Friday, September 18, 2009

நேத்து ஆப்பு இன்னைக்கு சோப்பு!

நேத்து ஆப்பு பத்தி எழுதினதுக்கே கொல மிரட்டல் விடாத குறையா அலப்பறையா போச்சு. இராகவன் சார் வேற நமக்கு நூற்றாண்டு விழா கடந்திருக்குமோன்னு பிட்டப் போட்டுட்டாரு. அதனால இன்னைக்கு சோப்பு போட்டு எஸ் ஆயிடணும்.

சின்ன வயசில பள்ளிக்கூடத்துக்கு எதிர்லயே வீடு.  அஞ்சாவது படிக்கிறப்ப ஊரு மாறி வந்ததில அப்பா ஆஃபீசுக்கு பின்னாடி பள்ளிக்கூடம். அதனால நண்பர்கள், விளையாட்டெல்லாம் தெரியாத விஷயமா போச்சு. இந்த அழுத்தமெல்லாம் கரைக்கிறதுக்கு வருசத்துக்கு ரெண்டு அல்லது சில நேரம் மூணு முறை புகலிடம் பெரியம்மா வீடு, ஈரோடுதான். பெரியப்பா பவானி திட்டத்துல வேலை பார்த்ததால ரொம்ப சின்ன வயசில அவங்க இருந்த சிவகிரி, அரச்சலூர்(முதல் முதலா சேமியா ஐஸ் சாப்பிட்டது அங்கதான்) அதெல்லாம் கொசுவத்தி புகையாத்தான் கவனமிருக்கு.

ஸ்டேஷன ஒட்டி இருக்கிற குடியிருப்பில இருந்துதான் கொசுவத்தி. அரையாண்டு பரீட்சை லீவுக்கும் முழுப் பரீட்சை லீவுக்கும் என்ன வித்தியாசம்னு அந்த வயசில கேட்டிருந்தா என்னோட பதில் இதுவாத்தானிருக்கும். காலையில ப்ளூ வந்த பிறகு அரைப் பரிட்சை லீவுக்கு எல்லாரும் பக்கெட்ல போய் வென்னீ புடிச்சிண்டு வருவாங்க எஞ்சின்ல இருந்து (குளிர்காலம்). முழுப் பரிட்சை லீவுக்கு நல்ல தண்ணி புடிச்சிண்டு வருவாங்க (தண்ணீர் பஞ்சம். வெயில் காலம்). அங்க போகாத, இங்க நோண்டாதன்னு கேக்க நாதியில்லாம அண்ணந் தம்பிங்க அவங்க சினேகிதனுங்கன்னு போன காலம் அங்கதான்.

கும்மிருட்டில ரயில் போறப்போ அந்த விளக்கு வெளிச்சமிருக்கே.ஆஹா. சின்ன நிலா மாதிரி ஆரம்பிச்சி கடந்து போக டன்னல் மாதிரி எஞ்சின் வெளிச்சம், கட்டம் கட்டமா ஜன்னல் வெளிச்சம். ஒரு நாள் கூட மிஸ் பண்ணதில்ல. வாயுத் தொல்லை இருக்கிற தலைமை வரைவாளரை எச்டின்னு அறிமுகப் படுத்தினாங்க. சரியான சவுண்ட் பார்ட்டி. எல்லாருமா சேர்ந்து என்னை ஏத்தி விட்டு அவர் வீட்டு சுவத்தில கரியால டர்புர் சாமியார்னு எழுதினா கடலை உருண்டை வாங்கித் தரேன்னானுவ. இதுக்கென்னாடா கஷ்டம்னு எழுதிட்டிருக்க அவர் பையன் ஓடிவந்து காலர புடிச்சிட்டான். கைய புடிச்சி கடிச்சி வெச்சிட்டு சிட்டா பறந்துட்டேன். விதி விதிங்கறமே. அது அந்த வயசிலயே எனக்கு ஹலோ சொன்னது.

ரெண்டு மூணு வருசம் கழிச்சி அந்தாளோட பெரிய பையனுக்கு எங்கக்காவ சம்பந்தம் பேசிட்டாங்க. அக்கா நிச்சயதார்த்தத்துக்கு போறதா வேணாமான்னு அந்த வயசுல எனக்கு குழம்பணும்னு விதிக்குமா? அதும் அவங்க வீட்டில நிச்சயதார்த்தம். அந்த புட்டிக்கண்ணன் என்ன மறந்திருக்கணுமே கடவுளேன்னு போனேன். பய புள்ளைக்கு அக்கான்னா அவ்வளவு பாசம் போல, நிச்சயதார்த்ததுக்கே இப்படி சோகமா இருக்கான்னு நினைச்சிருப்பாங்க எல்லாரும். அப்புடி இருந்தேன். கோழித்திருடன் மாதிரி கூட்டத்துல பம்மி பம்மி நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும். நல்ல காலம் அந்த புட்டிக்கு பரீட்சைன்னு ரூமுக்குள்ள போய் அடஞ்சிட்டான்.

எப்படா விடியும்னு காத்திருந்த காலம் ஈரோட்டிலதான். கண்ணு விழிக்கிறதே பச்சு பச்சுன்னு வாழத்தோப்பு, அதத்தாண்டி வயலுன்னு. ஒரு தூக்க எடுத்துக்கிட்டு கோவாலு பல்லுப் பொடி வாய்ல கொட்டிக்கிட்டு நேர கோண வாய்க்கா. முகம் கழுவி கரையோரமா நடந்து காடு கரடுன்னு சின்ன சின்ன கூழாங்கல்லு குத்த போறது. கிடைக்கிற ஓட்டாஞ்சில்லு பொறுக்கி டவுசர் பாக்கட்ல நிரப்பிக்கிட்டு ஓடணும். நீலகிரி பால் பண்ணை ஃபேக்டரில காலைல மோரு விப்பாங்க. அதுக்குத்தான் அந்த ஓட்டம்.


லேட்டானா தீந்துடும். அப்புடி ஒரு மோரு தயிர் கடைஞ்சாலும் வந்ததில்ல வீட்டில. 3 ரூபாய்க்கு வாங்க சொன்னா 2 ரூபாய்க்கு வாங்கிட்டு மிச்சம் ஒரு ரூபாய் ஆட்டைய போடுவானுங்க. கமிசனடிக்கறதுன்னு பேரு அதுக்கு. கடல முட்டாய், குச்சி ஐஸ் வாங்க காசு ஏது பின்ன? திரும்பி வரப்ப ரொப்பிட்டு போன ஓட்டாஞ்சில்ல வாய்க்கால்ல நேக்கா எறிஞ்சு என்னுது 5 தத்துச்சி உன்னுது 3 தான்னு எக்காளம்.

என்னைக்காவது முழுசுக்கும் வாங்கினா அளவு தெரியும். தோராயமா கையால பம்ப்செட் தண்ணிய கலந்து மாட்டாத நாளில்ல. சின்னண்ணன் ஒரு மாதிரி சீன் போட்டு எஸ்சாயிடுவான். பெருசு திருட்டு சிரிப்பு சிரிச்சி தானே மாட்டிக்கும். என் கிட்ட  நீ சொல்லு கண்ணூ, எவ்வளவுக்கு வாங்கினதுன்னா கண்ணூக்கு மடியறதா?  கடல முட்டாய்க்கு விசுவாசமா இருக்கிறதா? கடலமுட்டாய் தான் ஜெயிக்கும். அப்புறம் திரும்ப கோணவாய்க்கால்ல குளியல். முட்டிக்கால் அளவுக்கு மேல இறங்க மாட்டமே. இப்போ உறைக்குது. ஊருசனம் மொத்தமும் சோப்பப் போட்டு குளிச்சி, துணி துவைச்சி பண்ண அட்டூழியம் வெறுந்தரையா போச்சோன்னு.

குளிச்சிட்டு தறிக்காரர் ஊட்டுக்கு ஓடுனா சாப்பாட்டுக்கு போகவே மனசிருக்காது. அவரு சாப்புட போற நேரம் ஓடிப்போய் தின்னுட்டு வந்து அங்க நூலு பொறுக்குவோம். தரையில ஒரு நூல் இழை இருக்காது. ஹெ ஹெ. எதுக்கா? அதெல்லாம் குடுத்தா குச்சி ஐஸ், பிஸ்கோத்து எல்லாம் பண்டமாற்று. பசங்க காசு குடுத்து வாங்கி நான் பார்க்கலை. பசங்களுக்கு மட்டுமா. வீட்டு பொம்பளைங்க தறியில போய் துண்டு, ஜமுக்காளம், பெட்ஷீட்லாம் கொண்டு வந்து சுங்கு முடிப்பாங்க. சிறுவாட்டுக்கு காசாச்சி. வெட்டிப்பேச்சு, விவகாரம்னு யாரும் இருக்க மாட்டாங்க. இப்போ எல்லாம் போயிருக்கும்.

இவ்வளவும் சொல்லிட்டு ரஸ்தாளி வாழைய சொல்லாம விட்டா பெரும் துரோகம். ரெண்டு கடல உருண்டை, ஒரு ரஸத்தாளி சாப்பிட்டா விருந்து சாப்பிட்டா மாதிரி. ஹி ஹி. நம்ம வெண்ண இருக்கானே. பய புள்ளைக்கு ஈரோடுன்னா அவ்வளவு பாசம். இப்பவும் நெய்யில்லாம இருந்தாலும் இருப்பானே தவிர, இங்க வாங்க மாட்டான். ஏற்காடு எக்ஸ்ப்ரஸ் ட்ரைவர்கிட்ட சொல்லி விட்டு, மழையோ, குளிரோ பெரம்பூர் ஸ்டேஷன்ல அந்த 3 மணிக்கு போய் காத்திருந்து வெண்ணை வாங்கி, வீட்டுல நெய் காய்ச்சுவான்.

பழமை வெட்டாப்பு விட்டதால மாப்புக்கு வேலை. டிச்சு(சாக்கடை), எச்சு(அதிகம்), ப்ளசரு(கார்) இதுக்கெல்லாம் ஏன் எப்புடி இந்தப் பேருன்னு விளக்குங்க மாப்பு.

21 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//டிச்சு(சாக்கடை), எச்சு(அதிகம்), ப்ளசரு(கார்) இதுக்கெல்லாம் ஏன் எப்புடி இந்தப் பேருன்னு விளக்குங்க மாப்பு. //

ஆமாமுங் சொல்லிப்போடுங் இல்லீனா பாலாசார் இன்னும் இதுமதிரி நிறைய கேள்வி கேட்டுப்போடுவாருங்....

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/ஆமாமுங் சொல்லிப்போடுங் இல்லீனா பாலாசார் இன்னும் இதுமதிரி நிறைய கேள்வி கேட்டுப்போடுவாருங்..../

:)). ஆஹா.

ஈரோடு கதிர் said...

ஆகா... அற்புதமா எழுதியிருக்கீங்க போங்க

நான் பிறந்து மட்டும் ஈரோடு கோஸா ஹாஸ்பிடல்ல, வளர்ந்தெல்லாம் ஈரோட்ல இருந்து 25 கி.மீ தள்ளியிருக்கிற ஒரு குக்கிராம்ங்க, இப்ப ஒரு 10 வருசமாத்தான் ஈரோடு வாசம் அதனால உங்கள எழுத்திலதான் பழைய ஈரோட்ட இப்ப ரசிக்கிறேன்...

அந்த ரயில்வே காலணிக்குள்ளதான் தினம் தினம் நடக்கிறோம். இன்னும் பசுமை மாறம இருக்கிற இடம் ரயில்வே காலணிதான். அப்படியே ஒரு சொர்க்கம் மாதிரி இருக்கிற பகுதி அது.

பழமை இன்னிக்கு வந்துட்டதால டிச்சு, எச்சு, ப்ளசரு பத்தி அவரையே எழுதச்சொல்லிடலாம் (கதிரு... இன்னுமாட ஒலகம் ஒன்ன நம்புது)

//வெண்ண இருக்கானே. பய புள்ளைக்கு ஈரோடுன்னா அவ்வளவு பாசம். இப்பவும் நெய்யில்லாம இருந்தாலும் இருப்பானே தவிர, இங்க வாங்க மாட்டான். ஏற்காடு எக்ஸ்ப்ரஸ் ட்ரைவர்கிட்ட சொல்லி விட்டு, மழையோ, குளிரோ பெரம்பூர் ஸ்டேஷன்ல அந்த 3 மணிக்கு போய் காத்திருந்து வெண்ணை வாங்கி, வீட்டுல நெய் காய்ச்சுவான்.//

அதுதாங்க உங்க கொடுமையெல்லாம் தாங்கிட்டு நல்ல புள்ளையா இருக்காரு.

ஆரூரன் விசுவநாதன் said...

இவ்வளவு அருமையாக இதுவரை பேசிய....சே...எழுதிய அன்பு அண்ணன் வானம்பாடிகளுக்கு,....வட்டத்தின் சார்பாக இந்த மலர்மாலையை, அணிவித்து, ஓட்டும் போடுகிறேன்.

அண்ணன் வானம் பாடிகள்.....

வாழ்க.....

ஹி....ஹி....

இயல்பான நடை, செய்தியை பகிர்வதில் நல்ல வளம்,
மிகவும் அருமை....தொடருங்கள்

அன்புடன்
ஆரூரன்

துபாய் ராஜா said...

அருமையான எழுத்து நடை.

அழகான வர்ணனைகள்.

அற்புதம் சார்.

அடிக்கடி கொசுவத்தி கொளுத்துங்க.

நாங்களும் கொஞ்சம் குளிர் காஞ்சிக்கிறோம்.

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/அந்த ரயில்வே காலணிக்குள்ளதான் தினம் தினம் நடக்கிறோம். இன்னும் பசுமை மாறம இருக்கிற இடம் ரயில்வே காலணிதான். அப்படியே ஒரு சொர்க்கம் மாதிரி இருக்கிற பகுதி அது./
எந்த ஊருக்குப் போனாலும் ரயில்வே காலனி ரொம்ப அழகான இடம். கேக்கவே சந்தோஷமா இருக்கு.

/பழமை இன்னிக்கு வந்துட்டதால டிச்சு, எச்சு, ப்ளசரு பத்தி அவரையே எழுதச்சொல்லிடலாம் (கதிரு... இன்னுமாட ஒலகம் ஒன்ன நம்புது)/

என்னமா தள்ளி விடுறாரு மாப்பு.

/அதுதாங்க உங்க கொடுமையெல்லாம் தாங்கிட்டு நல்ல புள்ளையா இருக்காரு./

இதுதான் கொடுமை:))

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்
/இவ்வளவு அருமையாக இதுவரை பேசிய....சே...எழுதிய அன்பு அண்ணன் வானம்பாடிகளுக்கு,....வட்டத்தின் சார்பாக இந்த மலர்மாலையை, அணிவித்து, ஓட்டும் போடுகிறேன்.

அண்ணன் வானம் பாடிகள்.....

வாழ்க...../

கதிர் இடுகைய படிச்ச கையோட இங்க வந்தாப்புல இருக்கு :))

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்
/இயல்பான நடை, செய்தியை பகிர்வதில் நல்ல வளம்,
மிகவும் அருமை....தொடருங்கள்

அன்புடன்
ஆரூரன்/

நன்றிங்க ஆரூரன்.

vasu balaji said...

துபாய் ராஜா
/அருமையான எழுத்து நடை.

அழகான வர்ணனைகள்.

அற்புதம் சார்.

அடிக்கடி கொசுவத்தி கொளுத்துங்க.

நாங்களும் கொஞ்சம் குளிர் காஞ்சிக்கிறோம்./

:)). நன்றி ராஜா.

க.பாலாசி said...

நான்தான் பத்தாவது (கமெண்ட்ல சொன்னேன்) படிக்க நேரமில்ல...காலையில படிச்சிக்கிறேன்...இப்ப ஓட்டு மட்டும்தான்...

vasu balaji said...

க.பாலாஜி
/நான்தான் பத்தாவது (கமெண்ட்ல சொன்னேன்) படிக்க நேரமில்ல...காலையில படிச்சிக்கிறேன்...இப்ப ஓட்டு மட்டும்தான்.../

நன்றி. ஓட்டுக்கு மட்டும்தான். பின்னூட்டத்துக்கு நாளைக்கு :))

Anonymous said...

டைட்டில் சூப்பர்ங்க..



அன்புடன்,

அம்மு.

vasu balaji said...

Ammu Madhu

/டைட்டில் சூப்பர்ங்க../

நன்றிங்க.

பழமைபேசி said...

பாலாண்ணே, காலையில கொஞ்ச நேரம் வாய்ப்புக் கெடச்சது... இப்பட்த்தான் வீட்டுக்கு வந்து இருக்கேன்.... மறுபடியும் வந்து படிக்கிறேன்....

vasu balaji said...

பழமைபேசி
/பாலாண்ணே, காலையில கொஞ்ச நேரம் வாய்ப்புக் கெடச்சது... இப்பட்த்தான் வீட்டுக்கு வந்து இருக்கேன்.... மறுபடியும் வந்து படிக்கிறேன்..../

:) வாங்க பழமை.

க.பாலாசி said...

//பெருசு திருட்டு சிரிப்பு சிரிச்சி தானே மாட்டிக்கும். என் கிட்ட நீ சொல்லு கண்ணூ, எவ்வளவுக்கு வாங்கினதுன்னா கண்ணூக்கு மடியறதா? கடல முட்டாய்க்கு விசுவாசமா இருக்கிறதா? கடலமுட்டாய் தான் ஜெயிக்கும்.//

அதான எங்க உண்மைய சொல்லி ஹீரோ ஆயிருப்பீங்களோன்னு நெனைச்சேன்.

ஈரோட்டுல இவ்வளவு ரசிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது நீங்க சொல்லிதான் தெரியுது. நான் இங்க வந்து ஒன்றரை வருஷம் ஆகுது. காலையிலேயிருந்து நைட்டு வரைக்கும் வேலை. எங்க வெளியில சுத்த முடியுது. ஒரு தடவ கதிரய்யாவோட சங்ககிரி போயிட்டு வந்தேன். மத்தபடி இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு.

ஆனாலும் அந்த வெண்ணப்பையன உட மாட்றீங்களே. அவர நக்கலடிக்கிறதே வேலையாப்போச்சு...

//டிச்சு(சாக்கடை), எச்சு(அதிகம்)//

இதமாதிரி இன்னொரு ’ச்சு‘ வார்த்தையும் இங்க வந்துதான் தெரிஞ்சிகிட்டேன். எப்டி வந்ததுன்லாம் தெரியாது.

க.பாலாசி said...

அய்யா.. நைட்டு ரெண்டு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பதிலூட்டம் போட்டிருக்கீங்க...உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லயா?

SUBBU said...

//டிச்சு(சாக்கடை), எச்சு(அதிகம்), ப்ளசரு(கார்)//

தெரியில மாப்பு, நீங்க எச் பேசுரீங்க :))))))))
நான் திருப்பூர்ல வேலை செய்துருக்கேன், அங்கயும் இப்படித்தான் :((((

vasu balaji said...

க.பாலாஜி
/அதான எங்க உண்மைய சொல்லி ஹீரோ ஆயிருப்பீங்களோன்னு நெனைச்சேன். /

அங்க போயும் ஒத்தைல உட்ருவானுங்க.
/ஈரோட்டுல இவ்வளவு ரசிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது நீங்க சொல்லிதான் தெரியுது. நான் இங்க வந்து ஒன்றரை வருஷம் ஆகுது. காலையிலேயிருந்து நைட்டு வரைக்கும் வேலை. எங்க வெளியில சுத்த முடியுது. ஒரு தடவ கதிரய்யாவோட சங்ககிரி போயிட்டு வந்தேன். மத்தபடி இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு./

அண்ணா. பட்ணத்துலருந்து வந்துருக்காங்ணா. கள்ளகாயி செடி பாக்கணுமாம்னா. வா கண்ணுன்னு பச்சக் கடலை கொத்தா புடுங்கி குடுப்பாங்க. வாய்க்கா தண்ணில அலசி அட போங்க. அப்புடி மனுசங்க இன்னும் இருப்பாங்களா. இல்ல அப்புடி அலசிதான் சாப்பிட முடியுமா? எவ்வளவு கெமிகல்.
/ஆனாலும் அந்த வெண்ணப்பையன உட மாட்றீங்களே. அவர நக்கலடிக்கிறதே வேலையாப்போச்சு.../
அல்லாரும் சொல்லி வெச்சா மாதிரி அவனுக்கே சப்போர்ட்டு. வெண்ணைக்கு ஒரு இடுகை தனியா போடுறேன்.
/இதமாதிரி இன்னொரு ’ச்சு‘ வார்த்தையும் இங்க வந்துதான் தெரிஞ்சிகிட்டேன். எப்டி வந்ததுன்லாம் தெரியாது./
:)).அய்யோ

vasu balaji said...

க.பாலாஜி
/அய்யா.. நைட்டு ரெண்டு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பதிலூட்டம் போட்டிருக்கீங்க...உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லயா?/
ஹி ஹி.

vasu balaji said...

SUBBU
/தெரியில மாப்பு, நீங்க எச் பேசுரீங்க :))))))))
நான் திருப்பூர்ல வேலை செய்துருக்கேன், அங்கயும் இப்படித்தான் :((((/

ஆஹா. ஈரோடு சுப்புவ பேச வெச்சிருச்சி. சாமி. மாப்பு கதிருதான்.