Friday, August 28, 2009

இளிச்சவாய்த் தமிழன்!

இந்தியும் படிக்க வேண்டும் என்ற செய்தியும், நேற்று திரு ராமதாஸ் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் எனக் கோரிய செய்தியும், இது தொடர்பாக சரியா தவறா இடுகைகளையும் பார்த்த பொழுது ஒரு புறம் நம் இளிச்சவாய்த்தனத்தின் மீது கோபமும், கண் எதிரில் நடக்கும் மோசடியைத் தெரிந்துக் கொள்ளாத அவலமும் ஒரு சேர எழுந்தது. இந்தி தேவை அல்லது தேவை இல்லை என்பதல்ல என் எழுத்தின் நோக்கம். கர்நாடகா போனால் கன்னடம் தெரியவேண்டுமே, ஆந்திரா போனால் தெலுங்கு தெரிய வேண்டுமே என்ற வாதம் வருமேயானால், ஒவ்வொருவரும் எல்லா மொழியும் தெரிந்து வைத்திருக்கத்தான் வேண்டும்.

சென்னை வாசிகளுக்கு, அதிலும் சென்ட்ரல் சுற்றுப் புறத்தில் பணி செய்பவர்களுக்கு அடிக்கடி காணக் கிடைக்கும் காட்சி. திடீரென்று புற்றீசல் போல் இந்தி பேசும் இளைஞர்கள் கூட்டம் காணப்படும். சென்ட்ரல் எதிரில் புல் வெளிகளில், கடற்கரையில், மற்றும் சுற்றுலாத் தலங்களெங்கும் பெர்முடாவும், முண்டா பனியனும் அணிந்து தெருவெங்கும் பான் பராக் எச்சில் உமிழ்ந்தபடி சுற்றி, இரவில் தெருவோரம் படுத்து போலீசுக்கு போக்கு காட்டி, இந்தியில் சண்டைபோட்டு ஊர் திரும்ப, நினைத்த வண்டியில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி ரகளை செய்து இவர்கள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது.

யார் இவர்கள்? பெரும்பாலும் பீகாரிகள். எதற்கு வந்திருக்கிறார்கள்? மத்திய அரசின் ஒரு துறையின் ஆளெடுப்புப் பரிட்சைக்கு வந்தவர்கள். இலவசமாக ரயில்வே பாஸ் கொடுக்கப்படும் இவர்களுக்கு.(லல்லு லல்லுதான்). பரிட்சை எழுதுகிறார்களோ இல்லையோ, ஞாயிறு பரிட்சைக்கு முந்திய திங்களிலிருந்து அடுத்த வெள்ளி வரை இவர்கள் அடிக்கும் கூத்து கலங்கடிக்கவிடும். சரி, இவ்வளவு பேர் எப்படி வருகிறார்கள்?

பெரும்பாலும் இரயில்வேத்துறையின் கலாசி வேலைக்கு வருபவர்கள் இவர்கள். எழுத்துத் தேர்வுக்கு வந்தவர்கள். எல்லா மாநிலத்துக்கும் இவர்கள் சென்றாலும், தமிழகம் மட்டும் ஏமாளி. ஏன் தெரியுமா? மத்திய அரசுப் பணியில் இட ஒதுக்கீடு இருக்கிறதல்லவா? தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆளில்லாமல் சேர்ந்து போன இடங்களை இட்டு நிரப்ப அடிக்கடி நடத்தப் படும் சிறப்புத் தேர்வுக்காக வந்தவர்களாம்.

அப்படியானால், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் அனைவரும் வேலையில் இருக்கிறார்களா? சாத்தியமே இல்லை. ஒன்று, இப்படி ஒரு தேர்வு இருக்கிறதென்பதே அறிந்திருப்பதில்லை. மற்றது கலாசி வேலைக்கு அடிப்படைத் தகுதியாக எழுத்துத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுதக் கூடும். எட்டாவது படித்த ஒரு தமிழன் ஆங்கிலத்தில் தேர்வெழுதும் சாத்தியம் இன்றைய கல்வி முறையில் அசாத்தியம். எனக்கு வியப்பளித்த ஒன்று என்னவெனில் படித்தவர்கள் கூட தேர்வெழுதத் தயாரில்லை. ஏனெனில் படித்த படிப்புக்கு இந்த வேலை தாழ்வென்ற எண்ணம். இன்று இந்த வேலையில் சேர்பவர்களின் சம்பளம் மற்றும் படிகள் சேர்த்து 15 ஆயிரம். இருந்தும் இப்படி ஓர் புறக்கணிப்பு. மற்றது இந்தியில் எழுதுவது தமிழ்நாட்டில் நினைத்துப் பார்க்க முடியாத கேலிக்கூத்து.

இத்தகைய இளைஞர்கள் என்னவாகிறார்கள். வேலையின்மை, வறுமை ஆகியவை சமுதாய விரோத சக்திகளாகவும் இன்ன பிற சமுதாயக் கேட்டுக்கும் தான் வழி வகுக்கும். பீகாரின் ஒரு சின்ன கிராமத்திலிருந்து பல்லாயிரக் கணக்கான மைல் தள்ளி வந்து இப்படி ஒரு பரீட்சையில் கலந்து கொள்ள அங்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது? அவனைக் கட்டி இழுத்துக் கொண்டா வந்தார்கள்?

அப்படி வந்து தேர்வாகி இங்கு பணிபுரியும் பெரும்பாலானவர்களிடம் நான் கேட்டேன். உன் ஊர்ப் பக்கம் பணிமாற்றம் கேட்கவில்லையா? ஊருக்குப் போவதாகக் கூட தெரியவில்லையே என்று. சிரித்தபடி சொல்வார்கள். இங்க நல்லா இருக்கு. அங்க போனா அடிதடி, போலீஸ்னு தினம் ஏதோ ஒரு தகறாரு வரும். ஏதாவது விசேஷமென்றால் போய்விட்டு வந்துவிடுவோமாம். அவன் எப்படியோ போகட்டும்.

நம் படித்த இளைஞர்கள் ஏன் இந்த வாய்ப்பைப் பயன் படுத்துவதில்லை.பல கோடிக் கணக்கில் இவர்களுக்காக அமைக்கப்பட்ட‌ வாரியம் என்ன செய்கிறது? செம்மொழி என்ற சாதனையைச் சொல்லிக்கொண்டே என்ன புண்ணியம். ஏன் தமிழ்நாட்டில் தமிழில் எழுத வாய்ப்பு இல்லை? இது மறைமுக இந்தித் திணிப்பா இல்லையா? கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இந்தியும் படிப்பதால் அவர்கள் இப்படி விடுவதில்லை. தமிழ்நாட்டின் இன்னொரு சாபக்கேடு இது.

நம் அரசியல் வாதிகள் ஒன்று அல்லது இரண்டு முறைக்காவது சலுகை பெற்று தமிழில் எழுத வழி செய்து, இவ்விளைஞர்களுக்கு வழிகாட்டி வேலை வாய்ப்புப் பெற்றுத்தர வழி காண்பார்களா? கணினியில் விடைத்தாள் திருத்தப் படுவதால் வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்று காசு பார்க்க முடியாது. இனிமேல் இந்தி படிக்க வழி செய்வதால் இன்னும் கொஞ்சம் இந்தி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு. அதாவது இந்தியில் தேர்ச்சி பெற்ற தமிழனுக்குத் தான் என்று சொல்வார்களோ அதுவும் பீகார்க்காரன் வருவானோ தெரியாது.

சரி சம்பந்தமில்லாமல் முதல் பத்தியில் திரு ராமதாஸை எதற்கு இழுத்தாய் என்கிறீர்களா? திரு மூர்த்தி, திரு வேலு என்று இரண்டு பா.ம.க. உறுப்பினர்கள் இரயில்வேத் துறை துணை மந்திரிகளாக இருந்த காலத்தில்தான் இந்த சிறப்புத் தேர்வுகள் நடந்தன. லல்லுவால் முடிந்தது. இவர்கள் செய்ததென்ன? ஐயா சாமிகளா, இங்கிருக்கும் தமிழனுக்கு உங்களால் செய்யக் கூடியது இது. உங்கள் தோழமைக் கட்சி ஆட்சியிலிருக்கிறது. செய்ய முடியுமா உங்களால்? தமிழகத்திலிருக்கும் மத்திய அரசு அலுவலகங்களில் எத்தனைக் காலியிடங்கள் எனத் தொகுத்து தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழிலும் எழுதலாம் என்ற விதிவிலக்கோடு ஒரு சிறப்புத் தேர்வுக்கு வழி செய்ய முடியுமா உங்களால்? மறுக்கப்படும் பட்சத்தில் எது எதற்கோ பாராளுமன்றத்தை நாறடிக்கிறீர்களே. இதற்குக் குரல் கொடுப்பீர்களா?

17 comments:

ஈரோடு கதிர் said...

//இதற்குக் குரல் கொடுப்பீர்களா?//

ஒருவேளை மக்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால் குரல் கொடுக்கட்டும்.

நீங்களும் கூட இதை இப்போது இருக்கும் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மின்னஞ்சலாக அனுப்பலாம்

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...
/நீங்களும் கூட இதை இப்போது இருக்கும் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மின்னஞ்சலாக அனுப்பலாம்//

ஆமாங்க கதிர். பணித்தடை இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டு அனுப்ப நினைக்கிறேன்.

sakthi said...

இலவசமாக ரயில்வே பாஸ் கொடுக்கப்படும் இவர்களுக்கு.(லல்லு லல்லுதான்). பரிட்சை எழுதுகிறார்களோ இல்லையோ, ஞாயிறு பரிட்சைக்கு முந்திய திங்களிலிருந்து அடுத்த வெள்ளி வரை இவர்கள் அடிக்கும் கூத்து கலங்கடிக்கவிடும்.

ஆம் ரொம்பவும் இம்சைக்கு உள்ளாக்குகிறார்கள்

sakthi said...

வேலையின்மை, வறுமை ஆகியவை சமுதாய விரோத சக்திகளாகவும் இன்ன பிற சமுதாயக் கேட்டுக்கும் தான் வழி வகுக்கும்.

சத்தியமான உண்மை பாலா

யூர்கன் க்ருகியர் said...

IAS தேர்வையே தமிழ்ல எழுதலாம்ன்றாங்க ....இந்த கலாசி வேலைக்கான தேர்வு தமிழ்ல இல்லையாம்...என்னையா கொடுமை இது ?

sakthi said...

ஏன் தமிழ்நாட்டில் தமிழில் எழுத வாய்ப்பு இல்லை? இது மறைமுக இந்தித் திணிப்பா இல்லையா? கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இந்தியும் படிப்பதால் அவர்கள் இப்படி விடுவதில்லை. தமிழ்நாட்டின் இன்னொரு சாபக்கேடு இது.

வருத்தப்படுகிறேன்

இது போன்ற கட்டுரைகள் மென்மேலும் எழுதுங்கள்

யோசிக்க வைக்கின்ற பதிவு ஆனால் யோசிப்பார்களா???

வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர் said...

பதிவின் தலைப்பு ஏகப்பொருத்தம் ....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிறப்பான பதிவு. இதே கேள்வி தான் எல்லோர் மனதிலும். தன் சுயலாபத்திற்காக கட்சி, ஆட்சி என எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு, மொட்டை அடிப்பது என்னவோ நமக்குத்தான்.

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...

/ பதிவின் தலைப்பு ஏகப்பொருத்தம் ....//

கருத்துக்கு நன்றி யூர்கன்.

vasu balaji said...

sakthi said...

/இது போன்ற கட்டுரைகள் மென்மேலும் எழுதுங்கள்

யோசிக்க வைக்கின்ற பதிவு ஆனால் யோசிப்பார்களா???

வாழ்த்துக்கள்/

நன்றிங்க சகோதரி.

vasu balaji said...

/ ச.செந்தில்வேலன் said...

சிறப்பான பதிவு. இதே கேள்வி தான் எல்லோர் மனதிலும். தன் சுயலாபத்திற்காக கட்சி, ஆட்சி என எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு, மொட்டை அடிப்பது என்னவோ நமக்குத்தான்./

வாங்க செந்தில். ஆமாங்க. கருத்துக்கு நன்றி.

புரட்சிகர தமிழ்தேசியன் said...

போராட்டம் செய்வதும் சாலைமறியல் செய்வதும் உண்ணாவிரதம் இருப்பதும் மெண்டல்களுக்கான ஒருவழிமுறையே இதை இந்த இந்தி தேசம் நமக்கு புரியவைத்து விட்டது.. உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இனி என்ன செய்யவேண்டும்? நம்மில் எத்தனை பேருக்கு (IFS) என்ற ஒரு படிப்பு இருக்கிறது என தெரியும்..நம்மில் எல்லொருமே நம் மகன்/மகள் நிறைய சம்பாதிக்க வைக்கும் துறையை தேர்ந்தெடுத்தோமே தவிர நம் இனத்திற்காக நன்மை கிடைக்கும் என தூர நோக்கில் எத்தனை பேர் சிந்தித்தோம்

இன்று சசிதரூர்,விஜய நம்பியார்,சிவசங்கர மேனன் ,வயலார்ரவி,அந்தோணி,எம்.கே நாராயணன் ஆகிய மலையாளி கும்பல் ஈழ தமிழனை கொன்று அவன் பிணத்தின் மீது ஆடித்திரிகிறானே!

க.பாலாசி said...

அரசியல்வாதிகள் சுயநலனுக்காக செய்யும் சில காரியங்களால் பாதிக்கப்படுவது என்னவோ நாம் தான்....

சிந்திக்க வேண்டிய பதிவு...நன்றி அன்பரே...

vasu balaji said...

siruthaai said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது. கருத்துக்கு நன்றி

vasu balaji said...

க.பாலாஜி said...
/சிந்திக்க வேண்டிய பதிவு...நன்றி அன்பரே.../

நன்றிங்க பாலாஜி

Maheswaran Nallasamy said...

நல்ல வேளை நீங்களும் தமிழன் ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொல்லுவேர்களோ என்று நினைத்தேன். ஹிந்தி மொழி திணிப்புக்கு வடக்கத்திகாரன் செய்த சூட்சுமம் இது. இன்று நம்மில் பலர் ஹிந்தி பேசுவதையும், ஹிந்தி படிப்பதையும் ஒரு பெருமைக்குரிய விசயமாக நினைப்பதுதான் வேதனை.
இன்று ஹிந்தி நன்றாக பேசும் சில தென் இந்திய மாநிலங்களை பார்த்தால் உண்மை புரியும். அவர்களுக்கு ஹிந்தி-இல் உள்ள புலமை அவர்களின் சொந்த மொழயில் இல்லை. அவரவர் சொந்த மொழியில் தெளிவாக எழுத படிக்க தெரிந்தவர் இந்த மாநிலங்களில் மிக குறைவு.

சிங்களத்தை ஏற்று கொண்டு இருந்தால் இன்று சிறீலங்காவில் பிரச்சினையே இல்லை. அங்கு தமிழ் வளரவேண்டும், அழிய கூடாது என்று நினைத்தார்கள். மொழி அடக்குமுறைக்கு உடன்படவில்லை. ஆனால் இங்கு மொழி அழிப்பு வேறு விதமாக, கொஞ்சம் விவரமாக பயன்படுத்த படுகிறது. மொழி அழிப்புக்கு மத்திய அரசு பணி வாய்ப்புகள் ஒரு கருவியாக உபயோக படுத்த படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. அதை எதிர்த்து குரல் கொடுக்க நம்மிடம் தம் இனத்தை நேசிக்கும்,தம் மொழியை தலைவன் இல்லை என்பதே உண்மை.

என் மொழி எப்படி நாசமாக போனாலும் கவலை இல்லை. என் மகன்/மகள் மத்திய அரசு பணியில் சேரவேண்டும் என்ற குறுகிய எண்ணகளும் இதுக்கு காரணம்.

vasu balaji said...

Maheswaran Nallasamy said...

வாங்க மஹேஸ். மத்திய அரசுப் பணிகள் இரண்டு வகை. ஒன்று இந்தியா முழுதும் பணிமாற்றம் கட்டாயம் என்ற அடிப்படையில். மற்றது அவ்வாறன்றி. சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்களாகியும், இந்தி/ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழி என்ற நிலைதானா? அதுவும் இப்போதெல்லாம் கணினியில் விடை திருத்தம்/கணினியில் தேர்வு என்ற நிலையில் எந்த விடை சரியோ அதை தேர்ந்தெடுப்பது மொழியறிவை எவ்வகையில் வெளிப்படுத்தும்? குருட்டு அதிர்ஷ்டத்தில் கேள்வியைப் படிக்காமலே சரியான விடைதேர்ந்தெடுப்பது சாத்தியமில்லையா என்ன? ஓட்டு, அதற்குக் கூட்டு இவ்வளவுதான் கொள்கை.