Monday, August 31, 2009

தொலைந்து போனவர்கள் - 1

தம்பி பழமைபேசி நட்டாமுட்டி இடுகையில ஈயம் பூசுரத பத்தி சொல்லவும் மண்டைக்குள்ள செல்லொண்ணு கிளம்பிருச்சி. ஈயம்ங்கற ஒரு வார்த்தை அது பூசுறப்ப நடக்குற காட்சி, அந்த வாசனைன்னு, மேச்சட்ட இல்லாம 'எக்ஸ்' பட்டி அர டவுசர் போட்ட பையனா மாத்தி விட்ருச்சி.

இங்கல்லாம் கலாய் பூசுறதுன்னு சொல்லுவாங்க இதை. பித்தளைப் பாத்திரத்துக்கு கலாய் பூசுறதுன்னு கன காரியமா வீதி நடுவில நின்னு ஒரு ரெண்டு மூணு வாட்டி குரல் விடுவாங்க. அது முக்கியமா எங்கள மாதிரி விடலைக்குத்தான். நாம வீதிக்கு ஓடுறது. இவரு வேலை ஆரம்பிக்கறதுக்குள்ள வீட்டில ஓடி கலாய் பூசுறாங்க, பாத்திரமெல்லாம் குடுங்கன்னு அவனுக்கு ஏஜன்டாய்டுவம். அதெல்லாம் வேணாம்னா அழுவாச்சியா வரும். பின்ன நாளு முழுக்க இருக்கமாட்டானே. சோறு தண்ணி மறந்து வேடிக்கை பார்க்கிற‌தெப்படி? அங்க ஓடி அய்யோ குழி நோண்டுறாங்களே, அப்புறம் அங்க நிக்க இடம் கிடைக்காதேன்னு பதட்டம். திரும்ப ஓடி சொம்பு, அடுக்குன்னு தேடி எடுத்து இதுக்கெல்லாம்னு பூசலாம்னு கெஞ்சுறது. பயபுள்ள மனசு புரியுதா? நீ அவங்கூட துருத்தி அடிக்கதான் போற, ஓடு நாயேன்னு விரட்டுவாங்க. ஓடிப்போய் பார்த்தா அவரு குழி தோண்டுற இடத்துல தண்ணிய கொட்டி பதம் பண்ணி இருப்பாரு.

இது சரியாவாதுன்னு திரும்ப ஓடி, நம்மாளுங்களுக்கு பிடிக்காத நபர் பேரு சொல்லி அவங்க ஒரு அண்டா, தவலை எல்லாம் பூசுராங்க. நாமளும் பூசலாம்மான்னு பிட்டு போடுறது. முதல்ல இருந்த வேகம் இல்லாம ஏண்டா உசிரெடுக்கறங்கும் போதே ஆஹா மீனு மாட்டிச்சிடோய்னு குசியாயிடும். அப்புறம் யாரு காத்திருக்கா. கைக்கு கிடைச்சத தூக்கிக் கொண்டு ஓட, குடுக்கிற காசுக்கு உருப்படியா பண்ணலாம்னோ கவுரவ பிரச்சினையோ; தவலை, அண்டான்னு வரும். நமக்கென்ன போச்சி. போய் இடம் பிடிக்கணும்ல.

அங்கால ஓடிப்போய் குத்துக்காலு போட்டு காலுக்குள்ள கைய இடுக்கி கன்னத்த புதைச்சி கண்ணு விரிய பார்க்குறது. விரட்டுவாங்களோன்னு உசாரா அம்மா கொண்டுவரான்னு சொல்லுறது. ஈயம் பூசுறது ஒரு கலைன்னா அதுக்கு செட்டப் பண்றது இருக்கே அதுக்கு ஈடு இணையில்லை. ஒன்னரையடிக்கு ஒரு இரும்புக்கம்பி. இன்னும் வளராத கடப்பாறை மாதிரி சின்னதா ஒண்ண வெச்சிருப்பாங்க. காம்பஸே இல்லாம வட்டம் போட எங்க படிச்சாங்கன்னு இப்ப கூட பிரமிப்பா இருக்கும். கைக்கு வந்த வாகுல குத்தினாலும், வட்டமா எப்படித்தான் வருமோ. ஒரு அரையடி ஆழத்துக்கு ஜாண் அகலத்தில ஒரு குழி. அதுக்கு முக்காலடி தள்ளி சரிவா ஒரு குழி வெட்டுவாங்க பாருங்க, மேல் மண்ணு பிளக்காம சரியா பெரிய குழியோட அடிக்கு வந்து சேரும்.

துருத்தி முனையில பாண்ட்ஸ் பகுடர் டப்பா ரெண்டு பக்கமும் அறுத்து ஒரு முனையில துருத்தி வாய். அதுக்கு சைக்கிள் ட்யூப் ரப்பர் பேண்ட் மாதிரி வெட்டி வளையல் மாதிரி மேல மேல போட்டிருப்பாங்க. மத்த முனைய சின்ன ஓட்டையில சொருகி நிறுத்தினா, அளவெடுத்தா மாதிரி சரியா வந்து நிக்கும். நிக்கணும். வெளிய தெரிஞ்சிச்சோ, நாம எதுக்கு இருக்கறது அங்க? அண்ணா வெளிய வருதுன்னு அலறுவம்ல. காசு செலவில்லாம நம்மளுக்கு எத்தன அப்பரசன்டின்னு அந்தாளு நினைச்சிருப்பாங்களோ? அப்புறம் துருத்தி சொருகின இடத்துல தோண்டுன மண்ணைக் குழைச்சி சீல் வைப்பாங்க. அதுக்குள்ள அம்முனிங்க பாத்திரம் பண்டத்தோட வந்து நிக்கும்.

ஒரு வழியா கணிசமா சேர்ந்ததும் பையில இருந்து விறகு கரி எடுப்பாங்க. ஆறு, இல்லன்னா எட்டு துண்டுதான். விறக்கடை நீளத்துக்கு. அத அழகா ஒரு மாதிரி அடுக்கி, நடுவில இருக்கிற சந்துக்குள்ளால ஒரு கந்தைத்துணில மண்ணெண்ணைய சிந்தாம நனைச்சி சொருகுறது. என்னா காத்தடிச்சாலும் ஒரே வத்திக்குச்சில கொளுத்தி, அதில முதல்ல ஒரு பீடிய கொளுத்தி அப்புறம் அந்த சந்துக்குள்ள போட பக்குன்னு புடிச்சிக்கிட்டு எரியுற அழகிருக்கே. அட அட. அந்த வயசில இதோட தாக்கம் ரொம்ப பெருசு தெரியுமா? எதையாச்சும் சிந்திட்டாலோ, கை தவறி உடைச்சாலோ ஒரு சின்ன வேலை ஒழுங்கா செய்யத் தருவுசிருக்கான்னு திட்டு விழும்ல. பொங்கலுக்கு, வீட்டில திதிக்கு எல்லாம் கரியடுப்பிலதான் பண்ணணும்னு எங்கப்பாரு கண்டிசன். அப்போ அதுக்கு கரி பத்த வைக்கிறதுக்குள்ள கரியை மண்ணெண்ணைல குளுப்பாட்டி பாதி வத்திப்பெட்டிய காலி பண்ணி மல்லுக்கட்டி அது கங்கு பிடிக்கவே போராடுறீங்க. அந்தண்ணா ஒத்தக் குச்சில பீடி, கரி எல்லாம் பத்த வைக்கிறாங்களே. உங்களுக்குத் தெரியலையேன்னு கேக்க தோணும்.

செவ செவன்னு கனிஞ்சிட்டிருக்கிற கரியை வெறும் கையால எடுத்து குழிக்குள்ள போட்டு மேல கொஞ்சம் கரி, திரும்ப கங்குன்னு வைக்கிற ஆள் ஹீரோவா இல்லையா? துருத்தி பிடிக்குள்ள கைய நுழைச்சி டக் டக்னு லயத்தோட நாலே அமுக்கு. தக தகன்னு எரியும். அண்டாவ ஏத்தி விட்டு ஒரு தகரத் தட்டுல துத்தநாகப் பொடி(அப்போ அது தெரியாது) , ஈயம் எல்லாம் வெச்சிக்கிட்டு டோய் ஓடிபோய் கந்தத்துணி கொண்டுவாம்பாரு. இடம் போய்டுமே. போவலைன்னா விரட்டுவாரோன்னு பயத்தோட ஓடி கிடைச்சத லவட்டி கொண்டு வந்து கொடுக்கிறது.

சூடானதும் பாதித் துணி கந்தலை பிடிக்கவும், மீதி கந்தலை பொடியை புரட்டி ஈயத்தை உடைச்சி பாத்திரத்தில போட்டு இறக்கி வெச்சி அதில தேய்க்கிறது. சூடா கிளம்புற புகை வாசனை தீபாவளியை நினைவு படுத்தும். சுத்தி சுத்தி சுட்டுக்காம எப்படித்தான் பூசுவாங்களோ. அதும் தவலை பூசுறப்போ சுடுமோன்னு பக்கு பக்குன்னு உக்காந்திருக்கிறது. வெள்ளி மாதிரி தக தகன்னு ஜொல்லிக்க ஜொலிக்க எடுத்து வச்சி தண்ணியை கொட்டி ஒரு சுத்து. அடுத்த பாத்திரத்தில ஊத்துவாங்க. எல்லாம் முடியரதுக்குள்ள டேய் நான் வந்ததும் விடணும். இடத்த பார்த்துக்கடான்னு பக்கத்து பையன கெஞ்சி அவசர காரியமெல்லாம் முடிச்சிட்டு வரதெல்லாம் நினைச்சா சிரிப்பா வரும்.

அந்தாளு கிளம்பிப் போக தெருப்புழுதி, துத்தநாகப் பொடி, கரித்தூள், சாம்பல் எல்லாம் படர வெயில்ல சிவந்த கண்ணோடு வீட்டுக்கு வரும்போதே ஆரம்பிக்கும் அர்ச்சனை. அவன்கூடவே போறது தானேன்னு. கறுத்துப் போய் (இல்லன்னா மட்டும் நாம உரிச்ச கோழி கலரோ) குடிகாரன் மாதிரி கண்ணும் (எப்போ பார்த்தாங்களோ. தெருவில டாய்னு சவுண்ட் வந்தா பதறிபோய் கதவ பூட்டும் அம்மா) உள்ள வந்தா காலை உடைப்பேன்னு அலறுவாங்க. சோகமா போய், பக்கத்து வீட்டு மாடிப்படி ஏறி, நம்ம வீட்டுக்குள்ள குதிச்சி, பாத்ரூம்ல குளிச்சி, புழக்கடை வழியா போய் இவங்க உள்ள வரும்போது நெத்தில விபூதியும் கையில புத்தகமுமா எஸ்கேப். மனசெல்லாம் திரும்ப எப்போ கலாய் பூச வருவாங்கன்னு இருக்கும்.

15 comments:

பழமைபேசி said...

சரியான தலைப்பு.... வாழ்த்துகள் அண்ணே!!

//கலாய் பூசுறதுன்னு//

கலாய்ங்றது உருது சொல் பாலாண்ணே!

இன்னும் முழுசுமாப் படிக்கலை, படிச்சிட்டு வர்றேன்.

vasu balaji said...

பழமைபேசி said...

/சரியான தலைப்பு.... வாழ்த்துகள் அண்ணே!!/

வாங்க! நன்றி பழமை

/கலாய்ங்றது உருது சொல் பாலாண்ணே!/

அப்படியா. நன்றி.

பழமைபேசி said...

நிறைய நினைவூட்டி இருக்கீங்க... நன்றி! அடுத்த ஒரு வாரத்துக்கு நாம இனி யோசிக்கத் தேவை இல்லை....இஃகிஃகி!

ஈரோடு கதிர் said...

அடேங்கப்பா..

ஒரு முப்பது நாப்பது வருசம் இருக்குமா? இதெல்லாம் நீங்க பார்த்து...!

ஆனாலும் அந்த ஈயம் பூசற நிகழ்ச்சிய அப்படியே கண் முன்னால நிறுத்திட்டீங்க.

பக்கத்தூட்டு பையன்ட்ட எடம் பார்த்துக்க சொல்றது

ஈயம் பூசற ஆள் குடிக்க தண்ணி கேட்டா போட்டி போட்டுட்டு ஓடிப் போய் கொண்டு வர்றது

மத்யானம் அந்த ஆள் சாப்பிட கொஞ்சம் நேரம் நிறுத்துனாலும் திரும்ப எப்ப வருவானோனு பழியா காத்துக்கிடக்கிறது


இடுகை... அருமையோ அருமை

vasu balaji said...

பழமைபேசி said...

/நிறைய நினைவூட்டி இருக்கீங்க... நன்றி! அடுத்த ஒரு வாரத்துக்கு நாம இனி யோசிக்கத் தேவை இல்லை....இஃகிஃகி!/

ஆஹா. நிறைய எதிர்பார்க்கலாம் அடுத்த ஒரு வாரத்துக்கு

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/ஒரு முப்பது நாப்பது வருசம் இருக்குமா? இதெல்லாம் நீங்க பார்த்து...!/

நாப்பது வருசத்துக்கும் மேல.

/ஆனாலும் அந்த ஈயம் பூசற நிகழ்ச்சிய அப்படியே கண் முன்னால நிறுத்திட்டீங்க./

இதுதாங்க வேணும்.

/இடுகை... அருமையோ அருமை/

நன்றிங்க

க.பாலாசி said...

//ஒன்னரையடிக்கு ஒரு இரும்புக்கம்பி. இன்னும் வளராத கடப்பாறை மாதிரி சின்னதா ஒண்ண வெச்சிருப்பாங்க//

இன்றும் கிராமப்புரங்களில் இதே முறைதான்...அந்த வாடை இன்னும் ஞாபகம் இருக்கிறது...

மறுபடி சுவாசிக்கதான் வாய்ப்பில்லை...

நன்றாக உள்ளது உங்களின் அனுபவப்பகிர்வு....(இளமையுடன்)

vasu balaji said...

க.பாலாஜி said...

/இன்றும் கிராமப்புரங்களில் இதே முறைதான்...அந்த வாடை இன்னும் ஞாபகம் இருக்கிறது...

மறுபடி சுவாசிக்கதான் வாய்ப்பில்லை...

நன்றாக உள்ளது உங்களின் அனுபவப்பகிர்வு....(இளமையுடன்)/

நன்றிங்க. கேட்கவே சந்தோஷமா இருக்கு.

துபாய் ராஜா said...

இயல்பான எழுத்துநடையில் காட்சிகள் கண்முன். சிறுவயதில் நாங்களும் பார்த்திருக்கிறோம்.இப்போது உள்ள குழ்ந்தைகளுக்கு தொலைக்காட்சி, கண்ணி என வீட்டுக்குள் உலகம் சுருங்கிவிட்டது. நமக்கெல்லாம் சிறுபிராயத்தில் இப்படித்தானே பொழுது கழிந்தது.

தொடரட்டும் தொலைந்து போனவர்கள் பற்றிய பதிவுகள்.

வாழ்த்துக்கள்.

vasu balaji said...

துபாய் ராஜா said...

/தொடரட்டும் தொலைந்து போனவர்கள் பற்றிய பதிவுகள்.

வாழ்த்துக்கள்./

நன்றிங்க ராஜா.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சுவையான இடுகைதான்.எனக்கு இதெல்லாம் மறந்தே போச்சு ,ஞாபகப் படுத்திட்டீங்க.

vasu balaji said...

ஸ்ரீ said...

/சுவையான இடுகைதான்.எனக்கு இதெல்லாம் மறந்தே போச்சு ,ஞாபகப் படுத்திட்டீங்க./

நன்றிங்க ஸ்ரீ.

ப்ரியமுடன் வசந்த் said...

உள்ளாற வரும்போது வைரஸ் காட்டுதுங்க கொஞ்சம் சரிபண்ணுங்களேன்

vasu balaji said...

/ பிரியமுடன்...வசந்த் said...

உள்ளாற வரும்போது வைரஸ் காட்டுதுங்க கொஞ்சம் சரிபண்ணுங்களேன்/

இல்லைங்க விகடன் தொடுப்பு கொடுத்ததால் இருக்கலாமோ தெரியவில்லை.

vasu balaji said...

இல்லைங்க வசந்த் என்னுடைய பதிவின் பேக் அப் xml கோப்பை ஸ்கேன் செய்துவிட்டேன். மற்ற கணினியில் எக்ஸ்ப்ளோரர், ஃபையர் ஃபாக்ஸ், கூகிள் குரோம் மூன்றிலும் பார்த்துவிட்டேன். வைரஸ் எதுவும் காட்டவில்லையே.