Friday, May 8, 2009

அப்பாவி தமிழனும் அல்லக் கைகளின் அலட்டலும்

இன்றைய தமிழ்வின் செய்தி இது. பாதுகாப்பு வலயத்தில் அப்பாவி மக்களின் அவல நிலை இது. இதைத்தானா கலைஞர் நாம் இலங்கையிலே வாழுகின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம் என்று பெருமைப்படுகிறார்? இல்லை இது தூவானம் என்று சொல்லக் கூடும். அரச படைகளை நம்பி வந்தவர்களுக்கு நடக்கும் கொடுமை சொல்லத் தக்கதா? தமிழன் மிருகத்தை விட கேவலமாக நடத்தப் படுவது கண்கூடு. வேறு யாருக்கானாலும் இப்படி நடக்குமா, உலக சமுதாயம் விடுமா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. இந்தச் செய்திகள் பத்திரிகையில் வராது. வந்தாலும் எங்கோ ஒரு மூலையில் இருக்கலாம். இல்லாத அமைதியும், அலட்டலும், சாதனைகளும் பிரதானப் படுத்தப்படும்.

இதுவரை நாட்களும் ஒருவேளைக் கஞ்சியைக் குடித்து தம் உயிர்வாழ்வை காப்பாற்றி வந்த மக்கள் தற்பொழுது அதுகூட இல்லாது தவிட்டில் தண்ணீரை ஊற்றிக் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆலைகளில் உள்ள உமியை எடுத்து, அதில் உள்ள குறுனி அரிசியையும், தவிட்டையும் தவர்த்தி எடுத்து அதனை உணவாகவும், தென்னை, பனை குருத்துக்களை எடுத்து அதனை உணவாகவும் உட்கொள்ளும் நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மட்டும் முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்கா படையினரால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இரசாயனக் கணைகளும், பீரங்கிக் கணைகளும், கொத்துக் குண்டுகளும் மழையெனப் பொழியப்பட்டதில் 78 தமிழ் உறவுகள் பலியானதுடன், 214 பேர் படுகாயமடைந்திருந்தனர். ஊர்தி ஒன்றின் மீது பொஸ்பரஸ் இரசாயனக் கணைகள் வீழ்ந்து வெடித்ததில் அதன் கீழ் அடைக்கலம் புகுந்திருந்த 14 உறவுகள் அந்த இடத்திலேயே உடல் கருகிப் பலியாகியிருந்தனர்.

இந்தக் கொடுமைகள் தரும் வலியை விட அல்லக் கைகளின் அலட்டலைப் பார்க்கும் போது இது எப்படி சாத்தியம். எந்த தைரியத்தில் இப்படி பேச முடிகிறது. இவ்வளவு நடந்த பின்னரும் பெயரளவில் அறிக்கையும், செவிடன் காதில் சங்காக வேண்டுகோளும் தான் சமாதான அமைப்புகளின் கடமையா? எது இவர்களின் கையைக் கட்டிப் போடுகிறது? எப்போது அல்ல எப்போதாவது இந்த மக்களின் வாழ்வுக்கு உத்தரவாதமான நடவடிக்கை இருக்குமா எனப் பதறச் செய்கிறது.

அலட்டல்கள் இதோ:

சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கிவிட்ட புலிகளுடன் போர்நிறுத்தம் செய்வது பயனற்றது: இலங்கை ஜனாதிபதி

இதை விட அயோக்கியத்தனம் இருக்க முடியுமா? வெறி பிடித்து அழித்துவிட்டேன் துடைத்து விட்டேன் எனக் கொக்கரித்து எத்தனை முறை போர் நிறுத்தம் என்று சொன்னாலும் ஏற்க மறுத்து போரைத் துவக்கியதே தான் தான் என்பதை யாரும் நினைவில் வைத்திருக்கப் போவதில்லை என்ற திமிரில் பேசும் இவன் சதாம் உசேனை விட எந்த விதத்தில் மேம்பட்டவன்?

மனிதாபிமான போர் ஆரம்பிக்கப்படாதிருந்தால் புலிகள் ஈழத்தை உருவாக்கியிருப்பார்கள்: கோத்தபாய ராஜபக்ஷ

மனிதாபிமானம் என்ற வார்த்தையை இதைவிடக் கேவலப் படுத்த முடியுமா? அந்த வார்த்தையைத் தவிர மிகுந்திருப்பது தானே போருக்கு காரணம். அகில உலகமும் இந்த அவலத்தைக் கண்டித்தும் இப்படி பேச முடிவதற்குக் காரணமென்ன?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேச சக்திகள் அழுத்தம் கொடுக்கவில்லை: ரோஹித்த

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது சர்வ தேச சக்திகள். மறைமுகமாக சர்வதேச நடவடிக்கைகள் பாசாங்கு என்பது உண்மை என்றா?

எல்லாவற்றையும் மிஞ்சும் பேச்சு இது:
தமது இலங்கை விஜயம் உயிர்களை காக்கும் வகையில் அமையுமானால் அதனை பரிசீலிக்க தயார் : பான் கீ மூன்

இதன் பொருள் என்ன? பரிசீலனை செய்யும் நேரமா இது? ஒரு நாள் தாமதம் நூற்றுக் கணக்கில் உயிரும், லட்சக் கணக்கில் மக்களின் அவலமும் என்று கூட உணர முடியாத ஒரு தலைவர் என்ன தீர்வு சொல்லப் போகிறார்?

மொத்தத்தில் காணாத நரகல் கழுவாமல் போய்விடும் என்ற பழமொழி மாதிரி அப்படியே விட்டால் ஏதோ ஒரு முடிவு வரும். அப்புறம் பெயரளவில் ஒரு கண்டனமோ, வருத்தமோ தெரிவித்தால் போகிறது என்று நினைக்கிறார்களா?
தமிழனின் உயிரின் மதிப்பு இவ்வளவுதானா?

1 comment:

அப்பாவி தமிழன் said...

அப்பாவி தமிழன் என்றவுடன் என்னைய பத்தி ஏதோ எழுதி புட்டிங்கன்னு பயந்துட்டேன்