Wednesday, October 14, 2009

பெற்றால் மட்டும் பிள்ளையா?

தத்தெடுப்பது குறித்த எனது போன இடுகையில் இது சம்பந்தமான சட்ட விதிகளைப் படித்த போது ஒரு வார்த்தை மிகவும் உறுத்தியது. அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட காலக் கட்டத்தில் வேண்டுமானால் அந்த வார்த்தை சட்டப்படி சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தமோ, அதன் வலியோ உணரப்படவில்லை எனக் கருதுகிறேன். அந்த வார்த்தை 'சட்டத்திற்குப் புறம்பாக' பிறந்த குழந்தை என்பதாகும் (Illegitimate child).

அப்ப‌டியானால் ச‌ட்ட‌ப்ப‌டி பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் யார் என‌ப் பார்த்தால் திரும‌ண‌மான‌ ஒரு த‌ம்ப‌திய‌ருக்குப் பிற‌ந்த‌ குழ‌ந்தை அவ்வாறு அழைக்க‌ப் ப‌டுகிற‌து. பிற‌ப்புச் சான்றித‌ழ் பெறுவ‌த‌ற்கான‌ ப‌டிவ‌த்தைப் பார்த்திருப்பீர்க‌ள். குழ‌ந்தையின் பெய‌ர், தாயின் பெய‌ர், த‌ந்தையின் பெய‌ர் என்று இருக்குமே த‌விர‌ திரும‌ண‌மான‌வ‌ரா?, அத‌ற்குரிய‌ அத்தாட்சி இருக்கிற‌தா என்று யார் செய்த‌ புண்ணிய‌மோ கேட்காம‌ல் விட்டார்க‌ள்.

அடுத்த‌தாக‌ ப‌ள்ளியில் சேர்க்கையில் அந்த‌ப் ப‌டிவ‌த்திலும் த‌ந்தை பெய‌ர், தாயின் பெய‌ர் என்றிருக்குமே த‌விர‌ ச‌ட்ட‌ப்பூர்வ‌மான‌ பிள்ளையா? ச‌ட்ட‌த்திற்குப் புற‌ம்பான‌ பிள்ளையா என‌க் கேட்க‌ப் ப‌டுவ‌தில்லை. உத்தியோக‌ம், இன்சூர‌ன்ஸ் இன்னும் என்ன‌வெல்லாம் இருக்கிற‌தோ எங்குமே ச‌ட்ட‌ப்ப‌டியான‌/அற்ற‌ குழ‌ந்தையா என்ற‌ கேள்வியே எழும்புவ‌தில்லை.

இர‌ண்டு உதார‌ண‌ங்க‌ள் பார்ப்போம்:

1. 'அ'வும் 'ஆ'வும் காத‌ல‌ர்க‌ள். திரும‌ண‌ம் செய்துக் கொள்வ‌து என்ற‌ தீர்மான‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரிய‌வ‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ 'இ'யுட‌ன் திரும‌ண‌ம் ந‌ட‌த்தி வைக்க‌ப்படுகிற‌து. அந்த‌ உற‌வினால் 'அ'க‌ருவுற்றிருப்ப‌து ம‌றைக்க‌ப்ப‌டுகிற‌து. அவ‌ர்க‌ளுக்குப் பிற‌க்கும் குழ‌ந்தைக்கு தாய் 'அ' என‌வும் த‌ந்தை 'இ' என‌வும் ப‌திவாகிற‌து.

2. 'A'யும் 'B'யும் திரும‌ண‌ம் என்ற‌ ஓர் உற‌வு அவ‌சிய‌மில்லை என்ற‌ க‌ருத்துடைய‌வ‌ர்க‌ள். சேர்ந்து வாழ்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு 'C' என்ற‌ ஒரு குழ‌ந்தை இருக்கிற‌து. தாய் 'A ' என‌வும் த‌ந்தை 'B' என‌வும் ப‌திவாகிற‌து.

ச‌முதாய‌த்தின் க‌ண்ணில் முத‌ல் உதார‌ண‌த்தில் பிற‌ந்த‌ குழ‌ந்தை ச‌ரியான‌து. இர‌ண்டாவ‌து பிற‌ந்த‌ குழ‌ந்தை முறைய‌ற்ற‌ உற‌வில் பிற‌ந்த‌ குழ‌ந்தையாக‌ க‌ருத‌ப்ப‌டும். பிற‌கு ச‌ட்ட‌ப்ப‌டி என்ற‌ கேள்வி எப்போது எழுகிற‌து?

உதார‌ண‌த்துக்கு 'இ' த‌ன் சுய‌ ச‌ம்பாத்திய‌த்தில் உண்டாக்கிய‌ சொத்து அவ‌ருக்குப் பின் யாருக்குச் சேரும் என‌க் குறிப்பிடாத‌ ப‌ட்ச‌த்தில் ஏதாவ‌து வில்ல‌ங்க‌ம் ஏற்ப‌டின் நீதிம‌ன்ற‌த்தை நாடி ச‌ட்ட‌பூர்வ‌மான‌ பிள்ளை என‌ நிரூபிக்க‌ தாயும் த‌ந்தையும் திரும‌ண‌ம் செய்த‌ ஆதார‌ம், த‌ன்னுடைய‌ பிற‌ப்புச் சான்றித‌ழ் ஆகிய‌வ‌ற்றைக் காட்டினால் போதும்.

'அ' ம‌ற்றும் 'ஆ'வின் உற‌வை அறிந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரேனும், 'ஆ' உயிருட‌னிருக்கும் ப‌ட்ச‌த்தில் நீதிம‌ன்றத்தில் எதிர் முறையீடு செய்து, ம‌ர‌ப‌ணு சோத‌னை செய்ய‌ப்ப‌டல் வேண்டும் என‌க் கோரினாலே ஒழிய‌ ச‌ட்ட‌த்தின் முன்னும் ச‌ட்ட‌ப்ப‌டியான‌ குழ‌ந்தைதான்.

இர‌ண்டாவ‌து உதார‌ண‌த்தில், சமூகத்தின் பார்வையில் திரும‌ண‌ உற‌வில்லாம‌ல் பிற‌ந்த‌ குழ‌ந்தையாத‌லால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வ‌மாக‌, 'B'யின் குழ‌ந்தை என‌ நிரூபிக்க‌ முடிந்தாலும் ச‌ட்ட‌ப்ப‌டி ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பிற‌ந்த‌ குழ‌ந்தையாக‌த்தான் க‌ருத‌ப்ப‌டும்.

முத‌ல் உதார‌ண‌த்தில் திரும‌ண‌ம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய‌ த‌க‌ப்ப‌ன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் ச‌ட்ட‌ம், இர‌ண்டாவ‌தில் எதிர்ப்பில்லாவிடினும் ம‌றுப்ப‌து எப்படி? திரும‌ண‌ம் என்ற‌ உற‌வு தான் கார‌ண‌மா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்ப‌டியாயின் ச‌ட்ட‌ப் பிற‌ழ்வு நேராம‌லிருக்க‌ என்ன‌ ச‌ட்ட‌மிருக்கிற‌து?

எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?

ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.

இந்த நிலையில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் பிற‌ந்த‌வுட‌ன் ம‌ர‌ப‌ணுப் ப‌ரிசோத‌னை மூல‌மே ச‌ட்ட‌ப்ப‌டி பிற‌ந்த‌ குழ‌ந்தையாக‌ ப‌திய‌ப்பட வேண்டும் என‌ச் ச‌ட்ட‌ம் வ‌ர‌ ச‌முதாய‌மோ, ச‌ட்ட‌மிய‌ற்றும் அதிகார‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளோ முன் வ‌ருவார்க‌ள் என்றா நினைக்கிறீர்க‌ள்?

சமுதாய‌க் க‌ட்ட‌மைப்பு குருடா? ச‌ட்ட‌ம் குருடா?

28 comments:

சூர்யா ௧ண்ணன் said...

நல்ல பதிவு தலைவா!

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/ நல்ல பதிவு தலைவா!/

நன்றி தலைவா.

ஈரோடு கதிர் said...

அண்ணா...
என்ன ரெண்டு நாளா ரொம்ப சீரியஸான மேட்டரா இருக்கு...

ஏதும் தத்தெடுக்கிற எண்ணம் இருக்கா
(இஃகிஃகி)

கிரி said...

ஒரு சில நேரங்களில் கடுமையான சட்டம் தேவையான ஒன்றாக உள்ளது...சில சமயம் சங்கடத்தையும் கொடுக்கிறது :-(

ஈரோடு கதிர் said...

நீங்க எழுதியிருப்பதின் ஆழம், சாதாரணமாகப் புரியாது, ஆனால் அந்த சிக்கலில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பயனுள்ள ஒரு விஷயமே...

'இ'ன் சம்பந்தம் இல்லாமல் 'அ' விற்கு பிறந்த குழந்தை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

'ஏ' 'பி' இருவருக்கும் நேரடித் தொடர்பு இருந்தாலும் சட்டப்படி அது ஒத்துக் கொள்ளப் படுவதில்லை...

இதன் மூலம் திருமணம் கட்டாயமாக்கப் பட்டிருப்பது தெரிகிறது..

காலங்கள் மாறுவதால் சட்டமும் மாறுவது நலம்

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/ஏதும் தத்தெடுக்கிற எண்ணம் இருக்கா
(இஃகிஃகி)/

இல்லைங்க. நான் விரும்பினாலும் சட்டம் அனுமதிக்காது:)

vasu balaji said...

கிரி said...

/ஒரு சில நேரங்களில் கடுமையான சட்டம் தேவையான ஒன்றாக உள்ளது...சில சமயம் சங்கடத்தையும் கொடுக்கிறது :-(/

சட்டம் சட்டக் கேட்டை தடுப்பதாக அமைய வேண்டும். அது இல்லாத பட்சத்தில் சங்கடம்தான். அது மட்டுமன்றி, ஒரு சட்டம், விஞ்ஞான, சமூக மாற்றங்களுக்கேற்றவாறு ஆராய்ந்து அவ்வப்பொழுது மாறுதலுக்குள்ளாக வேண்டும்.

மரபணு சோதனையில், தாய், தந்தை அவர்களுக்குப் பிறந்த பிள்ளை என்பது கட்டாயமாக்கப் பட்டால் முறைகேடான பிள்ளை என்ற அவப்பெயர் தொலையுமல்லவா?

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...
/'இ'ன் சம்பந்தம் இல்லாமல் 'அ' விற்கு பிறந்த குழந்தை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது./

சமுதாய ரீதியில் கேள்வியே இன்றி ஏற்றுக் கொள்ளப் படுகிறது. கேள்வி வருகையில் சட்ட ரீதியாகவும் மறுக்கப் படுகிறது.

/இதன் மூலம் திருமணம் கட்டாயமாக்கப் பட்டிருப்பது தெரிகிறது../

மறைமுகமாக.

/காலங்கள் மாறுவதால் சட்டமும் மாறுவது நலம்/

சமுதாய சிந்தனையும் கட்டமைப்பும் கூட

பிரபாகர் said...

அய்யா, உங்களின் பதிவுகளிலேயே கொஞ்சம் குழப்பிய பதிவு இது. காரணம் எனது புரிந்துகொள்ளாமை. இருமுறை படித்தேன், புரிந்தது. சட்டம் இயற்றும்போது இருந்த சூழல் வேறு இப்போது இருப்பது வேறு. கண்டிப்பாய் மாற்ற வேண்டும்.

பிரபாகர்.

vasu balaji said...

பிரபாகர் said...

/அய்யா, உங்களின் பதிவுகளிலேயே கொஞ்சம் குழப்பிய பதிவு இது./

கூடியவரை குழப்பமின்றிச் சொல்ல முயற்சித்திருக்கிறேன். இது முழுமையல்ல. சமுதாய அமைப்பில் முரண்பாடுகளை யோசித்தால் இன்னும் குழம்பும். பிறகு தெளிவாகும்.

/சட்டம் இயற்றும்போது இருந்த சூழல் வேறு இப்போது இருப்பது வேறு. கண்டிப்பாய் மாற்ற வேண்டும்./

சில நேரங்களில் சட்டமாற்றத்தின் மூலமே சமுதாய ஏற்பும் சாத்தியம்.

நன்றி பிரபாகர்.

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல அலசல் அண்ணே. பழைய சட்டம் வச்சு ஓட்டிகிட்டு இருக்காங்க.

இதை எல்லாம் படிக்கணும் அப்படிங்கற அவசியம், நமது மாமன்ற உறுப்பினர்களுக்கு தோன்றுவதேயில்லை. அதனால் இதில் மாற்றம் வரும் என்றும் எனக்குத் தோன்றவில்லை.

இன்னும் 10 வருஷம் கழித்துக்கூட இந்த இடுகையை மீள் பதிவு செய்யலாம். சட்டம் அப்படியேகத்தான் இருக்கும்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல அலசல் அண்ணே. பழைய சட்டம் வச்சு ஓட்டிகிட்டு இருக்காங்க.
இன்னும் 10 வருஷம் கழித்துக்கூட இந்த இடுகையை மீள் பதிவு செய்யலாம். சட்டம் அப்படியேகத்தான் இருக்கும்./

சரியாச் சொன்னீங்க சார்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கருத்துள்ள பதிவு. இப்படி மாற்றப்பட வேண்டிய சட்டங்கள் ஏராளமாக இருக்கிறது.

vasu balaji said...

ஸ்ரீ said...

/ கருத்துள்ள பதிவு. இப்படி மாற்றப்பட வேண்டிய சட்டங்கள் ஏராளமாக இருக்கிறது./

ஆமாங்க ஸ்ரீ. நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாண்ணே, நல்ல இடுகை.

மிக ஆளமாக சில எ.கா.கள் மூலம் அழகாக விளக்கியுள்ளீர்கள். நம் சட்டங்களில் உள்ள ஓட்டைகளில் இதுவும் ஒன்றென்று நினைக்கிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

தட்த்தெடுக்க அட்வசியமா சட்ட்டத்த்தை ஃபாட்லோ பட்ணணுமா நைட்னா? இட்ல்லைன்னா முட்டியாதா?

மட்னசு போட்தும் நைட்னா எட்தையும் சாட்திக்கலாம்..

அது சரி(18185106603874041862) said...

//
சமுதாய‌க் க‌ட்ட‌மைப்பு குருடா? ச‌ட்ட‌ம் குருடா?
//

கட்டமைப்புகளுக்கு வயதாகி விட்டது...இந்த கட்டமைப்பால் ஏற்படுத்தப்பட்ட சட்டம் குருடாக இருக்க அதிக வாய்ப்புண்டு...

தமிழ் நாடன் said...

அருமையான அலசல் அண்ணே!
சட்டம் ஒரு இருட்டறைன்னு இதனாலதான் சொல்றாங்களோ?

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

/ பாலாண்ணே, நல்ல இடுகை./

நன்றிங்க செந்தில். சட்டத்தில் ஓட்டை இல்லை. நடை முறையில் மரபணு சோதனை மூலம் தான் தீர்மானிக்கிறார்கள். ஆனால் கட்டாயமாக்கினால் எவ்வளவோ பிரச்சினை குறையும்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/தட்த்தெடுக்க அட்வசியமா சட்ட்டத்த்தை ஃபாட்லோ பட்ணணுமா நைட்னா? இட்ல்லைன்னா முட்டியாதா?/

போதாது வசந்த். எந்த நேரமும் குழந்தைக் கடத்தல் சட்டம் பாயும். இல்லாமல், குழந்தைக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனா முறைப்படி தத்தெடுப்பது கஷ்டமே இல்லை. அதுவும் எழுதுவேன்.

/மட்னசு போட்தும் நைட்னா எட்தையும் சாட்திக்கலாம்../

மனச மதிக்கிற சமூகமில்லையே வசந்த். சட்டமும் இல்லை. Everything ultimately leads to bloody useless papers.

vasu balaji said...

அது சரி said...

/கட்டமைப்புகளுக்கு வயதாகி விட்டது...இந்த கட்டமைப்பால் ஏற்படுத்தப்பட்ட சட்டம் குருடாக இருக்க அதிக வாய்ப்புண்டு.../

சரியாச் சொன்னீங்க. ஆனா ஒரு ஆறுதல் சட்டம்னு வரப்போ அந்தச் சூழலில் அறிவு சார்ந்தே இருக்கிறது. உதாரணம், தத்தெடுப்புச் சட்டம் இந்துக்களான பிரிவிலும் தத்த ஹோமம் கட்டாயமில்லை என்ற விதி மிகவும் பாராட்டத் தக்கது.

vasu balaji said...

தமிழ் நாடன் said...

/அருமையான அலசல் அண்ணே!
சட்டம் ஒரு இருட்டறைன்னு இதனாலதான் சொல்றாங்களோ?/

ஆமாங்க. சமயத்துல நாமதான் விளக்கேத்தி காட்ட வேண்டியிருக்கு நீதி கிடைக்க. நன்றிங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

சமூக அக்கறையுடன் கூடிய பயனுள்ள இடுகை.. நாம் சில சட்டங்களை இன்றைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றியமைப்பது அவசியம்..

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/சமூக அக்கறையுடன் கூடிய பயனுள்ள இடுகை.. நாம் சில சட்டங்களை இன்றைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றியமைப்பது அவசியம்../

நன்றிங்க! எல்லாருடைய கருத்தும் ஒரே மாதிரியா இருக்கிறது மகிழ்ச்சியா இருக்குங்க.

இது நம்ம ஆளு said...

நல்ல பதிவு !

;)

vasu balaji said...

இது நம்ம ஆளு said...

நல்ல பதிவு !

;)

நன்றிங்க.

Radhakrishnan said...

நல்லதொரு இடுகை.

'அம்மா வந்து சொன்னால் தான் அப்பாவின் பெயர் தெரியுமடா' எனும் பாடல் வரியும் இருக்கிறது.

விஞ்ஞான முன்னேற்றத்தினால் இது போன்ற விசயங்கள் பற்றிய எண்ணம் இனிமேல் அதிகரிக்கும்.

நன்றி ஐயா.

vasu balaji said...

Rads said...

/ நல்லதொரு இடுகை.

'அம்மா வந்து சொன்னால் தான் அப்பாவின் பெயர் தெரியுமடா' எனும் பாடல் வரியும் இருக்கிறது.

விஞ்ஞான முன்னேற்றத்தினால் இது போன்ற விசயங்கள் பற்றிய எண்ணம் இனிமேல் அதிகரிக்கும்.

நன்றி ஐயா./

நன்றிங்க