க மனைவியும் 5 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. 3 பசங்க 2 பெண் அவருக்கு. 3வது பையனுக்கு 47 வயசாதுப்பா. M.A.படிச்சிட்டு ஒரு கம்பெனில வேல செஞ்சிட்டிருந்தாம்பா. இவுங்க முதலியாரு. கூட வேலை செஞ்சிட்டிருந்த ஒரு செட்டியார் பொண்ண லவ் பண்ணிட்டாம்பா.எவ்ளோ சொல்லி பார்த்தாங்க. புடிவாதமா இருந்தான். அவுங்கம்மா சூசைட் பண்ணிக்கப் போய் காப்பாத்த பட்ட பாடு பெரும்பாடா போச்சி. ஒழிஞ்சி போடான்னு விட்டிருக்கலாம்.

    இவங்களும் ஒத்துக்கல. மென்டலாய்ட்டான். அடிக்கறது, உடைக்கறதுன்னு பெரிய தலவலியாய்டிச்சி. அவங்களும் கோயில்,குளம், பரிகாரம்னு என்னல்லாமோ பண்ணிட்டாங்க. கலியாணமானா சரியாய்டும்னு ஒரு ஜோசியன் சொன்னான்னு ஜாதகம் பார்த்து, ஒரு ஏழை பெண்ணை கலியாணம் பண்ணாங்க. ஒரு 2 மாசம் நல்லா இருந்தாம்பா. அந்த பொண்ணும் உண்டாயிடுச்சி.

    அப்புறம் பழையபடி முரடனாய்ட்டான். கீழ்பாக்கம் ஆசுபத்திரிலதான் இருந்தான் கிட்ட கிட்ட 12 வருஷம். நல்லாயிட்டான்னு டிஸ்சார்ஜ் பண்ணாங்க. வந்து 3 மாசம் நல்லா இருந்தான். இரண்டாவது குழந்தை உண்டாச்சி. ஒரு கடை வெச்சி குடுத்தாங்க. திடீர்னு முன்ன விட மோசமா மென்டலாய்ட்டான். அப்போல இருந்து கீழ்பாக்கத்துலதாம்பா இருக்கான். குணமாவாதுன்னுட்டாங்க. கை, கால் அவுத்து விட்டா காயம் பண்ணிக்கிறது, யாராவது கிட்ட இருந்தா அடிக்கிறதுன்னு ரொம்ப மோசமாயிடுச்சிப்பா.

    அந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லை. 2 பேரன் பேத்திங்க, இந்தம்மா எல்லாம் இவரு கூடதான் இருந்தாங்க. அவரும் போய் சேர்ந்துட்டாரு. அண்ணன் தம்பிங்க வீட்ட வித்து காசு தரோம்னு கையெழுத்து வாங்கிகிட்டு விரட்டி விட்டானுங்க. ஆதரவில்லாம நிக்குது. மென்டல் டிஸார்டர் இருக்கிற பையன்னா பென்ஷன் கிடைக்குமாமே. பார்த்து ஹெல்ப் பண்ணுப்பான்னாரு.

    நோண்டி நொங்கெடுத்து பார்த்துட்டேன். கலியாணமான பையனுக்கு மென்டல்னா பென்ஷன் குடுக்க வழியே இல்லை. கடவுள் எழுதுன விதியே சரியில்லையே. மனுஷன் எழுதினது சரியாவா இருந்துடும். பாருப்பா பாருப்பாங்கறாரு. என்ன பண்ணாலும் வழியே இல்லைங்க. நான் என்னங்க பண்ண? 

    பைத்தியம் புடிக்கிற அளவுக்கு லவ் இருக்கிற பரதேசின்னா யாரோ ஒரு பொண்ண கட்டினப்ப புள்ள குடுக்க மட்டும் ல‌வ் போய்டுமா? மென்டலானாலும் பரவால்ல ஜாதிதான் முக்கியம்னு ஒரு ஏழைப் பெண் வாழ்க்கையும் நாசமாக்கிட்டாரே பாவி மனுஷன். அதோட சேர்ந்து 2 குழந்தைகளும் தெருவில நிக்குது. பெத்தவங்க, தம்பியால ஒரு குடும்பம் வீதில நிக்கறது கூட உறைக்காம சொத்துக்கு ஆட்டைய போட்ட நாய்ங்க நாசமா போகாதான்னு கோவம் வந்துச்சி.

    எல்லாரும் உன்னதாம்பா கை காட்டினாங்க. அதான் உங்கிட்ட வந்தேன். நீ முடியாது வழியில்லைன்னா அது ஃபைனல்னு சொன்னாங்கப்பா. நம்ம பையனாச்சா அதான் நேரிலயே வரலாம்னு வந்தேன். அதுங்க விதி அப்புடின்னா நாம என்ன பண்ண என்று தளர்ந்து கிளம்பியபோது இயலாமையில் என் மீதே கோபம் வந்தது.

    கடவுளுக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. மனதிற்குள் வண்டாய் இந்த இயலாமை குடைய அமர்ந்திருக்க, சலூன் ஸ்ப்ரே வாசனையோடு ஹேர்டூவும், லிப்ஸ்டிக்கும் நுனிநாக்கு தங்கிலிஷூமாய் வந்தார் ஒரு அம்மணி.

    யூர் மிஸ்டர் மண்ணாங்கட்டி*. ஐம் சுப்ரஜா. ஐம் 57 நவ். மை ஃபாதர் வாஸ் எ ரிடையர்ட் புண்ணாக்கு. மை மதர் பாஸ்ட் அவே 5 இயர்ஸ் பேக். ஐம் தி ஒன்லி டாடர். மை ஹஸ்பன்ட் வாஸ் எ ஜெனரல் மானேஜர் இன் (பெரிய கம்பெனிங்க). ஹி டூ பாஸ்ட் அவே 2 இயர்ஸ் பேக். தென் மை சன் ஹூ இஸ் ஒர்க்கிங் இன் ஸ்டேட்ஸ் டுக் மீ தேர், நீ ஏம்மா தனியா இங்க இருக்கன்னு.

    லாஸ்ட் மந்த் ஃபாதர் தவறிட்டார். இனிமே இங்க என்ன இருக்கு? கொஞ்சம் ப்ராபர்ட்டி எல்லாம் செட்டில் பண்ண வேண்டி இருக்குன்னு ஐ ஸ்டேய்ட் பேக். ஃப்யூன்ரலுக்கு வந்திருந்த அப்பாவோட ஃப்ரெண்ட் சொன்னார். சின்ஸ் யூர் ய விடோ நவ், யூர் எலிஜிபிள் ஃபார் அப்பா'ஸ் பென்ஷன்மான்னுட்டு.ஹி டோல்ட் மி டு கான்டாக்ட் யுர் ஆஃபீஸ், வில் யூ ஹெல்ப் மி அவுட் மிஸ்டர் மண்ணாங்கட்டி*ன்னுச்சி.

    என்ன பண்ண விதி சார் விதி. அட அலுவலக விதியத்தான் சார் சொன்னேன். நீங்க வேலை செஞ்சிட்டிருந்தீங்களா? பென்ஷன் ஏதாவது வாங்கறீங்களா என்றேன். நோ சார், ஐ நெவர் வர்க்ட் பிகாஸ் தேர் வாஸ் நோ நீட் டுன்னிச்சி. அந்தாளு பென்ஷன் பேப்பர்ல பார்த்தா இந்தம்மா பேரு இருக்கு, கலியாணம் கட்டின பொண்ணுன்னு.

    எந்த நாய்க்கு ஹெல்ப் பண்ணவோ ரூல் போட்டிருக்கான் சார். கட்டி குடுத்த பொண்ணுன்னாலும் விதவையானா அவங்க கோடீசுவரியா இருந்தாலும், புள்ள பில்கேட்ஸா இருந்து கூடவே வெச்சி பார்த்தாலும், அப்பனோ, ஆயியோ பென்ஷன் வாங்கிட்டிருந்து டிக்கட் வாங்கிட்டா அம்மா வூட்டுக்கு திரும்பி வந்துட்டதால (விதவையானா அம்மா ஊட்டுக்கு வந்துடுவாங்கன்னு எந்த நாயி சொல்லிச்சோ) பென்ஷன் உண்டுன்னு. அப்பன் ஆத்தா போனப்புறம் அம்மா ஊடுன்னு ஒன்னு ஏதுங்க?

    ஒரு செட் ஃபார்ம் குடுத்து, எல்லாம் நிரப்பி கொண்டு வந்து கொடுங்கம்மா. பென்ஷன் வரும்னேன். ஊஊஊஊ. தேங்க் யூ சோ மச். இஃப் யூ டோன் மைன்ட் ஹவ் மச் வில் ஐ கெட்? இட்ஸ் நாட் த மனி தட் மேட்டர்ஸ் (அப்புறம் எதுக்குடி கேட்ட) இட்ஸ் ஆல் அபவுட் சென்டிமென்டல் அட்டாச்மென்ட்(ங்கொய்யாலே. அப்பன் கட்டுன வீட்ட வித்து காசாக்கி பேங்க்ல போட்டுட்டு அட்டாச்மென்ட்டா). பைல்ஸ்ல பச்சை மிளகாய் அரைச்சி தடவினா மாதிரி இருந்திச்சி. குத்து மதிப்பா மாசம் சுமார் இருவந்தஞ்சாயிரம் வரும்னேன்.

    இதுக்காகவே எமன் வந்து கூப்டாலும் சாவமாட்டன்டா நானுன்னு ஒரு சந்தோசம் மூஞ்சில தெரிய, ப்ச்.அப்பாவே போய்ட்டாரு, இது வந்து என் துக்கம் தீந்துடுமாங்கற குரல்ல‌ தட்ஸ் நாட் எ பேட் அமவுன்ட் (அட பன்னாடயே. மாசம் ஃபுல்லா உழைச்சாலும் பாதி பேத்துக்கு இந்த சம்பளம் வராதுடி) இன் ஃபேக்ட் இட்ஸ் கொய்ட் எ டீசன்ட் அமவுன்ட்டுன்னு போச்சி.

    ரொம்பப் பாவமா, அடுத்த வேளை சோத்துக்கில்லாம நிர்கதியா நிக்கிற குடும்பத்துக்கு உதவ சட்டமில்லை. அமெரிக்கால கோடில புரண்டாலும், பாழாப்போற சமூக மூட நம்பிக்கையை ஆதாரமா வெச்சி தேவையே இல்லாதவங்களுக்கு மேல மேல காசு. ஆம்பிளையா பொறக்கறதும், அரசுத் துறையில வேலை செய்யிறதும் அம்புட்டு சுலபமில்லீங்கோவ். இந்த மாதிரி சில நாள்ள மனசாட்சி இருக்கிறவன்னா கொலக்குத்தம் பண்ணவன் மாதிரி தின்ன தூங்க முடியாதுங்கோவ்.

    (ஹி ஹி. உண்மைச் சம்பவம்னா பேரு மறைச்சி போடணும்னு எழுதப் படாத சட்டம் இருக்குங்களே. மீற முடியுமா? அதான் என் பேரு மண்ணாங்கட்டி)

    Monday, November 9, 2009

    அன்றும் இன்றும்

    சின்ன விரல் பிடித்து
    சிறுநடை தான் நடந்து
    சிக்கு புக்கு காட்டி
    சிரித்த படி திரும்பி வர‌

    பச்சைப் புல் பார்க்கில்
    படுத்துப் புரண்டாடி
    சேற்றில் குதித்தாடி
    செம்மண் தூசிபட‌

    செக்கர் வானில்
    சூரியன் மறைந்தொளிய‌
    சேர்ந்தே வீடு வந்து
    செம்மையாய் குளித்திட்டு

    சோர்வாய் நான் சாய‌
    சொக்கிய நீ மடி சாய‌
    சொல்லாத கதைகளெல்லாம்
    சொன்னபடி நான் இருக்க‌

    அம்புலி காட்டி
    அன்னையவள் சோறூட்ட‌
    அயர்ந்து பூப்போல் நீ
    தூங்கியது அக்காலம்.

    சிணுங்கி அழுதிட்டால்
    செல்ஃபோன் தந்திட்டு
    விளையாட அழைத்திட்டால்
    விடியோ கேம்தான் தந்து

    தொல்லை இதுவெனவே
    தொலைக்காட்சிதான் காட்டி
    விழுங்க அடம் பிடிப்பின்
    விளம்பரம் தான் காட்டி

    சேற்றை அடைத்தாற்போல்
    சோறு பிசைந்தூட்டி
    சீக்காய்  கிட‌ந்திடினும்
    சீரிய‌ல் க‌ண்ட‌ழுவார்!

    அன்பாய் வ‌ள‌ர்த்த‌துவே
    அன்பில்லம் சேர்க்கையிலே
    க‌ட‌மைக்கு வ‌ள‌ர்த்த‌துவோ
    க‌டைசியில் கைதாங்கும்?
    ______/\______                                                                                                            

    Sunday, November 8, 2009

    தங்கமணி காமெடி பீஸா?

    தமிழ் சினிமா பார்ப்பதில் உள்ள ரிஸ்கினாலும், அலுவலகத்திலிருந்து அவசர வேலை என்று சொல்லி போய்வரும் தூரத்தில் இருந்த திரையரங்குகளில் ஆங்கிலப் படங்களே ஓடியதாலும், அரை வாக்கியம் முழுதாய்ப் புரியாவிட்டாலும், சிரிப்பவர்களோடு சிரித்து, சீட்டியடிப்பவர்களோடு அடித்து ஒரு மார்க்கமாக ஆங்கிலப் படங்களின் ரசிகனானேன்.

    ப்ரொமோஷனில் கர்நாடக வனப்பகுதியான சக்லேஷ்பூரில் பணியிலிருந்தபோது ரங்கமணியாக நேர்ந்தது. வெள்ளிக்கிழமை இரவில் கிளம்பி சனி மாலை வந்து, ஞாயிறு மதியம் கிளம்பும் மாதம் ஒரு முறை விசிட்டில் வீட்டுத் தேவைகளை கவனிக்கவும், 2 வேளை வீட்டுச் சாப்பாடு சாப்பிடவும் தவிர வேறொன்றுக்கும் நேரமில்லாமல் போனது.

    ஒன்பது மாதத்திற்குப் பிறகு மாற்றலில் சென்னை வந்த பிறகு மெதுவாய்த் தங்கமணியின் நச்சரிப்பு துவங்கியது.வீடு ஆஃபீஸ்னே இருந்தா எப்படி. வெளிய வாசல்ல கூட்டிட்டு போகமாட்டிங்களான்னு. அதுக்கென்னாம்மா வாக்கிங் போகலாம்னு ஒரு நாள் கூட்டிட்டு போனப்பதான் வாசல்லன்னா சினிமா, பீச் இத்யாதிங்கற ரகசியம் புரிஞ்சது.

    கேள்வி, கெஞ்சலாகி, கெஞ்சல் கோபமாகி, கோபம் அழுகையாகி ஒரு கட்டத்தில் தப்பாது என்ற நிலையில், சரி சினிமா போகலாமா என்று கேட்டே விட்டேன். இந்தக் காதிலிருந்து அந்தக் காது வரைக்கும் வாய் நீள என்.டி.ஆர், ஸ்ரீதேவி நடித்த வேடகாடு போகவேண்டும் என்ற விருப்பத்தை கிட்டத்தட்ட மிரட்டலாகவே சொன்னார் தங்கமணி.

    ஒரு போறாத நாளில் டிக்கட் ரிஸ்ர்வ் செய்து கொண்டு சத்யம் தியேட்டரில் அந்தப் படத்துக்கு போனோம். நான் பார்க்கும் முதல் தெலுங்குப்படம் என்பதாலும், மொழியறிவு போதாது என்பதாலும், கொஞ்சம் டென்ஷனிருந்தாலும், ஆங்கிலப் பட உத்தி கை கொடுக்கும் என்ற தைரியமும் இருந்தது.

    என் நம்பிக்கையைத் தவிடு பொடியாக்குவது போல் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என்.டி.ஆர் வசனம் பேசும்போது மேல் பல் செட் அவிழ்வதும், பொறையைக் கவ்விப்பிடிப்பது போல் அவ் என்று கவ்விக் கொண்டு அதே ஃப்ளோவில் அவர் வசனம் பேசுவதும் பார்த்ததும் சிரித்து விட்டேன்.

    ஹக் என்ற சத்தத்தோடு என் சிரிப்பு நிற்கவும்தான் தங்கமணி முழங்கையால் இடுப்பில் இடித்ததையும் சுற்றி இருப்பவர்கள் ஏன் சிரிச்சான் லூசு என்று பார்ப்பதையும் உணர்ந்தேன். சின்னத்தம்பி கவுண்டர் மாதிரி சிரிக்கக் கூடாத இடத்தில் சிரிப்பதும் சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்காமலும் இருந்தேன். அப்புறம் காமெடி சீன் வர இன்னொரு இடி. எல்லாரும் சிரிக்கவும் நானும் சிரித்தேன். ஆஹா, இனிமேல் இடிச்சா சிரிக்கணும்னு இருக்க, இடிச்ச இடத்துலயே பொக்கு பொக்குன்னு இடி விழவும் கையை மறைவாக வைத்து உட்கார்ந்தேன்.

    அந்த இருட்டிலும் திரையை விட்டு கண்ணெடுக்காமல், எப்படித்தான் விலாவில் இடித்தாள் என்று எனக்கு இன்னும் பிடி படவில்லை. ஒரு சீனில் ஸ்ரீதேவியை கொஞ்சிக் கொண்டு பேசும்போது மூன்றுமுறை பல்செட் அவிழ்ந்ததும், கவ்வியதும் அதைப் பார்த்து ஸ்ரீதேவியே சிரித்தது போல் தோன்ற அடக்க மாட்டாமல் சிரித்து விட்டேன்.

    ஒரு பாடல் காட்சியில் மழையில் நனைந்த படி ஸ்ரீதேவியும் என்.டி. ஆரும் ஆட அந்தம்முணி ஆடினா மாதிரி அடுத்த வரியில் என்.டி. ஆர் சற்றே குனிந்த படி ஆடுவதை பின்புறம் காட்ட, யானை அன்டர்வேர் போட்டுக் கொண்டு நடப்பது போல் எனக்கு கற்பனை விரிய மனுசன் சிரிக்காம இருக்க முடியுமா?

    இன்டர்வெலில் அத்தனை ரசிகர்களும் கொலை வெறியோடு என்னைப் பார்க்க, தங்கமணி கோபமாய் ஏன் சிரிச்சீங்க எனக் கேட்க சொல்லியே விட்டேன். வேணும்னுதான் பண்றீங்கன்னு சண்டைக்கு வரவும், இனிமே சினிமான்னு கேட்டா பாருங்கன்னு எகிறவும், என்.டி. ஆருக்கு தேங்க்ஸ் சொன்னேன்.

    பிறகு வீட்டில், டி.வியில் சினிமா பார்க்கும் போது காமெடி சீன் வந்தால் பளார் பளார் என்று தொடை முதுகு என்று அறை கொடுத்தபடி தங்கமணி சிரிக்கவும் மெதுவாக சந்தேகம் வந்தது. அடிக்கிறதுக்கு சாக்குன்னு அடிக்கிறாளா, இல்லை ரசிக்கிற அழகா என்று. டிவி பார்க‌ற‌த‌ நிப்பாட்டிட்டு ப‌டிக்க‌ற‌ ப‌ழ‌க்க‌த்துக்கு எஸ்கேப் ஆயிட்டேன்.

    காமெடிக்கெல்லாம் ர‌சிச்சி அடிச்சி சிரிக்கிற‌ ஆளாச்சே. காமெடி பீஸ்னு நினைச்சு ஒரு முறை குமுத‌த்தில் ஒரு ஜோக் ப‌டிச்சிட்டிருக்கிற‌ப்ப‌ கூப்பிட்டு சொன்னேன். இங்க‌ பாரு, ஒருத்த‌ன் கேக்குறான், 2 டாக்ட‌ர் பார்த்து நான் பூட்ட‌ கேஸுனு சொல்லியும் நீங்க‌ ம‌ட்டும் எப்ப‌டி டாக்ட‌ர் வைத்திய‌ம் ப‌ண்றீங்க‌ன்னா, அவ‌ரு அவ‌ங்க ஹாஸ்பிட‌ல் க‌ட்ட‌ல‌யேங்குறாருன்னு சொல்லி சிரிச்சா, ம‌ர‌ம் மாதிரி நிக்குது.

    என்னாம்மான்னேன். இதில‌ எங்க‌ ஜோக் இருக்குன்னுச்சி. கிட்ட‌த் த‌ட்ட‌ கோனார் நோட்ஸ் மாதிரி விள‌க்கியும், என்ன‌மோ என‌க்கு சிரிப்பு வ‌ர‌லைன்னு நொடிச்சிகிட்டு போனா என்ன‌ ப‌ண்ண‌? அப்புற‌ம் ஒரு இர‌ண்டு மூன்று முறை அரைநிமிட‌ ஜோக்குக்கு அரை ம‌ணி விள‌க்க‌ம்னு ஆக‌ இது எப்புடின்னு பிடிப‌ட‌வே இல்லை.

    சும்மா சொல்ல‌க் கூடாது. கொஞ்ச‌மும் சிரிக்காம‌ த‌ங்க‌ம‌ணி சில‌ ச‌ம‌ய‌ம் போடுற‌பிட்டு இருக்கே. உல‌க‌ம‌கா காமெடிங்க‌.

    என‌க்கே பேர் த‌க‌றாரிருக்க‌, கோவில்ல‌ அர்ச்ச‌னைக்கு பேரு கேட்க‌, என் பேரு ம‌ற‌ந்து போய் ம‌க‌ள்ட‌ உங்க‌ப்பா பேரு சொல்லுடின்னு சொல்ல‌, அர்ச்ச‌க‌ர் சீரிய‌ஸா இந்த‌க் கால‌த்துல‌ புருச‌ன் பேரு சொல்ல‌மாட்டேன்னு இருக்கியேம்மா, க்ரேட்னு ச‌ர்டிஃபிகேட் கொடுத்த‌த‌ சொல்லுற‌தா?

    ஒக‌ன‌க்க‌ல் போய் ச‌றுக்கி விழுந்து கை ஃப்ரேக்ச‌ர் ஆகி டாக்ட‌ர் எங்க‌ம்மா எப்ப‌டி விழுந்தீங்க‌ன்னா ஒக‌ன‌க்க‌ல்ல‌  தொப்புன்னு ஊந்துட்டேன்னு சொன்ன‌த‌ கேட்டு அந்தாளு சிரிச்ச‌த‌ சொல்ற‌தா?

    மின‌ர‌ல் வாட்ட‌ர் தீந்து போச்சின்னு க‌டைக்கார‌னுக்கு ஃபோன் ப‌ண்ணி அந்தாளு திங்க‌க் கிழ‌மை போடறேன்னு சொல்லிட்டு செவ்வாய்க் கிழ‌மை வ‌ர‌, என்ன‌ங்க‌ ம‌ண்ட‌ய‌ போட்டுடுவேன்னீங்க‌ன்னு சொல்ல‌ அந்தாளு அடுத்த‌ அடி வைக்காம‌ சிலையா நிக்க‌, இன்னைக்கு செவ்வாய்க் கிழ‌மை வ‌ந்தும் நான் சொல்ற‌ வ‌ரைக்கும் போட‌ல‌யேன்னு சொன்ன‌ப்புற‌ம் உசிர் வ‌ந்து ந‌ட‌ந்த‌த‌ சொல்ற‌தா?

    எப்புடியோ வடிவேலு ஜோக் மட்டும் சரியா புரிஞ்சிடும். டைமிங்கறது இதுதானோ?