ஓய்ச்சலாய் இருந்த ஓர் தினம்
கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமான
ஓர் மவுனப் போராட்டம்.
ஏங்கத் தொடங்கியதென் மனது.
இழந்தவர்களைத் தேடி அல்லலுற்றது!
கிடைக்காதெனத் தெரிந்தும்
கிளர்ந்தெழுந்தடிக்கும் வேகம் தாங்கவில்லை.
சிறுவயதில் இழந்த என் அப்பனை
வேண்டியதென் உள்ளம்.
இப்போதிருந்தால் என்ன செய்திருப்பேன்?
செய்திருப்பேன் என்பதை விட
இந்த நொடி என்ன செய்யத் துடிக்கிறது என் மனம்?
வெளியே கொஞ்சம் நடக்க அழைக்கலாம்.
முடியாதென்பவரை நான் பிடித்துக் கொள்கிறேன்
வாருங்கள் என்று அழைக்கலாம்.
கொஞ்ச தூரம் எனக் கெஞ்சலாம்.
தவிர்க்கமாட்டாமல் வரும் என் தகப்பனை
பாதி வழியில், எனக்கு ஆசையாய் இருக்கிறதென்று
சிறுவயதில் கை பிடித்து நடந்த மாதிரி நடக்கலாம்.
மகிழ்ந்து போகமாட்டானா என் தகப்பன்?
வம்படியாய் மிட்டாய் வேண்டுமெனலாம்.
கதை சொல்லிக் கூட்டிப் போகச் சொல்லலாம்.
கால் வலிக்கிறது தூக்கு எனச் சொல்லிச் சிரிக்கலாம்.
முடியாமல் ஆங்காங்கே நிற்கும் போது
பராக்குப் பார்க்காமல் வா எனலாம்.
ரயில் பாதையோரம் நின்று
ரயில் காட்டலாம்
சாலையோர ஜவுளிக் கடை நுழைந்து
சேலம் குண்டஞ்சு வேட்டி எடுத்து
வெள்ளைச் சட்டை வாங்கி
அங்கேயே போட வைக்கலாம்.
எனக்கொரு சட்டை என
அடிக்கிற நிறத்தில் எடுக்கலாம்.
முகம் சுளித்து அழகாய்
எடுத்துக் கொடுக்கும் சட்டையில் மகிழலாம்.
களைத்திருக்கும் தகப்பனின்
தோளில் கை போட்டணைத்து
ஆட்டோ பிடித்து
வீடு சேரலாம்.
கால் எடுத்து மடி வைத்து
இதமாய்ப் பிடிக்கலாம்.
கண்மூடிக் கிடக்கையில்
நெற்றியில் பட்டும் படாமல் முத்தமிடலாம்.
பள்ளி விட்டு வந்து அப்பாவென்றலறி
அடுத்த நொடி மடியில் விழும் மகனை
மாடு போல் மடியில் விழாதே என்றதில்
வென்றது இன்றைய யதார்த்தம்.
யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக் பகுதியில்: http://youthful.vikatan.com/youth/index.asp
_________________________